புதன், டிசம்பர் 18, 2024

நந்தன்

 

கிராமங்களில் வளர்ச்சியிலேயே நாட்டின் வளர்ச்சி உள்ளது எனபது காந்தியின் அசைக்கமுடியாத நம்பிக்கை. அதனை ஸ்திரப்படுத்தும் முனைப்பில் கொண்டுவரப்பட்ட ஊராட்சி அமைப்பு மற்றும் அதன் தலைவர்கள் எப்படி பொம்மை போல ஆதிக்க சக்திகளால் ஆட்டுவிக்கப்படுகிறார்கள் என்ற தற்கால சமூகத்தின் சாட்சியாக நந்தன் திரைப்படம். ரிசர்வ் தொகுதியை எடுத்து களமாடிய விதம் கூரையில் நின்று உரக்க கூவியது போல் உள்ளது. அருமை. வாழ்த்துக்கள்.

இவ்வளவு பட்டவர்த்தனமாக ஆதிக்கச் சாதியை எள்ளி நகையாடி குற்றம் சாற்றி ஒரு படம் வந்ததில்லை என்றே தோணுகிறது. ஒரு துணை கதாபாத்திரத்தின் பெயரை படத்திற்கு பெயராக வைத்திருப்பது இதுவே முதல் முறை.

எழுத்து இயக்கம் தயாரிப்பு என்று அனைத்தையும் ஒருங்கே செய்திருக்கிறார் இரா சரவணன். கதையின் வீரியம் கருதி இதனை தயாரிக்க மற்றவர்கள் முன்வராது போயிருக்கலாம். சசிகுமார் போன்றதொரு பிம்பம் இந்த படத்திற்கு துணை நில்லாதிரிந்திருந்தால் இந்த மட்டும் கூட கவனிமின்றி போயிருக்கும். இடைவேளையில் ஊராட்சித் தலைவர் நாற்காலியில் உட்கார்ந்து பின் பழி வாங்குவார் என்று எதிர்பார்த்த நிலையில், நாற்காலியில் உட்காருவதே இங்கு முதல் வெற்றி தான் என்று யதார்தத்துக்கு அருகாமையில் படமாக்கிய சரவணனுக்கு பூங்கொத்து.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கான குரலாக வெளிவந்திருக்கும் இந்தத் திரைப்படம் வெறும் ஒரு சதவீதம் தான். அவர்களுக்காக பொது வெளியில் பேசப்படவேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது.

அதே 20 திகதி செப்டம்பரில் வெளிவந்த லப்பர் பந்தின் சூழலில் நந்தன் கவனிக்கப்படாமல் போயிருந்தாலும், இதுபோன்ற படைப்புகள் சமூக அநீதிகளை மேலும் வெளிக்கொணரட்டும். தோள் கொடுப்போம். 

பிரைமில் காணக்கிடைக்கிறது

 


வீட்டில எலி வெளியில புலி.

 


அலுவலகத்துல வேலை பாக்கிறவர் அவர். 

உயர் அதிகாரி. பெரிய பெரிய மேலாளர். பாக்குறவனே பார்வையாலேயே மிரள வைக்கிற டைப். சொன்னா சொன்னதுதான். கட்டளையே சாசனம் டைப். எதிர்த்து ஒரு வார்த்தை பேச முடியாது. அப்படி ஒரு டெரர். வேலைலையும் exceeding expectation கேட்டகிரி தான். ஒரு கெத்தா வந்துட்டு போயிட்டு இருந்தார்.  

அவரு பைய்யனுக்கு கல்யாணம் ஆகி கொஞ்ச நாள் கழிச்சி தான் தெரிய வந்துச்சு விஷயம். கத்திரிக்காய் முத்துனா கடைத்தெருவுக்கு வந்து தான ஆகணும். வந்திருச்சு. இவரும் பெரிய இடம். பொண்ணு எடுத்த இடமும் பெரிய இடம் தான். அதாவது ஸ்டேட்டஸ் மெயின்டெய்ன் பண்ணி எடுத்துட்டாங்க. ஆனா மனுஷத்தன்மையா கொஞ்சம் கூட நடந்துக்கல. 

ஒத்தைப் பொண்ணா செல்லமா வளர்ந்த புள்ளைய மகளா பாக்கலைனாலும் கூடப் பரவால்ல. மனுஷியா கூட மதிக்கல. மருமகப்புள்ளைய படாத பாடு படுத்திருக்கு அந்த அம்மா. அதாவது டெரரொட சம்சாரம். சமைக்க வீடு கூட்ட துணி துவைக்க தோட்டம் அப்படி இப்படின்னு எல்லா வேலையும் இது மேல கட்டிருக்கு. இத்தனைக்கும் கவர்ன்மென்ட் குடுக்குற வேலையாள் ரெண்டு பேரு வீட்டுல உண்டு. அவங்க ரெண்டு பேரையும் சும்மா நிக்க வச்சி இந்த பொண்ணை வேலை வாங்கிருக்கு. மதிய வேளைல செருப்பு போடாம மொட்டை மாடிக்கு துணி காய போட சொல்லிருக்கு. எல்லாரும் சாப்டு முடிச்சப்புறம் தான் இந்த பொண்ணு சாப்பிடணும். கீழ உக்காரணும் அது இதுனு ஏகப்பட்ட ரூல்ஸ். கொஞ்ச நாள் பொறுத்த இந்த பொண்ணு அப்புறம் ஃபோன் போட்டு அழுக, அவரு அப்பா உடனே வந்து கூட்டிட்டு போயிட்டார். 

சமரசம் பேச வந்திருக்காங்க. இத்தனைக்கும் அந்த பைய்யன் ஒரு வார்த்தை கூட சப்போர்ட் பண்ணலை. சமரச பஞ்சாயத்துல தான் அந்த பொண்ணு சொல்லிருக்கு அவன் ஒரு ஆம்பளையே இல்லைனு. கழுத்துல கிடந்த தாலியை கைல கழட்டி குடுத்துட்டு 'போ வெளியேனு' விரட்டிடுச்சு.  

நம்ம டெரர் ஆசாமி என்ன பண்ணாருனுதான கேக்குறீங்க. அவ்வளவு களேபரம் நடந்தும் ஆளு ஒரு வார்த்தை கூட பேசாம மிக்சர் சாப்டுட்டு இருந்திருக்கார். வீட்டுல அந்த அம்மா நில்லுன்னா நிப்பாராம். உக்காருனா உக்காருவாராம். மொத்தத்துல மாடர்ன் கட்டப்பாவா இருந்திருக்கார். ஆனா வெளில என்னமோ டெரர் ஃபேஸ். தீப்பொறி ஆறுமுகம் ரேஞ்சுக்கு. 

இப்போ ரிட்டையர் ஆகி போயிட்டார். போனப்புறம் தானே புறம் பேசணும்.  

வீட்டில எலி வெளியில புலி.


பிரத்யேகப் பாதை

 

விழிச்சவால் கொண்டவர்களுக்கான நடைபாதை இது. 

நீட்டமான சிறு சிறு கோடுகள் இருந்தால் நேரே செல்லலாம். அதுவே கோடுகள் முடிவில் புள்ளிகள் இருந்தால் பாதை முற்றுப்பெருகிறது அல்லது பாதை வலது இடது பக்கம் திரும்புகிறது என்று பொருள். 

பல இடங்களில் சாலையில், அரசாங்கம் அமைத்த நடைபாதையும் ஆக்கிரமிக்கப் பட்டுவிட்டது. அந்த ஆக்கிரமிப்பே பார்வைச்சவால் பிரத்யேகப் பாதையையும் சௌகரியமாக விழுங்கிவிட்டது.  

அதீத வருத்தம் என்னவென்றால், பார்வைச்சவால் கொண்டவர்களுக்கு இதுபோல் பிரத்யேகப் பாதை இருக்கிறது என்பதும் தெரியாது. அது இந்த ஆக்கிரமிப்புகளால் விழுங்கப்பட்டிருப்பதும் தெரியாது.

 

ராஜ் கௌதமன்

 


 

சமீபத்தில் எழுத்தாளர் ராஜ் கௌதமனை பற்றி வாசிக்க வாய்ப்பு அமைந்தது. ஈர்த்த ஒரு விஷயம், இவருடைய நூலான "தலித் பார்வையில் தமிழ்ப் பண்பாடு" என்று சங்க இலக்கியம் பற்றிய ஒரு மாற்று பார்வை கொண்ட நூல். 

என்ன பார்வை என்றால் 'மேல்தட்டு பெண்கள் கடவுளை அடைய எடுத்துக்கொண்ட பிரயத்தனங்களை காட்டிலும் விளிம்பு நிலை மக்கள் கடவுளை அடைய மேற்கொண்ட துன்பம் அதிகம்' என்பதாகும். உதாரணமாக காரைக்கால் அம்மையார் தலைகீழ் நடந்தது, நந்தனார் தீயில் சுடப்பட்டது, கண்ணப்பநாயனார் கண்களை பிய்த்து கொண்டது என ஏராளம். இதே புராணங்களில் தான், சம்பந்தருக்கு அம்மை பால் கொடுத்தது என்பது முரண்.  

மாற்று பார்வைகள் எத்தனை எத்தனை சிந்தனைகளை வெளிக்கொணருகின்றன. 

இதையேதான் தமிழ் சினிமாவிலும் வேறு ஒரு வகையில் பிரித்தாண்டிருக்கிறார்கள். எண்பது தொன்னூறுகளில் வந்த படங்களில் முக்கால்வாசி ஏன் முழுவதுமே வீட்டு வேலை, வயல் வேலை என்று விளிம்பு நிலை பெண்கள் மட்டுமே பாலியல் ரீதியாக துன்புறுத்தப் பட்டிருக்கிறார்கள். கற்பழிப்பு, முகம் சுழிக்க வைக்கும் விமர்சனம் என எது வேண்டுமானாலும் வரும். ஆனால் அதே படங்களில் வரும் உயர் மட்ட/முதலாளி குடும்பப் பெண்களை அதுபோல் சீண்டுவதோ, கண்ணியம் குறைவாக காண்பிப்பதோ கிடையாது. எஜமான், முத்து, முதல் மரியாதை, சந்திரமுகி, யூ செலக்டட் ரிஜெக்டட் காமெடி, ஏன் பொன்னியின் செல்வனில் பூங்குழலி vs நந்தினி இன்னும் பல படங்களில் இந்த நுண் அரசியலை காணலாம். 

இலக்கியத்திலேயே இடம் இல்லை. பின்பு எங்கு மனதில்...?

 

நேமிக்கம்

  

நெடு நாள் கழித்து வாசித்த 'நேமிக்கம்' சிறுகதை ஒரு வித பரவசத்தை கடத்தியுள்ளது. தனக்கும் தன் மகனுக்கும் இருக்கும் மொட்டை போடும் நேர்த்திக்கடன் பொருட்டு, சுற்றம் சூழ ஒரு லாரியில் ஏறி சாத்தூர் இருக்கன்குடி மாரியம்மன் கோவில் நோக்கிய ஒரு பயணம் தான் இந்த சிறுகதை. 

நேர்கோட்டில் பயணிக்கும் பங்கு தான் இந்த சிறுகதையின் சிறப்பு. பத்திரிக்கை வைக்காமல் அழைப்பதற்காக 'தப்பா எடுத்துக்காதீக' என்பதில் தொடங்கும் கதை போகிற போக்கில் பல கதை மாந்தர்களை உள் வாங்கி ஒரு கிராமத்துத் தெருவில் நடக்கும் உணர்வை நம்மிடம் கடத்திவிடுகிறது. கிடா ஆடுகள், முத்து மாமா, முத்திலியம்மா, நெல் அண்டா முருகன், எட்டயபுர உலகம்மாள் லாரி, இருக்கன்குடி ஆறு, கோவில் ஓவியங்கள், தண்ணி போட்டு பந்தியில் சலம்பும் பங்குகள், தேற்றும் மனைவி மாரி என இவர்களின் ஊடே ஊடாடுவது மாடசாமி மட்டுமல்ல. நாமும் தான். ட்விஸ்ட் எண்டிங் க்ளைமேக்ஸ் வைத்தே ஆகவேண்டும் என்று காலகட்டத்தில் 'சுபம்' என்று கதை முடிந்த பாங்கு அருமை.  

வெரைட்டி தேடித்தேடி சலித்த மனது ஒரு விதத்தில் எதிர்பார்ப்பது இதுபோன்ற நேர்கோட்டு பயணத்தைத்தான். 

மனதிற்கு நெருக்கமான ஒரு வாசிப்பு. நன்றி Mahendra Babu   

Ananda Vikatan

திரையெல்லாம் செண்பகப்பூ

 

ஜா. தீபா Deepa Janakiraman அவர்களின் 'திரையெல்லாம் செண்பகப்பூ' 21வது அத்தியாயத்தை நெருங்குகிறது. 

பெண்களை, அவர்களின் மனதை, உணர்வுகளை தான் கண்ட திரை மொழியின் வழியாக அணுகுவதே இந்தத் தொடர். சினிமாவை துணைக்கு இழுத்துக்கொண்டு எத்தனை பிம்பங்களை பிரதிபலிக்கமுடியும் என்ற கேள்வியை அனாயசமாக வாராவாரம் உடைத்தெறிந்து கொண்டு இருக்கிறார் எழுத்தாளர். அத்தனை உணர்வுகளை, பெண்களின் மொழியை, வலியை தமிழ் சினிமா கையாண்டிருக்கிறது. கொண்டு இருக்கிறது. புரிந்துகொள்ளும் மன நிலை தான் இத்தனை ஆண்டுகள் இல்லை. ஒருவர் தலையில் கொட்டி சொல்ல வேண்டிருக்கிறது. 

ஒவ்வொரு வாரமும் ஒரு சிறப்பு. சந்தோசம், துக்கம், அழுகை, பிரிவு சோகம் எனப் பல உணர்வுகளின் ஊடே மிதக்கும் இந்தத் தொடரின் 19 தாவது அத்தியாயம் அதீத தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. பெண்களின் மௌனம் அல்லது இறுக்கம். கொட்டுக்காளி, அமரன், மெட்டி, குட்நைட் என்று படங்களின் சாட்சி வழியாக பெண்களின் இறுக்கத்திற்கு பின் இருக்கும் அந்த ஆறாத வடுவை முன்னெடுத்து காட்டியிருக்கிறார். 

பெண்களின் இறுக்கம் அல்லது மௌனம் என்பது இதற்கு மேல் தன்னைச் சுற்றியிருப்பவர்களிடம் அடங்கி விட்டாள் என்பதல்ல. சமநிலை தவறிய அறிவிலி கூட்டத்தின் மத்தியில் 'இனியும் நீ என்னைப் புரிந்து கொள்ள இயலாது' என்ற மோன நிலையின் வெளிப்பாடு. சிம்பிளாக சொல்வதென்றால் ஆணாதிக்கத்தை சுண்டுவிரலால் 'சீ அந்தாண்டப் போ' என்பது போல். 

வாழ்த்துக்கள். கல்லுக்குள் ஈரம் சுரக்க இன்னும் பூக்கள் மலரட்டும். 

Ananda Vikatan

ர், ங்க

 

நம்ம பசங்களை பத்தி சொல்லும்போது மத்தவங்ககிட்ட எப்படி சொல்லுவோம்

'என் பையன் செகண்ட் ஸ்டாண்டர்ட் படிக்கிறான். என் பொண்ணு டிராயிங் கிளாஸ் போயிருக்கா,' அப்படித்தானே சொல்லுவோம். 

இந்த சாதனை பெற்றோர் என்னடான்னா, பேட்டி கொடுக்கும் போதெல்லாம் 'என் பையன் படிச்சுட்டு இருக்கார். அப்படி இருப்பார், இப்படி இருப்பார். பொண்ணு சொல்லிருக்காங்க, செய்றாங்க' அப்டின்னு ஏகபோகமா அடிச்சி விடுறது. தமிழ் தாய் மொழியா  இல்லாதவங்க தான் தமிழ்ல பேசும் போது இது மாதிரி பேச டிரை பண்ணுவாங்க. ரஜினி ஓர் எடுத்துக்காட்டு. பூனை சூடு போட்ட கதை மாதிரி...அதை பாத்திட்டு. 

ரீசெண்ட்டா, நாலு மாசக் கைக் குழந்தைய செரெலக் கூட சாப்பிட விடாம டார்ச்சர் பண்ணி லிம்கா புக் ஆஃப் ரெகார்ட்ஸ் பண்ண வச்சிருக்காங்க. இன்னும் ஒரு படி மேலே போய் பேட்டில அந்த அம்மா சொல்லுது. ' அவங்க வயித்தல கருவா இருக்கும் போதே இன்டலிஜென்ட்' அப்டின்னு. 

போற போக்குல 'எங்கிட்ட  ரெண்டு லட்சம் அணு இருக்கார். ஒரு முட்டை இருக்காங்க'னு சொன்னாலும் ஆச்சரியப் படுறதுக்கில்லை போல.

 

திங்கள், நவம்பர் 25, 2024

கிஷ்கிந்தா காண்டம்

 


சேட்டன்மார்களின் சேட்டையே தனி ரகம் தான்.  மூன்றே கதாபாத்திரம். அந்த மூன்று பிரதான கதாப்பாத்திரத்தை நகர்த்த சில துணை கதாபாத்திரங்கள். இரண்டு மணி நேரம். மிஸ்டரி என்று சொல்வதா, த்ரில்லர் என்று சொல்வதா. இன்னதென்று அனுமானிக்க முடியாமல் இறுதியில் ஒரு பக்காவான எமோஷனல் டிராமாவாக நிறைவடைகிறது.




இறுதி பதினைந்து நிமிடங்கள் தான் கதையே. ஒரு சுபாவம், ஒரு நிகழ்வு. இது இரண்டையும் பின்னி தந்தை மகனுக்கு இடையில் இழையோடும் ஒரு அன்பு. அந்த ஒரே ஒரு நிகழ்விலிருந்து முன்னும் பின்னும் கதையை எழுதிய பாங்கு, சேட்டன்மார்களின் திரைக்கதை யுக்திக்கு நல்ல சான்று.

பச்சைப்பசேல் என்ற இயற்கை வளம். நிஜமாகவே படம் பார்க்கும் பொழுது கண்ணிற்குள் குளிர்ச்சியை உணர முடிகிறது. கடவுளின் தேசம். முன் பின் அறிந்திராத கேமரா கோணங்கள் கதை சொல்லும் சஸ்பென்ஸ் மூடிற்கு ஏற்றார் போல் உறுதுணை செய்கிறது. காரணம் திரைக்கதை எழுதிய பாஹுல் கேம்ராவையும் கையாண்டிருக்கிறார். படத்தின் ஹீரோ திரைக்கதை என்றால் இன்னொரு ஹீரோ பின்னணி இசை. காடாகட்டும், வீட்டிற்குள், அருவி, போலீஸ் ஸ்டேஷன், ஹாஸ்ப்பிட்டல், ஜீப் என அனைத்தையும் உள்வாங்கி பிரதிபலித்திருக்கிறது. கதாபாத்திரங்களின் உள்ளுணர்வுகளை பார்வையாளனிடம் கடத்திய வகையில் இசையமைப்பாளர் முஜீப் கவர்கிறார்.

கொஞ்சம் ஸ்லோ. இருந்தும் நல்ல ஒரு உணர்வு. டிஸ்னி ஹாட்ஸ்டாரில்.  

அப்புறம்...

  

பார்த்த உடனே யாரிடம் வேண்டுமானாலும் எதை பற்றியும் பேசிவிடும் பழக்கம் என்னுடைய முன்னாள் boss இடம் கற்றுக்கொண்டது இல்லை இல்லை தொற்றிக்கொண்டது.  

அலுவலகத்திற்கு தினமும் ஒரு மணி நேர ரயில் பயணம். முதல் முறை பார்த்தபொழுது, பரஸ்பர விசாரிப்புகளுக்குப் பிறகு, அவர் இன்று என்ன சாப்பிட்டார், எதை டிவியில் விரும்பிப்பார்த்தார், குழந்தைகளிடம் ஏன் இன்று கோபம் கொண்டார், கிரிக்கட் ஸ்கோர், காட்டன் பேண்ட், பட்டன் மொபைல், ரிங்க ரிங்க ரிங்கா ரிங்காரே பாட்டு, புலுசு குழம்பு, தான் வெயிட் போட்டது, தொப்பை, காங்கிரஸ் கவர்ன்மென்ட், பாலிசி, ஹேர்ஸ்டைல் என எங்கெங்கோ பேச்சு தொட்டு வளர்ந்தது. பதினைந்து வருடங்களுக்கு முன் நடந்த இந்த சந்திப்பில் எனக்கு நினைவில் உள்ளது மட்டுமே மேலே. அவர் பகிர்ந்தது இன்னும் அதிகம். 

அவ்வப்போது தோன்றும் எண்ணங்களை அங்கங்கு இருப்பவரிடம் பகிர்ந்து கொள்ளும் பழக்கம் அங்கு ஆரம்பித்தது.  

'நம்மளால புதுசா ஒரு ஆளுகிட்ட ஜெல்லாகிறது கஷ்டம்ங்க' என்ற கேட்டகரியிலிருந்து, 'வாங்க பழகலாம்' என்கிற ரேஞ்சுக்கு மாறியாகிவிட்டது. வரிசையில் நின்று கொண்டிருக்கும்போது முன்னிற்பவரிடம், மீட்டிங்கில் அருகில் அமர்ந்திருக்கும் மற்ற துறை ஆட்களிடம், பஸ்ஸில், மெக்கானிக் ஷாப்பில், இட்லி பார்சல் கட்டும் நேரத்தில், கீரை பாட்டி, தெருவில் போளி விற்பவர், மட்டன் பாய், கோவில் பூஜாரி, ஓலா ட்ரைவர், தெருவில் இருக்கும் வாண்டுகள் என எல்லாரிடமும் 'அப்புறம்' என்று சகஜமாக இயங்க முடிகிறது.  

அதற்காக எல்லாரிடமும் எல்லாம் என்றில்லை. அங்கங்கு, அவரவரிடம் அப்பப்போதைக்கு பங்கம் இன்றி கலகலப்பாக கடத்தி விட முடிகிறது. கார் ஸ்பாவில் வெறும் பதினெட்டே நிமிடங்கள் பழகிய ஒருவர், ATM கார்டு போன்ற ஒரு பிரைவேட் மேரேஜ் இனிவிட்டேஷனை, மீண்டும் அச்சு அடித்து தரும் அளவுக்கு ஒரு கஜகஜா மெயின்டைன் பண்ண முடிகிறதென்றால், சுழி நம்மவர் போட்டது.  

திடீரென்று பாஸ் நினைப்பு ஏன்? ஏதேனும் விபரீதமா? இல்லை. இல்லை. குத்துக்கல் போல நன்றாகத்தான் இருக்கிறார். டிக்கட் வாங்கி பரலோகம் சென்றால் தான் புகழ் பாடி நினைவு கூற வேண்டுமா?  

இருக்கும்போதே கொண்டாடிவிடுவோம்.

திங்கள், நவம்பர் 11, 2024

அமரன்

 

 

2014 இல் முகுந்த் இறந்தபோது இறுதிமரியாதையில் அவரது குழந்தை அந்த பெட்டிக்கு அருகில் நின்று கொண்டு அந்த நிகழ்வின் தாக்கமறியாது நின்று கொண்டிருக்கும். ஆனால் பார்த்த நமக்கு அந்த பிஞ்சுக் குழந்தையின் அப்பாவியான முகம் கொடுத்த தாக்கம் சொல்லி மாளாது.  

மேஜர் முகுந்தின் வாழ்க்கை வரலாற்றை அசாதாரண மனம் கொண்டு தாங்கிய அவரது மனைவி இந்துவின் கண்கள் வழியே நமக்குத் தருகிற செல்லுலாய்டு ஓவியம் தான் அமரன். 

மேஜரின் முறுக்கேறிய உடல் கட்டுடன், மேஜர் என்ற பொறுப்பிற்க்கிணங்க தலைமைப்பண்பை பறைசாற்றும் பாத்திரத்தில் சிவா. கலகலவென நடித்து ஜனரஞ்சக நடிகராக வலம் வந்த சிவாவிற்கு, இதில் காதலன், தந்தை, மகன், சோல்ஜர், தலைவன், நண்பன் என பல்வேறு வேடம். முழுப் பொறுப்பையும் உணர்ந்து மேஜர் முகுந்தாகவே நம் கண்முன் தெரிகிறார். வாழ்நாள் முழுவதற்குமான ஒரு கதாபாத்திரம். வெல்டன் சிவா.  



படம் முழுக்க சாய் பல்லவி தான். முதன் முதலில் முகுந்தை பார்த்தது முதல் இறுதியில் விருதினை பெற்றுக்கொள்ளும் வரை அத்தனை உணர்ச்சிகள். அனாயசமாக நமக்குள் கடத்திவிடுகிறார். வெட்கம் கொள்வதாகட்டும், முகுந்தே முகுந்தே என்று கொஞ்சுவதாகட்டும், புல்லட் காயம், போனில் வெடிகுண்டுச் சத்தம் கேட்கும் நேரங்களில் வெடித்து அழுவதாகட்டும், அண்ணன் வந்து துக்க சேத்தி சொல்லும்போது உடைந்து அழுது பின் முகுந்தின் வார்த்தைக்கிணங்க கண்ணீரைத் துடைத்து நிமிர்ந்து பார்ப்பதாகட்டும் அவ்வளவு நேர்த்தி. கண்டிப்பாக ஒரு நேஷனல் அவார்ட் பார்சல். அதை விட இந்து தன்னை, தன காதலை, முகுந்தை மீண்டும் ஒரு முறை ரீவைண்ட் செய்து கொள்ள எடுத்துக்கொண்ட சிரத்தையாகத்தான் சாய் பல்லவியின் நடிப்பை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.   

ஜில்லா, வீரம், அதிபர் புஷ் வருகை, இந்து ரூமில் தொங்கும் ரோஜா ஏ ஆர் ரஹ்மான் என டீட்டெய்லிங்கில் ப்ரொடக்ஷனின் உழைப்புத் தெரிகிறது. காதல் bgm ஆகட்டும், சண்டை காட்சி புல்லட் தெறிப்புகளாகட்டும், சொல்லி அடிக்கிறது ஜி. வி பிரகாஷின் இசை. படம் நெடுகிலும் GVP ராஜ்ஜியம் தான். ஒற்றை பிள்ளைக்காக பரிதவிக்கும் அம்மா கேரக்டரில் கீதா கைலாசம் நிஜ அம்மாக்களை பிரதிபலிக்கிறார். ஆர்மிக்காரனுக்கு மகளை கட்டிக்கொடுப்பத்தில் முதலில் மறுதலித்து பிறகு மோனே என்று அரவணைத்துக்கொள்ளும் கதாபாத்திரத்தில் ஜார்ஜ் வர்கீஸ்.  

நாற்பது நிமிட டிரான்சிட் டிராவலில் மனைவியையும் மகளையும் உச்சி முகர்ந்து செல்லும் காட்சியில் இராணுவ வீரரின் வாழ்க்கை கண்ணீரை வரவழைக்கிறது. ஒரு தனி மனிதனின் மிலிட்டரி வாழ்க்கையை நகலெடுத்ததில் அமரன் ஒரு மைல்கல். 

முகுந்தின் வாழ்க்கையின் சாட்ச்சியாக அமரன் வெளிவந்திருக்கிறது. இதுபோல் பேர் தெரியாத பல முகுந்த்களின் அமர காவியம் சொல்லப்படாமலிருக்கிறது.  

இளம் வயது காதல், OTA ட்ரெயினிங், LoC, காஷ்மீர் அரசியல், தீவிரவாத தாக்குதல், இந்திய ராணுவ செயல்பாடுகள், வீரர்களின் மரணம் என ஒரு புல் பேக்கேஜாக அமரன் ஜொலிக்கிறார்.  

மஸ்ட் வாட்ச் மூவி.  

2014 மற்றும் 2023 இல் முகுந்தை பற்றி எழுதிய பதிவுகள் கீழே.   

 #AMARAN #saipallaviofficial #sivakarthikeyan

ஞாயிறு, நவம்பர் 10, 2024

சதுரகிரி பயணம்

 

எப்படியும் ஆறு ஏழு வருடங்கள் இருக்கும். இன்று போகலாம் நாளை போகலாம் என்று திட்டமிடும் போதெல்லாம் நடந்தேறவில்லை. திடீரென்று ஒரு நாள். ஆன்மிகப்பயணம் எல்லாமே அப்படித்தானே. 

தாணிப்பாறை சென்றடைந்த போது மணி மதியம் பன்னிரண்டு. அந்த வளைவுக்கு அருகில் வாகனத்தை நிப்பாட்டிவிட்டு, கூட்டம் செல்லும் வழியில் நடக்க ஆரம்பித்தாயிற்று. அமாவாசைக்கு முதல் நாள். பௌர்ணமி அல்லது அமாவாசை அன்று கூட்டம் மிகுதியாக இருக்கும். ஒரு நாள் முன் என்பதால் அந்த அளவுக்கு இல்லை. சிதறலாகத்தான் மக்கள் இருந்தார்கள். எவ்வளவு தூரம் எத்தனை மணி நேரப் பயணம் என்றெல்லாம் தெரியாது. கிளம்பியாயிற்று. ஆரம்பத்தில் பெரிதாகத் தெரியவில்லை. போகப்போக பேஸ்மண்ட் வீக் ஆகிவிட்டது. இந்த ஆரம்பத்தில் மற்றும் போகபோகவுக்கும் இடைவேளை என்பது பத்து நிமிடம் தான். ஆமாம். ஏற ஆரம்பித்து பத்தே நிமிடத்தில் மூச்சு இறைக்க ஆரம்பித்து விட்டது. பிறகு இருபத்தைந்து முப்பது டிகிரி சாய்மானத்தில் நடந்து கொண்டே இருந்தால்? எதிர்வந்த ஒருவரிடம் கேட்டேன்?. 'பாஸ் இன்னும் எவ்ளோ தூரம்?'. இந்த கேள்வியை இடைக்கொருமுறை எதிர் வருபவர்களிடம் கேட்டுக்கொண்டே இருந்தேன். அத்தனை பெரும் சொல்லிவைத்தாற் போல் ஒரே பதிலை வேறு வேறு வார்த்தைகளில் கூறிக்கொண்டே சென்றார்கள். 'இந்தா கூப்பிடு தூரம் தான். இந்தா பக்கத்தில தான். கொஞ்ச தூரம் போன உடனே, அவ்ளோதான். கொஞ்சம் முன்னாடி போங்க'. இந்த கூப்பிடு தூரம் என்பது ஆரம்பித்த பத்தாவது நிமிடத்திலேயே பதிலாக வந்து விழுந்தது. ஆனால் போகபோகத்தான் தெரிந்தது. இவர்கள் மோட்டிவேட் செய்கிறார்கள் என்று. மொத்தப் பயண நேரம் நான்கரை மணி நேரம். பத்து கிலோமீட்டர். 

மேலே உயரே உச்சியிலே என்று இந்திரா சௌந்திரராஜன் நாவலின் தலைப்பு போல் மேலே உயரே உச்சியிலே உள்ள மகாலிங்க சுவாமி கோவிலுக்குச் சென்றடைந்த பொது மணி மாலை நான்கரை. கோவிலுக்குச் செல்லும் முன் ஒரு சிறு நீரோடை. ஆறு என்று கொள்ளலாம். ஆனால் தண்ணீர் அந்த அளவு ஓடவில்லை. கணுக்கால் அளவுக்கு இருந்தது. தண்டால் எடுப்பது போல் படுத்து எந்திரித்து குளித்து சென்றோம். 

திட்டமிட்டது என்னவோ, அன்று இரவு அங்கு தங்கி அதிகாலை சுந்தர மகாலிங்க ஸ்வாமிகள் தரிசனம் செய்வது என்பது தான். ஆனால் நாங்கள் சென்றடைந்த நேரம் கோவிலில் யாரும் இல்லை. அப்படியே சன்னதி முன் உட்கார்ந்து இரண்டு மூன்று அடி அருகிலேயே சுயம்பு லிங்க தரிசனம். எப்படியும் அரை மணி நேரம் இருக்கும். 

பிறகு அந்த வளாகத்தைச் சுற்றி பார்த்தோம். நெடிதுயர்ந்த ஆல மரம். சூலம். விநாயகர், அம்மன் போன்ற விக்கிரகங்கள். ஒரு நீரோடை. மாலை ஆறு மணி போல். இருள் கவியும் ரம்மியமான நேரம். ஒரு விதமான பரந்துபட்ட அனுபவத்தை மனதிற்குள் தந்து கொண்டிருந்தது. 

ஆனால், ஆனால்... அந்த ரம்மியமான சூழலை ரசிக்க முடியாத அளவுக்கு மனிதக் கழிவுகள் ஆங்காங்கே. சில இடங்களில் கீழே பார்க்க முடியவில்லை. கீழே பார்க்காமல் கால் வைக்க முடியவில்லை. அதுபோன்றதொரு நிலை. கழிவறைகள் இல்லாமலில்லை. பராமரிப்பு மற்றும் போதாக்குறை. அல்லது அந்த நேரங்களில் ரயில் மக்கள் சுதந்திரக்காற்றை சுவாசிக்க நினைக்கிறார்களா என்பது புரியவில்லை. இரவு அந்த மலையில் தங்கலாம் என்ற முடிவை மறுசிந்தனையின்றி மாற்றிக்கொண்டு கீழே இறங்கிவிடலாம் என்று தீர்மானித்துவிட்டோம். அருகிலேயே சில கடைகள். சுவாமி படங்கள். கிழங்கு சூப். உடல் வலி தெரியாமல் இருக்க அந்த சூப் ஒன்றை குடித்து விட்டு ஒரு சிறு டார்ச் வாங்கி கொண்டு இறங்க ஆரம்பித்தோம். மழை தூர ஆரம்பித்தது. மணி ஏழரை அல்லது எட்டு இருக்கலாம். 

கடைகளைத்தாண்டிய உடன் அந்த வெளிச்சம் மறைந்து கும்மிருட்டு. அப்படி ஒரு இருட்டு. அருகில் இருக்கும் ஆள் தெரியவில்லை. இதில் பாதையை எங்கு கண்டுபிடிக்க. கும்பலாக நடக்க வேண்டிதான். அதில் ஒருவர் வேகமாக நடக்க அவருடைய வேகத்துக்கு ஈடு கொடுத்து நடக்க ஆரம்பித்தோம். போகபோகத்தான் தெரிந்தது அவர் அங்கு அதிக முறை வந்து பழக்கமுள்ளவர் என்று. திருமங்கலத்துக்காரர். அரவணைத்து கூட்டிச்சென்றார். பாசக்கார பயலுவ தான்டே. இரண்டு மூன்று முறை அந்த கும்பலில் வந்தவர் சிலர் பின்தங்கிவிட நின்று காத்திருந்து கூட்டிச்சென்றார்.  

அந்த கும்மிருட்டு சொன்னேனல்லவா? கால் வாசி தூரம் கடந்திருப்போம். அதே இருட்டு. கையில் இருக்கும் டார்ச் தாவி வேற எந்த வெளிச்சமும் கிடையாது. டார்ச் என்றால் பியர் க்ரில்ஸ் லெவலுக்கு ஒரு பெரிய பிளாஷ் லைட் போல யோசிக்கக் கூடாது. திருவிழாக்களில் ஒரு கயிறில் பத்து டார்ச் சேர்த்து சுற்றி வைத்து தொங்கப் போட்டிருப்பார்களே அந்த டார்ச். சுண்டுவிரல் அளவு தான். அந்த இரவு நேரத்தில் வண்டுகள் அல்லது பூச்சிகள் ரீங்கரிக்கும் சத்தம். ஒருவிதமான கலக்கமாக இருந்தது. அதற்கு வலு சேர்க்கும் விதமாக ஒரு பிளிறல். எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. சர்வ நாடியும் ஒரு நிமிடத்தில் ஒடுங்கி விட்டது. அப்படி ஒரு சத்தம். சத்தம் கேட்ட திசையில் திரும்பி பார்த்தால் ஒன்றும் தெரியவில்லை. முன்னரே சொன்னேனே. கும்மிருட்டு. அப்போது அந்த திருமங்கலத்துக்காரர் தான் சொன்னார். 'பயப்படாதீங்க. காட்டெருமை தான். சிவா சிவானு சொல்லிகிட்டே கீழ நடங்க. இந்த காட்டுல எந்த ஒரு மிருகமும் தாக்குனது கிடையாது.' என்று தைரியமூட்டினார். திருமங்கலத்துக்காரர் வீரர் தாம்டே. சிவ சிவா என்று சொல்லி வேகுவேகு என்று கீழே இறங்கிவிட்டோம். இரண்டே மணிநேரத்தில் இறங்கி தாணிப்பாறை வந்தடைந்தோம். அன்று இரவே ஊர் திரும்பியாகிவிட்டது.

அந்த மலையில் ஏறுவதற்கு சரியான உடை யாதெனில், ஒரு பெர்முடாஸ் அல்லது ஷாட்ஸ். ஒரு முண்டா பனியன். கையில் ஊன்றி நடக்க ஒரு குச்சி. சிலர் காலில் செருப்பு இல்லாமல் நடக்கிறார்கள். செருப்பு போட்டிருந்தால் வழுக்காமல் இருக்க வேண்டும். ஷூ ஓகே. மேலே கோவிலுக்கு முன் கழட்டி வைக்க இடமுண்டு. வழுக்குப் பாறை, கரடு முரடான ஒற்றையடி பாதை, நீரோடை, மணற்பரப்பு, புல்வெளி, கற்கள் என்று பாதைகள் நிறம் மாறும். தண்ணீர் பாட்டில்கள் ஓகே. ஆனாலும் அவை சுமை தான். எத்தனை லிட்டர் தான் எடுத்துச் செல்வது?. இரண்டு மூன்று இடங்களில் வாட்டர் பாட்டில் விற்பனை செயகிறார்கள். காலை ஆறு மணி போல் ஆரம்பித்துவிட்டால் மாலை ஆறு மணிக்குள் இறங்கி விடலாம். ஒரு நல்ல டார்ச் உசிதம். அலுப்பு இல்லாமல் பேசிக்கொண்டே நடப்பதற்கு ஒரு நல்ல குழு. குடும்பமாக ஏறுகிறார்கள். பெண்கள் குழந்தைகள் என்று எந்த பாகுபாடும் இல்லை. சமீபத்தில் வந்த வெள்ளத்திற்குப்பிறகு கட்டுப்பாடுகள் அதிகம். பௌர்ணமி தினம் அன்று தான் அனுமதி இருக்கிறது போல் தெரிகிறது. விசாரித்துக்கொள்ளலாம். 

எல்லாம் சிவமயம்

லப்பர் பந்து

 

குடும்பத்துக்கு நல்லவனா இருக்கிறவன் எல்லாம் ஊருக்கு நல்லவனா இருப்பான்னு சொல்ல முடியாது. ஊருக்கு நல்லவனா இருக்கிறவன் குடும்பத்துக்கு நல்லவனா இருப்பான்னு உத்திரவாதம் இல்லை. என் குடும்பத்துக்கு ஒருத்தன் போதும். 




டேய் அது சாதித்திமிருடா. அப்ப நீ பண்றது என்ன ஆம்பளைத் திமிரா?. 

இதுல மாட்டுக்குப் புரியுமா? நீ குணங்கிட்டு இங்க வந்துட்டன்னு?  

நினைப்பு வந்தா ஒரு புடவைல படுக்க மாட்டியா

எனக்கு எத்தனையோ SC பிரெண்ட்ஸ் இருக்காங்க. அவங்க ஒருத்தன கூட நான் அந்த மாதிரி பிரிச்சி பாத்தது இல்லன்னு சொல்றவனைத்தான் முத நம்ப முடியாது. விஷம்.

 

- லப்பர் பந்து ❤️❤️❤️

 

த வெ க

 

விமர்சனம் இல்லாத அரசியலும் இல்லை, தலைவனும் இருந்தது இல்லை.  

இறங்கி விளையாடும் துணிவும் ஆட்டமும் தான் வெற்றியை, வீரனை நிலை நிறுத்துகிறது. 



கட்சியின் பெயர், கொடி, கொள்கை, மாநாடு என படிக்கட்டுகள் ஒவ்வொன்றிலும் இன்று ஏறி நிற்கும் விஜய், வெற்றியை நிலை நாட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை. 

நடிகன் பின் தான் செல்ல வேண்டுமா? என்றால், தொடர்ச்சியாக மூன்று தேர்தல்களில் வென்ற எம்.ஜி.ஆர் ஃபார்முலா இது.  

நீ வர்லாம் வர்லாம் வா தலைவா ❤️❤️❤️

அஷோக் செல்வன்

 


நம்ம தமிழ் சினிமால இப்போதைக்கு மொழு மொழுமொழுனு ஒரு சாக்லேட் பாய் ஹீரோனா யோசிக்காம அஷோக் செல்வன தான் டிக் அடிக்கணும்.



 

ஜெமினி, கமல், ஹேய் ஹேய் கார்த்திக், பிரஷாந்த் வரிசைல இந்த அஷோக் செல்வனையும் வரிசைப்படுத்தலாம். லவ்வர் கேரக்டர்ல இவர் நடிச்ச தெகிடி, சவாலே சமாளி, 144, ஓ மை கடவுளே, மன்மத லீலை, நித்தம் ஒரு வானம், சபா நாயகன், பொன் ஒன்று கண்டேன் படங்கள் எல்லாம் அவ்ளோ துறு துறுனு இருக்கும். 

நடுவுல சில படங்கள் அடிதடினு திசை மாறிருக்கார். அண்டர் பிளே பண்ணி நடிச்ச போர் தொழில் மாதிரியான கேரக்டர் எடுபட்டாலும், தமிழ் சினிமால தற்போதைக்கு மிகுந்த தட்டுப்பாடு இருக்குற 'பார்த்தேன் ரசித்தேன் சாக்லேட் பாய் பிரசாந்த்' கேரக்டருக்கு ஒன்பது பொருத்தமும் பொருந்தி வர்ற நடிகர் நம்ம அஷோக் செல்வன் தான்.  

உஷாரா செலக்ட் பண்ணா, பாட்டு பாடவா பாடம் சொல்லவா காதல் மன்னனா ஒரு பெரிய ரவுண்ட் வரலாம்.  

Ashok Selvan

வேட்டையன்


சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி தப்பும் குற்றவாளிகளுக்குத் தண்டனை என்கௌண்டர் தான் என்று தீர்ப்பெழுதி சுட்டுத்தள்ளும் போலீஸ் அதிகாரி, தான் ஒரு ஹண்டர் அல்ல ப்ரொடக்டர் என்று மனமாறினால் அதுவே வேட்டையன்.

ரஜினி. 74 வயது ஆகப்போகிறது. நடையில் அதே வேகம், முடி கோதி விடும் அழகு, flip போனை அவரது பாணியில் திறந்து மூடும் ஸ்டைல், வயதிற்கேத்த நடனம், ஆக்ஷனில் நாடி நரம்பு முறுக்கேறி அனல் பறக்கும் பாங்கு, 'குறி வைத்தால் இரை விழணும்' என்று கூலிங் கிளாஸை போடும் ஸ்டைல் என 80s முதல் ஜென் z வரை கவர்ந்து, 'தான்' தான் இன்றும் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்று சொல்லியடிக்கிறார். 



என்னடா டைட்டில் கார்டில் பேர் வரவில்லையே என்று யோசிக்கும் நேரத்தில் ஒரு ஆக்ஷன் ப்ளாக்குடன் அட்டகாசமான ஓப்பனிங். feast. இன்னும் முடில கண்ணா என்று 'மனசிலாயோ' சாங்கில் ஒரு அட்டகாசமான பெர்பார்மன்ஸ். டபுள் தமாகா. ரஜினி வெறியர்களுக்கு அங்கேயே முழு திருப்தி. பைசா வசுல். 

மஞ்சு வாரியர், அமிதாப், பஹத், ரித்திகா, துஷாரா, ராணா, ரோகினி, அபிராமி, கிஷோர், லேட் சுந்தர் என ஒரு பெரிய பட்டாளமே இருக்கிறது. அத்தனை பேருக்கும் அளந்து வைத்தது போல் காட்சிகள். தங்கள் பங்குக்கு செவ்வெனே செய்திருக்கிறார்கள். ஒரே வருத்தம். தலைவருடன் கூடவே வந்தாலும், முக்கிய திருப்பத்தைத் தந்தாலும் நடிப்பு அரக்கன் பஹத்துக்கு இந்த ரோல் ஒரு சோளப்பொரி தான். இன்னும் அதகளப்படுத்தியிருப்பார். என்ன செய்வது. தலைவர் இருப்பதனால் அண்டர் பிளே.   

பறந்து வரும் சுருட்டில் தலைவரின் ஓப்பனிங் சீனை வைத்ததாகட்டும், குணாவைப் போட்டுத்தள்ளும் காட்சியாகட்டும், துஷாராவின் துயரத்தை காட்டும் காட்சியாகட்டும், கதிரின் கேமரா கோணங்கள் நெருடலில்லாமல் கதையுடன் இழைந்து போனதில் பல இடங்களில் புதுசு. முதல் பாதியை பரபரவென்று எடுத்துச் சென்ற எடிட்டர் பிலோமின் இரண்டாம் பாதியில் சற்றே தனது கத்திரியை இன்னும் கூர் தீட்டியிருக்கலாம்.  

ரஜினி என்றாலே போதும் போல. அருமையான தீம் பிடித்திருக்கிறார் அனிருத். 'சூப்பர் ஸ்டாருடா' என்ற தீம் தியேட்டரில் நெருப்பை பற்ற வைத்திருக்கிறது. அதிரடி ஆக்ஷன், bgm என எல்லா இடங்களிலும் ஸ்கோர் செய்திருக்கிறார் அனி.  

'மே அமிதாப் போல் ரஹா ஹூன்' என்ற அதே KBC வாய்ஸில் அமிதாப். நமக்கெல்லாம் அந்த குரல் தானே அமிதாப். 81 வயது. 67 வயதில் மீண்டும் திரைக்கு வந்து கோலோச்சி கொண்டிருக்கும் அமிதாப் இன்ஸபிரேஷன்.    

'அவன் தப்பிக்க விட்டது பணத்துக்காக இல்ல. நட்புக்காக. ரிலீஸ் ஹிம்', Truth is bitter', 'என்கவுண்டர் என்ற ஆய்தத்தை சாமானியனினுக்கு எதிராக எடுக்கும் அதே போலீஸ், அரசியல்வாதிக்கு, கட்சி தலைவர்களுக்கு, கல்வி தந்தைகளுக்கு எதிராக ஏன் எடுப்பதில்லை', 'இது அவசரம் இல்ல ஸ்பீட்', 'மூளை இல்லனா போலீஸ் ஆகலாம். திருடனாக முடியாது', 'ஜஸ்டிஸ் delayed is ஜஸ்டிஸ் denied, ஜஸ்டிஸ் hurried is ஜஸ்டிஸ் burried', 'அவசர தீர்ப்பு தேவையில்லை விரைவான நீதி வேண்டும்' போன்ற வசனங்களில் ஈர்க்கிறது ஞானவேல் கிருத்திகா கூட்டணி.  

குணாவை குற்றவாளியாக பார்வையாளர்களும் நம்பும் படி காட்சி அமைத்தது ஒரு நெருடல், போங்கு என்றால் ஆரம்பக்காட்சியில் தமிழகத்தில் போதைபொருள் பதுங்குவது, கடத்துவது என்று அதிரடி சரவெடியாக களமிறங்கிய ஞானவேல், சரண்யா கொலை, துப்பறிவது, இரண்டாம் பாதியில் NAT அகாடெமி என்று நீட் கோச்சிங்கிற்கு மடை மாறியது ஏன்?. தட்டி கேட்க வேண்டிய விஷயம் தான். குறை சொல்லவில்லை. ஆனால் சரண்யாவை கொலை செய்தவன் வெறும் அம்பு தான், எய்தவனை தேடிப்போக வேண்டும் என்று துப்புத்துலக்கிய அதே வேகத்தை, அறிவை, 'போதை குமரேசனை' எய்தவன் யார் என்று சேர்த்துத் துலக்கியிருக்கலாம். அங்கு மடை மாறிய காரணம் என்னவோ? எய்தவன் யாரென்று ஸ்க்ரிப்ட் எழுதும்போது அது தலைமைச் செயலகத்தில் லீட் கொண்டு விட்டதா இல்லை போதைப்பொருள் கொள்முதல் தலைவன் லோகேஷ் கனகராஜிடம் சென்று நின்றுவிட்டதா? சமூக நீதியை நீதியரசர் சந்துருவின் கேஸ் மூலம் சமரசமின்றி ஜெய் பீமில் காட்சிப்படுத்திய இயக்குனர் வேட்டையனில் பதுங்கியது ஏன்? ரஜினி, லைக்கா மற்றும் ஞானவேலுக்கே வெளிச்சம். 

எழுத்தா? அல்லது சூப்பர் ஸ்டார் பிம்பமா? என்ற போட்டியில் வென்றிருப்பது சூப்பர் ஸ்டார் தான். தாராளமாக குடும்பத்துடன் ரசிக்கலாம். கொண்டாடலாம்.   

ஶ்ரீருத் 

#vettaiyan #Rajinikanth #amithabachan #Thushara #Abhirami #rithikasingh #ManjuWarrier #RanaDaggubati #kishore #TJGnanavel #LycaProductions #RedGiantMovies #VettaiyanFromOct10

புதன், அக்டோபர் 09, 2024

கழிவிறக்கம்


அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த போது அவர் கூறிய ஒரு விஷயம் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆசிரியையாக வேலை பார்த்துக்கொண்டிருக்கும் அவர் மனைவி, பள்ளியில் உள்ள கழிவறை அசுத்தமாக இருப்பதால் காலை முதல் மாலை வரை அங்கு சிறுநீர் கூட கழிப்பதில்லை என்பதே அது. பெரும் பாதகம். ஆத்திரத்தை அடக்கினாலும்..என்ற சொலவடை தான் ஞாபகம் வருகிறது.

அலுவலகம் சென்றால் நான் என்னக்கு செய்யும் ஆகப்பெறும் பணி என்றால், காலை ஒரு லிட்டர் தண்ணீர் மத்திய உணவிற்குப் பிறகு ஒரு லிட்டர் தண்ணீர். பின்பு ஒரு மணி நேர விடையில் நீர் பிரித்தல் வேலை. எவ்வளவுக்கு எவ்வளவு உடல் கழிவுகளை வெளியேற்றாமல் அடக்குகிறோமோ அதே அளவுக்கு நோயையும் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கிறோம்.

குடல் பாதுகாப்பு பேணுதல் என்பது இப்பொழுது நல்ல விழிப்புணர்வு கண்டு வருகிறது. பசிக்கும் நேரத்தில் புசித்து உணர்வெழும் நேரத்தில் கழிவுகளை அகற்றினாலே நோய்கள் வாரா.      

போலவே, எட்டு மணி பத்து மணி வரை ஆபிசில் குப்பை கொட்டும் கண்ணியவான்கள் கவனத்தில் கொள்ளுதல் நல்லது. வேலைபளு மற்றும் ஸ்ட்ரெஸ் காரணமாக ஓவர் ஈட்டிங் செய்யும் கண்மணிகள் வேளாவேளைக்கு சக்கையை வெளியேற்றுவது அதிமுக்கியம். மனதுக்கு பாரமென்றால் வேண்டப்பட்டவரிடம் குமுறுவதைப்போல், வயிற்றுக்கு பாரமென்றால் பாரபட்சமின்றி கழிவறையில் தஞ்சமடையுங்கள்.  

கலகலவென்று சிரிப்பது மட்டும் முக்கியமில்லை, கழிவதும் தான்.

சிம்பிளாக சொல்வதென்றால் 'வந்தா போங்க'

தலைப்பில் இருக்கும் '' சரிதானே.