ஞாயிறு, ஜனவரி 23, 2022

பாண்டிராஜ்


விக்ரமனின் சூர்யவம்சம், லிங்குசாமியின் ஆனந்தம் படத்திற்கு பிறகு  நல்ல குடும்ப சித்திரம் 'நம்ம வீட்டு பிள்ளை'. மேலே சொன்ன படங்களில் இல்லாத ஒரு விஷயம் இதில் என்னவென்றால், வத வத வென்று ஊருபட்ட கதாபாத்திரங்களை உள்ளே நுழைத்து எல்லோரையும் தேமே என்று திரியவிடாமல் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் அழுத்தமான ஸ்பேஸ் என்று ஒரு பக்காவான கமெர்சியல் ஸ்க்ரிப்ட்டிற்கு அருமையான எடுத்துக்காட்டு 'நம்ம வீட்டு பிள்ளை'. 

 

எல்லோருக்கும் எல்லாமே வந்துவிடுவதில்லை. சைல்டு சைக்காலஜியை அலசும் பசங்க, பசங்க 2, கோலி சோடா படங்களையும் எடுக்கத்தெரியும். 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படத்தில் காமெடியும் சென்டிமென்டும் போட்டிபோடும். அதற்கு பின் அந்த ஜானருக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத அதிரடி ஆக்ஷன் சரவெடி 'கதகளி'. இப்பொழுது ஒளிப்பரப்பினாலும் 'ராட்சஸன்' படம் போன்ற விறுவிறுப்பு.  இறங்கி தான் பார்க்கலாமே என்பது போல 'கடைக்குட்டி சிங்கம்' மற்றும் 'நம்ம வீட்டு பிள்ளை'. கடைக்குட்டி சிங்கம் படத்தில் அதிகமாக சீரியல் வாடை என்ற கம்ப்ளெய்ண்ட்டை சரியாக கவனித்து அடுத்த படத்தில் கொஞ்சமும் மிகாமல் ஒரு பக்காவான ஸ்க்ரிப்ட். வெறும் ஸ்க்ரிப்ட் மட்டும் என்று சொல்லிவிடாதபடிக்கு காஸ்ட்டிங்கிலும் சரியான கவனம்.  மாமாவாக வேல ராமமூர்த்தியும் தாத்தாவாக பாரதிராஜாவும் எல்லார் வீட்டிலும் ஈசியாக கனெக்ட் செய்யக்கூடிய கதாபாத்திரங்கள். 



மாஸ் எலிமெண்ட்டுக்கு ஹீரோயிச சண்டைக்காட்சி, காமெடிக்கு சூரி மற்றும் குழந்தைகளை கவர 'கும்முறு டப்பறு' பாடல், முந்திரிக்கொட்டை பைய்யன் கதாப்பாத்திரம், எல்லை மீறாத ரொமான்ஸுக்கு மாங்கனி, எமோஷனலுக்கு எல்லா கேரக்டரும் என மீண்டும் மீண்டும் ஆச்சர்யப்பட வைக்கும் ஸ்க்ரிப்ட். வசனங்கள் ஒவ்வொன்றும் தேர்ந்தெடுத்து கோர்க்கப்பட்ட மொட்டுக்கள் போல அவ்வளவு ஈர்ப்பு. இதையெல்லாம் எழுதி பக்காவாக கனெக்ட் செய்த மாயாஜாலம், அட போடவைக்கிறது. அந்த எமோஷனலில் அழுகை வரவில்லையா, இமானின் பக்காவான BGM பிழிந்து விடும்.  படம்தானே என்று சாதாரணமாக கடக்க முடியவில்லை. அத்தனை பேரின் ஒருமித்த உழைப்பு. அவ்வளவு திட்டமிட்ட உழைப்பு. வெற்றியடைய வேண்டும் என்ற முனைப்பு.  

தங்கச்சி சென்டிமென்ட் என்று அண்ணாத்த படத்தில் ரஜினியை டரியலாக்கும் முன், சிறுத்தை சிவா இந்த படத்தை ஒரு முறை பார்த்திருக்கலாம். 

இது சீரியல் காபி, பழைய படங்களை ரீமிக்ஸ் செய்திருக்கிறார்கள் என்று என்னதான் பேசினாலும், கமர்சியல் படத்திற்கு அதுவும் குடும்பத்தை வரவழைக்கும் கமர்சியல் ஸ்க்ரிப்ட்டிற்கான பக்காவான எடுத்துக்காட்டு 'நம்ம வீட்டு பிள்ளை'. ஆஸ்கர் வாங்கினால் தான் ஆச்சர்யப்படவேண்டுமா? பெரும்பாரியான வெகுஜனமும் ரசிக்கும் வகையில் எடுத்தாலும் அது ஆஸ்கர் தான்.  

'எதற்கும் துணிந்தவன்' இல் என்ன மேஜிக் பண்ணிருக்கீங்க பாண்டிராஜ் சார்?

புதன், ஜனவரி 12, 2022

புராரி மரணங்கள்



2018 இல் நடந்த புராரி மரணங்களை அவ்வளவு எளிதாக அன்று ஜீரணித்து விட முடியவில்லை. ஏனெனில் அன்று மொபைலில் வலம் வந்தவை எல்லாமே சென்சார் செய்யப்படாத ரா (raw) புட்டேஜ்கள். சாதாரணமாக ஒரு வீட்டின் மாடிக்கு செல்லும் படி மேல் ஏறி வருவது போல் ஆரம்பிக்கும் அந்த வீடியோவில், மாடியில் இருக்கும் அறைக்குள் நுழைந்த பின்பு இறந்து போயிருக்கும் 11 சடலங்களை, அதுவும் உத்தரத்தில் தொங்கி ஊசலாடிக்கொண்டிருக்கும் சடலங்களை பார்த்தபின் மறந்தும் சில நாட்கள் இருட்டில் இருந்தது கிடையாது. அப்படி ஒரு காட்சி அது. தற்கொலையா கொலையா என்று போலீசாரே தலையை பிய்த்துக்கொண்ட நேரம்.

 

மறதி ஒரு அற்புதமான மருந்து என்பது போல, அந்த நிகழ்வை நன்றாகவே மறந்து விட்ட தருணத்தில், 2021 இல் House of Secrets வெப் சீரிஸ் வெளிவந்திருக்கிறது. சும்மா சொல்லக்கூடாது. கடமைக்கேனும் வழக்கை பற்றி ஆராயாமல் ஆதியோடு அந்தமாய் துப்பு துலக்கி இருக்கின்றனர். மூன்று எபிசோட்கள். தரமான கவரேஜ். முதல் எபிசோடில் சம்பவத்தன்று என்ன நடந்தது என்பதை பற்றியும், இரண்டாவது எபிசோடில் துப்பு துலக்குவதற்கு மிகவும் உதவிய ஆதாரமான டயரி குறிப்புகள் பற்றியும், மூன்றாவது எபிசோடில் இந்த விபத்து நடப்பதற்கான காரணங்கள் என்ன போன்றவற்றையும் பதிவு செய்துள்ளனர். அதிலும் அந்த மூன்றாவது எபிசோடில் உபயோகப்படுத்தப்பட்ட 'psychological anatomy ' என்ற வார்த்தை மிகவும் புதிதாகவும் அடர்த்தியான அர்த்தம் நிறைந்ததாகவும் விளங்குகிறது. பெரும்பாலான காட்சிகள் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டாலும், மனதளவில் தைரியம் உள்ளவர்கள் மட்டுமே பார்க்க பரிந்துரைக்கிறேன்.

 

ஒவ்வொரு எபிசோடை பற்றியும் நீண்ட பதிவு எழுதலாம் என்ற திட்டத்தை தற்போது எழுதும்பொழுது முற்றிலுமாக தவிர்க்க நினைக்கிறன். பிரச்சினை என்னவென்றால் அதை பற்றிய நீண்ட பதிவிற்காக ஒவ்வொரு எபிசோடின் காட்சிகளையும் நினைவுபடுத்தி பார்க்க வேண்டித்துள்ளது. அந்த காட்சிகளுக்குள் மீண்டும் சென்று விட்டு வெளிவருவதற்கு மனதளவில் நான் தைரியமாக இல்லை. என்ன நடந்தது என்பதையும் அதனால் தோன்றும் உள்ளக்கிடக்கைகளையும் சுருக்கமாக பதிவு செய்கிறேன்.

 

சம்பவம் நடந்து விட்டது. போலீசார் அந்த வழக்கை விசாரிக்கும் பொழுது தடுமாறுகின்றனர். அந்த டைரி கிடைத்த மறு நிமிடம் தான் இந்த வழக்கில் ஒரு தெளிவான பாதை கிடைத்திருக்கிறது. அன்று இரவு மட்டும் அல்ல சில நாட்களாக ஏன் வருடங்களாகக்கூட அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் ஒவ்வொருவரும் என்ன செய்ய வேண்டும் எப்படி செய்யவேண்டும் என்பதை தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார்கள். இதன் அடிப்படையில் சைக்கலாஜிக்கல் அனாடமி செய்து இதை தற்கொலை என்று நிரூபிக்கின்ற்னர். விஷயம் இதுதான். அந்த குடும்பத்தின் முதியவரான தாத்தா இறந்து விடுகிறார். அவரது பிரிவை தாள முடியாத அவரது குழந்தைகள் (எல்லோருமே 50 வயதை நெருங்குகிறவர்கள்) வருத்தப்படுகின்றன. அதிலும் மூத்த மகனுக்கு ஒரு விபத்தின் போது வாய் பேச முடியாமல் போகிறது. மருத்துவம் பார்த்தும் பலனில்லை. இவர் மீண்டும் வாய் பேச வேண்டுமென்றால் வீட்டில் உள்ள எல்லோரும் இணைந்து 'அனுமான் சாலிசா' படிக்க வேண்டும் என்று அவரது இறந்து போன தந்தை சொன்னதாக குடும்பத்தினரிடம் தெரியப்படுத்துகிறார். அனைவரும் படிக்க ஆரம்பிக்கின்றனர். ஒரு நாள் 'அனுமன் சாலீஸாவை' பாடிக்கொண்டிருக்கும்போதே மூத்தவருக்கு பேச்சு வந்துவிடுகிறது. இவரும் இறந்து போன தனது தந்தையின் ஆசை இன்னது தான் என்றும் அவர் தன்னுடன் எப்பொழுதும் பேசிக்கொண்டிருக்கிறார் என்றும் குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். அவர் சொன்னது போல் நடந்தவுடன் குடும்பமே அவரது வார்த்தையை தெய்வ வாக்காக நினைக்கிறது.

 

இப்படியாக குடும்பத்தில் உள்ள சிறியவர் முதல் பெரியவர் வரை மூத்தவர் சொல்வதை மட்டுமே மறுபேச்சின்றி கேட்டுக்கொண்டு அதன்படி நடக்கின்றனர். 70 வயது முதல் பத்து வயது வரை என எல்லா வயதினரும் இதில் அடக்கம். சம்பவம் நடந்த சில நாட்கள் முன்பு, அதாவது 2018ல் தனது பெண்ணுக்கு மணமுடிக்க ஏற்பாடு செயகின்றார். திருமணம் நெருங்கி வரும் வேளையில் இந்த சம்பவம் நடக்கிறது. இதை banyan tree பூஜை என்று டைரியில் குறிப்பிட்டிருக்கின்றனர். அதாவது ஆலமரத்தின் விழுதுகள் போல எல்லோரும் கயிற்றில் தொங்கி கொண்டு பூஜை செய்ய வேண்டும். இந்த பூஜைக்கு பிறகு எல்லோரும் மீண்டும் உயிர்த்துவருவோம் என்று நம்பிக்கையூட்டியிருக்கிறார். இதை நம்பியே எல்லோரும் அவர் பேச்சை கேட்டு இதுபோன்ற முடிவை எடுத்திருக்கின்றனர்.

 

மனநல மருத்துவர்கள் எல்லோரும் இணைந்து ஒரு முடிவு எட்டிய பின் இந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டுள்ளது. அதாவது அதுவரை தன பேச்சை கேட்டுக்கொண்டிருந்த அந்த குடும்பம், தனது பெண் இன்னொரு வீட்டிற்கு மருமகளாக சென்ற பின் எங்கே அந்த மரியாதை கிடைக்காமல் போய்விடுமோ என்ற எண்ணத்தில், மூத்தவர் எடுத்த முடிவு என்று அனுமானிக்கினறனர். இதில பொதிந்திருக்கும் ஆச்சர்யம் என்னவெனில் அந்த வீடு ஒன்றும் தனித்திருக்கவில்லை. அடர்த்தியான ஜன நெருக்கடி உள்ள ஒரு தெரு. ஒரு வீடு கடந்த பதினைந்து வருடங்களுக்கு மேலாக எவ்வாறு இயங்குகிறது என்ற அடிப்படை உணர்வு கூட இல்லாத சமூகத்தில் தான் நாம் இருக்கிறோம் என்பது மிகப்பெரிய சாபக்கேடு. விபத்து நடக்கும் முன்பு ஒரு வாரத்திற்கும் மேலாக இதற்கான திட்டமிடலை அந்த குடும்பம் மேற்கொண்டுள்ளது. அந்த குடும்பத்தாரும் இதை பற்றி வெளியில் தெரிவிக்கவில்லை. அந்த சிறு குழந்தை உட்பட. புறத்தில் உள்ளவர்களும் விசாரிக்கவில்லை.  அந்த குடும்பத்தை மட்டும் 'சைக்கலாஜிக்கல் அனாடமி' செய்தால் பத்தாது. மொத்த சமூகத்தையும் 'சைக்கலாஜிக்கல் அனாடமி' செய்து நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம், எப்படி வாழ்கிறோம் என்ற அடிப்படை மனித உணர்வுகளாவது இருக்கிறதா என்று டைசெக்ட் செய்து பார்க்க வேண்டிய தருணமிது.

 

நான் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொள்ள விழைவது இதுதான். இருபது வருட பழைய நட்பென்றாலும் தயங்காமல் பேசுங்கள். வேலையிலேயே ஒருவர் மூழ்கி கிடைக்கிறார் என்றால் அவரை தொந்தரவு செய்தாவது அளவளாவுங்கள். ஏனெனில் மனச்சோர்வு என்பது நம்மை அறியாமலேயே நம்மை விழுங்கும் ஒரு கொடிய நோய். பல நாட்கள் கழித்து பேசிய பள்ளி தோழி ஒருத்தி, யாரிடமும் பகிர்ந்துகொள்ளாத தனது தோல்வியுற்ற பழைய காதலை பற்றி பகிர்ந்துகொண்டாள். ஒரு சில நாட்கள் கழித்து மீண்டும் விளித்த அவள்வெகு நாட்களாக சுமந்துகொண்டிருந்த, என்னவென்று அறியாத ஒரு வகை பாரம் தற்போது தன்னிடம் இல்லை என மகிழ்ச்சியாக கூறினாள். கொரோனா காலத்தில் மனச்சோர்வின் காரணமாக தான் பார்த்துக்கொண்டிருந்த அரசு வேலையை விடுத்து கால் தோன்றின போக்கில் பாத யாத்திரை மேற்கொள்ளுவதாக முடிவு செய்திருந்த நண்பன் மிக நீண்ட நாட்களுக்கு பிறகு பேசிய பிறகு சற்று தெளிச்சியாக இருப்பதாக உணர்வதாக கூறினான்.  தொடர்ந்த தவறான புரிதல்களால் முடிவு பெற இருந்த மணவாழ்க்கை காப்பாற்றப்பட்டிருக்கிறது. எத்தனையோ உதாரணங்களை சொல்லலாம். அருகில் இருக்கும் நபர் என்ன உணர்வில் இருக்கிறார் என்ற ஒரு அடிப்படை மனிதாபிமான உணர்வு கூட இல்லாமலா நாம் பொழுது மூச்சுடும் வேலை செய்துகொண்டிருக்கிறோம்? அப்படியே செய்தாலும் யாருக்காக அந்த வேலை? நமக்கும் நம் குடும்பத்திற்கும் என்றால் நமது குடும்பம் மற்றும் தனியாக இருந்து என்ன சாதித்துவிடப்போகிறோம். சுற்றம் சூழ  இருப்பதுதான் என்றுமே இன்றிமையாதது. இன்றும் நாம் புரிந்து வைத்திருக்கும் 'நாமில்' பலர் கண்ணுக்கு புலப்படாமல் பொதிந்திருக்கின்றனர். அந்த பலர் இங்கு இல்லையென்றால் நம்முடைய 'நமக்கு' இங்கு அர்த்தம் இல்லை. நம்முடைய மனது சமநிலையில் இருப்பதற்கும் சுற்றம் சமநிலையில் இருப்பதற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டிய தருணமிது.

 

பேசுங்கள். தொடர்பில் இருங்கள். முடிந்த வரை ஆறுதலான சில வார்த்தைகள். கடும் கோடையில் பெய்யும் சிலநிமிட மழைத்துளி போல உங்களின் அந்த ஓரிரு வார்த்தைகள் அவர்கள் வாழ்க்கையை குளிர்விக்கும்.

 

அன்பை பகிர்ந்து வாழ்வோம். 

திங்கள், ஜனவரி 03, 2022

திருநெல்வேலி முருகன்குறிச்சி கலைவாணி தியேட்டர்


கலைவாணி தியேட்டர் என்றவுடன் அகமகிழ்ந்து வாசிக்க வந்த பண்பான அன்பு உள்ளங்களுக்கு காக்டெயில் வெல்கம். தியேட்டர் மாதிரியே சொல்லப்போற மேட்டரும் குஜால் தான்.


அவர் அலுவலக சீனியர். கலகலப்பான மனிதர். ஜகதலப்ரதாபர். சிறந்த கதை சொல்லி. சொல்லப்போகிற anectode அவர் ஒருமுறை பகிர்ந்துகொண்டது. நடந்த வருடம் 1975 சமீபத்தில் இருக்கலாம். 


அவரது பதின் பருவப்பிராயம். பத்தாம் வகுப்பு படிக்கும்போது இருக்கலாம். அரும்பு மீசையும் குறும்பு பார்வையும் கலந்தோடும் நாட்கள் அவை. முருகன்குறிச்சியில் இருக்கும் கலைவாணி பேருக்கேற்றார் போல் அல்லாமல் 'அஜால் குஜால்' படங்களுக்கு பிரபலம். கலைவாணிக்கு டப் கொடுக்கும் ஒரே யோக்கியதை டவுணில் இருக்கும் சிவசக்தி தியேட்டருக்கு மட்டுமே உண்டு. சம்பவத்திற்கு வருவோம். என்னதான் இருக்கிறது என்று தெரிந்துகொள்ள மிகுந்த பிரயாசைப்பட்டு கலைவாணிக்கு அவர் சென்றிருக்கிறார்.  ஒரு ஹிந்தி படம் தான். போஸ்டர் தான் ஹிந்தி படமே தவிர சின்னக்கலைவாணர் விவேக் சொல்வது போல் அஞ்சாவது ரீல் அஞ்சரைக்குள்ள வண்டி பிட்டு தான். ஸ்கூலுக்கு போவது போல் கிளம்பி அங்கு இல்லாத உறவினரை கொன்றுவிட்டு ஸ்கூலுக்கு கட்டடித்து தியேட்டர் வந்து விட்டார்.  திரை அரங்கிற்குள் விஜயம். அரசு விளம்பரங்களுக்கு பிறகு ஹிந்தி படம் ஆரம்பமாகிவிட்டது. எல்லோரும் '' வென்று வாயை பிளந்து ஆவலாய் ஐந்தாவது ரீலுக்கு வெய்டிங். அந்த காலத்தில் எல்லாம் எல்லா படத்திலும் பிட் சேர்த்துவிடுவதில்லை. போலீஸ் கெடுபிடிகள், ப்ரொஜெக்டர் ஓட்டுபவனின் மூடு என பல influencing factors பொறுமையை சோதிக்கும். இவர் படம் பார்த்த நாள் அன்று இவர் தலையில் சுக்கிரன் சம்மனமிட்டு உட்கார்ந்திருப்பான் போல. அவர் வாயாலேயே அடிக்கடி " வருஷம் 40 தாண்டிடுச்சுடே. இன்னும் அவளையோ  அந்த காட்சியையோ மறக்க முடியல. அடேங்கப்பா." என்று சொல்லும்போதே பெருமூச்சு விட்டார்.


படம் முடிந்துவிட்டது. எதிர்பார்த்தது போல திகட்ட திகட்ட படம் பார்த்த்துவிட்டார். இப்பொழுது தான்  ஹைலைட்டே. உள்ளே நுழையும்போது யார் கண்ணிலும் படாமல் முன்னே பின்னே நுழைந்து வந்து விடலாம். ஆனால் வெளியே போகும்போது அக்கம் பக்கம் பார்த்து போக வேண்டும். தெரிந்தவன் கையில் மாட்டிவிடக்கூடாது. படம் முடிந்து லைட் போட்டவுடன் சுற்றி முற்றி பார்க்கிறார். இவர் பயந்தது போலேயே இரண்டு வரிசை தள்ளி அவரது ஸ்கூல் வாத்தியார். 'ஏலே, இவர் எங்கல இங்கு வந்து தொலைஞ்சாரு?" என்று விசனப்பட்டுவிட்டு முன்னாடி திரும்பினால் அங்கு ஒரு அதிர்ச்சி. அவ்ருடைய மாமா முன் வரிசையில். அவரும் யாரும் தெரிந்தவர்கள் இருக்கிறார்களா என்று திருட்டு பார்வை பார்க்க, இவரும் சீட்டுக்கடியில் ஒளிந்துகொண்டார். குனிந்து குறுகி சீட்டை ஒட்டியே மறைந்து மறைந்து வெளியே செல்லும் இரும்பு கதவு வரை வந்துவிட்டார். 


தியேட்டர் வாசல் வரை இருட்டாயிருந்தது. தியேட்டருக்கு வெளியே சுட்டெரிக்கும் நண்பகல் வெளிச்சம். எப்படி வெளியே போவதென்று யோசனை செய்திருக்கிறார். படாரென்று கெட்டப் சேஞ்ச். போட்டிருந்த சட்டையை கழட்டி இடுப்பில் கால்சராய்க்கு மேலே சுற்றிவிட்டு, பனியனை கொஞ்சம் கிழித்துவிட்டு, கைகுட்டையால் ஒரு கண் மட்டுமே தெரிவது போல் கட்டிக்கொண்டு கால் முட்டியின் மேல் ஒரு கையை வைத்து ஒரு காலால் தாங்கி தாங்கி நடந்து வெளியே வந்திருக்கிறார். பார்ட்டி எஸ்கேப்


"அதெல்லாம் ஒரு காலம். செம த்ரில்லிங்கான அனுபவம்பா. இப்போ எல்லாமே கைக்கு அடக்கமாயிடுச்சு. ஆறு இன்ச் திரையில ஆறு வினாடில பாக்குற உங்களுக்கு இந்த 'அடேங்கப்பா'வை பீல் பண்ண முடியாது பா" என்று அங்கலாய்த்து கொண்டு கிளம்பிவிட்டார்.

சனி, ஜனவரி 01, 2022

விக்ரம் - 1986


விக்ரம் - 1986 இல் அதாவது எனக்கு வயது இரண்டு மாதங்கள். அப்போது வெளிவந்த ஒரு ஐகானிக் மூவி.

ஆனால் அதே கதை முப்பத்தைந்து வருடங்களுக்கு பிறகு தற்போது வெளிவந்திருந்தாலும் கனெக்ட் செய்துகொள்ளுகிற அளவுக்கு டெக்னாலஜிக்கல் அட்வான்ஸ்மென்ட்ஸ்.

டெக்னாலஜியை பார்க்கும் முன் நம்மவரின் குறும்புகள்.

ஆரம்பத்தில் கமல் அம்பிகாவுடன் பேசிக்கொள்ளும் இல்லை இல்லை சரசமாடிக்கொள்ளும் காட்சிகள் தற்போது பார்த்தாலும் நமக்கே கூச்சம் தெரிக்கிற அளவுக்கு கமலின் பெர்பார்மன்ஸ். இப்பொழுது தான் தெரிகிறது 'வனிதாமணியில்' ஜானகியிடம் இருந்து ஏன் அவ்ளோ முனகல் என்று? கண்ணே ஒட்டிக்கவா?

போதாக்குறைக்கு 35000 அடியில் free fall செய்யும்பொழுது சுகிர்தராஜூவை அடித்து கீழே தள்ளிவிட்டு இருக்கும் ஒரே பாரச்சூட்டுடன் விக்ரம் ப்ரீத்தியை (லிஸ்ஸி) அணைத்து கீழிறங்குகிறார். பாரச்சூட்டில் இருவரும் இறங்கி கொண்டிருக்கும்போதே ப்ரீத்தி டூயட் பாட ஆரம்பிக்க விக்ரம் அவரை லிப் லாக் செய்ய.....அடேங்கப்பா அந்தரத்தில் ஒரு ரொமான்ஸ். பாம்பு கடியிலிருந்து தப்பியபின் ஸலாமி அரசி டிம்பிளுடனும் ஒரு அதரச்சேர்க்கை. காதல் மன்னன். ஜேம்ஸ் பாண்டே இரவல் கேட்கவேண்டும்.

2000இல் வெளிவந்த ஹேராம் படத்தில் இடம்பெற்ற பெங்காலி ஹிந்தி மற்றும் ஆங்கில வசனங்களேயே நம் மக்கள் புரியவில்லை என்று தலையை சொரிந்துகொண்டனர். அதற்கும் பதினைந்து வருடங்கள் முன்னாலேயே ஸலாமி நாட்டின் பாஷை என்று மனோராமாவும் ஜனகராஜூம் பிளந்துகட்டியிருப்பது நம் மக்களுக்கு வெகுவாக அந்நியப்பட்டிருக்க வேண்டும்.

டைட்டில் சாங் விக்ரம். மூன்று தலைமுறைகள் தாண்டியும் ஈர்க்கிறது. அதிலும் அவர் வாய்ஸ். 300 அடி பாதாளத்தில் இருந்தாலும் விக்ரம் வெளியே வந்துவிடுவான். கோரஸ், இன்ஸ்ட்ருமென்ட்ஸ் என அப்படி ஒரு ஆர்கெஸ்ட்ரேஷன். ராஜா ராஜா தான்.

முன்னமேயே சொன்ன அந்த டெக்னிக்கல் சமாச்சாரங்கள்.

உலத்துக்கே தாதாவாக தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும் அமெரிக்காவிலேயே 1985 இல் தான் CCTV பரவலாக அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் நம்மவர் படத்திலோ சுகிர்தராஜ் (தகிடு தகிடு) விக்ரமை (கமல்) அசாதாரணமாக CCTVயில் சர்வைலென்ஸ் செயகிறார்.

அது போல, கம்ப்யூட்டர்கள் அந்த காலகட்டத்தில் பிரபலாமகவில்லை. ஆனால் விக்ரம் படத்திலோ கம்ப்யூட்டர் ப்ரோக்ராமிங், ராக்கெட் லாஞ்சிங், ஆட்டோ இஃனைடிங் என அரசடிக்கின்றனர்.




முத்தாய்ப்பாக 'ஓகே கூகிள்' என்று நாம் சொல்ல பழகியே மூன்று நான்கு வருடங்கள் இருக்கலாம். ஆனால் சுகிர்தராஜோ 'whether the agniputra rocket is redirected?" என்று கம்ப்யூட்டரிடம் வாய்ஸ் கமெண்ட் செய்கிறார். அதற்கும் கம்ப்யூட்டர் டெக்ஸ்ட் மெசேஜில் ரெஸ்பாண்ட் செய்கிறது. வாட் எ தொலைநோக்கு பார்வை சர்ஜி.

சுஜாதா இன்னும் இருபது வருடங்கள் உயிரோடிருந்திருக்கலாம்.