ஒரு நல்ல பீல் குட் மூவி என்று பார் போற்றிவிட்டது. இதற்கு மேல் இதில் என்ன கூற?
என்னை மிகவும் கவர்ந்தது மற்றும் ஆச்சர்யப்படவைத்தது இதன் திரை மொழி. ஒரு நல்ல நாவல் வாசிப்பாளனை முதல் பக்கத்தில் இருந்து கட்டிப்போட வேண்டும். அதே போன்று ஒரு நல்ல சினிமா முதல் காட்சியிலிருந்து பார்வையாளனை தன்னுள் ஈர்க்க வேண்டும்.
'மீன் பிடிக்கும்பொழுது திசை தெரியாமல் வந்துவிட்டோம், நல்லாருக்கீங்களா அண்ணா?' என்று ஆரம்பம் முதல் இறுதி வரையில் அந்த லாவகம் நன்றாக கூடி வந்திருக்கிறது. அபிஷன் ஜீவித்தின் முதல் படம் என்கிறார்கள். எப்படி முதல் படத்திலேயே இவ்வளவு செய்நேர்த்தி?. அதுவும் பல காட்சிகள் படம் நெடுகிலும் ஆங்காங்கே முன்னும் பின்னும் கோர்க்கப்பட்ட விதம் ஆச்சர்யம். உதாரணமாக, ஜெனி நாய், லெமன் ஜூஸ், ஆம்புலன்ஸை கூப்பிடு, தம்பி சாப்பிட்டியா? போன்ற காட்சிகள் ஒரு சோறு பதம். அதுமட்டுமா? ஒரு நல்ல திரைக்கதைக்கு உதாரணமாக காட்சிக்கு காட்சி திருப்பங்கள். ஒரு பக்கம் லாக்கப்பில் போலீசின் லத்தியும் அதிகாரமும் நீண்டு கொண்டிருக்கும் அதே நேரத்தில், அதற்கு நேர் மாறாக தாஸின் அன்புக்கரங்கள் கேசவ் நகரில் அதை விட இன்னும் அதிகமாக நீளுகின்றன.
பாராட்டப்படும் நேரத்தில் ஒரு நெகிழ்வான தருணம், சிரிப்பு என திரைமொழியில் நல்ல இலக்கணம். கொசுறு தகவலாக கேசவ் நகர் காலனியேவெறுக்கும் அந்த குடிகார இளைஞன் தான் படத்தின் டெரெக்டர் அபிஷன் ஜீவிந்த். படம் நெடுகிலும் நெகிழ்வான காட்சிகள். பார்க்கும் நமக்கு கண்களில் நீர் கோர்க்கவில்லையென்றால் ஆச்சர்யம் தான். அவ்வளவு நெகிழ்ச்சி. அகதியாக ஒரு குடும்பம் எதிர்கொள்ளும் நிகழ்வுகளை சோக டெம்ப்ளேட்டில் அடைக்காமல் கிட்டத்தட்ட டார்க் காமெடி ஜானரில் (ஒரு பாதி) பரிமாறியிருக்கிறார்.
சசிகுமார் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வரும் காட்சியில் எங்கே சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பது போல் குடும்பத்திற்குள் ஒரு கலகம் எழப்போகிறதோ என்று பதைபதைப்பு நம்மிடையே தொற்றிக்கொள்ளும் நேரத்தில் ஆற்றாமை, சோகம், பெருங்கோபம், விரக்தி, அரவணைப்பு, பாசம், காதல், நெகிழ்வு, உற்சாகம் என பல உணர்வுகளை கடத்துகிறது.
அபிஷனின் எழுத்துழைப்பு. இறுதியில் ஒரு சீரியல் போல டிராமா டெம்ப்ளேட்டில் அடக்கியது ஒரு நெருடல். ஆனால் பீல் குட் மூவி என்றாகிவிட்டது. இதை விட வேறு என்ன நல்ல முடிவை எழுதி விட முடியும். எதற்கு ஓடுகிறோம் என்று தெரியாமல் ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் சற்றே நிதானித்து அக்கம் பக்கம் அருகிலிருப்பவரிடம் அன்பைப் பகிருங்கள் என்று கூறும் டூரிஸ்ட் பேமிலிக்கு யோசிக்காமல் ஒரு டூர் செல்லலாம்.
#TouristFamily #AbishanJeevinth

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக