வியாழன், ஜனவரி 11, 2024

ஒர்க் ஸ்டேஷன்


வேலை செய்யும் இடம். அறுபது வயதில் ஒய்வு என்று கொண்டால் கிட்டத்தட்ட 40 வருடங்கள் ஒரு நாளின் பிரதானமான நேரத்தை நமது ஒர்க் ஸ்டேஷனில் தான் செலவிடுகிறோம். தோராயமாக எண்பதாயிரம் மணி நேரங்கள். சில வேலைகள் வீட்டில் செய்வதை விட அலுவலகத்தில் பார்ப்பது சற்று சௌகர்யமாக இருக்கும். அப்படிப்பட்ட ஒர்க் ஸ்டேஷன் நமக்கு பிடித்தது போல் இருக்க வேண்டும். இல்லையெனில் முச்சூடும் நொந்து கொள்ள வேண்டிதான். அலுவலகம் வரும் போது facility சர்விஸ் என்ற துப்புரவு பணியாளர்கள் நிலையை நினைத்து வருத்தப்பட்டது உண்டு. ஏதேனும் மாடிப்படி கீழே ஒரு ஸ்டூலில் உட்கார்ந்திருப்பர். மினிவிசிறி வசதி கூட இருக்காது. சற்று கலக்கமாகத்தான் இருக்கும். உனக்கும் கீழே உள்ளவர் கோடி நிலைமைதான்.

குழந்தைக்கான பள்ளியை மாற்றலாம் என்று முடிவு செய்து நேற்று ஒரு பள்ளிக்கு பார்வையிட சென்றிருந்தபோது கண்ட காட்சி மிகவும் திகைப்பாக இருந்தது. ஆந்திராவில் இந்த பள்ளிக்குழுமம் பெரிய தலைக்கட்டு போல . தினமும் பரீட்சை. எக்ஸ்ட்ராகரிக்குலர் என்று எதுவுமே இல்லை. overal grooming  என்பது ஜீரோ. படி, படி, படி தான். முக்கியமாக தமிழ், ஆங்கிலம் மற்றும் சோசியல் சப்ஜெக்டை கண்டுகொள்ளமாட்டார்கள். இதெல்லாம் விட முத்தாய்ப்பாக கண்ட காட்சி, பாடம் சொல்லி கொடுக்கும் ஆசிரியர்கள் யாருக்குமே ஸ்டாப் ரூம் என்ற ஒன்றே கிடையாது. வராண்டாவில் உட்கார வைத்திருக்கிறார்கள். மதிய உணவு, பேப்பர் திருத்துவது, தலைவலி என்றால் சாய்ந்துகொள்ள எல்லாமே அந்த காரிடார் தான். வெயில், மழை என்று பாராமல் வருடம் முழுவதும் காரிடார் என்பது சற்று திகைப்பாகத்தான் இருக்கிறது. என்ன மன நிலையில் அந்த டீச்சர் பாடம் சொல்லி கொடுப்பர்கள் என்று புரியவில்லை. எந்த அளவுக்கு அந்த டீச்சரை குழந்தைகள் மதிக்கும் என்றும் தெரியவில்லை. 

அது பள்ளியே அல்ல என்று அப்போதுதான் புரிகிறது. ராஜஸ்தானின் கோட்டாவைப் போல அகடெமி நடத்துகிறார்கள். குழந்தைகளுக்கு எதை போதித்துக் கொண்டிருக்கிறோம் என்று கேள்வி தொக்கி நிற்கிறது?

செவ்வாய், ஜனவரி 09, 2024

பித்து

ஒரு சிறு கனவு. கனவு தான் என்றாலும் அதிகாலையே அப்சட்.

அன்று அலுவலக விடுமுறை தினம். உணவு இடைவேளையில் பள்ளியில் இருக்கும் குழந்தையை பார்த்து விட்டு வரலாம் என்று இருசக்கர மிதிவண்டியை அழுத்தி கொண்டு செல்கிறேன். விளையாண்டு கொண்டிருக்கும் குழந்தையை பார்த்து கை அசைக்க, ஆனால் பதிலுக்கு ஏதும் சொல்லாமல், சிறு சலனம் கூட இன்றி குழந்தை உள்ளே சென்றுவிட்டது. மற்ற பெற்றோர்கள் சிரித்து பேசிக்கொண்டிருக்க, எங்கிருந்து தான் அழுகை முட்டி கொண்டு வந்ததோ தெரியவில்லை. கேவிக்கேவி அழுதுகொண்டே மீண்டும் சைக்கிளில் வீட்டிற்கு வருகிறேன். போகிற வழியெங்கும் எதிர்படும் அனைவரும் என்னை வெறித்து பார்க்க, பழைய படிக்காதவன் (ரஜினி) திரைப்பட தீம் ம்யூசிக் ஒலித்து மேலும் மனதை பிசைகிறது. எழுந்து பார்க்கும்பொழுது என்னை அறியாமல் விசும்பி கொண்டிருந்தேன். கனவின் ஒளித்தாக்கம் அந்த அளவிற்கு இருந்திருக்கிறது.

யோசித்து பார்க்கையில் சார்பு நிலை கடந்து சுயமாய் நிற்கும் அந்த ஒரு நாள் குழந்தைகளுக்கு நாம் முன்னுரிமை ஆக இருப்பதில்லை. priorities changes. உண்மை கசக்கும் தான் என்றாலும் மத்திம வயதில் நாம் நமது பெற்றோருக்கு எந்த அளவுக்கு நேரம் செலவிட்டிருக்கிறோம் அல்லது கொண்டிருக்கிறோம் என்று எண்ணி பார்த்தால் குற்ற உணர்வே மிஞ்சுகிறது. life is a cycle. அந்தந்த இடம் வரும்பொழுது அந்தந்த விஷயங்கள் புரிந்து கொள்ள முடிகிறது. 

ஆனால் என்றுமே பெத்த மனம் பித்துதான். நாம் பிள்ளைகளாக இருக்கும்பொழுது கல்லாகவும் நமது பிள்ளைகளை நினைக்கும்பொழுது பித்தாகவும் மாறிக்கொண்டிருப்பதுதான் நகை முரண். நியதியும் அதுவே. 


வியாழன், ஜனவரி 04, 2024

பார்க்கிங்

 


ஒரு வண்டி நிறுத்துறதுல பிரச்சினையாயா? அப்டின்னுதான் நமக்கு டவுட் வரும். டவுட்டே வேண்டாம். பார்க்கிங் பிரச்சினைல வெட்டு குத்தே நடந்துருக்கு. அதுலாம் எக்சின்ட்ரிக் கேரக்டர்ஸ் அப்படினு நினைப்பீங்க. இல்ல. ஊருக்குள்ள பல சைக்கோ இருக்குது. என்ன நமக்கு தெரியாது அவ்ளோதான். நமக்கு நம்மளையே முழுசாத் தெரியாது. இதுல போய் மத்தவங்கள எப்படி முழுசா தெரிஞ்சிக்கிறது, புரிஞ்சிக்கிறது.



எங்க ஆபிஸ்லேயே ஒருத்தர். நார்மலான ஆள். வம்பு தும்புக்கு போகாதவர். இதே பார்க்கிங் பிரச்சினை. ஒன்னும் பெரிசாகூட நடந்துடல. ஆனா ஆளு லபோதிபோன்னு குதிச்சார். என்ன மேட்டர்னா, நம்மாளு மாமனார் வீட்டுக்கு வந்துருக்கார். வண்டிய மரத்துக்கு கீழ நிழல்ல நிப்பாட்டிருக்கார். அது பக்கத்து வீட்டுக்காரர் வந்து நிறுத்துற இடம். இது அவருக்கு தெரியாது. பவுசா நிப்பாட்டிட்டாப்புல. கிளம்பும்போது வந்து பாத்தா, விண்ட்ஷீல்டுல ஒரு கடுதாசி. கால் மீ அப்டினு எழுதி ஒரு போன் நம்பர் இருந்துருக்கு. அவ்ளோதான். இவரு படாதா பாடு பட்டு போன் நம்பரை கண்டுபிடிச்சி அவன்ட பேசினாரா அப்டினு கேட்டா இல்லை. ஊரெல்லாம் 'என்ன இவன் பெரிய இவனா. கால் பண்ணுனு போட்ருக்கான்' அப்டினு திட்டிகிட்டு திரிஞ்சார். ஆளு யாருனு பாத்தாச்சு. அப்புறம் என்ன பேசவேண்டிதானே. ஒருவேளை கால் பண்ணாம லபோதிபோன்னு இவனுக்கு கேக்காத மாதிரி கத்தினது ஓகே தான் போல். இல்லனா ரெண்டு பேரும் பூட்டுன வீட்டுக்குள்ள கேஸ் சிலிண்டரை திறந்துவிட்டு நோக்கியா போன மைக்ரோ வேவ் ஓவனுக்குள்ள போட்டு பத்திகிட்டு எரியுமா அப்டின்னு பாத்துட்டு இருந்துப்பாங்க போல. சரி படத்துக்கு வருவோம்.

கதை ரொம்ப சிம்பிள். வாடகைக்கு குடியிருக்கிற ரெண்டு பேரு, தங்களோட வண்டிய நிப்பாட்டுறதுல ஏற்படுற ஈகோ பிரச்சினை தான் பார்க்கிங் படம். இதுல என்னடா சொல்லிட முடியும்னு பாத்தா, அப்டியே மாலைல பூவ கோக்குறமாதிரி ஸீன் பை ஸீன் செதுக்கி நம்ம எல்லாரையும் சீட் நுனில உக்கார வச்சிருக்கார் அறிமுக இயக்குனர் ராம்குமார். எனக்கென்னவோ நம்ம பட்டாபியை மனசில வச்சுதான் கதையை ரெடி பண்ணிருப்பாரு போலன்னு தோணுது. அப்படி ஒரு பொருத்தம். ஆளு எந்த கேரக்டர் கொடுத்தாலும் பிச்சி ஒதறிடறாரு. உண்மைய சொல்லனும்னா இந்த படத்தோட அடி நாதமே நம்ம எம்.எஸ்.பாஸ்கர் தான். மனுஷன் என்னமா பண்ணிருக்காரு. பார்க்கிங்குல பக்கத்து வீட்டுக்கார கார விட்டுற கூடாது அப்டிங்கறதுக்காகவே ஒரு புது கார் வாங்கிட்டு அத ஓட்டிட்டு வரும் போது ஒரு சிரிப்பு சிரிப்பார் பாருங்க. ரெட் சிப் சிட்டி ரோபோ மாதிரி அப்டி ஒரு வில்லத்தனம். அமெரிக்கால தேசிய திரைப்பட பாதுகாப்பு வாரியம் அப்டினு ஒரு வாரியம் இருக்கு. அவங்க முக்கியமான படங்களையெல்லாம் ஆவணமா பாதுகாப்பாங்க. அதுமாதிரி இவரை, இவரோட நடிப்பை கண்ண மூடிட்டு நேஷனல் ரெப்பாஸிட்டரில  preserve பண்ணிடலாம்.

ஆரம்பத்துல இவரோட நடிப்பு முன்னாடி ஹரிஷ் ஒன்னும் இல்லாம தெரிஞ்சாலும் போகப்போக சரியான லெவெல்ல அந்த கிராஃப் ஏத்தி கொண்டு போய்டுறார். 37 வருஷம் ஆகியும் நேர்மையா சம்பாதிச்சும் ஒரு கார் வாங்க முடில அப்படிங்கற பொறாமைல ஆரம்பிக்கிற வாக்குவாதம் அப்டியே கொஞ்சம் கொஞ்சமா பார்க்கிங்கோசரம் டாம் அண்ட் ஜெர்ரி மாதிரி சண்டைபோட்டு கடைசில ஜென்மப்பகைங்குற அளவுக்கு மாறிடுறாங்க. சும்மா ஏனோ தானோன்னு சண்டை போட்டுகிற மாதிரி ஸீன் அமைக்கலை. ஒவ்வொரு சீனும் யதார்த்தமான படைப்பு. நாடகத்தன்மையே சுத்தமா இல்லாத ஒரு பக்கா ரைட்டிங். EO ஆபிஸ்ல லஞ்சம் ஒழிப்பு சோதனை சீன்லாம் அவ்ளோ பதைபதைப்பு. படபடப்பு.  ஒரே வீட்ட சுத்தி சுத்தி வந்தாலும் அலுப்பே தட்டாத காட்சிகள். கேமரா கோணங்கள்.

கிளைமாக்ஸ் வரை யதார்த்தமமா நகர்ந்து போற கதை தடுமாறி நின்னது இறுதி காட்சில அப்டின்னுதான் நினைக்கத்தோணுது. அடிதடி கூட ஓகே. பாட்டில் எடுத்து தலைல அறைஞ்சு, ஸ்பேனர் வச்சி முகமெல்லாம் தாக்கி, சிலிண்டரை ஓபன் பண்ணி வெடிக்க வைக்கிற அளவுக்கு போனது மட்டும் கொஞ்சம் மிகையாயிடுச்சு. சரி. ஒரு ஜோடி வாடகைக்கு இருக்காங்க ஓகே. அது எதுக்கு கர்ப்பமான ஜோடி. தலையணையை கட்டிட்டு முழுப்படமும் ஏன் நடிக்க தேர்வு செய்யணும், என்னமோ இடிக்குதே அப்டினு யோசிச்சேன். க்ளைமேக்ஸ் தாலி சென்டிமென்ட்டோ இல்லை அம்மா சென்டிமென்ட்டோ இல்லாம படம் சக்ஸஸ் ஆகாது போல. முழுமாசப் பொண்ணை கீழ விழ வச்சி, மூச்ச நிறுத்தி பிரதான எதிரி கேரக்டரை வச்சி காப்பத்திட்டா சுபம் மங்களம். ஹீரோ சண்டையெல்லாம் விட்டு கைகுலுக்கி  எண்டு கார்ட் போட்டுறலாம்னு ஒரு பிளான். பாக்கறதுக்கு நல்லாருந்தாலும் மண்பானைல சொருகி வச்சி பிளாஸ்டிக் டேப் மாதிரி எனக்கு அதுமட்டும் ஒட்டல. 

பட், மொத்தத்துல ஒரு சின்ன விதைலேந்து ஆலமரம் மாதிரி ஒரு பெரிய விருட்சத்தை ரசிக்கும்படி உருவாக்கின இயக்குனருக்கு வாழ்த்துக்கள். அதுவும் நம்ம ஆதர்ச குணச்சித்திர நடிகர் பாஸ்கருக்கான முழு நீள படங்குற விதத்துல புல் மீல்ஸ் பார்த்த திருப்தி.  

 

#parkingmoviereview #MSBaskar #harishkalyan #indhujaravichandran

ஃப்ளு

 


திருநெல்வேலியில் இருந்த வரைக்கும் தியாகராஜநகர் Dr ரவிச்சந்திரன் தான் எங்களுக்கு பேமிலி டாக்டர். இந்த பேமிலி டாக்டர் என்ற கான்செப்டில் நமக்கு எது அலர்ஜி என்று நாம் ஞாபகம் வைத்துக்கொள்ளத் தேவையில்லை. 'உனக்கு இது செட் ஆகாதுப்பா' என்று அவரே வேறு மருந்து பரிந்துரைப்பார். படித்து முடித்து வேலைக்கு சேர்ந்த புதிதில் என்றேனும் காய்ச்சல் என்றால் உடனே அவருக்கு மொபைலில் விளிப்பேன். அருகில் இருக்கும் மருந்து கடைக்கு போகச்சொல்லி சில மருந்துகள் பரிந்துரைப்பார். இரவு அந்த டோஸ் எடுத்த பின் மறுநாள் காலை துலக்கி விட்டது போல் பளிச் என்று இருக்கும். ஏதோ புத்துணர்வு கிடைத்தது போல். இப்பொழுது இந்த பேமிலி டாக்டர் கான்செப்ட் அருகிவிட்டது போல் தெரிகிறது. காய்ச்சல் என்றால் இதுபோல தான் என்று வரையறுத்து வைத்திருந்தேன். இந்த ஃப்ளு அட்டாக் செய்யும் வரை. 



கடந்த வாரம் ஊரே புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான மும்முரத்தில் இருந்த போது கடுமையான தலைவலி. மாலை மதி இறங்க இறங்க இங்கு தலையைப் பிய்த்துத் தூர எரியும் அளவுக்கு சொல்லொண்ணா பாரம். அருகில் இருந்த டாக்டரிடம் சென்று காணித்த பொழுது 'இப்போ வர சீசன் பீவர் மாதிரி தான் தெரியுது. மூணு நாளைக்கு மேல இருந்துச்சுன்னா டெஸ்ட் எடுத்துக்கலாம்' என்றார். இந்த மூணு நாள் டெஸ்ட் கேட்டுப் பழகிப் புளித்துப்போன ஒன்று. என்றைக்குமே அடுத்தநாள் காய்ச்சல் நிலைத்ததில்லை. ம்ஹ்ம் என்று உதறிவிட்டு பிட்டத்தில் ஒரு ஊசியை ஏற்றிவிட்டு வந்து படுத்துறங்கிவிட்டேன். ஆவலாய் எதிர்பார்த்திருந்த அந்த 'வியர்க்கும் படலம்' வரவில்லை. பின்னிரவு தாண்டியது. அதிகாலை புலர்ந்தது. ம்ஹ்ம். வியர்க்கவில்லை. ஆனால் சற்று வலி குறைந்த பாடு இருந்தது.  

காலை ஆகாரமாக கஞ்சியை குடித்தபின் மீண்டும் உடல்வலி படுத்தியெடுக்க மீண்டும் மருத்துவமனை. ஒரு மணிநேர காத்திருப்புக்குப் பிறகு மீண்டும் அதே டயலாக்ஸ். 'சீசனல் காய்ச்சல். இட்லி சுகர். ரசம் சாதம். மூணு நாள் டெஸ்ட். இன்ஜெக்ஷன்'. தேடிவந்தது அந்த இன்ஜெக்ஷனுக்குத்தானே என்று மீண்டும் பிட்டத்தில் ஊசியேற்ற வைபவம். கெத்தாக காலரை மடித்து விட்டு வந்து படுத்துறங்கியதில் வேர்த்திருந்தது. 'சின்ராசை இனி கைலேயே பிடிக்கமுடியாது' என்று நினைத்தால் அன்று மாலையே மீண்டும் சொல்லொண்ணா தலைவலி. உடல்வலி. தொண்டை கமருகிறது. இருமல். மூக்கு ஒழுகுதல். நெஞ்சில் வலி. மீண்டும் மருத்துவமனை. அதே டையலாக். அதே அதே. மற்றுமொரு முறை ஊசி. இரவு சற்று வேர்த்திருந்தது.  

மூன்று ஊசிக்கு கீழ்படியாத காய்ச்சல் என்றவுடன் கொஞ்சம் கிலியாக இருந்தது. நண்பனை அழைத்தேன். 'அடேய். இது வைரல் பீவர். நீ தலைகுப்புற நின்னாலும் மூணு நாளு இருக்கும். மூடிட்டு படு. மூணு நாளைக்கப்புறம்', இடைமறித்து 'என்ன டெஸ்ட் எடுக்கணும் அதானே' என்றேன். 'தெரிதுல. ஃப்ளு காய்ச்சல் அப்டித்தான் இருக்கும்' என்று தேத்திவிட்டான்.  

நண்பன் கூறியது போல விருந்துக்கு வந்த சொக்கார் போன்று மூன்று நாட்கள் குத்த வைத்து தான் கிளம்பியது. மூன்று நாட்கள் மேலேயும் காய்ச்சல் தொடர்ந்திருந்தால் டெஸ்ட் எடுத்து பார்த்து என்ன காரணத்திற்க்காக இன்பெக்ஷன் என்பதை கண்டுபிடித்து அதற்கு ஏற்றார் போன்ற antiviral கொடுப்பார்கள் போல. நாம் அடிக்கடி விழுங்கும் amoxy cefi போன்றவை antibiotics வகையறாக்கள். பாக்டீரியாவினால் ஏற்படும் தொற்றை இவை பெரும்பாலும் சரி செய்துவிடுகிறது. ஆனால் வைரஸ் தொற்றுக்கு குறிப்பிட்ட anitviral தேவைப்படுகிறது. இதில் ஒரு பியூட்டி என்னவென்றால் மூன்று நாட்களுக்குள் நம் உடலில் எதிர்ப்புசக்தி உண்டாகி அதுவே வைரஸை அழித்து விடுகிறது. அல்லது வலுவிழக்கச் செய்கிறது. அதையும் தாண்டி வைரஸ் 'வந்து பார்' என்றால் நாம் உஷாராகி விட வேண்டும். டெங்கு, கொரோனா போன்று ஏதாவது ஒன்றாக இருக்கலாம். அதீத கவனம் தேவை.  

தொற்று ஏற்பட்டவுடன் என்ன செய்யவேண்டும்? திரவ உணவுகள், பாராசிட்டமால், தொண்டை வலி, மூக்கு ஒழுகுதல் போன்ற இத்யாதி சைட் எபெக்ட்ஸ்களுக்கு டாக்டர் பரிந்துரைக்கும் antibiotics. முக்கியமாக முழு ஒய்வு. பாராசிட்டமாலில் dolo 650 தான் வேலைக்கு ஆகிறது. மற்ற பேர்களில் வருகிற பாராசிட்டமால் எனக்கு ஒர்கவுட் ஆகவில்லை. அதுவும் கால்பால். நோ யூஸ்.   

எல்லாம் சரி. எவ்வாறு தொற்று ஏற்படுகிறது? கொரோனா காலத்தில் நாம் கற்றுக்கொண்ட அதே தனிமனித இடைவெளிதான். பாதிக்கப்பட்டவரின் தும்மல், இருமல், கண்ணீர் போன்ற நீர்த்திவலைகள் மூலம். சீசனல் நேரங்களில் ஆவது பொது இடங்களில் முகக்கவசம் அணிவது நல்லது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது நலம். குழந்தைகள் மற்றும் முதியவர்களை இது மிகவும் பாடாய்ப்படுத்திவிடும். 

வைரசுக்கு எதிரான போராட்டம் இன்றும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.  

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

மங்களவாரம்

 

 

தெலுங்கில் மங்களவாரம். தமிழில் செவ்வாய்க்கிழமை. 

சின்ன கிராமம். கள்ளத்தொடர்பை சுவற்றில் எழுதி அதன் காரணமாக அங்கே நடக்கும் தற்கொலையை விசாரிக்க நந்திதா ஸ்வேதா புது SI ஆக வருகிறார். அது தற்கொலையல்ல. கொலை என்று நம்பும் அவரை தன கடமையைச் செய்ய விடாமல் அந்த கிராமம் தடுக்கிறது. போலீஸ் விசாரணை ஒரு புறம் நடக்க, மறுபுறம் அந்த கிராமத்தின் கதை முன்னும் பின்னுமாக விரிகிறது. இறுதி காட்சி வரை பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ட்விஸ்ட் வைத்திருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள். 

 


நிம்போமேனியா போன்ற சப்ஜெக்டை தொடுவதால், மேலும் ஹீரோயின் அந்த கேரக்டராகவே வாழ்வதால் சற்று எச்சரிக்கை தேவை. ஸ்ட்ரிக்ட்லி அடெல்ட்ஸ் ஒன்லி. மற்றபடிக்கு கதை நடக்கும் களம், கிணறு, வாழைத் தோப்பு, கோவில், சாப்பாடு பந்தி, சோடா கடை என எல்லாமே விறுவிறுப்பு. அதுவும் அஜய் கோஷின் ஒன் லைனர்ஸ் எல்லாமே தரம் ரகம்.   

டிஸ்னி ott யில் கிடைக்கிறது 

Paayal Rajput Ajay Bhupathi #Mangalavaaram