ஞாயிறு, ஜூன் 27, 2021

வரதட்சிணை

கேரளத்தில் வரதட்சிணை கொடுமை காரணமாக ஒரு இளம் பெண் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி படிக்க நேர்ந்தது.  RIP  என்று போட்டுவிட்டு அடுத்த வேலையை பார்க்க மனம் ஒப்பவில்லை.

இந்தியா முழுவதும் புற்றுநோய் போல வரதட்சினை ஊடுருவி இருந்தாலும்கேரளத்தில் மிக மிக அதிகம். தனது வரம்புக்கு மீறி அதிக வரதட்சிணைகொடுத்து திருமணம் செய்து கொடுக்காவிட்டால் பெண் வீட்டாரே வெட்கப்படும் அளவுக்குசமூகத்தில் வேருடன் ஊறிப்போயுள்ள நச்சு.  போலவேகேரள வாடை வீசும் கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவிலிலும் இந்த நோய் சாதாரணமாக பரவியுள்ளது.


படித்து முடித்தவுடன் ஒரு நல்ல குடும்பத்தில் மணம் செய்து கொடுத்து தன்னுடைய பெண் ஒரு நல்வாழ்வு வாழ்வதை பார்க்கத்தான் எந்த பெற்றோரும் விரும்புவர். அவ்வாறுபிறந்தது முதல் திருமணம் செய்து கொடுக்கும் வரை அடை காக்கும் கோழி போல பொத்தி போத்தி வளர்த்த பெண் மகவைஉடற்கூராய்வு செய்து கையில் வாங்கும் பெற்றோரின் வலி மரணத்திலும் கொடியது. பெற்றவர்களின் உடல் அழியும் வரை இந்த நினைவலைகள் அவர்களை ரணப்படுத்தி கொண்டே இருக்கும். 

இதில் எனது ஆற்றாமை எதுவெனில்ஐன்ஸ்டீனின் கோட்பாடுகளையும்டிஃபரன்ஷியல் கேல்குலஸ் போன்ற இன்ன பிற வஸ்துக்களையும் கற்றுக்கொள்ள மாய்ந்து மாய்ந்து டியூஷன் வைத்து நமது குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க முனையும் நாம்ஆளுமைத்திறன் பற்றி அவர்கள் தெரிந்தும் தேர்ந்தும் கொள்ள வாய்ப்பளிக்க மறந்துவிடுகிறோம். இன்னும் சிலபேருக்கு இதைப்பற்றி தெரிந்திருக்கவே இல்லை. ஒரு தனிமனிதன் தன்னுடைய சுய மரியாதையை இழந்து இரந்து வாழும் நிலைக்கு இதுவே காரணமாகிவிடுகிறது. 

தன் வாழ்நாள் முழுவதும் வெறும் ஒரு அலகை மட்டுமே நம்பி  வாழும் பறவை கூட ஒரு கட்டத்திற்கு அப்பால் தன்னால் இவனை வெல்ல முடியாது என்று தெரிந்தும்தன்னை சீண்டுபவனை தன் அலகை கொண்டு கொத்த முயலுகிறதுஎதிர்ப்பை வெளிப்படுத்துகிறது. மாறாக18 வருடங்கள் கல்வி பயின்று வரும் ஒரு பெண்ணால்தன்னுடைய சுயமரியாதையைதன்முனைப்பை எது வரை சமரசம் செய்து கொள்ள வேண்டும்எந்த இடத்தில் எதிர்த்து போராட வேண்டும் என்று கற்று கொடுக்காமல் விட்டதுஇந்த சமூகத்தின் ஆகப்பெரியகிகுற்றமாகும். 

இனிமேலும் அந்த வீட்டில் வாழ முடியாது என்று பிறந்த வீட்டிற்கு திரும்பி வரும் பெண்ணைபெற்றோர்கள் சமரசம் செய்து மீண்டும் அனுப்பி வைப்பதை காட்டிலும் அரவணைத்து கொள்ளுதல் மிக நலம்ஏனெனில் குடும்ப வன்முறை தாளாது தற்கொலை முடிவை எட்டும் அந்த பாவப்பட்ட அன்பிற்கினியாளை விட விவாகரத்தான பெண் பெற்றோரின் அரவணைப்பில் உயிர் வாழ்கிறாள்.  

எனக்கு கீழ் பயிற்சி எடுக்க வரும் ஒவ்வொரு பெண்ணிடமும்நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி சொல்வதுஎப்பாடுபட்டாவது திருமணத்திற்கு முன் சொந்தக்காலில் நில்லுங்கள். இதுநாள் வரையில் கேட்டதை வாங்கி கொடுக்கும் பெற்றோர் உடனிருந்தனர். இனிமேல் வரப்போகும் வாழ்க்கைத்துணை அதுபோலவே இருக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லைஒரு சின்ன ஹேர் க்ளிப் வாங்குவதற்கு கூட பணம் தரமாட்டேன் அது அநாவசியம் என்று வியாக்கியானம் பேசிவிட்டுநாளொன்றுக்கு ஒரு பாக்கெட் சிகரட்டை புகைக்கும் ஆண்களை நான் அறிவேன்.   

என்னுடன் வேலை பார்த்த சக ஊழியர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோதுபேச்சு செடி கொடிகள்கீரைகள் அதன் பயன்கள் என்று தாவி பின் தோட்டத்தில் விழும் இலைகளைச்சுத்தம் செய்வதில் வந்து நின்றது. ஒருமுறை கூட தான் அதை சுத்தம் செய்ய முனைந்ததில்லை எனவும்அவ்வாறு செய்தால் அதன் பின் அந்த வேலை என் தலையிலேயே விடியும் என்று கூறினார் அந்த பெருமகனார். இவரை நம்பி தன்னுடைய சொந்த பந்தங்களை விடுத்து 1200 கிலோமீட்டருக்கு அப்பால் வாழ வந்த அந்த பெண்ணின் ஹேப்பினஸ் இன்டெக்ஸ் நெகட்டிவில் ஏன் ஆழ்துளை கிணற்றில் கண்ணுக்கெட்டாதவாறு தான் இருக்கும். 

ஆளுமைத்திறனோடு வரும் கல்வியும் அதன் பின் கொஞ்சமே கொஞ்சம் பணம் தரும் ஒரு வேலையும் அந்த பெண்ணுக்கு பெரு மகிழ்ச்சியைக்கொடுப்பது மட்டுமல்லாமல் இங்கிதம் இன்றி நடக்கும் ஆணிற்கு எதிராக போராடி தலை நிமிர்ந்து வாழச்செய்கிறது. பொறுத்தது போதும் பொங்கி எழு என்று கற்றுக்கொடுக்கவேண்டிய தருணமிது.   

இவை எல்லாவற்றிற்கும் முதலில்கைகளில் துண்டு போட்டு மூடி மாட்டிற்கு விலை பேசுவது போல வரதட்சிணை வாங்கி வாழ்க்கை நடத்துவது இரந்து பிழைப்பதற்க்கு சமம் என்பதையும்ஒரு பெண்ணை எவ்வாறும் மதித்து நடத்த வேண்டும் என்பதையும் கற்றுக்கொடுக்க வேண்டிய மிக முக்கிய கடமையும்ஆண் பிள்ளையை பெற்றெடுத்த ஒவ்வொரு பெற்றோருக்கும் இருக்கிறது.

 


புதன், ஜூன் 23, 2021

இறைதூதர்கள்

அகத்தால் பிரிந்து புறத்தால் நெருங்கி வாழும் அடுக்கக நகர வாழ்வில் வீட்டுக்கு வீடு வாசற்படியும் கோலமும் தென்படுகிறதோ இல்லையோ, வீட்டில் இருக்கும் எல்லோரையும் சித்தப்பு நல்லாருக்கீங்களாஎன்று ஒருமுறையாவது கொரொனா எட்டிப்பார்த்து விசாரித்துவிட்டு போயிருக்கிறது. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்று சொல்வதுபோல், குடும்பத்தோடு கோவிட் பாசிட்டிவ் என்று ரிசல்ட் வந்தபோது சற்று மிரண்டு தான் போயிருந்தோம். 35 வயதே ஆனவர், மருத்துவமனையில் அட்மிட் ஆன மூன்றே நாளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் இறப்பு போன்ற செய்திகள் நம்பிக்கையை அசைத்து பார்த்து நொடிந்து போகச்செய்தன. பகிர்தலினால் மகிழ்ச்சி ரெட்டிப்பாகும், துக்கம் பாதியாகும் என்ற கூற்றிற்க்கு ஏற்ப அந்த சமயத்தில் திறன்பேசியில் உரையாடி ஆலோசித்த நண்பர்கள் அனைவரும் இந்த நிலையும் கடந்து போகும்என்று  ஊக்கமளித்து நம்பிக்கை அளித்தனர்.



கோவிட்டிலிருது ரிகவரி ஆகி ஒருமாதம் களித்தும் சிறு தொந்தரவுகள் இருந்ததால் CT பரிந்துரை செய்திருந்தார். ஸ்கேன் எடுப்பதற்காக மருத்துவர் எழுதிக்கொடுத்ததை கையில் வைத்துக்கொண்டே மருத்துவமனை செல்லலாமா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டிருந்த தருணமது.  சர்ஜிகள், N95 மற்றும் ஒரு பூமர் மாஸ்கையும் யார்ட்லி கிருமிநாசினியையும் துணைக்கு அழைத்துக்கொண்டு மருத்துவமனை சென்றேன். வாயில் மற்றும் மூக்கில் இருந்து வடியும் நீர் திமில் வாயிலாகவா அல்லது ஏதேனும் பொருட்களை தொடுவதினாலா அல்லது சஸ்பென்டட் ஏர் பார்ட்டிக்கல்சா என எதன் மூலம் இந்த நோய் பரவும் என்று இன்று வரை அறுதியிட்டு கூறமுடியாத நிலமையில் மருத்துவமனை வாயிலை மிதிப்பதற்க்கு என் பேஸ்மென்ட் தள்ளாடியாது. ஸ்கேன் எடுக்கும்பொழுது உண்டான கலகங்கள் தனி. சட்டையை கழட்டுங்கள், கண்ணாடியை அகற்றுங்கள், என்ன தொந்தரவு, எந்த இடத்தில், எத்தனை நாள் என்று அந்த மூன்று நிமிடத்தில் ரேபிட் ஃபயர் ரவுண்ட் போன்ற கேள்விக்கணைகள்.  CT ஸ்கேன் எடுப்பதற்குண்டான ஸ்ட்ரெச்சர் போன்ற பெட்டில் கிடத்தி டுநட் போன்ற ஒரு இயந்திரத்தின் நடுவில் நகர்த்தி வைக்கிறார்கள். சரியாக மண்டை ஓடு படத்திற்கு கீழாக. நுண்கலைக்கல்லூரியில் ஓவியம் வரைவதற்க்கான லைவ் மாடல் போல இரண்டு கைகளையும் தலைக்கு மேல் நீட்டி படுக்கச்சொல்லிவிட்டு டெக்னிசியன் அறையை விட்டுச்செல்லும்போது “மூச்சை இழுத்து பிடிச்சி விடு” மட்டும் கேட்டது. அந்த ங்க ஒரு கண்ணாடி அறைக்கு பின்னிருந்து மெலிதாக கேட்டது.  அணுகுண்டு வைத்துவிட்டு வெடிக்கும்முன் ஓடும் குழந்தையை போல ஸ்கேன் ரூமை விட்டு எகிறிகுதிக்கிறார்கள். ரேடியேஷனின் வீரியம் அப்படி. ஒரு முறை CT எடுப்பதற்கே 400 மடங்கு எக்ஸ்ரே exposure, புற்று நோய் பாதிப்பு என்று நாம் யோசிக்கும் நேரத்தில், காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை கொரொனா நோயாளிகள் மற்றும் கதிரியக்க இயந்திரத்தை கையாளும் ரேடியாலாஜிஸ்ட்டின் exposure ரேட்டையும் ரிஸ்க் பேக்டரையும் சொல்லி மாள முடியாது.  அடுத்த நாள் ஸ்கேன் ரிபோர்ட்டில் நோ அப்நார்மல் பைண்டிங்க்ஸ் என்று வந்திருந்தது.

கொரொனாவிலிருந்து ரிக்கவரி ஆவதும் அதில் தோல்வி அடைவதும் நம் கைகளில் மட்டுமே இருக்கிறது. அறிகுறிகள் தெரிந்த முதல் நாளை மூளையிலோ அல்லது மூலையில் தொங்கும் நாட்காட்டியிலோ ஒரு வட்டமிட்டு குறித்து வைத்துக்கொள்ளுதல் மிக முக்கியம். மேலும் தனிமைபடுத்திக்கொள்ளுதல் என்பது நம்மை IPC 307 இல் குற்றமிழைக்கும் வாய்ப்பை குறைக்கச்செய்கிறது. கொரொனா நோய் பரப்பும் இயந்திரமாக நாம் வெளியில் நடமாடுவது அட்டெம்ப்ட் டு மர்டர் வகையறாவில் சேர்த்தி.   இதனுடன் மைல்ட், மாடரேட், சிவியர் என்று அரசு வழிகாட்டும் நெறிமுறைகளை, பின்பற்றி தனிமைபடுத்தியிருந்தாலே இந்த தொற்று வீரியமிழந்திருக்கும்.

தேசிய அளவில் கோவிட் பரிசோதனை எண்ணிக்கையில் தமிழ்நாடு முதல் மாநிலமாக இருந்தாலும், அறிகுறிகள் தெரிந்த மக்கள் எல்லோரும் பரிசோதனை செய்யவில்லை என்பது ஒரு சாராரின் அங்கலாய்ப்பு. எல்லோரும் பரிசோதனை செய்யவில்லை என்பதுதான் நிதர்சனம் என்றாலும் அவர்களால் பரிசோதனை செய்துகொண்டு பதினான்கு நாட்கள் தங்களை தனிமைபடுத்திக்கொள்ள இயலாது என்பதும் நிதர்சனமே. காரணம் அரைஜான் வயிறு. மூன்று வேளை உண்ண உணவும், தனித்திருக்க கழிப்பறையுடன் கூடிய உறைவிடமும் எல்லோருக்கும் வாய்த்துவிடவில்லை. அன்றாடம் வேலைக்கு சென்றால் தான் அன்று இரவு தனக்கும் தங்கள் குழந்தைக்கும் சுடுசோறு பொங்க முடியும் என்ற தினக்கூலிகள் இங்கு அதிகம்.   மக்கள் தொகை அதிகமிருக்கும் நாட்டில் இது ஒரு சாபம். அரவணைக்கும் போது மகிழும் நாம் அடிக்கும் போது அந்த கையை விரும்புவதில்லை. இது பொதுபுத்தி. நிற்க.

என்னதான் ஐவர்மெக்ட்டின், மெதில்பிரேடினிசொலோன் என்று மருந்துகளையும் பணத்தையும் வாரித்தெளித்தாலும், கோவிடிலிருந்து மீண்டு எழச்செய்ய உதவுவது உடலில் இருக்கும் இயற்கையான எதிர்ப்பு சக்தியே.  கோவிட் பாதித்த முதல் நாளிலிருந்து கஷாயம், வைட்டமின் சி, டி மாத்திரைகள், ஆரஞ்சு பழங்கள், புரதத்துக்காக சுண்டல், சூரிய ஒளி படும் அளவில் மூச்சு வாங்காமல் நடை பயிற்சி என்று அன்று பிறந்த புது மனிதன் போல வழக்கத்தை மாற்றிக்கொண்டாலும், இவையெல்லாம் கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்வதற்க்கு சமம். பெட்டர் லேட் தென் நெவர் என்பதுபோல் ஒருவகையில் இவற்றை ஏற்றுக்கொண்டாலும், இவையெல்லாம் நம்முடைய அன்றாட வாழ்வில் பிரிக்கமுடியாதவாறு ஒன்றியிருந்த மரபுகளே. உலகமயமாதல், ஃபினான்சியல் இண்டிபெண்டன்ஸ்  என்று எதை நோக்கி நாம் ஓடியிருந்தாலும் இவற்றை புறந்தள்ளியிருக்க கூடாது. வாழும் தெய்வம் மருத்துவர் கு.சிவராமன் சொல்வது போல் மிளகு, திப்பிலி, சுக்கு, மஞ்சள் என்று பாரம்பரியத்தின் பக்கம் நாம் கவனத்தை திருப்பும் நேரம் இது.

கோவிட் பாதிப்பின் அதிமுக்கிய விஷயமாக நாங்கள் கன்சல்ட் செய்த  டாக்டர் கூறியது Don’t get panic”. படபடப்பின் காரணமாக எதிர்ப்பு சக்தி உற்பத்தியாவது குறைந்துவிடும் என்றும், யோகா தியானம், பிடித்த பாடல்கள் போன்றவற்றை கேட்டு மனதை சமநிலையில் வைக்குமாறு கூறினார். பாசிட்டிவ் ரிசல்ட் என்று தெரிந்த அந்த ஒரு நாள் முழுவதும் வெவ்வேறு சந்தர்பங்களில் அவர் மொபைல் வழியாக விளித்து ஆலோசனைகள் கொடுத்து உதவி செய்துகொண்டே உறுதுணையாயிருந்தார்.  அதற்கு அடுத்த நாள் தான் தெரிந்தது, கோவிட் பெருந்தொற்றின் காரணமாக அவரது பெற்றோரை ஆக்ஸிஜன் பெட் இருக்கும் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிப்பதற்காக முயற்சி செய்துகொண்டிருந்த தருணத்தில்தான் எனக்கும் இன்னும் பலருக்கும் இதுபோல் விளித்து ஆலோசனை கூறிக்கொண்டிருந்தார் என்பது. எப்பேற்பட்ட சேவை அற்பணிப்பு இருந்தால் இது போன்று தன்னலமற்று உதவி செய்ய முடியும் என்பதை அன்று உணர முடிந்தது. உயிர் பறித்து ஆர்பரிக்கும் இந்த பெருந்தொற்றை எதிர்கொள்ளும்போதெல்லாம் இதுபோன்ற அற்பணிப்புள்ள சேவையுள்ளம் கொண்ட மனிதர்களால் தான் இந்த சமூகம் மீண்டெழுந்து வருகிறது.

மருத்துவமனையை அணுகிய பின் தான், இந்த கொடிய நோயின் கோரப்பிடியில் இருக்கும் நோயாளிகளை காப்பாற்றுவததற்காக தங்கள் உயிரை துச்சமென மதித்து சேவை புரியும் ஒவ்வொரு செவிலியரும் மருத்துவரும் வெள்ளை உடை அணிந்த இறை தூதர்கள் என்பது தெரிகிறது. நம்மைப்போன்றே ஒரு குடும்பம், அதில் வயதான பெற்றோர் மற்றும் குழந்தைகள் அவர்களுக்கும் இருக்கிறார்கள் என்பதை நாம் அகம் அகழ்ந்து பார்க்க வேண்டிய கணமிது. இந்த சமூகம் அவர்களுக்கு மிகவும் கடமைபட்டிருக்கிறது. தடுப்பூசி செலுத்திக்கொண்டும், முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளி பேணியும், தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியேராமல் இருப்பதின் மூலம் நாம் அவர்களுக்கு நமது நன்றியை தெரிவிப்போம்.


செவ்வாய், ஜூன் 15, 2021

MARE OF EASTTOWN

 

இரண்டு மணி நேர படங்களை காட்டிலும் இதுபோன்ற binge watching சீரிஸ்களுக்கு பல மடங்கு அதிகமான உழைப்பை கொட்டிக்கொடுக்க வேண்டிருக்கிறது. கொஞ்சமும் பிசகு இல்லாத நேர்த்தியான திரைக்கதை இன்றியமையாததாகிவிடுகிறது. 8 மணி நேர எபிசோடிற்கு 8 மாதங்கள் மேலே உழைக்க வேண்டிதுள்ளது.  இடையிடையே வரும் வேறு வேலைகளால் சீரிசின் டெம்போவை இழந்து விடாமலும்  அந்த 8 மாதங்களில் கதையின் தொடர்ச்சி கரைந்து போகாமலும் ஒரு பறவை அடை காப்பதை போல இதனை அடை காத்து பிரசவிக்க வேண்டிதுள்ளது. சீரிஸ்க்கான இலக்கணமே முழுக்க முழுக்க வேறு.


அந்த இலக்கணத்திலிருந்து சற்றும் பிசிறாமல்
, ஒரு கொலைக்கான துப்பறியும் கதையின் ஊடாக கதாநாயகியின் வாழ்க்கை, அதனுடன் பின்னியிருக்கும் பல கிளைக்கதைகள் என்று ஒரு சிறு community வாழ்க்கையை அந்த community ன் அருகிலிருந்து பார்க்கும் உணர்வை கொடுக்க விழைகிறது இந்த Mare of Easttown.

கதையின் நாயகன் மற்றும் நாயகி கேட் வின்ஸ்‌லட். சோஃபாவில் ஒய்யாரமாய் சாய்ந்துகொண்டு ஒரு கையை தலைக்கு மேல் தூக்கி வைத்து படுத்திருக்கும் டைட்டானிக் கேட்டை எதிர்பார்த்தீர்களானால், you need to cut a sorry figure. ஒரு விவகாரத்தான அம்மாவாக, நான்கு வயது சிறுவனுக்கு பாட்டியாக, துப்பறியும் டிடெக்டிவாக, முதல் முறை துப்பாக்கியை கையில் பிடித்து ஆக்சன் காட்சிகளில், ஒன் நைட் ஸ்டேண்ட், பத்து வயது குறைந்த தனது ஜூனியருடன் ரொமேன்ஸ், தோழியின் மடியில் நிழல் தேடும் பயணி போல் என பன்முக கதாபாத்திரங்களில் 8 மணி நேரமும் அதகளம் செய்திருக்கிறார்.

ஒவ்வொரு எபிசோடும் 1 மணி நேரம். ஒன்று முடிந்ததும் அடுத்தது என்ன என்று ஆர்வத்தை தூண்டும் அளவுக்கு, அந்த எபிசோடின் இறுதியில் மர்ம முடிச்சுகள்.

அணைகட்டமுடியாத அளவு உணர்வுகளை மனதினுள் தேக்கிவைத்து அவை எந்தநேரத்திலும் கரைபுரண்டு வெடித்து பாயலாம் என்கிற அளவுக்கு ஒவ்வொரு கதாபாத்திரமும் அவ்வளவு இறுக்கத்தோடு உலவுகிறார்கள். No wonder why there is gun shooting in school and churches.

கேட்டின் கணவர், மகன், மகள், அம்மா, நண்பர்கள் என ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பரந்து விரியும் கிளைக்கதைகள், கொலையாளி யார் என்ற முடிச்சை அவிழ்ப்பதற்க்கு அதன் போக்கில் நெருடலின்றி உதவி செய்கின்கின்றன.

சீரிசின் கரு, ஒரு கொலையை துப்பறியும் கதை தான் என்றாலும், அது பேசும் பொருளாக எடுத்திருப்பது, அவர்களின் வாழ்வியலை. திருமணம் விவாகரத்து, குழந்தை வளர்ப்பு, affair, ஓரினச்சேர்க்கை, பாக்கெட் மணிக்காக விபச்சாரம் செய்யும் மாணவிகள், போதைப்பொருள் கலாச்சாரம், குடும்ப உறவு, அதில் அம்மாவென்றாலும் மகனென்றாலும் மற்றவருக்கு அவர்கள் கொடுக்கும் personal space என அவர்களின் சமூக கட்டமைப்பை அதனால் ஏற்படும் விளைவுகளை நுண்நோக்கி கொண்டு பார்வையாளருக்கு நெருடல் தராமால் கதையின் போக்கில் ஆராய்ந்து முடிவை நம்மிடமே விட்டுவிடுகிறது.

சீரிசில் நகைச்சுவையை குறையின்றி அளித்திருப்பது கேட்டிற்கும் அவரது 80 வயது அம்மாவிற்கும் நடக்கும் சிறு சிறு உரையாடல்கள். நுகர்வு கலாச்சாரத்தின் உச்சத்தை தொட்டிருக்கிறார்கள் என்று சொல்லும் அளவுக்கு எல்லோருமே materialistic ஆக இருக்கிறார்கள். ஒரு சிறு தொழிற்சாலைக்குள் இயங்கும் அளவுக்கு உள்ள ஒரு பெரிய இயந்திரத்தை ஒரே ஒரு வீட்டிற்க்காக ஹீட்டர் என்ற பெயரில் உபயோகிக்கும் இந்த மேற்கத்திய நாடுகள், வளரும் நாடுகளிடம் carbon emission ஐ குறைக்கும்படி கூறுவது விவாதிக்கப்படவேண்டிய நகை முரண்.   

சீரிஸ் முழுவதும் வரும் பின்னணி இசை அந்த எபிசோடுக்கான மனநிலையை பார்ப்போருக்கு எளிதில் கடத்திவிடும் ஒரு ரசவாத வித்தை. அதிலும் அந்த வயலின் இசை, சொல்லி விவரிக்கமுடியாத ஒரு melancholy உணர்வு. சுற்றி சுற்றி காட்டப்படும் கேட்டின் வீட்டில், நாமும் வாழ்வது போன்ற ஒரு பிரமையை தவிர்க்க முடியவில்லை

தேர்ந்தெடுத்த ஒரு பில்லியர்ட்ஸ் வீரரால் சொடுக்கிவிடப்படும் கழி மேசையின் மீதிருக்கும் பந்துகளை மூலைகளில் இருக்கும் குழிகளில் எவ்வாறு சரியாக விழவைக்கிறதோ, அதுபோல சீரிசின் கடைசி எபிசோடில் அதுவரை விடைதெரியாமல் இருந்த பல கேள்விகளுக்கான விடைகள் கனகச்சிதமாக வந்து மடியில் உட்கார்ந்துவிடுகின்றன.  

 கண்டிப்பாக தவற விடக்கூடாத சீரிஸ்.

என்னுடைய ரேட்டிங்கில் 10/10.

 

 

செவ்வாய், ஜூன் 01, 2021

SEB 1 BD 3 Days

வர்ஷா அன்று வங்கிக்கு செல்ல வேண்டும் என்பதை மூன்று நாட்களுக்கு முன்பே முடிவு செய்திருந்தாள். காலை எழுந்ததும் முதல் வேலையாக செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டே அன்று தான் செய்ய வேண்டிய வேலைகளை மனதிற்குள் பட்டியலிட்டுக்கொண்டாள். வெளியே லானில் புற்களுக்கு தண்ணீர் பாய்ச்ச பதிக்கப்பட்டிருந்த ஆட்டோமேட்டிக் பௌண்டெனில் தண்ணீர் சரியாக வரவில்லை. பேஸ்மென்டின் நிறுவப்பட்டிருந்த வீட்டிற்கான பெரிய ஹீட்டர் மெஷினில் இரைச்சல் அதிகம் இருக்கிறது.  அவ்வப்போது தான் உத்தரவிடுவதை கேட்டுக்கொண்டு சிரத்தையாக வேலையை செய்து முடிக்கும் தாம்சன் ரோபோவில் சார்ஜிங் போர்ட் உடைந்து போயிருக்கிறது.  இவை மூன்றையுமே அவசியமாக கவனிக்கவேண்டும் என்றாலும் வங்கிக்கு சென்று முடிக்கவேண்டிய வேலைக்கு இன்றே கடைசி நாள். ஆதலால் இவற்றை நாளை பார்த்துக்கொள்ளலாம் என்று மீண்டும் ஒருமுறை ஒற்றி போட்டாள்.


குளித்து முடித்த பின், தான் எப்போதும் உபயோகப்படுத்தும் மாய்ஸ்டரைசிங் லோஷனை உடல் முழுவதும் தேய்த்துக்கொண்டாள். டவலை வலது கையில் லாவகமாக உடலுடன் இறுக்கிக்கொண்டு, இடது கையால் வலது காலில் தேய்த்துக்கொண்டிருக்கும் நேரத்தில் பீப் பீப் என்ற ஒலி மைக்ரோவேவ் அவனில் உணவு ரெடியாக இருக்கிறது என்பதை ஞாபகப்படுத்தியது. அன்று புதன்கிழமை மெனுவாக மொட்டை கொம்பன் அரிசியில் போரிட்ஜ். வெள்ளை அரிசியை சமீப காலமாக அதிகம் உபயோகிப்பதில்லை என்று முடிவு செய்திருந்தாள். உடலும் மனதும் இணைந்திருக்க, உண்ணும் உணவை ரசித்து உண்ண, முழுவதுமாக பதினைந்து நிமிடங்கள் எடுத்துக்கொண்டாள்.

அடுத்த ஐந்தாவது நிமிடத்தில், ‘மைகார்டிஸ்’ மாத்திரையை சுடுதண்ணீருடன் விழுங்கிவிட்டுகிச்சன் வழியாக கேரஜை வந்தடைந்தாள். டிரோன் டாக்சியை வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாமா என்று ஒரு நிமிடம் யோசித்துவிட்டு, பின் போக்குவரத்து நெரிசலை தவிற்பதற்க்கு சாலை வழியாகவே செல்வது என்று முடிவு செய்தாள். வழக்கமாக வீட்டினுள் நுழைய இந்த வழி எளிதாக இருப்பதால்வீட்டின் முன் வாசலை அரிதிலும் அரிதாகவே உபயோகிப்பாள். ரிமோட்டில் கேரேஜின் டோரை அன்லாக் செய்து பின் தனது க்ரே கலர் கேம்ரியில் ஆரோகணித்து சீட் பெல்ட் அணிந்து கொண்டு உற்சாகமாக டிரைவ் செய்ய ஆரம்பித்தாள். ரியர் வியூ மிரரில்தனியங்கியின் மூலம் மூடிக்கொள்ளும் அவளது கேரேஜ் டோரை ஒரு முறை உற்று நோக்கி உறுதி செய்துகொண்டாள்.  

மைனஸ் ஐந்து டிக்ரீ காற்று, தெர்மலையும் தாண்டி அவளது உடலை நடுக்க ஆரம்பித்திருந்தது.  ஹீட்டர் எல்லா நேரமும் தேவையாயிருந்தது ஒரு வகையில் அவளுக்கு அசௌகரியத்தை அதிகப்படுத்தியது. ஒண்டோரியோ மாகாணத்தின் ஸ்கார்போரோவின் எல்ஸ்மீயர் சாலையில் இருக்கும் வெங்கடாசலபதி கோவிலை கடக்கும்போது, கோவிலுக்கு போக வேண்டும் என்று இருபதாவது முறையாக நினைத்துக்கொண்டு ஒருகையை கூப்பி நெஞ்சில் ஒருமுறை தொட்டுவிட்டு பின் தனது கைகளுக்கே முத்தம் கொடுத்துக்கொண்டாள்.

முப்பது நிமிடத்தில் TD என்றழைக்கப்படும் டொரோண்டோ டொமினியன் வங்கியின் வாசலை வந்தடைந்து கதவில் பொதிந்திருக்கும் கண்ணாடியில் தெரியும் தன் பிரதிபலிப்பை ஒரு முறை பார்த்துக்கொண்டாள். முப்பத்தி மூன்று என்று மதிக்க வாய்ப்பில்லை என்று தனக்கு தானே ஷொட்டிக்கொண்டாள். உள்ளே நுழைய எத்தனிக்கும் வேளையில் அந்த இளைஞனை கண்டாள். இருபத்தைந்து வயது இருக்கலாம். வெளியேறிக்கொண்டிருந்தான். இவள் எதிரே வருவது கண்டு, தான் வெளியேற திறந்து வைத்திருந்த கதவை இவளுக்காக மூடாமல் பிடித்து கொண்டான். இவள் உள் நுழைந்து பின், பரஸ்பர நன்றிகளை பகிர்ந்துகொண்டதும் அந்த இளைஞன் வெளியேறினான்.  அந்த இளைஞனின் முகம் எங்கோ பார்த்த முகமாக இவளுக்கு மனதில் பட்டது.

வங்கி சம்பிரதாயங்களை முடிக்க மாலை வரை எடுத்துக்கொண்டாள். தான் வாங்க வேண்டிய வீட்டு பத்திரத்தை வாங்கிக்கொண்டு வங்கியிலிருந்து வெளியேறினாள். அந்த இளைஞனது முகமும் அவனது செய்கையும் அவளுக்கு தேஜா வூ போன்ற உணர்வை மீண்டும் மீண்டும் கொடுத்துக்கொண்டிருந்தன. நார்த் யார்க்கின் ஒண்டாரியோ 401 எக்ஸ்ப்ரெஸ் சாலையில் 90 மைல் வேகத்தில் சென்றுகொண்டிருந்தாள். யார்க்டேல் பூங்காவுக்கு அருகில் வரும்போதுவனவிலங்குகள் சாலையை கடக்க ஏதுவாக சிவப்பு விளக்கு ஒளிர்ந்தது. இந்த சில நிமிட காத்திருப்புகளைக்கூட ட்ரோன் டேக்ஸி பிடித்திருந்தால் தவிர்த்திருக்கலாமோ என்று எண்ணிக்கொண்டாள். ஆனால் செல்ஃப் டிரைவிங்கின் மீதான ஆர்வம் இந்த பிறழ்வுகளை புறந்தள்ளியது. இவளது கேம்ரி அங்கு நின்றாலும்ஞாபகங்கள் பதினெட்டு வருடங்கள் பின்னோக்கி ஓடின.

வங்கியில் காலையில் கண்ட முகம் இவளுக்கு இப்பொழுது தெளிவாக பிடிபட ஆரம்பித்திருந்தது. செபாஸ்டியன் நியாபகத்திற்கு வந்திருந்தான். ஹம்பர் கல்லூரியில் முதுகலை அறிவியல் பயின்று கொண்டிருந்தபொழுது, வர்ஷாவின் நெருங்கிய நண்பன். லிவ் இன் என்று சொல்லக்கூடிய அளவுக்கு நெருக்கம். ஆறடிக்கு இரண்டு அங்குலம் குறைவாக இருப்பான். சுருட்டை முடி. இடது புறம் வாகெடுத்து தலைமுடி அலை அலையாக இருக்கும். ஷாம்பூ போட்டு குளித்த நாட்களில் அவை காற்றில் பறப்பதை பார்க்க இவளுக்கு மிகவும் பிடிக்கும். எப்பொழுதுமே ஒரு ரவுண்ட் நெக் டீ ஷர்ட் திறந்துவிட்ட டெனிம் ஷர்ட் சகிதம் துறு துறு வென்று உற்சாகமாய் இருப்பான். செபாஸ்டியன் டெய்லர் அவனது முழுப்பெயர்.

செபாஸ்டியனின் டொரோண்டோ மற்றும் வர்ஷாவின் மதுரை என்று கலாச்சார வேறுபாடுகள் இவர்களை சற்றே அன்னியப்பட வைத்தாலும், அந்த கலாச்சார வேறுபாடுகளை டீகோட் செய்வதில் இவர்களுக்கு இருக்கும் ஆர்வம் இருவரிடையே நெருக்கத்தை இயற்கையாகவே அதிகபடுத்தியிருந்தது. படிக்கும் காலங்களில் தனது உதவித்தொகையை மிச்சப்படுத்தவும் மற்றும் மாத செலவை குறைப்பதற்காகவும் வீட்டிலேயே உணவை சமைக்க ஆரம்பித்திருந்தாள் வர்ஷா. இயல்பாகவே சமைப்பதிலும் அதை பிளேட்டிங்க் செய்து பறிமாறுவதிலும் ஆர்வம் கொண்ட செபாஸ்டியன், இந்திய உணவு வகைகளை சமைத்து கற்றுக்கொள்ள இவள் வீட்டிற்கு வர ஆரம்பித்திருந்தான். சமைக்கும் நேரம் போக மற்ற நேரங்களில் இவள் தங்கியிருக்கும் டவுன்ஹௌஸின் இண்டீரியர்களை இங்கும் அங்கும் என சிறு சிறு மாற்றங்கள் மூலம் மறுவடிவமைப்பு செய்து அழகாக்கினான். துணி உலர்த்த, வீட்டை சுத்தம் செய்ய என்று எல்லாவற்றிலும் வர்ஷாவுக்கு உதவியாய் இருந்தான். பல்லாயிரம் கிலோமீட்டர்கள் தாண்டி இங்கு வந்தபின் ஹோம் சிக்காக உணர்ந்த வர்ஷாவை ஹோம் அவே ஃப்ரம் ஹோம் என்று உணர வைத்தான். செபாஸ்டியன் மீது வர்ஷாவுக்கான ஈர்ப்பு அதிகமாகிக்கொண்டே சென்றதில்  வியப்பொன்றுமில்லை.

அவ்வப்போது உணவை சேர்ந்து உண்ண ஆரம்பித்தவர்கள், சில நாட்களிலேயே ஒருவரின்றி மற்றொருவர் உணவருந்த மறுத்தனர். செபாஸ்டியனுக்காக காத்திருந்த நேரங்கள் வர்ஷாவை வேறொரு கனவுலகிற்கு இட்டுப்போயின. அவள் ராணியாகவும் செபாஸ்டியன் ராஜாவாகவும் அந்த கனவுலகம் அவளுக்கு மென்மேலும் சுவாரஸ்யத்தை கூட்டியிருந்தது. 

ஞாபகங்கள் செபாஸ்டியன் குறித்து அசை போட்டுக்கொண்டிருந்தாலும் அனிச்சை செயலாய் கேம்ரி காரை அவளது வீட்டிற்கே ஒட்டிவந்திருந்தாள்.  கேரேஜில் காரை நிறுத்தியபோது நீல நிறத்தில் மடித்துவைக்கபட்டிருந்த கேம்பிங்க் கூடாரம் இவளை மீண்டும் பின்னோக்கி இழுத்து சென்றது. 

ஒரு முறை glamping பொருட்டு “Algonquin Provincial Park” சென்றிருந்தபோது, இரவில் நிலவின் மடியில் எரியும் நெருப்பில் சாலமன் மீனை வாட்டிக்கொண்டே வர்ஷா கேட்டாள்.

“கடல் மட்டத்திற்கு 2000 அடிக்கு மேலே உட்கார்ந்திருக்கும் நம் உடலை ஊடுருவிச்செல்லும் இந்த குளிரா, ஓயாது ரீங்காரமிட்டு காதுக்குள் ரகசியம் சொல்லத்துடிக்கும் இந்த அடர்ந்த காடா, தூரத்தில் சட சட என விழுந்துகொண்டிருக்கும் அருவியின் ஓசையா, அல்லது ஒளிரும் நிலவின் ஒளியா, எது உனக்கு பரவசத்தை தருகிறது செபாஸ்டியன்?”

“இவை அனைத்துமே அழகையிருந்தாலும் இவற்றையெல்லாம் விட உனது அருகாமை எனக்கு விவரிக்கமுடியாத கிளர்ச்சியைத்தருகிறது வெர்ஷ்” என்றான் செபாஸ்டியன்.

எரியும் ரெட்வுட் நெருப்பின் ஒளியில், வர்ஷாவின் கன்னம் வெட்கத்தில் சிவந்ததை செபாஸ்டியன் கவனிக்கத்தவறவில்லை. அதுவரை கைகோர்த்து நட்பை மட்டும் பரிமாறிக்கொண்டிருந்தவர்கள் அன்று மெய் கலந்து தங்களது உறவை அடுத்த கட்டதிற்கு எடுத்து சென்றனர். 

இண்டெர்ன்ஷிப் முடித்து இருவரும் லிம்னாலஜி துறையிலேயே வேலைக்கு சேர்ந்தனர். சஸ்டைனபில் இன்லெண்ட் வாட்டர் டெவேலப்மெண்ட். கைநிறைய பணம். அடுத்த கட்டமாக மதுரையில் இருக்கும்  தனது பெற்றோரிடம் செபாஸ்டியனை குறித்து எடுத்து கூறி திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தாள். இரு கலாச்சாரங்களின் சங்கமமாக அந்தத்திருமணம் நடக்கவிருந்தது. முன்னை விட செபாஸ்டியன் மேலும் சார்மிங்காக தெரிய ஆரம்பித்தான். செபாஸ்டியனை பட்டு வேஷ்டி சட்டையில் பார்க்கும் அந்த நாளை எதிர்நோக்கி காத்திருக்க ஆரம்பித்தாள்.

ஆனால் இந்த எண்ணங்களையெல்லாம் தவிடுபொடியாக்கி செபாஸ்டியன் அகால மரணமடைந்தான். அந்த விபத்து நடக்கும் வேளையில் வர்ஷாவும் அவனுடன் பயணித்திருந்தாள். உடல் அயர்வின் காரணமாய் பின் சீட்டில் உறங்கிக்கொண்டிருந்தவளை இரு கதவுக்குள்ளும் இருந்து வெளிவந்த காற்று பை காப்பாற்றியது. ஆனால் ஸ்டீயரிங்க் வீல் பின்னாலிருந்த காற்றுப்பை செபாஸ்டியன் உடலை மட்டுமே எந்த சேதமும் இன்றி காப்பாற்றியது. விபத்தின் அதிர்ச்சியில் அவன் மூளையில் இருந்த ரத்த நாளங்கள் வெடித்து ரத்த கசிவு ஏற்பட்டு, அநீரிசியம் பாதிக்கப்பட்டு, ஹிமோரெஜிக் ஸ்ட்ரோக் வந்து மரணமடைந்தான்.

செபாஸ்டியனின் விபத்து, மருத்துவமனை அலைச்சல்கள், இறுதிச்சடங்கு என்று எல்லாவற்றிலும் நேரடியாக இருந்த காரணத்தினால், அவனைப்பிரிந்த அதிர்ச்சியில் இருந்த மீள வர்ஷாவுக்கு அதிக நாட்கள் தேவைப்பட்டன. அவளது மனதில் எழுப்பப்பட்ட கனவுக்கோட்டைகளின் கற்களை ஒவ்வொன்றாக பெயர்த்து எடுத்தெறிந்தாள். அது அவளுக்கு உடல் உறுப்புகள் ஒவ்வொன்றையும் பிய்த்து எரியும் அளவுக்கு வலியைத்தந்தன. அவ்வப்போது வரும் செபாஸ்டியனின் ஞாபகங்கள் அவளுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும் அந்த ஞாபாகங்களின் முடிவில் செபாஸ்டியன் நிஜத்தில் இல்லாதது வர்ஷாவை ஒரு ஹிஸ்ட்டெரிக் பேஷண்டாக மாற்றியது. அவற்றிலிருந்து வெளிவரவும் ஒரு புது வாழ்க்கையைத் தொடங்கவும் நியூரோ மாத்திரைகளை உட்கொள்ள ஆரம்பித்தாள். இவளது மனதை சமநிலைப்படுத்த அவை ஓரளவு உதவின.

ஆனால் இன்று மீண்டும் அவனது ஞாபகங்கள் தலைதூக்கியது அவளுக்கு மேலும் மனதில் நிலையாமையை ஏற்படுத்தியது. இந்த நினைவுகளே தன்னை மீண்டும் ஒரு சைக்கிக் பேஷண்டாக மாற்றிவிடாமல் இருக்க வேண்டும் என்று கவலை கொண்டாள். கரையில் நிற்கும்பொழுது மீண்டும் மீண்டும் காலை நனைத்து செல்லும் கடல் அலைகளைப்போலவே ஞாபகங்கள். அவற்றில் சில பரவசத்தை கொடுத்தாலும் சில ஊசியால் நகக்கண்ணில் குத்தும் வலியை கொடுக்க வல்லது. உயிரோடு கலந்திருக்கும் அந்த ஞாபகங்கள் அழிந்து போவது உயிர் பிரியும்போது மட்டுமே.

அதுவரை இவ்வாறு வதைபடுவதை பொறுக்கமுடியாது என்று முடிவு செய்த வர்ஷா, தனது பெட்ரூம் வார்ட்ரோபில் மூன்றாவது ஷெல்ஃபில் வைத்திருந்த மருந்து குப்பியை கையில் எடுத்து ஆராய்ந்தாள். நியூராலஜிஸ்ட் Dr. மைக்கேல் செரா கொடுத்த மருந்துகள் அவை. JAN, SEB என்று இரண்டு சிறிய அறைகள் இருந்தன. JAN க்கான அறை எந்த மருந்துகளும் இல்லாமல் காலியாக இருந்தது. இறந்து போன தனது தோழி ஜானகியுடைய நினைவுகளை அழிக்கும் மாத்திரைகள். SEB என்ற செபாஸ்டியன் சம்பந்தப்பட்ட நினைவுகளை மட்டுமே அழிக்கக்கூடிய மருந்துகளை கையில் எடுத்தாள். தனிமையில் வருத்தும் அவனது நினைவுகளை இன்றோடு மறப்பதற்க்கு முடிவு செய்தாள். கவரில் செபாஸ்டியன் 1 மாத்திரை ப்ரேக்ஃபாஸ்ட் மற்றும் டின்னர்மூன்று நாட்கள் என்று எழுதப்பட்டிருந்தது. மிதமான வெந்நீரின் உதவியுடன் ஒரு மாத்திரையை விழுங்கினாள். மீதம் 5 மாத்திரைகள் இருந்தன. முதல் மாத்திரை சாப்பிட்ட அன்றைய தேதியை தனது லிவிங் ரூமில் இருக்கும் டிஜிட்டல் கடிகாரத்தில் பார்த்து 12.08.2055 என்று குறித்து வைத்துக்கொண்டாள்.

அதன் பின் மருந்து குப்பியை மூடி வைத்துவிட்டு வர்ஷா உறங்கச்சென்றாள்.