புதன், செப்டம்பர் 27, 2023

ஏமாந்த கதை

 

ஒரு ஆறு வருஷத்துக்கு முன்னாடி நடந்த விஷயம்

ஆபிஸ்ல ப்ரெஷர். அடிவயித்திலேயும் ப்ரெஷர். நம்மால முடிஞ்சது எதுவோ அத பண்ணுவோம்னுட்டு 'சூச்சு' போய்ட்ருந்தேன்.

அப்போ பாத்து போன் கால். கழுதைக்கு மூக்குல வேர்த்த மாதிரி அப்போதான் கால் வரும் பாருங்க. மல்டி டாஸ்கிங் அப்படிங்கிற பேர்ல அப்போவே ஒத்தக்கைல பிடிச்சிட்டு பேச ஆரம்பிச்சேன். போனைத்தான்.



கால் பண்ணவன் பழைய கம்பெனில ஒண்ணா ஒர்க் பண்ண நண்பன். அஞ்சு வருஷம் கழிச்சி போன் பன்றான்.

'டேய் மச்சா. நல்லாருக்கியா?'

'சொல்லுடா'

'ஒரு அர்ஜன்ட் மேட்டர்.'

'நானும் அர்ஜன்ட் தான். சொல்லு'

'பிரான்ஸ்லேந்து வந்துட்டேன். பட் PR ப்ராசஸ் பண்ணனும். கொஞ்சம் பணம் தேவைப்படுது'

'ஒ எவ்ளோ டா'.

'ஒரு 9000 தேவைப்படும். இருக்காடா மாப்பிள'

'9000மா. அக்கவுன்ட்ல இல்ல'

'டேய். ஹெல்ப் பண்ணு டா. கைல காசு இருக்கு. atm பக்கத்துலதான் இருக்கேன். என்னால foreign அக்கௌண்டுக்கு போடமுடியாது. உனக்கு உடனே போட்டு விட்டுடுவேன்'

சரி. நண்பன் கேக்குறான். எதோ பிரச்சினை போல அப்டினு யோசிச்சுட்டு கைய கழுவுன கையோட கூட வேலை பாக்குறவர் கிரெடிட் கார்டு டீடெயில்ஸ் வாங்கி கொடுக்குறேன். அந்த பக்கம் அவன் லைன்ல வெயிட் பண்ணிட்டே இருக்கான்.

'ஒரு otp வரும் பாருடா'

சொன்னேன். 18576 ரூபாய் டெபிட் என்று வந்தது. என்னது 9000 ரூபா தான் சொன்னான். 18576 வருதே அப்டினு யோசிச்சுட்டு அவனை கேட்டேன். இப்போ போன வச்சிருந்தான்.

'டேய். 18576 டெபிட் ஆயிருக்கு. நீ 9000 தான சொன்ன'

'ஓ. சாரி மச்சா. அதுல அட்ரஸ் தப்பா போட்டுட்டேன். ரிவர்ஸ் பண்ணிட்றேன். இப்போ ஒரு otp வந்துருக்கும் பாரு'

otp வந்திருந்தது. சொன்னேன். மீண்டும் 18576 டெபிட்.

'டேய் திரும்பவும் டெபிட் மெசேஜ் தான் வந்திருக்கு'

'அது. ஒன்னுல்ல. இப்போ தான் கரெக்ட்டா டெபிட் ஆகியிருக்கு. முத டெபிட் ஆனது ரிட்டர்ன் ஆயிடும். பேங்க் பொறுத்து ரெண்டு மூணு நாள் ஆகும்'

'ஓகே. பணம் போட்டு விடு'

'ஓகே' னு வச்சிட்டான்.

அதுக்கப்புறம் ரெண்டு நாள் நாங்க, அதாவது நானும் அந்த க்ரெடிட் கார்ட் கொடுத்த நண்பரும் பேங்குக்கு போன் பண்றதும், நான் என்னோட பேங்க் ஸ்டேட்மென்ட் செக் பண்றதும் விடாம நடந்துச்சு.

பட் பணம் வரல. ரிவர்சலும் ஆகல. அவனுக்கு போன் பண்ணினா எடுக்கல. விஷயம் கொஞ்சம் சீரிஸ்னு புரிய ஆரம்பிக்குது. ஏமாந்துட்டோமோன்னு முத பயம் வருது. சும்மாவா பின்ன 38000 ரூபாய்.

அதுக்கப்புறம் ஏதோ தோணினதுல என் கூட ரூம்ல இருந்த இன்னொரு பைய்யனுக்கு கால் பண்ணி கேக்குறேன். அவன் சொல்றான். சாரி திட்டுறான். 'லூசாடா நீ. ஒரு வார்த்தை யார்டையாவது கேக்கமாட்டியா? அவன் இது மாதிரி நிறைய பேருட்ட பணம் வாங்கிட்டு ரிட்டர்ன் பண்ணாம சுத்திட்டு இருக்கான். நீ என்னடானா கொஞ்சம் கூட யோசிக்காம பணத்தை தூக்கி..'

'டேய்..friend கேக்குறானேன்னு...'

'ஆமா..பொல்லாத friendship . அவன்ட நீ பேசி ஆறு வருஷம் மேல ஆகுது. இடைல என்ன ஆச்சுன்னு உனக்குத் தெரியுமா?'

ரஜினி சொன்னமாதிரி எனக்கு ஒரு நிமிஷம் தலையே சுத்திடுச்சு.

பாதிக்கப்பட்டோர் சங்கம் மாதிரி அவனால ஏமாத்தப்பட்ட இன்னும் ரெண்டு பேர் facebookல contact பண்ணாங்க. புலம்பல் ஒண்ணே தீர்வு அப்படிங்கற முடிவுல என் சோகக்கதையை அவருக்கு சொல்ல அவரு சோகக்கதையை என்கிட்ட சொல்ல...இப்டியே ரெண்டு மாசம் ஓடிடுச்சு.

இதுக்கு நடுவுல அவுங்க ஊரு ஆளுங்க ரெண்டு பேர பிடிச்சி விசாரிச்சு, அவன் wife அப்புறம் மச்சான் ப்ரொபைல்லாம் facebookல கண்டுபிடிச்சி மெசேஜ் பண்ணி பணம் கேட்டு கடைசில இவன் பண்ண பாவத்தை இவங்க மாமனார் கழுவிட்ருந்தார். ஒவ்வொருத்தருக்கா அவர் பணம் பைசல் பண்ராருனு கேள்வி பட்டு அவரை contact பண்ணா, அவரு '38000 தான தம்பி. சின்ன அமௌன்ட் தான். இந்த வாரம் வெள்ளிக்கிழமை போட்ருவேன்' அப்டின்கிறார்.

என்னங்கடா 38000 சின்ன அமௌண்ட்டா அப்டினு விசாரிச்சா சில பேருட்ட 2 அல்லது 3 லட்ச வரைக்கு லவட்டிருக்கான். அதுமட்டுமில்லாம கிட்டத்தட்ட ரெண்டு மூணு கோடிக்கு இந்த ஏமாத்துவேலை. காரணம் சூதாட்டம் அப்டினு சொன்னாங்க. சரியா விவரம் கண்டுபிடிக்க முடில.

எப்படியோ அவங்க மாமனார்ட்ட கெஞ்சி கூத்தாடி அவரு பணத்தை போட்டுவிட்டார். 750 ரூபா கம்மியா வந்துச்சு. வந்தவரைக்கு ஓகே அப்டினு வாங்கிகிட்டேன்.

அதுவும் கடைசி நேரத்துல அவரு அக்கௌன்ட் நம்பர் மாறி பணம் போட, நல்ல வேலையா அந்த அக்கௌன்ட் நம்பர் ஆக்ட்டிவேட் ஆகாம அவருக்கே ரிவர்ஸ் ஆக, ஒரே ரணகளம் அந்த நாள். எப்டியோ பணம் கைக்கு வந்துச்சு. அன்னைக்கு எழுதுன அந்த transaction reference நம்பர் தான் இந்த படத்துல இருக்குது.

கடந்த வருஷம் தான் தெரிய வந்துச்சு. அவன இண்டர்போல் தேடுற அளவுக்கு பெரிய கிரிமினல் ஆகிருக்கான் அப்டினு. PR வாங்கித்தரதா சொல்லி foreign ஆட்களையும் ஏமாத்திருக்கான். அவனுக்கு FBல தனி பேஜ் ஆரம்பிச்சு அவன் குடும்பம் வரைக்கும் இழுத்து நாரடிசிருக்காங்க. அதனாலே அத இங்க ஷேர் பண்ண முடில. 

அவனோட முழு ரூபம் தெரியாத டைம்ல, நடுவுல அவங்கிட்ட பணத்துக்காக போன் பண்ணும்போது விட்டான் பாருங்க ஒரு ரீலு, 'டேய். செல்வ மகள் சேமிப்பு திட்டம் போடு. நல்ல ரிட்டர்ன்ஸ் வருது'ன்னு. எப்படியெல்லாம் கூலா ஏமாத்துறாங்க.

அந்த ரெண்டு மாசம் பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சம் இல்ல. இதெல்லாம் ஒரு தினுசான ரண வேதனை அனுபவம் தான்.

அன்னைலேந்து முடிவு பண்ணிட்டேன். 'சுச்சு' டைம் நோ போன்.

திங்கள், செப்டம்பர் 25, 2023

ஜவான்

 


தரம் இல்லாத துப்பாக்கியினால் உயிர் இழந்த ராணுவ வீரர்களுக்காக பழிவாங்குவதற்கும், தேசத்துரோகி என்ற அவப்பெயரை துடைப்பதற்காகவும் மற்றும் நாடு தழுவிய விவசாயக் கடன், மருத்துவமனை சீரமைப்பு etc etc க்காகவும் இரட்டை வேட அவதாரம் எடுத்தால் அதுதான் ஜவான்.  

பாலிவுட் பாட்ஷாவிற்காக அல்ல, கோலிவுட் தங்கம் அட்லீக்காக முதல் நாள் மூன்றாம் காட்சி. எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தாரா?



அணிந்திருக்கும் முகமூடி தீப்பற்றி எரிந்து விழ, விழும் துணிக்குப் பின்னால் இருக்கும் முகம் தெரிவது போன்ற ஹீரோவின் இன்ட்ரோ இதுவரை பார்த்தறியாதது. ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. ட்ரெயின் ஹைஜாக் காட்சிகள் சுவாரஸ்யமாக இல்லாவிட்டாலும் அதற்கு காரணமாக ஷாருக்கானால் சொல்லப்படும் விவசாயக்கடன் நிகழ்வுகள் உண்மைக்கு நெருக்கமானவைதான். போலவே மருத்துவமனை காட்சிகளை முயன்றிருக்கிறார்கள். ஐந்து மணி நேரத்தில் நாடு தழுவிய மருத்துவமனை புனரமைப்பு என்பது போங்காட்டம். ஹீரோயின் நயன்தாரா. ஷாருக் இண்ட்ரோ பில்டப்பில் சரிபாதி லேடி சூப்பர் ஸ்டாருக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. அசத்தல்.

மகன் ஷாருக், வில்லன்களிடம் மாட்டிக்கொள்ளும் தருணத்தில் அதிரடியாய் மீண்டும் வருகிறார் ஜவான் ஷாருக். மகனை விட தந்தைக்கான காட்சிகளில் ஹீரோயிசம் தூக்கலாக இருக்கிறது. முழு நேரமும் சுருட்டைப் புகைத்து கொண்டே இருக்கிறார். 

வில்லனாக விஜய் சேதுபதி. அதே விஜய் சேதுபதி போல தான் எனக்குத் தெரிந்தது. வில்லத்தனம் செய்ய முயன்றாலும் விஜய் சேதுபதிதான் தெரிகிறார். இறுதி காட்சியில் இரண்டு ஷாருக்கிடமும் அடி வாங்கும் நேரத்தில் கிச்சுகிச்சு மூட்டுகிறார். ஷாருக் படையில் ஒரு கமாண்டோ பெண்ணாக பிரியாமணி. நயன்தாராவை காப்பாற்றும் பொருட்டு குண்டடி பட்டு இறந்துவிடுகிறார். இரண்டே காட்சிகள் தான் என்றாலும் யோகி பாபு சிரிக்கவைக்கிறார். 

படம் முழுக்க பல படங்களின் ரெபெரென்ஸ்கள். இல்லையா பின்னே. தெறி, பாகுபலி, பிகில் என காட்சிகள் விரவிக்கிடக்கின்றன. சஞ்சய் தத் காட்சி மங்காத்தாவை நினைவுபடுத்துகிறது. முழுக்க முழுக்க பெண்களை வைத்தே பெண்களுக்காக படம் எடுத்தது போல் இருக்கிறது. அட்லீயிடம் இருக்கும் ஒரு முக்கியமான பாசிட்டிவ் விஷயமே அதுதான். women potrayal. தைரியமான பெண்கள். இழவு வீட்டில் விவசாயக்கடன் வசூலிக்க வரும் குண்டனை மடார் என்று சாற்றியது, பேனாவை கொண்டே காவலனை கழுத்தில் குத்தி தீபிகா படுகோனே கொன்றது என இரண்டுமே அட்லீ டச். பெண்கள் சென்டிமென்டில் அட்லீயை அடித்துக்கொள்ள வேறு எந்த இயக்குனரும் கண்ணுக்கெட்டிய தூரத்தில் இல்லை. யூகிக்க முடிந்த செண்டிமெண்ட் காட்சிகள் தான் என்றாலும் பல காட்சிகளில் மெஸ்மரைஸ் செய்து விடுகிறார். அட்லீ மேஜிக்.

இசை அனிருத். படத்தை தூக்கிப் பிடித்து நிறுத்தியிருப்பது அனியின் BGM தான். பாடல் எதுவுமே ஒட்டவில்லை. ஒருவேளை ஹிந்தியில் பிடித்திருக்கோமோ என்னவோ. தெரியவில்லை. இரண்டு மூன்று தீம்கள் நன்றாகவே படத்தை uplift செயகின்றன. 

படத்தில் பல காட்சிகள் போங்காக இருக்கின்றன. எந்த ஜெயிலில் இதுபோன்ற சீருடை என்பது தெரியவில்லை. ஜெக்கின்ஸ் ட்ஷிர்ட் ஓவர்கோட் ஜாகிங் ஷூ சகிதமாக பெண் கைதிகள். நினைத்த நேரங்களில் எல்லா சிஸ்டம்களையும் ஹேக் செயகிறார்கள். சகட்டு மேனிக்கு துப்பாக்கி உபயோகிக்கிறார்கள். முன்பெல்லாம் இறுதி காட்சியிலாவது சைரன் ஊதிவிட்டு போலீஸ் வரும். இப்பொழுதெல்லாம் ஹீரோவே எல்லாவற்றையும் பார்த்து கொள்கிறார் போலும். மருந்துக்கும் போலீஸ் இல்லை. 

கோலிவுட்டிலிருந்து பல நடிகர் நடிகைகளை, டெக்னீஷியன்களை, ம்யூசிக் டெரேக்டர் எனப்பலரை பாலிவுட் வரை இட்டுச்சென்று உலகளவில் பத்தாயிரம் திரையரங்குககளில் வெளியிடச் செய்தமைக்காகவே கேப்டன் ஆப் தி ஷிப் அட்லீயைப் பாராட்டலாம். 

ஸ்டைலிஷான மேக்கிங், ஷாருக் எனர்ஜி, நயன்தாரா நடிப்பு, அனியின் இசை ஆகியவை படத்திற்கு வலு சேர்க்கின்றன. ஆனாலும் அட்லீ மேஜிக் மிஸ்ஸிங் என்றே சொல்லுவேன். பட் ஹிந்தி ரசிகர்களுக்கு இது புது ரகம் தான். 

#jawanmoviereview #sharukhkhan #Atlee #nayanthara #vijaysethupathi #deepikapadukone #JawanFirstDayFirstShow

 

திங்கள் செவ்வாய் வியாழன் வெள்ளி சனி

 

 

என்னடா இது கிழமையா இருக்கேனு பாக்குறீங்களா? கிழமை இல்ல. கிரஹங்கள்.

அண்ணாந்து அந்த நிலாவை பாக்கும்போது அங்க ஒரு இடத்துல இங்கேந்து அதாவது இந்தியால தயார் பண்ணின ஒரு பொருள் அதுவும் நம்ம அனுப்பிச்ச சந்திராயன் விண்கலம் இருக்குதுனு நினைக்கும்போது ஆச்சர்யமா இருக்குது. ஏதோ விண்வெளில கண்ணுக்குத் தெரியாது ஒரு ஏணி நாம இருக்குற இடத்துலேந்து நிலாவை கனெக்ட் பண்ற மாதிரி ஒரு feel கிடைக்குது. ஒவ்வொரு முறையும் நிலாவை பாக்கும்போது இந்த feel good மொமெண்ட் இருக்குது.



சந்திராயன் லான்ச் பண்ணத்திலேந்தே இஸ்ரோ ரொம்ப அதிகமா கவனிக்கப்படுது. அதுவும் ஆதித்யா ககன்யான் அப்படினு அடுத்தடுத்து வர்ற திட்டங்கள் கேக்கவே வியப்பா இருக்குல்ல.

அதே சமயம், அதாவது நாம நிலாவுக்கு பிரக்யான் அனுப்பிச்ச இதே நேரம், நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவுல காலடி எடுத்து வச்ச அந்த விஷயமும் நம்ம நியாபகத்துக்கு வராம இல்ல. ஒரே டவுட் தான் இருந்துச்சு. அது என்னன்னா நீல் ஆம்ஸ்டராங் காலடி எடுத்து வச்சது 1969ல. அதுக்கப்புறம் இப்போவரைக்கும் அதாவது 50 வருஷமா ஏன் அடுத்த நிலாவுல இறங்குற ப்ராஜக்ட் பண்ணல? அப்படினா நீல் போனது பொய்யா அப்படிங்கற கேள்விதான் அது. கொஞ்சம் தேடிப்பார்த்தப்ப கிடைச்ச விஷயங்கள் ரொம்பவே ஆச்சர்யமா இருந்துச்சு.

1969ல appollo 11 அப்படிங்கற விண்கலம் மூலமா நீல் நிலாவை அடையறார். அதுக்கப்புறம் 1972 வரை ஆறு முறை நிலாவுக்கு பயணிச்சிருக்காங்க. அதுவும் எப்படி? பக்கத்து ஊருக்கு போய்ட்டு வர மாதிரி. எல்லாமே NASA தான். USA தான். முத தடவ நீல் நடக்க தான் செஞ்சிருக்கார். ஆனா அதுக்கடுத்த மிஷன் எல்லாமே வேற லெவல். ஒரு தடவ நிலாவுல கார் ஒட்டிருக்காங்கன்னா பாத்துக்கோங்க. முதல் தடவ அப்டிங்கறது மட்டும் நம்ம மனசுல நல்லா பதிஞ்சிருக்கு. அடுத்தது வந்ததா வசதியா மறந்துட்டோம்.

இத இன்னும் கொஞ்சம் டீப்பா தோண்டி பாக்கும்போது தான் தெரிய வருது. 1610 ல டெலஸ்கோப் கண்டுபிச்சதுலேந்து இந்த பயணம் ஆரம்பிக்குது. தொட்டு தொட்டு ராக்கெட் விடற அளவுக்கு வராங்க. 1946ல முத முறையா வானத்திலேந்து பூமியை போட்டோ பிடிக்கிறாங்க. 105km உயரம். அதுக்கப்புறம் பூமியோட எஸ்கேப் விலாஸிட்டிய தாண்டறது, நாய் குரங்கு போன்ற விலங்குகள வான்வெளிக்கு அனுப்புறது, திருப்பி உயிரோட கொண்டு வரது. நிலாவுக்கு பக்கத்துல வரைக்கும் போறது அப்படினு படிப்படியா பல சோதனைகள் முயற்சிகள். பலது தோல்விகள். சிலது வெற்றிகள். என்ன ஒரு விஷயம்னா இந்த விளையாட்டை ரெண்டே ரெண்டு நாடுகள் தான் முழுக்க முழுக்க விளையாண்டருக்காங்க. ஒன்னு USSR. அதாவது பழைய ஒருங்கிணைந்த ரஷியா. இன்னொன்னு அமெரிக்கா.

இதுல இன்னோரு பியூட்டி என்னன்னா 1968 வரைக்கும் பல ஆராய்ச்சிகள் முதல் முறை அப்படிங்கற பட்டத்தை தட்டிட்டு போறது ரஷியா தான். இது அமெரிக்காவுக்கு ரொம்ப தர்மசங்கடத்தை ஏற்படுத்துது. போட்டிக்கு பல பரிசோதனைகள் பண்ணாலும் ப்ரெசிடெண்ட் நிக்சனுக்கு ரொம்பவே கவுரவ பிரச்சினையா மாறுது. மொத்த நாடுமே சேர்ந்து நிலாவுல காலடி எடுத்து வைக்கிற ப்ராஜெக்ட்டுக்கு உழைக்கிறாங்க. 1969ல அதுல வெற்றியும் கிடைக்குது. அதுமட்டுமில்லாம அடுத்தடுத்து ஆறு தடவை நிலாவுல ஆட்களை இறக்கி கெத்து காமிக்கிறாங்க. ரஷியாவால இந்த போட்டில தாக்கு பிடிக்க முடியல. அதாவது நம்ம கூடவே வந்துட்ருந்தவன் திடீர்னு 100km ஸ்பீட்ல ஓடுனா எப்படி இருக்கும்? அதுக்கப்புறம் சீசீ இந்தப்பழம் புளிக்கும் கதையா ரஷியாக்காரங்க நிலாவை விட்டுட்டாங்க.

ஆனா ரஷியா சும்மா இருக்கல. செவ்வாய் கிரகத்துல soft landing பண்ண முத ஆளு ரஷியா தான் (1971). வெள்ளி கிரகத்துல இப்போ வரைக்கும் ரோவர் இறக்குன ஒரே ஆளு ரஷியா தான் (1975). முதல் விண்வெளி ஆராய்ச்சி நிலையம் அவுக தான். இவ்வளவு பெருமைக்கு சொந்தக்காரங்க கொஞ்சம் கொஞ்சம் போட்டிலேந்து விலகிட்டாங்க. உள்நாட்டு கலவரம் காரணமா இருக்கலாம். அதுவும் பாருங்க வெள்ளி கிரகத்துல tempreature 450'c அத தாங்கிக்கற மாதிரியான ஒரு ரோவர் 1975ல அனுப்பிருக்காங்க அப்டிங்கிறதே பெரிய விஷயம் தானே. இப்போ வரைக்கு வீனஸ் நிலப்பரப்பு பத்தி நம்மகிட்ட இருக்குற ஒரே போட்டோ ரஷியாவோட venera விண்கலம் மூலமாத்தான். நீங்க படத்துல பாக்குறது வீனஸ் ஃபோட்டோ தான். வியாழன் கிரகத்தை அமெரிக்கா 1973ல நெருங்கிருக்கு. அது ஒரு gas giant அப்டிங்கிறதுனால அங்க landing சாத்தியப்படல. சுத்தி சுத்தி வந்தாக.

நம்ம galaxyய தாண்டி voyager -1 பறந்துட்டருக்கு. 1977 ல லான்ச் பண்ணிருக்காங்க. ரெண்டே வருஷத்துல வியாழன் அப்புறம் மூணே வருஷத்துல சனி கிரகத்தையும் தாண்டினாலும் அது அம்பது வருஷம் கழிச்சி தான் நம்ம சோலார் சிஸ்டத்தை விட்டு வெளில போயிருக்கு. எவ்ளோ பெரிய மாத்திரை அப்படிங்கற மாதிரி எவ்ளோ பெரிய சோலார் சிஸ்டம். இன்னும் voyager தொடர்புல இருக்குது. அதாவது 2000 கோடி கிலோமீட்டருக்கு அந்த பக்கம் போயிடுச்சு. இருந்தாலும் சிக்னல் அனுப்பிச்சிட்டே இருக்குது.

அம்பது வருஷத்துக்கு அப்புறம் இப்போ நாம (பூமி) பாக்கும்போது விண்வெளி ஆராய்ச்சி அசுர வளர்ச்சி அடைஞ்சிருக்குனு தான் சொல்லனும். ரொம்ப சீக்கிரமாவே வேற்று கிரக வாசிகள் தொடர்பு கிடைக்கறதுக்கு வாய்ப்பு இருக்குது.

விண்வெளியை தெரிஞ்சிக்க நம்ம எடுத்துக்கிட்ட முயற்சியை நம்ம பக்கத்துல நம்ம கூடவே இருக்குற மனுஷங்க மனசையும் தெரிஞ்சிக்க முயற்சி பண்ணுவோம். என்ன சொல்றீங்க. சரிதானே?

வெள்ளி, செப்டம்பர் 22, 2023

கற்போம்


நேற்று முன்தினம் வாஷிங் மெஷினில் ஒரு கஜகஜா. complaint புக் செய்திருந்தேன். complaint புக் செய்வதற்கு நம்மவர்கள் அதிகம் ப்ரயத்தனப் படவைக்கவில்லை. WhatsApp bot வழியாக இரண்டு அல்லது மூன்று நிமிடங்களில் register ஆகிவிடுகிறது. சொல்ல வந்த விஷயம் அதுவல்ல.

அடுத்த நாள் இரவு எட்டு மணிக்கு கால் வந்தது. அதாவது நேற்று.

'சார், பக்கத்துல தான் இருக்கிறேன். இப்போ வரலாமா?'

எட்டு மணிக்கு கூட complaint அட்டென்ட் செயகிறார்களே என்று ஆச்சர்யம்.

'தாராளமா வாங்க' என்றேன்

வந்தவருக்கு இருபத்தைந்து வயதுக்குள் தான் இருக்க வேண்டும். எப்படியும் ஒன்னு அல்லது ஒன்றரை மணி நேரம் repair செய்வதற்கு செல்வழித்திருப்பார். நடுவில் ஒரு போன் கால்.

'கத்திரிக்காய் இருக்கும். போதும். அத வச்சு காரக்குழம்பு செய்ஞ்சிடலாம்' என்று யாரிடமோ பேசிக்கொண்டிருந்தார்.

'நீங்களே சமையலா?' என்று கேட்டேன்

'ஆமா சார். அஞ்சு பசங்க இருக்கோம். யாரு சீக்கிரமா போறாங்களோ அவங்க சமைச்சி வச்சிடுவாங்க'

'சீக்கிரம் அப்டினா? ஆறு மணிக்கா?'

'ஐயோ சார். சீக்கிரம்னா எட்டு அல்லது எட்டரை. நான் எப்படியும் ரூம் போறதுக்கு பத்தரை பதினொன்னு ஆகிடும்'

'ஹோட்டல்ல சாப்பிடறதில்லையா?'

'செட் ஆகலை. எல்லாத்திலேயும் அஜினோ மோட்டோ போடுறாங்க. எவ்ளோ தான் இந்த உடம்பு தாங்கும் சார். உடம்பு நல்லாருந்தா தான் வேலை செய்ய முடியும். வீட்டுக்கு பணம் அனுப்பலாம். உடம்பு போச்சுன்னா அவ்ளோதான்'

'இவ்ளோ நேரத்துக்கு அப்புறம் சமைச்சு சாப்பிடறது ரொம்ப கஷ்டம் ஆச்சசேப்பா? காலைல என்ன பண்ணுவீங்க?'

'பொதுவா இட்லி. இல்லனா இருக்கவே இருக்கு பேச்சலர் ஆபத்பாந்தவன். உப்புமா. அப்புறம் சேமியா'.

'சனிக்கிழமை லீவ் உண்டா?'

'அதெப்படி சார். அன்னைக்கு தான் நிறைய கால் வரும். ஆறு நாள் உண்டு'

'காலைல எத்தனை மணிக்கு ஆபிஸ்?'

'ஒன்பதரைக்கு உள்ள போய்டணும்'

படு ஆச்சர்யமாக இருந்தது. வாரத்தில் ஆறு நாட்கள். அதுவும் காலை ஒன்பதரையிலிருந்து இரவு பத்து மணி வரை. மாநகரம் முழுவதும் சுற்றி வர வேண்டும்.  வித விதமான கஸ்டமர்கள். ஒவ்வொருவரையும் அட்டென்ட் செய்ய வேண்டும். சில இடங்களில் வேலைப்பளு அதிகமாக இருக்கலாம். உடலுழைப்பைக் கோரும் வேலை. இரவு பத்து மணியானாலும் சமைத்து தான் உண்பேன் என்கிற health consciousness. இரவு ஒன்பது மணிக்கு கூட ப்ராடக்ட் பற்றி கேட்கும் கேள்விக்கெல்லாம் இன்முகத்துடன் பதில். அசரடித்தார்.

வேலையை விரும்பிச் செய்வது என்பது இதுதான். அலுப்பே தெரியாமல் ஓடிவிடும். உன் வயது என் அனுபவம் என்ற சால்ஜாப்பெல்லாம் விட்டுவிட்டு நாம் கற்றுக் கொள்ள எவ்வளவோ இருக்கிறது.

கற்போம்.

 

அநீதி

 

பல உணர்வுகளை அநீதி கடத்தியிருந்தாலும் என்னளவில் மூன்று விஷயங்களை கவனிக்க முடிந்தது. 

முதலாவது, பெற்றோரைப் பிரிந்து வெளிநாடுகளில் வாழும் பிள்ளைகள் மற்றும் பிள்ளைகளைப் பிரிந்து இங்கு வாடும் பெற்றோர் என இருவரது வாழ்க்கையின் காட்சியமைப்பு. வயதான அந்த பாட்டி இறக்கும் பொழுதில் குழந்தைகள் அருகில் இல்லாதது, அவரது இறந்த உடலைப் பாதுகாக்க தனியார் பிணக்கிடங்கு என யதார்த்தமானப் பதிவு. என்னதான் பாட்டி மிடுக்காகவும் படோபட வாழ்க்கையை வாழ்ந்தாலும் பேரன் பேத்திகளை பார்க்க முடியாத அந்த பரிதவிப்பு உண்மைக்கு மிக அருகில் என்றால் மிகையில்லை. எழுத்தாளர் இமையம் எழுதிய 'பிணத்துக்குச் சொந்தக்காரி' சிறுகதை நினைவில் வருவதை ஏனோ தவிர்க்க முடியவில்லை.

 


இரண்டாவது, கதையின் கதை பொருளாக எடுக்கப்பட்டிருக்கும் food டெலிவரி வேலை. food டெலிவரி ஆட்களை வைத்து வளர்ந்த ரெஸ்டாரன்ட்கள் ஒரு கட்டத்தில் கொத்தடிமைகள் போல் நடத்துகின்றன மற்றும் அவர்களை கொத்து கொத்தாக வேலை நீக்கம் செய்கின்றன. இதுவரை யாரும் பேசாத விஷயம் தான் என்றாலும் food டெலிவரி வேலையாட்களுக்கு குரல் எழுப்பும் அளவுக்கு காத்திரமான காட்சி அமைப்புகள் இல்லை. படத்தின் மையக்கரு இது இல்லை. பால்ய காலத்தில் தந்தை பட்ட அவமானங்களை தன் வாழ்நாள் முழுவதும் தூக்கி சுமந்து கொண்டிருக்கும் மனப் பிறழ்வு கொண்ட இளைஞனின் ஆத்திரமே அநீதியின் கரு. அர்ஜுன் தாஸ் அந்த வகையில் பொருத்தமான தேர்வு. இவரது அந்தகாரம் பற்றி தனிப் பதிவு எழுதியே ஆக வேண்டும்.

மூன்றாவது, காளி வெங்கட். தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடத்திற்கு என்று அளந்து வைத்தாற்போன்று சில பேர் இருப்பார்கள். தேங்காய் சீனிவாசன், வி.கே.ராமசாமி, தம்பி ராமையா, ஜெயப்பிரகாஷ் இன்னும் சிலர். அந்த வரிசையில் காளி வெங்கட். 'The silence of the lambs' என்கிற படத்தில் வெறும் இருபது நிமிடங்கள் மட்டுமே வந்து ஆஸ்கர் அவார்டை தட்டிச் சென்றிருப்பார் அந்தோனி ஹாப்கின்ஸ். அதற்கு சற்றும் குறையில்லாத தாக்கத்தை அநீதி படத்தில் காளி வெங்கட்டிடம் உணர முடிந்தது. அர்ஜுன் தாஸின் தந்தையாக பதினைந்து நிமிடங்கள் மட்டுமே வந்திருப்பார். 'தங்கப்பிள்ளை தங்கப்பிள்ளை' என்று அவர் தன் குழந்தையை கொஞ்சுவது அர்ஜுனுக்கு மட்டும் அல்ல நம் எல்லோருக்குமே அலாதி இன்பம். மளிகை காட்சி மட்டும் கொஞ்சம் சென்டிமென்ட் தூக்கல். இருந்தாலும் காளி வெங்கட்டின் அபிரிதமான கதாப்பாத்திர உருமாற்றம் என்பது அரிதினும் அரிது. பொக்கிஷம். ஏற்கனவே மெர்சலில் வரும் ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவமனை காட்சிகளிலேயே பிழிந்து எடுத்திருப்பார். இங்கு அதை விட பல படிகள் மேலே. நிறைந்து நிற்கிறார். படம் பார்த்து பல நாட்கள் ஆனாலும் தாக்கம் குறையவில்லை. காளி வெங்கட்டின் கதாபாத்திரம் மற்றும் அவரது நடிப்பு உங்களிடம் பல கலவையான உணர்வுகளை வெளிக்கொணர்ந்து கண்ணீர் வரவழைத்து விடும். சமீப காலத்தில் வந்த The best performance, காளி வெங்கட்.

உணர்வுகளை பாங்காக கடத்திய விதத்தில் நம் மனதினுள் சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொள்கிறார் இயக்குனர் வசந்தபாலன்

 Arjun Das Kaali Venkat Vasanthabalan #Aneethi #KaaliVenkat #arjundas Vasanta Balan

வெள்ளி, செப்டம்பர் 08, 2023

சாவிமாட்டிகள்

 

விகடனில் வெளிவந்திருந்த சிறுகதை. ஆசிரியர் நா.கோகிலன்.

நான்கு மணி நேரம் தினமும் பயணம் செய்யும் சென்னை லோக்கல் ட்ரெயின் பல போதனைகளைத் தந்துள்ளது. முன்னமே நான் கூறியது போல் சென்னையின் போதி மரம் இந்த லோக்கல் ட்ரெயின் தான். அரை மணி நேரம் தான் பயணிப்பீர்கள் என்றாலும் ஏறியதில் இருந்து இறங்கும் வரை அது உங்களுக்குள் கடத்தும் உணர்வுகள் பல.  மகிழ்ச்சி, நெகிழ்வு, புன்முறுவல், ஆதங்கம், கோவம், பொறாமை, பச்சாதாபம், எள்ளல், சோகம், மிதப்பு, நாணம் என இன்னும் பல உணர்வுகள்...அப்பப்பா ரோலர் கோஸ்டர் போன்று இருக்கும்.

ரயிலில் பயணம் செய்து வியாபாரம் செய்யும் தினசரி வியாபாரியான ஒரு பெண்ணைப் பற்றிய சிறுகதை தான் சாவிமாட்டிகள்.



ரயிலில் ஏறும் அவளுக்கு மாதாந்திர தொந்தரவு வருவது போன்று வயிறு வலிக்க ஆரம்பிக்கிறது. 25 ரூபாய்க்கு ஒரு நாப்கின் கூட வாங்க முடியாத அளவுக்குத் தான் அவளது சம்பாத்தியம். தன வாழ்க்கை மாறும் என்கிற நம்பிக்கையில் மற்றொரு ரயில் வியாபாரியான ஒருவனைத் திருமணம் செய்திருப்பாள். ஆனால் திருமணத்திற்குப் பின் அவன் குடிகாரன் ஆகி விடுகிறான். சாவிக் கொத்துக்களை விற்று இன்று எப்படியாவது பைசாவைத் தேற்றிவிட வேண்டும் என்று ஒவ்வொரு வண்டியாக ஏறுகிறாள். இறுதிவரை போனியாகவில்லை. சற்று நேரத்தில் தொடையிடுக்கில் பிசு பிசுப்பாக உணர ஆரம்பிக்கிறாள். அந்த நிலையில் நிறு கொண்டிருக்கும் ரயிலின் கழிவறையை, ஸ்டேஷன் வெயிட்டிங் ஹால் கழிவறை, ஸ்டேஷனில் இருக்கும் ஐந்தாறு தண்ணீர் குழாய்கள் என அவள் எடுக்கும் பிரயத்தனங்கள் அனைத்தும் விழலுக்கு இறைத்த நீர் போல் வீணாகிறது. ஸ்டேஷனில் இருக்கும் குழாய்களில் ஏன் தண்ணீர் வரவில்லை என்பதற்கான காரணமாக அரசாங்க அமைப்பில் உள்ள சுரண்டலை சந்தடி சாக்கில் எழுத்தாளர் சாடியிருப்பது ரசிக்க வைக்கிறது. அம்பது ரூபாய்க்கு கடன் கேட்க முயலுகிறாள். கிடைத்த ஐம்பதையும் சதை தின்னும் போலீஸ் பிடுங்கி கொள்கிறது. கையறு நிலையில் தரையில் தேங்கி நிற்கும் தண்ணீரை உபயோகியிக்க லாவகமாக குனியும் தருவாயில் போலீஸ் வந்து அவளை கஞ்சா விற்பவளாக சந்தேகித்து பிடித்துச் செல்கிறதாக கதை முடிகிறது. படித்து முடித்தவுடன் சற்று அசை போடுகையில், ரயிலில் ஏறியதில் இருந்து போலீஸ் இழுத்து செல்லும் வரை மல்லிகாவின் தோள் பின்னே நின்று நாம் அனைத்தையும் பார்த்தது போன்றதொரு உணர்வைக் கொடுக்கிறது. எழுத்தாளரின் மொழி நடைக்கு இது ஒரு சான்று.

பெண்களின் மாதாந்திர பிரச்சினையை அணுகியது கூட ஆச்சர்யம் தரவில்லை. அது ஒரு ஆணால் புரிந்துகொள்ளப்பட்டு பொதுப்புத்தியில் உரைக்கும் அளவுக்கு இலக்கியமாக மாறி நிற்பது எதிர்பாலினத்தின் மேல் கொண்ட மரியாதைக்கு சமகாலத்தின் சாட்சியாக நிற்கிறது என்றே இதை அவதானிக்கிறேன்.

ரயில் தண்டவாளத்தின் நடுவில் கையறு நிலையில் நிற்கும் நேரத்தில் வட்டிக்கு கடன் கொடுத்தவன், கணவனுக்கும் கடன் கொடுத்தவள் என்று மாறி மாறி இவளது நிலைமை புரியாமல் அலைபேசிக்கு அழைப்பு வந்து கொண்டே இருக்கிறது. ஏதும் செய்ய முடியாமல் செல்போனை அணைத்து வைக்கிறாள். அப்பொழுது 'ஒளியிழந்த கைப்பேசியை பார்த்த போது தான் அவளுக்குள் ஒளி பிறந்தது" என்பதும், பெண் போலீஸ் அவளது உடையை உருவி விசாரிக்கும் நேரத்தில் 'கண்ணீர் மட்டுமே அவளது உடலை மறைத்தது' போன்ற வசனங்கள் மிகவும் ரசிக்க வைக்கின்றன.

விளிம்பு நிலை மனிதர்களின் அவலங்களை சாட்சி படுத்திய வகையில் இது ஒரு நெகிழ்வான மற்றும் தவிற்க முடியாத சிறுகதை

வாழ்த்துக்கள் மற்றும் நன்றியும் நா.கோகிலன்

 

வியாழன், செப்டம்பர் 07, 2023

தமிழ் சினிமா ரிவல்யூஷன்


2012 வாக்கில் ஒரு சில படங்கள் தமிழ் சினிமாவில் வெளிவந்தது. மாற்று சினிமா என்ற சொல்லாடல் மிகைப்படுத்தப்பட்டதாக இருந்தாலும் அவற்றை மாற்று சினிமா என்று அழைப்பதில் தவறில்லை. காதல் என்கிற கான்செப்ட் இல்லாத படமே இல்லை என்னுமளவுக்கு காதலை புனிதப்படுத்தி படங்களாக எடுத்து தள்ளிக்கொண்டிருந்தனர். 'என்னடா பெருசா சொல்லப்போறீங்க?' என்கிற மன நிலையில் தான் சினிமாப் பிரியர்கள் இருந்தார்கள். அப்பொழுது வந்தவை தான் இந்த சினிமாக்கள்.

அட்டகத்தி.  அத்தனை நாட்கள் தமிழ் சினிமா, காதலை பல கோணங்களில் அணுகியிருந்தாலும், 'டேக் இட் ஈஸி' பாலிசியில் அணுகியது அது தான் முதல் முறை. நாயகனை ரீல் ஹீரோ என்று பறை சாற்றும் வகையில் 'அட்டகத்தி' என்று டைட்டில் பிளாக் முதல் எண்ட் க்ரெடிட்ஸ் வரை மிக ஜாலியாக இயக்கியிருப்பார் பா.ரஞ்சித். அந்த வகையில் தான் இயக்கிய அனைத்து படங்களுக்கும் ஏதேனும் ஒரு விருதை வாங்கி மாற்று சினிமாவுக்கான விதையைத் தூவிய பா.ரஞ்சித் அவர்களுக்கான முகவரியை அளித்தது 'அட்டகத்தி'



பிஸ்சா. தமிழ் சினிமாவில ஒரு சொல்லப்படாத பார்முலா இருந்தது. கிட்டத்தட்ட 95 சதவீத படங்கள் இந்த பார்முலாவை மீறியது கிடையாது. என்னவென்றால், படத்தில் ஒருவர் கேள்வி கேட்கிறார். அந்த கேள்விக்கான பதில் வெறும் வார்த்தைகளால் மட்டும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தால் அது பொய். அதே பதில், அவர்கள் சொல்ல சொல்ல காட்சிகளா விரிந்தால் அது உண்மை என்று எடுத்துக் கொள்ளலாம். இது எல்லா பபடங்களுக்கும் பொருந்தவில்லையென்றாலும் தமிழில் வந்த முக்கால்வாசி படங்களுக்கு பொருந்தும். ஆனால் அந்த ஸ்டீரியோடைப்பை உடைத்து வெளிவந்தவர் கார்த்திக் சுப்புராஜ் தான். படம் முடிந்தவுடன் 'என்னடா காத்து முழுக்க பூவை சுததிவிட்டிருக்கீங்க' என்கிற முனுமுனுப்பு இருந்தாலும் திரையில் மிரட்டிய விதம் வேறு லெவல். கார்த்திக் சுப்புராஜின் தமிழில் ஒரு பெரும் முகவரியை பெற்று தந்தது பிஸ்சா.

சூது கவ்வும். கொள்ளையடிப்பவனை இதுகாறும் தமிழ் கூறும் நல்லுலகம் வில்லனாகத்தான் பார்த்துவந்தது. அந்த பிம்பத்தை உடைத்து கேரக்டரைசேஷனில் காமெடியை நுழைத்து அந்த கொள்ளையனுக்கு ஒரு மாய காதலியையும் ஜோடித்து படம் முழுவதும் அதகளம் செய்திருப்பார் நலன் குமாரசாமி. கொள்ளையடிப்பதற்கு ரூல் புக்கெல்லாம் எழுதி மிகவும் ஜாலியான சினிமாவாக எடுத்திருப்பார்கள். நலன் குமாரசாமியின் முகவரி சூது கவ்வும். 

தெகிடி- மிக சாதாரணமாக ஆரம்பிக்கும் படம், ஒரு கொலையை பற்றி துப்பறிய ஆரம்பித்து அதன் பின் இருக்கும் மிகப்பெரிய இன்சூரன்ஸ் மோசடியை வெளிக்கொணரும். வித்தியாசமான இன்வெஸ்டிகேட்டிவ் த்ரில்லர் ஜானர். இயக்குனர் ரமேஷ் அவர்களின் முகவரி இது.

முண்டாசுப்பட்டி - பீரியட் காமெடி மூவி. பார்த்து பார்த்து செட் அமைத்திருப்பார்கள். விஷ்ணு விஷால் மட்டுமில்லாமல் காளிவெங்கட், ராமதாஸ் என பலருக்கும் மிகப்பெரிய ஒரு பிரேக் என்றால் அது முண்டாசுப்பட்டி. சிரித்து சிரித்து புண்ணாகியதென்றால் மிகையில்லை. ராட்சசன் என்கிற அருமையான சைக்கலாஜிக்கல் த்ரில்லரை கொடுத்த ராம்குமாரின் முகவரி முண்டாசுப்பட்டி.

இன்று நேற்று நாளை. தமிழ் சினிமா அதுவரை தொட்டுப்பார்க்காத ஜானர். டைம் மெஷின் டிராவல். கொஞ்சம் அசந்தாலும் இடியாப்பச் சிக்கலாகக்கூடும் கதையை எந்தக் குழப்பமும் இல்லாமல் பதமாக பரிமாறியிருப்பார் ரவிக்குமார். அதன் பின் பல டைம் ட்ராவல் வந்திருந்தாலும் இந்த படத்தின் சிக்கலில்லாத திரைக்கதையை எட்ட முடியவில்லை. இன்று அயலான் வரை வந்து நிற்கிறது. ரவிக்குமாரின் முகவரி இன்று நேற்று நாளை.

இறுதி சுற்று. மாதவனுக்கு ஒரு பெரிய கம் பேக் அளித்த மூவி. ரித்திகா சிங், தனது முதல் படத்திலேயே தேசிய விருது பெட்ரா மூவி. இண்டிபெண்டண்ட் மேக்கிங். தமிழில் சுதா கோங்குராவிற்கு இது முதல் படம் இல்லையென்றாலும் மிகப்பெரும் அடையாளத்தை அளித்தது. மற்றைய பெண் இயக்குனர்களுக்கு உத்வேகம் அளித்த படம் என்றால் மிகையில்லை.

பிஸ்சா 3 த மம்மி. 'என்ன புதுசா இருந்திடப்போது?' என்று பார்த்தால் கதை, திரில்லர், கரண்ட் ட்ரெண்டில் நடந்த ஒரு அத்துமீறல், மம்மி, எமோஷன் என்று எல்லாவற்றையுமே நன்றாக கனெக்ட் செய்திருந்தார்கள். அஸ்வின் காக்கமுனு தான் ஹீரோ. படத்தை மொத்தமா இவருதான் தாங்குறார். இவரு நடத்துற ரெஸ்டாரண்ட் கிட்சன் மற்றும் அஸ்வின் அறையில் நடக்கும் அமானுஷ்யங்கள் த்ரில்லர் வகை என்றால் இறுதியில் வரும் எமோஷன் காட்சிகள் நல்ல சென்டிமென்ட் ரகம். இயக்குனர் மோகன் கோவிந்த் அவர்களின் முகவரி இது.

மேற்கூறிய அனைத்துப் படங்களுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. அனைத்து படங்களும் அந்தந்த இயக்குனர்களுக்கு முதல் படம். சுதாவைத்தவிர. மேற்கூறிய அனைத்து இயக்குனர்களும் இன்று வெற்றி வாகை சூடியுள்ளனர். ஆனால் ஒவ்வொருவரும் தனது முதல் படத்திற்கும் படும் பாடு சொல்லி மாளாதது. முதல் காதல் போன்று முதல் படமும் என்றும் மறவாத ஒரு நினைவுதான். பா. ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ், ரவிக்குமார், ராம்குமார் இவர்கள் அடைந்த வெற்றி அளப்பரியது. இவர்கள் அனைவரையும் அறிமுகப்படுத்திய பெருமை திருக்குமரன் என்டர்டைன்மெண்ட் சி.வி.குமார் அவர்களுக்கு உண்டு. இவர்கள் அனைவருக்குமே முகவரியை கொடுத்தவர் என்கிற வகையில் தமிழ் சினிமாவின் அழியா முத்திரையைப் பதிக்கிறார் சி.வி.குமார்.

மென்மேலும் பல இளம் தலைமுறைக்கு வாய்ப்புகள் வழங்க வாழ்த்துக்கள்.

பிஸ்சா 3 - தி மம்மி


தமிழ் சினிமாவில ஒரு சொல்லப்படாத பார்முலா இருக்கு. கிட்டத்தட்ட 95 சதவீத படங்கள் இந்த பார்முலாவை மீறுனது கிடையாது. அது என்னன்னா படத்துல ஒருத்தர் கேள்வி கேக்குறாருனு வச்சிப்போம். அதுக்கு பதில் சொல்றவங்களோட காட்சிகள் அவங்க வாய்ல சொல்றதா  மட்டும் காட்சிப்படுத்தியிருந்தா அது பொய்யின்னும் அதே பதில அவங்க சொல்ல சொல்ல காட்சிகளா அத விரிச்சு காமிச்சாங்கன்னா அது உண்மைன்னும் எடுத்த்துக்கலாம். இது எல்லா படங்களையும் இல்லேன்னாலும் முக்கால்வாசி படங்கள்ல இதுதான் யுக்தி மற்றும் க்ளூ.



ஆனா இந்த விஷயத்தை முதல் முதலா சக்ஸ்ஸஸ்புல்லா உடைச்சது கார்த்திக் சுப்புராஜ். பிஸ்சா முதல் பாகம் படம் பாத்தவங்களுக்கு இது புரிஞ்சுருக்கும். கிட்டத்தட்ட ஒரு ஒரு மணி நேரம் பாக்குறவங்க காதுல பூ சுத்துனாரு அதுவும் எப்படி நம்மல்லாம் பயந்து சீட் நுனில உக்கார்ற அளவுக்கு என்கேஜ்ட் வச்சிருந்தாருன்னா பாத்துக்கோங்க. அப்படிப்பட்ட சக்ஸஸ் பார்முலா படத்தோட டைட்டிலை சுட்டு பிஸ்சா 2 த வில்லானு ஒரு படம் எடுத்தாங்க. ரொம்ப சூப்பர்னு சொல்ல முடியாட்டியும் மோசம்னு சொல்ல முடியாது. பட் முத படத்தோட எக்ஸ்பெக்டேஷன  இதால தாண்ட முடியல.


இப்போ வந்திருக்கிற பிஸ்சா 3 த மம்மி என்ன புதுசா இருந்திடப்போது அப்டினு பார்த்தா ஓரளவு நல்லாவே எடுத்திருக்காங்க. பிஸ்சா 1 ல த்ரில்லர் அப்புறம் கடைசி நிமிஷ ட்விஸ்ட் அப்டினு ரெண்டு விஷயம் நல்லாருக்கும். பட் பிஸசா 3 ல கதை, திரில்லர், கரண்ட் ட்ரெண்ட்ல நடந்த ஒரு விஷயம், மம்மி, எமோஷன் அப்டி எல்லாமே நல்லாவே கனெக்ட் பண்ணிருக்காங்க. அஸ்வின் காக்கமுனு தான் ஹீரோ. படத்தை மொத்தமா இவருதான் தாங்குறார். இவரு நடத்துற ரெஸ்டாரண்ட்ல சில அமானுஷ்யமான விஷயங்கள்லாம் நடக்க ஆரம்பிக்குது. அதற்கான காரணம் என்ன அப்படிங்கிற தேடல் தான் கதை. பிளாஷ் பேக்ல சொல்லப்படுற காரணம் சமீபத்துல நடந்த ஒரு மோசமான அத்துமீறலை பேஸ் பண்ணி அதுவும் கதைல ரொம்ப கரெக்ட்டா கனெக்ட் பண்ணிருந்த விதம் அருமை. ரெஸ்டாரண்ட் கிட்சன் மற்றும் அஸ்வின் ரூம்ல நடக்குற அமானுஷ்யங்கள் த்ரில்லர் வகைனா இறுதில வர எமோஷன் காட்சிகள் நல்ல சென்டிமென்ட் ரகம்.  

பிஸ்சா 3 தி மம்மி ஒரு நல்ல கதையம்சமுள்ள த்ரில்லர் மூவி