ஞாயிறு, அக்டோபர் 03, 2021

இளையராஜா


ஹம்சத்வனி ராகத்தை பற்றி ஒருவரிடம் விவாதித்து கொண்டிருந்தபோது பேச்சு எங்கெங்கோ சுற்றி இசை ஞானியை பற்றி வலம் வந்தது. வலம் வந்தாலாவது இசை இடம் வருமா என்று முயற்சித்தோம்.

இசை என்று பேச ஆரம்பித்தாலே ராஜாவின் மேஜிக்கை பற்றி வியக்காமல் இருக்க முடியாது.

என்னுடன் விவாதித்து கொண்டிருந்தவர் 80களில் ஜேம்ஸ் வசந்தன் மற்றும் சிலருடன் ராஜாவின் ட்ரூப்பில் வாசித்து கொண்டிருந்தவர். அவருடைய விவரணையில்,

இளையராஜாவுடைய பாட்டை ஒரு வாத்தியக்கருவில வாசிக்கிறதுங்கிறது அவ்ளோ சுலபம் இல்லை சார். அப்டி ஒரு முறை வாசிச்சிட்டோம்னா ஜென்மத்துக்கும் அது உங்கள விட்டு போகாது. ஏன்னா அவருடைய இசை அந்த மாதிரி ஒரு பாதிப்பை உங்க வாழ்க்கைல ஏற்படுத்திருது.

கண்ணதாசனுக்கு எப்படி வார்த்தை அருவி மாதிரி வந்து விழுமோ அதுமாதிரி இவருக்கு ஸ்வரங்கள் வந்து விழுகும்.

பிரசாத் ஸ்டுடியோவே கதின்னு இருப்பார். காலைல 6.30 மணிக்கு ரெக்கார்டிங் ஸ்டுடியோவுக்கு வந்துருவார். நாங்கெல்லாம் ஒரு ஆறேகால் மணிக்கு அங்க ஆஜர் ஆயிடுவோம்.

ஒரு முறை விஜயகாந்த்தோட படத்துக்கு ரீரெக்கார்டிங் செஷன் நடக்குது. திரைல ஒலி இல்லாம ஒளி மட்டும் வருது. விஜயகாந்த் வரப்புல நடந்துட்டு போறாரு. அதை மறைஞ்சிருந்து பாக்கிற வில்லன் அவரை வெட்றத்துக்கு அரிவாளை தூக்கிட்டு வரான். சமயம் பார்த்து அரிவாளை விஜயகாந்த நோக்கி வீசும்போது, ஹீரோயின் அங்க வந்து அந்த வெட்ட, தன்னோட கழுத்துல வாங்கிக்கிறாங்க. இதான் சீன். ஒரு பத்து நிமிஷம் ஓடுது. இதை அந்த பெரிய திரைல ராஜா பாத்துட்ருக்காரு. பாக்கும்போதே கைல இருந்த பென்சிலால அங்கே இருக்குற ஒரு சின்ன பேப்பர்ல அப்டியே ஸ்கெட்ச் போடுற மாதிரி நோட்ஸ் எழுதுறாரு. சீன் முடியவும் இவரு அந்த பேப்பரை ட்ரூப்ல இருக்குறவங்க கிட்ட கொடுக்குறாரு. அந்த நோட்ஸ அவங்க பிராக்டிஸ் பண்ணவே ஒரு மணி நேரம் எடுத்துக்குறாங்கன்னா நீங்க பாத்துக்கலாம். அந்த ரெக்கார்டிங் ஸ்டுடியோக்குலேயே இன்னொரு ரெக்கார்டிங் ஸ்டுடியோ. ராஜாவை சொல்றேன். அப்புறம் ட்ரையல் பாக்கும்போது சில கரெக்ஷன்ஸ். அடுத்த அரை மணி நேரத்துல அந்த சீனுக்கான BGM முடிஞ்சிருச்சு. அதெல்லாம் நேர்ல பாக்குறதுக்கே கொடுத்து வச்சிருக்கணும்.




இளையராஜா சரஸ்வதியோட அவதாரம்னு சொன்னாலும் தப்பில்லை சார் என்று முடித்தார்.

அதை பறைசாற்றும் விதமாக எங்கிருந்தோ புத்தம் புது காலை பாடல், ஜானகியின் குரலில் காற்றோடு கலந்து வந்தது மனதை கரைத்துக்கொண்டிருந்தது.

PS

ஹம்சத்வனிக்கும் உனக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்காதவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் மற்றும் தற்போது ஹம்சத்வனியை ஏன் விவாதித்தோம் என்று கண்டுபிடித்தவர்களுக்கு ஷொட்டு. 

கருத்துகள் இல்லை: