பேருந்து நிறுத்தத்தில் அவரை தினமும் பார்ப்பதுண்டு. கடந்த ஒரு வருடமாக கவனித்து வந்திருக்கிறேன். 60 வயதுக்கு குறையாமல் இருக்கும். சேர்ந்தாற்போல் இரண்டு நிமிடம் மேல் நிற்க மாட்டார். அங்கிருக்கும் பெஞ்சில் அமர்ந்து கொள்வார். பள்ளியில் படிக்கும் ஒரு பெண்ணை ஸ்கூல் பஸ்ஸில் ஏற்றி விட வருவார். ஒரு நாள் கூட தவறியதில்லை.
பரஸ்பர அறிமுகத்திற்குப் பிறகு பேச்சு கொடுத்தேன்.
‘யாரு சார்?’ ‘பேத்தி, பொண்ணோட பொண்ணு’ என்றார் சிறு புன்னகையுடன்.
‘ஓ. பரவால்லையே. பேத்தியோட ரொம்ப அட்டாச்டா. நீங்களே தினமும் கொண்டு வந்து விட்டுறீங்க’
‘அதில்லை தம்பி’ என்று அவர் சொன்ன கதை சோகமானது.
அவருக்கு ஒரு பெண் மற்றும் ஒரு ஆண். பையன் திருமணமாகி அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை எனும் அளவில் சந்திப்பு நடக்குமாம். மற்றபடிக்கு எல்லாமே வாட்சப் கால் தான். பெண்ணுக்குத் தான் பிரச்சினையே. திருமணமாகி ஒரு சில வருடங்களில் மாப்பிள்ளையின் திருமணம் தாண்டிய உறவுகள் தெரிய வந்திருக்கிறது. கண்டித்தும் பலனில்லை. விவாகரத்து வாங்கி பிரிந்துவிட்டனர். ஒரு பெண் குழந்தை உண்டு. பிரியும்போது இவர் பெண்ணின் கஸ்டடியில் வந்துவிட்டது. சற்று நொடிந்துபோனவர், மிகவும் சிரத்தை எடுத்து இரண்டாம் திருமணம் செய்து வைத்துள்ளார். ஆரம்பத்தில் அந்தப் பெண் குழந்தையை தன் சொந்த மகள் போல் தான் நடத்தியிருக்கிறார் அந்த இரண்டாவது மாப்பிள்ளை. ஆனால் சில மாதங்களிலேயே அந்தக் குழந்தையின் மீது எரிந்து விழுவது, காரணமில்லாமல் திட்டுவது என வன்மம் அதிகரித்துள்ளது. ஒரு கட்டத்தில் அந்தக் குழந்தையை விட்டுவிட்டு வந்தால் தான் வாழ்க்கை என்று மிரட்டியிருக்கிறான்.
பெண்ணுடைய வாழ்க்கை நன்றாக இருக்கட்டும் என்று, இவர் தன் பேத்தியை கூட்டி வந்து வளர்த்துக் கொண்டிருக்கிறார். பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கிறாள்.
அம்மாவின் அரவணைப்பும் அப்பாவின் அக்கறையும் பாராமல் வளரும் அந்தக் குழந்தையை நினைத்தால் வருத்தமாகத்தான் இருந்தது. பதினாறு வயதுக்குள் எத்தனை உளவியல் சிக்கலை கடந்திருக்கும். பெற்றெடுத்த தன் குழந்தையை பார்க்க முடியாமல் வேறொரு ஊரில் இருக்கும் தாயின் மனநிலை? இரண்டாம் கணவருக்கு பிறந்த அந்த குழந்தையுடன் மூத்தப் பெண்ணின் உறவு எதிர்காலத்தில் எப்படி இருக்கும்?
முதல் கணவரின் ஒழுக்கம் கெட்டுப்போனது தான் இத்தனை ரணங்களுக்கும் காரணம்.
‘சரி. விடுங்க சார். ரிட்டயர் ஆனப்புறம் யாருமே இல்லாம இருக்குறதுக்கு கடவுளா உங்களுக்கு ஒரு குழந்தை கொடுத்துருக்கார்னு நினைச்சுக்குங்க. இல்லைன்னா தனியாவே இருக்கனும்ல’ என்று சமாதானபடுத்தினேன்.
‘ஒரு வகைல நீங்க சொல்றது சரிதான். ஆனா என் ஒய்ஃப் கேன்சர் பேஷன்ட். எனக்கு பேஸ் மேக்கர் வச்சிருக்காங்க. தினம் இந்த டைமுக்கு சாப்பாடு கட்டி கொடுத்து, இங்க நேரத்துக்கு கொண்டு வந்து விடுறதுங்கறது எனக்கு சிரமமாத்தான் இருக்கு’ என்றார்.
ஒன்றும் சொல்லத்தோன்றவில்லை. அமைதியாக நின்றேன்.
‘படிச்சு முடிச்ச உடனே, இன்ஜினியரிங் சேக்கலாம்னு இருக்கேன். காலேஜ் பீஸ் எவ்ளோ வரும்?’ என்றார். அப்போது தான் தெரிந்தது, பேத்திக்கான முழுச் செலவையும் இவர் தான் செய்து கொண்டிருக்கிறார் என்பது.
ஸ்கூல் ஃபீஸ் மற்றும் இதரச் செலவுகள் என அவரது ரிட்டயர்மண்ட் கார்பஸ் ஓடும் நீரரிக்கும் மணல் போல கரைந்துகொண்டிருக்கிறது. வாழ்நாள் முழுவதும் ஓடிக்கொண்டே இருந்திருப்பார்கள்.
ஓய்வு பெற்ற பிறகாவது கிடைக்கும் சொற்ப ஓய்வுப் பணத்தில் நிம்மதியாய் மீதிப் பொழுதை கழிக்கலாம் என்று நினைக்கும் எத்தனை முதியவர்கள் இதுபோல் சிரமப்படுகிறார்கள் என்று தெரியவில்லை.
பேத்தி பஸ் ஏறிய பின் தன் வண்டியை நோக்கித் தளர்வாக நடந்துச் சென்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக