சனி, ஜூலை 20, 2013

குறுங்கதை – அன்றே கொல்லும்


நேர்மையின் சிகரமாய் கடந்த ஐந்து வருடங்கள் தொழிலாளர் நலனுக்காக பணியாற்றி தேர்தலிலும் தொழில் சங்கத்தலைவராக வெற்றி பெற்ற நல்லசிவத்தை தீர்த்து கட்ட முடிவெடுத்திருந்தான் சண்முகம்.

காலை எழுந்ததும் கோடை விடுமுறைப்பயணமாக மலைவாசஸ்தலம் போகின்றோம் என்ற நினைப்பே, பத்தாம் வகுப்பு படிக்கும் நகுலனுக்கு பெரும் உவகையாக இருந்தது. மரத்தின் மேல் அமைக்கபெற்றிருந்த ‘Tree Hut’ டில் ஏணியில் மூச்சு வாங்க ஏறுவதாக கனவு கண்டு கொண்டே வாயில் கோழை வடிய தூங்கிப்போனான்.

பிசாசு கூட உறங்கிருக்கும் நேரமான அதிகாலை மூன்று மணியை சண்முகம் தேர்தெடுத்திருந்தான். எட்டு பரோட்டாக்களையும் மூன்று ஆம்லேட்டுகளையும் முழுங்கிய பிறகு தெரு முனையின் பாய் கடையில் வாங்கியிருந்த பட்டன் கத்தியை சரவணா ஸ்டோர்ஸ் கவரில் சுருட்டி வைத்து வீட்டிற்கு நடக்க ஆரம்பித்திருந்தான். கே.கே.நகர் விஜயாவில் அந்தரங்கம்என்று ஒட்டபட்டிருந்த போஸ்டரை ஒரு முறை திரும்பி பார்த்து கொண்டே நடந்தான்.

நகுலன் வீட்டில் எல்லோரும் உறங்கியிருந்தனர். 23’c என்று காமித்து கொண்டிருந்தது வோல்டாஸ் ஏ.ஸி.

ஒரு மணல் மூட்டையின் முன் நின்று கொண்டிருந்த சண்முகம், பட்டன் கத்தியால் இரண்டு முறை குத்திபார்த்தான். மணல் சரிந்து தரையில் கொட்டியது. சிரித்துக்கொண்டான். மீண்டும் குத்தி மணல் சரிந்து சிரித்தான். மீண்டும்....

பன்னிரெண்டு மணிக்கு எழுந்திருத்து, நகுலன் அப்பா ஒரு முறை மூத்திரம் போனார்.

இரவு இரண்டு மணிக்கு களைத்து போய் ஒரு நாற்காலியில் உட்கார்ந்தான். Teachers Whiskey மற்றும் 100 கிராம் இருபது ரூபாய்க்கு வாங்கிய சிக்கன் 65 இரண்டையும் ஒரு முக்காலியில் வைத்தான். ஒரு ரூபாய் பிளாஸ்டிக் டம்ப்ளரில் மிக்ஸிங் செய்ய ஆரம்பித்தான்.

நகுலனின் அம்மா மூன்று மணிக்கு எழுந்து எதற்கும் இருக்கட்டும் என்று காலை சாப்பாட்டிற்கு இட்லி ஊற்றி வைத்து ஒரு பழைய பிரஷ்ஷில் பல் துலக்க ஆரம்பித்தாள்.

சண்முகம் இந்த ரகசிய காரியத்தை தான் ஒருவனே முடிக்க வேண்டும் என்று தீர்மானித்திருந்தான். இரண்டு பேர் செய்தால் அது ரகசியமாயிராது என்பது மஷ்ரூம் கட் அடித்திருக்கும் அவன் தலைக்குள் இருக்கும் மூளை நியாபகப்படுத்தியது.

நகுலனின அப்பா டிரைவிங் சீட்டில் உட்கார்ந்து கொண்டார். அருகில் நகுலன், தம்பி அகிலன் மற்றும் அம்மா பின் சீட்டில் உட்கார தெரு முனைவரை கௌசல்யா சுப்ரஜாஎன்று பக்தியுடன் எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி பாடிக்கொண்டிருந்த்.......நகுலன் சிடியை மாற்றி என்னமோ ஏதோஎன்று ஆலப் ராஜூவை கூப்பிட்டான்.

மூன்று மணி இருபது நிமிடம் கழித்து நல்லசிவத்தின் வீட்டிற்கு நடந்தே வந்திருந்தான் சண்முகம். உள்ளே சென்றிருந்த Teacher லேசாக வேலை செய்ய ஆரம்பித்திருந்தார். அவனுக்கு சாவி எப்படி கிடைத்தது என்பது முக்கியமில்லை என்பதால். அவன் இப்போது கதவை திறந்திருந்தான்.

எப்டியும் ஆறு மணிக்கு போயிடலாம் என்றார் நகுலனின் அப்பா. அந்த அகால வேளையில் லேஸ் ஸ்பானிஷ் டொமாட்டோ பாக்கெட்டை உடைத்திருந்தான் அகிலன்.

Rigar Mortis வந்த பிணம் போல் கை காலை நீட்டி நெற்றியில் மூன்று பட்டையுடன் விரைப்பாய் படுத்திருந்தார் நல்லசிவம்.  அவர் படுத்திருந்த கோலத்திற்கு வேஷ்டி சிறிது விலகி உள்ளே ஏதூம் போடவில்லையோ என்று தனக்கு எழுந்த சந்தேகத்தை தூர வைத்து பட்டன் கத்தியை வெளியே எடுத்தான் சண்முகம்.  

இன்னும் ஸ்பீட் இன்னும் ஸ்பீட் என்ற நகுலனிடம், இதற்கு மேல் வேகமாக போக முடியாது என்று அம்பதை தொட்டு கொண்டிருந்தார். அடுத்த லேஸ் பாக்கெட்.

தான் கொண்டு வந்திருந்த கைக்குட்டையால் அவர் வாயை மூடி வயிற்றில் ஒரு குத்து. இரண்டு சதக் கேட்டது. கழுத்தில் ஒரு குத்து. மீண்டும் இரண்டு சதக்.

மூன்று பேரின் ஒருமித்த கருத்தால் நகுலனின் அப்பா காரை ஓரங்கட்டி நகுலனிடம் ஓட்ட கொடுத்தார். தேநீரில் சிநேகிதம்என்று ஜேம்ஸ் வசந்தன் பீட்டை அதிகரிக்க ஆக்சிலேட்டரில் ஒரு காலால் ஏறி நின்று நூற்றியிருபதை தொட்டு அனைவரையும் பரவசபடுத்தினான். லைசென்ஸ் இல்லை.

நல்லசிவம், நல்லசிவம் என்று குனிந்து காதுக்கருகில் கூப்பிட்டான். தன் சுபரிசோதனையில் திருப்தியுற்று நிமிர்ந்த சண்முகம், கடமுடா என்ற சத்தம் போட்ட தன் வயிற்றை தடவி அபான வாயுவை சத்தமில்லாமல் வெளியேற்றி, திரும்பி மணி பார்த்த பொது நாலு பத்து என்று காட்டியது.

கார் அதே நூற்றியிருபது.

வெளியே வந்து கதவை பூட்டிவிட்டு, அரவமில்லாமல் தெருவை கடந்து வந்தான். விழித்திருந்த தேநீர் கடையில் டீ குடிக்கலாமென்ற யோசனையை ‘’குடி (டீ) குடியை (Teacher) கெடுக்கும் என்பதால் விட்டுவிட்டான். Teacher அதிகமாக வேலை செய்ய, நடையில் அதிகம் தள்ளாடினான்.

அந்த ஹைவேயின் குறுகலான திருப்பத்தை கட்க்க தள்ளாடிக்கொண்டே சாலையை அளந்தான். திருப்பம் வருகிறது என்று தெரிந்தும் நூற்றியிருபதை குறைக்காத நகுலன் காரை திருப்பவும் சண்முகம் சாலையை கடக்கவும், கன நேரத்தில் இருவரும் இருவரை கவனிக்கமுடியாது போய், லப்டப் சத்தம் காது வரை கேட்டு காரில் அடிபட்டு தூக்கி வீசப்பட்டான். லப்டப் நின்றிருந்தது. நூற்றிநாற்பதில் போ என்றார் நகுலனின் அப்பா, படபடப்புடன்.

 

 

 

 

புதன், ஜூலை 10, 2013

ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம் – சுஜாதா


பன்னிரெண்டு ஆழ்வார்களையும் அவர் தம் பாசுரங்களை சொல்லும் நாலாயிர திவ்விய பிரபந்தத்தையும் வாசகர்களுக்கு எளிதாக சொல்லும் ஒரு அருபெரும் முய...ற்சியே இந்த நூல். வழக்கம் போல சுஜாதா தன் பாணியில் போற போக்கில் க்வாண்டம் சயின்ஸ், காஸ்மலஜி என்று விளக்குவது ஸ்வாரஸ்யம்.
 

 ஆழ்வார்களை படித்தவரை, நாராயணன் தவிர வேறொரு தெய்வம் இல்லையென்று கூறும் ஒரு adamancy தெரியவருகிறது. இங்கிருப்பவனும் அவனே, இல்லாதிருப்பவனும் அவனே என்று யாதும் யாதுமாகி போற்றி புளகாங்கிதம் அடையும் ஒரு அற்பணிப்பு. நாலாயிர திவ்விய பிரபந்தமாகட்டும், திருவாசகமாகட்டும் இவை எல்லாவற்றிலும் காணப்படும் உவமை கற்பனைக்கெட்டாதது. பிடித்த அல்லது வியந்த சில Genre களை கீழே தருகிறேன்.

'கணிகண்ணன் போகின்றான் காமரு பூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்க வேண்டா-துணிவுடைய
செந்நாப் புலவனும் செல்கின்றேன் நீயும் உன்றன்
பைந்நாகப் பாய் சுருட்டிக் கொள்'

திருமழிசை ஆழ்வாரும் அவர் தம் சிஷ்ய பிள்ளை கனிகண்ணனும் ஒரு கிழவியை குமரியாக்குகிறார்கள். இதை தெரிந்துக்கொண்ட அரசன், தன்னையும் குமாரனாக்க வேண்டும் என்று திருமழிசை ஆழ்வாரை பணிக்கிறான். முடியாது என்கிறார் ஆழ்வார். இருவரையும் நாடு கடத்துகிறான் அரசன். வெகுண்டெழுந்த திருமழிசை ஆழ்வார், கனிகண்ணனும் கிளம்பிவிட்டான், புலவன் நானும் கிளம்புகிறேன், மாதவா நீயும் இங்கு கிடக்க வேண்டா, உன் பாம்பு பாயை (ஆதிசேஷன்) சுருட்டிக்கொண்டு கிளம்பு என்கிறார். திருமாலும் கிளம்ப. லக்ஷ்மியும் பின் செல்ல, மற்ற பூதகனங்களும் கிளம்பிவிடுகின்றன. அதன் பின் நாடே சுபிக்ஷமற்று போய்விடுகிறது. இதை உணர்ந்து அரசன், ஆழ்வாரிடம் மன்னிப்பு கோர, பின் திருமாலை,

'கணிகண்ணன் போக்கொழிந்தான் காமரு பூங்கச்சி
மணிவண்ணா நீ நிற்க வேண்டா
துணிவுடைய செந்நாப்புலவனும் போக்கொழிந்தான் நீயும்
உன் பைநாகப் பாயில் படுத்துக்கொள்'

நீ திரும்ப வந்து படுத்துக்கொள் என்று பணிக்க, அவரும் வந்து தான் அனந்த ஷயணத்தில் படுத்துக்கொள்கிறார். தன் பக்தன், கிளம்பு என்றால் கிளம்பவும், வந்து படுத்துக்கொள் என்றால் படுத்துக்கொள்ளவும், திருமால் செவி சாய்க்கிறான் என்று ஒரு friendly attribute கொடுத்திருப்பது இதன் தனிச்சிறப்பு.

உவமைக்கு எடுத்துக்காட்டாக, குலசேகராழ்வாரின்,

'வாளால றுத்துச்சு டினும்ம ருத்துவன்பால்
மாளாத காதல்நோ யாளன்போல் மாயத்தால்
மீளாத் துயர்தரினும் விற்றுவக்கோட் டம்மாநீ
ஆளாவு னதருளே பார்ப்பன டியேனே'

(பிரித்து படிக்கவும்). வாளால் அறுத்து சூடு போட்டாலும் வைத்தியன் பால் நோயாளி கொண்ட நீங்காத அன்பு போல், நீ பல வித துன்பங்களை கொடுத்தாலும், உன்(திருமால்) மேல் உள்ள காதல் மாறாது என்கிறார்.

அடுத்ததாக பெரியாழ்வாரின்.

'சோர்வினால் பொருள் வைத்ததுண் டாகில் சொல்லு சொல்லென்று சுற்று மிருந்து
ஆர்வி னாவிலும் வாய்திற வாதே அந்தக் காலம்அடைவதன் முன்னம்
மார்வ மென்பதோர் கோயி லமைத்து மாத வனென்னும் தெய்வத்தை நாட்டி
ஆர்வ மென்பதோர் பூவிட வல்லார்க்கு அரவ தண்டத்தில் உய்யலு மாமே'.

வயதான காலத்தில் சுற்றம் சூழ நின்று, சொத்து எங்கிருக்கிறது எங்கிருக்கிறது என்று வினவ, தன் தள்ளாத வயதின் காரணத்தினால் அதற்க்கு கூட பதில் கூற முடியாத நிலை வரை காத்திருக்க வேண்டாம். அதற்கு முன்பே உன் நெஞ்சில், திருமாலுக்கு ஒரு கோவிலெழுப்பி மலரினால் அர்ச்சனை செய்யக்கடவாய் என்கிறார்.

ஆழ்வார் பாசுரங்களிலேயே ஆண்டாளுக்கு தனி சிறப்பு உண்டு. திருமாலையே தன் கணவனாக எண்ணி, பல பாசுரங்களை பாடியவர் இவர். தன் தந்தையார்(பெரியாழ்வார்), திருமாலுக்கு தினம் பூத்தொடுக்க, அந்த மாலையை தனக்கு சூடி அழகு பார்த்து பின் திருமாலுக்கு அணிவிக்கிறார். இது ஒரு நாள் தந்தைக்கு தெரிந்துவிட, இதை தடுக்கிறார். ஆண்டாள் அணிந்து பின் கொடுக்கும் மாலையே தனக்கு உவப்பானது என்று பெரியாழ்வாரின் கனவில் திருமால் கூற, ஆண்டாளை அழைத்து கொண்டு, ஸ்ரீரங்கம் செல்ல, ஆண்டாள் நேராக கருவறையை அடைந்து இறைவன் திருவடி சேர்கிறார்.

ஆண்டாளின் அனைத்து பாடல்களிலும், தன்னை கடவுளுக்கு முழுதும் அர்ப்பணித்த ஒருவகை pure dedication தெரிகிறது. அவரின் ஒரு பாடல்,

'கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்தி ருக்கும்மோ
மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே'

திருமாலின் வாயிலிருக்கும் வெண்சங்கை பார்த்து, அவரின் வாய்ச்சுவையை சொல்லமாட்டாயா என்று கேள்வி கேட்குமாறு அமைந்திருக்கிறது. காதலர் தினத்தை ஆண்டாள் தினமாக மாற்றலாம் என்று கூறுமளவுக்கு சுஜாதா மேற்கொளிடுகிறார்.

சமீபத்தில் வெளிவந்த ‘விஸ்வரூபம்’ திரைபடத்தில் வரும், ‘உனை காணாத’ என்ற பாடலில் வரும் பல வரிகள் (அவ்வாறு நோக்கினால் எவ்வாறு நாணுவெண், இங்கு பூலோகம் என்றொரு பொருள் உள்ளதை இந்த பூங்கோதை மறந்தாலடி) கூட ஆண்டாள் பாடிய genre போல ஒப்பிட்டு பார்க்கத் தோன்றுகிறது. பிர்ஜு மஹாராஜின் நடனம், தப்லாவின் இசை, கமலின் நளினம் என் இந்த பாடல் ஆண்டாளை முன்னிறுத்துகிறது என்றால் மிகையல்ல.

வெண்பா, திருச்சந்த விருத்தம் சந்தம், எட்டு சீர், ஆசிரியப்பா, கலியவிருத்தம் என்று சுஜாதா, அவ்வப்போது தட்டிவிடுகிறபொழுது, இது தெரியாமல் முழித்து கொண்டு, ஒரு விதமான shame feeling வருவதை தவிர்க்கமுடியவில்லை.

எவ்வாறாகினும்,ஆன்மிகம், திருமால், பக்தி இத்யாதி போன்ற காரணங்களை தவிர்த்து தமிழின் சுவைக்காகவாவது நாலாயிர திவ்விய பிரபந்தத்தை ஒரு முறை முயற்சி செய்யலாம்.