புதன், நவம்பர் 30, 2022

UTP-5


 

அலுவலகம் நிமித்தம் தினமும் மேற்கொள்ளும் மூன்று மணி நேர புறநகர் ரயில் பயணத்தில் தான் அவரை அவனுக்கு பழக்கமாகியிருந்தது. இந்த அவன் கேசவன். அந்த அவர் கோபாலன்.


பரிச்சயமில்லாத மனிதரிடம் பேசுவது கேசவனுக்கு மிகவும் பிடிக்கும். தெரிந்த மனிதர்களை விட தெரியாத மனிதர்களின் அணுக்கம் இவனுக்கு அலாதியானது. காரணம் இவர்கள் இவ்வளவுதான் என்ற முன் முடிவில் கேசவன் கெட்டிக்காரன். இதற்கு மேலும் இவர்களிடம் தெரிந்துகொள்ள சுவாரஸ்யம் ஏதும் இல்லை என்பதால் புது மனிதர்களின் சகவாசத்தை நாடுவான்.


தினமும் மூன்று மணி நேர ரயில் பயணம் என்பதை இவனுடன் பயணிக்கும் பலர் நொந்துகொள்ளவதுண்டு. ஆரம்பத்தில் அவர்களுடன் சேர்ந்து இவனுக்கும் நொந்துகொள்ளத்தான் பிடித்திருந்தது. இரண்டரை ஜான் வயிற்று பிழைப்புக்கு எல்லாவகையான குட்டிகரணமும் போட்டுத்தான் ஆகவேண்டும் என்பதால் வேறு வழியில்லாமல் ஏற்று ஓடிக்கொண்டிருந்தான். இவனுக்கு ஒன்றரை, மனைவிக்கும் மகனுக்கும் சேர்த்து அரை அரை ஆக இரண்டரை ஜான் வயிறு என்பதை தெளிவுபடுத்திக்கொள்ள விழைகிறேன்.
ஆரம்பத்தில் அன்றைய செய்தித்தாள்களை வாங்கி மோந்து மேய்ந்து பார்த்தான். அவை செய்திகளாக இல்லாமல் கருத்துக்களை திணிப்பவையாக இருந்தன. 'நீ இப்படி யோசிக்காதே, மாறாக இது போல் அவதானி' என்று ஒவ்வொரு செய்தித்தாளும் இவனை இடது வலம்
நடுப்புறம் என்று பாடய்படுத்தி குழப்பின.


பொதுவாகவே யாருடைய கருத்துக்களிலும் உடன்படாதவன் கேசவன் என்பதால் இரண்டு மூன்று வாரங்களில் அவனுக்கு இந்த செய்தித்தாள் வாசிக்கும் பழக்கம் மிகவும் அயர்ச்சியை கொடுத்து பயணத்தை மேலும் களைப்பாக்கியது. அலுவலகம் முடிந்து வந்த ஒரு நன்நாளில் ஆரியகௌடா சாலையில் இருக்கும் முருகன் வாடகை புத்தக நிலையத்தில் தன்னுடைய
தகவல்களை பதிந்து கொண்டு புத்தகங்களை வாடகைக்கு எடுத்து வந்து படிக்க ஆரம்பித்தான். மாவட்ட கிளை நூலக நூல்களை விட இந்த வாடகை புத்தகத்தின் புதுப்புது வரவுகள் இவனுக்கு கிளர்ச்சியை கொடுத்திருந்தன. அதை விட நாற்பது ஐம்பது ஆண்டு கால் பழைய சிற்றிதழ்களின் பைண்டிங் தொகுப்பு இவனை புது உலகிற்கே இட்டுச்சென்றது. அந்த புராதன
புத்தகங்களின் பக்கத்தின் கீழ் மற்றும் மேல் விளிம்பில் இருக்கும் துணுக்குச்செய்திகள் ஏனைய விளம்பரங்கள் அந்த காலத்திற்கு இவனை லகுவாக கடத்தின. ஆனால் இந்த அரத பழசான பைண்டிங் செய்யப்பட புத்தகம் தான் இவனது தலையெழுத்தை மாற்றிப்போடும் என்று அப்போது அவன் அறிந்திருக்கவில்லை.

இவன் படித்துக்கொண்டிருந்த 'பொம்மை' என்ற ஒரு பழைய நாளிதழின்
தொகுப்பை பார்த்துதான் முதல் பத்தியில் நமக்கு அறிமுகமாகிய கோபாலன் இவனுக்கும் அறிமுகமானார்.


'இப் யூ டோன்ட் மைண்ட், என்ன புக் சார் இது?' என்றார்.



ஏறிட்டு பார்த்தவன் அருகில் அவர் ஆர்வமாக அந்த புத்தகத்தை பார்த்துக்கொண்டிருப்பதை அறிந்து அதன் விவரங்களை கூறினான்.



பொக்கிஷம் சார். முந்தின பக்கத்துல ஒரு தொடர்கதையோட பேரு வந்தது
பாத்தீங்களா? 'வானம்பாடிக்கு ஒரு விலங்கு'னு ஒரு நாவல். அது லக்ஷ்மி எழுதினது. அப்போல்லாம் அத விடாம வாராவாரம் எதிர்பார்த்து உக்காந்து படிச்சிருக்கேன். இந்த புத்தகத்த பாத்ததும் எனக்கு அந்த ஞாபகம் வந்துச்சு’.



கேசவன் அவர் கேட்காமலேயே அந்த புத்தகத்தை அவரிடம் கொடுத்தான்.



தொட்டாலே உடஞ்சிடும் போல இருக்குல்ல’ என்றவர் உடனடியாக அந்த புத்தகத்தை கையில் ஏந்தி முகர்ந்து பார்த்தார். இந்த வாசனைலாம் அவ்ளோ சீக்கிரம் கிடைக்காது சார். அம்பது அறுபது வருஷம் இருக்கும்ல?’



புத்தகத்தை வாங்கி படித்தவர் பிறகு சிறிது நாளில் கொஞ்சம் கொஞ்சமாக இவனுடன் ஐக்கியமாகி விட்டார். பரஸ்பர புத்தக தகவல்களை பரிமாறிக்கொண்டனர். 1950ஆம் வருடத்திய சூப்பர் ஹிட் தொடரான பொன்னியின் செல்வனில் ஆரம்பித்த வரலாற்று தேடல் கொஞ்சம் கொஞ்சமாக பின்னோக்கி இழுத்தது. நீலகண்ட சாஸ்திரியின் ஆய்வுக்கட்டுரைகள், மொகலாயர்களின் படையெடுப்பு, பாண்டியர்கள், களப்பிரர்கள், ஓலை சுவடிகளின் பெயர்ப்புகள் அதன் முன் வந்த கிறிஸ்துவின் பிறப்பு அதற்கு முந்தைய சங்ககால பாடல்கள், இராமாயணம் மற்றும் ஆதியை விளக்கும் மகாபராதம் என பேரு வெடிப்பு காலம் வரைக்கும் அலசினார்கள். ரயில் பயணம் அவனுக்கு போதிமரம் போல் ஆகியது.

ஒருமுறை கடவுளின் இருப்பை பற்றிய சம்பாஷணை மிக நீண்டு ஓடியது.

'சொல்றேன்னு தப்பா எடுத்துக்க கூடாது'



உரையாடல்களின் அதுவும் தர்க்கம் நடக்கு இடங்களில் போடப்படும் இந்த பீடிகை பெரும்பான்மையான நேரங்கள் தவறாகத்தான் எடுத்துக்கொள்ளத்தூண்டும். ஆனால் கேசவனுக்கு இந்த முறை அப்படி அமையவில்லை.

'இன்னும் உங்களுக்கு முதிர்ச்சி வரலைன்னு சொல்லுவேன்'



அவரது பேச்சு அன்று வெடுக்கென்றிருந்தாலும் கேசவன் பொறுமையாக இருந்தான்.

'ஒரு பொருளை அல்லது கொள்கையை பார்த்த பின் நம்புவதை விட, நம்பிக்கையுடன் பார்க்கத்தொடங்க வேண்டும். See and Believe கிடையாது. Believe and See' என்றார்.



கேசவனுக்கு அந்த சித்தாந்தம் எதனுடனும் ஒத்துப்போவது போலத்தான் தெரிந்தது.

'நீங்க புட்டபர்த்தி சாய் பாபாவை பத்தி என்ன நினைக்கிறீங்க'



எனக்கு அவரை போட்டோல பாத்துதான் தெரியும். வேறு ஒன்னும் அவரைப்பத்தி தெரியாது என்றான்.



எனக்கு முப்பத்தஞ்சு வயசு இருக்கும். குடும்பத்துல சொல்லொண்ணா கஷ்டம். எங்கயாவது கருப்பு துளைக்குள்ள போய் தொலைஞ்சி போயிடலாமானு யோசிக்கிறேன். ஒரு ஆறுதல் வார்த்தை சொல்றதுக்கு கூட யாரும் இல்லை. இருந்தாலும் தோணலை. ஏதோ ஒரு சக்தி என்னை புட்டபர்த்தி நோக்கி இழுத்தது. அங்க போனேன். கூட்டத்துல உக்காந்துருக்கேன். அப்போ பாபா என்னை நோக்கி கைய காமிச்சு பக்கத்துல வா அப்டின்னு சைகைல கூப்புடுறார். என்னைய எதுக்கு
கூப்புடுறார்னு எனக்கு ஆச்சர்யமா இருந்துச்சு. பக்கத்துல போன உடனே என்ன அவருக்கு பக்கத்துல உக்கார வச்சிக்கிட்டு தோள்ல தட்டிக்கொடுத்து நான் என்ன கஷ்டங்களை அனுபவிக்கிறேன்னு அவரே சொல்லறார். அவருக்கு எப்பிடி தெரிய வந்துச்சுன்னு எனக்கு ஒன்னும் புரியல. எல்லாம் சரியாயிடும்னு ஒரு தீர்வையும் சொல்றார். எனக்கு மனசு அமைதியாயிடுச்சு. அப்படியே கொடில போட்ருக்க துணி போல ரொம்ப லேசா உணர ஆரம்பிச்சேன். ஒரு பரிபூரணம் கிடைச்ச மாதிரி பீலிங். அவரு
சொன்னது போல கஷ்டம் எல்லாம் விலகிடுச்சு. அன்னைலேந்து இணைய வரைக்கும் நான் தீவிர சாய் பக்தனா இருக்குறேன்.’

'ஓகே புரியுது சார். இதேமாதிரி எல்லாருக்கும் நடந்துரும்னு சொல்ல முடியாதுல'

 

'அதைத்தான் கேசவன் சொல்றேன். நீங்க ஆரம்பத்திலேயே சந்தேகப்படறீங்க. அப்புறம் மிராக்கிள் நடந்தாலும் எதேச்சையா நடந்துதான்னு சப்பைக்கட்டு கட்டுவீங்க'

 

'யதேச்சை தான். சப்பைக்கட்டு தான். அதுல ஒன்னும் சந்தேகம் இல்லையே'

 

'பாத்தீங்களா. நம்பிக்கை இருந்தான் உணர முடியும்'

 

'இப்டியே எவ்ளோ நாள் தான் சொல்லுவீங்க. நான் நம்புறேன். எப்படி உணரணும் அத சொல்லுங்க பாக்கலாம்'.

 

'உங்களுக்கு நம்பிக்கை வரலை. நம்பினா உணர முடியுமான்னு டெஸ்ட் பண்ணனும்னு நினைக்கிறீங்க. அது அது உணர்வுபூர்வமா நடக்கணும். உங்களுக்கு இடது பக்க மூளை ரொம்ப வேலை செய்யுது. அதான் அதிகப்படியா தர்க்கம் பண்றீங்க'.

 

'தர்க்கம் பண்ணாம விட்டுட்டா உண்மை எப்பிடி வெளில தெரியும்'

 

'சரி. விடுங்க. நான் என்னமோ சாமி பூதத்துக்கு ப்ராண்ட் அம்பாசிடர் மாதிரி உங்க கிட்ட பேசிட்டு இருக்கேன். அப்புறம் நமக்குள்ள மனஸ்தாபம் வந்துடும்'.

 

கேசவனுக்கு பொறி தட்டியது

 

'கோபாலன் சார். நீங்க தான் சாமி பத்தி சொல்லிட்டீங்க. பேய் பூதம் பத்தி ஏதும் உணர்ந்திருக்கீங்களா?'

 

'என்ன கேசவன். ஏன் வாய் பிடுங்கிறீங்களே'

 

'அப்போ ஏதோ அனுபவம் இருக்கு. சொல்லுங்க சார். இன்னைக்கு புக்க மூடி வச்சிடறேன்'.

 

'விடமாட்டிக்கிறீங்க'

 

'இல்ல. இதுக்கும் என்ன நம்பிக்கையோட தான் பாக்கணுமா? இல்ல. வேற ஏதும் இருக்கா?'

 

'நீங்க கடைசி வர சந்தேகத்தோடதான் பாப்பீங்க போல?'

 

' இல்லை இல்லை சார். நான் நம்புறேன். நீங்க சொல்லுங்க'

 

'சொல்றேன். என்னோட அனுபவமும் இருக்கு. என்னோட நண்பனோட அனுபவமும் இருக்கு. ஒன்னொன்னா சொல்றேன். கல்லூரி படிப்பை முடிச்சிட்டு இளந்தாரியா சுத்திக்கிட்ருந்த வயசு அது. எதுக்கும் பயம் கிடையாது. வந்து பாருன்னு நிக்கிற கோஷ்டி. ஒரு நாள் நைட்டு இரண்டாவது ஆட்டம் சினிமா பாத்திட்டு வரலாம்னு கிளம்பி போறோம். அப்போல்லாம் எங்க ஊர்லேந்து யாரும் ரெண்டாவது ஆட்டத்துக்கு போகமாட்டாங்க. ஏன்னா சுடுகாட தாண்டி தான் தியேட்டருக்கு போகணும். சில நாள் எரிஞ்சிட்டு  இருக்கும். வெடப்பா எந்திச்சி நிக்கிறத பாத்தே நிறைய பேருக்கு ஜன்னி வந்திருக்கு. அன்னைக்கு ரெண்டாவது ஆட்டம் படம் பாக்க போனதே ஒரு வீம்புக்கு தான். என்ன ஆகுதுன்னு பாக்கலாமேன்னுட்டுதான். திரும்பி வந்திட்டு இருக்கோம். சுடுகாட தாண்டுற சமயம் தான் அந்த குரல் கேட்டுச்சு. என் கூட வந்த கண்ணன் தான் எவ்ளோ சொல்லியும் கேக்காம திரும்பி பாத்தான்.  ஒரு சமாதி மேல ஒரு உருவம் ஒன்னு உக்காந்திருக்கு. அலை அலையா தெரியுது. தலை நிறைய பூவு. முகதத்துல மஞ்சள் தடவி அந்த நேரத்துல எப்பிடின்னு எங்களுக்கு லேசா உதர ஆரம்பிக்குது. எங்களுக்கு அதுக்கும் ஒரு பத்தடி நீளம் இருக்கும். அது அங்க நின்னுட்டே அதோட கைய்ய பத்தடிக்கு மேல நீட்டி கண்ணனோட கழுத்த பிடிச்சது. கண்ணன் கத்துறான். எங்களுக்கு என்ன பண்றதுன்னே தெரில. கண்ணனை பிடிச்சி நாங்க இந்த பக்கம் இழுக்குறோம். ஒரு ரெண்டு நிமிஷம் இந்த போராட்டம் நடந்துருக்கும். அந்த உருவம் தன்னோட இன்னொரு கைய்யால எங்க எல்லாரையும் வேகமா அறைஞ்சிது. அவ்ளோ தான் தெரியும். அடுத்த நாள் பெரியவங்க வந்து எழுப்பின பின்னாடி தான் எந்திரிச்சோம்.  சொல்லி வச்ச மாதிரி எல்லோரோட கன்னத்திலேயும் அஞ்சு விரல் பதிஞ்சிருந்தது. எங்களுக்கு மந்திரிச்ச தாயத்தை கட்டி விட்டாங்க.

 

"இது உண்மையா நடந்துச்சா என்ன?'

 

'பாத்தீங்களா இதனால்தான் நான் யார்கிட்டையும் சொல்றது இல்ல. ஏன்னா சொன்னா நம்ப மாட்டாங்க. கண்டவர் விண்டிலர். விண்டவர் கண்டிலர் அப்படிங்கிறது எனக்கு ரொம்ப பொருந்திப்போகுது'

 

'சரி சார். நன் சந்தேகப்படல. வேற எதுனாச்சும் இதே மாதிரி அனுபவம் இருக்கா?'

 

'எதுக்கு. திரும்பவும் என்ன கிண்டல் பண்றதுக்கா?'

 

'சும்மா சொல்லுங்க சார்'.

 

'சொல்றேன். வேலை கிடைச்சு நான் புதுசா ஜாயின் பண்ண டைம் அது. நான் ஜூனியர் அப்டிங்கிறதுனால என்ன ஆந்திரால ஒரு அத்துவான காட்டுல இருக்குற சுகர் பாக்ட்ரிக்கு அனுப்பி விட்டுட்டாங்க. கஸ்டமர் கிட்ட பில்ல காமிச்சு காசு கலெக்ட் பண்றதுக்கு. ஆனா அதுல வேறோ ஒரு பிரச்சினை இருக்குங்கிறது எனக்கு அப்போ தெரியாது.'

 

'என்ன பிரச்சினை சார்?'

 

'நான் அங்க போய் சேந்தோடனே எனக்கு ஒரு கெஸ்ட் ஹவுஸ் கொடுத்தாங்க. சுத்தி கரும்பு காடு தான். ரெண்டாளு உயரத்துக்கு இருக்கும். பகல்ல ஒன்னும் தெரில. நைட் ஆச்சுன்னா வெளில பாத்தா கும்மிருட்டு. அந்த கரும்போட தோகை அசைறது காதுல ஒரு மாதிரி சத்தத்தை உண்டு பண்ணும். போதாக்குறைக்கு சோளக்கொல்ல பொம்மை வேற. நைட் கதவ சாத்தினா அடுத்த நாள் தான் திறப்பேன். ரெண்டு நாள் ஒன்னும் தெரில. நார்மலா தான் போச்சு. மூணாவது நாள் ஆபிஸ்லேந்து வரதுக்கு ரொம்ப நேரம் ஆயிடுச்சு. என்ன ஜீப்ல வந்து விட்டுட்டு போறாங்க. வாசல்ல ஒரு குண்டு பல்ப் மட்டும் தான். வேற வெளிச்சம் ஏதும் இல்ல. உள்ள வந்து கதவ சாத்திட்டு கட்டில்ல படுத்திருக்கேன். புக் படிச்சிகிட்டே தூங்கி விழப்போறேன். அந்த சமயத்துல கட்டிலோட தலைப்பக்கத்தை பிடிச்சி அப்பிடியே மேல யாரோ தூக்குற மாதிரி ஒரு உணர்வு. முழிச்சி பாத்தா கட்டிலோட ஒரு பகுதி மேல தூக்கி நிக்குது. எனக்கு எப்படி இருக்கும் பாருங்க. கட்டில்ல இருந்து எறங்குனேன்னு சொல்ல முடியாது. அப்பிடியே கீழ விழறேன். கட்டிலும்  யாரோ பிடிச்சி இறக்கி வச்ச மாதிரி கீழ இறங்குது. எனக்கு உடம்பல்லாம் உதர ஆரம்பிச்சிடுச்சு. கத்த முயற்சி பண்றேன். சத்தம் வரல. என் சூட்கேசுலேந்து சாமி படத்தை எடுத்து நெஞ்சுப்பக்கமா கையில பிடிச்சி அப்பிடியே குத்த வச்சிட்டு உக்காந்துட்டேன். சரியா அந்த நேரம் பாத்து கரண்ட் போய்டுச்சு. அழுதுட்டே உக்காந்திருக்கேன். கரும்பு தோகையோட சத்தம் மட்டும் தான் கேட்டுச்சு. அப்பிடியே உக்காந்த மாதிரியே எப்போ தூங்கினேன்னு தெரியல. முழிச்சி பாக்கும்போது விடிச்சிருச்சு. கோணல் மாணலா இருந்த கட்டில்ல சரி பண்ணிட்டு குளிக்க போய்டேன். தலைக்கு தண்ணி ஊத்திட்டு வெளில வந்து பாக்குறேன். நான் நேர போட்ட கட்டில் திரும்பவும் கோணலா கிடக்குது. எனக்கு என்ன பண்றதுன்னே. தெரியல. கட்டின துண்டோட சூட்கேசை தூக்கிட்டு வெளில ஓடி வந்துட்டேன். சுத்தியும் கரும்பு. தெரிஞ்ச பாதைல ரோட்டை நோக்கி ஓடுறேன். 'ஊ ஊ னு பின்னாடியே துரத்துர சத்தம். தலை தெறிக்க ஓடுறேன். என்ன பிக்கப் பண்ற வண்டி எனக்கு எதுத்தாப்புல தெரிஞ்சப்புறம்தான் நிம்மதி வந்துச்சு. அதை நோக்கி வேகமா ஓடுறேன். நான் ஓடி வந்ததுல துண்டு அந்த நேரமா பாத்து அவுத்து விழுந்து ஒரே அவமானமா போயிடுச்சு. உயிர் பிழைச்சது புண்ணியம்னுட்டு அன்னைக்கே பொட்டிய எடுத்துட்டு கிளம்பிட்டேன். ஆபிஸ்க்கு வந்தப்புறம் தான் தெரிஞ்சது ஏற்கனவே அவங்களுக்கு அதுபோல அனுபவம் இருந்துருக்குன்னு. ஆனா நான் ஜூனியர்ங்கிறதுனால என்ன ஏமாத்தி அனுப்பிச்சிருக்காங்க.

 

கேக்கவே பயங்கரமா இருக்கே சார்’.

 

இதுலாம் என்ன பிரமாதம். எனக்கு தெரிஞ்ச ஒருத்தன் லக்ஷ்மி உபாசனம் பன்றவன். தேவையில்லாம யச்சினி உபாசனை பண்றேனுட்டு ஆரம்பிச்சு இப்போ வாழ்க்கையே தொலைச்சிட்டு நிக்குறான்'.

 

'அது என்ன சார். லக்ஷ்மி உபாசனை, யச்சினி உபாசனைனு சொல்றீங்க. ஒண்ணும் புரியலேயே'.

 

'லக்ஷ்மி உபாசனைங்கறது நல்ல தேவதைய ப்ரீத்தி பண்றது. அதாவது அதுங்களுக்கு பூஜை பண்ணி அவங்ககிட்ட நமக்கு என்ன வேணுங்கறத கேக்குறது. இதுல உபாசனைக்கான நேரம் அதிகமா இருக்கும். பலனும் லேட்டாத்தான் கிடைக்கும். ஆனா தொந்தரவு கிடையாது. ஆனா யச்சினி உபாசனைங்கறது இந்த மாதிரி இல்லை. சடங்குக்கான நேரம் கம்மியாத்தான் இருக்கும். சீக்கிரமா ப்ரீத்தி பண்ணிடலாம். ஆனா அதுங்க என்ன கேக்கும்னு தெரியாது. கேக்குரத குடுக்கலனா என்ன நடக்கும்னும் சொல்ல முடியாது. ஒரு விதமான ஷார்ட் கட். ரொம்ப டேஞ்சர். லைஃபே காலியாய்டும். அதுல ஒரு வகையான கர்ண பிசாசினி மந்திரத்த சொல்லித்தான் என் பிரெண்டு பைத்தியமாய்ட்டான்'.

 

'ஓ. கேக்குறதுக்கே பயமா இருக்கு சார்' என்று சொன்ன கேசவன் மண்டையில் விபரீதம் ஓடியது.

 

அன்று இரவே அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வந்தவன் இணையத்தில் கர்ண பிசாசினி மந்திரம் என்றால் என்ன என்பதை தேடினான். விவரங்களை இவன் அதிகம் தேடாமலேயே அள்ளிக்கொடுத்தது. சொல்ல வேண்டிய முறைகளை தெரிந்துகொண்டு நான்கு வரி இருந்த மந்திரத்தை ஒரு துண்டு சீட்டில் எழுதிக்கொண்டான். பன்னிரெண்டு மணிக்கு அலாரம் வைத்து தூங்கினான். மனைவியும் மகனும் நன்றாக உறங்கி கொண்டிருந்த நடுச்சாமத்தில் எழுந்தான். மொட்டை மாடிக்கு சென்று அமர்ந்தான். நிலவொளி மட்டுமே இருந்தது. கைகளை கூப்பி அந்த மந்திரத்தை சொல்ல ஆரம்பித்தான். பத்து பதினைந்து நிமிடங்களுக்கு பிறகு அந்த மந்திரம் அவனுக்கு மனனம் ஆகியிருந்தது. கண்களை மூடிக்கொண்டு உச்சாடனம் செய்தான். கோபாலன் கூறியிருந்தது போல அவன் அந்த செய்கையில் முழுதாக நம்பி இறங்கியிருந்தான். ஒரு அரை மணி நேரம் சென்றிருக்கும். இவனது காதுக்கருகில் குரல் கேட்டது.

 

'கேசவா'

 

இவனுக்கு உலுக்கிவிட்டது. பயத்தை வெளிக்காட்டாமல் கண்களை இறுக்க மூடிக்கொண்டான்.

 

'கேசவா'

 

'என்ன?'

 

'என்ன எதுக்கு இங்க வரவச்ச? உனக்கு என்ன வேணும்னு சொல்லு?'

 

கேசவனுக்கு என்ன கேட்பதென்று தெரியவில்லை. கண்ணை திறக்கலாமா வேண்டாமா என்று யோசித்தான். தைரியத்தை வரவழைத்து கனகளை திறந்து பார்த்தான். எதிரில் எதுவும் இல்லை. இவனுக்கு பக்கவாட்டில் ஒரு உருவம் தெரிந்தது. அப்சரஸ் போல இருந்தது. கண்களை மீண்டும் மூடிக்கொண்டான்.

 

கேசவா. பயப்படாத. நான் உன்கிட்ட கேக்குறத நீ கொடுத்தீன்னா உனக்கு எல்லாமே கிடைக்கும்'

 

'நான் என்ன பண்ணனும்?'

'நீ என்ன பண்ணணும்னு நான் சொல்றேன். நான் உனக்கு என்ன செய்வேன்னு சொல்லவா?'

 

கேசவன் சகஜமாக 'சொல்லு' என்றான்.

 

'உன்னோட காதுல என்னோட குரல் எப்போதுமே கேட்டுட்டே இருக்கும். உனக்கு எதிர்ல யாரு இருந்தாலும் அவங்கள பத்தி முழு விவரத்தையும் உன்கிட்ட சொல்லுவேன். அவங்க யாரு? அவங்க எங்கேந்து வந்திருக்காங்க? என்ன பண்ணப்போறாங்க? அவங்க கிட்ட என்ன சொன்ன நீ நினைக்கிறது நடக்கும்னு எல்லாத்தையும் சொல்லுவேன். அதனால உனக்கு எங்க போனாலும் வெற்றி தான். நீ சொல்றது நடக்கும். நினைக்கிறது கிடைக்கும். பதிலுக்கு நீ என்ன பண்ணனும் தெரியுமா?'.

 

'நான் என்ன பணணும்னு சொல்லு?'

 

'உன்னோட மனைவியோட உயிர்' என்றது

 

கேசவன் திடுக்கிட்டு கண்ணைத்திறந்து பக்கவாட்டில் திரும்பி பார்த்தான். அங்கே பார்க்கவே சகிக்க முடியாத அளவுக்கு ஒரு கோரமான உருவம் காற்றில் அசைந்தாடிக்கொண்டிருந்தது.

 

தவிரவும் மிக மோசமான ஒரு துர்நாற்றம் அங்கே பரவியது. விக்கித்துநின்ற கேசவனக்கு நா எழவில்லை. விளையாட்டாக ஆரம்பித்தது வினையாக முடிந்துவிட்டதே என்ற பதைபதைப்பில் மொட்டைமாடியில் இருந்து இறங்கி வீட்டிற்குள் தலை தெறிக்க ஓடினான். உள்ளே படுக்கை அறையில் அவன் மனைவி  வாயில் ரத்தம் வழிய இறந்து கிடந்தாள். ''வென்று கதறவும், காதுக்கருகில் 'இனி நான் உன் அடிமை' என்ற குரல் கேட்டது. பித்து பிடித்தவன் போல வெளியே ஓடிவந்தவன் மொட்டைமாடிக்கு சென்றான். மீண்டும் 'கேசவா, நான் உன் அடிமை' என்றொரு குரல் கேட்டது. காதை பொத்திக்கொண்டே மாடியின் கைபிடிச்சுவரில் ஏறி நின்று அருகில்  கம்பியின் மேலே குதித்தான். க்ஷண நேரத்தில் உடல் பொசுங்கவும் அவன் காதில் கேட்ட குரல் அடங்கவும் சரியாக இருந்தது.

 

இவ்வாறு கேசவன் இறந்தது வரை எழுதியபின் லேப்ட்டாப்பை அணைத்துவைத்தான் கார்த்திக். இளம் எழுத்தாளன். இணைய மாத இதழில் அமானுஷ்ய பகுதிக்காக வாராவாரம் கதை எழுதுபவன். மணி இரவு இரண்டைத்  தாண்டியிருந்தது. எழுதுவதில் உள்ள சுவாரஸ்யத்தில் பசி, தாகம் தெரியவில்லை என்பதை உணர்ந்தவன் பிரிட்ஜிலிருந்து தண்ணீரை எடுத்து குடித்தான். மந்திரம் என்று மட்டும் தான் எழுதினோமே, என்ன மந்திரம் என்ற பார்க்கவில்லையே என்ற கூகிளை சொடுக்கியவன் ஒரே நொடியில் பல தகவல்களை கண்டான். கர்ண பிசாசினி மந்திரம் என்று தெளிவாக  எழுதியிருந்த ஒன்றை படித்து பார்த்தான்.  அந்த ஹ்ரீம் க்லீம் போன்ற சொற்களுக்கு அர்த்தம் புரியவில்லை. மற்ற சொற்களும் பரிச்சயமாக இல்லை. மீண்டும் ஒருமுறை சொல்லிப்பார்த்தான்.

 

அசதியால் டேபிளில் தலைசாய்த்து கண்ணயர்ந்து உறங்க சென்ற நேரத்தில் அவன் காதுக்கருகில் 'கார்த்திக்' என்றொரு குரல் கேட்டது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

திங்கள், நவம்பர் 28, 2022

கற்க. கற்ற பின் நிற்க அதற்கு தக.


பதினைந்து வருடங்களுக்கு முன்பு.

மங்கை மேடம். கல்லூரியின் இரண்டாமாண்டு faculty advisor. வகுப்பில் யாரேனும் ஒழுக்கம் குறைவாக நடந்துகொள்ளும் நேரங்களில் எல்லாம் அவர் இதை கூறுவதுண்டு. 'நீ செய்யும் காரியத்தினால் உன்னுடைய பெற்றோர்கள் பெருமைப்படுவார்களா அல்லது தலைகுனிவார்களா என்று யோசித்துக்கொள். பெற்றோர் எதிரில் இருப்பதாக நினைத்துக்கொண்டு எந்த செயலையும் செய்யுங்கள்' என்பார். காலத்துக்குமான ஒரு அறிவுரை. நமக்கே இடரும்போதெல்லாம் இதை யோசித்துப்பார்த்து முடிவெடுத்துக்கொள்ளலாம். அப்படியான ஒரு eternal logical advise. ஒழுக்க கோட்பாடுகளில் முன்வைக்கவேண்டியது. ஆழ்மனதில் வேரூன்றிவிட்டது.



 தற்போது.

மிகவும் பிடித்த ஒரு அறிவுரை என்பதால் அதை குழந்தைகளிடம் அவ்வப்போது கூறுவதுண்டு. ஏறுகிறதோ இல்லையோ, என் கடமை என்ற பாணியில் அதை தொடர்ந்துகொண்டிருக்கிறேன்.

 கடந்த பீரியாடிகள் டெஸ்டில் மகள் அசரடித்திருக்கிறாள்.

'நீ ஆசிரியரானால் மாணாக்கரிடம் எதை முன்னிறுத்துவாய்?' என்ற கேள்விக்கு நீங்கள் எடுக்கும் முடிவு உங்களின் பெற்றோர்களை மகிழ்ச்சிக்குள்ளாகிக்கிறதா அல்லது வேதனைக்குள்ளாக்குகிறதா என்ற போதனையை முன்னிறுத்துவேன் என்று எழுதியிருக்கிறாள். மகளின் ஆசிரியரும் வெகுவாக பாராட்டி மூன்று நட்சத்திரங்கள் கொடுத்துள்ளளார்.

தலைமுறை கடந்து இந்த போதனை கடத்தப்பட்டிருக்கிறதில் மட்டற்ற மகிழ்ச்சி. 

ஞாயிறு, நவம்பர் 27, 2022

ஆசிரியர் போற்றுதும்

மாணவர்களின் எதிர்காலத்தில் உபாத்யார்களின்  பங்கு அளப்பரியது.

 

பெற்றோர் சொல்லுக்கு வீட்டில்  செவிமடுக்காத பிள்ளைகள் கூட பள்ளியில் வாத்தியாரின் சொல்லை தட்டாமல் கேட்பதுண்டு. பள்ளிக்கு சென்ற இளம்பிராயம் முதல் அலுவலகத்தில் வேலை செய்து ஒய்வு பெரும் வரை நமக்கு ஆசான்கள் ஆங்காங்கே அமைவதுண்டு. எண்ணிலடங்கா ஆசிரியர்களில் மறக்க முடியாதவர் ஐசக் சாலமோன்.

 

மூன்றாமாண்டு பொறியியல் பயிலும்போது எங்கள் கல்லூரிக்கு வந்தவர். மாணவர்களை அவர் ஹேண்டில்  செய்யும் விதமே அனைவரையும் அவரிடம் அன்பு கொள்ள வைக்கும். சேரில் உட்காரமாட்டார். ஒற்றை காலை தொங்கவிட்டு டேபிளில் தான்  உட்காருவார். மாணவர்கள் லேட்டாக வகுப்புக்கு வரும்பொழுது தயங்கி வெளியே நிற்பர். மற்ற ஆசிரியர்களென்றால் அப்படியே திருப்பி அனுப்பிவிடுவதுண்டு.

 

ஆனால் ஐசக் சார் அவ்வாறு செய்வதில்லை. 'தம்பி. இது உன்னோட க்ளாஸ். உனக்கு எப்போ வரணுமோ வா. நான் ரொம்ப அறுக்குறேனா. வெளியே கிளம்பி போய்டலாம். ஒன்னும் சொல்ல மாட்டேன். இன்டெர்னல்ஸ் கைய வைக்க மாட்டேன். ஆனா ஒரே கண்டிஷன். க்ளாஸ்ல கவனிக்கிறவன டிஸ்டர்ப் பண்ண கூடாது.

 

இவரின் இந்த அணுகுமுறைக்கு முதலில் உள்குத்தாக இருக்குமோ என்று பயந்த மாணவர்கள் அதன் பின் சொல்லாமலேயே வகுப்பில் டான் என்று ஆஜர் ஆகினர். எளிதாக அவரிடம் பழகினர்.  அவரும் இயல்பாக இருந்தார். இருவருக்குமிடையே இடைவெளி குறைந்து அணுக்கம் அதிகமாகியது.

 

இதுபோன்று தோளில் கை போட்டு வழிநடத்தும் ஆசிரியர்கள் மிக ,மிக அபூர்வம். அவர்களிடம் கல்வி கற்கும் மாணாக்கர்களும் அதே பண்பை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்கின்றனர். நல்வழிப்படுத்துகின்றனர்.

அவரின் உயர்வான சித்தாந்தமாக நான் இன்று வரை கருதுவது, 'Accept the Fact and Move On'.

 

ஆசிரியர் போற்றுதும்.

சனி, நவம்பர் 19, 2022

UTP-4

 

வீடே விழாக்கோலம் போல கலகலத்துக்கொண்டிருந்தது.

 

கடந்த இரண்டு முறை இதே போல இவர்கள் கூடிய போது இத்தனை சிறப்பாக இருக்கவில்லை. மருத்துவம் கைவிரித்த பெரியவர் எப்போது மண்டையை போடுவார் என்ற அளவிலே ஒரு தினுசான துக்கத்தை அனுஷ்டித்தனர். இழுத்து கொண்டிருக்கிறது என்று ரங்கபாஷ்யம் கூறும்போதெல்லாம் அலறியடித்துக்கொண்டு ஓடிவந்தனர். இந்த முறை அதுபோல இல்லை.

 

நான்கு அக்கா மற்றும் மூன்று அண்ணன்கள். பாஷ்யத்தின் அம்மா எப்போதோ தவறி விட்டாள். பாஷ்யம் பத்தாவதாக பிறந்தவன். மீதம் உள்ள இரண்டு குழந்தைகள் பிறந்து இறந்துவிட்டன. முதல் குழந்தைக்கும் அதாவது இவனது மூத்த அக்காவுக்கும் இவனுக்கும் உள்ள வயது வித்தியாசம் முப்பது. இவனுடைய வயசு தற்போது முப்பத்தெட்டாதலால் வாசகர்கள் இவனது மூத்த அக்காவின் வயது அறுபத்தெட்டு என்பதையும் இறக்கும் தருவாயில் இவரது தந்தையின் வயதை தொன்னூறு என்பதையும் எந்தவொரு மின்னணு சாதனங்கள் இன்றியும் கணித்திருக்கலாம்.

 

பாஷ்யத்துக்கு பத்து வயது இருக்கும்போதே இவனது அம்மா இறந்துவிட்டாள். அதன்பிறகு இவனை வளர்த்தது எல்லாம் இவனது அக்காக்கள்  தான்.ஒவ்வொருத்தராக திருமணம் ஆகி வெளியேற அடுத்த அக்கவை பிடித்துக்கொள்வான். ஒரு கட்டத்தில் விவரம் புரிந்தவுடன் தனியே தூங்க ஆரம்பித்துவிட்டான். இவன் எந்த நிலைமையில் இருக்கிறான் என்று அக்கறையாக கூட இவனது அப்பா கண்டுகொண்டதில்லை. அதனாலெல்லாம் இவனது அப்பா மீது இவன் வருத்தமாக இருக்கிறானா என்றால் இம்மியளவும் மரியாதை குறைவின்றி தான் நடத்துகிறான். சொல்லப்போனால் ஒவ்வொருத்தரும் திருமணம் மற்றும் வேலை விஷயமாக ஜாகை மாறி விட இவன் மட்டுமே இவரை அந்திம காலம் ஏன்னு இவர்கள் கணித்து கூடியிருக்கும் இத்தருணம் வரை கவனித்து கொண்டிருக்கிறான்.

 

அவனது அப்பாவுக்கு முதல் குழந்தை மேல் இருந்த பிரியம் பாஷ்யம் பிறந்தபோது இல்லை. வதவதவென்ற குழந்தை பெற்றெடுத்தலும் அதன் பின் பின்னிரவு போன்ற அகால நேரங்களில் கேட்கும் இவரது குழந்தையின்   அழுகுரலும் அவரை களைப்படையச்செய்திருந்தன. இதுமட்டுமில்லாது திருமணமாகி சென்ற பெண் பிள்ளைகளின் குழந்தைகள் என இவருக்கு ஒரு வகை சலிப்பையே கொடுத்தன. ஆனாலும் ஒரு குறையில்லாது மக்கமார்களை வளர்த்தவர் தான்.

 

பாஷ்யத்தின் அப்பா ஒரு காலத்தில் திடகாத்திரமாக இருந்தவர். கொல்லையிலிருந்த ஆட்டுரலை நகர்த்த பாஷ்யம் தன அண்ணனை அழைக்க உள்ளே போயிருந்த கண நேரத்தில் இவரே அதை ஒரு மூச்சாக தூக்கி வைத்தவர். அந்த ஓட்டம் அவர் கீழே விழும்வரைக்கும் இருந்தது. இரண்டு வருடங்களுக்கு ஒரு அதிகாலையில் சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு படியிறங்கியவர் அதிலிருந்த தண்ணீரை கவனிக்கவில்லை. க்ஷண நேரத்தில் எல்லாம் நிகழ்ந்துவிட்டது. படுத்த படுக்கையாகிவிட்டார். தண்ணீர், உணவு, உடம்பு துடைத்துவிடுதல், மூத்திரம் என் சகலமும் படுக்கையில் என்றாகிவிட்டார். பாஷ்யம் தான் பார்த்து கொண்டிருந்த வேளையில் விடுப்பு கேட்டு சமாளித்து கொண்டிருந்தான். பிறகு நிர்வாகத்தின் கெடுபிடியில் அதையும் விடவேண்டிதாயிற்று. VAO ஆக வேலை பார்க்கும் மனைவி மற்றும் அவனது அப்பாவின் தயவில் குடும்பத்தை ஒருவாறு ஒட்டிக்கொண்டிருந்தான்.

 

பாஷ்யமின் இரண்டு குழந்தைகளில் மூத்தவளான தேஜஸ்வினிக்கு கடந்த இரண்டு நாட்களாக கொண்டாட்டமாக இருந்தது. ஆஸ்திரேலியாவில் இருந்து ஒரு அத்தை குடும்பம், லக்சம்பர்கிலிருந்து பெரியப்பா குடும்பம் மற்றும் இந்தியாவின் முக்கிய தலைநகரங்களிலிருந்து வந்த இவளது சொந்தக்காரங்கள் எல்லாம் சேர்ந்து முன்னமே சொன்னது போல ஓஹோவென்றிருந்தது.

 

தேஜஸ்வினிக்கு அத்தை  தான் என்றாலும் வயது மிகுதியாக இருப்பதால் அத்தை என்று சொல்லாமல் குழம்பி பாட்டி என்றாள். தன்னை அத்தை என்று கூப்பிடுமாறு அத்தனை முறை அவள் தேஜுவிடம் மன்றாடியது மற்ற அனைவருக்கும் கலகலப்பாய் இருந்தது.

 

பாஷ்யத்தின் இரண்டாவது அக்காதான் இந்த பேச்சை ஆரம்பித்துவைத்தாள்.

 

'ரங்கா, சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத. அப்பாவுக்கும் கஷ்டம் தானே. எவ்வளவு நாள் தான் படுத்த படுக்கையா இருப்பாரு?'

 

'அதுக்கு என்னக்கா பண்ண சொல்ற?'

 

'இல்லடா. நம்ம ஊர்ல இருக்கறவங்கள கூப்டு செய்வாங்களே. அது மாதிரி செஞ்சிடலாம் டா'

 

'இல்லை புரியலைக்கா. நேராவே சொல்லேன்'.

 

'அதான் இந்த காலையிலேயே எந்திச்சி தலைல நல்ல எண்ணெலாம் தேய்ச்சிவிட்டுட்டு இரண்டு மூணு இளநீர் கொடுப்பங்கள்ள. அது மாதிரி'

 

'அக்கா. உனக்கு பைத்தியம் பிடிச்சிருக்கா? அப்பாவை கொல்ல சொல்றியா?. அவரு என்ன தூக்கி கொஞ்சினதுகூட இல்லேன்னாலும் நான் தான் அவரை கடைசி காலத்துல பாத்துட்ருக்கேன்'

 

'நாங்க யாருமே இல்லேனு சொல்லலியே பாஷ்யம். அவங்க அவங்களுக்கு அவங்க சூழல் அந்த மாதிரி. என்ன கல்யாணம் பண்ணிட்டு பிறந்த வீட்டுல இருக்க சொல்றியா?'

 

'உன்னைய சொல்லல. அண்ணனுங்களுக்கெல்லாம் என்ன?. அவங்க பத்துக்கலாம்ல. என்னால முடியலன்னு நான் சொல்லல. ஆனா நம்மள அவரு ஒரு குறையும் இல்லாம தான் பாத்துக்கிட்டாரு. நாம அத திருப்பி செய்யணும்ல. எனக்கு அதான் ஆதங்கம்'

 

அக்காள்கள் இரண்டு பேர் அவனது அண்ணனை பார்த்தனர். அவர்களிருவரும் அமைதியாக இருந்தனர்.

 

'அண்ணனுக்கு வேலை அப்டி இருந்துச்சுப்பா. அதனால போய்ட்டாங்க. இங்கே இருந்தா நாலு காசு பாக்க முடியுமா?'

 

'நாலு காசு பாக்குறதுக்கு நாம பரதேசம் போறது ஒண்ணும் பிரச்சினை இல்ல. ஆனா கூட போய் வச்சிக்கிலாம்ல. அது ஏன் பண்ணல. அவரு ஏன் மூஞ்ச மட்டும் எவ்ளோ நாள் பாதித்திருப்பாரு?'

 

இப்பொழுது பாஷ்யத்தின் மூத்த அண்ணன் வாய் திறந்தான்.

 

'பாஷ்யம். நீ சொல்றது எல்லாமே சரி தான். அதுல எதையுமே நான் மறுக்கவும் இல்லை. ஆனா வாழ்க்கைல எல்லாருக்குமே எல்லாமே அமைஞ்சிடாது. எனக்கு நல்ல வேலை அமைஞ்சது. அதுல எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனா அப்பாவை அங்க கூட்டிட்டு போற மாதிரி சூழல் அமையல. இதுக்கு மேல நீ புரிஞ்சுப்பேனு நினைக்கிறன்' என்றார்.

 

'ஆனா ஊனா ஏதாவது காரணம் சொல்லிடுங்க.'

 

'இல்லைடா. அப்பா மேல பாசம் இல்லாமையா நாங்க வந்து பாத்துட்டு பாத்துட்டு போவோம்?'

 

'ஆங். நல்ல வந்தீங்க. வருஷத்துக்கு ஒரு தடவ. இது என்ன திருப்பதி கோவிலா. சோறு போட்டு வளர்த்த அப்பா.'

 

'நாங்க யாருமே மறுக்கலேயே'

 

'ஓ. அப்போ நீங்க எல்லாம் சேர்ந்துதான் முடிவு பண்ணிருக்கீங்க. எல்லாம் கூடி பேசிட்டீங்க'

 

'இல்ல பாஷ்யம். நேத்து சாயந்தரம் தான் முடிவு பண்ணினோம்'.

 

'ஓ. முடிவே பண்ணிட்டீங்களா? அப்போ சரி. அப்புறம் எண்ட கேட்டுட்டு.'

 

'நீ கோவப்படாத பாஷ்யம். அது அவருக்கு மட்டும் இல்லை. உனக்கும் ஒரு ரிலீப் தான.'

 

'நான் எப்போ உங்ககிட்ட சொன்னேன். என்னால அப்பாவை பாத்துக்க முடியாதுனு?. நீங்க வந்து போயிருந்தா எனக்கு இந்த நினைப்பே இருக்காது. அங்க பாரு மொத அக்கா ஆஸ்திரிலேயா போயிட்டா. அம்மா சாவுக்கு கூட வர முடில. பிளைட் டிக்கட் கிடைக்கலன்னு சொல்லிட்டா. ரெண்டாவது அக்கா யூரோப்னு சொல்றா. சரி அதன் பரவால்லன்னு பார்த்தா இந்தியாக்குள்ள இருக்குற உங்களுக்கு என்ன ஆச்சு. கேட்ட மாமாவுக்கு லீவு கிடைக்கல. பிள்ளைக்கு ஸ்கூலுனு உக்காந்திருக்கீங்க'.

 

'சூழ்நிலை அப்போ அப்பிடி இருந்துச்சு டா பாஷ்யம்'

 

'நீங்க கொலைன்னு முடிவு பண்ணிட்டீங்க. நான் என்ன பேசணும்?'

 

'அது எப்படிடா கொலைன்னு சொல்ல முடியும்? வயசாயிடுச்சு.  அவருக்கும் எதுவும் பண்ண முடியல. எப்பிடி ஓடியாடிட்ருந்தவரு. அந்த மாதிரி இருந்தவங்களுக்கு தான் முடங்கிக்கிடக்குறது பிடிக்காதுடா பாஷ்யம். புரிஞ்சிக்க. கௌரவமா வாழணும்னு தான் நினைப்பாங்க. அவரு எந்த காலத்திலேயும் யார்ட்டயும் எதுவுமே எதிர்ப்பார்த்ததில்லை. அவரைப்போய் இப்டி முழுக்க முழுக்க படுத்த படுக்கையாக்கி வச்சிருந்தா எப்படியிருக்கும்? நம்ம கையும் காலும் நமக்கு வேலை செய்றா வரைக்கும்தாண்டா நமக்கு மரியாதை. அதுக்குள்ள போயிடனும். அவருரொம்ப கௌரவம் வாழ்ந்தவர்டா. யோசிச்சுப்பாரு.'

 

'எல்லாம் சரி தான்க்கா. நாம சின்ன வயசா இருக்கும்போது நமக்கு நம்ம அம்மா அப்பா பீ மூத்திரம் அள்ளிபோடலையா. இப்போ அது நம்ம கடமை. நீயேதான் உன் பேர பிள்ளைகளுக்கு செய்யுற. நான் அப்பாவுக்கு செய்யுறேன். அவரு இருக்குற வரைக்கு அப்பிடியே இருந்துட்டு போகட்டும்.'

 

'இங்க பாரு பாஷ்யம். நமக்கு நம்ம பெத்தவங்க செய்றதுக்கும் நாம் நம்ம பெத்தவங்களுக்கு செய்றதுக்கும் வித்தியாசம் இருக்கு. குழந்தையா இருக்கும்போது நமக்கு எதுவும் தெரியாது. ஆனா பெரியவங்களுக்கு அப்பிடி இல்லை. நம்ம பிள்ளை கஷ்டப்படுதேன்னு தான் தோணும். தவிர நம்மகிட்ட அவங்களுக்குனு ஒரு பிம்பம் இருக்கு. அது இந்தமாதிரி செய்றதையெல்லாம் சகிச்சிக்க விடாது. அவரால இப்போ பேச முடியல. ஒரு வேளை பேச மட்டும் முடிஞ்சுதுனா அவரே இந்த முடிவை தான் நம்மகிட்ட சொல்லிருப்பாரு. இதுக்கு மேல உன் இஷ்டம். பாத்துக்கோ.' என்று பெருமூச்செறிந்தாள்.

 

எல்லோரும் ஒரு முடிவாகத்தான் வந்திருப்பார்கள் போல. இதில் தனித்து இருப்பது தான் மட்டும் தான் என்று  ரங்கபாஷ்யத்திற்கு தோன்றியது. இருபக்கத்தின் நியாயங்கள் அவனுக்கு தெளிவில்லாத ஒரு ப்ரக்ஞயை தந்துகொண்டிருந்தது. என்ன செய்வது என்று புரியாமல் தனது அப்பாவின் அருகில் சென்று உட்கார்ந்து கொண்டான்.

 

குழந்தைகள் இந்த சங்கடங்கள் ஏதும் தெரியாமல் அல்லது புரியாமல் விளையாண்டு கொண்டிருந்தார்கள். ஒரு வகையில் குழந்தையை இருப்பது வரம். தோளில் இருக்கும் சுமை தெரியாது. தலையை திருப்பி கொண்டான். எவ்வளவு தேஜஸான முகம். தற்போது சூம்பிபோய் வாடியிருந்தது. தானும் அந்த நிலையை அடைய வேண்டியிருக்கும் என்று தோன்றியது. அதற்குள் இறைவனடி சேர்ந்துவிட வேண்டும் என்று அவனையுமறியாமல் வேண்டிக்கொண்டான். இந்த எண்ணமே அவனுக்கு முரணாகத்தெரிந்தது. தனக்கு என்று வரும்போது தான் வகுத்துக்கொண்ட நியாயம் வேறாக இருப்பது அவனுக்கு புலப்பட்டது. இயற்கையின்  வரமும் சாபமும் இதுதான். சிறுவயதில் பார்த்த விளையாட்டு பொம்மைகள் வயதான பின்பு அதே உவகையை அளிப்பதில்லை. காட்சிகள் மாறாமல் அதன் கற்பிதங்கள் மட்டுமே மாறிக்கொண்டிருக்கின்றன. சூழ்நிலைக்குத்தகுந்தவாறு நியதிகளை தங்களை தகவமைத்துக்கொள்கின்றன. ஒரு வகையில் உலகத்தின் சமநிலை இதில் அடங்கியிருக்கிறது என்று அவனுக்கு தோன்றியது. எண்ணைகளை கட்டுப்படுத்தி தனது அப்பாவின் முகத்தை மீண்டும் பார்த்தான். அவரது பார்வை எங்கோ வெறித்து கொண்டிருந்தது.

 

அடுத்த நாளிற்கான தலைக்கூத்தல் முன்னிட்டு அன்று இரவு ஏற்பாடுகள் மும்முரமாயிருந்தன. அக்காக்கள் இருவரும் பட்டியலிட்டு தர அண்ணன்கள் வெளியே சென்று இளநீர், எண்ணெய் போன்றவற்றை வாங்கி வந்தனர். அதுமட்டுமில்லாது தவசுப்பிள்ளைக்கு தகவல் தரப்பட்டது. இத்தனை பேர் இன்னன்ன சாப்பாடு, பந்தல், ஊர் பெரியவர்கள், கோடித்துணி என கனஜோராக நடந்து கொண்டிருந்தன.

 

பாஷ்யம் எல்லாவற்றையும் வெறித்து பார்தது கொண்டிருந்தான். அவனுக்கருகில்  தேஜஸ்வினி வந்தாள்.

 

'அப்பா, என்ன பன்றாங்க? நாளைக்கு தாத்தா ஊருக்கு போறாருனு சொன்னாங்க'

 

'யாரு சொன்னா?'

 

'அந்த பாட்டி' என்று பாஷ்யத்தின் மூத்த அக்காவை காய் காட்டியது குழந்தை.

 

'எனக்கு தெரில தேஜு. தாத்தாவுக்கு இங்க ரொம்ப கஷ்டமா இருக்குதுனு சொல்றாங்க. அதான் அவங்க எல்லாம் சேந்து ஒரு ஊருக்கு அனுப்பி வைக்கிறாங்க'

 

'அங்க போனா தாத்தாக்கு கஷ்டம் இருக்காதா?'

 

'ஆமா. அங்க எந்த வழியும் தெரியாது'

 

'அப்போ. தாத்தா அங்க போறது தான் கரெக்ட்' சொல்லிவிட்டு வெடுக்கென்று ஓடிவிட்டாள்.

 

சாப்பிட வருமாறு அவனது அக்கா அழைத்தாள். இவன் ஒருமுறை ஏறிட்டு பார்த்து வேண்டாம் என்று மறுத்துவிட்டான். பெற்றவரை நாளை கொல்லப்போகிறோம் என்பதை இவர்கள் எவ்வாறு அவ்வளவு எளிதான ஒரு விஷயமாக மாற்றிவிட்டார்கள் என்று அவனுக்கு அதிர்ச்சியாய் தெரிந்தது. மீண்டும் வாய் திறந்தால் ஏப்பைக்கு சப்பையான ஆலசோனைகளை இந்த தற்குறிகள் நியாயப்படுத்துவார்கள். மூன்று நாட்களுக்கு மேல் ஆபிஸ் லீவ் எடுப்பதும் நான்கு நாட்களுக்கு மேல் பள்ளிக்கு விடுப்பு எடுப்பது அசௌகரியம் என்பதால் ஒருவரின் வாழ்க்கைக்கே முடிவு கட்டுபவர்களை என்னவென்று அழைப்பது எனப்புரியவில்லை. அன்றிரவு பாஷ்யம் அப்பாவுக்கு அருகில் போய் உட்கார்ந்துகொண்டான். வெறுமையான எண்ணங்கள் அவனது மனதை ஆக்கிரமிக்க மனச்சோர்வு கொண்டு அப்பாவின் கட்டிலில் தலைசாய்த்து படுத்துகொண்டான்.

 

எததனை மணிக்கு தூங்கினான் என்று பாஷ்யத்திற்கே தெரியவில்லை. முழித்து பார்த்தபோது அவனது அப்பாவின் கை இவனது கையை இருக்க பற்றியிருந்தது. கையை விடுவிக்க முயற்சிசெய்து தோற்றான். கையை பிடித்தவாறே எழுந்து அப்பாவின் முகத்தை பார்த்தவன் கண் மூடியிருப்பதை கண்டான். இருகரம் பற்றி அவரது தோளை உலுக்கினான். மூக்கின் அருகே கை வைத்து நெஞ்சில் முகம் காத்து கொடுத்து பார்த்தவன் '' வென்று கதறினான்.

 

இவனது அலறலை கேட்டு அக்காதான் முதலில் வந்தாள். அவளுக்கு புரிந்தது. ஒவ்வொருவராக எழுப்பி விவரத்தை சொல்லி அப்பாவின் கட்டிலருகே வந்து உட்கார்ந்துகொண்டனர். இரு அக்காக்கள் ஒப்பாரி வைத்து அழ ஆரம்பித்தனர். வீடு களேபரமாகியது. குழந்தைகள் எல்லோரையும் எழுப்பி மாடி ரூமிற்கு அனுப்பினார். அவைகள் பாதி புரிந்தும் புரியாமலும் ஜன்னல் ரேழிகள் வழி உற்று பார்த்துக்கொண்டிருந்தன.  வீட்டிற்கு அருகிலிருப்பவர்கள் வர ஆரம்பித்தனர். அடுப்பு பற்ற வைத்து காபி போடப்பட்டது. வாசலில் நாற்காலிகள் போடப்பட்டு ஆண்கள் எல்லோரும் கை கட்டி உட்கார்ந்துகொண்டனர். கூட்டம் சேர ஆரம்பித்தது. எல்லோரும் இறந்துபோன அப்பாவை பற்றி பேச ஆரம்பித்திருந்தனர். அவரின் ஞாபகங்கள் ஆசை போடப்பட்டன. சில அசைகள் அவனது அப்பா உயிரோடிருக்கும்போதே நடந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றியது. Be a Witness  என்பது போல எல்லாவற்றையும் சாட்சியாக பார்த்துக்கொண்டிருந்தான்.

 

சடங்குகள் முடிந்து அவரது சடலம் வெளியே எடுத்துவரப்பட்டது. அவனது அண்ணகளுடன் அப்பாவை மீள பயணத்திற்கு வழியனுப்பி வைக்க கிளம்பினான். தார் சாலையில் வெறுங்காலில் கால் சுட்டது. அப்பா அருகில் இருந்தார் நிழலில் நட என்று கூறியிருப்பாரோ என்று அவனுக்கு ஒரு முறை தோன்றியது. இதுபோன்ற பல எண்ணங்கள் வழி நெடுகிலும் கடல் அலை போல் ஓயாமல் எழும்பி வர ஆனால் அவற்றையெல்லாம் சற்றும் பொருட்படுத்தாது அவரது உடலை கிடத்தி சிதைக்கு தீ வைத்து திரும்பி பார்க்காமல் நடந்தனர்.

பம்ப் செட்டில் குளித்து ஈர வெள்ளை வேட்டியை உடலில் போர்த்திக்கொண்டு மெதுவாய் வீடு வந்து சேர்ந்தனர்.

 

வீட்டிற்கு வந்த பாஷ்யம் என்ன நினைத்தானோ தெரியவில்லை. நேராக அவனது மூத்த அக்காவின் அருகில் போய் நின்றான்.

 

'பாத்தியா அக்கா. அப்பாதான் ஜெயிச்சிருக்கார். உங்கள எல்லாம் கொலைகாரனாக்காம அவரே போய் சேந்துட்டாரு. நீ சொன்னது சரி தான். புள்ளைங்க கஷ்டப்படக்கூடாதுனு பெத்தவங்க தான் நினைக்குறாங்க' என்றான்.

 

 

 

செவ்வாய், நவம்பர் 15, 2022

UTP-3

 

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்’...சங்கரா டிவியில் சுப்ரபாதம் சத்தமாக ஒலித்து கொண்டிருந்தது.

 

வாசல் தெளித்த பின், கௌசல்யா புள்ளி வைத்து கோலம் போடத்துவங்கியிருந்தாள். நாற்பதின் முற்பகுதியில் இருப்பதை நரைமுடிகள் வெளிச்சம் போட்டு தெரியப்படுத்திக்கொண்டிருந்தன. காலை ஐந்து முப்பதாகியும் கீழ்வானம் வெளுக்காமல் இருந்தது. கோலத்தின் புள்ளியை வைப்பதில் மும்முரமாயிருந்தவள் அத்தனை அருகில் அரவம் கேட்டு ஒரு நிழல் வந்ததும் திடுக்கிட்டு ஏறிட்டு பார்த்தாள். வாட்சப் பார்வேர்டில் கடந்த ஒரு வருடமாக செயின் பறிக்கும் கும்பலை பற்றி படித்து கலவரமாயிருந்தவள், திருடனாக இருக்குமோ என்று ஒரு கணம் துணுக்குற்றாள். 4.5 கிராம் கொழுப்பு மட்டுமே உள்ள பச்சை கலர் ஆவின் பாலை போட்டு செல்லும் பால்காரர் தான் என்பதை பார்த்ததும் பெருமூச்சு எறிந்தாள். அவளையும் அறியாமல் அனிச்சையாக புடவையின் தலைப்பை கழுத்தில் சுற்றி 'நாராயணா' என்று அவள் வாய் ஒரு முறை முணுமுணுத்திருந்தது.  

 

'கௌசி' என்று உள்ளிருந்து குரல் கேட்டது.

 

கௌசி என்று அவளை உரிமையாக கூப்பிடுவது இருவர் மட்டும் தான். ஒன்று அவளது அப்பா. இன்னொன்று அவளது கணவர். அப்பாவின் கூப்பிடுதல் அவளுக்கு மிகவும் பிடித்தமானது. இன்று பூவுலகில் இல்லை. கணவர் இதேபோல் கூப்பிடுவது அவளுக்கு பிடித்திருந்தாலும் காலப்போக்கில் அவளுக்கு அது அசௌகர்யத்தையும் எரிச்சலையும் அதிகமாக கொடுத்தது. இப்போது வந்திருக்கும் இந்த கௌசி என்ற அழைப்பு பெட் காபிக்காக. வடித்து கொட்டியே அவளது இருபத்தைந்து வருடங்களை தனக்கென்று வாழாமல் இழந்திருந்தாள்.

 

'கௌசி'

 

மீண்டும். அதை அழைப்பா அல்லது அதட்டலா என்று வகைப்படுத்துவது வெகு சிரமம். கௌசல்யா அதை இரண்டாவதாகத்தான் பெரும்பாலும் நினைப்பாள்.

 

"இதோ வரேங்க"

 

இருபத்தைந்தாவது வயதில் இந்த வீட்டிற்கு மாட்டுப்பெண்ணாய் வந்தவள். அப்பாவிற்கு ஸ்திரமான அரசு உத்தியோகம் என்பதனால் சொந்த வீட்டில் வளர்ந்தவள் கௌசல்யா. ஆனால் புகுந்த இடத்தில் அன்றிலிருந்து இன்று வரை வாடகை வீடுதான். மூன்று நான்கு முறை ஜாகை மாற்றியாயிற்று. கொலுவைக்கும் வைபோகம் உண்டு என்பதால் வீடு மாற்றும்போது ஒரு முறை தசாவதாரத்தில் ராமர் வில்லும் இன்னொருமுறை பன்னிராழ்வார்களில் ஆண்டாளின் கொண்டையும் உடைந்து போயிற்று. வீடு மாற்றும்பொழுது அரைக்கால் டவுசர் அணிந்த பையன் சரியாக கைமாற்றி விடாமல் பெட்டி கீழே விழ, ஆனால் இரண்டிற்குமே இவளின் ராசிதான் என்று மாமியார் இடித்துரைக்க இவளுக்கு பற்றிக்கொண்டு வரும். மனக்குமுறலோடு நிறுத்திக்கொள்வாள். அதற்கு பிறகு உடைந்த பொம்மைகளையும் இவளே கோபத்தில் தூக்கி எரிந்து உடைத்த கல்யாண செட் மேளக்காரர் பொம்மையையும் அருகில் இருந்த கடையில் ஐந்து ரூபாய் பெவி குவிக் வாங்கி ஒட்டிவிட்டாள். இல்லையென்றால் மாமியாரின் அனத்தல் அதிகமாகியிருக்கும்.

 

பெண் பார்க்கும் பொழுது மாப்பிள்ளை தற்காலிக பணி தான் என்றாலும் ஆறே மாதத்தில் நிரந்தரப்பணி அமர்த்தப்படுவார் என்றுதான் வாக்கு கொடுத்திருந்தார்கள்.  அவளது திருமணத்தின் போது நாடு உலகமயமாக்கல் கொள்கையை விரிவுபடுத்த தொடங்கியது. முப்பது ஆண்டுகள் உருண்டோடி அறிவியலில் அசுர வளர்ச்சி பெற்று ஒரு கொடிய பெரும் நோய் தொற்றை  மக்கள் கனகனவென்ற ஓலியை எழுப்பி விரட்டி கொண்டிருந்த ஆண்டு வரையிலும் ராமநாதனுக்கு வேலை நிரந்தரமாக்கப்படவில்லை. அதே ஈ.பி. ஆபிசில் குமாஸ்தா போல் இன்னவென்ற தெரியாத ஒரு வேலைக்கு சைக்கிளில் போய்க்கொண்டும் வந்துகொண்டும் இருந்தார்.

 

அதேநேரம் கணவர் ஆஹா ஓஹோவென ஹீரோ போல அமையவேண்டும் என்று கௌசல்யா என்றுமே விரும்பியதில்லை. அதனால் வத்தல் தொத்தலாக பெண் பார்க்க வந்திருந்த ராமநாதனை பார்த்தும் அவள் மறுக்கவுமில்லை. அவள் விரும்பியது ஓரளவு நடுவாந்திரமான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதையே. ஆனால் சில நாட்களில் தினப்படிக்கே மாறடிக்க வேண்டிய அளவுக்கு ராமநாதனின் தற்காலிக வருமானம் இருந்தது. சில முறை அடுப்பையும் மாவையும் தூக்கிக்கொண்டு வாராந்திர சந்தையில் பருப்பு போலி போன்ற வஸ்துக்களை வேர்க்க விறுவிறுக்க விற்றிருக்கிறாள். அவளை கன்னிகாதானம் செய்த கையோடு அவளது அப்பா இறந்துவிட்டார். உள்ளங்கையில் வைத்து கௌசல்யாவை  தாங்கினவர். தற்போதைய நிலையை தெரிந்திருந்தால் துடித்திருப்பார். ஒரு வகையில் அவர் இது போன்ற அசௌகர்யங்களை காணாது இறந்தது இவளுக்கு சந்தோசமே. இவளது தம்பி கௌதம் கூட அவருக்கு ரெண்டாம் பக்ஷம் தான். இவளிடமே பாசம் அதிகமாக வைத்திருந்தார். இளம் வயதிலேயே தாயை பறிகொடுத்து நின்ற இருவருக்கும் எல்லாமுமாக இருந்தவர் அப்பாதான். கல்யாணம் முடிந்தவுடன் தன் கடமை முடிந்தது என்றெண்ணி கண்ணயர்ந்துவிட்டார் போலும்.

 

வத்தல் தொத்தல் என்றவுடன் ராமநாதனை இளக்காரமாக எண்ணிவிட முடியாது. பேச்சு கூட கணக்காகத்தான் இருக்கும். ஒரு அடி எடுத்து வைத்தாரென்றால் அதில் அவருக்கு லாபம் இருக்கிறது என்று அர்த்தம். அவரிடம் உள்ள ஒரே குறை அவரது மூளை  அளவுக்கு அவரது உடல் வேலை செய்யாது. முக்கால் சோம்பேறி என்று கூறினால் முழுமையாகத்தகும். குழந்தை பாக்கியம் கிடையாது என்பதால் குடித்தனத்தில் அவர் மனம் ஒட்டவில்லை. குடி கிடையாது என்றாலும் சூதாட்ட பழக்கம் எப்படியோ தொற்றிக்கொண்டது. கௌசல்யா பயந்த சுபாவமாதலால் அவளை உருட்டி மிரட்டியே நகை நட்டெல்லாம் பறித்து பணயம் வைத்து முழுதையும் அழித்திருந்தார். தற்போதைய ஒரே குறி கௌசல்யாவின் பூட்டி கிடைக்கும் பூர்வீக வீட்டை விற்பது. இவரது குரலுக்கு அடிபணியும் பேதையான கௌசல்யாவோ அதற்கும் சம்மதித்திருந்தாள். என்னதான் வளர்ந்து ஓடியாடிய வீடென்றாலும், அப்பாவின் ஞாபகம் போன்ற சென்டிமெண்ட் உணர்ச்சிகள் புதைந்திருந்தாலும் ராமநாதனின் பேச்சுக்கு மறுபேச்சு பேசா மடந்தையாகத்தான் அவள் இருந்தாள். தனக்கு ஒரு குழந்தை பிறந்தால் இதே போல் பயந்த சுபாவம் இல்லாத எதிர்த்து கேள்வி கேட்கும் தைரியம் கொண்ட ஒரு குழந்தையாகத்தான் வளர்க்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தாள். ஆனால் அதற்கான கொடுப்பினை அவளுக்கு இல்லாதிருந்தது.

 

"கௌசி. இன்னும் என்ன பண்ற?"

 

காபியுடன் வந்து அவர் அருகில் நின்றாள்.

 

"இன்னைக்கு உன்னோட தம்பி வெளிநாட்டுலேந்து வரான்ல"

 

ஒரு காரியம் சம்பந்தமாக அவளுடைய தம்பியின் வரவை ராமநாதன் அதிகமாக எதிர்பார்த்து கொண்டிருந்தார்.

 

"அப்டி சொன்னதாத்தான் எனக்கு ஞாபகம் இருக்குங்க"

 

"ஏன் இத கூட ஞாபகம் வச்சுக்க மாட்டியா?"

 

'இல்ல. அவன் போன் பண்ணி எவ்ளோ நாள் ஆயிடுச்சு. மூணு மாசம் இருக்குமா? அதான் தெரியலை'

 

'உன் தம்பி. உன்கூட பேசினான். அதன் நீ என்னாண்ட கேட்ட எப்படிசரி. அவன்தான் நம்மோட கல்யாணத்தப்ப கூட வரலேயே'

 

'ஆமாங்க. அவன் பதினஞ்சு வயசு இருக்கும்போதே வெளிநாடு படிக்க போய்ட்டான். அதுக்கப்புறம் அவன் இங்க வரவே இல்லை. போன்ல மட்டும் தான் பேசிருக்கான்.'

 

'உங்க அப்பா இறந்ததுக்கே அவன் வர்லெயே. அப்டி என்ன படிப்பு படிக்க உன் தம்பி போனானோ?'

 

'அவன் ஸ்கூல்ல ரொம்ப சுட்டிங்க. கணக்குல புலி. சும்மாவே இருக்கமாட்டான். எதையாவது நோண்டிட்டே இருப்பான். நீ இங்க படிக்கிறத விட வெளிநாட்டுல படிச்சா இன்னும் ப்ரைட்டா வருவேன்னு அப்பா சொல்லிட்டே இருப்பாரு. அதே மாதிரி அவன் ஸ்கூல் படிச்சு முடிஞ்ச உடனே வெளிநாட்டுக்கு அனுப்பிட்டார். தூரத்து சொந்தம் ஒருத்தங்க வீட்டுல இருந்து படிச்சான். இப்போ ஏதோ மனுஷங்க சம்பந்தப்பட்ட ஆராய்ச்சில இருக்கறதா அவன் சொன்னான். எனக்கு முழு விவரம் தெரியல.

 

எது எப்டியோ போகட்டும். நம்ம கஷ்டத்துல இருக்கோம்னு நீ எத்தன தடவ அவன்கிட்ட பேசிருப்ப?’

 

நான் அவன் கிட்ட இத பத்தி பேசினது இல்லைங்க. எனக்கு அது தோணலை.

 

ஏதாவது ஒரு தடவையாவது பண உதவி பண்ணிருக்கானா? சரி வீடு. அவன் என்ன காரணத்துக்காக இங்க வரான்னு தெரில. வந்தான்னா நம்ம வேலை கரெக்டா ஆகிடனும். புரியுதா?’

 

எதங்க சொல்றீங்க?’

 

மேடத்துக்கு ஒன்னோன்ன ஞாபகப்படுத்தனுமோ? உங்க அப்பவோட வீட்ட பத்திதான்.

 

புரியுதுங்க. ஆனா அந்த வீட்ட எப்டி நான் கேக்குறது?’

 

அவன் வெளிநாட்டுல செட்டிலாகிட்டான். அவனுக்கு இந்த வீடு தேவையில்லை. உங்க அப்பா தெரிஞ்சோ தெரியாமலோ மெயினான ஒரு இடத்துல வீட கட்டிட்டார். இப்போ அதோட விலை நாமளே நம்ப முடியாத அளவுக்கு படு உச்சத்துல இருக்கு.

 

ஆமாங்க. சரிதான்?’

 

யோசிச்சிபாரேன். அதுல போயி குடித்தனம் பண்றதோட அத வித்தோம்னா ஏழு தலைமுறைக்கு உக்காந்து சாப்பிடலாம். உனக்கு ட்ரீட்மண்ட் எடுக்கலாம். நமக்கு ஒரு வாரிசு கிடைக்கும்.

 

ராமநாதன் எங்கு தட்ட வேண்டுமோ அங்கு தட்டினார்.  இதே போல் மூன்று நான்கு தடவை பேசி அவளது மனதை கலைத்திருந்தார். இன்று அவள் தம்பி வரும் நாள். எழுதி வாங்கி விட்டோமேன்றால் ஆயுசுக்கும் தொந்தரவு கிடையாது. கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து கொள்ளலாம். மூன்று நான்கு இடங்களை வாங்கி ஒரு இடத்தில் வீடை கட்டி மீதி இடங்களை வாடகைக்கு விட்டால் அதில் மாதத்திற்கு ஒரு வரும்படி வியர்வை சிந்தாமல் வந்துகொண்டே இருக்கும். மனக்குதிரை வேகமாக ஓடியது. எப்படியாவது இன்று இந்த காரியத்தை சாதித்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டி கொண்டார்.  அதற்காகவே வாரிசு என்ற அஸ்திரத்தை வீசிக்கொண்டே இருந்தார்.

 

அவன் வந்தா இன்னைக்கு பேசி பாக்குறேன். என்ன சொல்லுவான்னு தெரியல’.

 

அவன் இன்னைக்கு கையெழுத்து போட்டே ஆகணும்

 

எனக்கு என்னமோ நம்பிக்கை இல்லைங்க

 

பாக்கலாம்.

 

மதியம் பன்னிரெண்டானபோது ஒரு மகிழுந்து இவர்களது வீட்டின் முன் நின்றது. கௌசல்யா தான் முதலில் சென்று பார்த்தாள். நாற்பது வயதை ஒட்டிய ஒரு ஆண் கீழே இறங்கினான். அவனோடு ஒரு இளைஞி இறங்கினாள். தோராயமாக இருபதைந்து வயது இருக்கலாம். கௌசல்யாவுக்கு தன் தம்பியின் சாயல் எங்கேனும் தென்படுகிறதா என்று தேடிபார்த்தாள். ஓரளவுக்கு பிடிபட்டது. அந்த சந்தேகத்துக்கு அதிக நேரம் இடம் கொடுக்காமல் வந்து இறங்கியவன் இவளை 'அக்கா' என்று விளித்தான்.

 

'கௌதமா, நீதானா இது. எவ்ளோ நாள் ஆச்சு டா. இந்த அக்காவ ஒருதடவ கூட வந்து பாக்கலையே நீ. எப்டி இருக்க? ஒழுங்கா சாப்பிடுறியா? ஏன் எனக்கு போனே பண்ணலை?. இது யாரு?'. வாசலில் நின்று கொண்டே அடுக்கடுக்காக கேள்வியால் தூளைத்தாள்.

 

அருகில் இருந்தவளை வேனசா என்றும் ஒரு அறிவியல் மாநாடு சம்பந்தமாக தனது செக்ரட்டரியாக அழைத்து வந்திருக்கிறான் என்று அறிமுகம் செய்துவிட்டு, அக்கா, உள்ள போயி பேசலாமா?' என்றான்.

 

'சாரிடா. வா வா உள்ள போலாம். என்னங்க. கொஞ்சம் வெளில வாங்களேன்'. அவனை உள்ளே கை பிடித்து அழைத்து கொண்டே ராமனாதனை அறைகூவலிட்டு வெளியே அழைத்தாள். எதிர்த்த மற்றும் அருகிலிருக்கும் வீடுகளிலிருந்து தலைகள் எட்டி பார்த்தன.

 

ராமநாதன் வெளியே வந்து கௌதமனை கட்டி அணைத்து கொண்டார். பின்னே பல கோடி சொத்துக்களுக்கு இன்று அவனிடம் கையெழுத்து வாங்க வேண்டாமா? குழந்தையின் குதூகலத்தை முகத்தில் காட்டிக்கொண்டு அவனை உபசரித்தார்.

 

அறையில் அமர்ந்து தண்ணீர் கொடுத்து ஆசுவாசபடுத்திய பிறகு,

 

'மச்சான். நீங்க எங்களோட கல்யாணத்துக்கும் வரலை. ஒரு போனும் இதுவரைக்கு பண்ணலை. நல்லருக்கீங்களா? என்ன பண்றீங்க? உங்க வேலை முடிஞ்சிடுச்சா?'

 

'மாமா. நான் ஜெர்மனில இருக்கேன். மனோதத்துவ சம்பந்தப்பட்ட ஒரு ஆராய்ச்சில ஒரு முக்கியமான கண்டுபிடிப்பு முயற்சில இருந்தேன். இப்போ அதுல வெற்றி பெற்றுட்டென்னு நினைக்கிறேன். இத அடுத்த மாதம் இங்க நடக்கப்போற உலக அறிவியல் மாநாட்டுல அறிமுகம் செய்றதுதான் என்னோட பிளான். என்னோட வேலை திருப்திகரமா முடிஞ்சதுனால அக்காவையும் நான் வளர்ந்த் வீட்டையும் ஒரு முறை பாத்துட்டு போலாம்னு வந்தேன். இவ்ளோ நாள் ஆராய்ச்சில மூழ்கி உங்க யார்க்கிட்டையும் பேசமா இருந்ததுக்கு நீங்க எல்லாரும் என்ன மன்னிச்சிக்கோங்க'. என்று மெலிதான புன்சிரிப்புடன் கைகூப்பினான். 

 

ராமநாதன் பதறிப்போய் அவை கைய்யை பிடித்துக்கொண்டார்.

 

'இதுல என்னப்பா இருக்கு. பிடிச்சத பண்ணிருக்க. அதுவும் கண்ணும் கருத்துமா இருந்துருக்க. இதுக்கு எதுக்கு மன்னிப்பு அது இதுனு பெரிய வார்த்தை சொல்லிட்டு'

 

'வேலை அது மாதிரி மாமா. எந்த வித கவனச்சிதரலும் இல்லாம இருந்தாதான் இந்த மாதிரியான ஆராய்ச்சிய வெற்றிகரமா பூர்த்தி பண்ண முடியும்'

 

இது என்னது கௌதம். தலைல மாட்டிருக்குற?’

 

கௌசல்யாவும் அப்போதுதான் கவனித்தாள். ஹெட்போன் போல இருந்தது. புது மாடலாக இருக்கும் என்று நினைத்து கொண்டாள்.

 

அது ஒரு டிவைஸ் மாமா. பயோ நியூரோ டிரான்ஸ்மிட்டர் சென்சரி ரெககனிஷன் டிவைஸ். என்னோட ஆராய்ச்சில ஒரு பகுதி.  நான் உங்களுக்கு அப்புறம் விளக்கமா சொல்றேன்’.

 

'அட. விடுப்பா. அதெல்லாம் நல்லபடியா முடிஞ்சதுல. அதுவே போதும். நீ எங்கள பாக்க வந்ததே ரொம்ப சந்தோஷம்'

 

'மாமா. உங்க கல்யாணத்துக்கு வர முடியல. அப்போ கொடுக்க வேண்டிய கிஃப்ட். இப்போ கொடுக்குறேன். வாங்கிக்கோங்க'

 

ராமாநாதனுக்கு வாயெல்லாம் பல்லாக மாறியது. உடனே வாங்கிக்கொண்டார். ஆனால் தான் நினைத்ததை முடித்தாக வேண்டும் என்பதில் குறியாக இருந்தார்.

 

'மச்சான். இத நான் இப்ப சொல்லிய ஆக வேண்டிய கட்டாயத்துல இருக்கேன். தப்பா எடுத்துக்காத' என்று பீடிகையை ஆரம்பித்தார்.

 

'அட. சொல்லுங்க மாமா. நீங்க தான் இப்போ பெரிய வார்தையெல்லாம் பேசுறீங்க'

 

'அது ஒண்ணும் இல்ல கௌதம். உங்க அக்கவா கல்யாணம் பண்ண டைம்ல நான் ஒரு வேலைக்கு போய்ட்டு இருந்தேன். நம்ம ஈ.பி ஆஃபிஸ்ல தான். அது டெம்பரரி வேலை. அது பெர்மனண்ட் ஆக்குறதுக்கு ஒரு அமெளண்ட் கேட்டாங்க. உங்க அக்கா நகைய எல்லாம் ரெடி பண்ணி கொடுத்தேன். ஆனா ஏமாதிட்டாங்க. திரும்ப பணம் கேட்டேன். கிடைக்கல. அதுபோக அம்மாவுக்கு மருத்துவச்செலவு அது இதுனு ரொம்ப கஷ்டத்துல இருக்கோம். உங்க அக்காகிட்ட கேக்க சொன்னேன். தம்பிட்ட எப்டினு அவளும் கேக்கல போல'

 

'அய்யோ. நீங்க எதுவும் கேக்கவேணாம். நானே பணம் கொடுக்றேன். இந்த கண்டுபிடிப்பு அடுத்த வருஷம் டிக்ளர் பண்ணிடோம்னா எனக்கு ஓரளவு பண தேறிடும். உங்களுக்கும் மாசாமாசம் நான் பணம் அனுப்பறேன் மாமா. நீங்க கவலைப்படாதீங்க.

 

ராமநாதனுக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. என்ன இவன் உடனே பணம் தருகிறேன் என்று சொல்லுகிறான் என்று யோசித்தார். மீண்டும் வம்படியாக,

 

'கௌதம். நான் உன்கிட்ட பணம் கொடுக்கலாமே தவிர, நீ எனக்கு பணம் கொடுக்கிறது அவ்ளோ நல்லாருக்காது. அதனால நான் என்ன சொல்ல வரேன்னா, உங்க அக்காவுக்கு உனக்கும் பாத்தியப்பட்ட ஒரு வீடு இருக்கு. அது நல்ல விலைக்கு வித்திட்டா ஒரு அமௌன்ட் கிடைக்கும். நீயும் ஆராய்ச்சிக்கு யூஸ் பண்ணிக்கலாம்ல.'

 

'மாமா. உங்களுக்கே தெரியும் அது நாங்க வளர்ந்த வீடு. இவ்ளோ நாள் நான் வெளிநாட்டுல இருந்துட்டு இப்போதான் இங்க வந்துருக்கேன். எதுக்காகன்னா, எங்க அப்பா இருந்த வீட்டுல எனக்கு இருக்கணும்னு ரொம்ப ஆசை. அதுவும் வெளிநாட்டுல நான் தனியா இருந்தப்போ இத ரொம்ப மிஸ் பண்ணேன். அதப்போய் விக்கணும்னு சொன்னா எப்படி மாமா. நீங்க என்கிட்டே வேற எதுவேனா கேளுங்க. அத மட்டும் வேண்டாம்'.

 

'இல்ல. கௌதம். நீ ஒருதடவை நான் என்ன சொல்றேன்னு...'

 

இடைமறித்த கௌதம் 'இது பத்தி பேச வேண்டாம் மாமா. இந்த முடிவுல வேற எந்த மாற்றமும் இல்லை. மன்னிச்சிக்கோங்க'

 

வேனசாவை அருகில் அழைத்து ஒரு செக்கை கிழித்து ராமநாதனிடம் கொடுத்தான். ராமநாதன் அதை வாங்கிக்கொள்ள தயங்கினார். அவர் கையில் அதை திணித்தான்.

 

'மாமா, என்னால முடிஞ்சது. இந்த அறிவியல் மாநாட்டுக்கு அப்புறம் எனக்கு நிறைய ஆஃபர்ஸ் வரும். ஒரு கம்பெனி கூட தொடங்குரா ஐடியால இருக்கேன். நீங்க என்னோட கம்பெனில ஒரு நல்ல போஸ்ட்ல கூட வேலை பாக்கலாம்'

 

ராமநாதன் செக்கை பார்த்தார். மதிப்பை பார்த்ததும் சுருக்கென்றிருந்தது. முகம் மாறுவதற்கு முன்,

 

'சரி. கௌதம். உன்ன நான் கம்பெல் பண்ணல. நாம் யோசிப்போம். ரெப்பிரேஷ் பண்ணிட்டு வா. சாப்டுடலாம்.

 

அவன் அரைக்குள்ளே செல்லவும் ராமநாதன் சமயலறைக்குள் சென்றார்.

 

ராமநாதனுக்கு கோவம் உச்சிக்கேறியது.

 

அவன்கிட்ட நான் என்ன கைகட்டி நிக்கனுமா? ஜென்மத்திலேயும் நடக்காது. இதுக்கு ஒரே வழி தான்'

 

ராமநாதன் சொல்லசொல்ல அதிர்ச்சியாக இருந்தது கௌசல்யாவுக்கு.

 

தப்புங்க' என்றாள்.

 

'கௌசல்யா. நீ இப்டி சொல்லுவன்னு எனக்கு தெரியும். ஆனா யோசிச்சுப்பாரு. இந்த செண்டிமெண்ட்லாம் வேலைக்கு ஆகுமா சொல்லு. எப்போவோ செத்த அப்பா ஞாபகமா அந்த வீட்டை வச்சிக்கணும்னா இது என்ன நியாயம். உங்க அப்பாவே இப்போ இருந்திருந்தா நீ கஷ்டப்படறத பாத்திட்டு இருப்பாரா சொல்லு. அவன் வெளிநாட்டுக்கு போய் எவ்ளோ நாள் ஆச்சு. உங்க அப்பா இருந்தப்ப கூட அவன் வரல. அப்போ வராதவனுக்கு இப்போ மட்டும் என்ன பாசம். அவன் எதோ கண்டுபிடிச்சிட்டான். செட்டில் ஆயிட்டான். அவனுக்கு அந்த வீடு தேவையே இல்ல. எல்லாத்துக்கும் மேல இந்த ஊரே உன்ன மலடி மலடினு எத்தனை வருஷமா சொல்லிற்றுக்கு. அவங்களுக்கு இல்லனவாது நமக்காக ஒரு குழந்தை வேண்டாமா. அந்த வைத்திய செலவுக்கு நம்மால இப்போ பணம் கொடுக்க முடியும். அப்படியே ரெடி பண்ணாலும் நம்மளோட வயசு ஒத்துழைக்குமா சொல்லு?'

 

ராமநாதனுக்கு அவ்வளவு கோர்வையாக எப்படி வந்தது என்றே தெரியவில்லை. பேசினால் தான் முடியும். இந்த உலகமே பேச்சை முன்னிறுத்திதான் இயங்குகிறது. இவளையும் மசிய வைத்துவிடலாம் என்று ஒரு குருட்டு தைரியத்தில் கௌசல்யாவிடம் மூளைச்சலவை செய்துகொண்டிருந்தார். கௌசல்யா கூட எதை சொல்லிருந்தாலும் ஒத்துக்கொண்டிருக்கமாட்டாள். ஆனால் தாய்மை என்று ஆண்டாண்டு காலம் இந்த உலகம் பெண்ணை புனிதப்படுத்திவைத்திருந்த ஆயுதம் அவளை பிசைந்தது.

 

இரண்டு நிமிடங்களுக்கு பிறகு ராமநாதன் அறைக்குள் வந்தார். அறையிலிருந்து குளித்துவிட்டு வெளியே வந்த கௌதமன் அவர் அருகில் வந்து உட்கார்ந்தான்.

 

'மாமா, வீடு ரொம்ப சின்னதா இருக்கு. இதுல எப்பிடி நீங்க தாக்குபிடிக்கிறீங்க?' என்றான்.

 

அதிருப்தியில் பதிலேதும் பேசாத ராமநாதன், 'வா கவுதம். சாப்பிடலாம்' என்று அழைத்தார். 

 

வெகு நாட்களுக்கு பிறகு வீட்டு சாப்பாடு என்பது கௌதமனுக்கு உவகையளித்தது. கௌசல்யா பரிமாற இருவரு சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். விருந்து அன்று தடபுடலாக இருந்தது. கத்திரிக்காய் மாங்காய் சாம்பார், வெண்டைக்காய் பொரியல், வேப்பம்பூ ரசம் இன்னும் இத்யாதிகள். கௌதம் ரசித்து சாப்பிட்டு கொண்டிருந்தான். வேனசா தன்னுடன் கொண்டுவைத்திருந்த சாண்டவிச்சை சாப்பிட ஆரம்பித்தாள்.

 

'இந்த பொண்ணு யாரு கௌதம்?' ராமநாதன் விசாரித்தார்.

 

'இவளோட பேரு வேனசா. இந்த அறிவியல் மாநாட்டுல என்னுடைய கண்டுபிடிப்ப சமர்பிக்கறதுக்கு கொஞ்சம் ஹெல்ப் தேவை. அதனால அங்கேந்து கூட்டு வந்துருக்கேன். என்னோட பிராஜக்ட்ல வேலை பார்த்தா. எனக்கு ஒரு நல்ல நண்பியும் கூட. வேற எதுவும் நீங்க சந்தகேபட்ற மாதிரி இல்லை'.

 

ராமநாதன் தயிரை வழித்து முழங்கை வரைக்கும் நக்கிக்கொண்டிருந்தாலும் மனது ஆறவில்லை. இன்றைய வேலை முடியுமா இல்லையா என்பது அவருக்கு குழப்பமாக இருந்தது.  ஒரு முறை கௌதமை பார்த்தார். இருவரும் சாப்பிட்டு முடித்ததும் கௌசல்யாவிடம் கேசரி எடுத்துவருமாறு ராமநாதன் கூற கௌசல்யா உள்ளே சென்று எடுத்து வந்தாள்.

 

ஏதோ யோசித்தவனாய் கௌதம், இல்லை இப்போ நேரமாய்டுச்சு. அக்கா நான் கிளம்பறேன். அந்த கான்பரன்ஸ்க்கு எல்லாத்தையும் ரெடி பண்ணணும், என் லைஃப் முழுக்க அதுக்காகத்தான் ஸ்பென்ட் பண்ணிருக்கேன். மாமா. கிளம்பறேன்' என்று பரபரத்தான்.

 

கௌதம் நேரமில்லாதலால் பேக் பண்ணி தருகிறேன் என்று கௌசல்யா சொல்ல, கௌதம் சரி என்று மைய்யமாக தலையாட்டினான்.

 

கௌதம், 'அக்கா. உங்கள இந்த நிலைமைல நான் பாப்பேன்னு நினைக்கல. ஆனா.உங்களுக்கு சீக்கிரமாவே வழி பிறக்கும். உனக்கு ஒரு குழந்தை புறக்கட்டும்ன்னு அப்பாவை வேண்டிக்கிறேன்'

 

கௌசல்யாவுக்கு சற்று அழுகை வந்தது. முகத்தில் காட்டிக்கொள்ளவில்லை. பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியே வந்தான் கௌதமன். கூடவே வேனசாவும். காரில் கிளம்பி இருவரும் கையசைக்க கார் சீறிப்பாய்ந்து.

 

முப்பது நிமிடங்களுக்கு மேலாக அமைதியாக வந்த கௌதம் ஏதோ யோசித்தவனாய் சாலையோரத்தில் இருந்த ஒரு ஆலமரத்தின் அடியில் காரை நிப்பாட்டினான். கீழே இறங்கி வெகு நேரம் யோசித்தவன்,

 

'வேனஸா நான் ஒரு பெரிய தப்பு பண்ணிட்டேன் ' என்றான்

 

'என்ன கௌதம்?' என்று புரியாமல் விழித்தாள்.

 

.இந்த ஆராய்ச்சியை கையில எடுத்திருக்க கூடாது.'

 

'நீ என்ன சொல்றேன்னு புரியல கௌதம். முதல்ல நீங்க என்ன ஆராய்ச்சி பண்றீங்கன்னு எனக்கு தெரியாது. அது ரொம்ப சீக்ரட்ன்னு சொல்லிருக்கீங்க. இன்னைக்கு ஈவினிங் தான் அதை பத்தி எனக்கு விளக்கப்போறதா சொன்னீங்க'

 

'ஆமா வேனஸா. பட் இந்த ஆராய்ச்சிய நான் யாருக்கும் சமர்ப்பிக்க போறதில்லை. என்னோடயே இது முடிஞ்சு போகட்டும் '

 

'பட். ஏன் கௌதம்?'

 

'நான் ரொம்ப சின்ன வயசிலேயே வீட்டை விட்டு கிளம்பிட்டேன் தான். என்னோட குறிக்கோள் என்ன இங்க வர விடாம தடுத்திடுச்சி. என்னோட வேலையை நான் எப்ப முடிச்சேனோ அப்போ எனக்கு ஒரு திருப்தி வந்துச்சு. எனக்குன்னு இருக்கிறது என்னோட அக்கா மட்டும் தான். நான் அவகிட்ட சொல்லலாம்னுதான் வந்தேன். ஆனா அவங்களோட பார்வை மாறிடுச்சு.'

 

'என்ன கௌதம் சொல்ற. அவங்க உன்ன அப்பிடி கவனிச்சிட்டாங்க'

 

'அதுதான் தப்பு வேனஸா. நீ என் கூட தான் உக்காந்திருந்தேனாலும் உன் மனசு முழுக்க ஊர்ல இருக்க ராபர்ட் பத்திதான் இருந்துச்சு. ரிட்டர்ன் போன உடனே கல்யாணம் பண்ணிக்கிறது எப்படினு யோசிச்சிட்ருந்த'.

 

'எக்ஸ்சாட்லி கௌதம். நான் இத உங்க கிட்ட எப்பவுமே சொன்னது இல்லையே. உங்களுக்கு எப்படி தெரியும்? இன்பாக்ட் ராபர்ட்ட கிட்ட கூட நான் அத சொன்னது இல்லையே. இனிமேல்தான் அவன்ட்ட இதை பத்தி பேசணும்.'

 

'அது தான் என்னோட ஆராய்ச்சி. அடுத்தவங்க மனசுல நினைக்கிறதே கண்டுபிடிக்கிறது. இந்த காதுல மாட்டிருக்கனே. ப்ளூடூத் மாதிரி. நியூரோ சிக்னல் டிரான்ஸ்மிட்டர் டிவைஸ். அதோட வேலை இதுதான். சுத்தி இருக்றவங்களோட பிரைன் சிக்னல்ஸ உள்ளே இழுத்து மனுஷங்க வாரியா அவங்களோட எண்ணங்களை குளறுபடியில்லாம எனக்கு தெரியப்படுத்தும். இருபது வருஷ உழைப்பு. சக்ஸஸ் ஆயிடுச்சு. பட் இத ஏன் கண்டுபிடிச்சோம்னு இப்போ ரொம்பவே வருத்தப்படறேன்'

 

'வாவ். பிராமாதமா வேலை செய்யுது போல. பட் ஏன் கௌதம். ரொம்ப நல்ல கண்டுபிடிப்பு. நீங்க ஏன் அப்டி சொல்றீங்க?'

 

'எங்க அக்காவும் மாமாவும் என்ன நல்லா உபசரிக்கிறதா நினைச்ச. ஆனா. அப்படி இல்ல. அவங்க கவனம் முழுசா என்கிட்டே இருந்த பூர்விக வீட்டை எப்பிடி எழுதி வாங்கணும்னு தான் இருந்துச்சு. அதுமட்டும் இல்ல. நான் எதுவும் சம்மதிக்கலைனா என்னயவே காலி பண்ணிடலாம்னு முடிவு பண்ணிட்டாங்க.'

 

'ஒ. மை காட்' வேனஸா அதிர்ந்தாள்

 

'அதனாலதான் சொல்றேன். நான் பெரிய தப்பு பண்ணிட்டேன். நமக்கு சம்பந்தம் இல்லாதவங்க நம்மள தப்பா நினைக்கிறது நமக்கு தெரிஞ்சா கூட பரவாயில்லை. ஆனா நம்ம ரத்த சொந்தமே நம்மள எப்படி உண்மையா பாக்குறாங்கனு தெரிஞ்சிக்குறது ரொம்ப கஷ்டமா இருக்கு. நரக வேதனை. ‘I can’t see you naked’ அப்டிங்க்றதோட உண்மையான அர்த்தம் இதுதான். அகத்தோட அழகு வெளில தெரிஞ்சா யாருமே நிம்மதியா இருக்க முடியாது. இங்கு உறவுங்கறதே இருக்காது.   அதுமட்டுமில்ல இத பல ஆபத்துகளுக்கு வழி வகுக்கும். உலகத்தோடு சம நிலையே கலைஞ்சி போய்டலாம். போதும் அதனால இந்த ப்ராஜக்ட் என்னோட மண்ணுக்குள்ளே போகட்டும்'

என்றவாறே தன் கம்ப்யூட்டரை திறந்து வேனஸாவின் கண் முன்னே தன்னுடைய ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட டாகுமெண்ட்ஸ் எல்லாவற்றையும் அழித்தான். என்ன செய்வதென்று தெரியாமல் வேனஸா முழித்துக்கொண்டிருந்தாள். காரின் பின் கதவை திறந்த கௌதம் ராமநாதன் கொடுத்த டிபன் பாக்சிலிருந்த கேசரியை மெதுவாக ருசித்து சாப்பிட்டு முடித்தான்.

 

அவளிடம் காரை ஒப்படைத்து பின் சீட்டில் படுத்துக்கொண்ட கௌதமுக்கு மட்டுமே தெரியும் அந்த கேசரியில் அவளது அக்கா விஷம் கலந்திருக்கிறாளென்று.

 

'Happy Journey' என்று கௌசல்யாவிடம் இருந்து மெசேஜ் வந்திருந்ததை பார்த்தவாறே கண்களை மூடிக்கொண்டான்.