வெள்ளி, செப்டம்பர் 27, 2024

மெய்யழகன்


பால்ய வயதில் ஏற்பட்ட அனுபவம் காரணமாக உறவுகளே வேண்டாம் என்று ஒதுங்கி நிற்கும் அருள்மொழி, உறவுகள் தான் உலகம் என்று வாழும் மெய்யழகனுடன் ஒரு இரவு கழிக்க நேர்கிறது. அந்த ஓர் இரவில், மெய்யழகுனுடனான பயணத்தில் 'அன்பே இறை அன்பே நிரை அன்பே மறை' என்று அருள்மொழியுடன் நாமும் தெளிந்து கொண்டால் அது தான் 'மெய்யழகன்'

அருள்மொழியாக அர்விந்த் சாமி, மெய்யழகனாக கார்த்தி. படத்தின் 95 சதவீதம் இந்த இருவர் தான். இவர்கள் இருவருடன் இளவரசு, ஜெயபிரகாஷ், ராஜ்கிரண், ஶ்ரீதிவ்யா, கருணாகரன், தேவதர்ஷினி என கொஞ்சமே கொஞ்சமாக வந்திருந்தாலும் அனைவரும் நெஞ்சில் நிற்கும் அளவுக்கு கனம்..




பிரேம்குமாரின் இரண்டாவது படம். ஒரு சிலரின் உலகில் மட்டுமே அனைவரும் அன்பிற்குரியவர்கள் ஆவார்கள். பிரேமிடம் அப்படி ஒரு அன்பு மிதமிஞ்சி கிடக்கிறது. தந்தை கட்டிவிடும் கைக்கடிகாரத்தில் தொடங்குகிறது பிரேமின் நெகிழ்வு. பேருந்தில் கூடை தூக்கி விட்டு ஒரு கொய்யா கொடுத்து டாட்டா சொல்வது, இந்துமதி அரவிந்த் சாமியை தொட்டுச்செல்வது, வாஞ்சையாக சோறு பரிமாறுவது, வரவேற்பில்  பரிசளிப்பு, விருந்து சாப்பாட்டில் என ஒவ்வொரு பிரேமிலும் அவ்வளவு அன்பை தெளித்திருக்கிறார் பிரேம். மேடையில் அமர்ந்து அந்த கொலுசு போடும் சீன் அவ்வளவு அழகு மற்றும் உணர்ச்சிகளை கடத்தி விடுகிறது. சிறந்த இயக்குனர் மட்டுமல்ல, தான் ஒரு நல்ல ரசிகன், எழுத்தாளன், மனிதன் என்று காட்சிக்கு காட்சி பறை சாற்றி விடுகிறார். ❤️❤️❤️

பாத்திரத்தின் கனம் உணர்ந்து அப்படியே வாழ்ந்திருக்கிறார்கள் அர்விந்த் சாமியும், கார்த்தியும். கார்த்தி வரும் காட்சிகள் அனைத்தும் கலகலப்பு மற்றும் உயிர் துடிப்பு. ஜல்லிக்கட்டு தடை மனிதர்களுக்கு மட்டும் அல்ல, விலங்குகளுக்கு மன உளைச்சல் தான் என்று காட்டிய விதம் வெள்ளி திரைக்கு புதிது. வேண்டாம் என்று கொடுத்த சைக்கிளில் ஒரு குடும்பம் எப்படி தழைத் தோங்குகிறது என்று கார்த்தி சொல்லும் விவரணையில் ஒரு குறும் படமே அவ்வளவு நெகிழ்வாக எடுத்திருக்கிறார் பிரேம். பிரேம் எழுதிய  உணர்வை பிசாகாமல் கடத்தியதில் கார்த்தி மிளிர்கிறார். வீட்டில் 'பெரியவன்' என்று அழைப்பதற்கு பின் இப்படி ஒரு பரிணாமம் இருக்கிறது என்பது இன்று தான் புரிகிறது 👌. அடேங்கப்பா, எத்தனை 'அத்தான்'😊😊

அர்விந்த் சாமி கொள்ளை வெள்ளை. கொள்ளை handsome. 54 வயதிற்கே இப்படி என்றால், ரோஜா பம்பாய் படங்களின் போது ஏற்பட்டிருக்கும் craze கேட்கத் தேவையில்லை.  எந்த உடை என்றாலும் அவருடலில் அது மெருகேறிக் கொள்கிறது. இறுதிக் காட்சியில் ஓடி வரும் அர்விந்த், திறக்காத காட்டுக்குள்ளே அர்விந்தை ஞாபகப் படுத்துகிறார். ❤️❤️❤️ 

கோவிந்த் வசந்தாவின் இசை பிரேமின் எழுத்திற்கு அவ்வளவு உறுதுணை. பாடல்கள் அனைத்தும் இதம். அதுவும் கமலின் குரலில் 'யாரோ' பாடல் பதம். என்ன ஒரு depth. காதில் ரீங்கரித்து கொண்டே இருக்கிறது.  

நெற்களஞ்சியமாக உணவளிக்கும் தஞ்சாவூரும் நீடாமங்கலம் மகேந்திரன் கேமராவில் நம் கண்களுக்கு விருந்தாகின்றன. எடிட்டர் கோவிந்தராஜின் இன்னும் சில இடங்களில் கத்தரித்திருக்கலாம். தமிழினப் படுகொலை, ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு, சேரன் நடுகல் போன்ற நிகழ்வுகள் வலிந்து திணிக்கப்பட்டது போல் இருந்தாலும் அது தான் நம் வரலாறு. 'இதைத் தெரிந்து கொள்ளாமல் battle of Panipat தெரிந்து என்ன பயன்?',  'இறந்த காலம் இல்லை. கடந்த காலம். Glorious past', 'நல்லவனா இருக்கலாம் ஆனா நல்லவனா நடந்துக்க மட்டும் கூடாது' போன்ற வசனங்களில் இன்னும் ஈர்க்கிறார் பிரேம்.  

படம் மெதுவாகச் செல்கிறது என்ற முணுமுணுப்புகள் கேட்டது. வேகமாய் சென்று எதை அடையப் போகிறோம்? குறைந்த பட்சம் படம் பார்க்கும் பொழுதாவது கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக் கொள்வோம். 

நிரம்ப நாள் கழித்து ஒரு ஃபீல் குட் மூவி.  

#meyyazhagan #karthi #ArvindSwami

செவ்வாய், செப்டம்பர் 24, 2024

அரவிந்த் சாமியின் பேட்டி

 

கோபிநாத் நேர்காணல் எடுத்து சமீபத்தில் வெளிவந்த அரவிந்த் சாமியின் பேட்டி 'அடடா' போடா வைத்திருக்கிறது. ரசித்ததில் சில,
அரவிந்த் சாமி ஒரு சாதாரன மனிதனாக இப்பொழுது வாழ்கிறார். சாதாரண என்றால் எந்த உயிரையும் துன்புறுத்தாமல் தானுண்டு தன வேலையுண்டு என்ற வகையறா. அடிப்படை மனித சித்தாந்தமே அதுதானே. இந்த ஒன்று இருந்துவிட்டால் போதும். இனியெல்லாம் சுகமே. எடுத்துக்காட்டு இந்த சுந்தரபாண்டியபுரம் மாப்பிள்ளை.
ரசிகர் மன்றம் குறித்தான கேள்விக்கு அவருடைய பதில், இன்றைய பல தற்குறி ஹீரோக்களுக்கு செருப்படி. 'நீ கொடுக்கும் காசிற்கு எனக்கு தெரிந்த வரை திரையில் உன்னை மகிழ்விக்கிறேன். அதைத்தாண்டி உனக்கு கொடுப்பதற்கு என்னிடம் ஏதும் இல்லை. என்ன கொடுப்பதென்றும் எனக்கு தெரியாது. உன் வாழ்க்கையை நீ பார்' என்று கூறியருக்கிறார். வரேவேற்புகள்!!!
அவரது தந்தையான வி.டி. ஸ்வாமியின் 'ஒவ்வொருவரையும் மதிக்கக் கற்றுக்கொள்' என்ற அறிவுரை சிம்ப்ளி கிளாஸ். மனுஷனா இருங்க. மதிக்கக் கத்துக்கோங்க.
'தான் ஒன்றும் முற்றும் துறந்தவன் இல்லை. பருவ வயதில் கெட்ட விஷயங்களுக்கு வீட்டில் கொடுக்கும் பாக்கெட் மணி பத்தவில்லை. மாடலிங் செய்ய ஆரம்பித்தேன்'. உள்ளதை உள்ளபடி சொல்ல ஒரு guts வேண்டும்.
'என்று மற்றவர்களிடம் இருந்து validation எதிர்பார்கிறீர்களோ, அன்றே உங்கள் தன்னம்பிக்கையை இழந்து விடுகிறீர்கள்' என்கிறார்.
வெற்றி பெறுவதற்கு லக் தேவை. அந்த அதிர்ஷ்டம் என்பது சரியான நேரத்தில் சரியான இடத்தில் இருப்பது. அதற்கு பில் கேட்ஸ் மூலம் ஒரு உதாரணமும் தருகிறார்.
Idle Mind is Devil’s Workshop என்பார்கள். அதை உணர்ந்து இங்கு கூறியிருக்கிறார். அம்மா என்றால் இவருக்கு உயிர். அம்மா இல்லாத வாழ்வு தனக்கு வேண்டாம் என்று நினைத்துக்கொள்ளும் அளவுக்கும் உயிர். விதி இவரது அம்மாவை இவரிடம் இருந்து பிரித்து விடுகிறது. அதே வருடத்தில் அப்பாவையும். 1993 வருடம். இவருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. மணிரத்னம் இவரை முழுவதும் எங்கேஜ் செய்திருக்கிறார். அந்த diversion அந்த நேரத்தில் இவருக்கு கிடைக்க வில்லையென்றால் இந்த ஆளுமை இன்று இருந்திருக்க வாய்ப்பு இல்லை. சாய்ந்து கொள்ள ஒரு தோள். மூழ்கிக்கொள்ள ஒரு வேலை.
அவர் கூறிய ‘Sands of Time’ என்கிற சித்தாந்தம். கோடானுகோடி நட்சத்திரங்கள், கோள்கள், பல பேரண்டங்கள் இருக்கும் இந்த வெளியில் நம்முடைய பிரச்சினை எல்லாம் ஒரு பொருட்டே அல்ல எனபதுதான் அந்த சித்தாந்தம்.
மழை பெய்யும் முன்னிரவில் சூடான தேநீர் குடித்துக்கொண்டே உற்ற நண்பனுடன் பேசியது போன்ற ஒரு நல்ல அனுபவம்.
கொடுத்துவைத்திருந்தால் பாருங்கள்.

Interview

GOAT


***No spoilers***
தளபதியின் சினிமா கேரியரில் கிட்டத்தட்ட கடைசி படம். வினோத்துடன் மட்டும் ஒன்று பாக்கி. இனி மக்கள் பணி தான் என்று சினி வாழ்க்கைக்கு ஒய்வு அறிவித்தாகிவிட்டது. ஒரு farewell க்கு நெருங்கிய படம் எப்படி இருக்க வேண்டும்? தரமான செய்கையாக இருக்க வேண்டும் என்பது விஜய்க்கு மட்டுமல்ல எல்லோருடைய எதிர்பார்ப்பும் அதான்.
இருக்கிறதா?



இப்பொழுதெல்லாம் கதைக்கு ஒரு நாயகன் போதமாட்டேன் என்கிறது. மல்டி ஸ்டாரர் என்றாகிவிட்டது. பிசினஸ் அப்படி. எல்லா இடங்களிலும் போனியாக வேண்டும். அதற்காக ஸ்டேட்டுக்கு ஒரு நாயகன் என்று போங்காட்டம் ஆடவில்லை நம் வெங்கட் பிரபு. இது 'அழகிய தமிழ் மகன்' படம். நாயகனின் உறுதுணையாக அவர் தேடிக்கண்டு கொண்டது எல்லாம் தமிழ் நாயகர்களை மட்டுமே. டாப் ஸ்டார் பிரசாந்த், நடனப் புயல் பிரபு தேவா, அஜ்மல், சங்கீத மேகம் மோகன், அப்படி போடு த்ரிஷா, கேப்டன் விஜயகாந்த், சிவகார்த்திகேயன், லைலா, கனிகா, சினேகா, ஜெயராம் என முழுக்க முழுக்க தமிழ் நாயகர்கள். கவுண்டருடன் முறைமாமனில் அடித்த லொள்ளுக்குப் பிறகு ஜெயராம் சுந்தரத் தமிழனாகிவிட்டார். ஹி ஹி.. கேப்டனின் AI என்ட்ரி சர்ப்ரைஸ் டோக்கன். சரி. ஜெய்லரில் ரஜினி போன் போட்டு ஒவ்வொருத்தரையாக துவம்சம் செய்திருப்பார். 'என்னடா தலைவர் இறங்காமல் மற்றவர்களை இறக்கி விடுகிறாரே. ஓகே ஏஜ் பாக்டர்?' என்று ரசிகமணிகள் யோசிக்குமுன்னே 'ர ர ர ர' என்று அனிருத் bgm போட்டு மாஸ் காமித்து, 'என்னல யோசிக்கீங்க. படத்தை பாருங்கவே' என்று மடை மாற்றிவிடுவார். ஆனால் goat வேறு ரகம். என்னதான் பிரபுதேவா, அஜ்மல், பிரசாந்த் என்று இருந்தாலும் முழுக்க முழுக்க இறங்கி ஆடியிருப்பது என்னமோ தளபதி மட்டுமே. அவர்களுக்கும் சேர்த்து சண்டை செய்திருக்கிறார்.
ட்விஸ்ட் வைப்பத்தில் வெங்கட் பிரபுவிடம் உள்ள நேர்த்தியே நேர்த்தி தான். மங்காத்தாவிலேயே ஒரு ஆட்டம் காமித்திருப்பார்.Goatலும் அத்தனை ட்விஸ்ட். ஒரு சில யூகிக்க முடிந்தது. சில சர்ப்ரைஸாக இருந்தது. உறுத்தல் இல்லாத ட்விஸ்ட். கதை சொல்லலுக்காக காட்சிகள் முன்னும் பின்னும் ஓடினாலும் குழப்பம் இல்லாமல் கோர்த்ததில் எடிட்டர் வெங்கட் டெரக்டர் வெங்கட்டுக்கு உறுதுணையாக நின்றிருக்கிறார்.
ஆரம்பம் முதல் இறுதி வரை இருக்கை நுனியில் கட்டிப்போட்ட வித்தைக்காவே வெங்கட் பிரபுவிற்கு ஒரு சலாம்.
இரைச்சல் இல்லாமல் பின்னணி இசை அமைக்கும் யுக்தியை யுவனிடம் முன்னணியில் நின்று கற்றுக்கொள்ளலாம். ரீமிக்சிலும் நான் தான் வே கிங் என்று 'சொர்க்கமே என்றாலும்' பாட்டில் விசிட்டிங் கார்ட் கொடுத்துவிடுகிறார் இந்த யுவன். விசில் போடு, மட்ட போன்றவை தாளம் போட வைக்கின்றன. BGM அதகளம். கார், பைக் சேஸ் சீன்கள் எல்லாம் bourne identity படக்காட்சிகளை ஞாபகப்படுத்துகின்றன. சித்தார்த் நுனியின் கேமரா கைவண்ணம் கண்களுக்கு விருந்து.
மாஸான ஒரு இன்டெர்வல் பிளாக். தளபதி vs இளைய தளபதி என்று இண்டெர்வலில் தான் கேம் பிகின்ஸ் என்கிறார்கள். இறுதி காட்சியில் கூட எமோஷன்ஸ்க்கு இடம் கொடுக்காமல் பூமர், க்ரிஞ் என்று ஜென் zஐ உள்ளே இழுத்திருக்கிறார். வழக்கம் போல் வெங்கட் பிரபு பேமிலி எல்லோரும் இங்கே ஆஜர். பிரேம்ஜி, அரவிந்த், வைபவ், சுப்பு பஞ்சு, யுகேந்திரன் என அனைவருக்கும் வலிந்து திணிக்காமல் நெருடலில்லாமல் கதையினூடே பயணமாகும் படி ஒரு ரோல், இன்க்ளூடிங் பண்ணைபுரம் போர்ட். க்ளைமேக்சில் 'நீ யார் fan? என்று கேட்டு 'தல' என்று ஒரு சொல்லில் தல ரசிகர்களும் இங்கே சரண்டர். இறுதி காட்சிகளில் CSK மேட்சையும் கமென்டரியையும் க்ளைமேக்ஸ் சண்டை காட்சியுடன் புத்திசாலித்தனமாக இண்டர்லேஸ் செய்தது வெங்கட் அண்ட் கோவின் ஒண்டர்லா மாயாஜாலம்
❤️❤️❤️
.
அத்தனை கதாபாத்திரங்கள் நிறைந்து இருந்தாலும், படம் முழுக்க முழுக்க தளபதி தான். ஸ்க்ரீன் ப்ரெசென்ஸ் அப்படி ஒரு கரிஷ்மா. என்ன ஒரு ஆட்டம். என்ன ஒரு எனெர்ஜி. என்ன ஆக்ஷன் சீக்வன்ஸ். 50 வயது என்றெல்லாம் சொல்ல முடியாது. டெபினிஷன் பார் பிட்னெஸ் என்றால் அது தளபதி தான்.
சரி. குறைகளே இல்லையா? புள்ளி வைத்தாற்போல, டீ ஏஜிங் தொழிநுட்பம் முழுக்க முழுக்க கை கூடவில்லை. 50 சதவீதம் தான் ஓகே. சில இடங்கள் கச்சிதமாக இருந்தாலும் சில இடங்களில் (அசைவுகளில்) பிசிறு தட்டுகிறது. ஜீவனின் க்ளோஸ் அப் காட்சிகளில் தென்படும். டீ ஏஜிங் தொழில் நுட்பத்தை விடுத்து தளபதியை தன இயல்பிலேயே விட்டிருந்தால் கூட அலேக்காக தட்டி தூக்கியிருப்பார். இரு விஜய் வரும் காட்சிகளில் எல்லாம் டூப் தெரிகிறது. மைல்கல் படம் என்பதால் இன்னும் கொஞ்சம் சிரத்தை எடுத்திருக்கலாம். விஜய் அண்ணாவின் ஹேர்ஸ்டைல். விக்கா அல்லது பிளான்ட்டிங்கா என்று தெரியவில்லை. நமக்கும் ஓட்ட மாட்டேன் என்கிறது. கொஞ்சம் படிந்து வாரியிருக்கலாம். புகை பிடிக்கும் காட்சிகள், ஒரு லிப் லாக் காட்சி, கெட்ட வார்த்தைகள் போன்றவை தவிர்த்திருக்கலாம். வில்லத்தனத்தை இன்னும் இறக்குகிறேன் என்ற பெயரில் தீம் பார்க்கில் ஓவர் ஆக்டிங் தவிர்த்திருக்கலாம்.
கேரியரின் பீக்கில் அதுவும் 200 கோடி சம்பளம் வாங்கும் நேரத்தில் சினிமாவை விட்டு விலகுவது என்பது பெரும் முடிவு. கட்சி ஆரம்பித்து மக்களை முழுவதுமாக சுவீகரித்தது எம்.ஜி.ஆர் மட்டுமே. தனது 55வது வயதில் ADMK தொடங்கினார். அதே பாணியில் தளபதியும் 50வது வயதில் தமிழக வெற்றிக்கழகம் என்று இறங்கியிருக்கிறார். இருவரும் அரசியலில் இறங்கிய சூழ்நிலை வேறுவேறு. உச்சத்தில் இருந்த ஒருவர் முப்பது வருடங்களுக்கு மேலாக 'வருவேன் வருவேன்' என்று படம் ஓட்டிச் சென்றதற்கு மத்தியில் தைரியமாக இறங்கிய தளபதிக்கு ராயல் சல்யூட். அதுவும் ஆளும் கட்சி ஸ்திரமாக இயங்கிக்கொண்டிருக்கும் நேரத்தில் கட்சி ஆரம்பித்தது என்பது சொல்லி அடித்த கில்லி தானன்றி வேறு என்ன. நெஞ்சில் குடியிருக்கும் அவரின் ரசிகர்களையும் தாண்டி மக்களை ஈர்ப்பாரா? நிச்சயமாக என்று பட்சி சொல்கிறது. பொறுத்திருந்து கொண்டாடுவோம்
😊
.
மற்றபடிக்கு இதுதான் விஜயின் இறுதி படம் என்றால், ஒரு நல்ல நடிகனை, நடனக் கலைஞனை, பாடகனை, நாயகனை கண்டிப்பாக மிஸ் செய்வோம்
❤️❤️❤️
.
ஆல் தி பெஸ்ட் தலைவா
❤️❤️❤️
!!!

ஹஸீன் தில்ருபா & பிர் ஆயி ஹஸீன் தில்ருபா

 

2021ல நேரடியா நெட்பிளிக்ஸ்ல வெளியான படம். தப்ஸீ தான் ஹீரோ. விக்ராந்த் மாஸே ஹீரோயின். ஆமா. தப்சீய சுத்திதான் கதையே நகரும். புருஷன் பொண்டாட்டிக்குள்ள இன்னொருத்தன் நுழையிறான். அப்படி இப்படி ஆகி அந்த மூணாவது மனுஷன் வெளில போய்டுறான். இவங்க அதுக்கப்புறம் ரீகன்சைல் ஆகி வாழ்க்கையை ஆரம்பிக்கிறப்போ திரும்பியும் உள்ள வரான். அவங்க மூணு பேருக்குள்ள என்ன நடந்தது? அப்டிங்கறத செம ட்விஸ்ட்டோட முடிச்சிருப்பாங்க.




இதோட செகண்ட் பார்ட் 2024ல அதே நெட்பிலிக்ஸ்ல வெளி வந்திருக்கு. போலீசுக்கு பயந்து வேற ஒரு ஊர்ல தனித்தனியா வாழற அதே புருஷன் பொண்டாட்டிக்குள்ள இன்னொரு புது கேரக்டரை இண்ட்ரோடியுஸ் பண்ணிருக்காங்க. போலீஸ் தன்னை மோப்பம் பிடிக்கிறாங்கனு தெரிஞ்ச தப்சீ எப்டியாவது போலீஸ் பார்வையிலிருந்து தப்பிச்சிடலாம்னு பிளான் பண்ணி அந்த கேரக்டர கல்யாணமும் பண்ணிக்கிறாங்க. எங்களை சேத்துவைனு அந்த மூணாவது மனுஷன்கிட்டயே இவங்க ஹெல்ப் கேக்க, ‘என்னை என்ன தக்காளி தொக்குனு நினைச்சீங்களாடா’னு அங்க ஆரம்பிக்குது வில்லன் பயணம். வில்லனா சன்னி கௌஷல். பாத்தா முகமா இருக்கேன்னு பாத்தா firebolt வாட்ச்க்கு வருவாரே. விக்கி கௌஷல். அவரோட தம்பி. இவங்க மூணு பேரைத் தாண்டி இன்னொரு புது கேரக்டர். ‘போலீசையாடா ஏமாத்துறீங்க?’ அப்டினு மோட்டு சாச்சு மாமானு இன்வெஸ்டிகேட் பண்ணா வரார். இவங்க ரெண்டு பேரையும் சமாளிச்சிட்டாங்களா? அப்டிங்கறதை ட்விஸ்ட் மேல ட்விஸ்ட் வச்சி சொல்லிருக்காங்க.
ரெண்டு படத்துக்கும் வேற வேற டேரக்டர்ஸ். ஆனா ஒரே ரைட்டர். அதனால கேரக்டரைசேஷன்லாம் பக்காவா இருக்குது. புதுசா ரெண்டு பேரை இண்ட்ரோடியுஸ் பண்ணி இருந்தாலும் அவங்களுக்கும் ஒரு பிளாஷ் பேக்னு நல்ல ரைட்டிங். ஹரிதுவார் கங்கை ஆற்று பெருக்கு, ஆக்ரா தெருக்கள், தியோசர் நீர்வீழ்ச்சி அப்டினு லொகேஷன்ஸ்லாமே சூப்பர். வீகென்ட் வாட்ச்க்கு தாராளமா டிக் பண்ணலாம். பல ரோமன்ஸ் காட்சிகள் இருக்குறதுனால குடும்பமா ஒண்ணா பாக்காம தனித்தனியா போர்வையை போத்திட்டு பாத்துக்கலாம். தாராள தப்ஸீ காரணமா ஸ்ட்ரிக்ட்லி 18+.
ரெண்டு படமுமே நெட்பிளிக்ஸ் OTT தளத்துல இருக்கு.

வாழை 2024

வாழை 2024

மாரி செல்வராஜை 2013ல் வெளிவந்த 'மறக்கவே நினைக்கிறேன்' வாரந்திரத் தொடர் மூலம் தெரியும். விலாசம் கொடுத்தது ஆனந்த விகடன். ஒவ்வொரு வாரமும் அவரது எழுத்துக்களை வாசித்த பொழுது அவ்வளவு கவலைகள் தோன்றி மறையும். இவ்வளவு கஷ்டமா? என்று எந்த ஒரு வாரமும் கேட்க மறந்ததில்லை. அப்படி ஒரு வாழ்க்கை.
வாழை பார்த்தேன். பார்த்தேன் என்பதை விட ஒவ்வொரு பிரேமையும் ரசித்தேன் என்று சொல்லுமளவுக்கு ஒரு வெள்ளந்தியான கிராமத்தை கண் முன் கொண்டு வந்து நிறுத்தியுள்ளார். அந்த கிராமத்து மனிதர்களது தேவைகள் நம்மைப் போன்று அளவுக்கு அதிகமாக ஆசைப்படுவது இல்லை. அந்த ஒரு முரண்பாட்டிலேயே இந்த படத்தை கொண்டாடடவும் துண்டாடவும் என்று இரண்டு சமூகம்.



வாழையைப் பொறுத்தவரை கதை என்று சொல்லுவதைக்காட்டிலும் பயணம் என்ற சொல் சரியாக இருக்கும். ஏனெனில் வாழைப் படத்தில் அவர்களது வாழ்நாளில் ஒரு சில நாட்களை மட்டுமே பார்க்க முடிகிறது. க்ளைமேக்சில் சிவனணைந்தான் போஸ்டர் ஓட்டும் அளவுக்கு பெரிய ஹீரோவாக வளர்ந்தது போல் எல்லாம் காண்பிக்கப்படவில்லை. சொல்லப்போனால் இன்னும் அவர்களது துயரம் களையப்படவில்லை. சிவனணைந்தான் என்ன ஆனான்? அவனைப்போன்று கருங்குளம் மற்றும் பல குக்கிராமங்களில் இருக்கும் சிறுவர்கள் என்ன ஆவார்கள்? என்று கேள்வியே நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் தன்நலம் பேணும் வாழ்க்கையை முகத்தில் அறைந்து ஒரு வித அசௌகரியத்தை கொடுத்து விடுகிறது.
பல இடங்களில் இருந்த டீடைலிங் ரசிக்கும் படி இருந்தது. உதாரணமாக, சிம்னி விளக்கு ஏற்றப்படும் பொழுது பின்னால் தெரியும் அவன் அம்மா படுத்திருக்கும் கட்டிலின் செங்கல் கால், மாலை வீடு திரும்பும் பூங்கொடி டீச்சரின் வாடியப் பூச்சரம், சிவனணைந்தான் அப்பா பெட்டியில் ஒளிந்திருக்கும் CITU கொடி. வாழை இலை குடையில் நண்பனுடன் மழைக்கு ஒதுங்கியது, ஸ்கூலுக்கு எடுத்துச் செல்லும் நைந்த ஒயர் கூடை, கரும் பலகையில் தெரிந்த 'மிக மிக அதிகம் பேசியவர்கள்', வேம்புவின் பஃப் கைச்சட்டை, மருதாணி கொடுக்கும் பொழுது 'எடுத்துக்கண்ணே' என்று ஒரு வார்த்தையில் வேம்புவை கனிக்கு கொடுக்க சிவனணைந்தான் சம்மதம் தெரிவிப்பது, சேகரும் சிவனணைந்தானும் நடந்து வரும் வழியில் தண்ணீரை கடந்து செல்லும் இரு ரயில் பூச்சிகள் என இன்னும் நிறைய.
பஞ்சு மிட்டாய் பாட்டிற்கு பூங்கொடி டீச்சர் ஆடிய ஆட்டம் ரசிக்கும்படி என்பதைத் தாண்டி அனைத்து ஆரம்பப் பள்ளிகளிலும் ஆண்டு விழாவிற்கு ஆசையாக நடனம் கற்றுத்தரும் அனைத்து டீச்சர்களுக்கும் அது சமர்ப்பணம். கொண்டடித் தீர்த்திருக்கிறார் மாரி. ஒரு கர்சீப் கொண்டு, சுகன்யா சினிமாப்பாடலை வைத்து இத்தனை கதை சொல்ல முடியுமா? முடியும் என்று மட்டும் இல்லாமல் ரசிக்கும்படியும் சொல்ல முடியும் என்று கூறியிருக்கிறார்.
சிறு மாரி செல்வராஜாக பொன்வெல் மற்றும் சேகர் கதாபாத்திரத்தில் ராகுல், பூங்கொடி நிகிலா, கலை கணி, வேம்பு திவ்யா, ஜானகி தாய் என எல்லாரும் டெய்லர் மேட். திருநெல்வேலி வட்டார மொழி
❤️❤️❤️
. வானத்தில் பருந்து போல் தெரியும் பல ஏரியல் ஷாட்கள் கிராமத்து பசுமையை அக்ஷரம் பிசகாமல் கண் முன்னே நிறுத்துகின்றன. ஆரம்பத்தில் தாரை தப்பட்டையுடன் உருமும் இசை இறுதிவரை வாழைக்கு மூடாக்கு போட்டு உரம் ஏற்றியிருக்கிறது.
க்ளைமேக்ஸைத் தவிர படம் நெடுகிலும் சேகர் கதாபாத்திரம் மூலம் அரங்கம் முழுவதும் சிரிப்பொலி தான். ஆனால் யோசித்து பார்த்தால் அத்தனை வலிகளுக்கு மத்தியில் அவ்வளவு மகிழ்ச்சியாக எப்படி வாழப்பழகிக் கொள்கிறார்கள்? என்பது ஆச்சர்யமாக இருக்கிறது. நாம் திருப்தியே அடையாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் நம்முடைய மெட்டியரிலிஸ்டிக் வாழ்க்கை மீது அத்தனை கேள்விகளை எழுப்பிகிறது. வாழை சுமக்க செல்லாத நாட்கள் எல்லாமே அவர்களுக்கு விடுமுறை தான். கொண்டாட்டம் தான். மருதாணி வைத்த கை போதும் அவர்கள் முகத்தில் புன்னகை வரவழைக்க.
2024இல் இதே ஆனந்த விகடனில் சம்மட்டி ஆட்டம் எழுத ஆரம்பித்திருக்கிறார். தனது வாழ்க்கையையே திரும்பி பார்க்கும்படியாக ஒரு தொடர். நாற்பது வயது தானே ஆகிறது. அதுக்குள் ஒரு சுயசரிதையா? அவ்வளவு அனுபவமா? என்ன எழுதப்போகிறார்? இல்லை இல்லை என்ன எழுதிவிடப்போகிறார்? என்று ஆரம்பத்தில் யோசித்தவனை சம்மட்டியால் அடித்தது போன்றிருந்தது அவரது ஒவ்வொரு வார்த்தைகளும். உரத்து சொல்வதற்கு வயது தேவையில்லை. வலிகள் போதும் என்பதை அன்று புரிந்துகொண்டேன்.
'சம்மட்டி ஆட்டம்' தொடரில் அந்த சினிமாப்பாட்டு புத்தகங்கள், பூங்கொடி டீச்சர், வேம்பு அக்காவின் கணித டியூஷன், CITU காம்ரேடாக அவர் வடித்திருக்கும் கனி கதாபாத்திரம் என ஒவ்வொன்றும் மாரியைத் துயர நிழல்களிருந்து எவ்வாறு மீட்டெடுத்தன என்று கூறியிருப்பார். பசியில் வாழைப்பழம் சாப்பிட்டு தப்பிப்பது போல் காட்சி அமைந்திருக்கும். ஆனால் உண்மையில் ஊர் கூட்டி திருட்டுப்பட்டம் கட்டி துயரம் தாளாது இறந்த ஒரு அண்ணனின் கதை அது.
இரண்டு மாதங்கள் முன்பு தான் வாழைத்தோப்பு, சுமை தூக்குவது பற்றி, கால்கள் இடறி விழுவது என சம்மட்டி ஆட்டத்தில் எழுதியிருந்தார். அந்த பகுதி இரண்டு வாரம் மட்டுமே வந்திருந்தது. மொத்தத்தில் அதை 5% என்று வைத்துக் கொள்ளலாம். அந்த இரண்டு வாரத்தில் மட்டும் வந்திருந்ததை மட்டும் வைத்தே ஒரு புனைவுடன் ஊரே கொண்டாடும் ஒரு சினிமாவாக கொடுக்க முடிகிறது என்றால் அறுதியிட்டுச் சொல்கிறேன். நிஜ வாழ்க்கைக்கு அருகில் இன்னும் பல உணர்ச்சிப்பூர்வமான கதைகளை அவரால் சொல்ல முடியும். அவ்வளவு அனுபவங்கள் கொட்டிக்கிடக்கின்றன.
நிற்க. இந்த படைப்பில் எங்கிருந்து சாதி தோன்றியது. தனது வாழ்க்கையை, சான்று இருப்போரின் வாழ்க்கையை ஊருக்கு காட்ட நினைத்ததில் எங்கே ஊடுறுவுகிறது அரசியல்? வாழை வெளியீட்டை ஒட்டி வெளிவந்த விமர்சனங்கள் சில, காழ்ப்புணர்வை வரைமுறையின்றி கொட்டித் தீர்த்தன. 'எடுப்பது விளிம்பு நிலை மக்களைப் பற்றி. ஆனால் வந்திறங்குவது பென்ஸ் காரில்' என்று ஒரு கன்டென்ட் சுற்றியது. என்ன மாதிரியான ஒரு மன நோய் பீடித்திருந்தால் இது போன்ற விஷ வார்த்தைகளை கக்கியிருக்க முடியும். இரண்டு தார்களை சுமக்க முடியாமல் சுமந்த அதே சிறு பைய்யன் தான் இன்று பல விருதுகளை வாங்கி குவித்திருக்கும் மாரி செல்வராஜ். அவர் பென்ஸ் காரில் வந்திறங்குவது எத்தனை சிவனனைந்தான்களுக்கு உந்து சக்தியாக இருக்கும்? ஆனால் அதை பொறுக்க முடியவில்லை பிணி கொண்டவர்களால்.
படம் முடிந்து வெளியில் வரும்போது எட்டு வயதுக்க மதிக்கத்தக்க ஒரு சிறு குழந்தை அதன் அப்பாவிடம் கேட்டது 'இன்னொரு லாரி போட்டு இருந்தா இந்த பிரச்சனையே வந்திருக்காதுல?' உயிரைத் துச்சம் என மதிக்கும் முதல் முதலாளித்துவ வர்க்கத்தை நோக்கி எழுப்பப்பட்ட இந்த கேள்வி போதும் இந்த படத்தின் வெற்றியை பறைசாற்ற.
நீங்கள் எடுங்கள் மாரி செல்வராஜ்
❤️❤️❤️