புதன், ஏப்ரல் 15, 2026

வா பார்ப்பது

'ஏலே அங்கன என்ன வா பாத்துட்டு இருக்க' என்ற சொலவடையை நெல்லை வட்டாரத்தில் கேட்கலாம். 

வா பார்த்தல் என்பது அடுத்தவன் வாயை பார்ப்பது. அதாவது பராக்கு பார்ப்பது. இந்த வா பார்த்தல் என்பது தற்போது மிகவும் அருகி வருகிறது. எப்பொழுது பார்த்தாலும் கல்லெறிந்த நாயைப் போல ஓடிக்கொண்டிருக்கும் வாழ்வில் இந்த வா பார்த்தல் என்பது வழக்கொழிந்து போய்விட்டது என்பதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை. இந்த இலக்கற்ற வா பார்க்கும் தொழிலை தற்போது மொபைல் போன் பிடுங்கிவிட்டது நன்றாக வா பார்த்தது எப்பொழுது என்று யோசித்தால், இரண்டாம் வகுப்புக்கு இட்டுச் செல்கிறது. 

திருநெல்வேலி மகாராஜநகர் ஹவுசிங் போர்டில் சி பிளாக் முதல் மாடி வீடு. ஒரு ஹால் ஒரு கிட்சன் ஒரு சின்ன பால்கனி. அவ்வளவு தான் வீடு. அந்த ஹாலில் இருக்கும் ஜன்னல் ரோட்டை பார்த்து இருக்கும். ஜன்னலை ஒட்டி உள்பக்கம் ஒரு சிறு திண்டு உண்டு. அந்தத் திண்டில் எக்கி ஏறி உட்கார்ந்து விட்டால் ரோட்டை பார்த்து ஜாலியாய் பொழுதை போக்கிக் கொண்டிருக்கலாம். கூடவே ஒரு சிறு கிண்ணத்தில் பொரிகடலையும் சீனியும். அது தானே தீனி. ஒவ்வொரு கரண்டியாய் ரசித்து ருசித்து சாப்பிட்டு கீழே விளையாடுவதை, போவோர் வருவோரை பார்த்து கொண்டிருந்தது நினைவிலிருக்கிறது. 

அதற்குப் பின் எட்டயபுரம் மாற்றல் மீண்டும் திருநெல்வேலி என்று ஓட்டமும் ஆட்டமுமாக இன்று வரை ஓடி விட்டது. ஆனால் அது போல் ஒரு நாள் உட்கார்ந்து வா பார்த்தல் என்பது அமைந்ததில்லை. பின்னே நாய் போல் ஓடிக்கொண்டே இருந்தால். 

இந்த பராக்கு பார்த்தல் எங்கு வேண்டுமானாலும் நிகழ வேண்டும். இரைச்சலாய் நிறைந்திருக்கும் பேருந்து நிலையம், கல்லூரி, வேலை பார்க்கும் இடம், ஒரு ஆலமரத்தின் நிழலில், கற்கோவிலின் குளிர்ச்சியில், ஆற்றங்கரையில், பாறை முகட்டில், புள்ளினங்கள் ரீங்காரம் துள்ளும் அத்துவான காட்டில், ஓவென இரையும் கடலில், சாலையில், மொட்டை மாடியில், மைதானத்தில், ரயில் பயணத்தில், கல்யாண வீட்டில் என எங்கு வேண்டுமானாலும். அங்கு நடக்கும் மனிதர்கள், கால்நடைகள், அசையும் புற்செடிகள், பறக்கும் பறவைகள், தேமே என்று கிடைக்கும் கற்களை என ஏதேனும் ஒன்றை அல்லது எல்லாவற்றையும் எந்த ஒரு பிரதிபலனும் இன்றி வெறுமே காட்சியாய், பார்க்கும் காட்சிக்கு சாட்சியாய் மட்டும் இருக்க வேண்டும். 



எந்த ஒரு முன் அனுமானமும் இன்றி, பார்க்கும் நபர்களை பற்றி எந்த ஒரு கருத்தும் இன்றி, நடந்தவற்றை எண்ணி வருத்தப்படாமல், நடக்கினறவற்றை எண்ணி குழம்பிக்கொள்ளாமல், நடக்கப்போவனவற்றை பற்றி பயம் கொள்ளாமல் வெறுமே பார்த்துக்கொண்டிருத்தல். கண்முன்னே கரைந்து போகும் காட்சிகளும் காலுக்கு அடியில் ஒளிந்து ஓடும் காலத்தின் பிரக்ஞை இல்லாது ஒரு பராக்கு பார்க்கும் சூழ்நிலையும் மனநிலையம் ஒருங்கே அமைய வேண்டும். இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது போல் வேலைக்குச் செல்லும் நேரங்களில் ஒய்வு எடுக்கும் ஏக்கமும், ஒரு விடுமுறை நாளில் வானத்தையே வில்லாக வளைத்து வேலை செய்ய நினைக்கும் திராணியும் நமக்கு அமைந்திருப்பது நகை முரண். 

படபடவென்று ஓடிக்கொண்டே இருக்காமல் கொஞ்சம் ஆற அமர சுற்றியும் பார்த்துக் கொண்டே நடக்க வேண்டும். வேகமாக போய்கொண்டிருப்பது ஓய்வெடுக்கத்தானே. அந்த ஓய்வை வாழும்போதே எடுத்துக் கொள்வோம். Slow down to Slow down your ageing process. பராக்கு பார்த்தல் என்பது அவ்வளவு எளிதல்ல. எல்லோருக்கும் அது வாய்த்தும் விடுவதில்லை. 

ஏனெனில் பராக்கு பார்த்தல் ஒரு மோன நிலை.

கருத்துகள் இல்லை: