வியாழன், மார்ச் 17, 2022

சஸ்டைனபிள் சாத்தான்

Sustainable  என்கிற வார்த்தை சமீப காலமாக அதிகமாக உபயோகப்படுத்தப்படுகிறது. அதுவும் கடந்த 7 வருடங்களாக கொஞ்சம் ஜாஸ்தி. Sustainable  என்ற வார்த்தைக்கு விலாவரியாக நூறு பக்க அளவில்  விளக்கம் கொடுக்க முடியும் என்றாலும், ரத்த்தினச்சுருக்கமாக சொல்வதென்றால், எதிர்கால சந்ததியை மனதில் வைத்துக்கொண்டு இன்றைய தேவைகளைச் சுருக்கிக்கொள்ளவேண்டும் என்பதே. Less Consumerism அல்லது மினிமலிஸ்டிக் கான்செப்ட் போன்று சொல்லலாம். விஜய், இட்லி மூலம் விளக்கும் அந்த கம்மியூனிச சித்தாந்தம் என்றும் கூட சொல்லாம்.  

இவர்கள், அதாவது Sustainable  என்ற வார்த்தையை அதிகம் உபயோகிக்கும் மிராசுதாரர்கள் குறி வைப்பது 'கார்பன் உமிழ்வுகளை'. பெட்ரோல் டீசல் உபயோகப்படுத்தும் அனைத்து வாகனங்கள் இதில் குறிவைக்கப்படுகின்றன. மேலும் நிலக்கரி உபயோகித்து மின்சாரம் தயாரிக்கும் டெக்னலாஜியை பெட்ரோல் ஊற்றி கொழுத்த வேண்டும் என்பது இவர்களது கட்டுக்கடங்காத அவா. புரியும்படி சொல்வதென்றால் இந்தியாவின் மொத்த மின் உற்பத்தியான 4 லட்ச மெகாவாட்டில். 2.75 லட்ச மெகாவாட்டை உமிழ்ந்து கொண்டிருக்கும் Thermal power plantகளை அனைத்து வைக்க சொல்கிறார்கள். அணைத்து வைத்துவிட்டு சோலார், காற்று, கடல் அலைகள், நீர் மின் நிலையம் போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் மின்சாரம் தயாரித்துக்கொள்ளுங்கள் என்கிறார்கள். 2030 க்குள் 50 சதவீத உற்பத்தி இந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலமாக மட்டுமே தயாரிக்கப்படும் என்று பாரிசில் கையெழுத்தாகி விட்டது.

ஒருவேளை அனைத்து வாகனங்களையும் EV ஆக மாற்றினால், அவை அனைத்திற்கும் சார்ஜ் செய்வதற்கான சார்ஜிங் பாயிண்ட்கள், பெருகி கொண்டிருக்கும்  ஜனத்திரளுக்கான மின் தேவைகள் என  அதற்கான மின் உற்பத்தி கட்டுமானத்தில் நாம் வலுப்பெற்றிருக்கிறோமா என்றால் இல்லை. இவற்றையெல்லாம் 2030 க்குள் எப்படி செய்யப்போகிறோம் என்பது million dollar கேள்வி.

ஆனால்,

மேற்சொன்ன அந்த sustainable  என்ற வார்த்தையை உரக்கக்கூறிக்கொண்டிருக்கும் மிராசுதாரர்கள் அதிகமாக இருப்பது நம் நாட்டில் இல்லை. வெளிநாடுகளில். அதுவும் எந்த மாதிரியான நாடுகள் என்றால், வருடத்தின் பெரும்பாலான நாட்கள் பனி படர்ந்து மைனஸ் டிகிரியில் இருக்கும் மற்றும் வாழவே சாத்தியமற்ற மற்றும் வாழத்தகுதியே இல்லாத வெளிநாடுகள்.  ஒரு சராசரி மனிதன் மிகக்குறைந்த மினிமலிஸ்டிக் வாழ்க்கை வாழ்வதற்கும் அருகத்தையே இல்லாத நாடுகள் அவை. கிழக்கில் இருக்கும் ஜப்பான் நாடு மினிமில்ஸ்டிக் விஷயத்தில் கிங். அப்படியே  கிழக்கிற்கு முற்றிலும் எதிர்முனையில் நிற்பது மேற்கத்திய நாடுகள். ஜப்பானில் ஒரு மனிதருக்கு சராசரியாக 150 கிலோ குப்பை என்று கணக்கிலிட்டால், அமெரிக்கா, கனடா, UK போன்ற நாடுகளில், இது 1000 கிலோவாக இருக்கிறது. அங்கிருக்கும் ஒவ்வொரு வீட்டை பார்த்தாலே தெரியும். குளிர்காலங்களில் வீட்டை வெதுவெதுப்பாக வைப்பதற்கு பேஸ்மெண்டில் ஜெனெரேட்டர்கள். அவை ஒரு மாதத்திற்கு விழுங்கும் மின் சக்தி அல்லது எரிசக்தி என்பது இங்கு வாழும் மக்கள் ஒரு வருடத்திற்கு உபயோகப்படுத்தும் ஆற்றல். ஆனால் கிஞ்சித்தேனும் வெட்கமின்றி இந்த வளர்ந்த நாடுகள், அதாவது developed nations தற்போது வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகளை பார்த்து கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்த சொல்வது நகை முரண். உண்டு களித்து மீதம் இல்லை என்ற பதபதைப்பு. அதனால் தான் சாத்தான் வேதம் ஓதுகிறது. 

இருபது வருடங்களுக்கு முன், எவ்வாறு அழகு சாதனங்களை சந்தைப்படுத்த, உலக அழகி,பிரபஞ்ச அழகி என்று பத்து பன்னிரெண்டு இந்தியப்பெண்களை தேர்வு செய்து நூறு கோடி இந்தியர்களை   ஏமாற்றினார்களோ அது போலவே இவர்கள் இப்போது குறி வைத்திருப்பது பள்ளி கல்லூரி மாணவர்கள் போன்ற இளம் தலைமுறைகளை. Sustainabale என்ற தலைப்பில் போட்டி வைப்பது, தீ பற்றி எரிய கூடிய எதையாவது ஒன்றை பேட்டரியில் ஓட வைத்துவிட்டால் ஆஹா ஓஹோ என்று புகழ் பாடி ஒரு இன்னோவேஷன் அவார்டை அளிக்கவேண்டியது. அந்த பேட்டரிக்கு மின்சாரம் எங்கிருந்துஹ் என்று பார்த்தால், அந்த பக்கம் ஜெனரேட்டர் இருக்கும். 

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் சக்தி என்ற தத்துவம், வளரும் மற்றும் ஏழை நாடுகள் மீது பெருத்த நிதிச்சுமையைத்தருகிறது என்று ஆப்பிரிக்க கண்டத்தின் உள்ள ஒரு நாட்டின் பிரதமர் அறைகூவல் விடுக்கிறார். கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்தும் கடமை நம் எல்லோருக்கும் இருக்கிறது என்பதில் எந்த வித மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், இங்கிதமே இல்லாமல் இந்த சாத்தான்கள் நமக்கு சொல்லிக்கொடுப்பது தான் கடுங்கோபத்தைத்தருகிறது. குறைந்தபட்ச குற்ற உணர்வு கூட இல்லாத கயவர்கள். 

வடக்கு வாழ்கிறது. தெற்கு என்றுமே உழைத்து தேய்கிறது.

ஹேப்பினஸ் இன்டெக்ஸ்


ஹேப்பினஸ் இன்டெக்ஸ் அப்டினு பாத்தோம்னா இந்தியாவுக்கு 139வது இடம் கொடுத்துருக்காங்க.

'என்னத்தே' கண்ணையா  மாதிரி நம்மாளுங்க எப்பவும் என்னத்த என்னத்தனு ஒரு சலிப்புல இருப்பாங்க. வேலைக்கு போற மனநிலைல இருக்கிறவங்களோட நிலைலேந்து பார்த்தா, இந்த ஹேப்பினஸ் இன்டெக்ஸ் 139வது இடத்துலலாம் இருக்கக்கூடாது. அப்டியே அலேக்கா தூக்கி கடைசி இடத்துல உக்கார வச்சிரணும். 

ஏன் சொல்றேன்னு கேட்டீங்கன்னா, வாரத்துல ஆறு நாளும் வேலை. கூப்டா ஏழாவது நாளும் போய்ட்டு வரணும். IT (அது தனி கஷ்டம்) தவிர்த்து பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் மற்றும் மத்திய அலுவலகங்கள் பூராவும் இப்படியேதான் இயங்கிட்ருக்கு. வீட்டுல இருக்குறவங்களோட நேரத்தை எப்படி செலவு பண்றது. இதுல பாத்தீங்கன்னா வேலைக்கு போறதுல பாதிபேர் வீட்டுல தொல்லை அதிகமா இருக்குன்னுதான் ஆறு நாள் வேலைக்கு ஓகே னு சொல்லிடறான். அவன் கவலை அந்த ஏழாவது நாள வீட்டுல எப்படி கழிக்கிறதுனு

உலகமே மூணு அல்லது நான்கு நாள் வேல பாத்தா போதும். மித்த நாள் வீட்டுல உக்காந்து எதையாவது நோண்டுனு யோசிக்கிற நேரத்துல இங்க நம்மள பாடப்படுத்துறாய்ங்க. ஒரு வருஷத்துக்கு 52 சனிக்கிழமை காலி. இப்டியே ஒரு 30 வருஷம் வேலை பாத்தா, தோராயமான 1500 நாள் காலி. சம்பளம் வருதுல்ல அப்டினு கேக்குறவங்களுக்கு, அதை வச்சிட்டு என்ன பண்றது. காலத்தோட செலவு பண்றதுக்கு நேரமும் இல்லை. உடம்புல தெம்பும் போயிருக்கும். 

கண்ணதாசன் சொன்னமாதிரி 'உனக்கும் கீழே உள்ளவர் கோடி' அப்டினு வாரத்துல ஏழு நாளும் (பால், பேப்பர், கடைகள்) வேலைக்கு போறவங்கள நினைச்சிட்டு நம்மல நாமே ஆத்துப்படுத்திக்க வேண்டிதான்.

 

2) 

இந்த whatsapp, facebook, twitter லாம் ஆப் பண்ணி வச்சா எதோ உலகமே அமைதியா இருக்குற மாதிரி ஒரு feeling  கிடைக்கும்ல. அதுமாதிரி, ஆபிஸ்லேயும் ஒருத்தன் இரெண்டுபேரு இருப்பாங்க. ஹாய், எப்படி இருக்கீங்க அப்டினு குசலம் விசாரிச்சிட்டு, அவனுக்கு promotion  குடுத்திருக்காங்க, இவனுக்கு அப்ரைசல்ல நல்ல மார்க் குடுத்திருக்காங்க, அவ பாரின் டூர் போனா, அந்த கேபின் ல ஒரு புது ஜோடி உருவாகிருக்குனு வந்து நியூஸ் வாசிச்சிட்டு நம்மல வேல பாக்க விடாம ஏதாவது யோசிக்க வச்சிட்டு போய்டுவாய்ங்க. இவங்கள கண்டுபிடிச்சு அந்த hai லேயே ஒரு bye சொல்லி அனுப்பிச்சிட்டோம்னா, வலம்புரி ஜான் சொல்றமாதிரி, 'வருடத்தில் இந்த நாள் மட்டுமல்ல. எல்லா நாளும் பொன்னாளே', அப்டினு சொல்லிடலாம்.

 


3)

ராஜராஜேச்சோழன் வர்ணாஸ்ரமத்தை கடைபிடித்தாரா என்ற கேள்வி எழப்போய், ஒரு நண்பனிடம் அளவளாவிய ஐந்து நிமிடங்களில், முத்தரையரின் வரலாறு மற்றும் அவர்கள் 300 ஆண்டுகள் டெல்டா நிலங்களை ஆண்ட விவரங்கள், களப்பிரர்கள் தமிழகத்தை ஆண்ட 350 ஆண்டுகள்பூம்புகாரை தலைமையிடமாகக்கொண்டு தென் தமிழகத்தை கட்டுக்குள் வைத்த சோழர்கள்கொடும்பாளூரில் பெண் எடுத்தது, திருப்புறம்பியம் போர், பாண்டியர்கள், வைதீகத்திற்கு எதிர்ப்பாக இருந்த சமண மற்றும் பௌத்தர்கள், சரபோஜி, சிதம்பரத்தில் வாழும் ராஜராஜ சோழனின் வம்சாவளிகள் என உரையாடல் ஜெட் வேகத்தில் எங்கெங்கோ போய் வந்தது.

அடுத்த அரை மணி நேரத்தில் பேசிய மற்றொரு நண்பன் வாயிலாக, போர்காலத்தில் பங்குச்சந்தை நிலவரம், கடந்த காலங்களில் பங்குச்சந்தை எப்பொழுது எவ்வளவு சரிவைச்சந்தித்தது. எவ்வாறு பணமுதலைகள் ஒரு நிறுவனத்தின் பங்கில் முதலீடு செய்து அதை பற்றி மாய்ந்து மாய்ந்து பாராட்டி பங்கை manipulate செய்கிறார்கள், அதன் மூலம் எவ்வாறு பங்கின் மதிப்பை கூட்டுகிறார்கள், பின்பு  சம்பாதித்து சத்தம் காட்டாது பங்கை விட்டு வெளியேறுகிறார்கள், அதே பங்கு எவ்வாறு வீழ்ச்சி அடைகிறது, volume of transactions இன் முக்கியத்துவம் என்ன என்று ஒரு குட்டி உரை நிகழ்த்தி விடைபெற்றான்.

கற்றது கைமண் அளவு என்றும் எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா என்றும் நினைக்கத்தூண்டிய ஒரு பாசிடிவ் விடியல்.

நட்பை பகிர்ந்து போற்றுவோம்.