வியாழன், ஜூலை 28, 2022

பாட வந்ததோர் கானம்

ராஜாதி ராஜனென்ற ராஜா

MSV காலம் தொட்டே இந்த ட்ரெண்ட் தொடங்கிவிட்டது. எந்த ட்ரெண்ட் என்றால் ஜோடியாக டூயட் பாடுவதில் யார் சிறந்தவர் என்று. ஏனென்றால் அப்போதைய விமர்சனங்களும் ஆண் பாடகர் மற்றும் பெண் பாடகர் என இருவரையும் ஒப்பிட்டே எழுதப்பட்டன. இந்த ஆரோக்கியமான போட்டி பாடகர்களை வளர்த்தெடுத்தது மட்டுமல்லாமல் பாடல்களையும் சேர்த்தே மெருகூட்டி வளர்த்தெடுத்தது. பயனடைந்தது இசையமைப்பாளர் மட்டுமல்ல ரசிகர்களுக்கும் போனஸ் தான்.

அதன் நீட்சியில் ஒரு வெகுமதி தான் இந்த 'பாட வந்ததோர் கானம்' பாட்டு.  சில கூர்நோக்குகள். 

1.       சுஷீலா மற்றும் யேசுதாஸ் இருவரும் போட்டி போட்டு பாடியுள்ளனர். சந்தேகமின்றி வெற்றி  பெறுவது யேசுதாஸ் தான் (என்னளவில்). 

2.       பாடலின் முதல் ஐந்து நொடிகள் மெதுவாக மிக மெதுவாக மெலடி போல் ஆரம்பித்தாலும் அடுத்த பத்து நொடிகளில் வரும் சுஷீலா மற்றும் கோரஸின் ஆலாபனைகள் பாடலின் மனநிலையை வெகுவாக உயரச்செய்துவிடுகிறது. Mood Elevating Song. 

3.       வழக்கம் போல ராஜாவின் ராஜாங்கம் அதகளம். Solo flute இல் ஜமாய்ப்பது என்ன, கோரஸில் தேவதைகளை பறக்க விடுவது என்ன? பல்வேறு வாத்தியக்கருவிகளை வைத்து நடத்தும் orchestration  தான் என்ன. என்ன. என்ன. என்ன. 

4.       இந்த பாடலில் யேசுதாஸ் ஏன் ஒரு படி மேலே என்றால்

4a.   பெண் பாடு பாடும் அனுபல்லவியில் 'கள்ளூறும் பொன் வேளை' மேல் ஸ்தாயி குறைவாக இருக்கும். அல்லது ஒரு punch கம்மி என்று சொல்லலாம். அதே 'கள்ளூறும் பொன் வேளை' யேசுதாஸ் பாடும்போது உள்ள வித்தியாசத்தை கவனிக்க முடியும். 

4b.   சரணம் 1 யேசுதாசுக்கு. 'கண்ணில் குளிர்காலம்.' என்கிற பாடல் வரியில் யேசுதாஸ் பிரவாகிக்கும் பாவம் (பாவனை) சரணம் 2இல் சுஷீலா பாடும் 'இமைகள் உறங்காது..' வில் கொஞ்சம்ம்ம் கம்மி. 

4c.    எல்லாவற்றுக்கும் மேலே, சரணம் 1 இல் high pitch இல் சுஷீலா பாடும் 'அன்பே...எந்நாளும் நான் உந்தன் தோழி' என்ற வரியில் ஒரு breath gap. அதை ராஜா ஒரு சோலோ flute இல் நிறைத்திருப்பார். whereas, சரணம் 2 இல் யேசுதாஸ் எடுக்கும் high pitchஇல் 'தேனே...கங்கைக்கு ஏன் இந்த தாகம்' என்பதில் மூச்சு விடாமல் 'கடலும் வழி விடும்' என்று பாடி தான் முடிப்பார். ராஜா அதே flute soloவை இவர் தம் கட்டும் இடத்தில் backgroundஇல் உபயோகித்திருப்பார். 

5.       சுஷீலாவின் வாய்ஸ் மெல்லிய சோகத்தை வெளிப்படுத்தும் பாடகி ஜென்சியின் குரலை நினைவுபடுத்துவது போல் உள்ளது.

 

6.       ஆனபோதிலும், கதாநாயகிக்காக குரலை மாற்றாமல் authentic சுஷீலா வாய்ஸ் இந்த பாடலில் வெளிப்படும். 

7.       சரணம் 1 இல் ஜெயசந்திரன் குரல் போல தெரிந்தாலும் பின்பு ஒரிஜினல் யேசுதாஸ் குதித்தோடி வெளிவந்துவிடுகிறார். 

8.       பாடலின் இறுதியில் கோரஸுக்கு பின் சுஷீலா பாடும் 'லாலா' evergreen hello tunes ரகம். 

9.       பாடல் படமாக்கிய விதம் பல கவனச்சிதறல்களை கொண்டுள்ளதால், ஆடியோ லிங்க் மட்டும் பகிர்ந்திருக்கிறேன்.

 

பாடலின் வரிகள் கீழே.

 பல்லவி

பெண் :

பாட வந்ததோர் கானம்

பாவை கண்ணிலோ நாணம் (2 times repeat)

கள்ளூறும் பொன் வேளை

தள்ளாடும் பெண் மாலை

இளமை வயலில் அமுத மழை விழ

பாட வந்ததோர் கானம்

பாவை கண்ணிலோ நாணம்

 *****************************************

சரணம் 1

ஆண்:

ராஜமாலை தோள்சேரும்

நாணமென்னும் தேனூறும் (2 times repeat)

கண்ணில் குளிர்காலம்

நெஞ்சில் வெயில்காலம்(2 times repeat)

பெண்:

அன்பே (high pitch)

அன்பே

எந்நாளும் நானுந்தன் தோழி (Breathe gap. flute solo)

பண்பாடி கண்மூடி

உனது மடியில் உறங்கும் ஒரு கிளி

ஆண்:

பாட வந்ததோ கானம்

பாவை கண்ணிலோ நாணம்

******************************************

சரணம் 2

பெண்:

மூடிவைத்த பூந்தோப்பு

காலம் யாவும் நீ காப்பு(2 times repeat)

இதயம் உறங்காது

இமைகள் இறங்காது(2 times repeat)

ஆண்:

தேனே (double high pitch)

தேனே கங்கைக்கு ஏனிந்த தாகம் (No gap for Breathe gap. flute in the background)

உல்லாசம் உள்ளூரும் நதிகள்

விரைந்தால் கடலும் வழிவிடும் (breathless for three lines)

பல்லவி

பெண்:

பாட வந்ததோர் கானம்

பாவை கண்ணிலோ நாணம்

 ஆண்:

 கள்ளூறும்  பொன் வேளை

தள்ளாடும் பெண் மாலை

இளமை வயலில் அமுத மழை விழ

 பெண்:

லா லா லா லா லல லா லா

லா லா லா லா லல லா லா

https://youtu.be/BZddForfhQc

செவ்வாய், ஜூலை 26, 2022

Affiliated to Anna University


இன்ஜினியரிங் கோர்ஸ்ல ரெண்டாவது செமஸ்டர் படிக்கும்போது M2 னு ஒரு பேப்பர் வரும். மேத்தமெட்டிக்ஸ். என்னடா பன்னெண்டாவது வரைக்கும் தான் கேல்குலஸ் அது இதுனு உயிரை எடுத்தாங்கன்னா இன்ஜினீயரிங்க்லயுமா அப்டினு மலைப்பா இருக்கும். ஒன்னு ரெண்டு இல்ல. மொத்தம் 4 மேத்ஸ் பேப்பர். M3 ஓரளவுக்கு ஈஸியா இருக்கும்.  இந்த M2 மாதிரி ஒரு எமகாதகன் எட்டு செமஸ்டர்லயும் கிடையாது. எப்பேர்ப்பட்ட ஆளானாலும் ஒரு காட்டு காட்டிடும். அதாவது பன்னெண்டாவதுல ஸ்டேட் ரேங்க் எடுத்தவன் கூட பெயில் ஆகற மாதிரியான ஒரு கோட்டான் அது. அதுவும் சிவில் எஞ்சினியரிங்ல ரெண்டாவது செமஸ்டர்ல மொத்தம் பதினொரு பேப்பர். அதுவும் நாலே மாசத்துல எழுதனும். என் நண்பன்லாம் எப்பிடியாவது நான் ஒண்ணுலயாவது பெயில் ஆயிடுவன்னு அவ்ளோ நம்பிக்கையா இருந்தான். பார்டர்ல அந்த கோட்டானா தோக்கடிச்சிட்டேன்.

அப்போ தோராயமா ஒரு 250 காலேஜ் இருந்துச்சு. அதுல 230 காலேஜாவது அண்ணா யூனிவெர்சிட்டியோட இணைக்கப்பட்டிருக்கும். எல்லா காலேஜுக்கும் அண்ணா யூனிவர்சிட்டி தான் ராஜா. ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் எல்லாமே அண்ணா யூனிவர்சிட்டி சொல்றபடிதான். கொஸ்டின் பேப்பர் யாரு செட் பண்ணுவாங்கனு தெரியாது. தமிழ்நாட்டுல எந்த காலேஜ் ப்ரொபெஸர் வேணா இருக்கலாம். அதனால ஒவ்வொரு செமஸ்டரும் 12th எக்ஸாம் ரேஞ்சுக்கு ஒரு பொது தேர்வு மாதிரி 'பக் பக்'னு இருக்கும்.  நம்ம காலேஜ்ல அந்த போர்ஷன் கம்ப்ளீட் பண்ணிருக்காங்களா இல்லையா அப்டின்லாம் யாரும் பாக்கமாட்டாங்க. கொடுத்துருக்கற சிலபஸ்லேந்து எங்கேந்து வேணாலும் கொஸ்டின்ஸ் கேப்பாங்க. ஒவ்வொரு செமஸ்டரும் பாஸாகி வெளில வரதுக்குள்ள அவ்ளோ டென்ஷன் இருக்கும். அப்டிலாம் நித்ய கண்ட பூர்ணாயுசா எழுதி வாங்குன டிகிரி.

எதுக்கு இத சொல்லவரேன்னா, இந்த தன்னாட்சி அந்தஸ்து (autonomous) பெற்ற காலேஜ்ல, தப்பு தப்பு யூனிவெர்சிட்டினு சொல்லணும், பாத்தோம்னா, சிலபஸும் அவாளோடது. கொஸ்டின் பேப்பரும் அவாளே ரெடி பணிப்பா. அதாவது பேப்பர் ஹேண்டில் பண்ண வாத்தியாரே. இதுல என்ன வசதின்னா, அவரு எந்த போர்ஷன் கவர் பண்ணலையோ அதுலேந்து கொஸ்டின் வராது. கவர் பண்ண போர்ஷன்ல இம்பார்ட்டண்ட் கொஸ்டின் என்ன அப்டிங்கிறத ஈஸியா கெஸ் பண்ணிடலாம். அதுவும் இல்லேன்னா அவங்களே சொல்லிடுவாங்க. அதுக்கு ஒரு எக்ஸாம். இதே மாதிரி தான் எட்டு செமஸ்டரும். வாத்தியாரோட குட் புக்ல இருந்துட்டா போதும். இந்தா புடினு மார்க் அள்ளி போட்ருவாங்க. இன்டெர்னல்ல கையே வைக்க மாட்டாங்க. வைக்கவும் கூடாது. வச்சா பாஸ் பெர்செண்டேஜ் கம்மியா போயிடும். அப்புறம் காலேஜ் ரெபியூட்டேஷன் கெட்டுடும். அதனால எப்பவுமே இன்டெர்னல் full மார்க்ஸ் தான். ஆனா, இந்த அண்ணா யூனிவர்சிட்டி affiliated காலேஜ்ல நெலம தல கீழா இருக்கும். மிரட்டி மிரட்டியே இன்டெர்னல் மார்க்ஸ்ல கை வைப்பாங்க. அதுவும் 20க்கு 20 மார்க் எடுக்கிறதுலாம் சாதாரண விஷயம் இல்ல. இது போக அந்த பொது தேர்வு வேற.

அப்புறம் இந்த தன்னாட்சி பெற்ற யூனிவெர்சிட்டில ஒரு பிரிவுக்கு மேக்சிமம் 120 பேர் படிப்பாங்க. அதுல முத வரவங்களுக்கு ஒரு கோல்டு மெடல், யூனிவர்சிட்டி பர்ஸ்ட்னு சர்டிபிகேட் கொடுக்கிறது உண்டு. அப்போ தமிழ்நாடு முழுக்க இருக்கற காலேஜ்ல அதே பாடப்பிரிவில படிக்குற 2500 பேர்ல முத மார்க் வாங்குறவங்களுக்கு கொடுக்கற கோல்டு மெடலும் இந்த autonomous கோல்டு மெடலும் ஒண்ணா. Bathla Brand அலும்னியும் லேடர் வச்சா கூட எட்டாது. ஆனா வெளில யூனிவர்சிட்டி firstனு சொல்லும்போது யாருக்கும் வித்தியாசம் தெரியாது. எட்டாப்பு பாஸு. SSLC fail கதைதான்.

இதெல்லாத்தையும் விட பிரமாதமான விஷயம் என்னன்னா, இன்னும் சில autonomous காலேஜ்ல பணம் கட்டிட்டு பரிட்சைக்கு வந்து ரோல் நம்பர் எழுதிட்டா மட்டும் போதும். க்ளாஸ் எங்க இருக்குதுனே தெரியாம டிகிரி வாங்குன பசங்க இப்போ ஜபர்தஸ்தா இஞ்சினியர்னு சொல்லிட்டு வெளில வந்துட்ருக்காங்க. எஞ்சினியரிங்க் க்வாலிட்டி அவ்ளோ மட்டமா போய்டுச்சி.  

அந்த காலத்து PUCனு இப்போ இருக்குற ஓல்ட் ஜெனரேஷன் சொல்ற மாதிரி நாமளும் அந்த காலத்து அண்ணா யூனிவர்சிட்டினு காலர் தூக்கிவிட்டு சொல்லிக்கலாம்.

ஆகையால், autonomous10 CGPA னா, அண்ணா யூனிவர்சிட்டி affiliated காலேஜ்ல படிச்சி வரவங்களுக்கு அது 6 CGPA தான்.

கதம் கதம்.

 

 

புதன், ஜூலை 13, 2022

பெரியார்

 

அம்புலிமாமா, கோகுலம் போன்ற சிறார் புத்தகங்களை வாசித்து பின்பு பதின்ம பருவத்தில் ராஜேஷ் குமார், கி.ரா. என்று கலந்துகட்டி வாசிக்க தொடங்கிய காலத்தில், எனது நண்பன் ஒருவன் பெரியார் புத்தகத்தை படித்துக்கொண்டிருந்தான். அந்த வயதில் எனக்கு அவரை பற்றிய நேரடி அறிமுகமோ, கருத்துக்களோ  திணிக்கப்பட்டதில்லை.  இருந்தாலும் அவர் அரசியல் சம்பந்தப்பட்ட ஒருவர் என்றளவில் மட்டுமே என்னுடைய மதிப்பீடு இருந்ததினால் பெரிதாக அவர்பால் ஈர்க்கப்படவில்லை.

தற்போது இரு தசாப்தங்கள் கழித்து ஒரு நூலகத்தில் மேய்ந்துகொண்டிருந்த பொழுது பி.சி.கணேசனின் "பெரியார் ஒரு சகாப்தம்" என்ற நூல் கண்ணில்பட்டது. பி.சி.கணேசன் என்பவர் நேர்மறை எண்ணங்களை பற்றி வெற்றிகரமாக பல புத்தகங்கள் எழுதியவர். தமிழ் மொழியின் நார்மன் வின்சென்ட் பீலே என்று சொல்லுமளவுக்கு ஒரு நேர்மறை எழுத்தாளர். அவரின்பால் கொண்ட பற்றுதல் அந்த புத்தகத்தை படிக்க தூண்டியது.



'யார் சாமி இவர்? இவ்ளோ நாள் மிஸ் பண்ணிட்டோமே' என்கிற பீலிங். வாட்சப், ட்விட்டர், யூட்யூப் ஷார்ட்ஸ், இன்ஸ்டா ரீல்ஸ் போன்றைய வஸ்துக்கள் மட்டும் அன்று இருந்திருந்தால் இங்கர்ஸாலை மிஞ்சியிருப்பார் என்பதில் கிஞ்சித்தும் சந்தேகமில்லை. பெரியார் என்றாலே நாத்திகர் என்கிற குறுகிய வட்டத்துக்குள் அடைத்துவிடும் பிம்பம் ஒன்றே நம் மனதில் தோன்றுமாறு ஏற்படுத்தியது அவர் எதிர்த்து போராடிய சமூகத்தினரின் வெற்றி என்றே பார்க்கிறேன்.

அவரின் இளம்பிராயத்தில் பல சமூக அவலங்களை உற்று நோக்கி அதனை களையும் பொருட்டு பல சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டார். அத்தகைய சீர்திருத்தங்கள் தாங்கள் இதுகாறும் பின்பற்றிய வழக்கங்களுக்கு மாறாக இருப்பதினால் மக்கள் அதனை ஏற்கத்தயங்கினார்கள்.  பிரச்சினைகளின்  ஊற்றுக்கண்ணாக விளங்கிய சடங்கு சம்பரிதாயங்கள் என்று உணர்ந்த அவர் ஆன்மிகத்தின் பேரில் திணிக்கப்பட்ட கொள்கைகளை தடாலடியாக மறுக்கத்துணிந்தார். இந்த சடங்குகளே ஒரு வகையில் தீவிரவாதம் எனலாம். அவர் நினைத்திருந்தால் தன்னுடைய சொத்துக்களை கொண்டு ஒரு சுகபோக சம்சார வாழ்க்கை வாழ்ந்துவிட்டு போயிருக்கலாம். அதை விடுத்து தன வாழ்நாள் முழுவதும் சமூக விடுதலைக்காக போராடியவர்.

வகுப்புவாரிச்சட்டம், பெண்கள் உரிமைக்கான மசோதா, தீண்டாமை ஒழிப்பு, ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு, சுயமரியாதை முழக்கம் என எண்ணற்ற சாதனைகள். இன்று பேசவே தயங்கியவற்றை அன்றே மேடையேறி கர்ஜித்து முழங்கியவர். 1953இல் விநாயகர் சிலை உடைப்பு போராட்டமெல்லாம் அந்த காலத்திலேயே அவர் வாழ்ந்து காட்டிய thug life க்கு ஒரு சோற்று பதம். திருமண விழா ஒன்றி பேச அவரை அழைத்ததற்கு இவ்வாறு பேசத்கோடங்குகிறார். “நான் இங்கு கூறப்போகும் எவற்றையும் நீங்கள் கண்மூடித்தனமாக ஏற்கவேண்டியதில்லை. ஆனால் நியாயமிருப்பின் ஏற்றுக்கொளுங்கள். சிந்திக்க வேண்டும் என்று சொல்கிறேன். எதற்கு இந்த திருமணம்.  பெண்களை அடிமைபடுத்தவா? கணவனுக்கு கை கால அமுக்கிவிட்டு நீர் கொடுத்து சோறு போடுவதற்கா? இதனால் நாடு என்ன சுபிட்சமடைந்தது? பெண்கள் வேலைக்கு செல்ல வேண்டும்....” என்கிற ரீதியில் உரையாற்றியுள்ளார். இன்னும் பலப்பல. தான் இறந்த 94வது வயதிலும் மேடையில் சமதத்துவத்தை உரக்கப்பேசியவர் தந்தை பெரியார்.

அவர் போன்று பலர் போட்ட விதை இன்று என்னை இங்கு தட்டச்சு செய்யவும், உங்களை எழுத்து கூட்டி படிக்கவும் வைத்திருக்கிறது. நெருப்பு அணைந்திருக்கலாம். ஆனால் இன்னும் கனன்றுகொண்டுதானிருக்கிறது.