வெள்ளி, நவம்பர் 26, 2021

அண்ணாத்த ஸ்டோரி டிஸ்கஷன்

சிவா: வணக்கம் சார்.

ரஜினி : வணக்கம். வாங்க. விஸ்வாசம் படம் தூள். பிரமாதம் பண்ணீட்டிங்க.

சிவா : ரொம்ப நன்றி சார். உங்களுக்கும் ஒரு கதை ரெடி பண்ணி வச்சிருக்கேன். நீங்க விருப்பபட்டீங்கன்னா படம் பண்ணிடலாம்.

ரஜினி : ஓ அப்படியா. ஆனா சிவா எனக்கு என்னன்னா பாருங்க, இந்த ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ் அப்டி இவங்க கூடலாம் புதுசா ஒர்க் பண்ணி வித்தியாசமா ஒரு டிராக்ல படம் போய்ட்ருந்துச்சு. வயசுக்கு ஏத்த ஒரு கேரக்டர் மாதிரி கதை கொண்டுவந்தாங்க. பரவால்ல. படம் ஓகேனு சொல்லலாம். அதுக்கப்புறம் இந்த டுப்பாக்கி எடுத்தாரே முருகதாஸ், அவர்ட்ட ஒரு படம் பண்ணலாமான்னு கேட்டேன். வேஷ்டிய பின்னாடி கிளிச்சிவிட்டுட்டு என் இடுப்புல கட்டி விட்ட மாதிரி ஒரு படம் எடுத்து கொடுத்தார். இப்போ என்ன பண்றதுனு தெரியாம முழிச்சிட்ருக்கேனா, அதான் யோசனையா இருக்கு.

சிவா: அப்டிலாம் பயப்படாதீங்க சார். உங்க ஒரு துளி வேர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு எப்பவுமே கொடுப்பாங்க. அவங்கள நமபி தைரியமா ஒரு படம் எடுக்கலாம். அதுபோக இல்லாம, வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் னு நாலு படத்துல கத்துகிட்ட வித்தைய மொத்தமா இதுல இறக்கலாம்னு இருக்கேன் சார்.

ரஜினி: அப்டின்றீங்க. சரி கதை சொல்லுங்க. கேப்போம்.

சிவா ரஜினியிடம் கதை சொல்லுகிறார். அந்த பாவத்தை இங்கு எழுதுவது கபீம் குபாம் தண்டனையை பெற்று தந்து விடும் என்பதால் தவிர்க்கபட்டிருக்கிறது.

கதை கே(கெ)ட்ட பிறகு,




ரஜினி: ஒர்க் அவுட் ஆகுமா. போன படமா தான் அப்பா பொண்ணு செண்டிமெண்ட் . இப்ப திரும்பவுமா?

சிவா : அதுல அப்பா பொண்ணு. இதுல அண்ணண் தங்கச்சி. கீர்த்தி சுரேஷ்  இப்போதான் உடம்ப குறைச்சிருக்காங்க. அவங்கள புக் பண்ணிடலாம்.

ரஜினி : ஐ. அவங்க தான் எனக்கு ஜோடியா. பேஷ். பின்றீங்க.

சிவா : ஐயோ சார். அது தான் உங்க தங்கச்சி.

ரஜினி: ஓஓ. கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுட்டேன். அப்போ ஹீரோயின் யாரு?

சிவா: போன படத்துல நடிச்ச நயன்தாரா போட்டுக்கலாம் சார். ஆனா வயசு வித்தியாசம் காரணமா அந்த படத்துலேயே நயன்தாராவ போட்டதுக்கு கதைக்குள்ளேயே ஒரு சீன் வச்சி ஒட்டிருப்பாங்க. நான் அந்த அளவுக்கு பங்கம் வைக்கல. ஒரு பிரென்ட், பேமிலி பிரென்ட் மாதிரி, ஒரு குழப்பமா கதைல கொண்டு வந்துடலாம். என்ன ரோல்னு யாருக்கும் தெரியாத மாதிரி. கடைசில கீர்த்திய காப்பாத்தும்போது கூட, சூரிய ஒரு தொட்டி ஆட்டோ கொண்டு வந்து இடிச்சி அப்டியே கண்டுக்காம கழட்டி விட்டுரலாம்.
   
ரஜினி : பென்டாஸ்டிக் சிவா. அப்புறம் என்ன ஸ்பெஷல்.

சிவா: குஷ்பு, மீனா இவங்க ரெண்டு பேரையும் கூப்ட்ருக்கேன்.

ரஜினி: மார்வெலஸ். சர்ப்ரைஸ் மேல சர்ப்ரைஸா கொடுக்கறீங்க. அவங்களுக்கு என்ன ரோல்.

சிவா: அது எனக்கே தெரியாது சார். கூப்டு வந்து சேலை கட்டி வுட்டு, ஒரு பாட்டுக்கு டான்ஸ் மாதிரி எதாவது அப்டி இப்டி ஆடி, படத்த இன்னோரு அரை மணி நேரம் ரொப்பிரலாம் சார். அப்டியே படத்த ரிச்சா காமிக்கிறோம். கலர் கலரா வராங்க போறாங்க. அவ்ளோதான்.

ரஜினி : செம. வேற என்ன ஸ்பெஷல் சொல்லுங்க.

சிவா : சூரிய காமெடிக்கு கூப்டுக்கலாம்.

ரஜினி: போன படத்துல யோகி பாபு. இந்த படத்துல சூரி. செம யூத்தா இருக்கும்ல.

சிவா : உங்களையே யூத்தாதான் காமிக்கிறோம். அவரு வழக்கம்போல டங்கிலிஷ் பேசிட்டு கடுப்படிச்சிட்டு இருப்பார். சாரி. காமெடி பண்ணிட்ருப்பார்.

ரஜினி : வேற என்ன ஸ்பெஷல்.  

சிவா: செமயா ஒன்னு யோசிச்சிருக்கேன். குப்புலி லீலானு ஒரு ஆர்ட்டிஸ்ட். உங்களோட ஒரு நாலு வயசு கம்மி.

ரஜினி : நீங்க என்ன சொல்லப்போறீங்கன்னு கண்டுபிடிச்சிட்டேன். அவங்கதான என்னோட அம்மா கேரக்டர் பண்ணப்போறாங்க. கரெக்டா?

சிவா : இல்ல சார். அதையும் தாண்டி. பாட்டி கேரக்டர். இது எப்படி இருக்கு?

ரஜினி: பத்த வைக்குறீங்களே சிவா. பட்டைய கிளப்புறீங்களே. வேற வேற சொல்லுங்க.

சிவா ஸ்டண்ட் சீன்களை வரிசையாக விளக்குகிறார்.

ரஜினி : படம் புல்லா ச்சும்மா பத்திக்கிட்டு எரியும் போல. அந்த லாரிலாம் எப்படி வெடிக்குது?

சிவா: எனக்கே தெரியாது சார். வெடிக்க வைக்கிறோம். தீபாவளில. எதையாவுது எரிப்போம்.  

ரஜினி: அப்புறம் வில்லன் பில்டிங்க்குள்ளேயே போய்ட்டு இந்த 9.50, 10.10 மணிக்கு அலாரம் வச்சிட்டு கொல்றேனே. அது எப்படி. என்ன லாஜிக். எப்படி நான் வில்லனோட இடத்துல சேஃபா இருக்குறேன். ரசிகர்கள் கேக்கமாட்டாங்களா?

சிவா: லாஜிக்கா. என்ன ஜோக் சார். அதலாம் நாம பாக்கலாமா. சும்மா அப்புடியே படம் எடுக்க வேண்டிதான் சார். கதைல ஒரு விறுவிறுப்பு எப்படி கொண்டு வர்றது. நீங்க ஒரு பவுன் விஷயத்த மறந்துட்டீங்க.

ரஜினி:   கரெக்ட். கரெக்ட். சரி, அந்த பில்டிங் மேல நின்னுட்டு கையிறு கட்டி ஒரு அடியாள தொங்க வைக்கிறோம். பட் நான் மேல கயிற இழுத்தா அந்த ஆளு வெளில போனுமே. எப்படி கண்ணாடில வந்து மோதுறான்.

சிவா: சார். நீங்க சொல்றது லாஜிக். பட் நம்ம பண்ணப்போறது மேஜிக். கயிறு கைல இழுக்கும்போது நீங்க வாய கோணிட்டு சூப்பரா ஒரு எக்ஸ்ப்ரெஸன் குடுப்பீங்க. பாருங்க. அப்டியே க்ளாப்ஸ் அள்ளும் சார்.

ரஜினி : ஜமாய்ச்சுடலாம்   போங்க.அப்புறம் சிவா இன்னோனு கண்டுபிடிச்சிட்டேன்.அந்த லீலா கேரக்டர் எனக்கு பாட்டியா நடிக்கறதுனால தான் காண்டாகி கீர்த்தியோட லவ்வ எண்ட சொல்லாம வேற ஏதோ பொய் சொல்லி அப்டியே கதை வேற எங்கெங்கோ போய், செம ட்விஸ்டு சிவா

சிவா: ஆமா சார். பாய்ண்ட புடிச்சிட்டீங்க.  தவிர முத பாட்டா நம்ம SPB யோட பாட்டு. நாலு ஹீரோயின். ரெண்டு வில்லன். காமெடி அதகளத்துக்கு சூரி, ரெண்டு வில்லன். கொல்கட்டால சூட்டிங். அங்கங்க ஃபைட். உங்க அதிரடி டான்ஸ். 60 ஷாட் மாதிரி லாரிய வெடிக்க வைக்கிறோம். இந்த கிழி போதுமா சார்.   

ரஜினி : போன தடவ வேட்டிய பின்னாடி கிழிச்ச மாதிரி படம் எடுத்தாங்க. இந்தத்தடவ நீங்க அண்டர்வெரோட ரோட்ல  ஓடுற மாதிரி படம் பண்ணப்போறீங்க.  அப்டிதானே

சிவா : ஆமா சார். ஆமா.

ரஜினி: ஒரு நூறு கோடி சம்பளம் போதும்.

சிவா: அவ்வளவுதான் சார். சன் பிக்சர்ஸ் உள்ள வந்தாச்சு. மொக்கப்படம்னாலும் ஓட்டிடுவாங்க. கவலையே வேண்டாம்.

எ பிலிம் பை சிவா  .அண்ட் டீம். 

 

வியாழன், நவம்பர் 25, 2021

முதல் மரியாதையும் தமிழ் புலவரும்

 https://twitter.com/iParisal/status/1463394870064680963?t=w6zHqcY2Q1oWbnT8vwEjVw&s=09

முதல் மரியாதையை வேறு கோணத்தில் அணுகிய இந்த விமர்சனம் சுவாரஸ்யமாக இருக்கிறது. தேசிய விருதெல்லாம் வாங்கி எல்லோரும் கொண்டாடி அலுத்து சலித்தப்பிறகு, தூசி தட்டி மாற்றுப்பார்வையோடு தமது கருத்துக்களை முன் வைக்கிறார் விமர்சகர். வடிவுக்கரசிக்கு வக்காலத்து வாங்கலாமா இல்லையா என்று யோசித்து கொண்டிருந்த நேரத்தில், சுமார் 23 வருடங்களுக்கு முன் நான் பள்ளியில் படித்தபொழுது எழுதிய கட்டுரை நினைவலைகளில் வந்து போகிறது. 

பத்து மார்க் கேள்வி என்று நினைக்கிறேன். தமிழ் பாடப்புத்தகத்தில் கதைகள் இடம்பெறும். புத்தகத்தின் கடைசி கதை அது. கதையின் கரு இதுதான். ஒரு தமிழ் புலவர் தனது மனைவி மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். தமிழின் பால் தீரா பற்றுடையவர். ஆதலினால் தமிழை நேசிக்கும் பொருட்டு தனது மனைவி மக்களை கூட மறந்துவிடுகிறார். வீட்டை பொருளாதார ரீதியில் மற்றும் இறையாண்மையோடு(!!!) வழிநடத்தி செல்வது அவரது மனைவி. அப்படிப்பட்ட அர்ப்பணிப்போடு புலவர் தமிழை நேசித்து வளர்த்தார் என்று கதை முடிவுறும். இதை பற்றி இரு பத்திகள் மிகாமல் ஒரு கட்டுரை வரைக என்பது அந்த இறுதியாண்டு பரீட்சையின் கேள்வி. 


எனக்கு அந்த கதை போன போக்கே பிடிக்கவில்லை. காலாண்டு மற்றும் அரையாண்டில் அந்த கேள்வி கேட்கப்படாமல் இறுதி பரீட்சையில் அந்த கேள்வி கேட்கப்பட்டது, காய்ந்த மாடு கம்பங்கொல்லையில் புகுந்தது போல ஆகிவிட்டது. வீட்டில் குடும்பத்தை கவனிக்காமல், உன்னை நம்பி வந்தவளுக்கு சோறு போட யோக்கியதை இல்லமால், இரு உயிர்களின் உணர்வுகளை மதியாத புலவருக்கு திருமணம் ஒரு கேடா என்கிற ரீதியில் நாகரீகமாக(!!!) இருபக்கத்திற்கு பொரிந்து தள்ளிவிட்டேன். எரிகிற தீயில் என்னை ஊற்றுவது போல அந்த கதையில் ஒரு வரி கோபத்தை இன்னும் கிளறியிருந்தது. புலவர் வீட்டை விட்டு வெளிவரும்பொழுது வாசலில் இருக்கும்  ரோஜாச்செடி வாடியிருக்கும். மலர்கள் தலை கவிழ்ந்து காய்ந்து போய் நிற்கும். அதை கண்டவுடன் புலவருக்கு ஒரு கவிதை தோன்றும் என்றெல்லாம் வயித்தெரிச்சலை கிளப்பியிருப்பார்கள். புலவரின் பொறுப்பற்ற இல்லற வாழ்க்கைக்கு ஒரு சோறு பதம் போல இந்த காட்சி வாசிப்பவர்களுக்கு உணர்த்துகிறது என்கிற ரீதியில் இரண்டாம் பக்கத்தில் இதற்கென்றே தனியாக ஒரு பத்தி விலாவரியாக கிளறிவிட்டிருந்தேன். தமிழ் வாத்தியார் திட்டினாலும் பரவாயில்லை என்று முடிவு செய்தாயிற்று. ஆனால் முழு ஆண்டு தேர்வின் திருத்தப்பட்ட பின்னூட்டங்கள் எப்பொழுதும் நமக்கு அளிக்கப்படுவதில்லை. அந்த பாடத்தில் தேர்ச்சியா தோல்வியா என்பதுடன் சஸ்பென்ஸ் முடிந்துவிடும். தேர்ச்சி. அவ்வளவுதான்.  

முதிர்ச்சியடையாத நாட்களில் எழுதப்பெற்ற என்னுடைய முதல் விமர்சனம் என்பதால், அந்த தேர்வின் விடைத்தாளை யாரேனும் ஒரு நகல் பெற்று கொடுத்தால், கருமாத்தூர் காட்டுக்குள்ளே கறிவிருந்து அளிக்கலாம் என்ற உறுதியளிப்பை இங்கு நான் பதிவு செய்ய கடமைப்பட்டிருக்கிறேன்.   


ஞாயிறு, நவம்பர் 21, 2021

ஜெய் பீம்

எழுத்து, ஓவியம், தெருக்கூத்து, நாடகம், பாடல், சினிமா என கலை  எந்த பரிமாணத்தில் இருந்தாலும் அது இயல்வாழ்க்கையை பிரதிபலிக்கும் கண்ணாடியாகவே இருந்து வந்துள்ளது. மகிழ்ச்சி, துக்கம், பெருமை, கோரிக்கை என  உணர்வுகளை ஒத்திசைத்து வெளிப்படுத்தும் ஆயுதமாகவே பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டுள்ளது.  ஒளியும் ஒலியும் இணைந்த நாட்கள் முதல் சினிமா அதில் முன்னோடியாகிவிட்டது. ஏலக்காய் அறுவடை செய்யும் குடும்பத்தின் எளிமையான வாழ்க்கையை, மேற்கு தொடர்ச்சி மலையின் அழகை அருகில் இருந்து பார்க்கும் உணர்வை சினிமாவைத்தவிர அவ்வளவு அழுத்தமாக நமக்கு வேறு எதுவும் கடத்தியிருக்க முடியாது.    

அதுபோலவே வரலாறும். இன்னும் சொல்லுவதென்றால் வரலாற்றின் சாட்சியாகவே பல சிறந்த படைப்புகள் சினிமாவில் இருக்கிறது. அதுபோன்ற மறந்துவிடக்கூடாத ஒரு வரலாற்றின் சாட்சி தான் 'ஜெய் பீம்'. நல்ல படைப்பாளியை, மனிதர்களை அடையாளப்படுத்தி காட்டுவதிலும் வெகு ஜனத்திடம் கொண்டு போய் சேர்ப்பதிலும் விகடன் என்றுமே நம்பர் ஒன். நீதியரசர் சந்துரு ஒய்வு பெற்ற போது அவரை பற்றி, அவரது சாதனைகளை எடுத்துரைத்து ஒரு கவர் ஸ்டோரியுடன் பிரியாவிடை அளித்திருந்தது. அந்த  கட்டுரை வராவிட்டால் என்னளவில் அவர் மற்றுமொரு நீதிபதியாகவே  இருந்திருப்பார். எளிய மக்களுக்கு உதவும் நீதியரசியராக எனக்கு அறிமுகமாயிருக்கமாட்டார்.


ரியல் சந்துரு கதாபாத்திரத்தில் சூர்யா. கதையின் முக்கியத்துவம் கருதி தயாரிக்க முன்வந்து காத்திரமான நடிப்பையும்  வெளிப்படுத்தியிருக்கிறார். இருளர் ராஜ்கண்ணுவாக மணிகண்டன் கச்சிதமான தேர்வு. திரைக்கதையின் சுவாரசியம் பொருட்டு வழக்கின் முக்கிய முடிச்சுகள் சாட்சிகள் விசாரிக்கப்படும் வரிசையிலேயே அவிழ்க்கப்படுகின்றன. மிக நீண்ட நாட்களுக்குப்பிறகு விறுவிறுப்பான ஒரு கோர்ட்ரூம் டிராமா. அதுவும் நிஜ நிகழ்வுகள் என்பது நம்மை கலங்கடிக்கின்றது.

படத்தின் ஆரம்ப வசனங்களே பார்வையாளராகிய நம் மீது அணுகுண்டை எரிகிறது. ஆதிக்க சாதி மற்றும் ஒடுக்கப்பட்ட சாதி பெயர்களை வெளிப்படையாக பேசிய அளவில் கவனம் ஈர்க்கிறது. போய் கேசுக்காக போலீஸ் நடத்தும் பேரம், அரசாங்க கட்டமைப்பின் அவலம். "குடிசையை கொளுத்த எவ்வளவு நேரம் ஆகும்" போன்ற வசனங்கள் ஆதிக்க சாதியின் மனோபாவத்தை தைரியமாக துகிலுரிக்கின்றன. வீட்டில் ஒளிந்திருக்கும் பாம்பை பிடிக்க தேவைப்படும் இருளர்கள் தோளைக்கூட தொடக்கூடாது, திருட்டு வழக்குகளில் முகாந்திரம் இல்லாமல் இருளர்களை பிடித்துப்போடுவது காவல்துறைக்கு ஒரு வழக்கமாகவே இருந்துள்ளது என்பதும், சாதியை மேற்கோள்காட்டி திருட்டுப்பட்டம் கட்டுவது, மேலும் கேட்க நாதி இல்லாத காரணத்தால் இருளர்கள் மீது பொய் வழக்கு போடுவது போன்றவையும் சகிக்க முடியாத சமூக அவலங்கள். அதை எதிர்த்து எதிர்வினையாற்றாமல் மெளனமாக இருக்கும் நாம் ஒவ்வொருவரும் அந்த குற்றங்களுக்கு துணை போனவர்கள்தாம். வில் வித்தையில் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்த இவர்களின் வரலாற்றை மறந்து ஒதுக்கிவைக்கப்பட்டுள்ளார்கள் என்பது தெரிந்துகொள்ளப்படவேண்டிய செய்தி. இதுபோன்ற சமூக   அவலங்களை ஆராய்ந்து தெளிவுபடுத்துவதில் முனைவர்களின் ஆராய்ச்சிக்கட்டுரைகள் மிகவும் பயன்டுகின்றன.

சட்டம் மட்டும் இயற்றப்படவில்லையென்றால் சமூதாயத்தில் இன்றளவும் பலமக்கள் சாதனை புரிய வழியில்லாமல் ஒடுக்கப்பட்ட மனிதர்களாகவே இருந்திருப்பார்கள். நீதிபதி சந்துரு போன்ற பல தனிப்பட்ட மனிதர்களின் அர்பணிப்பான உழைப்பே மக்களுக்கு தைரியம் அளிக்கும் ஆயுதமாக இருக்கிறது. 1995இல் இருளர் வாழ்வுரிமை காக்கும் சங்கம் தொடங்கப்பட்டிருக்கிறது. எங்கெங்கெல்லாம் மக்கள்  ஒடுக்கப்பட்டார்களோ அங்கெங்கெல்லாம் தங்களை போராடி மீட்டெடுக்க சங்கங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அவ்வகையில் ஒடுக்கப்பட்ட  மக்களுக்காக போராடுவதற்கு தன் வாழ்நாளையே அர்ப்பணித்த பீமாராவ் ராம்ஜி அம்பேத்கரின் உழைப்பை நன்றியுடன் நினைவுகூறும் பொருட்டே 'ஜெய் பீம்' என்கிற தலைப்பு. தமிழ் மொழியில் கதைக்கேற்ற தலைப்புடன் வெளிவந்த  சினிமாவில் ஆகச்சிறந்த தலைப்பாக இதை கொள்ளலாம். 

சட்டத்தின் மூலம் நியாயத்தை நிலைநாட்ட முடியும் என்ற நம்பிக்கையை தூவியிருப்பது இந்த வழக்கின் மிகப்பெரிய வெற்றியாகும். அதை காட்சிப்படுத்தி அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்த்த விதத்தில் ஜெய் பீம் சந்தேகத்திற்கு இடமின்றி வெற்றிபெற்றிருக்கிறது

 மதமும் சாதியும் ஒழிந்து மனிதம் மலரட்டும்.   

 ஜெய் பீம்!!!

கனவு மெய்ப்படவேண்டும்

சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் செய்தி அவ்வளவு எளிதில் ஜீரணிக்கமுடியாதது. நண்பியின் தாத்தா என்றெல்லாம் குறிப்பில் எழுதப்பட்டிருக்கிறது. பேத்தியின் சக தோழியை, தன் பெண்ணைப்போல பள்ளிக்கு கல்வி பயில வந்த மாணவியை போகப்பொருளாக பார்த்த பார்வை நமது சமூகத்தின் கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளை பறைசாற்றி முகத்தில் அறைகிறது. தற்கொலை முடிவை எடுக்கும் முன் பெற்றோர், பள்ளி தாளாளர் என்று அனைவரிடத்திலும் தன் இன்னல்களைத்தெரிவித்திருக்கிறார். எங்குமே தீர்வு கிடைக்காத விரக்தியில் அந்தத்தளிர் தன்னை தானே பொசுக்கிகொண்டுள்ளது.

மூன்று மாதத்திற்கு முன் கல்வி அமைச்சரின் நெருங்கிய சகா ஒருவர், இதுபோன்ற பள்ளியில் நிலவும் குறைகளைத்தெரிவிக்க ஒரு Toll Free நம்பரை நிறுவும் ஆலோசனையில் அமைச்சர் ஈடுபட்டிருப்பதாகத்தெரிவித்திருந்தார். இந்த சம்பவத்திற்கு பிறகு அவரைத்தொடர்பு கொண்டேன். Toll Free அழைப்பில் புகார் அழைப்பு மற்றும் குரல் பதிவு செய்யப்படுவதால் இந்த செயல்பாடு வரவேற்பைப்பெறுமா என்ற ஆலோசனையில் காலம் தாழ்ந்துவிட்டது என்று வருந்தினார்.
என்னைப்பொறுத்தவரை இரண்டே தீர்வுகள். ஒன்று, இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை பகிரங்கமாக தண்டிப்பது. இதற்கு அரசின் ஒத்துழைப்பும் சட்டசீர்திருத்தமும் செயல்படுத்தப்பட வேண்டும். இரண்டாவது மாணவர்கள் மற்றும் பெற்றோரின் கையில். குட்டக்குட்ட குனியாமல் மனதில் பயத்தை அகற்றி துணிவுடன் வெளிப்படையாக எதிர்ப்பது. கீழ்த்தரமாக நடக்கும் ஒரு உயிரினத்திற்கே இந்த வையகத்தில் வாழ வழி இருக்கும்பொழுது, பார் வியந்து போற்றும் சாதனைகளை புரிய காத்திருக்கும் மாணவர்கள், தற்கொலை தான் நிரந்தரத் தீர்வு என்ற முடிவை கைவிட்டு தன் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். பிதாகரஸ் தியரத்துடன் ஆளுமைத்திறன் பயிற்சி கட்டாயமாக்கப்படவேண்டும். கல்விக்கும் எனக்கும் சம்பந்தமில்லை, அதற்குத்தானே பள்ளி என்ற கற்பிதங்களை களைந்துவிட்டு, குழந்தைகளின் குறைகளை அருகில் அமர்ந்து செவிமடுக்க, மறுவினை புரிய, உறுதுணையாக இருக்கிறோம் என்று நம்பிக்கையூட்ட பெற்றோர்கள் முன் வரவேண்டும்.
கனவு மெய்ப்படவேண்டும்

ஞாயிறு, நவம்பர் 07, 2021

அவங்க வீட்டுபிள்ளை

ஒரு பக்க அளவில் உள்ள கற்பனையான 200 வார்த்தைகளால் என்ன கொடுத்துவிடமுடியும்?

ஆண்டாண்டுக்கும் ஏன் தலைமுறை தாண்டியும் படித்து தெரிந்துகொள்ளவேண்டிய, காலச்சக்கரத்தில் உறைந்துபோன உண்மைச்சரித்திரத்தை பரிசாக கொடுக்க முடியும். 

5 வார்த்தைகள். அதை கோர்வையாகத்தொடுத்து 200 வார்த்தைகளுக்கு மிகாமல் ஒரு புனைவு வரையும் போட்டி. பதினைந்து நிமிடங்களில் புனைந்தது. போட்டியில் முதல் பரிசை தட்டி வந்துள்ளது. பரிசாக 'காவல் கோட்டமும்,  வால்கா முதல் கங்கை வரை' புத்தகங்கள். போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் தேர்வர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். 

இந்த ஐந்து வார்த்தைகளை தொடுத்து சமைத்த கதை கீழே. 

அவங்க வீட்டுபிள்ளை 

தமிழழகனுக்கு அந்த காலை அவ்வாறு விடியும் என்று அவனே எதிர்பாராதது. இரவு அவனோடு படுத்து உறங்கிய இளைய மகன் நேயனை காணவில்லை. அவனது குடும்பமே அந்த நடைபாதையில் தான் படுத்து உறங்கும்.  பக்கத்து தெருவில் இருந்த பாழடைந்த பங்களாவை  உறைவிடமாக்கிக்கொள்ளாலாம் என்று கூறியபோது அது அவனது மனைவி இலக்கியாவுக்கு பிடிக்கவில்லை. ஏழை என்றாலும் பணக்காரன் என்றாலும் மீனாட்சி கோடு கிழித்தபின் சுந்தரேஸ்வரர் அதைத்தாண்டுவதில்லை எனும்போது தமிழழகன் மட்டும் விதிவிலக்கா என்ன? அந்த வழியாக செல்வோர் போடும் மீந்த உணவை உண்டுதான் அந்த குடும்பமே உயிர் வாழ்ந்தது. பெரிசாக சொல்லிக்கொள்ள உறவுகள் ஏதும் இல்லாததால் அந்த நடைபாதையே கதி என்று அந்த குடும்பம் கிிடந்தது.

இருந்தாலும் இளைய வளவல் என்ற காரணத்தினால், நேயனை முழு அன்போடு அந்த குடும்பம் நேசித்தது. மனைவி இலக்கியாவுக்கு இதுவரை மூன்று முறை பிரசவம் ஆகியிருந்தது. எல்லாமே இதே நடைபாதையில் நடந்த சுகப்பிரசவம். அதிலே நேயன் தான் கடைக்குட்டி. பிறந்ததிலிருந்து பாலைத்தவிர வேறு எதுவும் குடிததில்லை. அதுவும் ஒரு பெரியவரின் கரிசனத்தில் கிடைக்ககும் வேதா பாக்கெட் பால். ஜில்லென்று இருக்கும் பாக்கெட்டை பல்லாலேயே கடித்து குடித்துவிடுவான் நேயன். குடும்பமே எச்சில் உணவுகளை உண்டாலும், நேயனுக்கு எப்போதுமே இந்த பாக்கெட் பால் தான்.  அவ்வளவு அன்புடன் சீராட்டி வளர்த்த நேயனின் பிரிவு அந்த குடும்பத்தையே அந்த காலை வேளையில் புரட்டி போட்டிருந்தது.

தமிழழகனும் இலக்கியாவும் நாலு கால் பாய்ச்சலில் நேயனைத்தேட ஆரம்பித்தனர். எதிரில் தென்பட்ட இளங்கிள்ளி மற்றும் எழில்வேந்தனிடம் விசாரித்தனர்.  வயதான அந்த இருவர் தான் ஒருவகையில் அந்த தெருவுக்கே பாதுகாப்பு.  இருவரும் தெரியாது என்று சொல்லவும் இலக்கியா ஓடாது நிற்கும் காருக்கு அடியில் உறங்கி கொண்டிருக்கும் உணர்வுக்கினியாள் மற்றும் குணமங்கையிடம் நேயனின் பிரிவை தாளாது அரற்றினாள். ஆனால், தமிழழகன் அவனது உள்ளுணர்வின் பேரில் அந்த பாழடைந்த பங்களாவை நோக்கி நாலுகால் பாய்ச்சலில் வேகமாக ஓடினான். அவன் எதிர்பார்த்தது போலவே அங்கு நேயன் கிழிந்து போன பந்தை வைத்து விளையாடிக்கொண்டிருந்தான். 

நேயன் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் ‘லொள், லொள்’ என்று உரக்க குறைத்துக்கொண்டே அந்த நாய்கள் குடும்பம், மீண்டும் நடைபாதையை நோக்கி  ஓடத்தொடங்கியது.


அந்த ஐந்து வார்த்தைகள் - "குடும்பம்-உறவு-அன்பு-பிரிவு-மகிழ்ச்சி"


வியாழன், நவம்பர் 04, 2021

SOP - Four Lane - நிலையான வளர்ச்சி

கடந்த மாதம், என்னுடன் முந்தைய நிறுவனத்தில் வேலை பார்த்த ஒரு நண்பர் reference லெட்டர் எழுதிக்கொடுங்கள் என்று கோரிக்கை விடுத்திருந்தார். Reference லெட்டர் எழுதுற அளவுக்கு எனக்கு வயது ஆகவில்லையே என்ற அதிர்ச்சியில் என்ன ஏது என்று விசாரித்தபொழுது வெளிநாட்டில் மேற்படிப்பு படிக்கப்போவதாகவும் அதற்கு படிப்பு மற்றும் வேலை சம்பந்தப்பட்டவர்கள் reference கொடுக்க வேண்டும் என்றும் விளக்கினார். நீங்கள் என்னுடன் வேலை பார்த்தவர் என்ற முறையில் என்னைப்பற்றி உங்களுக்கு தெரிந்தவற்றையும் இந்த படிப்புக்கு நான் எவ்வாறு உகந்தவனாக இருப்பேன் என்பதையும் எழுதலாம் என்றும் கூறினார். மேலும் எதற்காக அந்த படிப்பை நாம் தேர்ந்தெடுத்தோம் என்று ஒரு SOP (Statement of Purpose), இந்த படிப்பினால் என்ன வகையான திறமைகளை வளர்த்துக்கொள்ளுவீர்கள், இந்த படிப்பின் மூலம் உங்கள் நாட்டுக்கும் சுற்றுச்சூழலுக்கும் எவ்வாறு உதவிகரமாக இருப்பீர்கள், என்ன முன்னேற்றத்தை கொடுப்பீர்கள் என்று பல கேள்விகள்; அதற்கு தோராயமாக 500 வார்த்தைகளில் கட்டுரை எழுதி விண்ணப்பபடிவத்துடன் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் விளக்கினார். அடேங்கப்பா என்றிருந்தது. நாட்டின் முன்னேற்றம் இளைஞர்கள் கையில் இருக்கிறது என்று கூறும் நாம் அவர்களை நெறிப்படுத்த என்ன முயற்சிகளை எடுத்தோம் என்று யோசித்திருக்கிறோமா?. அதுகூட வேண்டாம். நாம் படிக்கும் படிப்பை விரும்பிதான் தேர்ந்தெடுக்கிறோமா?, அந்தத்துறையில் என்ன முன்னேற்றத்தை கொடுக்கப்போகிறோம் என்று குறிக்கோளுடன் தான் நாம் நம்முடைய கல்லூரியில் காலடியெடுத்து வைத்தோமா என்றால், 99 சதவீதம் இல்லை என்றே பதில் வரும். 

நிற்க. 



கடந்த வாரம் எங்கள் சுற்றுவட்டாரத்தில் ஒரு விபத்து நடந்தது. நால்வழிச்சாலையில் மீடியனை தாண்டும் நேரத்தில் கவனக்குறைவாக எதிர்புறமாக பார்த்தது சாலையைக்கடக்க இறங்கியபோது டேங்கர் லாரியில் அடிபட்டு ஒரு பெண் இறந்துவிட்டார். மிக வருந்தத்தக்க இந்தத்துயரச்செய்தியால் வட்டாராமே சோகத்தில் மூழ்கியது. இதுசம்பந்தமான செய்தி வாட்சப்பில் வந்ததால் விழிப்புணர்வு பொருட்டு வீட்டுக்கருகில் குறுக்கு மறுக்காக சாலையில் ஓடி விளையாண்டுகொண்டிருந்த சுட்டிகளை கூப்பிட்டு கொஞ்சமே கொஞ்சமாக விளக்கிக்கூறினேன். சேர்ந்தாற்போல் எல்லோரும் 'உச்' என்று வருத்தப்பட்டனர். அதில் ஒரு வாண்டு கூறியது, "ஏன் நாம வேகமாக போற வண்டிக்கு தனியா, பஸ்ஸுக்கு தனியா, இதுமாதிரி நடக்கிறவங்களுக்கு தனியா ரோட் போட்ருக்கலாமே. அப்புறம் இந்த மேல ஏறிப்போவாங்களே, அது மாதிரி இரும்புல ஒரு பாலம் போட்டா இந்தமாதிரி ஆக்சிடென்ட் நடக்காதுல்ல" என்று கூறியது. வயது ஏழிருக்கலாம். ஒரு விபத்து, அந்த நிகழ்வை எதிர்கொண்டு வருந்தி கடந்தவிதம், பின் அதற்கு BRTS (Bus  Rapid  Transit  System), Foot over Bridge என அதற்குத்தெரிந்த மொழிகளில் ஒரு தீர்வையும் இரண்டு நிமிடத்தில் கொடுத்துவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிட்டது அந்த சுட்டி. 

என்ன ஜாதி, என்ன கேட்டகிரி, என்ன மதம் என்று அப்பிளிக்கேஷன் பாரத்தில் நாம் நிரப்பும் வரையும், குழந்தைகளின் திறமை எதில் உள்ளது? அதில் அவனை/ளை முன்னேற்ற என்ன செய்யலாம் என்று பெற்றோர்கள் யோசிக்காத வரையிலும் நாட்டின் முன்னேற்றம் ஏட்டளவில் மட்டுமே இருக்கும்.  

குழந்தைகள் என்னவோ இந்த சமூகத்தின் பிரச்சினைக்கான தீர்வுகளையும், நாட்டின் வளத்தை முன்னேற்றும் திட்டங்களையும் இயற்கையாகவே கொண்டிருக்கிறார்கள். நாம் தான் அவர்களை டாக்டர்களாகவும், இன்ஜினீயர்களாகவும் பணித்து முளையிலேயே கருக்கிவிடுகிறோம்.

என்னங்க சார் உங்க சட்டம்

இந்த ஹோட்டல் புதுசா இருக்கே? சாப்டீங்களா? நல்லாருக்கா? அப்டினு கேட்டா, அந்த நண்பர் சொல்ற பதில் சுவாரஸ்யமா இருக்கும். "அது எப்படி இருக்குன்னே தெரில. அதுல நம்ம போய் முதல்ல சாப்பிடறத விட யாரவது ஒருத்தர் சாப்பிட்டு நல்லாருக்கா நல்லால்லைய்யான்னு சொல்லுவாங்க. அப்ப போய்க்கலாம்" அப்டின்னுவார்.

அது மாதிரி "என்னங்க சார் உங்க சட்டம்?" படத்தோட ட்ரைலர் பாத்தபோது, இந்த படத்த யாராவது பாத்துட்டு நல்லாருக்கா? இல்லையானு சொல்லுவாங்கனு வெயிட் பண்ணி பார்த்தேன். சுக்கிரன் உச்சத்துல இல்ல போல. ட்ரிக் ஒர்க் அவுட் ஆகல. OTT  ல பார்த்தாச்சு.

இவ்ளோ அனல் தெரிக்கிற வசனங்கள் கொண்ட இந்த படத்த தியேட்டர்ல ரிலீஸ் பண்ணிருந்தால் கண்டிப்பாக போராட்டம் வெடித்திருக்கும். OTTயில் வெளியானதால் கவண் ஈர்க்க தவறிவிட்டது. 



ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் படம் எடுத்த விதம் மற்றும் பேசுபொருள் இரண்டுமே அதகளம்.

முதல் பாதியில் ஹீரோவின் கலகலப்பான அலப்பறைகள். ஒவ்வொரு சீனுமே ப்ரெஷ். அதுவும் ரோகிணியின் ஜெனிலியா காமெடி சற்றும் எதிர்பார்க்காத ஆயிரம் வாலா சரவெடி. ஜாலியா ப்ரெஷ்ஷா ஒரு படம் எடுக்கமுடியுமா என்ற சவாலுக்கு பதிலாக முதல் பாதியை இயக்குனர் படைத்திருக்கிறார். இரண்டாவது பாதி முழுவதும் அரசு மற்றும் சமூகத்திற்கான சாட்டையடி. முதல் பாதியில் நடித்த அனைத்து கதாபாத்திரமும் இரண்டாவது பாதியில், ஆனால் முற்றிலும் வேறொரு பரிணாமத்தில், அதுவும் கனகச்சிதமாக. 

ஒரு பக்கம் ஏழை சவுண்டி பிராமணன் சமூகத்தில் எதிர்கொள்ளும் இன்னல்களும் மறுபக்கம் பட்டியல் வகுப்பினர் சமூகத்தில் வதைபடும் காட்சிகள் என கொஞ்சம் சறுக்கினாலும் ஏதாவது ஒரு பக்கம் எல்லை மீறிவிடும் என்பது மாதிரியான cat on the wall திரைக்கதை. ஆனாலும் இரு பக்கமும் perfect balance. "குரல்ல தெய்வீகம் னா" என்றும் "நீ என் பிரென்ட் டா, உனக்குனா செய்றேன் கண்டாவாக்கெல்லாம் செய்ய முடியாது" என்ற இரண்டுமே தரமான கிச்சுகிச்சு சீன்ஸ். நடுவில், "உங்களுக்கும் சேர்த்துதாண்டா அவன் போராடறான்" என்று OBC க்கு ஒரு குட்டு.

ஏழை பிராமணன் என்றால் மற்றவரைக்காட்டிலும் உயிரைக்கொடுத்துதான் படிக்கவேண்டும், நாங்க போடுற காச மட்டும் ஏத்துக்குற கடவுள், நாங்க அர்ச்சனை பண்ணினா ஏத்துக்காதா, கருவறைக்கு உள்ள இருக்குறது மட்டும் தான் சாமி, மத்தவங்கள சாமின்னு கூப்பிட்றத நிறுத்துங்க, சாதிய ஒழிக்க முடியாது, அது சாமியோடு கலந்துடுச்சு போன்ற வசனங்கள் திரைக்கதைக்கு பலம். அதுவும் ரோகிணியின் பேரன் கேட்கும் "ஸ்விம்மிங் கத்துக்கிட்டவங்களாம் கடுப்பாக மாட்டாங்களா?" என்ற அந்த ஒரு கேள்விக்கு அரசாணை இயற்றிய அரசே விழிபிதுங்கும். 

பிரச்சினையை மட்டும் சொல்லாமல் அதற்கான தீர்வையும் இயக்குனர் முன்வைக்கிறார். அதாவது கோட்டா சிஸ்டத்தை பயன்படுத்தி பலனடைந்த பின்பு தங்கள் வாரிசையும் அதே கோட்டா சிஸ்டத்தில் பலனடைய செய்யக்கூடாது. அதே சாதியில் உள்ள மற்றொருவருக்கு அந்த வாய்ப்பைத்தர வேண்டும் என்பதே அது. எப்படி கடவுளுடன் சாதி கலந்துவிட்டதோ, அதுபோலவே ஆட்சியிலும் சாதி வேரூன்றிவிட்டது. சாதிமத வாரியாக கணக்கெடுத்து நடத்தப்படும் இந்த ஓட்டரசியலில் இது இந்தியாவில் எட்டாக்கனி தான். 

ஒரு சில குறைகள் தெரிந்தாலும், முதல் படத்திலேயே சொல்ல நினைத்ததை தைரியமாக சொல்லியதற்கு அதுவும் அரசுக்கு ப(பா)டம் எடுத்ததற்கு, புதுமுக இயக்குனர் பிரபு ஜெயராமனுக்கு  சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கலாம்.  

EWS மட்டுமே கோட்டா சிஸ்டமாக இருக்க வேண்டும் என்பதே இயக்குனர் மற்றும் நம்முடைய அவா.  



 

செவ்வாய், அக்டோபர் 26, 2021

டாக்டர் 2021

ஆறு மெழுகுவர்த்திகள் பேசுபொருளும் டாக்டர் படத்தின் கருவும் ஒன்றே. ஆறு மெழுகுவர்த்திகள் படத்தில், தொலைந்துபோன மகனைத்தேடி ஷ்யாம் செல்லும் அந்த பயணம் எவரையும் புரட்டிபோட்டுவிடும் வலி நிறைந்தது. இறுதிவரையோ அல்லது மறுமுறையோ பார்க்கும் தைரியம் இல்லாதது. அதேபோலத்தான் டாக்டரில் தொலைந்துபோன சிறுமியைத்தேடி சிவகார்த்திகேயன் மற்றும் டீம் தேடலைத்தொடங்குகிறது. தொலைந்துபோன நிமிடம் முதல் மீளப்படும் தருணம் வரை உடைந்துபோகும் மனக்கிளர்ச்சியைத்தரும் பல காட்சிகளில் குபீர் சிரிப்பு வரவைத்து ஆச்சர்யப்படுத்தினால் அதுதான் டாக்டர். 



இயக்குனர் நெல்சனின் முதல் படமான 'கோலமாவு கோகிலா' படத்தில் வந்த பல கதாப்பாத்திரங்கள் இதிலும். அதிலும் ஆரம்ப காட்சிகளிலேயே கிங்ஸ்லியை களத்தில் இறக்கிவிட்டு அவரை வாள் வாள் என்று கத்த வைத்தது எரிச்சலைத்தந்தாலும் சில நிமிடங்களிலேயே அவருடைய நடிப்பு பாணிக்கு நாம் accustom ஆகிவிடுகிறோம். "வாரண்ட் இருக்கா?" என்ற முதல் டயலாக்கிலிருந்து இறுதியில் சிலுவையில் தொங்கும் வரை யோகி பாபு வயிற்றை புண்படுத்துகிறார். நியாய தர்மமே இல்லாமல், தொலைந்து போன குழந்தை எல்லோரிடமும் மன்னிப்பு கேட்கும் இடத்தில் கூட நம்மை சிரிக்கவைத்துவிடுகிறார்கள். இந்த படத்தில் "கடைசி வரை மருந்துக்குக்கூட நீங்கள் சிரிக்க கூடாது" என்று சொல்லித்தான் சிவகார்த்திகேயனை கூட்டி வந்திருப்பார்கள் போல. மனுஷன் 'சிரிச்சா போச்சு' ரவுண்டில் பங்கேற்கும் போட்டியாளர் போல இறுதி வரை ஒரு சிறு புன்முறுவல் கூட இல்லை. "செண்டிமெண்ட் சீன்லேயே சிரிக்க வைச்சாச்சு, நடுவுல இந்த ஒரு டூயட் வுட்டா ஒன்னும் தப்ப நினைக்க மாட்டாங்க" என்றெல்லாம் எண்ணாமல், அந்த 'செல்லம்மா' பாடலை இறுதியில் வைத்ததற்கு இயக்குனரின் இளகிய மனதை மனதார பாராட்டலாம். "என்னது, இளமை புதுமை அர்ச்சனா ஹீரோயினோட அம்மாவா?", என்று சற்று ஷாக்கான நேரத்தில் அண்ணி தான் என்று ஆற்றுப்படுத்தியிருக்கிறார். 

இதயமே அதிரும் வகையில் BGM. பல இடங்களில் இரைச்சல். ராணுவ டாக்டராக கதாநாயகனை எதற்கு வடிவமைத்திருக்கிறார்கள் என்று புரியவில்லை. ஒரு சில ரவுடிகளை ஊசி போட்டு பிடித்தது போல அந்த இரட்டையர்களை பிடித்திருக்கலாம். மெட்ரோ tunnel பைட்டுக்காக ஊசி குத்தும் ஐடியாவை பரணில் தூக்கிப்போட்டுவிட்டார்கள். இரண்டாம் பாதியில் வில்லன் வினைய்யை எப்பொழுதோ மடக்கியிருக்கலாம். குழந்தைகளையும் எப்பொழுதோ காப்பாற்றியிருக்கலாம். ஆனால் இதுபோன்ற பல 'லாம்'களை தவிர்த்துவிட்டு பார்த்தால், ஆரம்பம் முதல் இறுதிவரை வெடிச்சிரிப்பிற்கு நூறு சதவீதம் கியாரண்டீ. பிளாக் காமெடி வகையறாவில்  கோலமாவு கோகிலா பவுண்டரி என்றால் டாக்டர் படம் சிக்ஸர். இதுபோன்ற ஒரு சீரியசான கதை களத்திற்கு சற்றும் எதிர்பாராத வகையில் பிளாக் ஹ்யுமரை நிறைவாக அள்ளித்தெளித்திருக்கும் நெல்சனின் திரைக்கதையில் அவரது உழைப்பு மிளிர்கிறது. 

டாக்டர் ஒரு தரமான பேமிலி என்டர்டைனர். 









ஞாயிறு, அக்டோபர் 24, 2021

வினோதைய சித்தம்

V.K ராமசாமி, எஸ்.எஸ். சந்திரன் போன்ற குணச்சித்திர நடிகர்களை தற்போது மிஸ் செயகிறேன் என்று சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு  ஒரு பதிவு இட்டிருந்தேன். சோகத்தில்(!!!) ஆழ்ந்திருந்த என்னை தேற்றும் விதமாக ஓவியாவின் கண்ணன், அண்ணன் ramkumar "அதுக்குத்தான் பட்டாபி பாஸ்கர், ஜெயப்ரகாஷ், தம்பி ராமையா இவங்கல்லாம் இருக்காங்கல்ல", என்று ஆறுதல் கூறியிருந்தார். 

தற்போது அந்த பதிவை மீண்டும் நினைவுகூரும் காரணம் "வினோதைய சித்தம்" மற்றும் அதில் பரசுராமாக வாழ்ந்திருக்கும் தம்பி ராமையா. 




தனி ஆளாக படத்தை தோளில் சுமந்திருக்கிறார். ஆரம்பத்திலிருந்து காட்டும் மிடுக்காகட்டும், இறந்த பின் காலத்தோடு உரையாடும் போது காட்டும் கலவரமாகட்டும், மகள் பிரிந்து செல்லும் போது வெளிப்படும் கோபம், மனைவியிடம் சொல்லாமல் சொல்லும் காதல், பொது மேலாளராக நியமிக்கடப்படாமல் ஏற்படும் ஏமாற்றம், அதுவே கம்பெனியின் MDயாக மாறியவுடன் தொற்றும் உற்சாகம் என நடிப்பின் எல்லா ரசங்களையும் ரசிக்கவைக்கும் cosmetic இல்லா அரிதிலும் அரிதான performance. முழுமையான கலைஞன். இவருக்கு விருது கொடுத்து தேசிய விருதுக்கு மரியாதை செய்திருக்கிறார்கள் என்றால் என்னைப்பொறுத்தவரையில் மிகையில்லை.

"மேகா"வில் "புத்தம் புது காலை" ஒலிக்கும் திருமண நிகழ்வில், பார்க்கும் யாராயிருந்தாலும் விழியோரத்தில் நீர் துளிர்க்க வைக்கும் ஒரு நெகிழ்வான காட்சி வரும்.  அதுபோன்றதொரு தருணம் நெடுநாள் கழித்து "வினோதய சித்தம்" படத்தில். மிடுக்காக காரில் இருந்து இறங்கி 'மாப்பிள்ளை' என்ற நெஞ்சார அழைத்து கன்னத்தை வருடும் அந்த ஒரு க்ஷணம், ஒரு சோறு பதம். எல்லோருக்கும் உணவு பரிமாறும் காட்சியில் தம்பி ராமையாவின் நடிப்பு அதகளம். கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.

இதில் அறிவுரை வழங்கும் கதாப்பாத்திரமாகவே சமுத்திரக்கனி வந்தாலும் அலுப்பு இல்லை. அளவான அழகான அர்த்தமுள்ள வசனங்கள் திரைக்கதைக்கு பக்கபலம்.  முதல் நிமிடத்திலேயே கதைக்குள் பயணிக்கவேண்டும். கதை போகிற போக்கிலேயே கதாபாத்திர அறிமுகம் செய்யப்படவேண்டும், பின்னணி இசை, சமரசம் இல்லாத மேக்கிங் என் எல்லாமே இயல்பாக அதனதன் இடத்தில் சரியாக அமர்ந்திருக்கிறது. 

'டைம் இல்லை' என்று சொல்லுகிறவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ப(பா)டம்.

10/10


வெள்ளி, அக்டோபர் 15, 2021

தலைவி



தமிழக சினிமா மற்றும் அரசியல் என்று எடுத்துக்கொண்டால் அதில் தவிர்க்கமுடியாத பிம்பம் ஜெயலலிதாவினுடையது. 

அரசியலுக்குள் பிரவேசித்த ஆரம்பகாலத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில், தனது வாழ்க்கையை இரு நபர்கள் வெகுவாக influence செய்துள்ளார்கள் என்று கூறியுள்ளார். ஒன்று அவரது அம்மா சந்தியா. மற்றொன்று MGR. முதலாவது அவரது கட்டுப்பாட்டில் இல்லை. இரண்டாவது அவரே தனது கட்டுப்பாட்டினை இழந்து இழந்தது. அதுபோலவே தனக்கு பிடிக்காத இரண்டு பயணத்தை அவர் தனது வாழ்க்கையில் மேற்கொண்டார். முதலாவது நடிப்பு. அவர் அம்மாவின் உந்துததலில் அவருக்கே விருப்பமின்றி நடந்தது. இரண்டாவது அரசியல். MGRன் ச(க்)தி. இரண்டுமே அவர் சுதாரிப்பதற்குள் அவரை ஆரத்தழுவி கொண்டது. 

சரி, தலைவி படம் அவரது வாழக்கையை எந்த அளவுக்கு வெளிச்சமிட்டிருக்கிறது என்று பார்த்தோமென்றால் ஏமாற்றமே. சாவித்ரியின் வாழ்க்கையை பேசிய 'மகாநடிகை' வெற்றி வேற முக்கிய காரணம், அந்த கதை திரையில் எடுத்திருக்கும் நடுநிலைமை. ஜெமினியை சாடிய அதே நேரத்தில் சாவித்ரியின் தவறையும் சுட்டிக்காட்ட தவறவில்லை. தலைவி ஏமாற்றிய இடம் இந்த நடுநிலைமையை வசதியாக மறந்ததினால். அனுதாபத்துக்காக எடுக்கப்பட்ட சினிமா போல நம்மிடம் அதன் பேசுபொருளை முன்வைக்கிறது. 





ஆனாலும் பல காட்சிகள் அவரது வாழ்வில் நா(ம்)ன் அறிந்திடாதவை. உதாரணத்திற்கு, ஆரம்பகாலத்தில் சரோஜாதேவி MGR உடன் நெருங்கி பழகியதை RMV கண்டிப்பது, MGR  மேல் உள்ள தனக்கிருக்கும் உடைமைத்தன்மையை நிலைநாட்ட ஜெயலலிதா உட்பட யாரையும் நெருங்கவிடாமல் செய்தது, வைகோவின் டெல்லி செல்வாக்கு, MGR மேல் ஜெயலலிதாவிற்கு இருக்கும் ஈர்ப்பு, MGRன் சுயநலம் என நிறைய காட்சிகள் அரசியல் ஈர்ப்பு அற்ற பொதுவெளி மக்களுக்கு புதியவை. 

வேதா இல்லம், ராமாவரம் தோட்டம், RMV வீடு, ஸ்டூடியோ, காலத்திற்கேற்ப மாறிய MGR மற்றும் ஜெயலலிதாவின் கார் என retro  நினைவுகளை மீட்டுகொண்டுவந்தாலும், ஜெயலலிதாவின் பழைய பாடல்களை இன்னும் நிறைய மீளுருவாக்கம் செய்திருக்கலாம். அவரின் ரசிகர்களுக்கு virtual  விருந்தாக  அமைந்திருக்கும். படத்தில் இருக்கும் இரண்டு புதிய பாடல்கள் மருதாணி மேல் போடப்பட்ட நகப்பூச்சுக்கள் போல படத்தினுள் ஒட்டவில்லை. மேலும், ஜெயலலிதாவாக கங்கனா எந்த அளவுக்கு பொருந்திப்போகிறாரோ இல்லையோ, MGR கதாபாத்திரத்திற்கு அரவிந்த் சாமி கனகச்சிதமானத்தேர்வு.   

படம் நெடுகிலும் அதிகமாக அவருடன் பயணிப்பது அவரது அம்மா மற்றும் MGR மட்டுமே. அதுதான் அவரது வாழ்வின் கசப்பான உண்மை. இந்த இருவரைத்தவிர இவரது வாழ்வில் அதிகம் பயணித்தது சசி. ஆனால் இவர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய பாத்திரமாக எப்போது எதனால் ஸ்திரமானார் என்பது இங்கு தெளிவுபடுத்தப்படவில்லை. சோபன் அவர்களின் இடத்தையும் நாசூக்காக தவிர்த்திருக்கிறார்கள். MGR மேல் இருக்கும் ஈர்ப்பை இவ்வளவு தைரியமாக பட்டவர்த்தன படுத்தியிருக்கும் விஜய், அவர் உயிருடன் இருந்தபோதே படம் வெளியிடப்பட்டிருந்தால் இதே காட்சிகள் வைத்திருப்பாரா என்பது சந்தேகமே. வாழ்நாள் முழுவதுமே விமர்சனத்திற்கு உட்பட்டிருந்த அவரது வாழ்க்கையை சர்ச்சைகள் இன்றி திரைவெளியில் காட்சிப்படுத்திய விதத்தில் இயக்குனர் மற்றும் குழுவைப்பாராட்டலாம்.

ஆனால் ஜெயலலிதாவை இத்தனை விமர்சனத்துக்குள்ளாக்கும் நாம், அவரும் ஒரு சராசரி பெண் தான் என்பதையும், அவருக்கும் தனியாக ஆசாபாசங்கள் இருந்தன என்பதையும் நமது சுயநலத்தேவைக்காக மறந்துவிடுகிறோம். சந்தியா அவரை சினிமாவிற்கு இழுக்காவிட்டால், MGR  சினிமா மற்றும் கட்சியின் சுயநலத்திற்காக அவரை பயன்படுத்ததாதிருந்தால், அவரும் தனக்கு பிடித்த வாழ்க்கையை தேர்ந்தெடுத்திருக்கலாம். மாறாக நமக்குத்தான் இரும்புபெண்மணி முதலமைச்சராக கிடைத்திருக்கமாட்டார்.    

ஆணவக்காரி, A1, திமிர்பிடித்தவர் என்று நாம் அவரை சொல்லிக்கொல்லும் (லகரம் தவறாக பயன்படுத்தவில்லை) அதே நேரத்தில், சட்டசபையில் காட்டுமிராண்டிகளால் அவர் அவமானப்படுத்தப்பட்டதை வசதியாக மறைத்துவிடுகிறோம். இன்னும் மாட்டிக்கொள்ளவில்லை என்றே ஒரே காரணத்தினால் நிரபராதியாக பல பசுந்தோல் போர்த்திய புலிகள் வெளியே சுற்றிக்கொண்டிருக்கின்றன. மோடியா லேடியா என்ற சவால் விடும் யோக்கியதையம் தைரியமும்  இன்று எந்த ஆண் அரசியலவதிக்கும் இல்லை. இறந்த மறு வருடமே மூன்று மசோதாக்களை சத்தமில்லாமல் நிறைவேற்றியதில் இவர்களின் வீரத்தை உலகறியும். இந்திய வரலாற்றிலேயே ஏன் உலக வரலாற்றிலேயே தன்னை எதிர்த்து நின்ற ஆண்களை மண்டியிடவைத்து, தாள் பணியச்செய்து, வாகனத்தின் சக்கரத்திற்கு வணக்கமிடச்செய்து தனது கண்ணசைவில் வைத்திருந்த அந்த ஆளுமையை, புரட்சித்தலைவி என்னும் அம்மாவை வரலாறு ஆச்சர்யமாகத்தான் பார்க்கும்.  

சினிமாதானே என்று 'தலைவியை' தட்டிவிட்டுச்செல்லமுடியவில்லை. 

ஞாயிறு, அக்டோபர் 03, 2021

லிப்ட்

உழைப்புச்சுரண்டல். இந்த ஒற்றை வார்த்தையை மையமாய் வைத்து ஒரு சினிமா. லிப்ட்.

டாகுமெண்ட்ரியாக எடுத்திருந்தால் கவன ஈர்ப்பு கிடைத்திருக்க வாய்ப்பில்லை. அதையே கொஞ்சம் த்ரில் கலந்து திரைக்கதையாக படைத்தால் வெகுஜனமும் ரசிக்கலாம். புரிந்துகொள்ளலாம். IT  வாழ்க்கை என்பது ஒரு கானல் நீர் என்பதை வாழ்ந்து பார்த்தால் மட்டுமே புரியும் என திரையில் வெளிச்சம் போட்டு காட்டுகிறது இந்த லிப்ட். 



கரும்பை பிழிவது போல் வேலையை வாங்கிவிட்டு பின் 'ஒரு பேட் நியூஸ்' என சாதாரணமாக வேலையை விட்டு தூக்கிய காரணத்தினால் தற்கொலை செய்துகொள்ளும் ஒருவரின் ஆவி, இவர்களை பழிவாங்குவதே கதை. இரண்டு மணி நேரம் இரண்டே இரண்டு கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு, அதுவும் அதிகம் அறிந்திராத முகங்களாக, ஒரே பில்டிங்கில், மீண்டும் மீண்டும் அதே லிப்ட் என போர் அடிக்கும் அனைத்து காரணீக்கள் இருந்தாலும் திரைக்கதையில் 'exceeding expectations', நடிப்பில் 'meeitng  expectations' என படத்தை மறுகரைக்கு கொண்டு சேர்த்திருக்கும் அறிமுக இயக்குனரை பாராட்டலாம். 

இரு பாடல்கள். இரண்டுமே IT லைஃபை உள்ளது உள்ளபடி பறைசாற்றும் வகையறாக்கள். ஒளிப்பதிவு, திரைக்கோர்ப்பு இரண்டிற்குமே சவாலான திரைக்கதை. குறையொன்றுமில்லை. அதீத மனச்சுமையில் வாழும் IT  ஊழியர்களின் பிரச்சினைகளை ஒரு முழு நீள படமாக பேச முயன்றதை வரவேற்கலாம். 

நெற்றிக்கண் - Spoiler Alert


அரை மணி நேரத்திற்கு ஒரு முறை டீயும் மிளகாய் பஜ்ஜியும் சாப்பிட்டுக்கொண்டு வளவள பேச்சும் மசமச வேலையும் என ஸ்டேஷனுக்கு ஒரு போலீஸ்காரர் இருப்பார். அந்த போலீஸ் வேடத்திற்கு அளவெடுத்து தைத்தார் போல தமிழ் சினிமாவில் இரண்டு மூன்று கேரக்டர் இருக்கிறது. உதாரணத்திற்கு காக்கி சட்டை படத்தில் வரும் E.Ramdoss. 'என்னய்யா...என்ன நடந்துச்சுனு சொல்லு' என்று கேட்கிற ரைட்டர் கேரக்டரா?..கண்ணை மூடிக்கொண்டு அவரை கூப்பிடலாம். துணை கதாப்பாத்திரங்களில் பொருந்தி வருவது ஒரு கலை. மிதமான சுவையும் கூட. அப்படி ஒரு கதாப்பாத்திரத்தை பார்த்து (பேர் கண்டுபிடிக்க முடியவில்லை 17:34 இல் பார்க்கவும்) நிமிர்ந்து உட்கார்ந்த நேரத்தில் அந்த இடத்தை கவ்விக்கொண்டு போய் விடுகிறார் SI மணிகண்டன். ஸ்டேஷனில் தனது மரியாதையை காப்பாற்றும் பொருட்டு ஒரு கேஸையாவது வெற்றிகரமாக முடிக்கவேண்டும் என்ற ஏக்கமும் விறுவிறுப்பும் கூடிய கதாப்பாத்திரத்தில் கனகச்சிதம்.




நயன்தாரா நடிப்பை விமர்சிக்க தேவையில்லாத அளவுக்கு 'லேடி சூப்பர்ஸ்டார்' என்று டைட்டில் கார்டிலேயே வந்துவிடுகிறது. அனால் படம் முழுக்க நயன்தாராவையே நம்பி திரைக்கதையில் பல இடங்களில் பொத்தல்கள். வீடியோ காலிங்கை ஸ்க்ரீன் ரெகார்ட் செய்வது, GPS கருவிகள், நயன்தாராவின் கால் ரெகார்ட் என பலவற்றை வசதியாக ஒதுக்கிவைத்துவிட்டு படத்தை வம்படியாக இழுத்திருக்கிறார்கள். கேம் ஓவர் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் கால் ஒடிந்திருக்கும் டாப்ஸியை கொல்லவரும் போது இருந்த பரபரப்பை விட கண்தெரியாத நயன்தாராவை கொல்லவரும் போது பார்வையாளருக்கு கடத்தப்படவேண்டிய பரபரப்புக்கு ஸ்கோப் அதிகம். ஆனாலும் பூர்த்திசெய்யவில்லை . இவற்றையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு பார்த்தால் ஒரு த்ரில்லர் என்பதில் குறையில்லை.

நயன்தாராவுக்கு பார்வை கிடைத்தது விடும் என்று ஊகிக்க முடிகிறது. அனால் யாரை காவு கொடுப்பார்கள் என்பதை கணிக்க முடியவில்லை. ஏற்கனவே தம்பியை கொன்ற பாவத்தில் இருப்பவரை, மீண்டும் தம்பியின் கண்களை பொருத்தினால் இரட்டைப்பாவம் ஆகிவிடும் என்று அப்பாவி மணிகண்டனின் மண்டையை பிளந்துவிடுகிறார்கள். காவல் ஆய்வாளராக பதவி உயர்வு பெறவேண்டியவரை போட்டோவில் அடைத்து மாலை போட்டுவிடுவது மட்டும் செரிக்கவில்லை.

பார்த்துக்கொண்டே இருப்பதால் கிளர்ச்சி ஏற்படவில்லை என்ற ஒற்றை வரியில் எழுந்த கேள்விக்கான பதிலே இந்த திரைக்கதை. ஒரு உளவியல் சிக்கலை கையாண்ட விதம் சற்று விமர்சனத்துக்கு உள்ளாகும் அளவுக்கு காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது படத்தின் நோக்கத்தை சிதைத்திருக்கிறது.

OTT Disney Hotstar

இளையராஜா


ஹம்சத்வனி ராகத்தை பற்றி ஒருவரிடம் விவாதித்து கொண்டிருந்தபோது பேச்சு எங்கெங்கோ சுற்றி இசை ஞானியை பற்றி வலம் வந்தது. வலம் வந்தாலாவது இசை இடம் வருமா என்று முயற்சித்தோம்.

இசை என்று பேச ஆரம்பித்தாலே ராஜாவின் மேஜிக்கை பற்றி வியக்காமல் இருக்க முடியாது.

என்னுடன் விவாதித்து கொண்டிருந்தவர் 80களில் ஜேம்ஸ் வசந்தன் மற்றும் சிலருடன் ராஜாவின் ட்ரூப்பில் வாசித்து கொண்டிருந்தவர். அவருடைய விவரணையில்,

இளையராஜாவுடைய பாட்டை ஒரு வாத்தியக்கருவில வாசிக்கிறதுங்கிறது அவ்ளோ சுலபம் இல்லை சார். அப்டி ஒரு முறை வாசிச்சிட்டோம்னா ஜென்மத்துக்கும் அது உங்கள விட்டு போகாது. ஏன்னா அவருடைய இசை அந்த மாதிரி ஒரு பாதிப்பை உங்க வாழ்க்கைல ஏற்படுத்திருது.

கண்ணதாசனுக்கு எப்படி வார்த்தை அருவி மாதிரி வந்து விழுமோ அதுமாதிரி இவருக்கு ஸ்வரங்கள் வந்து விழுகும்.

பிரசாத் ஸ்டுடியோவே கதின்னு இருப்பார். காலைல 6.30 மணிக்கு ரெக்கார்டிங் ஸ்டுடியோவுக்கு வந்துருவார். நாங்கெல்லாம் ஒரு ஆறேகால் மணிக்கு அங்க ஆஜர் ஆயிடுவோம்.

ஒரு முறை விஜயகாந்த்தோட படத்துக்கு ரீரெக்கார்டிங் செஷன் நடக்குது. திரைல ஒலி இல்லாம ஒளி மட்டும் வருது. விஜயகாந்த் வரப்புல நடந்துட்டு போறாரு. அதை மறைஞ்சிருந்து பாக்கிற வில்லன் அவரை வெட்றத்துக்கு அரிவாளை தூக்கிட்டு வரான். சமயம் பார்த்து அரிவாளை விஜயகாந்த நோக்கி வீசும்போது, ஹீரோயின் அங்க வந்து அந்த வெட்ட, தன்னோட கழுத்துல வாங்கிக்கிறாங்க. இதான் சீன். ஒரு பத்து நிமிஷம் ஓடுது. இதை அந்த பெரிய திரைல ராஜா பாத்துட்ருக்காரு. பாக்கும்போதே கைல இருந்த பென்சிலால அங்கே இருக்குற ஒரு சின்ன பேப்பர்ல அப்டியே ஸ்கெட்ச் போடுற மாதிரி நோட்ஸ் எழுதுறாரு. சீன் முடியவும் இவரு அந்த பேப்பரை ட்ரூப்ல இருக்குறவங்க கிட்ட கொடுக்குறாரு. அந்த நோட்ஸ அவங்க பிராக்டிஸ் பண்ணவே ஒரு மணி நேரம் எடுத்துக்குறாங்கன்னா நீங்க பாத்துக்கலாம். அந்த ரெக்கார்டிங் ஸ்டுடியோக்குலேயே இன்னொரு ரெக்கார்டிங் ஸ்டுடியோ. ராஜாவை சொல்றேன். அப்புறம் ட்ரையல் பாக்கும்போது சில கரெக்ஷன்ஸ். அடுத்த அரை மணி நேரத்துல அந்த சீனுக்கான BGM முடிஞ்சிருச்சு. அதெல்லாம் நேர்ல பாக்குறதுக்கே கொடுத்து வச்சிருக்கணும்.




இளையராஜா சரஸ்வதியோட அவதாரம்னு சொன்னாலும் தப்பில்லை சார் என்று முடித்தார்.

அதை பறைசாற்றும் விதமாக எங்கிருந்தோ புத்தம் புது காலை பாடல், ஜானகியின் குரலில் காற்றோடு கலந்து வந்தது மனதை கரைத்துக்கொண்டிருந்தது.

PS

ஹம்சத்வனிக்கும் உனக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்காதவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் மற்றும் தற்போது ஹம்சத்வனியை ஏன் விவாதித்தோம் என்று கண்டுபிடித்தவர்களுக்கு ஷொட்டு. 

தமிழ் நெடுஞ்சாலை

தமிழ் நெடுஞ்சாலை 


சந்திக்க விரும்பிய பிரபலமான ஆளுமைகளின் பட்டியலில் சந்தேகத்திற்கு இடமில்லாமல் முதலில் இருப்பவர் வாத்தியார்(சுஜாதா) தான். கல்லூரியின் ஒவ்வொரு பருவத்தேர்வுக்கும் பாடப்புத்தகம் கையில் இருக்கிறதோ இல்லையோ, வாத்தியாரின் கதைகள் கைகளில் தவழும். அதுதான் ஸ்ட்ரெஸ் பஸ்டர். சென்னையில் வேலைக்கு சேர்ந்தபோது சந்திக்கவேண்டும் என்ற ஆவலில் அவர் வசிக்கும் முகவரி வரை தேற்றிவைத்தபோதுதான், 2008 பிப்ரவரி 27 திகதியில் அவர்  இறந்த அந்த துயரச்செய்தி இடியென இறங்கியது. வாய்ப்பு தவறிவிட்டது.



அவருக்கு அடுத்த இடத்தில் நான் பெரிதும் மதிப்பது, வாள் போன்ற கூரிய வார்த்தை வீச்சுகளின் சொந்தக்காரர் பாலகுமாரன் அவர்களை.  எண்பது தொண்ணூறுகளில் பாக்கெட் நாவல் அதிகமாக விற்பதற்கு ராஜேஷ்குமாரோடு இவரும் ஒரு காரணாமாயிருந்தார். முன்னவர் க்ரைமில் முதலாவது என்றால், இவர் குடும்ப கதைகளில் ப்ரதமையாக இருந்தார். பெண்களை  மட்டுமே மையபடுத்தி  எழுதப்பட்ட குடும்ப நாவல்களில், இருப்பாலர்களின் நிறை குறைகளையும் சமன்படுத்தி ஆண்களையும் குடும்ப நாவல்களை படிக்க வைத்த பெருமைக்குரியவர். இவரது அசாதாரண கதை சொல்லலுக்கு இன்றளவும் உதாரணமாக இருப்பது, 'இரும்புக்குதிரைகள்', 'மெர்குரிப்பூக்கள்' மற்றும் 'பயணிகள் கவனிக்கவும்' நாவல்கள். பிடிக்குமென்றால் முயன்றுபார்க்கலாம். 2000த்திற்கு பிறகு இவர் எழுதிய கதைகள் அனைத்தும் ஒரு ஆசானை போல் அருகில் இருந்து கற்றுக்கொடுக்கும் வகையறாக்கள். தனக்கென்று ஒரு குருவைத்தேடி பின்பு தானும் குருவாக பரிமளித்தார். இவரை எங்கேனும் நேரில்  பார்த்தால் சாஷ்டாங்கமாக காலில் விழுந்து நமஸ்கரிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். காலன் வென்றுவிட்டான்.

ஆனால் எஸ்.ராவை ஒரு புத்தக கண்காட்சியில் கண்டு அரை மணி நேரம் அளவளாவி ஒரு புகைப்படம் எடுத்தது மட்டுமே ஆறுதல்.

தற்போது வாராவாரம் விகடனில் பிரசுரமாகி வரும், தமிழ் நெடுஞ்சாலை தொடரின் ஆசிரியர், இ.ஆ.ப. பாலகிருஷ்ணன் அவர்களின் எழுத்துக்கள் மிகவும் கவருகின்றன. அனுபவத்தை பகிரும் ஆதாமார்த்தமான வார்த்தைகள் இவரது பலம். சிந்து முதல் வைகை நாகரீகத்திற்கு ஒரு பயணம் என்ற ஒரு புத்தகமே இவரது இலக்கிய அர்பணிப்பிற்கு ஒரு சான்று. புற்று நோயிலிருந்து மீண்டு வந்தவர். தன்னம்பிக்கையாளர். இரு விதங்களில் கவருகிறார். ஒன்று, இ.ஆ.ப. மீது நமக்கு ஆவல் வரும் பொருட்டு இவரது நடவடிக்கைகளினால் ஏற்படும் நேரடிப்பயன்கள். உதாரணமாக தேர்தல் ஆணையத்தின் உதவி இயக்குனராக இவரது பணிகள் அளப்பரும் ஆற்றல் மிக்கவை. 34 வாக்காளர்களின் வாக்கை சேகரிக்கும் பொருட்டு தன்னந்தனியாக நக்சலைட் இருக்கும் காட்டுக்குள் சென்று  தேர்தலை நடத்தி காண்பித்தது, மற்றும் புயல் போன்ற பேரழிவு மேலாண்மையில் முன்மாதிரியாக இருக்கும் ஒடிசாவில் இவரது செயற்பாடுகள் என அனைத்தும் மெய் சிலிர்க்க வைக்கின்றன. அதன் காரணமாகவே முதல்வர் பட்நாயக்கின் செல்லப்பிள்ளை. எல்லையில்லா அதிகாரம் கொண்ட இந்திய ஆட்சி பணி மூலம் மக்களின் வாழ்வாதாரத்தை எவ்வாறு முன்னேற்றலாம் என்ற இவரின் ஒவ்வொரு வருட பணியையும் ஒவ்வொரு புத்தகமாக பதிப்பிக்கும் அளவிற்கு முன்மாதிரி செயல்கள். வயதிருந்தால் ஐ ஏ எஸ் அகாடமியில் சேர்ந்திருக்கலாம். அப்படி ஒரு எடுத்துக்காட்டான வாழ்க்கை. இரண்டாவதாக இவர் கவருமிடம், தமிழ் மீது தனக்கிருக்கும் அதீத காதலால். தேர்ந்தெடுத்த வார்த்தை பிரயோகங்கள், வாசகனை அருகில் அமரச்செய்யும் சொல்லாடல் என மீண்டும் மீண்டும் படிக்க ஆர்வம் ஏற்படுத்துகிறார். தமிழ் மொழியிலேயே கல்லூரி வரை பயின்று, கிங்மேக்கர் காமராஜரால் கவர்ந்திழுக்கப்பட்டு தமிழில் தேர்வெழுதி தனது முதல் முயற்சிலேயே வென்றவர். விசாலமான பார்வைக்கும், அனைத்து துறைகளிலும் அறிவைப்பரப்பும் பரந்து விரிந்த கட்டுக்கரைகளுக்கும் இவருக்கு நன்றிகள். நம்மவரில் ஒருவராக வரவேற்கலாம்.   

சமூகத்தின்பால் மற்றும் தமிழ் மீது அக்கறை கொண்டு திறமையானவர்களை உலகத்திற்கு அடையாளபடுத்தும் சமுதாய அக்கறையுள்ள சஞ்சிகைகளில்  விகடன் என்றுமே நம்பர் ஒன்.

புதன், செப்டம்பர் 15, 2021

டிக்கிலோனா


சினிமாவில் ஜெயிப்பதற்கு உழைப்பு அதிர்ஷ்டம் காலம் என இவையனைத்ததும் எந்த அளவுக்கு கைகூடிவர வேண்டுமோ அதை விட மிக முக்கியம் அவர்களது குடும்பத்தில் ஒருவர் சினிமாவில் இருப்பது.  இந்த சமன்பாட்டை பொய்யாக்கி தனக்கென ஒரு பார்முலாவை சினிமாவிலும் தனிப்பட்ட  வாழ்விலும் கடைப்பிடித்து தனி ரசிகசாம்ராஜ்யமே நடத்தி வருபவர் அல்டிமேட் ஸ்டார் அஜித். இவரைப்போலவே எந்தவித பின்புலமும் இல்லாது சின்னத்திரை காம்பியரிங்கில் இருந்து பெரியத்திரையில் கோலோச்சிக்கொண்டிருப்பவர் SK என்னும் சிவகார்த்திகேயன். முக்கியமாக குழந்தைகளை கவர்ந்தது இவரது மிகப்பெரிய ப்ளஸ். குறைந்தபட்சம் இரண்டு டிக்கட்டுக்கு க்யாரண்டி.





இந்த இருவரைதவிர்த்து சினிமாவில்  வெற்றியை ருசிக்க தனியொரு ஆளாக போராடிக்கொண்டிருப்பவர், இந்த பத்தியின் நாயகர் சந்தானம். சினிமாவை அதிரிபுதிரியாய் கலாய்க்கும் லொள்ளுசபாவில் தனது பயணத்தை ஆரம்பித்து பின் அதே சினிமாவில் நாயகனாய் தன்னை நிலைநாட்ட துடிப்பது நகை முரண் தான் என்றாலும், லொள்ளுசபா சந்தனமாக, ஒரு காமெடியனாக மட்டுமே நமக்கு தெரிந்த சந்தானத்தை நம்பி கோடிக்கணக்கில் முதலீடு செய்ய தயாரிப்பாளர்கள் தயாராய் இருப்பது, திறமை இருந்தால் திரையில் மிளிரமுடியும் என்று மிடில் க்ளாஸ் இளைஞர்களுக்கு நம்பிக்கை தரும் வரவேற்கத்தக்க வெற்றியே. கிட்டத்தட்ட பன்னிரண்டு படங்களில் கதாநாயகன், ஹீரோவாய் நடிக்க வேண்டும் என்பதற்காக காமெடியனாக நடித்து சம்பாதிப்பதை விடுத்து வெள்ளித்திரையில் ஏழு வருட போராட்டங்கள், நான்கு படங்களுக்கு தயாரிப்பாளர் என இதுவும் வாழ்த்துவதற்கான தருணம் தான்.


தற்போது வெளியாகிருக்கும் இவரது படம் டிக்கிலோனா.  தனது காதல் திருமணத்தை சரி செய்ய கால யந்திரத்தை உபயோகப்படுத்தும் இளைஞன் இறுதியில், இக்கரைக்கு அக்கரை பச்சை என்று உணருவதே கதையின் கரு. சந்தானம் ஸ்லிம் ஆக ட்ரிம் ஆக இருக்கிறார். 41 வயது என்று சொல்லவே முடியாது. அதே டைமிங் ரைமிங் காமெடி  என்றாலும் சில இடங்களில் உருவ கேலி காமெடி நம்மை அசௌகர்யப்படுத்துகிறது. இரண்டு ஹீரோயின்கள் மூன்று சந்தானம், ஆனந்தராஜ், முனீஸ்காந்த், நிழல்கள் ரவி என படம் கேரக்டேர்களால் நிறைந்து இருக்கிறது. வெடிச்சிரிப்பு சிரிக்கவைக்கும் காமெடியாக இறுதியில் ஒரு ட்விஸ்ட் எதிர்பார்க்காதது. ஒர்கவுட்டும் ஆகியிருக்கிறது. கெஸ்ட் அப்பியரன்ஸ் போல யோகி பாபு கேரக்டர். 


"பேர் வச்சாலும் வைக்கமாப்போனாலும்" என்ற பாடலை ரீமிக்ஸ் செய்திருக்கிறார்கள். கமலுடைய இடத்தை யாராலுமே நிரப்பமுடியாது என்பதால் பாடலில் நடிப்பு ரசிக்கவில்லை. இருந்தாலும் ராஜாவின் ஒரிஜினல் இசை, காதை பதம்பார்க்காத ரீமிக்ஸ் இசை, கொஞ்சமே கொஞ்சம் நடன அசைவு, கலர்புல்லான ஒளிப்பதிவு என என்கேஜிங்காக இருக்கிறது. கால இயந்திரத்தை பயன்படுத்தி முன்னே பின்னே என கதை பயணித்தாலும் குழப்பமில்லாமல் திரைக்கதை எழுதிய இயக்குனருக்கு சபாஷ். 


சந்தானமும் காமெடியும் உங்களுக்கு பிடிக்குமென்றால் இந்த படமும் உங்களுக்கு பிடிக்கும்.   


  

 




ஞாயிறு, செப்டம்பர் 12, 2021

Create a New Contact

"பேர் என்ன சார்" என்று கேட்டு பாசமாக போனில் சேமித்துக்கொள்கிறார்களோ என்று நினைத்தால், நம்மளைப்போன்ற அப்பிராணி ஊரில் இல்லை என்று அடித்துச்சொல்லலாம். போனையே எடுக்கக்கூடாது என்று தான் இந்த சேமிப்பு.

ஒரு சில வருடங்களுக்கு முன், பரவலாக எல்லோர் கையிலும் போன் இல்லாத காலங்களில், தெரியாத நம்பரில் இருந்து போன் வந்தால் எடுத்து பேசுவதில்லை என்று உறுதியுடன் பலர் இருந்தனர். இதுவே தவறு என்று என் அண்ணன் ஒரு முறை கூறினான். எப்படி என்றும் விளக்கினான். பெரியப்பா காலை வாக்கிங் போயிருக்கிறார். குறைந்தபட்சம் ஆறு ஏழு கிலோமீட்டர் நடப்பவர். கையில் போன் கிடையாது. திடீரென நெஞ்சுவலி. அருகில் இருப்பவரிடம் போன் வாங்கி அழைத்திருக்கிறார். உடனே அங்கு சென்று மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றியிருக்கிறார்கள். க்ரெடிட் கார்ட், இன்சூரன்ஸ் அழைப்புகளுக்கு பயந்து போனை அட்டென்ட் செய்யவில்லை என்றால் உதவியை எதிர்நோக்கி நம்மை அழைத்தவருக்கு வினை புரிய முடியாமல் போயிருக்கும். அப்படியே க்ரெடி கார்ட் அழைப்பாகத்தான் இருந்தாலும்  அட்டென்ட் செய்து ஐந்து வினாடிகளில் நாசூக்காக அழைப்பை துண்டிக்க முடியாதா என்ன


சரி, தெரியாத நம்பருக்கு தான் இந்த தலைவிதி என்றால் தெரிந்த நம்பருக்கு இப்போதெல்லாம் இதே கதிதான். வசதியாக சேவ் செய்த நம்பரை சைலென்டில் போட்டுவிட்டு அமைதியாகிவிடுகிறார்கள். ஒரு தகவல் கேட்பதற்காக போன் செய்து பார்த்தேன். எடுக்கவில்லை. இரண்டாம் முறையும் அதே. அருகில் இருந்தவரிடம் போன் வாங்கி அழைத்தேன். விடாக்கண்டனைப்போல. எதிர் முனை புத்திசாலி உடனே அட்டென்ட் செய்துவிட்டது. அழைத்தது நான் தான் என்று எதிர்பார்க்கவில்லை. அவரது வாயிலேயே பிஸியாகவும் இல்லை என்று வாக்குமூலம் வேறு. முப்பது வினாடிக்குள் கேட்க வேண்டியதை கேட்டுவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டேன். இந்த பழக்கம் பலபேரிடம் இருக்கிறது. பலர் வாயிலாக சொல்லவும் கேட்டிருக்கிறேன்.  இந்த ரகத்தை எந்த கேட்டகிரியில் சேர்ப்பது என்று தெரியவில்லை. 

"Strictly no talking. Whatsapp Only" என்கிற கும்பல் வேறு இப்போது. தூக்கத்தை ஒழித்து மீதமிருக்கும் 16 மணிநேரத்தில், அதாவது (வருடத்திற்கு 5760 மணிநேரங்கள்) நண்பர்களுடனோ, உறவினர்களிடமோ பேச நேரமில்லை என்று கூறும் பொய்யை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்களின் வட்டத்தில் நாம் இல்லை என்ற கூற்றையாவது அனுமதிக்கலாம். ஆனால் கிளையண்ட் மீட்டிங், டீம் மீட்டிங் என்று டபாய்ப்பது கும்பி பாகத்திற்கு இட்டுச்செல்லும் வழியாகும். இங்கிலாந்து பிரதமர் கூட இந்த அளவுக்கு பிஸியாக இருப்பது போல் தெரியவில்லை. அப்படியே சூடம் அடித்து சத்தியம் செய்து பிசி தான் என்று நிரூபித்தால், இரண்டே காரணம் தான், ஒன்று டைம் மேனேஜ்மண்ட் தெரியவில்லை, அல்லது wrong person in wrong job.  முதல் காரணத்திற்கு ஒன்றும் செய்யமுடியாது. சுட்டுப்போட்டாலும் வராது.  இரண்டாவது காரணத்திற்கு ஓடுற வயசுல தான் ஓட முடியும்னு சொன்னாலும் பேசி சிரிக்கற வயசுல தான் அனுபவிக்க முடியும்ங்கிற உண்மையையும் ஒத்துக்கொண்டுதான் ஆகவேண்டும். ஓடியாடி சம்பாதித்து அக்கடா என்று ஓய்ந்து உட்கார்ந்தபின் எதிர்முனைல ஆளே இல்லாதபோது கால் பண்ணி என்ன சாதிக்கப்போகிறார்கள் என்று தெரியவில்லை.  

காக்கை கூட பகிர்ந்து தான் உண்கிறது.

வெள்ளி, செப்டம்பர் 03, 2021

கசடதபற

 

கேயாஸ் தியாரியை, கேயாஸ் தியரி என்ற பெயரிலேயே தசாவதாரம் படம் வாயிலாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியவர் ஆண்டவர். அந்த கேயாஸ் தியரியுடன் வேண்டேஜ் பாயிண்ட் தியரி என்று இன்னொன்றையும் பிணைத்து சிக்கலில்லாத திரைக்கதையை வெகுஜனமும் ஒப்புக்கொள்ளுமாறு சிறப்பாக கையாண்டிருக்கிறார் சிம்புதேவன். ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும் படத்திற்குப்பிறகு மீண்டும் நிகழ்வின் நிழலில் கரை ஒதுங்கியிருக்கும் சிம்புதேவனின் திரைமொழியை தாராளமாய் ரசிக்கலாம்.  


நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் நம்மை அறியாமலேயே பின் விளைவுகள் உண்டு என்பதே இந்த படத்தின் உயிர் நாடி. அந்தப்பின்விளைவுகளின் தேடலை நியப்படுத்தியிருக்கிறது கசடதபற. படத்தின் வெற்றிக்கு அதன் டைட்டில் கார்டு டிசைன் முதல் முகவரி. குறுக்கெழுத்து போல ஆறு கதைகளின் பெயர்களை அறிமுகப்படுத்தும் கசடதபறவின் டைட்டில் கார்டே நம்மை உள்ளே இழுத்து உட்கார வைத்துவிடுகிறது. 6 கதைகள். ஒவ்வொன்றும் வெவ்வேறு ஜானர்களில் பயணிப்பவை. அதனதன் போக்கில் ஆறு கதைகள் பயணித்தாலும் எல்லாவற்றிற்கும் யதார்த்தமான நெருடலில்லாத ஒரு கோர்ப்பு. ஆறு கதைகளுக்கும் தனித்தனி எடிட்டர், இசையமைப்பளர், ஒளிப்பதிவாளர் என்று இருப்பினும் படம் நெடுகிலும் ஒரே பதம்.

சந்தீப் கிஷன், ஹரீஷ் கல்யாண், சுப்பு பஞ்சு, வெங்கட்பிரபு, சிஜா ரோஸ் என்று தெறிவான பாத்திரத்தேர்வு.  பிரேம்ஜியின் அய்யர் பாஷையும் விஜயல்க்ஷ்மியின் விளிம்பு நிலை கதாபாத்திரமும் திருஷ்டி கழிப்பு போல கொஞ்சமே கொஞ்சமாக ஒட்டவில்லை. மற்றபடி ஒரு வீக்கெண்டுக்கான பெர்ஃபெக்ட் மூவி.  

The Butterfly Effect படத்தை கொண்டாடும் நாம் இதையும் அதே உணர்வோடு ரசித்து வரவேற்கலாம். 


சனி, ஆகஸ்ட் 21, 2021

The Heist of the century 2020


வெறும் பொம்மை துப்பாக்கியை வைத்தே வங்கியிலிருந்து 100 கோடி பணத்தைத்திருட முடியுமா?
பணயக்கைதிகளை உள்ளே பிடித்து வைத்திருக்கும்போதே, அங்குள்ள வயதான பாட்டிக்கு பிறந்தநாள் வாழ்த்து பாடல் பாடி கேக் வெட்டி கொண்டாட முடியுமா?
நூறு கோடி அடித்த பின்பும் துப்பு கிடைக்காமல் நான்கு வருடங்கள் வெளியே சுதந்திர பறவையாக சுற்ற முடியுமா?
14 வருடங்கள் தண்டனை கிடைத்தும் இரண்டே வருடங்களில் வெளியே வந்து தான் கொள்ளையடித்தது எப்படி என்பதை ஒரு முழு திரைக்கதையாக எழுதி அர்ஜென்டைனாவின் மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்த படமாக எடுக்க முடியுமா?

2006 ஆம் வருடம் Banco Rio கொள்ளைச்சம்பவத்தை அடிப்படையாக, இல்லை அதை அப்படியே சுவாரசியமாக திரையில் மறு உருவாக்கம் செய்திருக்கிறார்கள், அதுவும் கொள்ளைக்கு திட்டம் தீட்டிய மாஸ்டர் மைண்டை வைத்தே.



மாஸ்டர் மைண்டான அலெக்சாண்டர், நிஜ வாழ்க்கையிலும் ஒரு சுவாரசியமான கதாபாத்திரமாக இருக்கிறார். தத்துவவாதி. "The virtue that is known as virtue is annulled". அவரது முத்துக்கள். ஒரு அப்செஷனில் கொள்ளையடித்துவிட்டார் என்று தெரிகிறது. அப்செஷனுக்கே இப்படியென்றால் ப்ரொபெஷனலாக இறங்கியிருந்தால், அனால் அது அவருடைய cup of tea இல்லை. கத்தியின்றி ரத்தமின்றி ஒரு கொள்ளை என்று போலீஸ்காரர்களுக்கு டேக் லைன் வைத்துவிட்டு டேக்கா குடுத்தது அலெக்சாண்டரின் அதீத நக்கல்.

தமிழ் டப்பிங்கில் இன்னும் அதகளப்படுத்தியிருக்கிறார்கள். உதாரணத்திற்க்கு இவர்களின் கார் ஒரே இடத்தில் நிற்பதை சந்தேகப்பட்டு அங்குள்ள பெண்மணி போலீசுக்கு தகவல் கொடுக்கிறார். போலீஸ் வந்து பார்த்து இவர்களிடம் பேப்பர் செக் ஏயது விட்டுவிடுகிறார்கள். வண்டியிலிருக்கும் தாத்தா அந்த பெண்மணியைப்பார்த்து சொல்கிறார். Original வசனமாக "you dont need a security for this street" எனறு வரும். ஆனால் தமிழில், 'நீங்க இருக்கிறதுனால இந்த தெருவுக்கு நாயே தேவையில்லை" என்று போகிற போக்கில் தட்டிவிட்டிருக்கிறார்கள். படம் முடிந்தும் தாத்தாவின் கரகர குரல் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

Must Watch - a comedy robbery movie.

Rotten Tomatoes - 100%
IMDB - 7.2 

ஏழு கடல் ஏழு மலை

லேனா தமிழ்வாணனின் பயணக்கட்டுரைகள் அந்தக்காலத்தில் மிகப்பிரபலம். பயணம் செய்ய முடியாதவர்களுக்கு லேனாவின் பேனாவின் வழியாக சிங்கப்பூரையும், அமெரிக்காவையும், ஜப்பானையும் உத்தேசமாக கற்பனை செய்து ரசித்தனர். அந்த இடத்தையும் அதன் சிறப்பையும் ஒரு சுற்றுலா வழிகாட்டி போன்று வர்ணனை செய்திருப்பார்.


இந்த பயணக்கட்டுரைகளை அடுத்த நிலைக்கு எடுத்து சென்றவர் எஸ்.ரா. அவர் எழுதிய கட்டுரைகளில் பயணம் தான் உயிர்நாடி. அந்த பயணத்தில் சந்திக்கும் மனிதர்களையும் அவர்தம் வாழ்வியலையும் உணர்வுகளையும் பேசினால் அது எஸ்.ராமகிருஷ்ணனின் 'தேசாந்திரி'. எஸ்.ராவை பொறுத்தவரை பயணம் என்பது, முடிவெடுத்த அந்த நிமிடத்திலேயே எதனை பற்றியும் யோசிக்காமல் தொடங்குவது. உதாரணமாக எழுதிக்கொண்டிருப்பவருக்கு மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள ஒரு குக்கிராமத்திற்கோ அல்லது லடாக்கில் பனிப்பொழிவையோ காண வேண்டும் என்று தோன்றினால் பேனாவைக்கூட மூடாமல் எந்த ஒரு முன்னேற்பாடுமின்றி காலணி அணிந்து வெளியே கிளம்பிவிடுவது. தேசாந்திரி புத்தகம், பயணம் என்ற வார்த்தைக்கு நாம் வரையறை செய்து வைத்திருக்கும் அர்த்தத்தை மாற்றிவிடும் என்பதில் மறுபேச்சிற்கில்லை.




இவ்வாறு பயணம் மற்றும் பயணம் சார்ந்த எழுத்துக்களையும் ரசிப்பவர்களுக்காண விருந்து தான் 'ஏழு கடல் ஏழு மலை' என்ற நாவல். எழுத்தாளர் நரன். கொம்பையா என்ற ஒற்றை மனிதனை, அவனது வாழ்வை அவன் பயணிக்கும் வழித்தடம் மூலமாக அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பை உவகையாய்த்தருகிறது. கொம்பையாவின் பிறப்பு, அவர் அன்னை, சுதந்திரத்திற்கு முன் கிராமங்களில் ஆங்கிலேயர்கள் உதவியது, பண்ணையார் வீடு, அதுனுள்ளே நடக்கும் துரோகம் என போகிறபோக்கில் எந்த திணிப்பும் இல்லாமல் நம்மால் பயணிக்கமுடிகிறது. இலக்கில்லாமல் பயணம் செயகிறது.கதை தந்தை வழி மகன் வழி என இரண்டு காலங்களில் இட்டுச்செல்கிறது. மகன் வழியில் செங்கல் சூளைகளில் கொத்தடிமைகளாய் துன்பப்படுவர்களின் வாழ்வை கண்முன்னே நிறுத்துகிறது. கதைக்கு நியாயம் சேர்க்கும் வகையில் சித்திரங்கள். தந்தையானாலும் மகனானாலும் இருவரும் பயணம் செய்துகொண்டேயிருக்கின்றனர். மகன் கிடைக்கும் லாரி, பேருந்து என எல்லாவற்றிலும் பயணிக்க தந்தை வழியில் கொம்பையா மேற்க்கொள்வது நடை பயணம் மட்டுமே. பயணம் பயணம் என பயணம் மட்டுமே கதை முழுவதுமே. மனிதனின் நெருங்கிய நண்பனான மாடும் கொம்பையாவுடன் இறுதிவரை பயணிக்கிறது. மாடும், மாட்டைச்சார்ந்த அறிவியலையும், மாட்டுச்சந்தையில் நடக்கும் விறுவிறுப்பும் இதுவரை வந்திடாத புத்தாக்கங்கள். கொம்பையாவினால் ஈர்க்கப்பட்டு அவருடன் பயணம் செய்து வாழ்வியலை கற்றுக்கொள்ள முயல்கிறான் கரியன். பயணமே வாழ்வு. இறுதியில் கொம்பையா இன்றி அவனுக்கான பயணத்தை, வாழ்வைத்துவங்குகிறான்.

அவனுடன் நாமும் !!! 

திட்டம் இரண்டு

ஒரு கொலை வழக்கின் மர்ம முடிச்சை அவிழ்க்கும் துப்பறியும் சினிமா வெற்றி பெறுவதற்கு தேவையான காரணீயாக இருப்பது, இறுதி வரை கொலையாளி யார் என்பதை அந்தரத்தில் நிறுத்தி வைக்கும் சாதுர்யம்.




அந்த பரபரப்பான திரைக்கதையை எழுதி இயக்கியதோடு மட்டுமில்லாமல், திரைமொழியில் பேசுபொருளாக இயக்குனர் எடுத்திருப்பது கொலையை அல்ல என்று இறுதியில் தெரியும் நமக்கு, அது இன்னுமொரு அதிர்ச்சியூட்டும் உள்ளீடு.

D16 போன்று, அதுவரை பார்த்த காட்சிகள் இறுதியில் 'அட' என்று வேறு ஒரு பரிமாணம் பெறுவது, இயக்குனர் ஒரு தேர்ந்த கதை சொல்லி என்பதை நிரூபிக்கும் திரைமொழி.

அவ்வாறு அட சொல்ல வைத்த எதைப்பேசினாலும், spoiler ஆக மாறிவிட வாய்ப்பிருப்பதினால், அவற்றை தவிர்த்திருக்கிறேன்.

அழுது ஆர்ப்பரித்து சோக முகத்துடன் சமூகத்தை புறஞ்சொல்லி ஆவணப்படம் போல் எடுத்திருக்க வேண்டிய ஒன்றை, பார்வையாளர்கள் இறுதிவரை இருக்கை நுனியில் இருக்குமாறு திரைக்கதை அமைத்ததோடு மட்டுமில்லாமல் அதில் வெற்றியும் கண்ட Vignesh Karthick மற்றும் குழுவினருக்கு வாழ்த்துக்களுடன் அன்பும் 

சனி, ஜூலை 24, 2021

சார்பட்டா

வருங்கால முதல்வர் அண்ணன் உதயநிதி அவர்கள், சார்பட்டா படத்தை பற்றி முகநூலில் உள்ளீடு செய்திருக்கும் அதே நாளில் இந்த படத்தை பற்றி எழுதுவதில் உவகையடைகிறேன். 😃



நெகிழியை முதலில் உமிழும், அசை போடும் மாடைப்போல, படம் பார்த்து முடித்த கையோடு, சில செரிக்காத பகுப்பாய்வுகள்.

1. என்னதான் சலிப்பு தட்டவில்லையென்றாலும், இந்த படத்திற்கு மூன்று மணி நேரம் என்பது தேவையில்லாத ஆணி 

2. வலிந்து திணிக்கப்பட்ட எமெர்ஜென்சி காட்சிகள்.  கபிலன் தடம் மாறுவதற்கான காரணமாக பசுபதியை விலக்கி வைக்க வேண்டும் என்றால் அதற்கு எமெர்ஜென்சி தேவையில்லை. கோபத்தில் ஒரு கொழுக் மொழுக் பயில்வானை சொருகியிருப்பது போல கதையை அமைத்திருக்கலாம். கதையின் போக்கோடு ஒட்டாமல் தனித்து நிற்கும் இந்த அரசியல் காட்சிகள் புரியவில்லை. குறியீடோ?

3. அழுவதற்காகவே இரு கதாபாத்திரங்கள் என்பது போல அனுபமா மற்றும் துஷராவையும் பயன்படுத்தியிருப்பது. இரு பாடலுக்கு ஆடிச்செல்லும் கதாநாயகிக்கும் இவர்களுக்கும் அதிக வித்தியாசமில்லை. அழுத்தமான பெண் பாத்திரப்படைப்பு மிஸ்ஸிங்.

4. கபிலனை கொல்வதற்கான வாய்ப்புகள் கதை நெடுகிலும் இருந்தாலும், அவற்றை சாசுவதமாக தவிர்த்திருப்பது, கமெர்சியல் வட்டத்துக்குள் இந்த படைப்பை இழுத்து செல்லும் ஒரு அபாய quick sand.

நிறைகள்

1. சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை. பருப்பு சாதத்துடன் நெகிழ்ந்து கலந்திருக்கும் பசு நெய்யை போல அகழ்ந்து விரவி மணம் வீசுகிறது.

2. முரளியின் ஒளிப்பதிவு. ரிங்கிற்குள் நடக்கும் குத்துச்சண்டையை அலுப்புத்தட்டாமல் பரபரப்புடன் அசரடிக்கும் வகையில் காட்சிப்பதிவு செய்ததில் படத்தின் பெரும்பாலான வேலை முடிந்துவிட்டது 

3. ஆரம்பம் முதல் இறுதி வரை தொய்வில்லாமல் காட்சியை நகர்த்தியதில், தமிழ்ப்பிரபா மற்றும் ரஞ்சித்தின் திரைக்கதை கைகொடுக்கிறது.

4. பழனி படிக்கட்டு போல செதுக்கிவைத்திருக்கும் கபிலன், வேம்புலி, ரோஸ் ஆகியோரின் உடற்கட்டு. அகவை 35 தொட்டுவிட்ட காரணத்தினால் 2k கிட்ஸுக்கான மோட்டிவேஷன் என்று இதிலிருந்து ஒதுங்கிக்கொள்கிறேன் 

5. நான் கடவுளுக்குப்பிறகு தன் நடிப்புத்திறமையை வெளிப்படுத்தும் ஒரு வாய்ப்பு, ஆர்யாவுக்கு. பக்காவாக உபயோகப்படுத்தியிருக்கிறார்.

6. கலை நேர்த்தி என்பது கல்லிடம் இல்லை, செதுக்கும் சிற்பியிடம் என்பதுபோல இயக்குனரின் கையில் எல்லா பாத்திரப்படைப்புகளும், தேர்வுகளும், நடிப்பும் அவ்வளவு நேர்த்தி. சபாஷ்.

6. ரங்கன் கதாப்பாத்திரமும் அதற்கு மிடுக்கு உடல்மொழியுடன் நியாயம் சேர்த்திருக்கும் பசுபதி என இன்னும் பல 

தனது comfort zone ஐ விட்டு வெளியே வந்து ஒரு படைப்பை வெற்றியுடன் பதிவு செய்ததன் மூலம், தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத படைப்பாளியாக ரஞ்சித் உருமாறியிருக்கிறார்.    

 

திங்கள், ஜூலை 12, 2021

முகக்கவஜம்

கொரோனா தொற்றுக்கு முன்னாடி ஒரு மாதம் கொரோனா தொற்றுக்கு பின் மூன்று மாதம் என மொத்தம் நான்கு மாதம் அறுவடை செய்யாத காரணத்தினால் தலை மேல் பாரம் கூடியிருந்தது. மாவட்டத்தில் தொற்று கணக்கு 110 தான் என குறைத்து செய்தி வெளியிட்டிருந்த ஒரு நன்னாளில் தலையில் களை எடுக்க அருகில் இருக்கும் சலூனுக்கு சென்றிருந்தேன். 'வாங்க சார், இங்க உக்காருங்க' என்று சொன்னவர் மாஸ்க்கை, ஒரு வயது குழந்தை ஜட்டி போடும் ஸ்டைலில் போட்டிருந்தார். மூக்கு வெளியே தூங்கிக்கொண்டிருந்தது. இங்கே உவமையாக சுட்டிக்காட்டப்பட்டுள்ள குழந்தை ஆன் குழந்தை என கண்டுபிடித்தோருக்கு ஒரு ஷொட்டு. 

'கட்டிங்கா? ஷேவிங்கா?' என்றவரிடம்,  'முதல்ல மாஸ்க்கை ஒழுங்கா போடுங்க' என்றேன்.

கனமான முறைப்பு, மிதமான அலுப்பு என ஒரு வெரைட்டியாக கருப்பு துண்டை உதறி மேலே போர்த்தினார். 

'அண்ணே, மாஸ்க்கை ஒழுங்கா போடுங்கண்ணே' என்றேன், மறுபடியும்.

வேகாத வெயிலில், புழுக்கத்தில் லுங்கிக்குள் கனத்த ஒரு பட்டாப்பட்டியை போடும் வெறுப்பில் மாஸ்க்கை ஏற்றி விட்டார். அடுத்த ஒரு நிமிடத்தில் மீண்டும் ஒரு வயது ஆன் குழந்தையை நியாபகப்படுத்தியது.

'உங்களை திருத்துறது என் வேலை இல்ல' என்று மனதுக்குள் நான் முனங்கிவிட்டு, முடி வெட்டும்பொழுதும் என்னுடைய N95 மாஸ்க்கை கழட்டாமல் அறப்போர் நடத்தினேன்.     

சுற்றியும் நோட்டம் விட்டதில் கடைக்குள் இருந்த ஒருத்தருமே மாஸ்க் அணியவில்லை. ஏசி வேறு. ஒரு தும்மல் ஊடே இரண்டு இருமல் என்ற இலவச இணைப்பு. 

ஐந்து நிமிடத்திற்கு மேலே இங்கே இருந்தால் காவேரி மருத்துவமனையில் சட்டையை கழட்டி CT ஸ்கேன் எடுக்க விடுவார்கள் என்று தோன்றியதால், ஆன வரைக்கும் போதும் என்று அவசரப்படுத்தி கீழிறங்கினேன்.

கடைக்குள் சென்றதிலிருந்து வெளியே கிளம்பும் வரைக்கும் நான் மாஸ்க்கை கழட்டவில்லை என்று கவனித்த ஒரு மேதகு, 'ரொம்ப பயப்படாதீங்க சார். தைரியமா இருங்க' என்று அறிவுரை சொரிந்தது.

சற்று யோசித்துவிட்டு, 'அதில்லண்ணே, நேத்து தான் எனக்கு கொரோனா பாசிட்டிவ் ரிசல்ட் வந்துச்சி. அதான். வேறொன்னுமில்லே' என்று சொல்லிவிட்டு வெளியே வந்துவிட்டேன்.

வண்டியை ஸ்டார்ட் செய்யும்பொழுது நிமிர்ந்து பார்த்தால், பொதுக்கழிப்பறையில் உட்கார்ந்துவிட்டு பைப்பில் தண்ணீர் வராத காட்சியை  மிரட்சியுடன் பார்ப்பது போல, அனைவரும் மாஸ்க்கை அணிந்து என்னை வெறிக்க வெறிக்க பார்த்தனர்.   

ஊரு நல்லாருக்க ஒரு பொய் சொன்னா தப்பில்லை என்று கிளம்பிவிட்டேன்.