திங்கள், பிப்ரவரி 25, 2013

சில இத்யாதிகள்


உலகில் இருக்கும் அனைத்து பொறியியல் பிரிவுகளிலும், மிக மோசமான ஒரு சுற்றுப்புறம் மற்றும் சூழ்நிலையில் வேலை செய்வது கட்டுமான பொறியாளர்கள் மட்டுமே என்பது எனது தாழ்மையான கருத்து. கவனிக்க பொறியியல் துறை மத்தியில் மட்டுமே இந்த ஒப்பீடு.. சுட்டெரிக்கும் வெயில், புயல் மழை, குப்பை, மண், தூசி, மற்றும் இயற்கை சீற்றங்களை உள்வாங்கிக்கொண்டோ அல்லது சகித்து கொண்டோ வேலை செய்தாகவேண்டிய கட்டாயம் கட்டுமான பொறியாளர்களை மட்டுமே சாரும். கட்டுமான பொறியாளர்கள் என்று நான் இங்கு பொதுவாக குறிப்பிடுவது சிவில், மெக்கானிக்கல், மற்றும் எலக்ட்ரிக்கல் துறைகளை. மின் நிலையங்களோ, கப்பல் கட்டுமான தளங்களோ, தேசிய நெடுஞ்சாலை, மெட்ரோ என எந்தவொரு வேலையாகட்டும் இவர்களின் பாடு சொல்லி மாளாது.
வாரத்திற்க்கு ஐந்து நாள் மட்டும் கம்ப்யூட்டர் பொட்டியை தட்டும் வேலையை விட்டுவிட்டு, வாராத்தின் ஏழு நாளும் வேலை செய்யவேண்டிய கட்டாய நிலையை எண்ணி நொந்து கொள்ளாத நாளே இல்லை எனலாம். வாரத்தின் எல்லா நாட்களும் திங்கள் கிழமையாகவே தோன்றுவது ஒரு நரக வேதனை. இக்கரைக்கு அக்கரை பச்சை தானேன்றாலும், இங்கு கரையே இல்லையே காலூன்ற. வந்து பார்த்தாலன்றி முழுவதும் உணர்ந்து கொள்ளல் சிரமம். அதுவும் கார்பரேட் வசதிகளை சில காலம் அனுபவித்து விட்டு இந்த கச்சடாவில் மீதி வாழ்வை கழிப்பது நித்தம் நித்தம் ஒரு சாதனையாகவோ அல்லது சோதனையாகவோ இருக்கிறது. தற்சோதித்ததில் சில.

1.   கட்டுமான தளங்களில் இருக்கும் இந்நிறுவனங்களில், இயற்கை உந்துதலை கழிப்பதற்கு ஏதேனும் அடிப்படை வசதிகள் இருந்ததேயானால் அதை உலக அதிசயங்களில் ஒன்றாக கருதலாம். ஏனெனில் ஒரு நாளின் தொண்ணூறு சதவீதத்தை பகலவனின் நேர் கண்காணிப்பில் கழிப்பதால், அங்கு வளரும் மரம் செடிகளுக்கு இயற்கை உரம் கிடைக்கப்பெறுவதற்கு இதை ஒரு மறைமுக ஏற்பாடாக இந்நிறுவனங்கள் கருதுகின்றன.

2.   தண்ணீர் தண்ணீர் என்று ஒரு படம் கி.மு. வில் வந்தது. படத்தை பார்த்த எல்லோருக்கும் தாகத்தை உணர வைத்திருப்பார் இயக்குனர் சிகரம். அது போல் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தண்ணீர் தண்ணீர் என்று தேடி பார்த்தாலும் 105 டிகிரியின் கானல் நீரைத்தவிர வேறெதுவும் தென்படாது. வருடத்தின் 365 நாளும் மேன் Vs வைல்டு பியர் கிறில்ஸ் போல தண்ணீர் பாட்டிலுடன் அலைவது சாத்தியப்படாத ஒன்று.

3.   நம்ம வீட்ல ஒருத்தர் நான் தூங்கின பிறகு வந்துட்டு காலைல எந்திக்கிறதுக்கு முன்னாடி போறாரே? அவரு யாரு மம்மி?. அவர் தான்மா உங்க அப்பா. சிவில் இஞ்சினியரா வேல பாக்குறாரு.

இது ஏதோ மிகைபடுத்தபட்ட நகைச்சுவையாக தோன்றலாம். ஆனால் வாரத்தின் ஏழு நாட்களும் விடுமுறையே இன்றி காலை ஏழு முதல் இரவு வரை சைட்டில் காலம் தள்ளும் அனைவரும் இந்த கேள்வியை அனுபவித்திருப்பார்கள்.

4.   Social Life’ என்று அழைக்கபடும் சமூக வாழ்க்கைக்கு சிறிதும் இடம் கொடுக்காத தொழில் இது. ஏன்? குடும்ப உறுப்பினரிடம் கூட நேரம் செலவிட முடியாது. உறவினரின் நல்லது கெட்டது என்று எதுவானாலும் கேள்விக்குறிதான். 90 சதவீத கட்டுமான பணிகள் நகரத்தின் எல்லைக்கு பல மைல் தொலைவில் அமைந்திருப்பதால் (சுற்றுப்புற சூழல் காரணமாக) ஒரு முறை வேலைக்கு சென்று வருவதற்கே நித்திய கண்ட பூர்ணாய்சாகிவிடுகிறது. வீட்டிற்கு அன்றாடம் தேவையானவற்றை வாங்குவதற்கே அல்லாத வேண்டியுள்ள நிலைமையில் மற்றவைக்கு போதிய நேரம் கிட்டுவதில்லை.

5.   முன்பு பார்த்த மென்பொருள் வேலையில் நானும் கம்ப்யூட்டர் பொட்டியும் சில எருமை மாடுகளுடன் (டேமேஜர்) அன்றைய பொழுது கழிந்துவிடும். ஆனால் இங்கு வந்த பிறகு ரெட்டேரி லாரி டிரைவர் முனியாண்டி முதற்கொண்டு நொய்டா பொது மேலாளர் தாஸ் வரை பாலோ அப் என்ற பெயரில் போனை போட்டு அவனுக்கு நமைச்சல் கொடுத்து பின் பன் வாங்குவது அலாதி எரிச்சல்.

6.   லஞ்சத்தின் புகலிடம் இந்தத்துறையே. நுழையும் வாயிலில் இருந்து வெளியேறும் கழிவு வரை லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. பத்து ரூபாயிலிருந்து பத்து கோடி வரை. ஒரு டீயிலிருந்து கார் வரை கூச்சமின்றி பிச்சையெடுக்கிறார்கள். அதுவும் செய்வதையெல்லாம் செய்துவிட்டு, நெற்றியில் திருநாம பட்டை, கழுத்தில் ருத்திராட்ச கொட்டை, சீசன் தவறாது மாலை, அன்னை தெரசா காந்தி போல அறிவுரை சஷ்டியை நோக்க’, ‘முருகனை கூப்பிட்டு என்ற மொபைல் ரிங்க்டோன்கள். அப்பப்பா இவர்கள் அட்ராசிட்டி தாளவில்லை.

7.   ஒருவேளை நீங்கள் ஹரிச்சந்திரன் போல் நேர்மை சத்தியம் நியாயம் என்று சூளுரைப்பவரா? இந்த தொழிலுக்கு சற்றும் லாயக்கில்லாதவராக அறியப்படுவீர்கள். விடுகிற ஒவ்வொரு மூச்சுக்கும் ஒரு பொய். பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து பொய்யிலே இறக்க கடவது. நாளையே தாஜ்மஹால் கட்ட முடியுமா என்று கேட்டால், நாளைக்கு என்ன, இன்னைக்கு சாயங்காலத்துக்குள்ள முயற்சி பண்றேன் என்ற சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். கேட்டால், ட்ரைனிங் கொடுக்கறாராம். போடா ங்கோ....

8.   திட்டியவுடன் கோவம் வருகிறதா? சுடுசொல் சொன்னால் பதிலடி கொடுக்க தோன்றுகிறதா? இது போல் வேறு ஏதாவது, வெக்கம் மானம், சூடு, சுரணை இத்தியாதி என இருந்தால் தயவு செய்து அதை வீட்டில் வைத்துவிட்டு வரவும். அதையும் மீறி எடுத்து வந்தால் நாலாக மடித்து சட்டை பைய்யில் போட்டுக்கொள்ளவும். பின் விளைவுகள் விளக்கமுடியாதது. வஞ்சம் வைத்து காலை வாரும் ஓநாய் கூட்டம் இங்கு அதிகம்.

9.   உலகத்தில் ஏதோ எல்லா பெண்களுமே மாயமாய் மறைந்து ஆண்கள் மட்டுமே இருப்பது போன்ற ஒரு மாய தோற்றத்தை தருவது. ஏற்கனவே ஆணாதிக்க மிக்க சமுதாயத்தில், சிறிதும் பெண்களை சீண்டாத அல்லது கருத்துக்கு மதிப்பு கொடுக்காத களம். அதிகமாக இரண்டு சதவீதத்திற்கும் குறைவான பெண்களை கொண்டது இந்த கட்டுமானத்துறை. .

இவற்றை நினைத்து தினம் நொந்து கொண்டிருக்கும் அதே வேளையில், பூங்கா ஸ்டேஷன் சப்வேயில் நாள் முழுதும் நின்றுகொண்டு காலை நான்கு பத்து ரூபாய், மதியம் ஐந்து பத்து ரூபாய் இரவு ஆறு பத்து ரூபாய் என்று விற்கும் சமோசாக்காரனும், சேத்பட் ரயில்வே ஸ்டேஷனின் பிளாட்பார்மில் இரவு வெறுந்தரையில் படுத்துறங்கும் நாடோடி மக்களும், சத்யம் தியேட்டர் அருகில் இருக்கும் உஷா அப்லயன்சஸ் கடைக்கு எதிரில் தார் ரோட்டில் கொசுக்கடியில் புட்டி பாலை குடித்து கொண்டே வெட்டவெளியில் தூங்க முயற்சிக்கும் கைக்குழந்தையும், ஒவ்வொரு ஸ்டேஷனிலும் தட்டு தடுமாறி ரயில் பெட்டியை தடவிக்கொண்டே ஏறி இறங்கி கட்டை குரலில் ஒருவ்ர் தோளை ஒருவர் பிடித்துக்கொண்டே மொபைல் கவர், டார்ச் லைட் என விற்கும் கண் தெரியாதவர்களும், காலை ஐந்து மணிக்கே பஸ் வசதியில்லாமல் ஏழு கிலோமீட்டர் தூரம் நடந்து வந்து மீஞ்சூரில் ரயிலை பிடித்து அத்திப்பட்டில் இறங்கி ஷேர்ஆட்டோவை பிடித்து வெறும் இருநூறு ரூபாய்க்கு சித்தாள் வேலை பார்க்கும் என் அம்மா வயதுடைய பெண்கள், அங்கேயே நான் மினரல் வாட்டரில் தண்ணீர் குடிக்கும்பொழுது டேங்கர் லாரியின் பைப்பை திறந்து தண்ணீர் குடிக்கும் மேஸ்திரி வரை ஒவ்வொருவரும் தலையில் குட்டி நிதமும் ‘You are Gifted’ என்று ஞாபகப்படுத்துகிறார்கள்.

திங்கள், பிப்ரவரி 04, 2013

யு ஹெவ் நாட் சீன் லைஃப்


புத்தகம் நல்ல நண்பன் மட்டும் அல்ல, நல்ல நண்பர்களையும் பெற்று கொடுக்கும் என்பதை சில காலமாக எனக்கு உணர்த்தி வருகிறது. தினமும் வீட்டிலிருந்து  மின்சார ரயிலில் அலுவலகம் சென்றடைய குறைந்தது ஒன்றரை மணிநேரம் பிடிக்கும். கவனிக்க, குறைந்தது. அதிகபட்சம் இரண்டு மணிநேரம். இரு வேளையும் கணக்கில் கொண்டால் சுளையாக நான்கு மணிநேரம். பயண நேரத்திற்க்கு துணையாக அன்றைய நாளிதழ் மற்றும் புத்தகம் சிற்சில அரட்டைகள். அப்படி ஒருமுறை சதுரகிரி என்ற புத்தகத்தை படித்து கொண்டிருந்த போதுதான் ஒருவர் அறிமுகமானார்.  

இதுல சதுரகிரி பத்தி எல்லா விவரமும் இருக்கா?’.

ஆமா, சதுரகிரிக்கு எப்படி போகணும், எப்போ போகணும்னு பல விஷயம் இதுல கொடுத்துருக்காங்க. ஒரு ட்ரிப் அடிக்றதுக்கு யூஸ்ஃபுல்லா இருக்கும்.

சதுரகிரி போறது நம்ம கைல இல்லை சார். அழைப்பு வந்தா மட்டும் தான் சித்தியாகும் என்று மேலே கை காமித்தார்’.

ஆமோதிக்கும் விதமாக புன்னகைத்தேன்.

இப் யு டோன்ட் மைண்ட், கொஞ்சம் படிச்சிட்டு தரேளா?.’

சந்தோஷமா கொடுக்றென் என்று இப்படியாக ஆரம்பித்தது தான் அந்த உரையாடல்.

அதன் பின்பு, பார்க்கும்போதெல்லாம் ஏதோ ஒரு டாபிக்கை நான் கிளறிவிட, அன்று முழுதும் அக்னிபுராணம், மகாபாரதம், ராமாயணம், தேவி மகாத்மியம், எரிக் வான் லஸ்ட்பேடர் நிஞ்சா, ராபர்ட் லூட்லமின் பார்ன் சீரிஸ், விதெரிங்க் ஹைட்ஸ், பொன்னியின் செல்வன், கல்கி, திருவரங்கன் உலா, யுக்தி கல்பதாரு என்ற இந்திய கப்பல் கட்டுமான நுண்கலை, ஹராகே என்ற ஒரு ஜப்பானிய கலை, யோகாசனம், டெலெஸ்கோப், பிரணாயாமா, சாய்பாபா, அஸ்ட்ரோலோஜி, ராசிக்கல், தபேலா, இந்திரா சௌந்தராஜன், புக் ஃபேர், என்று அந்த நாள் கழியும்.

அதேன் போன்று இன்னொரு முறை சிவகாமியின் சபதம்- ஒன்றாம் பாகம் படித்து கொண்டிருந்த நேரம்.

அருகில் அமர்ந்திருந்தவர் அந்த புத்தகத்தையே முறைத்து கொண்டிருந்தார். அது ஒரு அரத பழைய புத்தகம். கல்கியில் கி.பி யில் வெளிவந்த சிவகாமி சபதத்தின் தொகுப்பு. தாளை மடக்கினால் ஒடிந்து விடுமோ என்று ஒரு பயம் ஏற்படும்.

அடுத்த நாளும் அதே போல் அந்த புத்தகத்தை முறைத்து பார்த்தவர்,

இது என்ன புக் சார்? என்றார்.

சிவகாமியின் சபதம்- தொகுப்பு ஒன்று சார்.

இது எங்க கிடைக்கும் சார்’.

இத நான் ஒரு லைப்ரேரில எடுத்தேன். முருகன் லைப்ரேரினு ஆர்யா கவுடா ரோட்ல இருக்கு என்றேன்.

எனக்கு ரொம்ப நாள உங்க கிட்ட கேக்கணும்னு ஆசை. இது மாதிரி பழைய புத்தகங்கள் கிடைக்குமா சார்.? என்றார்

நீங்க ரொம்ப பொதுவா கேக்றீங்க சார். என்ன புத்தகம்னு சொல்லுங்க. கிடைக்குமானு பாக்ரேன்.?

ரொம்ப நன்றி சார். நான் ஏன் பிறந்தேன் அப்டினு எம்.ஜி.ஆர். எழுதின சுயசரிதம். கொஞ்சம் கிடைக்குமானு பாருங்க என்றார்.

எங்க வேலை பாக்றிங்க சார்?’

இதோ இந்த பார்க்ல இறங்கி கொஞ்ச தூரம் போனவுடனே வருதே, கவர்ன்மெண்ட் ஹாஸ்பிடல். அங்க தான். என்றார்.

சரி சார். கிடைச்சா சொல்றேன் என்று செல் நம்பர் வாங்கி கொண்டு ஸ்டேஷனில் இறங்கி விட்டேன்.

அந்த புத்தகத்தை பற்றி லைப்ரேரி, புத்தக சந்தை மற்றும் நெட்டில் தேடிய பிறகுதான் தெரிந்தது, அந்த புத்தகத்தின் பதிப்பு ஒனர்ஷிப் ப்ராப்ளத்தால் நிறுத்தப்பட்டிருக்கிறது என்று.

அந்த தகவலை ஒரு சில நாட்கள் களித்து அவரிடம் பகிர்ந்து கொண்டபோது, பரவால்ல சார். நானும் கேள்விபட்டேன். பட், இந்த புத்தக சந்தைல அவரோட எல்லா புக்கும் எடுத்துட்டு வந்துட்டேன் என்றார்.

கே.பி..ராம்கிருஷ்ணனுடைய (மெய்க்காப்பாளர்) இரண்டு மூன்று புத்தகங்கள், மற்றும் சில ஆசிரியர்களின் (எம்.ஜி‌.ஆர்) புத்தகங்கள் என்று வாங்கி வைத்திருந்தார்.

வேணுமா சார்?’ என்று இரண்டு புத்தகத்தை நீட்டினார்.

அப்பா வயதை ஒட்டியிருந்தார். அடுத்த தலைமுறையின் விளிம்பு. நான் இந்த தலைமுறையின் தொடக்கம். இந்த தலைமுறை இடைவெளியை கூட இந்த புத்தகம் அநாயசமாக நிரப்பி விடுகிறது.

வாங்கி புரட்டிக்கொண்டே, நீங்க ஹாஸ்பிட்டல்ல என்னவா இருக்கீங்க சார்?’

நுரையீரல் பாத்துகிறேன் சார்.

ஒரு கவர்ன்மெண்ட் டாக்டர், அதுவும் எம்.டி,, ஸ்பெஷலிஸ்ட் இவ்வளவு அடக்கமாக தன்னை தெரிவித்துக்கொண்டது சற்றே அதிர்ச்சியாக இருந்தது. ஏதேனும் நிர்வாக வேலையில் இருப்பார் என்றே கணித்தேனே தவிர, ஒரு ஸ்பெஷலிஸ்டாக எதிர்பார்க்கவில்லை. ஆளை பார்த்து எடை போட கூடாது என்று தலையில் குட்டி கொண்டேன்.

பேச்சு வெவ்வேறு களங்களை சந்தித்து கடந்தபொழுது, அவரது கை விரல் சற்றே வளைந்திருப்பதை கவனித்தேன்.

, இத பாக்கிறீங்க்ளா சார், அதுய் ஒரு பிளேன் ஹைஜக்லா மாட்டிக்கிச்சு என்றார் சாதாரணமாக.

என்னடா இவர், அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அளிக்கிறாரே என்று, எப்போ சார்?’ என்றேன்.

இந்த கந்தஹார் ஹைஜக், ஞாபகம் இருக்குதா? என்றார்.

ஏதோ மேகமூட்டமாக நினைவில் நின்றது.

அது தான் சார். இந்த அம்ரிட்சர், லாகூர், துபாய்லாம் சுத்திட்டு போயி கந்தாகர்லா நிப்பாட்னானே? அது.

ஓரளவு ஞாபகம் வந்தது. அதுல எப்டி சார் நீங்க?’

ஹாஹாஹா என்று சிரித்தார். முதல்ல இந்தியன் ஆர்மில இருந்தேன் சார். குடியில்லாம குளிர சமாளிக்க முடியல. நான் குடிக்காத குடிமகன். வெளிலே வந்துட்டேன்.

சற்றே இடைவெளிவிட்டு தொடர்ந்தார்.

இதற்கே இப்படி திகைச்சுட்டா எப்டி என்றவர் தொடர்ந்து, இங்க பரவால்ல சார். வெறும் பாலைவனத்துல சுட்டெரிக்கிற வெயில்ல முடியல சார்.

அடுத்த அதிர்ச்சியாக இருந்தது. ஏதேனும் ஒரு கினிக்கை போட்டு காலை மாலை காசை கல்லாவில் கட்டுவதை விட்டுவிட்டு, ஆர்மி, பாலைவனம் என்றே திகில் கொடுத்துக்கொண்டிருந்தார்.

கேள்வி கேட்குமுன் அவரே தொடர்ந்தார்.

ருசியா ஆப்கான் போர் இல்ல. அது சம்பந்தமா NATO Peace Keeping Force ல போய்ட்டு வந்தேன் சார். விருப்ப சேவை. நானா விரும்பி போனது. இந்தியா அரசாங்கம் கேட்டுச்சு.


ஷெல் பாம்ப் கேள்வி பட்டதுண்டா? அப்டியே சுத்தி சுத்தி வந்து அடிக்கும். ஒரு முறை என்னாச்சு பாருங்க, போர் நடந்துட்ருக்க இடத்துல குழந்தைங்க டிஸ்டர்ப் ஆக கூடாதுணு தனி கேம்ப் வச்சிருப்போம். லேடீஸ் கூட இருப்பாங்க. அப்போதான் பிஸ்கட் கொடுத்துட்டு அந்த குழந்தைங்க தாங்க்ஸ் சொல்லிட்டு சாப்பிடுதூங்க. திரும்பி ஒரு பத்து தப்படி எடுத்து வச்சிருப்போம், ஒரு ஷெல். அப்டியே சுத்தி வந்து அந்த குழந்தைங்க கேம்ப்ல விழுது. ஒரு பசங்க இல்லாம, ஒருத்தர் பாக்கி இல்லாம எல்லாம் பீஸ் பீஸா சிதறிடுச்சுங்க. கொஞ்ச நேரம் முன்னாடி சிரிச்சுட்டு இருந்த பசங்க. ரெண்டு நாள் தூங்கல சார்.

கொஞ்ச நேரம் வெளியே பார்த்து கொண்டிருந்தார்.

முடியல சார். வந்துட்டேன். பகல்ல தகதகக்கும். ஒட்டகத்த கொன்னு தண்ணி குடிப்பாங்க சார். நைட்டான குளிரு ஒடம்ப கிளிச்சுட்டு போகும். ஒரு போர் பாத்துட்டு வந்தா போதும் சார். இந்த வாழ்கயெல்லாம் என்ன சார். அடுத்த வாரம் படத்துக்கு போலாம்னு டிக்கட் போட்ரோம் நம்ம. அங்க இன்னைக்கு மதியம் சாப்பிட உயிரோட இருப்போமானு தெரியாது சார். மனசு ரொம்ப கஷ்டபட்டுச்சு சார். வந்துட்டேன்.

இறங்க வேண்டிய ஸ்டேஷன் வந்திருந்தது. அப்போது தான் கவனித்தேன். கொஞ்சம் நிதானமாக நடந்தார். நான் பார்த்ததை புரிந்து கொண்டு,

வினோஸ் கஞ்சஷன் சார். மைன் பாம்ப். நாங்க இந்தியா திரும்பிட்ருக்கோம் சார். நடந்து வரப்ப இந்த பாம்ப் மிதிச்சிட்டேன். ஒரு நாள் முழுக்க அங்கேயே நின்னேன் சார். கொஞ்சம் கூட நகரல. மூத்திரம் எல்லாம் அங்கதான். ஒரு கிளிக் எல்லாம் முடிஞ்சிடும். அடுத்த நாள் வந்து நம்ம ஆளுங்க தான் காப்பத்துனாங்க.

வாய் பிளந்து நின்றிருந்த என்னை பார்த்து கேட்டார். உங்களுக்கு என்ன வயசு ஆகுது சார்.?’

இருபத்தேழு முடியுது சார்.

ஹாஹாஹா என்று சிரித்தார். எனக்கு அம்பத்தெழு சார். யு ஹெவ் நாட் சீன் லைஃப்'.

ஒரு கணம் பின் தங்கினேன்.

போன வாரம் கூட எங்கள் ஆபீஸில் ஒருவரோடு (59 வயது) பேசிக்கொண்டிருந்தேன். அந்த காலத்துல சார், பத்ராவதில என்று ஆரம்பித்தார் என்றால்,’ ஒரு நாள் முழுக்க கேட்டு கொண்டிருக்கலாம். தென்கச்சி கோ. ஸ்வாமிநாதன் போல.

இன்னைக்கு என்ன சார் லேட்டு?’

சாவதானமாக ஒரே வார்த்தையில் சொன்னார்.

ஆமா சார். ஒரே கூட்டம். அதுல பாருங்க நீங்க, அதுவும் சென்ட்ரல்ல, திபுதிபுனு ஓடி வராணுங்க.  ஆபீஸ் போராணுங்க. ஆபீஸ் முடிஞ்ச கையோட திரும்பியும் திபுதிபுனு ஓடிபோய் ஏறுறோம். வீட்டுக்கு குடுகுடுனு ஒடுறோம். நான் ரிட்டைராக போறேன் நீங்க ஜாயின் பண்ணிருக்கீங்க. அவ்ளோதான்.

அவர் சொல்லி இரண்டு வாரமாகியும் இந்த அதிர்ச்சி குறையவில்லை.