திங்கள், மே 29, 2017

பாகுபலி-2 விமர்சனம்

மீண்டும் பாகுபலியை பற்றி எழுதுவதை தவிர்க்க முடியவில்லை. சிறிது பொருத்தருளுக. மூன்றாவது முறை சென்று பார்த்ததில் கவனித்தவை சில இந்த பதிவில்.


முதலில் டைட்டில் சாங். முதன் முதலில் பார்த்த பொழுது மெழுகு சிலை போல் மேடம் டுஸசாடஸ் மியூசியத்தில் இருப்பதை போன்று கிராபிக்ஸ் செய்ததை மட்டுமே கவனித்திருந்தேன். காண்பிக்கும் காட்சிகளுக்கு ஏற்ப அந்த பாடல் வரிகள் அமைந்திருப்பது அந்த டைட்டில் பாடலின் சிறப்பு. 

பாடல் வரிகள் இதோ.

ஒரு யாகம் ஒரு தியாகம் கதை ஒன்றோ   
ஆரம்பம்   
இரும்பென்றே மனதின்பம்   
நெறுப்பென்றே 
அதில் வன்மம்   
   
மரணம் ஒன்று பிறக்கும் அருவம்   
மரணம்ந்தான் குடிக்கும்   
அவவானமோ வாழ்த்தி இடிக்கும்   
வா வா மன்னவா வா வா மன்னவா   
மண்ணெல்லாம் பாடும்   
   
உன் பாதத்தை வெற்றி தேடும்   
பழி தாங்கி உலி வாங்கி படைப்பானோ   
எதிர்காலம் உதிரத்தில் சினம் ஓடும்   
துளியாவும் 
சிவம்  
சிவம்

காட்சிகளுடன் விளக்கிய அல்லது விளங்கிய விதம் கீழே.

ஒரு யாகம் ஒரு தியாகம்ராஜா மாதா சிவகாமி தான் செய்த பாவத்திற்கு தன் உயிரை தியாகம் செய்து மகேந்திர பாகுபலியை ஆற்றில் கையில் ஏந்தி காப்பாற்றும் காட்சி.
  
கதை ஒன்றோ ஆரம்பம்-இங்கு தான் ஷிவு அவந்திகாவை காணவேண்டும் என்ற உந்துதலின் பேரில் நீர்மலை மீதேறி மகிழ்மதியை கண்டடைகிறான்.  
 
இரும்பென்றே மனதின்பம்-தன் மகன் தன்னை மீட்க வருவானென்று இரும்பபை போன்று உறுதியுடன் காத்திருக்கும் தேவசேனை.
   
நெறுப்பென்றே-பல்வாள்தேவனை   எரிப்பதற்கு தேவசேனை சேகரிக்கும் அக்னிகுண்டத்தில் உள்ள சுள்ளிகள்.

அதில் வன்மம்-தன்னை மணமுடிக்க மறுத்ததினால் அவளை உயிருடன் சித்திரவதை செய்யும் வன்மத்துடன் பல்வாள்தேவன் (இப்புவியில் நீ விரும்பவோ,வெறுக்கவோ இருக்கும் ஒரே உயிர் நான் தான் என்று ஒரு வசனம் வரும்)
   
மரணம் ஒன்று பிறக்கும் அருவம் மரணம்ந்தான் குடிக்கும்-பல்வாளின் மகனின் தலையை ஷிவு வெட்டிகொள்ளும் காட்சி     

அவவானமோ வாழ்த்தி இடிக்கும்-அப்பொழுது மழை பொழியும்

வா வா மன்னவா வா வா மன்னவா மண்ணெல்லாம் பாடும் உன் பாதத்தை வெற்றி தேடும் -கட்டப்பா தன் தலையில் பாகுபலியின் காலை வைத்து அவனை அரசன் என்று கூறும் காட்சி. மக்கள் எல்லோரும் தலை வணங்கி மரியாதை செலுத்துவது.   
   
பழி தாங்கி உலி வாங்கி படைப்பானோ-அரசு கெட்டபெயர் எடுக்கக்கூடாது என்பதற்காக பழிச்சொல் வாங்கி கட்டப்பா பாகுபலியை கொள்ளும் காட்சி.    

எதிர்காலம் உதிரத்தில் சினம் ஓடும் துளியாவும்- ஆதலினால் மகேந்திர பாகுபலி பல்வாளை வாதம் செய்யும் போர்.    

சிவம் சிவம்-ஆதியும் அந்தமுமாகிய சிவனின் விளையாட்டு.

பிறகு, Macro detailing என்ற வகையில் சில காட்சிகளில் ராஜமௌலி குழு எடுத்திருக்கும் சிரத்தை.

ராஜமாதா சிவகாமியின் அடிபிறழாமல் இருக்க தேரை இழுத்து வரும்போது பாகுபலி அணிந்திருக்கும் செருப்பு,பின்பு யானை மீது கம்பீரமாக ஏறி நிற்கும்போது இருக்காது. யானையை விநாயகராக பார்க்கும் விதத்தில் அதனை காட்சிபடுத்த  எடுத்துக்கொண்ட கவனம்.

ராஜா மாதா மற்றும் பாகுபலி சிம்மாசனத்தில் ஒரு காலை மடித்துக்கொண்டு  உட்காரும் அழகு.

ராஜமாதா, தேவசேனா, அவந்திக்கா, பிங்கலதேவன், பல்வாள்தேவன், அமரேந்திர மற்றும் மகேந்திர பாகுபலி, குந்தள தேச ராஜா என ஒவ்வொருவருக்கு ஒரு வித திலகம். சூரியன், சந்திரன், சர்ப்பம், பிறை என்று.

பிண்டாரிகளை துவம்சம் செய்துவிட்டு, பின்பு தான் அமரேந்திர பாகுபலி என்று தெரிவித்த பின் குந்தள தேச ராஜா முதல் அவரது படை யாவும் மண்டியிட்டு தலை வணங்கும். அப்போது பந்தங்களுக்குள் மரியாதை எதற்கு நட்பிருந்தால் போதும் என்று பாகுபலி கூறுவான். அப்போது குந்தள  தேச மகராஜாவிடம் சாந்தமாகவும் மறுநொடியே திரும்பி படை வீர்களிடம் மிடுக்காகவும் ஒரு அதிகார்த்தோரணையில் சொல்லும் பாங்கு. Gesture Notification.

பாகு ஆயுதம், பாகு ஆயுதம் என்று கட்டப்பா ஒவ்வொருமுறையும் கேட்கும்பொழுதும் பாகுபலியிடமிருந்து வாளோ கோடரியோ பறந்து வரும். அதை பிடித்து எதிரியை வெட்டுவார். இறுதி காட்சியில் மாமா ஆயுதம் என்று பாகுபலி வீசிய வாளை கொண்டுதான் கட்டப்பா பாகுபலியை கொல்லுவார்.  அவனிடமிருந்து வாங்கிய வாளால் அவனை வெட்டபோகிறோம் என்று ஒரு நொடி அந்த வாளை பார்த்து அழுவார்.

கட்டப்பாவின் நடிப்பிற்கு சாட்சியாக பிடித்து காட்சிகள். முதலில் சுல்தானுடன் போதும் கத்தி சண்டை. பின்பு “நான் நாயல்லவா. மோப்பம் பிடித்தேன்” என்ற typical சத்யராஜ் எள்ளல்.  அமரேந்திர பாகுபலியுடன் குந்தள தேசத்தில் அமர்க்களம் செய்தவை, தவறு செய்துவிட்டாய் சிவகாமி என்று கூறி அதனை தொடர்ந்து வரும் காட்சிகள். அனைத்தும் கொங்கு தேச  நவரசம்.

வேட்டை என்ற காட்சியில் மானோ, புலியோ சிங்கமோ என்று கதையில் திணித்திருக்கலாம். ஆனால் எந்தவொரு பலனும் இல்லாமல் விவசாயத்தை நட்டத்தில் ஆழ்த்தும் பன்றியை வேட்டையாடுவது போல் காட்சிபடுத்தியது விமர்சனத்தை தவிர்த்ததோடு மட்டும் அல்லாது ராஜமௌலி திரைக்கதைக்கு எடுத்துக்கொண்ட அக்கறை தெரிகிறது.

தாலாட்டுக்காக கட்டப்பா தந்தையும் இல்ல, தாயும் இல்ல என்று ஒரு பாடல் பாடுவார். போலவே பாகுபலி தன் தந்தையையும் தாயையும் பிறக்கும்போதே இழந்திருப்பான்.

நாவிரல். பிடித்ததும் மறுமுகம் என்ற காட்சியின் ஆரம்பத்தில் அம்பு எங்கிருந்து வருகிறது என்று தேவசேனை திரும்புவாள். அங்கு பாகுபலி ஒரு தூண் மீது ஏறி துள்ளி அம்பு விடும் காட்சி 1080P Desktop Wallpaper. போலவே பாகுபலி திரும்பி மூன்று அம்புகளை விடுவதும் அது தேவசேனையின் கம்மல் லோலக்கை தட்டி ஆட்டி விட்டு செல்வதும் ராஜமௌலியின் கற்பனைக்கும் ரசனைக்கும் ஒரு சோறு பதம்.

பின்பு முடி சூட்டு விழாவில், கடக சேனை, புரவி, யானை, என்று ஒவ்வொரு சேனையாக ராஜா மரியாதை தருவதும் விருட்டென்று கட்டப்பா கால் தூக்கி வைத்து மரியாதை செலுத்துவதும், பின்பு பாகுபலி விலக, பல்வாள்தேவன் சடாரென்று படியேறுவதும் பாகுபலி தொடர்வதும் என ஒரு நாட்டின் படை அணிவகுப்பையே மிஞ்சும் கற்பனையில் அதகளபடுத்தியிருப்பார். கற்பனைக் கதைக்கே பிரமாதமான பிரமாண்ட காட்சிபடுத்துதல். அதில் கொஞ்சம் physics சேர்த்து Resonance Frequency யில் சிம்மாசனமே ஆடும் வகையில் அற்புதமான காட்சி. Hats off Sir.

ராஜமாதா சவகாமி, உன் தாயின் நாய் வருகிறது, ஒற்றை கையால் தூனை உடைப்பது, “என்றால் என் மகன், என் மகனின் மகன், அவன் மகன்” என்ற வசனம், பாகுபலியின் மரண சாசனத்தை சிவகாமியின் கைய்யால் எழுத வைக்கும் மகா யாகத்தின் ஒரு ச்சிறிய விறகு நீ, பல்லா, இந்த நாயை நம்பலாமா? என்று தான் வந்த எல்லா காட்சிகளிலும் தான் ஒரு நாடகக்கலைஞன் என்று சொல்லாமல் சொல்லியடித்த நாசரை நினைவு கூறாமல் இருக்கமுடியவில்லை.

நீலாம்பரிக்கு பிறகு காலம் காலமாக பேர் சொல்லும் வகையில் ரம்யா கிருஷ்ணன் கதாபாத்திரம். பாகுபலி கதாபாத்திரத்துக்கு சற்றேனும் குறைவில்லாமல் Female Characters க்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து வந்த திரைப்படம் வேறு ஏதும் இருப்பது போல் தெரியவைல்லை.

பிறகு எல்லோரும் சொல்லுவது போல் ராஜாமாதவை பல்வாள்தேவன் கொல்வது சிவகாமி அளித்த அந்த ஆயிரம் அடி சென்று தாக்கும் வில்லினால் அல்ல. அது மற்றுமொரு வில். அவ்வளவே.

எனக்கு பிடித்த பாடல் தர வரிசை.  ஒரே ஓர் ஊரில், ஒரு யாகம், வந்தாய் அய்யா, கண்ணா நீ தூங்கடா,  பல பல பாகுபலி.

கொசுறு செய்தி. பாகுபலி படம் 1500 கோடி வசூல் செய்து சாதனை படைத்ததென்றால், பாப்கார்ன் விற்பனை மட்டும் குறைந்தது 1000 கோடி தாண்டியிருக்கும். J






பாகுபலி-2

பாகுபலி முழுவதுமே ரசிக்கும்படியான காட்சிகள் தான். தேவசேனையின் ஓவியத்தை பார்த்த பின்பு “அழகே பொறாமைப்படும் பேரழகு” என்று ராஜா மாதா  சிவகாமி சொல்வதுபோல ஆச்சர்யமே ஆச்சர்யப்படும் அளவுக்கு(!!!) ரசனையான சில காட்சிகள்.

1       பாகுபலி ஒற்றை ஆளாக தேரை இழுத்து நிறுத்தி சிவகாமியின் அடிபிறழாமல் நடக்கவைப்பது கொஞ்சம் விமர்சனத்திற்கு ஆளாகினாலும், யானையை அடக்கிய பின்பு அதன் மேல் ஏறி இடுப்பில் இரு கையையும் வைத்துக்கொண்டு வானை நோக்கி கம்பீரமாய் பார்க்கும் அந்த காட்சி கொள்ளை அழகு. அந்த காட்சியின் தொடர்ச்சியாக யானை வில்லை தூக்கி நிறுத்த அதில் நெருப்போடிருக்கும் அம்பை பூட்டி கால் வளைத்து கம்பீரமாய் அந்த பொம்மை மேல் எய்வது சூப்பர் ஸ்டைல்.


2.       தேவசேனையின் intro சீன். பல்லக்கிலிருந்து குதித்தெழுந்து பின்புய் லாவகமாக துணியை வைத்து ஏமாற்றி ஒரு வாள் வீச்சில் நால்வரையும் தூக்கியெறிந்து திரும்பி நிற்கும் அந்த காட்சி. இதைவிட பிரமாதமாக எந்த நாயகியும் அறிமுகபடுத்தப்படவில்லை.

3.       பிண்டாரிகள் குந்தள தேசத்தில் போர் தொடுக்கும்போது, “நாவிரல், பிடித்ததும் மறுமுகம்” என்று production environment இல் உள்ளங்கை நெல்லிக்கனியாக நறுக் சுருக் என்று தேவசேனைக்கு knowledge transition கொடுப்பதும் தொடர்ச்சியாக தன் வில்லால் வீரனை அடித்த பின்பு தேவசேனையுடன் சேர்ந்து ஆறு அம்புகளை எய்வதும், என்று அக்காட்சியை பிரமாதபடுத்தியிருப்பர்.

4.       சிலருக்கு பிடிக்காமல் போகியிருந்தாலும், “ஒரே ஓர் ஊரில்” என்ற தேவசேனையின் பாட்டு கனகச்சிதம். அன்னப்படகு, ஆடல், கடல், மலையென்று கண்களுக்கு விருந்து. தமிழ் ரிலீசில் பாட்டின் இறுதி காட்சியை நீக்கியமைக்காக இளைஞர்கள் குழு வருத்தத்தை பதிவு செய்து கொள்கிறது. சிற்றரசான குந்தள தேசத்திலிருந்து மகிழ்மதிக்குள் நுழையும்போது பிரபாஸ் மகிழ்மதி என்ற ஒற்றை சொல்லை மட்டுமே உதிர்ப்பார். ஆனால் ராஜமௌலி காட்சிமூலம் அது பிரமாண்ட தேசம் என்பதை காண்பிப்பார். மேலும் குந்தள தேசத்தின் கொடி மகிழ்மதி யானை சிற்பத்தின் காலில் பட்டு உடைவது குறியீடு.

5.       தேவசேனையை மகிழ்மதியின் அரசவைக்குள் அழைத்துவரும் காட்சி. ஒரு panoramic view இல் அரசவை காட்டப்பட்டிருக்கும். பெரிய தர்பார். சூரிய ஒளிச்சத்தில் illuminate செய்யபட்டிருக்கும். அமைச்சர்கள், காவலர்கள், பின்பு அரசவையை காண கூடியிருக்கும் மக்கள், வானை முட்டும் சிலைகள் என்று பிரமாண்டத்தில் அதகளபடுத்தியிருப்பார்.

6.       பெண்களின் மேல் கையை வைத்தவன் தலையை வெட்டியிருக்க வேண்டும்” என்று சேனாதிபதி சேதுபதியின் தலையை வெட்டுவது எந்த ஒரு ஹீரோவுக்கும் அமையாத பக்கா மாஸ் சீன்.

7.       அமரேந்திர பாகுபலி இறந்து போகும் தருவாயில் , ஒரு பாறையில் அமர்ந்து வாள் மீது கையை வைத்து கொண்டு “ஜெய் மகிழம்தி”  என்று கம்பீரமாய் அமர்ந்து உயிரை விடும் காட்சி முத்தாய்ப்பு. அதன் முன்னதாக “வந்தாய் அய்யா”என்ற பாடலில் “நீ அமர்ந்ததால் பாறை கூட சிம்மாசனமாய்”என்று ஒரு வரியை கவனம் கொண்டீர்களா?

8.       ராஜமாதா சிவகாமியின் கையில் பாகுபலியின் ரத்தத்தை தோய்த்து “தவறு செய்துவிட்டாய் சிவகாமி” என்று தொடங்கி நீ தூங்கடா என்ற பாடலும், பின்பு சிவகாமி தேவசேனையின் காலை தொடுவதும், அடுத்த அரசன் மகேந்திர பாகுபலி என்று அறிவிக்கும் வரை அனைத்துமே நெகிழ்வான காட்சிகள்.


9.       இறுதியாக போரில், பாலத்தின் தீ வைத்த காரணத்தினால் தேவசேனையின் அடிபிறழாமல் இருக்க பல்வாள்தேவனின் தங்கச்சிலையின் தலை உடைந்து அதன் மீதே தேவசேனையை நடக்கவைத்திருப்பது சூப்பர். பின்பு இறுதி காட்சியில் பல்வாளை வதம் செய்ய வரும் மகேந்திர பாகுபலி தன் கையில் வாளை வைத்துக்கொண்டு குதிக்கும்பொழுது பின்புலத்தில் வானில் அமரேந்திர பாகுபலி விண்ணை முட்டும் அளவுக்கு காட்சி தருவதும் அவன் வாரிசாக அவன் ரூபத்தில் மகேந்திர பாகுபலி தன்னை கொல்ல வரும் காட்சியும் பிரமாதம். Desktop Wallpaper.

திங்கள், மே 15, 2017

பாகுபலி

படம் பார்த்த அனைவருக்கும் ஏற்படும் ஒரு அதீத உணர்வு-அதன் பிரமாண்டம் தரும் ஆச்சர்யம். ராஜமௌலியின் கதை சொல்லும் திறன் ஊரறிந்ததே. எடுத்த அனைத்து படங்களும் பாக்ஸ் ஆபீஸ் ஹிட். கடைசியாக வந்த நான் ஈ திரைப்படம் ஒரு ஈயை வைத்து இப்படியும் கதை சொல்ல முடியுமா என்று அனைவரையும் மூக்கின் மீது விரலை வைக்க வைத்துவிட்டது. அதுவே பாகுபலியின் மீது சொல்லொன்னா எதிர்பார்பை ஏற்படுதிவிட்டது. எதிர்பார்த்ததுக்கு மேலேயே எகிறி அடித்திருக்கிறான் பாகுபலி.



தன் அப்பாவிடம்  கதையை கேட்டு அதற்கு பாத்திர படைப்பு கொடுத்து அவற்றை திரையில் உயிரளித்து கிராஃபிக்ஸில் பிரமாண்டம் என ஆதி முதல் அந்தம் வரை ராஜமௌலி கொடுத்திருக்கும் அற்பணிப்பு அளப்பரியது. எங்கு கதையை ஆரம்பிக்க வேண்டும் எந்த இடத்தில் முதல் பகுதியை நிறைவு செய்ய வேண்டும் எதில் எண்ட்கார்ட் போட்டு ரசிகனை கட்டிபோடவேண்டும் என்று அனைத்து வித்தையையும் அறிந்துள்ளவர் ராஜமௌலி. அதற்கு சற்றேனும் குறைவில்லாமல் திரைக்கதையை அமைத்துள்ளார். ஒரு காட்சியேனும் தொய்வில்லாமல் நகர்கிறது.

முதல் பகுதியின் அறிமுகத்தில் தமிழ் மக்களுக்கு பிரபாஸ் அவ்வளவாக பரிசியமில்லாத முகம். ஆனால் படம் முடிவதற்குள் ரசிகனின் மனதில் பாகுபலியாக சிம்மாசனமிட்டு அமர்ந்துகொள்கிறார். என்ன ஒரு உடற்கட்டு. படத்திற்காக ஒன்னரை கோடி அளவில் பிரபாஸுக்கு ஒரு GYM ஏற்பாடு செய்துகொடுத்துள்ளார் ராஜமௌலி. ஒரு படத்திற்கு மூன்றரை வருடம் என்று முழுதாக directors’ hero வாக தன்னை அற்பனித்துள்ளார். ஆண்டாண்டு காலத்திற்கும் பிரபாசின் கேரியரில் இது மின்னிக்கொண்டிருக்கும்.


படத்தின் அடிநாதமே கிராபிக்ஸ் தான். முதல் பகுதியில் அருவியில் ஆரம்பித்ததில் சரி,
 ஷிவுடு மலையேறி ஒரே தாவலில் அம்பெய்து அதன் மூலமாக மலையின் உச்சியில் ஏறியது என்று ராஜமௌலியின் கற்பனைக்கு சற்றேனும் குறைவில்லாமல் ஈடு கொடுத்திருக்கின்றது கிராபிக்ஸ் டீம். காலகேயர்களுடன் போர் காட்சிகள், போர் தந்திரம், ஒரு புது மொழி,மகிழ்மதியின் பிரமாண்டம், பல்லாலதேவனின் வானுயர்ந்த சிலை என எல்லாமே இரண்டாம் பாகத்திற்கு ரசிகனை ஆவலோடு காத்திருக்கசெய்துவிட்டது. இந்தியா வரலாற்றில் எந்தவொரு படத்திற்கும் இவ்வாறான ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஏற்படுத்திய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கவும் நிகழ்வில்லை. இரண்டையும் ஒரு சேர அடித்திருக்கிறான் இந்த பாகுபலி.


இரண்டாம் பாகத்தில் பல்லாலதேவனின் தலை உடைவதாகட்டும்,
 அணையை வைத்து போர் வீரர்களை தவிடுபொடியாக்குவதும், யானை மேலே கம்பீரமாக ஏறி நிற்பதும்., ஏன் இறுதிகட்ட போர்க்காட்சியில் அகழியின் பாலத்தில் சறுக்குவது என்று இரண்டாம் பாகத்தில் பதிநாறடி பாய்ந்திருக்கின்றனர். Mission Impossible படத்தில் டாம் க்ரூஸ் துபாயில் ஒரு கட்டிடத்தில் சறுக்கி வருவதை மிஞ்சி விடுகிறான் இந்த பாகுபலி. டெஸ்க்டாப்பில் Full HD வால்பேப்பர் வைப்பதற்கு நிறைய காட்சிகள் இருக்கின்றன. குதிரையின் மீது கம்பீரமாய் வருவது, வாளை சுலற்றுதல், அகழி காட்சி, சிம்மாசனத்தில் உட்கார்ந்திருப்பது என ஒவ்வொன்றும் கண்ணில் ஒற்றிக்கொள்ளும் ரகம். போரில் குதிரையில் அமர்ந்துகொண்டே இரண்டு கைகளாலும் அம்பையும் வாளையும் சுழற்றி எதிரிகளை பந்தாடிய காட்சிகள் இவ்வளவு தெளிவாக ரசனையுடன் இதுவரை எந்தவொரு சினிமாவிலும் பார்க்காதது.

ராஜமௌலி ஒரு இயக்குனர் என்பதை விட தான் ஒரு நல்ல ரசனையுள்ள படைப்பாளி என்று மீண்டும் நிரூபித்துக்கொண்டு இந்தியா சினிமாவின் அடையாளமாய் உலகளாவிய புகழை தேடியிருக்கும் படமே பாகுபலி.

வியாழன், பிப்ரவரி 23, 2017

கொஞ்சம் அரசியல்

தமிழ்நாட்டு அரசியலில் கடந்த இருபது நாட்களுக்கும் பரபரப்புக்கு கொஞ்சமும் பஞ்சமில்லாமல் நகர்ந்தன. கிஞ்சித்தும் பதவி ஆசை இல்லை என்றவர் முதலமைச்சர் நாற்காலிக்கு தன்னைத்தானே தேர்வு செய்துகொண்டார். தெய்வமகள் சீரியல் பிரைம் டைமில் முக்கால் மணிநேரம் ஊடகங்கள் வருவதற்கு அவகாசம் அளிப்பதற்காக தியானம் மேற்கொண்டு உலக அளவில் ஒரு மணி நேரத்திலேயே புனிதர் ஆகிக்கொண்டார் இன்னொருவர் . தொன்னூறு சதவீதத்தை தன்னுள்ளே புதைத்துக்கொண்டேன் என்று இடைசொருகலாக ஒரு ட்விஸ்ட் வேறு. இங்கு பத்து பதினொன்று அங்கு நூற்றி இருபத்தினான்கு என்று தமிழன் கணிதத்தை ஒவ்வொரு நாளும்  தூசு தட்டிக்கொண்டான். நடுவில் விளம்பர இடைவேளை போல் காம்பிளான் பாப்பா வேறு. ஒரு நாளைக்கு ஒரு முதல்வர் கோரிக்கை என்று ஆதரவு கடிதம் நீள, மும்பைக்கு ஆளுநர் அப்ஸ்காண்ட்.  சட்டசபையில் ஒருமுடிவுடனேயே உள்ளே சென்று சபாநாயகர் வரை அதகளபடுத்திய திமுக, என்று வாக்கெடுப்பு முடியும் வரை அடுத்தது என்ன அடுத்தது என்ன என்று நகம் கடித்து இருக்கையின் நுனியிலேயே உட்கார வைத்துக்கொண்டார்கள். ஸ்டாலினை பாராட்டியே ஆகவேண்டும். ஒட்டுமொத்த தமிழகத்தில் எண்ணத்தை நிறைவேற்றும் விதமாக சட்டசபையில் அடித்த ஹெலிகாப்டர் சிக்ஸை அவ்வளவு எளிதாக மறந்து விடத்தான் முடியுமா?. மீம் கிரியேட்டர்களுக்கு சற்றும் பயப்படாமல் கிழிந்த சட்டையுடன் வண்டியில் இருந்து இறங்கி போஸ் அளித்த வகையில் சிங்கம் 3 சூர்யாவுக்கே டஃப் கொடுத்தவர். முயன்ற வரையில் முயற்சி செய்தவர். சட்டசபையில் ஜனநாயகம் கொல்லப்பட்டது என்று சொன்னவர்களெல்லாம் கூவத்தூர் கூத்து எந்த வகையில் சேர்த்தி என்பதையும் தெளிவுபடுத்த விழைய வேண்டும்.

ஆட்சி கலைப்பு என்ற அஸ்திரத்தை பலர் கையில் எடுத்து போராடினாலும், ஆளுநர் அசைந்து கொடுக்காதது வியப்பளிக்கிறது. சொல்லப்போனால் ஸ்டாம்ப் பேட் போன்ற பதவி என்று நினைத்தவர்களுக்கெல்லாம் ஒன்றரை டன் வெய்ட்டுடா என்று சொல்லாமல் சொல்லியடித்தார் ராவ். வாவ். முன்னாள் முதல்வரின் மறைவு தொடர்பாக விசாரணைகமிஷன் என்று அறிவித்ததெல்லாம் உடான்ஸ் வேலையாகவே தெரிகிறது. அப்பல்லோ அவ்வளவு எளிதாக தங்களது ரெபுடெஷனை இழக்கத்துணியாது. எய்ம்ஸ் மருத்துவர்களும் சம்பந்தபட்டிருப்பதால் மத்திய அரசு பதில் சொல்லும் நிலைக்கு தரம் தாழ்ந்துவிடாது என்றே தோன்றுகிறது. நினைவு இல்லம் சாத்தியப்படலாம். அதன் மூலம் கொஞ்சம் வாக்கு வங்கியை தேற்ற ஒபிஎஸ் முனையலாம். என்னதான் மதுக்கடை மூடல் விவசாயக்கடன் நிவாரணம் என்று அறிக்கைகள் வெளியிட்டாலும், இன்னும் சில நாட்களில் மாஃபியாக்களின் அராஜகம் தொடங்கிவிடும். ஜல்லிக்கட்டை போன்றதொரு இன்னொரு தன்னெழுச்சி போராட்டத்திற்கு கடுகளவும் வாய்ப்பில்லை. அப்படியே தொடங்கினாலும் அவை இரும்புக்கரம்  கொண்டு ஒடுக்கப்படும்.

திராவிடம் அல்லாத ஒரு மாற்று கட்சி தமிழகத்தை ஆளுவதென்பது இலவு காத்த கிளி கதை போல. மிக ஆழமாக வேரூன்றி இருக்கிறார்கள். தவிர உரமிட்டு நீர்பாய்ச்சவும் தவறவில்லை. ஆதலால், காங்கிரஸ்,பி.ஜே.பி போன்றவை தமிழகத்தை தவிர்த்தல் நலம். புதியதோர் இளைஞர்கள் கட்சி என்பதெல்லாம் ஏட்டுசுரைக்காய் மட்டுமே. மீறி கறிக்கு உதவினாலும் அவற்றை பதமாக சமைக்க அனுமதியாது தீயத்து விடுவார்கள்,இந்த மலை முழுங்கி மஹாதேவேன்கள். சகிப்புத்தன்மையை பெரிதாக  வளர்த்துக்கொள்வதை தவிர வேறு வழியே இல்லை இந்த நான்கு வருடங்களுக்கு. புத்தர் சொல்லியது போல நடப்பவற்றிற்கெல்லாம் சாட்சியாய் இருத்தல் மட்டுமே சாத்தியம். Be a witness.

எம்.ஜி‌.ஆரின் மறைவுக்கு பிறகு ஒவ்வொரு தேர்தலிலும் எதிர்க்கட்சியின் மீதுள்ள வெறுப்பினால் மட்டுமே ஆளும் கட்சி தேர்ந்தெடுக்கபட்டிருக்கிறது. 2ஜி என்ற சொல்லுக்காகவே திமுக கடந்த இரு தேர்தலிலும் தோல்வியை சந்தித்தது. இம்முறை மக்கள் பெருந்திரளாக வாக்கள்ளிக்கப்போவது திமுக என்ற யானைக்கே. ஆனால் அது அதன் பேரில் உள்ள விருபத்தினால் அல்ல. அண்ணா திராவிட மன்னார்குடி கழகத்தின் மேலுள்ள வெறுப்பினால் மட்டுமே ஸ்டாலின் மகுடம் சூட்டிக்கொள்ளபோகிறார். மாற்றான் மேல் உள்ள வெறுப்பால் சம்பாதிக்கப்போகின்ற மகுடத்தை நாகரீக அரசியல் மூலமாக மக்களின் விருப்பத்தால் தக்கவைத்துக்கொள்ள முனைந்து செயல்பட அவரால் முடியும் என்று நமப்த்தோன்றுகிறது. பத்திரிக்கை சந்திப்பு, பேட்டி, முகநூல் என்று எதிலுமே டிப்ளோமெட்டிக்காக செயல்படும் தளபதிக்கே இந்த முறை பிரகாசமான வாய்ப்பு.


இலை உதிர்ந்து சூரியன் உதிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.

திங்கள், பிப்ரவரி 06, 2017

திமிறி எழு இளைஞனே...



சிலருக்கு திரை விலக 60 நாட்கள் எடுத்துக்கொண்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தலாம். சிலருக்கு 60 நாட்களிலேயே  திரை விலகியது அதிர்ச்சியை கொடுக்கலாம். ஆனால் திரை விலகிவிட்டது என்பது தான் உண்மை.

இவர் தான் தலைவர் என்று அறிவிக்கபட்டு பின் அந்த கட்சியையோ அல்லது அந்த கட்சியின் வேட்பாளரையோ நாம் ஆட்சிக்கு தேர்ந்தெடுக்கிறோம். நாம் தேர்ந்தெடுத்த வேட்பாளர் நமது விருப்பமான கட்சியின் அடையாளமாக இருந்திருக்கக்கூடும். அல்லது நமக்கு பிடித்த வேட்பாளரின் பொருட்டு நாம் அந்த கட்சியை தேர்ந்தெடுப்பதற்கு இடமிருக்கிறது. இரண்டுமே இல்லாத ஒரு இக்கட்டான நிலைக்கு தற்போது தமிழக மக்கள் ஆளாகியிருக்கிறார்கள். வெறும் கையறு நிலை.

நகை முரண் யாதெனில், இவை அனைத்துமே நாம் பெரிதும் மதிக்கும் சட்டத்திற்கு உட்பட்டு நடக்கிறது. அல்லது சட்டத்தின் அங்கங்கள் பழம் தின்று கொட்டை போட்டவர்களால் மிக லாவகமாக கையாளப்படுகின்றன. காலவரிசைக்கிரமமாக நாம் இதை கவனித்தோமேயானால், காய்கள் மிக சரியாக, அதற்குரிய தருணத்தில் சற்றேனும் பிசகாமல் நகர்த்தபட்டிருக்கின்றன என்பதை யூகிக்க முடிகிறது. அவ்வாறு இருப்பின், இதற்கான திட்டமிடல் பல ஆண்டுகளாக நடத்தபட்டிருக்கலாமோ ஆன்ற ஐயமும் தொக்கி நிற்கிறது.

தலைவராக தேர்ந்தெடுக்கபட்ட முடிவிலிருந்தே, தேர்ந்தெடுக்கபட்ட அனைவர் கையும் கறைபடிந்துள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இதற்கு முந்தைய தேர்தலில் பணத்தால் ஓட்டை விலைக்கு வாங்கமுடிந்ததேயானால், அதற்கு காரணம், கட்சியில் பிரபலமான முகம் இருந்தது, மக்களுக்கு அந்த முகம் கனவிலும் பரிச்சயமாகியிருந்தது. ஆனால் இன்று முன்வைக்கப்பட்டிருக்கும் முகமோ, மக்களின் வெறுப்பை சம்பாதித்து பிரபலமாகியுள்ளது. ஒருத்தர் மட்டுமல்லாது ஒவ்வொருத்தரிடமும் கோபம் மண்டியிருக்கிறது.

வீரனுக்கு போர்வாள் ஆயுதம், எழுத்தாளனுக்கோ கைபிடித்திருக்கும் பேனாவே ஆயுதம். ஆனால் சாமானியபட்ட மக்களின் ஆயுதம் ஓட்டுரிமை மட்டுமே. பாரத்தத்திற்கு மிகப்பெரிய ஜனநாயக நாடென்ற பெருமை உண்டு. அவ்வழியே ஜனநாயகத்தின் பாதையில் தன்னை ஆள்பவரை தேர்ந்தெடுக்கும் உரிமை மக்களுக்கிருக்கிறது. சகிப்புத்தன்மைக்கு பேர்போன தமிழர்களுக்கு அதைத்தவிர தற்போது வேறு உபாத்தியம் இல்லை. வலுவுள்ள வேட்பாளரை நிறுத்துவதற்கு எதிர்க்கட்சிகள் மட்டும் காத்திருக்கவில்லை, அலைகடலென திரண்டு ஓட்டளிக்க மக்களும் காத்திருக்கிறார்கள். வாக்களிப்பதின் மூலமாக மட்டுமே உரிமையை மீட்டெடுக்கும் முகாந்திரமிருக்கிறது.

மேய்ப்போனை என்றுமே ஆடுகள் பகைத்ததும் இல்லை, பட்டிதாண்டி ஓடியதுமில்லை. பகைத்துக்கொண்டால் இலை தழைகள் கிடைக்காது. பட்டிதாண்டினால் ஓநாய்கள் வேட்டையாடிவிடும். ஆனால் இலை தழைகளுக்கும் இலவசங்களுக்கும் மேய்ப்போனை பகைக்காமலிருக்கவும், ஓநாய்கள் வேட்டையாடும் வரை கைகள் பிணைந்திருக்கவும் தமிழக மக்கள் ஒன்றும் ஆடுகள் இல்லை.  திமிறி எழும் ஜல்லிகட்டு காளைகள்.

திமிறி எழு இளைஞனே. நாளைய உலகம் உன் கையில் !!!



வியாழன், பிப்ரவரி 02, 2017

ஜல்லிகட்டு

2015 மற்றும் 2016 என்று பொறுத்த பார்த்த தமிழன் இப்போது பொங்கி எழுந்திருக்கிறான். இதை ஜல்லிகட்டுக்கான புரட்சி என்று மட்டுமே பார்க்க முடியவில்லை. ஜல்லிக்கட்டையும் தாண்டி 2019 மற்றும் 2020 க்கான அரசியல் மாற்றத்தின் அடிநாதமாகவே தெரிகிறது. 2015 மற்றும் 2016 இல் அம்மா முதலமைச்சராக இருந்தார். அவர் ஏதேனும் முயற்சி செய்து ஜல்லிக்கட்டின் மீதான தடையை நீக்கக்கூடும் என்ற நம்பிக்கையிலோ அல்லது காவல் துறையின் ஒடுக்கும் கரங்களை கொண்டு தங்களை அடக்கக்கூடும் என்ற உணர்விலோ இத்தகைய போராட்டங்கள் முன்னெடுக்கப்படவில்லை. ஒரு மாநிலத்தின் முதலமைச்சரை mixture meme மூலம் கலாய்க்கும் அளவுக்கு தைரியம் என்று கூறமுடியாவிட்டாலும், அவர் மீதான அவநம்பிக்கையின் வெளிப்பாடாகவே இந்த புரட்சியை பார்க்கமுடிகிறது. மக்கள் அரசின் மீதான நம்பிக்கையை முற்றிலும் இழந்துவிட்டார்கள். விவசாயிக்கு அடைக்கலம் அளிக்காதது, ஜல்லிக்கட்டில் முரண்பட்டது, தமிழகமே வெறுக்கும் ஒரு குற்றவாளியை முன்னெடுத்து செல்வது, NEET தேர்வுக்கு ஆதரவு அளித்தது, உதய் மின் திட்டத்தில் சேர்ந்தது என்று தனக்கான குழியை தானே பறித்துக்கொண்டிருக்கிறது. அடுத்த தேர்தலில் இரட்டை இலை மற்றும் தாமரை இரண்டுமே மிக மோசமான தோல்வியை சந்திக்கக்கூடும். இவர்களுக்கு அடுத்து ஓரளவேணும் தெரிந்த முகமாக இருப்பது ஸ்டாலின் மட்டுமே. வெற்றி தானாகவே அவர்கள் மடியில் விழும். இது இவ்வாறாக இருக்க,

ஜல்லிக்கட்டின் போராட்டம் இத்தகய உச்சத்தை தொட்டிருப்பது, ஒவ்வொரு தமிழனின் ஏன் அனைத்து மாநில மற்றும் நாடுகளிலும் ஆச்சர்யத்தையும் அதனைத்தொடர்ந்து வரவேற்பையும் ஒரு சேரப்பேற்றிருக்கிறது. சுதந்திர போராட்டத்திற்கு பிறகு சாதி மாத இன பேதமின்றி மக்கள் ஒன்று திரண்டிருப்பது தமிழக வரலாற்றில் இது முதல் முறையாகும். முகநூல் மற்றும் வாட்ஸ்அப் இதில் முக்கிய பங்காற்றிருக்கிறது. ஒவ்வொரு தமிழனின் மனமும் மூர்க்கமடைந்து தன்னுள்ளே ஆழமாக வேரோடிருந்த தனித்துவமிக்க அடையாளங்களுக்காக போராட்டத்தை முன்னெடுத்திருக்கின்றன. முன்னமே கூறியது போல், கீழடியில் தொல்லியில் ஆதாரங்கள் மூடி மறைக்கப்படுகின்றன. தமிழனின் அடையாளங்கள் ஒவ்வொன்றாக மறைக்கப்பட்டு அவனை வேரறுக்கும் நிகழ்வு நம் கண்முன்னே மெதுவாக நடந்துகொண்டிருக்கிறது. இத்தனை நாளும் தன்னுள்ளே சலித்துக்கொண்டு, அலுப்போடு ஒடுக்கபட்டிருந்த ஆதார உணர்ச்சிகள் பீறிட்டு கொப்பளித்துக்கொண்டிருக்கின்றன. ஒவ்வொருவருக்குள்ளும் ஏற்பட்டிருக்கும் அக நெருக்கடியை புறந்தள்ளி வைத்துவிட  முடியாது. மாற்றத்தின் ஆதார விதை இங்கே இப்போது தூவபட்டுக்கொண்டிருக்கிறது. அதை ஒரு ஆலமர விருட்சமாக துளிர்த்து அகன்ற நிழலாக வெடித்து வெளிக்கொணரும்  முகாந்திரம் ஒவ்வொரு தமிழனின் கைகளில் உறைந்துகிடக்கிறது.

வாழு. வாழ விடு

வாழ்க தமிழ். வெல்க தமிழ்.




இந்தியன் ஆயில்

இருபது நாட்களுக்கு முன்பு எனது பதின்மூன்று வருட பாரம்பரிய XL Super வண்டிக்கு பெட்ரோல் போடச்சென்றிருந்தேன். அதன் கொள்ளளவு 4.0 லிட்டர். பல நாட்கள் உபயோகபடுத்தாததால் வண்டி கிட்டதட்ட ட்ரை ஆகியிருந்தது. பெட்ரோல் போடும் பைப்பை உள்ளே சொருகியவன், கீழே டேங்கை ஆஃப் செய்ய சொன்னான். அது டைவர்சன் டெக்னிக் என்பது பின்பு தான் தெரிந்தது. கீழே குனிந்து ஆஃப் செய்து தலையை தூக்கிய அந்த அரை நொடியில் நான் சொன்ன இரண்டு லிட்டர் நிறைந்திருந்தது. என்ன நடந்தது என்பதை என்னால் ஊகிக்க முடிந்திருந்தது. முன்னாள் சென்ற வண்டிக்கு ஐம்பது ரூபாய்க்கு போட்டவன் அதை ஜீரோவாக்காமல் அப்படியே போட்டிருந்தான். எனக்கு ஏமாந்த உணர்வு. சந்தேகம் வலுக்கவே மீண்டும் லைனில் சென்று டேங்கை ஃபுல் செய்யச்சொன்னேன். இப்பொழுது 2.64 லிட்டர் பிடித்தது. மொத்த கொள்ளளவு 4.0 லிட்டர் தானே. எப்படி நீ 4.64 போட்டாய் என்று கேட்டதற்கு CB CID யா? ஆளை கூட்டி வருவாயா என்று மேலும் சில அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளால் திட்ட ஆரம்பித்தான். என் கையில் அப்போது மொபைல் வைத்திருக்கவில்லை. ஒனருக்கு போன் செய்ய முடியாது. தவிரவும் கைகலப்பு ஆகும் வாய்ப்பு இருந்தது.  ஆதலால் நீ செய்வது தவறு என்று சுட்டிவிட்டு மைய்யமாக புனகைத்து விடைபெற்றேன்.

வார்த்தை மோதலின்போது அவனின் பெயரை ஒருவன் உச்சரித்தது ஞாபகம் வந்தது. ஒனரின் நம்பரை ஆண்டவரிடம் கேட்டு கண்டுபிடித்து அவரிடம் இதை பற்றி விளக்கினேன். வருத்தம் தெரிவித்து அவனிடம் பேசுவதாக சொன்னார். நேரில் வரச்சொன்னார். ஆனால் அவரிடம் பேசும் முன்பே India Oil வெப்சைட்டில் நம்பிக்கையில்லாமல் பின் ஊட்டம் அளித்திருந்தேன். மேலும் முத்தாய்ப்பாக Public Grievance Portal இல் MPANG கேட்டகரியில் ஒரு புகார் அளித்திருந்தேன். அதன்பிறகு தான் ஹைலைட்.
Indian Oil பின்னூட்டத்திற்கு அடுத்த நாளே அவர்கள் பதில் அனுப்பியிருந்தார்கள். நடந்தவற்றிற்கு வருத்தம் தெரிவித்து மேலும் அந்த ஊழியனை மூன்று நாட்கள் சஸ்பெண்ட் செய்துவிட்டதாகவும் கூறியிருந்தனர். மேலும் திருச்சி IOCL Sales office மேனேஜர் மூன்று முறை போன் செய்து தவறுக்கு வருத்தம் தெரிவித்தார்.

இதெற்கெல்லாம் மேலாக Public Grievance Portal இல் பதிவு செய்த புகார் டெல்லி சென்று அங்கிருந்து IOCL HO க்கு route செய்யப்பட்டு பின்பு அங்கிருந்து சென்னை IOCL மூலம் திருச்சி IOCL வந்தடைந்து CCTV காமிரா வரை நிரூபணம் கேட்டு CBCID போல் விசாரித்து ஒரு பதில் அனுப்பியிருந்தனர். வினை விதைத்தவன் வினை அறுத்துவிட்டான் என்பது புரிந்துவிட்டது. .

இரண்டு நாட்கள் முன்பு பெட்ரோல் நிரப்புவதற்காக அதே பங்கிற்கு சென்றிருந்தேன். கார்ட் தேய்க்கும்பொழுது அங்கிருந்தவரிடம் மெதுவாக விசாரித்தேன். நீங்கதான் புகார் தெரிவித்தவரா என்று கேட்டு அதற்காகவே காத்திருந்தது போல் அவர் மேனஜரிடம் அழைத்து சென்றார். அவரும் மன்னிப்பு கேட்டு, அந்த ஊழியனை  காசாளரையும் வேலையில் இருந்து நிறுத்தியதை தெரிவித்தார். அங்கிருந்த அனைவருமே இது போல் ஒரு தவறு நடக்காது என்பதை உறுதிபடக்கூறினர். தாங்கள் மன்னித்துவிட்டதாக ஒரு கடிதம் கொடுக்கவேண்டும் என்றும் அதை நான் IOCL ஆபீஸில் ஒப்படைக்க வேண்டும் என்று வேண்டிகேட்டுக்கொண்டார். முடிந்தால் வீட்டிற்கு வந்தே வாங்கிக்கொள்கிறேன் என்றும் கீழிறங்கி வந்தார். தங்களுக்கு அந்த கஷ்டம் வேண்டாம் என்றும் நானே வந்து தருகிறேன் என்றும் கூறி இன்னும் ஒரு மாதத்தில் தூக்கி எரியப்போகும் JIO நம்பரை கொடுத்துவிட்டு நான் எஸ்கேப்.
Grievance Redressal என்பது எல்லா சேவைகளுக்கும் அந்தந்த நிறுவனங்களே நடத்துகிறது எனபதும் மேலும் அவற்றை கவனிக்க மத்திய அரசின் குறை தீர் வெப்சைட்டும் உறுதுணையாக இருக்கிறதென்பதும் அவை செவ்வனே வேலை செய்கிறதும் என்பதும் இத்ன் மூலம் திண்ணமாகிறது.

இது ஒரு விழிப்புணர்வுக்காகவே எழுதபட்டது.





Save

அப்பொழுது அந்த கட்டிடத்தில் இருந்து வந்த சப்தம் அவரை அங்கு ஒரு நிமிடம் நிற்க செய்தது.
இரண்டு மணிநேரத்திற்கு முன்பு,

வீட்டுக்கு கிளம்ப வேண்டிய நேரத்தில், நரசிம்மனுக்கு அந்த பைலை பார்த்தது முதல் எரிச்சலாக இருந்தது. அதை கொண்டு வைத்த பியூனிடம் கடுகடுத்தார். இன்று மூல நட்சத்திரம், சாயுங்காலம் ஆஞ்சநேயர் கோவில் போக வேண்டும், அர்ச்சனை செய்ய வேண்டும் என்பதிலேயே பரபரவென்று பரத்திக்கொண்டிருந்தார். அரசாங்க கருவூலத்தில் காசை எண்ணி சரிபார்த்து ஒவ்வொரு நாளும் கணக்கை வரவு செலவு வாரியாக துல்லியமாக முடித்துவைத்து விட்டு வரும் காசாளர் அவர். ராம” நாம ஜபத்தை கிடைத்த நேரம் முழுவதும் ஜெபிக்கும் ஆசாமி. யார் வம்புக்கும் போகாதவர். அதே நேரத்தில் ராமன் ஆண்டால் என்ன் ராவணன் ஆண்டால் என்ன என்று தன் காரியத்தில் மட்டுமே குறியாக இருப்பவர். 
சார், இந்த பைல இன்னைக்கு தள்ளி விட்டுடுங்கோ என்று பியூன் கெஞ்சாத குறை.

“அதெல்லாம் முடியாதுடா அம்பி. மணி இப்போவே ஆறு. நாழியாய்டுத்து. கோயிலுக்கு போனும். பெருமாள சேவிக்கணும். எல்லாம் நாளைக்கு பாக்கலாம்டா” என்று வேஷ்டியில் படிந்த மண்ணை தட்டிவிட்டு கிளம்பிவிட்டார்

பைக் பஞ்சர், பஸ்ஸில் கூட்டத்தில் முண்டியடித்தது, கண்டக்டர் சில்லரை தராதது என்று கோவிலுக்குள் செல்லும் வரை நொந்துகொண்டே இருந்தார்.  சரியாக  அர்ச்சனை சமயத்துக்கு வந்துவிட்டது அவரை சிறிதேனும் ஆசுவாசுபடுத்தியது. பேரெல்லாம் கூறி அர்ச்சனை செய்து தீபாராதனை பார்த்து, காணிக்கை வைத்து, கண்ணில் ஒற்றி, துளசி தீர்த்தம் பருகிய பிறகுதான் பெருமூச்சு விட்டார்.

கோவில் பிரசாதத்தை கையில் எடுத்துக்கொண்டு வீட்டிற்கு கிளம்பினார்.  எரியாத தெருவிளக்கை எண்ணி நொந்துகொண்டே வீட்டை நோக்கி நடந்தார். பழைய இருள் சூழ்ந்த பள்ளி கட்டிடத்தை தாண்டி சென்றுகொண்டிருந்தார். பசி வயிற்றை கிள்ளியது. ஓட்டமும் நடையுமாக வீட்டிற்கு படையெடுத்தார்.
அப்பொழுது அந்த கட்டிடத்தில் இருந்து வந்த சப்தம் அவரை அங்கு ஒரு நிமிடம் நிற்க செய்தது. சில பொருட்கள் கீழே விழுவது போல் கேட்டன. காம்பவுண்ட் சுவரை ஒட்டிசென்று காதை வைத்தார். ஒரு பெண்ணின் அழுகையோ பேச்சோ தெளிவில்லாமல் கேட்டது. எவன் எக்கேடு கேட்டுபோனால் எனக்கென்ன என்று நகர ஆரம்பித்தவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, பின்னங்கால் பிடரியில் அடிக்க கட்டிடத்திற்குள் ஓடினார். சத்தம் வந்த அறையை நோக்கி செல்லவும் அங்கு ஒருவன் ஒரு பெண்ணை பலவந்தபடுத்துவது இருட்டில் நிழலாக  தெரிந்தது. அவன் குடித்துவிட்டு நிலை கொள்ளாமல் தள்ளாடிக்கொண்டு அவளை பிடித்து கொண்டிருந்தான். அந்த பெண் ஓட முயன்று தோற்றுக்ண்டிருந்தாள். எங்கிருந்து வீரம் வந்ததோ தெரியவில்லை. ஓடி சென்று ஒரு பெரிய கல்லை எடுத்து ராமா ஆஞ்சநேயா என்று கத்திக்கொண்டு அவன் தலையில் ஓங்கி அடித்தார். அவன் கீழே விழவும், “அப்பா” என்று அழுதுகொண்டே அவருடைய மகள் அவரை கட்டிக்கொண்டாள்.

Not necessary that it should be your child.

Stop Violence and Save women




அம்மு

அவரின் வாழ்க்கை முழுவதுமே மர்மம் விரவிக்கிடந்திருக்கிறது. தன் வாழ்க்கையின் முன்பாதி முழுவதுமே இரு மனிதர்களால் முழுவதும் ஆக்கிரமிக்கபட்டிருந்தது என்று ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். ஒன்று தன் தாய் சந்தியா. அவரின் தூண்டுதல் பேரில் திரையில் நடிக்கத்தொடங்கி கோலோச்சியது தனக்கு என்றுமே விருப்பமில்லாத ஒன்று என்று வருந்தியிருக்கிறார். மற்றொன்று தமிழக அரசியியலில் கர்ம வீரருக்கு நிகரான ஒரு பிம்பத்தை பெற்றிருந்த எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களின் தவிர்க்கமுடியாத அரசியல் வாரிசாக உருவெடுத்தது. இதன் காரணமாகவே, தனது வாழ்க்கையின் மறுபாதியை யாருக்கும் இல்லாது தனக்கே தனக்காக வாழ வேண்டும் என்ற ஆசையை அந்த பேட்டியில் அடிகோடிட்டிருந்தார்.  ஆனால் அதுவும் பொய்த்துப்போனதை தொண்டர்கள் அறிவார்கள். மூன்று முறை கார்டனை விட்டு விலக்கிவைத்ததும் பின்பு மன்னித்து சேர்த்துக்கொண்டதும், கூடாநட்பு என்று தெரிந்திருந்தும் உறவாடியதும் விடைதெரியா கேள்விகள்.  கலைஞர் அவர்கள், கூடா நட்பு கேடாய் முடிந்தது என்று காங்கிரஸை விட்டு விலகியதும் பின்பு சுய ஆதாயத்துக்காக கண்கள் பனித்தன என்று மீண்டும் சேர்ந்த காரணத்தையும் தி.மு.க. தொண்டர்கள் அறிவார்கள். ஆனால் இந்த கூடா நட்பு ஏன் என்பது இன்று வரை லட்ச்சோப லட்ச தொண்டர்களின் புரியாத புதிர்.

பாபா ராம்தேவின் FMCG பொருட்கள் முழுவதும் பதஞ்சலி என்ற பேரில் ஒரே குடையின் கீழ் கொண்டுவரப்பட்டு எல்லா FMCG ஜாம்பவான்களுக்கு ஜன்னி கண்டதோ, அதே marketing  யுக்தி அம்மா சால்ட், அம்மா சிமெண்ட், அம்மா உணவகம், அம்மா மருந்தகம் என்று கொணரப்பட்டு அடிமட்ட தொண்டன் வரையில் “அம்மா” வை ஞாபகம் வைத்துக்கொள்ளச்செய்தது தோனியின் ஹெலிகாப்டர் சிக்ஸ்.  தன்னை அம்மா என்று கூப்பிட குழந்தையில்லையே என்று வருத்தம் உங்களுக்கு வேண்டாம், நாங்கள் இருக்கிறோம் என்று கோடிக்கணக்கான மக்களை அம்மா என்று அழைக்கவைத்தது அதிரடி சரவெடி. நாற்பதும் நமதே, மக்களுக்காக நான், மக்களுக்காவே நான் என்பதெல்லாம் வெறும் வார்த்தைகள் அல்ல. சரித்திரம்.

அவர் மறைவை இப்பொழுதும் கூட நம்ப முடியவில்லை. காய்ச்சல் என்று அனுமதித்து பின் உயிரற்ற சடலமாகத்தான் அவரை வெளியே கொண்டுவந்தார்கள். படோடப கல்யாணம், நகைகள், காலணிகள், அரசு ஊழியர்கள் கைது, கூடா நட்பு, தலமைச்செயலகத்தை பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றியது என்று பல முரண்பட்ட விஷயங்கள் நெருடிக்கொண்டிருந்தாலும் சொந்தபந்தங்களின்றி அந்த 75 நாட்களும் தனக்கு என்ன நடந்தது என்பது தெரியாமலேயே ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் மரணத்தை தழுவியது மிகுந்த வருத்தத்திற்குரியது. அவர் தன்னை சுற்றி கட்டமைத்துக்கொண்ட வேலி அப்படிபட்டது. அந்த வேலி அவரால் விரும்பி ஏற்றுக்கொள்ளபட்ட ஒன்றா அல்லது அழுத்தத்துடன் மற்றவர்களால் கட்டமைக்கபட்டதா என்பது மற்றுமொரு புதிர்.

மருத்துவமனையில் செப்ட் 22 அனுமத்திதது முதல் டிசம்பர் 5 வரை வெளியிலேயே காத்துகிடந்து பல சேனல்கள் செய்திகளை மட்டும் சொல்லாது ஊகங்களையும் வாசித்தன. அதுவும் டிசம்பர் 5 அன்று, அந்த ECMO வை பிடுங்கி எறியுங்கள், எங்களுக்கு TRP rating , தலைவர்களை அழைத்து நேர்காணல், மற்றும் குழு விவாதம் என்று பலவற்றை செய்யவேண்டியிருக்கிறது என்பது போன்ற நடவடிக்கை மிகுந்த பயத்தை கொடுக்கிறது. அடுத்து அடுத்து என்று ஓடோடி சென்று குழிக்குள் மண்ணை போட்ட மூடிய பின் தான் ஊடகம் தன்னை ஆசுவாசபடுத்திக்கொண்டது போல் தெரிகிறது. இதுதான் அவர்கள் தொழில் என்றாலும் அதில் கடைபிடிக்கவேண்டிய அறம், நெறிமுறைகள் பிறழ்ந்துவிட்டனவோ என்று அச்சம் தொக்கி நிற்கிறது, கொடுக்கப்பட்ட சிகிச்சை முதல் எம்பாமிங்க் செய்தி மற்றும்  மரணித்த நேரம், ஏன் நாட்கள் கூட, இப்பொழுது வரைக்கும் ரகசியாமாக இருக்கின்றன. பல ஊடகங்களுக்கு அவை தீனியாக செயல்படுகின்றன. இது ஆண் பெண், சாதி மதம் பேதமின்றி பிரபலங்கள் அனுபவிக்கும் சாபம்.

எது எவ்வாறாக இருந்தாலும் பல உண்மைகள் அவருடன் அந்த சந்தனப்பேழையயில் மீளா துயில் கொள்ள சென்றுவிட்டன.




கீழடி-தொல்லியல்-வேரறுத்தல்.

மகாபாரதத்தில் காந்தாரி 101 பிள்ளைகளை பெற்றடுத்தது பற்றி அறிந்ததுண்டா? குந்திக்கு முன்பே கருவுற்ற போதிலும் காந்தாரியால் குழந்தையை பெற்றெடுக்க முடியவில்லை. கோபம் கொண்டு தன் வயிற்றில் தானே குத்திக்கொள்கிறாள். அதன் காரணமாக ஒரு சதை பிண்டத்தை மட்டுமே பெற்றெடுக்கிறாள். வியாச முனிவர் இதை அறிந்து அவளுக்கு உதவ முன்வருகிறார். அந்த சதை பிண்டங்களை 101 துண்டுகளாக வெட்டி ஒவ்வொன்றையும் நெய்யும் மூலிகையும் நிறைந்த குடங்களில் போட்டு வைத்து சில நாட்கள் கழித்து அவற்றை கௌரவர்களாக பெற்றெடுக்க உதவுகிறார். Why those 101 pots cannot be an incubator of that good old period? ஏன் அவை தற்காலத்திய இன்குபேட்டர்களாக இருக்க முடியாது? நெய் என்று குறிப்பு இருக்கிறதே தவிர அது ஒரு வகை எண்ணை என்ற பொருளிலே எழுதபட்டிருக்கிறது.

ராமாயணத்திலே வரும் புஷ்பக விமானம் பற்றி ஏன் நாம் பெருமை கொள்ளவில்லை? அவை ஏன் ஒரு fantasy கதைகளாவே பார்க்கபடுகின்றன? Epic என்று ஏன் அதை வரலாற்றிலிருந்து பகுத்தும் பிரித்தும் வைத்துள்ளோம்?  கண்ணால் பார்க்கமுடியாத கையால் தொட்டு உணரமுடியாத ஒன்றை நிஜமில்லை என்றே அறிவியல் கூறுகிறது. அவ்வாறெனில் “The lost city of Dwarka” by S.R.Rao என்றொரு புத்தகம் இருக்கிறது. பாகவத புராணத்தில் கிருஷ்ணன் துவாரகை என்றொரு நகரத்தை நிறுவி அதன் குடிமக்கள் அனைவருக்கும் நகர மக்கள் என்று அடையாளத்திற்காக லட்சிணை  கொடுத்துள்ளான். அந்த லட்சிணை எந்த வடிவத்தில் அதில் என்ன பொறிக்கபட்டிருந்தது மற்றும் எவ்வாறு இருந்தது என்பதற்கு பாகவத புராணத்தில் ஒரு குறிப்பு இருக்கிறது.  1981 இல் S.R.Rao தலைமையில் செய்யப்பட ஆழி அகழ்வாராய்ச்சியில் (marine expedition) சில தகவல்கள் கிடைக்கின்றன. நீண்ட சிதிலமடைந்த மதில் சுவர்கள், நகர வாயில் கோபுரங்கள், இடிபாடுடன் கூடிய கட்டிடங்கள். இவை அனைத்தும் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்று தெரிய வந்துள்ளது. குறிப்பாக அங்கு கிடைத்த உலோகத்தினால் ஆனா லட்சிணைகளின் அடையாளங்கள் பாகவத புராணத்தில் சொல்லபட்ட குடிமக்களின் லட்சிணையை ஒத்து போகிறது. மொத்தமாக 5% இடங்கள் மட்டுமே ஆராய்ச்சி செய்யபட்டுள்ளன என்றும் மீதம் 95% இடங்கள் identify செய்யபட்டு நிதி உதவிக்காக காத்துக்கொண்டிருக்கின்றன என்று இந்த புத்தகத்தில் S.R.Rao குறிப்பிட்டுள்ளார்.

பூம்புகார் கதியை தமிழகமே அறியும். தற்பொழுது முப்பது வருடங்கள் கழித்து ஒரு முழு அகழ்வாராய்ச்சிக்கு தயாராகிக்கொண்டிருந்த கீழடி கிராமம்,  இப்பொழுது மூடபட்டிருக்கிறது. ஐந்து மாதங்களுக்கு முன்பே ஒரு நாளிதழில் வெளிவந்த செய்தியை வைத்துக்கொண்டு, ஊர் ஊராக விலாசம் தேடி மதுரைக்கு சென்று மனைவி மக்களுடன் பார்த்து வந்தோம். அங்கு கிட்டதட்ட் முப்பது குழிகள் தோண்டபட்டு இருந்தன. ஒவ்வொன்றும் பத்துக்கு பத்து அடிகள். தோண்டுவது என்றால் JCB கொண்டு அல்ல. தங்க ஆபரணம் செய்வது போன்று பெயிண்ட் பிரஷ் வைத்துக்கொண்டு இன்ச் பை இஞ்சாக செய்யும் நகாசு வேலை அது. அத்தனை வேலையாட்கள் கொண்டு செதுக்கி எடுக்கபட்ட குழி அது. ஒவ்வொன்றும் வரலாற்றுப்புதையல். தமிழின ஆதாரம். உரை கிணறு முழு வடிவத்தில் கிடைத்திருக்கிறது. இதுபோன்று முழு வடிவத்தில் வேறு எங்கும் கிடைத்ததில்லை என்று சந்தோசகமாக கூறினார் அங்கிருந்த ஒருவர். வீட்டின் சுவர், சமையல் அறை என்று ஒரு நகரமே காலுக்கடியில் இருப்பதை உணரமுடிந்தது. கண்டுபிடிப்பில் அவர்கள் அறுதியிட்டு கூறியது யாதெனில், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கடல் மார்க்கமாக ரோம் நகரத்தினருடன் வாணிபம் செய்தது திண்ணமாயிருக்கிறது. இரண்டாயிரம் ஆண்டு முன்பு கடல் மூலமாக வாணிபம் செய்திருக்கிறோமென்றால் தமிழ் நாகரிகத்தின் அடிச்சுவடு குறைந்தபட்சம் இன்னும் ஓராயிரம் ஆண்டுகள் முன்பு செல்லலாம். யுக்தி கல்பதாரு புத்தகத்தில் கப்பல் கட்டுவதை பற்றி அவ்வளவு தெளிவாக இருக்கிறது. மச்ச யந்த்ராவில் திசை காட்டும் கருவியை பற்றி சொல்கிறது. அக்னிபுராணத்தில் ஆயுதங்களை பற்றி சொல்லியிருக்கிறார்கள். ஒரு பகுதியில் வில் அம்பு பற்றி தெள்ளத்தெளிவாக கூறபட்டுள்ளது. பயிற்சி செய்யும் அம்பு எவ்வாறு தயார் செய்யப்பட வேண்டும்?, எந்த காட்டு விலங்கை வீழ்த்த அம்பின் பின்னால் எந்த பறவையின் இறகை பயன்படுத்தவேண்டும்?, என்றெல்லாம் குறிப்பு காணக்கிடைக்கிறது. கீழடியில் கண்டெடுக்கபட்ட பானை ஓடுகள் ஒன்றிரண்டை ஞாபகமாக எடுத்து வைத்துக்கொண்டோம். யார்கண்டது அவை என் பாட்டன் அல்லது முப்பாட்டன் செய்ததாக இருக்கலாம்.
ஆங்கிலேயர்கள் நம்மை ஆண்டபொழுது அவர்கள் செய்த முதல் வேலை, நம்மிடமிருந்த கல்விச்செல்வத்தை அழித்ததுதான். குருகுலத்தை ஒழித்தார்கள். நூலகம் அனைத்தையும் அழித்தார்கள். சங்க கால திரட்டுகள் ஓலைச்சுவடிகள் எல்லாம் அழிந்துபோயின அல்லது எடுத்து செல்லபட்டன. வாணிபம் செய்ய இடம் கொடுத்து பின் வஞ்சிக்கபட்டு வேரறுக்கபட்டோம். ஒருவேளை இந்த வரலாற்றுச்சுவடுகள் அனைத்தும் உலகுக்கு தெரியவந்ததேயானால் தான் எழுதிய வரலாற்றை (timeline) முழுவதுமாக மாற்ற வேண்டிய கட்டாயதிற்கு உண்டுபடுவோம் என்று எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவை. குமரிக்கண்டமெல்லாம் தோண்டி எடுக்கப்ட்டால் முழுவரலாறும் மாற்றியமைக்கவேண்டிவரலாம். Supreme Court வருவதற்க்கு முன்பிருந்தே நம்மிடமிருந்த ஜல்லிக்கட்டிற்கு தடை விதிக்கப்ட்டுள்ளது. அடுத்த தலைமுறைகள் அதை ஒரு ஆவணமாக மட்டுமே காணும். இதுபோல் இதுவரை எத்தனை இழந்திருக்கிறோம் என்று தெரியவில்லை. யாருக்காக இந்த விளையாட்டு என்பதும் புரியவில்லை. ஒன்று மட்டும் நிதர்சனம். நம்முடைய வேர்கள் நம்மிடமிருந்து ஒவ்வொன்றாக அறுந்துகொண்டிருக்கின்றன. நாம் அதை இருகபற்றிக்கொள்ளாமல் இந்த அநீதிக்கு சாட்சியாய் இருந்துகொண்டிருக்கிறோம். வரும் தலைமுறைகள் யார் நீ? என்று நம்மை கேட்கப்போகும் தூரம் வெகு தொலைவில் இல்லை.