லேனா தமிழ்வாணனின் பயணக்கட்டுரைகள் அந்தக்காலத்தில் மிகப்பிரபலம். பயணம் செய்ய முடியாதவர்களுக்கு லேனாவின் பேனாவின் வழியாக சிங்கப்பூரையும், அமெரிக்காவையும், ஜப்பானையும் உத்தேசமாக கற்பனை செய்து ரசித்தனர். அந்த இடத்தையும் அதன் சிறப்பையும் ஒரு சுற்றுலா வழிகாட்டி போன்று வர்ணனை செய்திருப்பார்.
இந்த பயணக்கட்டுரைகளை அடுத்த நிலைக்கு எடுத்து சென்றவர் எஸ்.ரா. அவர் எழுதிய கட்டுரைகளில் பயணம் தான் உயிர்நாடி. அந்த பயணத்தில் சந்திக்கும் மனிதர்களையும் அவர்தம் வாழ்வியலையும் உணர்வுகளையும் பேசினால் அது எஸ்.ராமகிருஷ்ணனின் 'தேசாந்திரி'. எஸ்.ராவை பொறுத்தவரை பயணம் என்பது, முடிவெடுத்த அந்த நிமிடத்திலேயே எதனை பற்றியும் யோசிக்காமல் தொடங்குவது. உதாரணமாக எழுதிக்கொண்டிருப்பவருக்கு மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள ஒரு குக்கிராமத்திற்கோ அல்லது லடாக்கில் பனிப்பொழிவையோ காண வேண்டும் என்று தோன்றினால் பேனாவைக்கூட மூடாமல் எந்த ஒரு முன்னேற்பாடுமின்றி காலணி அணிந்து வெளியே கிளம்பிவிடுவது. தேசாந்திரி புத்தகம், பயணம் என்ற வார்த்தைக்கு நாம் வரையறை செய்து வைத்திருக்கும் அர்த்தத்தை மாற்றிவிடும் என்பதில் மறுபேச்சிற்கில்லை.
இவ்வாறு பயணம் மற்றும் பயணம் சார்ந்த எழுத்துக்களையும் ரசிப்பவர்களுக்காண விருந்து தான் 'ஏழு கடல் ஏழு மலை' என்ற நாவல். எழுத்தாளர் நரன். கொம்பையா என்ற ஒற்றை மனிதனை, அவனது வாழ்வை அவன் பயணிக்கும் வழித்தடம் மூலமாக அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பை உவகையாய்த்தருகிறது. கொம்பையாவின் பிறப்பு, அவர் அன்னை, சுதந்திரத்திற்கு முன் கிராமங்களில் ஆங்கிலேயர்கள் உதவியது, பண்ணையார் வீடு, அதுனுள்ளே நடக்கும் துரோகம் என போகிறபோக்கில் எந்த திணிப்பும் இல்லாமல் நம்மால் பயணிக்கமுடிகிறது. இலக்கில்லாமல் பயணம் செயகிறது.கதை தந்தை வழி மகன் வழி என இரண்டு காலங்களில் இட்டுச்செல்கிறது. மகன் வழியில் செங்கல் சூளைகளில் கொத்தடிமைகளாய் துன்பப்படுவர்களின் வாழ்வை கண்முன்னே நிறுத்துகிறது. கதைக்கு நியாயம் சேர்க்கும் வகையில் சித்திரங்கள். தந்தையானாலும் மகனானாலும் இருவரும் பயணம் செய்துகொண்டேயிருக்கின்றனர். மகன் கிடைக்கும் லாரி, பேருந்து என எல்லாவற்றிலும் பயணிக்க தந்தை வழியில் கொம்பையா மேற்க்கொள்வது நடை பயணம் மட்டுமே. பயணம் பயணம் என பயணம் மட்டுமே கதை முழுவதுமே. மனிதனின் நெருங்கிய நண்பனான மாடும் கொம்பையாவுடன் இறுதிவரை பயணிக்கிறது. மாடும், மாட்டைச்சார்ந்த அறிவியலையும், மாட்டுச்சந்தையில் நடக்கும் விறுவிறுப்பும் இதுவரை வந்திடாத புத்தாக்கங்கள். கொம்பையாவினால் ஈர்க்கப்பட்டு அவருடன் பயணம் செய்து வாழ்வியலை கற்றுக்கொள்ள முயல்கிறான் கரியன். பயணமே வாழ்வு. இறுதியில் கொம்பையா இன்றி அவனுக்கான பயணத்தை, வாழ்வைத்துவங்குகிறான்.
அவனுடன் நாமும் !!!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக