ஞாயிறு, அக்டோபர் 24, 2021

வினோதைய சித்தம்

V.K ராமசாமி, எஸ்.எஸ். சந்திரன் போன்ற குணச்சித்திர நடிகர்களை தற்போது மிஸ் செயகிறேன் என்று சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு  ஒரு பதிவு இட்டிருந்தேன். சோகத்தில்(!!!) ஆழ்ந்திருந்த என்னை தேற்றும் விதமாக ஓவியாவின் கண்ணன், அண்ணன் ramkumar "அதுக்குத்தான் பட்டாபி பாஸ்கர், ஜெயப்ரகாஷ், தம்பி ராமையா இவங்கல்லாம் இருக்காங்கல்ல", என்று ஆறுதல் கூறியிருந்தார். 

தற்போது அந்த பதிவை மீண்டும் நினைவுகூரும் காரணம் "வினோதைய சித்தம்" மற்றும் அதில் பரசுராமாக வாழ்ந்திருக்கும் தம்பி ராமையா. 




தனி ஆளாக படத்தை தோளில் சுமந்திருக்கிறார். ஆரம்பத்திலிருந்து காட்டும் மிடுக்காகட்டும், இறந்த பின் காலத்தோடு உரையாடும் போது காட்டும் கலவரமாகட்டும், மகள் பிரிந்து செல்லும் போது வெளிப்படும் கோபம், மனைவியிடம் சொல்லாமல் சொல்லும் காதல், பொது மேலாளராக நியமிக்கடப்படாமல் ஏற்படும் ஏமாற்றம், அதுவே கம்பெனியின் MDயாக மாறியவுடன் தொற்றும் உற்சாகம் என நடிப்பின் எல்லா ரசங்களையும் ரசிக்கவைக்கும் cosmetic இல்லா அரிதிலும் அரிதான performance. முழுமையான கலைஞன். இவருக்கு விருது கொடுத்து தேசிய விருதுக்கு மரியாதை செய்திருக்கிறார்கள் என்றால் என்னைப்பொறுத்தவரையில் மிகையில்லை.

"மேகா"வில் "புத்தம் புது காலை" ஒலிக்கும் திருமண நிகழ்வில், பார்க்கும் யாராயிருந்தாலும் விழியோரத்தில் நீர் துளிர்க்க வைக்கும் ஒரு நெகிழ்வான காட்சி வரும்.  அதுபோன்றதொரு தருணம் நெடுநாள் கழித்து "வினோதய சித்தம்" படத்தில். மிடுக்காக காரில் இருந்து இறங்கி 'மாப்பிள்ளை' என்ற நெஞ்சார அழைத்து கன்னத்தை வருடும் அந்த ஒரு க்ஷணம், ஒரு சோறு பதம். எல்லோருக்கும் உணவு பரிமாறும் காட்சியில் தம்பி ராமையாவின் நடிப்பு அதகளம். கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.

இதில் அறிவுரை வழங்கும் கதாப்பாத்திரமாகவே சமுத்திரக்கனி வந்தாலும் அலுப்பு இல்லை. அளவான அழகான அர்த்தமுள்ள வசனங்கள் திரைக்கதைக்கு பக்கபலம்.  முதல் நிமிடத்திலேயே கதைக்குள் பயணிக்கவேண்டும். கதை போகிற போக்கிலேயே கதாபாத்திர அறிமுகம் செய்யப்படவேண்டும், பின்னணி இசை, சமரசம் இல்லாத மேக்கிங் என் எல்லாமே இயல்பாக அதனதன் இடத்தில் சரியாக அமர்ந்திருக்கிறது. 

'டைம் இல்லை' என்று சொல்லுகிறவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ப(பா)டம்.

10/10


கருத்துகள் இல்லை: