புதன், பிப்ரவரி 28, 2024

மஞ்சுமல் பாய்ஸ் 2024


2006 உண்மை சம்பவத்தின் ரீகிரியேஷன். சுற்றுலாவுக்காக கொடைக்கானல் செல்லும் நண்பர்கள் குணா குகையில் ஒரு விபத்தில் சிக்கிக்கொள்கிறார்கள். அங்கிருந்து தப்பித்தார்களா இல்லையா என்பதை பதைபதைக்கும் ஒரு த்ரில்லர் அனுபவத்தில் கொடுத்திருக்கிறது இந்த மஞ்சுமல் பாய்ஸ்.  



விக் எல்லாம் வைத்துக்கொள்ளாமல் எவ்வளவு கேஸூலாக படத்தில் நடிக்கிறார் இந்த சவுபின் சாஹிர். இவரது அண்மை வரவான அயல்வாசி, ரோமாஞ்சம், இல வீழா பூஞ்சிரா போன்றவை கவனிக்கத் தக்கவை. திருமண வீட்டில் ஒரு நடன நிகழ்ச்சியுடன் படம் ஆரம்பிக்கிறது. குடித்து விட்டு முழு வைபில் ஆட்டம் போடும் அந்த ஒன்பது பேரும், கொடைக்கானல் குணா குகையில் சிக்கிக்கொள்வது வரை அதே மோடில் இருக்கிறார்கள்.  

ஒன்பது பேரில் ஒரு நண்பன் மாட்டிக்கொள்ள அங்கிருந்த நண்பர்களுக்கு மட்டும் அல்ல நமக்கும் பதைபதைப்பு தொற்றிக்கொள்கிறது. ஜார்ஜ் மரியான் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் தம்தம் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.  

இரண்டே இரண்டு நெருடல்கள். அப்படி ஒரு நிலைமையிலும் சரக்கு வாங்க நிர்பந்திக்கும் போலீஸ் மற்றும் அந்த விபத்திலிருந்து ஒரு எலும்பு முறிவு கூட இல்லது நடந்து வருமாறு அமைந்த இரண்டு காட்சிகள் மட்டும் திருஷ்டி. 

நண்பனை விட்டு அகலாத அந்த ஒரு நட்பு, அப்படி ஒரு இக்கட்டில் மாட்டிக்கொண்டாலும் ஒருவர் மாற்றி ஒருவர் மீது பழி போடாத பக்குவம், நட்பிற்கு முன் உயிரை துச்சமென மதித்தது என கற்றுக்கொள்ள இந்த பாய்ஸ் அதிகம் வைத்திருக்கிறார்கள். டக் ஆப் வார் எதிர்பாராத விதமாக கனெக்ட் செய்யப்பட்டிருப்பது அருமை.   

ஒரு விஷயம். பழனி அடிவாரத்தில் நின்று கொண்டு கோவிலுக்கு போகலாமா என்று நண்பன் கேட்க சுபாஷ் மறுக்கிறார். இறுதியிலும் ஓம் முருகா ஷாட் காண்பிக்கப்படுகிறது. குறியீடோ?? 

தியேட்டரில் இது வரை கூஸ்பம்ப்ஸ் உணர்ந்தது இல்லை. இறுதியில் 'மனிதன் உணர்ந்து கொள்ள' என்று ஆரம்பிக்கும் பொழுது தியேட்டரே ஆர்ப்பரிக்கிறது. மயிர் கூச்செரிய வைத்து விட்டது. இதுவரை கண்மணி படத்திற்காக ரிசர்வ் செய்யப்பட்டிருந்த காதல் எமோஷன்களை கச்சிதமாக நட்பிற்கு திருத்தி எழுதியிருக்கிறார் இயக்குனர் சிதம்பரம்.  

சேட்டன் நாட்டிலிருந்து மற்றுமொரு தரமான சம்பவம். 

#manjummalboys #soubinshahir

தமிழ் சினிமா மற்றும் எழுத்தாளர்கள்

 


 கதை மற்றும் திரைகதைக்கென்றே தனி ஆசிரியர் இருந்தார்களா அல்லது எப்போதிருந்து என்று தமிழ் சினிமா வரலாற்றைத் துழாவினால் 1916இல் நடராஜ முதலியார் ஆரம்பித்த இந்தியன் பிலிம் கம்பெனியில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட புராணக் கதைகளை நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். அப்பொழுது ரைட்டர் என்று தனியாக தேவைப்படவில்லை. மோஸ்டலி புராணக் கதைகள் தான். கதையை உருவி உருவி ஒரு திரைக்கதை மட்டும் எழுதி விட்டால் ஸ்டார்ட் கேமரா ரோலிங் ஆக்ஷன் தான். கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் இது போல் தான் உருண்டு ஓடிக்கொண்டிருந்தது.  

சுதந்திரத்திற்குப் பிறகு இந்த சினிமா என்கிற களத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டது திராவிடக் கழகம் தான். அண்ணாதுரை மற்றும் கருணாநிதி போன்றோர் தமது சித்தாந்தங்களை பரப்புரையாக்க இந்த களத்தை அருமையாக உபயோகப்படுத்திக் கொண்டார்கள். சிறிது காலத்திற்குப் பிறகு அங்கிருந்து அவர்களின் ஜாகை அரசியலுக்கு மாறிய பிறகு ஸ்ரீதர் போன்றோர் தமது கதை சொல்லும் திறமையை வெளிக்காட்டிக்கொள்ள சினிமாவை பயன்படுத்திக் கொண்டனர்.  

அதன் பிறகு சிவாஜி மற்றும் எம்ஜிஆர் தமிழ் சினிமாவில் கோலோச்ச, கதை எழுதும்பொழுது இவர்களை மைய்யப்படுத்தியே எழுத வேண்டியிருந்தது. ரைட்டரெல்லாம் தேவையில்லை, நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று இயக்குனர்களே புது அவதாரம் எடுத்து விட்டார்கள். ஒரு வழியாக எம்ஜிஆர் அரசியலுக்கு இண்டிகேட்டர் போட்டு வண்டியை திருப்ப, அதுவரை இருந்த ஸ்டிரியோ டைப் கதைகளை கடாசி வீசிவிட்டு மாற்றுக்கதைகளை எடுத்து தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் சென்றனர் நமது இமயமும் சிகரமும். அனந்துவை பாலச்சந்தர் பிடித்துக்கொள்ள பாக்கியராஜை பாரதிராஜா பிடித்துக்கொண்டார்.  

ஜெயகாந்தன் சில கதைகளை படமாக்கி வெற்றியை ருசித்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் இதுவரை கண்டிராத வெற்றியை ருசித்தவர் என்று சுஜாதாவை சொல்லலாம். கமலின் வற்புறுத்தலுக்கு இணங்கி விக்ரமில் வெற்றிக்கொடியை நாட்டியவர் 2கே கிட்ஸின் பேவரைட்டான சிட்டி ரோபா எந்திரன் வரை அசரடித்தார். தற்போது ஜெயமோகன் முயன்றுகொண்டிருக்கிறார்.  

என்ன விஷயம் என்கிறீர்களா?  

வாசகர்களின் மனதை கவர்ந்து அவர்களிடமிருந்து ஒரு நாலு வார்த்தை பாராட்டு பெற்றுவிடுவதென்பது எந்த ஒரு எழுத்தாளருக்கும் இருக்கும் அவாதான். மறுப்பதற்கில்லை. ஆனால் அந்த அவாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்லும் ஒரு மீடியமாக வெள்ளித்திரையைப் பார்க்கிறார்கள். ஆல் ரோட்ஸ் லீட்ஸ் டு ரோம் என்பது போல் அனைத்து எழுத்தாளரும் சொல்லி வைத்தாற் போல் அங்கு தான் போய் முட்டிக்கொள்கிறார்கள். தவறில்லை தான்.  

மலையாள சினிமா போல் இங்கு எழுத்தாளர்களுக்கு வேலையில்லை. லார்ஜர் தென் லைஃப் சைஸ் ஹீரோக்களுக்கும் அவர் தம் ரசிகர்களுக்கு கதை சாரி காட்சிகள் அமைத்துவிட்டால் போதும். வைப் என்கிற ஒற்றைச்சொல் தமிழ் சினிமாவை அதள பாதாளத்திற்குத் தள்ளியுள்ளது. அதனையும் மீறி அங்கொன்றும் இங்கொன்றுமாக மக்கள் முனைந்து படம் எடுக்கிறார்கள். பெர்லினில் பேர் வாங்கிய பிறகு தான் நமக்கும் புரிய வருகிறது இது நல்ல படம் என்று. இந்த சந்தடியில் எழுத்தாளர் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் தனி.  

தற்போதிருக்கும் சூழலில் திரைக்கதை ஆசிரியர் என்று ஒரு தனி இலாகாவே தமிழ் சினிமாவில் இல்லை. அப்படியே ஒருவரை கூப்பிட்டுக் கொண்டாலும் பேசிய சம்பளம் கிடைப்பதில்லை. எனக்குத் தெரிந்த ஒரு எழுத்தாளர், சமீபத்தில் வந்த படத்திற்கு கதை திரைக்கதை அமைத்திருந்தார். படம் ஓரளவு வெற்றியும் பெற்றது. இருந்தும் மனம் குமுறி அழுதார். கொஞ்சம் நேரம் எடுத்து அவரிடம் பேசி விசாரித்தபொழுது தான் தெரிந்தது. அத்தனை அலைச்சல். இருந்தும் காசு கிடைக்கவில்லை. மிஞ்சியது அவமானம் தான்.  

அதற்குத்தான் சொல்ல விழைகிறேன். ஒரு எழுத்தாளனாக தான் அமர்ந்திருக்கும் அரியசானத்தை விடுத்து கற்பூர வாசனை தெரியாத கழுதை போன்ற ஒருவரிடம் போய் முகமன் கூறி வாய்ப்பு கேட்க வேண்டியதன் கைய்யறு நிலை தான் என்ன. ஒரு ஜான் வயிற்றுக்காகவா? எனில் இறுதி வரை நல்ல ஒரு எழுத்தாளனை வறுமையில் தான் வாட வைக்கிறதா இந்த தமிழ் கூறும் நல்லுலகம்

சமீபத்தில் பார்த்த ஒரு சினிமாவில் வந்த காட்சி இந்த மனக்குமுறலை மேலும் அதிகப்படுத்திவிட்டது. பிரபல எழுத்தாளர் அவர். கதை சொல்லி. எத்தனை பேர் நாடிச்சென்றாலும் அரவணைத்துச் செல்லும் ஒரு உள்ளம். பிக் பாசில் கலந்து கொண்டு அங்குள்ள கன்டென்ட் கிறுக்கு அரசியலைத் தாக்குப் பிடிக்க முடியாமல் அவமானப்பட்டு வெளியேறினார். தற்பொழுது பார்த்த சினிமாவில் ஒரு இளைஞனிடம் செவுளில் அரை வாங்கும் காட்சி. இரண்டே இரண்டு காட்சிகள் தான். அப்படியொன்றும் தாக்கம் ஏற்படுத்தாத ஒரு ஸீன் தான். இவர்தான் நடிக்க வேண்டும் என்றில்லை. வயதான யார் நடித்திருந்தாலும் எடுபட்டிருக்கும். இருந்தும் இப்படி நடிக்க வேண்டிய சூழல். ஊரே மதிக்கக் கூடிய எழுத்தாளர். 

ஓவியன் இறக்கும் வரை அவனை வறுமை சூழ்ந்திருக்கும். இறந்த பிறகு பார் போற்றும் புகழடைவான். அந்தச் சாபம் எழுத்தாளனுக்கும் சேர்த்தி தான் போல்.   

#tamilcinema #scriptwriter #writer

சபாநாயகன் 2023


கதிருக்கு அப்புறம் தமிழ் சினிமா காதல் கதை எடுப்பதை மறந்துவிட்டது. அல்லது தற்கால காதலை புரிந்துகொள்ள முடியாமல் திணறுகிறது என்று சொல்லாம். நாம் உருகி உருகி பார்த்த 'நீ வருவாய் என',  'சொல்லாமலே', 'உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்' போன்ற படங்கள் இன்றைய இளைஞர்களிடம் கனெக்ட் ஆகுமா என்றே தெரியவில்லை. ஏன் கனெக்ட் ஆக வேண்டும் என்பதும் மற்றொரு கேள்வி. ஆனாலும் திக்கித்திணறி இங்கொன்றும் அங்கொன்றுமாக வரும் காதல் படங்களிலொன்று தான் சபாநாயகன்.  




படம் முழுக்க அசோக் செல்வன் தான் தெரிகிறார். அருமையான மூன்று லவ் ஸ்டோரிஸ். இறுதியில் உறுத்தாமல் ஒரு ட்விஸ்ட். அவ்வளவுதான் படம். இரண்டு மணி நேரமும் அசோக் ஏதாவது ஒரு பெண்ணிடம் வழிந்து கொண்டே இருக்கிறார். ஆகச்சிறந்த வழியல். செயற்கைத்தனம் இல்லாத ஒரு வழியல். தமிழ் சினிமா சமீப காலங்களில் மறந்திருந்த அந்த வழியல் காட்சிகளுக்கு மீண்டும் உயிரோட்டம் கொடுத்த நாயகன் நம் அசோக் செல்வன் என்றால் மிகையில்லை. மேகா ஆகாஷுடன் சேர்ந்து மூன்று கதாநாயகிகள். ஜாலியான திரைக்கதை. இரைச்சலில்லாத இசைக்கோர்ப்பு. மீண்டும் ஒரு காதல் படம்.  

அழகான ஒரு இல்லை பல லவ் ஸ்டோரீஸ். குடும்பத்துடன் சிரித்து மகிழ்ந்து வீக்கெண்டை கழிப்பதற்கான ஒரு பெர்பெக்ட் சினிமா இந்த சபாநாயகன்.  

Ashok Selvan #sabanayagan #sabanayaganmovie #ashokselvan #cskarthikeyan

புதன், பிப்ரவரி 21, 2024

சில்குரி

 


 

மேற்கு வங்க மாநிலத்தில் இருக்கும் ஒரு மத்திய தர நகரம் தான் இந்த சில்குரி. வட்டம் என்ற கேட்டகிரியில் வருமளவுக்கு படத்தில் போடப்பட்டிருக்கும் ரவுண்டுக்குள் இருப்பது தான் சில்குரி. 



சில்குரியின் விஷேஷம் என்னவெனில், சுற்றுலாத்தலமான டார்ஜிலிங் மற்றும் கேங்டாக் போக வேண்டுமென்றால் அருகில் இருக்கும் ஓரே விமான நிலையம் உள்ள நகரம் இந்த சில்குரி தான். இங்கிருந்து கேங்டாக் நான்கு அல்லது ஐந்து மணி நேரம். சாலை மார்க்கம் தான். டேக்சி தான் பிரதான வருமான இங்குள்ள மக்களுக்கு. போகும் வழியெங்கும் டீஸ்டா என்றொரு நதி அருகிலேயே பயணிப்போம். வாட்டர் ராப்டிங் சமாச்சாரங்கள் இருக்கின்றன. லைப் ஜாக்கெட் கொடுத்தாலும் நமக்கு பேஸ்மன்ட் ஆடுகிறது.  அள்ளி குடிக்கலாம் என்பது போன்ற ஒரு அக்மார்க் தாமிரபரணி டேஸ்ட் இந்த நதிக்குண்டு. கேங்டாக் அடைந்து விட்டால் ட்சோங்கோ லேக், நதுலா பாஸ் எல்லாம் ஒரு மணி நேரப்பயணம். ட்சோங்கோ லேக்கில் யாக் ரைட் உண்டு. நதுலா பாஸ் என்பது சீன எல்லை. எப்பொழுதுமே பனிப்பொழிவு தான். இரவு -15'c வரை கூடச்  செல்லுமாம். எல்லையில் இருக்கும் ஒரு பில்டிங்கை இந்தியாவும் சீனாவும் பொதுவாக பங்கிட்டு காவல் காக்கிறது. மதில்சுவர் தாண்டினால் ஷூட் அட் சைட் ஆர்டர் தான். ஆறுகிலோவுக்கு குறையாமல் ட்ரெஸ் அணிந்து நம்மவர்கள் காவல் புரிகிறார்கள். புத்திசம் தான் மதம். பல மோனஸ்ட்ரிக்கள் இருக்கின்றன. மொட்டை போட்ட புத்த பிக்ஷுக்கள் நமக்கு புரியாத ஒரு பாஷையில் மந்திரம் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.  

அதே போல் சில்குரியில் இருந்து டார்ஜிலிங் மூன்றரை மணி நேரம். போகும் வழியில் நேபால் பார்டரில் ஆதார் கார்ட் காமித்து உள்ளே சென்று வரலாம். வாய்ப்பிருந்தால் எல்லையில் காவல் புரியும் கேரளத்து சேச்சிகள் உடன் சம்சாரிக்கலாம். பசுபதிநகர் என்று அந்த மார்க்கெட்டை அழைக்கிறார்கள். சீன ஐட்டங்கள் அனைத்தும் கம்மி விலையில் கிடைக்கும். அதாவது இந்தியாவில் இம்போர்ட் தடை உள்ளவை இங்கு தாராளம். அங்கிருந்து சற்று தொலைவில் ஒரு சுற்றுலாத்தலமான மிரிக் லேக் இருக்கிறது. அப்படியே டார்ஜிலிங். அங்கிருந்து அதிகாலை சூரிய உதயத்தை இமய மலை பின்னணியில் காணலாம். ரெட் பாண்டா கரடி பிரசித்தம். ஆனால் ஜூ வில் மட்டும் தான் காண முடியும. டென்சிங் அவர்களின் சிலை மற்றும் mountaineering இன்ஸ்டிடியூட் பார்த்துவிட்டு வரலாம்.   

இன்னும் பல சுற்றுலாத் தலங்கள் செல்லுவதற்கு ஏதுவான ஒரு நகரம் தான் இந்த சில்குரி. நகரம் முழுக்க ராணுவ வீரர்கள். கையில் துப்பாக்கியுடன் சுத்திக்கொண்டிருந்தார்கள். ஏதேனும் பிரபலம் வருகிறாரா என்று விசாரித்தால் அப்படி ஒன்று இல்லையாம். அன்றாட காட்சிதான் இது என்று ட்ரைவர் அலுத்துக்கொண்டார். என்ன காரணம் எனக்கேட்டால் சில்குரி என்ற இந்த நகரத்தின் மீது சீனா எந்த நேரமும் போர் தொடுக்க வாய்ப்பிருக்கிறது என்றார். கண்கொத்தி பாம்பாக சீனா இதை கண்காணித்து வருவதன் நோக்கம் இந்த சில்குரியை பிடித்துவிட்டால் கிழக்கில் இருக்கும் அருணாச்சல், மிசோரம், மணிப்பூர்நாகலாந்து, அசாம் என எல்லாமே இந்தியாவிலிருந்து துண்டிக்கப்பட்டு விடும். கணவாய் போல இருக்கும் இந்த சில்குரி தான் கிழக்கில் இருக்கும் அனைத்து மாநிலங்களுக்கும் இணைப்புப்பாலம். இந்தியாவின் ஒரு பக்கத்தை  கைப்பற்ற தான் இந்த முனைப்பு. ராணுவ வீரர்கள் பதட்டமாக இருக்க மற்றொரு பக்கம் பேட்டரியில் இயங்கும் ஷேர் ஆட்டோவும் ஆர்ப்பரிப்புடன் ஓடிக்கொண்டுதான் இருந்தது.

திங்கள், பிப்ரவரி 19, 2024

மதிமாறன் 2023

 

இன்வெஸ்டிகேஷன் ஜானர், த்ரில்லர் ஜானர், பேமிலி டிராமா அல்லது சமூக அக்கறையுள்ள ஒரு படம் அப்டினு இந்த படத்தை எந்த ஜானர்ல பிக்ஸ் பண்றதுன்னே தெரில. ஆனா எல்லா மேல சொன்ன எல்லா ஜானர்லயும் திருப்தி படுத்தியிருக்கு இந்த மதிமாறன்.  




எம்.எஸ்.பாஸ்கருக்கு ரெட்டை பசங்க பொறக்குறாங்க. ஒன்னு இவனா. இன்னொன்னு வெங்கட் செங்குட்டுவன். இவானா நார்மலா வளர செங்குட்டுவன் குள்ளமா வளர்ராரு. அவரை குள்ளன் குள்ளன்னு ஊரே கேலி பண்ணுது. அதை எல்லாத்தையும் அப்பாவோட அன்பு மற்றும் அக்கா  இவனாவோட அன்பால சமாளிச்சு படிச்சு பாஸ் ஆகுறாரு. காலேஜ் போன சமயத்துல அவங்க அக்கா வீட்டை விட்டு ஓடிப்போயிடுது. அந்த துக்கத்துல அப்பா அம்மா ரெண்டு பேரும் இறந்துடறாங்க. சிட்டிக்கு அவங்க அக்காவை தேடி வர்றவரு, எதேச்சையா ஒரு கொலை கேஸ்ல ஈடுபாடு காமிக்கிற மாதிரியான ஒரு சந்தர்ப்ப சூழல். அதையும் தன்னோட அறிவால கண்டுபிடிச்சிறாரு. குள்ளன்னு சொல்லி இவனை ஒதுக்குன போலீசே ஆச்சர்யப்படுது. கடைசியா ஒரு மெசேஜோட படம் முடிது. 

படம் முழுக்க குள்ளமா நடிச்சிருக்குற வெங்கட் தான் முழுக்க முழுக்க வரார். அசத்தலான ஒரு டேன்ஸ் பண்ணிருக்கார். வழக்கம் போல ஒரு சென்டிமென்ட் சீன்ல நம்ம பட்டாபி பிச்சு உதறிடுறார், அதுக்காவே மூணு நிமிஷம் ஸீன் வச்சிருக்காங்க. மாற்றுத் திறனாளிகளுக்கு சப்போர்ட்டா வச்சிருக்கிற பல வசனங்கள் அவங்க பார்வையில நம்மள உலகத்தை கவனிக்க வைக்குது. கேள்வி கேக்குது. உதாரணமா 'ஊக்கப்படுத்துறேங்குற பேர்ல எங்களை எதையாவது சாதிச்சிடுவீங்க அப்டினு நீங்க சொல்றீங்க. ஏன்? நாங்க சாதிச்சா மட்டும் தான் எங்களை சாதரண மனுஷனா கூட ஏத்துக்குவீங்களா?', 'ஊரு உலகம் நம்மள கேலி பண்ணிட்டே தான் இருக்கும் அவங்க வாய் அப்படி. நம்ம நம்மளோட காதை மூடிக்கலாம்ல' போன்ற வசனங்கள்ல மந்த்ரா வீரபாண்டியன் க்ளாப்ஸ் அள்ளிடுறாரு.  நெல்லைக்காரர். Prime & ஆஹா ott.  

சமூக அக்கறையுள்ள ஒரு படம். வாழ்த்துக்கள் சகோதரர் Mantra Veerapandian. 

Ivana Alawi Venkat Senguttuvan  Mantra Veerapandian #Mathimaran #MSBaskar

வியாழன், பிப்ரவரி 15, 2024

2024 லோக்சபா தேர்தல்


இரண்டு கேட்டகிரியில் பிரித்துக் கொள்வோம். ஒன்று மத்தியில். மற்றொன்று தமிழ்நாட்டில்

மத்தியில், இந்த 2024 மட்டுமல்ல, அடுத்த இரண்டு தேர்தலிலும் தேசிய ஜனநாயக கூட்டணியே வெல்லும். அதாவது பா.ஜ.க. தான். உங்களுக்கு பிடிக்கிறதோ இல்லையோ. இதுதான் நிஜம். உண்மை நிலவரம். அந்த அளவுக்கு அடித்தளம் இருக்கிறது. அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் ஒரே கோட்பாடு ஹிந்துத்துவா அரசியல் மட்டுமே. தமிழ்நாட்டை தாண்டிவிட்டாலே எங்கும் மோடி அலை தான். தேர்தலில் நிற்கு, மற்றவர்களை பாகிஸ்தான் உளவாளி என்று சொல்லும் அளவுக்கு வடக்கில் பொது ஜனம் மத்தியில் ஊறி போய் இருக்கிறது. அந்த அளவுக்கு மோடி அலை. என்ன செய்திருக்கிறார், செய்யவில்லை என்ற பஞ்சாயத்துக்குள்ளேயே போக விரும்பவில்லை. தாமரை தான்.




சரி, எவ்வளவு ஜெயிக்கும்.
2014 தேர்தலில் NDA கூட்டணி 336, UPA கூட்டணி 60.
2014 கட்சி வாரியாகப் பார்த்தால் பிஜேபி 282, காங்கிரஸ் 44.
2019 தேர்தலில் NDA கூட்டணி 353, UPA கூட்டணி 93.
2019 கட்சி வாரியாகப் பார்த்தால் பிஜேபி 303, காங்கிரஸ் 52.
இந்த முறை எனது கணிப்பு
2024 தேர்தலில் NDA கூட்டணி 400+, UPA கூட்டணி 50+.
2024 கட்சி வாரியாகப் பார்த்தால் பிஜேபி ~335, காங்கிரஸ் ~45.
தமிழ்நாட்டில், லோக்சபா தேர்தல் வெற்றியை பை எலெக்ஷன் போல் அந்த நேரத்தில் உள்ள ஆளுங்கட்சியின் ஆட்சியே தீர்மானிக்கும். தற்போது தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியாக DMK. அக்ரிமெண்ட் போட்டுக் கொண்டது போல் மாற்றி மாற்றி DMK மற்றும் ADMK தமிழ்நாட்டில் வெற்றிக்கொடி நாட்டிருக்கிறார்கள். அதே போல், மக்கள் தமிழநாட்டில் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள் என்றால் அது லோக்சபா தேர்தல் முடிவில் தெரிந்துவிடும் (2004 மற்றும் 2019 போல்). 2014 தேர்தலில் மோடியா லேடியா என்று சொல்லி அடித்து 37 சீட் வென்ற ஜெவை மறந்துவிட முடியாது.
இந்த முறை 2024 தேர்தலில் வெல்லப்போவது சந்தேகமே இல்லாமல் DMK தான். ஜெவை போன்ற ஸ்திரமான தலைமை இல்லாத ஒரு எதிர்க்கட்சி, DMK வின் வெற்றியை உறுதி செய்யம். அதே போல் இந்த முறை DMK எதிர்கொள்ளப்போகும் பிரதான எதிர்க்கட்சி ADMK இல்லை. பிஜேபியாகத்தான் இருக்கும் என்பது தெரிய வருகிறது. தேசபக்தி, ராமர் கோவில் போன்ற பல யுக்திகள் பிஜேபிக்கு கைகொடுக்கப் போகிறது.
சரி, எவ்வளவு ஜெயிக்கும்.
2014 தேர்தலில் ADMK கூட்டணி 37, NDA கூட்டணி 2, DMK கூட்டணி 0.
2014 கட்சி வாரியாகப் பார்த்தால் ADMK 37, BJP 1, PMK 1.
2019 தேர்தலில் DMK கூட்டணி 38, NDA கூட்டணி 1.
2019 கட்சி வாரியாகப் பார்த்தால் DMK 24, காங்கிரஸ் 8, இதர கட்சிகள் 6, ADMK 1.
இந்த முறை எனது கணிப்பு
2024 தேர்தலில் DMK கூட்டணி 35+, BJP கூட்டணி 4+.
2024 கட்சி வாரியாகப் பார்த்தால் DMK ~26, காங்கிரஸ் ~3, இதர கட்சிகள் 6, ADMK ~1, BJP 3+.
அதாவது, 2014இல் ஒரு சீட் கைப்பற்றிய BJP, இந்த முறை மூன்று சீட்டாவது கைப்பற்றும் என்பது போல் தெரிகிறது. இது அடுத்தடுத்து தேர்தலில் அதிகமாகலாம். லாம் என்ன. அதிகமாகத்தான் போகிறது. காரணம் உங்களுக்கு எனக்குத் தெரிந்த அது ஒன்றே தான்.
யோசித்துப் பாருங்கள்.

நேரு 2023


அரசியல் இல்லை. மலையாள சினிமா. நேரு என்றால் உண்மை என்று அர்த்தம். ஜீத்து ஜோசப் படம். திரிஷ்யம் புகழ் ஜீத்து ஜோசப். தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் பாபநாசமாக வெளியாகியது. இருக்கட்டும்.
ஜீத்து ஜோசப் படத்தின் மேல் வைக்கப்படும் எதிர்பார்ப்பே அந்த கடைசி நேர ட்விஸ்ட் தான். ட்விஸ்ட் எண்டிங் க்ளைமாக்ஸ் சீன்ஸ் மூவியில் பெஸ்ட் என்றால் கெவின் ஸ்பேசியின் 'தி யூசுவல் சஸ்பெக்ட்ஸ்' என்று சொல்வேன். அதற்கு ஈடு கொடுக்கும் வகையில் அருகில் வைத்து பார்ப்பது திரிஷ்யம். ஒவ்வொரு சீனும் த்ரில்லர் என்றால் இறுதி காட்சி அப்படி ஒரு உணர்வை கொடுக்கும். கிட்டத்தட்ட அவரது பெருமபாலான படங்கள் இந்த ரகத்தைச் சேர்ந்தவை தான். ஆனால் ஜீத்துவாலேயே திரிஷ்யத்தின் பின்பு ஏற்பட்ட எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியவில்லை. இதே கண்ணோட்டத்தில் நேருவை அணுகினால் ஏமாற்றமே மிஞ்சும். இதில் அது போன்ற ஒரு சர்ப்ரைஸ் எண்டிங் ஏதும் கிடையாது. ஒரு கோர்ட் ரூம் டிராமா. சொல்லப்போனால் கோர்ட்டில் நடைபெறும் விஷயங்களை சாமானிய மக்களிடம் எடுத்துச் செல்லும் நோக்கில் ஒரு படம் எடுக்க வேண்டும் என்ற ஆவலில் ஜீத்து இயக்கிய படம் தான் இந்த நேரு.



பார்வையற்ற ஒரு இளம்பெண். வீட்டில் தனியாக இருக்கும் நேரத்தில் ஒருவன் அவளிடம் தவறாக நடந்து கொள்கிறான். குற்றம் சாட்டப்பட்டவர் இன்னார் தானென்று முதலிலேயே நமக்கு சொல்லப்பட்டுவிடுகிறது. ஆனால் எந்த ஒரு சாட்சியுமின்றி எவ்வாறு குற்றவாளிக்கு தண்டனை பெற்று கொடுக்கின்றனர் என்பது தான் நேரு. அந்த பார்வையிழந்த பெண்ணுக்காக வாதாடும் வக்கீலாக மோகன்லால். நாட்டின் பெஸ்ட் கிரிமினல் லாயரான தனது குருவை எதிர்த்து போராடும் சிஷ்யன் பாத்திரம். குருவும் நம்மை ஈர்க்கவில்லை. சிஷ்யனும் ஒரே ஸ்செட்யூலில் படம் முடிக்க வேண்டும் என்ற நோக்கில் நேருவுக்காக அதிகம் ப்ரயத்தனப்பட்டது போன்று தெரியவில்லை. குற்றத்தை நிருபிக்க எடுத்துக்கொண்ட சங்கதிகளும் நம்மை ஈர்க்கவில்லை. ப்ரியாமணிக்கு ஒரு ரோல் கொடுத்திருக்கிறார்கள். எதற்கென்றே புரியவில்லை. கோர்ட் ரூமில் குருவும் சிஷ்யனும் மோதிக்கொள்ளும் காட்சிகளில் அனல் பொறி மிஸ்ஸிங். உனக்கு ஒரு சான்ஸ் எனக்கு ஒரு சான்ஸ் என்கிற ரீதியில் வாதம் செய்திருக்கின்றனர்.
ஆனால் கண்ணுக்கு முன்னே அநியாயம் நடந்திருப்பதை அனைவரும் உணரமுடிந்தாலும் சாட்சிகள் இல்லாத காரணத்தால் ஒரு குற்றவாளி எவ்வாறு இந்திய சட்ட நடைமுறையிலிருந்து எளிதாக தப்ப முடிகிறது என்பதும், ஒரு ரேப் விக்டிமை எந்த அளவுக்கு மனதளவில் அட்டாக் செய்து அவரை நீதிமன்றம் பக்கமே திரும்ப முடியாதபடி செய்ய முடியும் என்பதையும், அவற்றையும் தாண்டி தனது மன வலிமையால் மட்டுமே அந்த பார்வையற்ற பெண் குற்றவாளிக்கு தண்டனை வாங்கி கொடுப்பதற்கு உறுதுணையாக நிற்கிறாள் என்பதையும் அழுத்தமாய் பதிந்திருக்கிறார் ஜீத்து.
என்ன இருந்தாலும் கோர்ட் ரூம் ட்ராமாவா, மோகன்லால் சினிமாவை, ஜீத்துவின் சினிமாவா அல்லது சமூக அவலங்களை பறைசாற்றும் ஆவணமா போன்ற கேள்விகளுக்கு நடுவில் சிக்கிக்கொள்கிறது இந்த நேரு.
இவன்,
ஸ்ரீதான்யா ரசிகர் மன்றம்

டெல்லி குளிர்


பழைய பாஸ் அவர். ஒய்வு பெற்றுவிட்டார். அடிக்கடி சொல்வார். 'டெல்லியில எனக்கு போஸ்டிங் போட்டு சாகடிச்சுட்டாங்க. குளிர்ல மூக்குல ரத்தம் வந்துருச்சு' இப்படி அடிக்கடி சொல்லுவார். அப்படி என்ன பொல்லாத குளிர் என்று நினைத்ததுண்டு. தனக்கு வந்தால் தானே தெரியும் என்பது போல் அனுபவித்து புரிந்துகொண்டேன்.



அலுவல் வேலை காரணமாக டெல்லி பயணம் மேற்கொண்டதுண்டு. ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் போய் வந்திருக்கிறேன். ஆனால் பாஸ் சொன்ன டிசம்பரோ அல்லது ஜனவரியிலோ போனது இல்லை.
இந்த முறை அதுவும் நடந்து விட்டது. ஷார்ட் நோட்டீஸில் டெல்லி செல்லுமாறு பணிக்கப்பட, அவ்வளவு உயரமான ஊட்டியிலேயே வெறும் உடம்பில் வாக்கிங் போயிருக்கிறோம், இது என்ன பம்மாத்து என்று செருக்காக சென்ற எனக்கு குளிர் ஒரு காட்டு காட்டிவிட்டது. குறைந்தபட்சம் 6' செல்ஸியஸ். அதிகபட்சம் 13' செல்ஸியஸ். எப்படி இருக்கும் பார்த்து கொள்ளுங்கள். விமானத்தில் இருந்து வெளிவந்த மதியம் மூன்று மணி, அவ்வளவு வெடவெடப்பு. நடுங்கிக்கொண்டே டேக்ஸி புக் செய்து 'பையா கிடுக்கி பந்த் கரோ' என்று கூப்பிக்கொண்டேன். அடுத்த நாள் தான் அலுவலகம் செல்லவேண்டும் என்பதால் நேரே அக்ஷர்தாம் பயணித்தேன். மார்பிளில் செய்யப்பட்ட ஒரு கோவில். உள்ளங்கை உயர சிற்பங்கள், நம் கும்பகோணத்து ஐராவதேஸ்வர் கோவில் சிற்பம் போல். இரு வித்தியாசங்கள். இங்கு கல்லில். அங்கு மார்பிளில். இங்கு கைகளில் செதுக்கியது. அங்கு CNC மெஷின். ஏர்போர்ட் தேவலாம் என்பது போல் அப்படி ஒரு செக்யூரிட்டி செக். மொபைல், பேக் என்று எதுவும் எடுத்து போக முடியாது. உள்ளே செல்லும்போது மணி மாலை ஐந்து. சாக்ஸ் மற்றும் ஷூ அணிந்திருக்கிறேன். அதையும் தாண்டி விரல்கள் நடுங்குகின்றன. உள்ளே நடுமத்தியில் இருக்கும் கோவிலுக்குள் செல்ல காலனியை கழட்டியே ஆக வேண்டும். வெறுங்காலை தரையில் வைத்தவுடன் ஏற்பட்ட அந்த குளிர் நடுக்கம், மரண படுக்கையிலும் மறவாது கண்மணியே ரகம். மார்பிளில் ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்க வைக்க, பாதம் வழியாக குளிர் உச்சந்தலையில் ஏறுகிறது. வலம் வருவதற்குள் நமக்கு பால் ஊற்றிவிடுவார்களோ என்ற ஐயம். அப்படி ஒரு குளிர். அப்பொழுது தான் கவனிக்கிறேன். அனைத்து மக்களும் ஜெர்கின் மற்றும் க்ளவுஸ் அணிந்திருக்கிறார்கள். தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடி வந்து ஹோட்டலில் தஞ்சம் அடைந்து ஒரு ரூம் ஹீட்டரை வாங்கி சிவனின் முன்னால் உட்காந்திருக்கும் நந்தி போல் அதன் முன் அமர்ந்து பொழுதை கழித்தேன்.
அடுத்த நாளே க்ளவுஸ், ஜெர்கின் வாங்கி குளிரை விரட்ட முயற்சித்தேன். ம்ஹூம். தெர்மல் வியர் அணிய வேண்டும் போல். அப்பொழுதான் சூடு அடங்கும். மெட்ரோவில் ஒரு தமிழ் பேசும் பயணியை சந்திக்க நேர்ந்தது. சிவகங்கைக்காரர். சிம்லா பனிப்பொழிவை பார்த்து விட்டு வந்திருந்தார். குளிரை பற்றி விசாரித்தேன். பனியே பொழிந்தாலும் இங்கு நடுக்குவது போல ஷிம்லாவில் இல்லை என்றார். பொல்யூஷன் காரணமாக சூரிய கதிர்களே ஊடுருவ வழியில்லாமல் டெல்லி குளிரில் விரைத்து கிடக்கிறது. பொல்யூஷன் மூலமாக சுவாசிக்கும் காற்று மாசுபட்டது போதாதென்று இயல்பு வாழ்க்கை பாதிக்கும் அளவுக்கு குளிர் மண்டியிருக்கிறது. ஒருவர் விடாமல் அனைவரும் பாக்கெட்டில் கைவிட்டு நடந்து செல்லும் மர்மம் அப்பொழுதுதான் விலகியது.
அலுவலகம் முடிந்து ஹோட்டல் செல்வதற்கு டேக்ஸி பிடிப்பதற்கு மாலை வெளியில் வரவேண்டும் என்று நினைத்தாலே சர்வ நாடியும் அடங்கி விடுகிறது. கண்ணு முன்னாடி வந்து போவோமா இல்லையா என்பது போல் முதல் நாள் குளிர் நினைவில் வந்து போனது. அவ்வளவு மோசமான குளிர். சாலையில் செல்லும் போது பத்தடிக்கு முன்னால் என்ன செல்கிறது என்று தெரியவில்லை. அவ்வளவு smog. (fog +smoke =smog ).
என்னடா குளிர் குளிர் என்று ரொம்ப பம்மாத்துகிறானே என்று நான் என் பாஸை நினைத்தது போன்று நினைத்தீர்கள் என்றால் அடுத்த முறை ஹாலிடேக்கு ஹில் ஸ்டேஷன் எதுவும் செல்லாமல் டிசம்பர் குளிரில் டில்லி முயற்சித்துப் பாருங்கள்.
கரோல் பாகில் உலாவும் தெரு நாய்க்கெல்லாம் கோட் போன்று ஒரு வித கெட்டியான துணியை தைத்து போட்டிருக்கிறார்கள். ஆனால் அந்த குளிரிலும் சாலை ஓரம் மக்கள் வானம் பார்க்க கமபளியை போர்த்திக்கொண்டு தூங்கிக்கொண்டிருந்தனர்.
இம்மை போற்றுதும் என்று நினைத்துக்கொண்டேன்.
சொர்க்கமே என்றாலும்...

நூடுல்ஸ் 2023


சாப்பாடு சம்பந்தப்பட்டது இல்லை. ஒரு படம். ஹரிஷ் உத்தமன் மற்றும் ஷீலா ராஜ்குமார் நடித்த படம். பட்ஜெட் படம் தான் என்றாலும் இறுதி வரை சுவாரசியம் குறையவில்லை. மூன்றே மூன்று லொகேஷன். மொட்டை மாடி, வீட்டு வாசல் மற்றும் வீட்டுக்கு உள்ளே உள்ள ஹால். பத்து மணிக்கு மேலும் மொட்டை மாடியில் குடும்பமாய் கூடி டம் சராட்ஸ் விளையாட, அதை பப்ளிக் நியூசென்ஸ் என்று யாரோ போலீசில் கம்ப்ளெயிண்ட் செய்ய, போலீஸ் விசாரிக்கிறது. குடித்து விட்டா ரகளை செய்கிறோம் என்று குடும்பம் எகிற போலீசுக்கும் ஹரீஷ் குடும்பத்திற்கும் உரசல் ஏற்படுகிறது. இதே குழப்பத்தில் மறு நாள் காலை ஹரீஷ் எந்திரித்து பால் வாங்கி வர செல்ல, மொபைலை தட்டி பறிக்க வந்தவனிடம் தள்ளு முள்ளாகி கீழே விழுந்து இறந்து விட்டான் என்று ஷீலா பதறுகிறார். பிணத்தை அவர்கள் ரூமில் ஒளித்து வைத்து போலீசுடன் மல்லு கட்டும் சடுகுடு கபடி ஆட்டமே இந்தே நூடுல்ஸ். பேருக்கு ஏற்றார் போல் அடுத்தடுத்து சிக்கல் சடை பின்னி இவர்களிடம் விளையாட 100 நிமிடங்கள் பரபரப்புக்கு பஞ்சம் இல்லை.




லட்சங்களில் தான் பட்ஜெட் இருக்கும் என்பது என் கணிப்பு. போலீசாக நடித்திருக்கும் இயக்குனர் மதன்குமார் அளேவடுத்தது போன்று இன்ஸ் வேடத்தில் அபாரம். இதே போன்று படங்களை தமிழ் பேசும் நல்லுலகம் தாராளமாய் வரவேற்கலாம்.

அனிமல்


ஸ்ட்ரிக்ட்லி ஃபார் அடல்ட்ஸ்
படம் ரிலீஸ் ஆன நாள்லே இருந்தே படத்தோட டோன் ஒரு வகையா misogyny டைப்ல இருந்ததா பூரா பக்கமும் ஏச்சு. அர்ஜுன் ரெட்டி படத்தோட கம்பேர் பண்ணும்போது இது அவ்ளோ மோசம் இல்ல. சொல்லப்போனா அர்ஜுன் ரெட்டி படத்துல ப்ரோடோகோனிஸ்ட், பெண்களை எவ்ளோ எள்ளலா டீல் பன்னிருப்பாருனு பாத்துருப்போம். அனிமல் படத்துல ரன்பிர் கபூர் அந்த மாதிரி எந்த பெண்ணையும் கேவலமா நடத்துல. ரஷ்மிகா மேல பொசஸிவா இருக்கார். அத விட அவங்க அப்பா மேல வெறித்தனமான அன்பை வச்சிருக்கார். சின்ன வயசுலேந்து அப்பாவோட அன்புக்காக ஏங்குற கேரக்டர். ஸ்வஸ்திக் அப்படிங்கற பெரிய சாம்ராஜ்யத்தை கட்டனுங்கற முனைப்புல அவர் ரன்பிரோட அன்பை கண்டுக்கல. அந்த ஏக்கம் தேடுதலா மாறி கடைசி வரைக்கும் அதுக்காக ரன்பீரை ஏங்க வச்சிடுது. அப்பாவுக்காக எந்த எக்ஸ்ட்ரீமுக்கும் போற கேரக்டர் தான் ரன்பிர். ஒரு கட்டத்துல அப்பாவை யாரோ கொல்ல வர, அது யாருனு தெரிஞ்சிக்கிறதுக்காக தேடுதல் வேட்டையை ஆரம்பிச்சு கரகரனு கழுத்தை அறுத்து கொல்றது தான் கதை. படத்துல பெண்களை கேவலமா நடத்துறது பாபி தியோல் தான். அன்டோகனிஸ்ட.



பேசத்தயங்குற செய்ய யோசிக்கிற பல காட்சிகள் படத்துல ரொம்ப யதார்த்தமா பன்னிட்டு போயிட்டே இருக்காங்க. உதாரணமா, ரஷ்மிகா வீட்டுல ரன்பீரை ஏத்துக்கருத்துக்காக பேசிட்ருக்கும்போது வர லிப் லாக், ஜோயா கூட இன்டிமேட் ரிலேஷன் வச்சிட்டு ரன்பீர் திரும்ப வரும்போது ரஷ்மிகா கேக்குற கேள்விகள் இன்னும் நிறைய மொமெண்ட்ஸ் ரொம்ப கேசுவலா பண்ணிருக்காங்க. ரன்பீர் பத்து படத்துக்கான உழைப்பை இதுல கொட்டிருக்காரு. மூணு மணி நேரம் படத்துல முக்கால்வாசி நேரம் ரன்பீர் அட்ரினலின் ரஷிலேயே இருக்குறாரு. தங்கச்சி அக்கா மேல அவ்ளோ பாசம் வச்சிருக்குறார். ஆனா அவர் சொல்றதத்தான் யாரும் கேக்க மாட்டேங்குறாங்க. கடைசி வர அவரோட அன்பை வெளிப்படுத்திட்டே இருக்காரு. சுட்டுட்டு போயிட்டே இருக்காங்க. போலீஸ் பத்திலாம் கவலை இல்லை. சொல்லப்போனா லா அண்ட் ஆர்டரை பத்தி கவலைப்படாத அளவுக்கு ஒரு பெரிய கோடீஸ்வர பேமிலியோட கதை. படம் முழுக்க பணம் கொட்டி கிடக்குது. ப்ரோடோகோனிஸ்ட் பத்தி ஒரு தெளிவான கேரக்டரைசேஷன் பண்ணப்பட்ட படம். படம் முழுக்க ரன்பீர் தான்.
படத்துக்கான நெகட்டிவ் ரிவ்யூஸ் பத்தி டெரெக்டர் சந்தீப்ட்ட கேட்டப்போ 'ஜோக்கருங்க பேசுறத பத்தி எனக்கு கவலை இல்லை' அப்டினு லெப்ட் ஹெண்டுல டீல் பண்ணிட்டு போய்ட்டாரு. கெத்து.
ஸ்டைலிஷான மேக்கிங். எல்லாருக்கும் பிடிக்குமான்னு தெரில. ரொம்ப நாளுக்கப்புறம் பாத்த ஒரு மாஸ் ஆக்ஷன் மூவி. இதோட சீக்குவல் அனிமல் பார்க் அப்டினு ரெடியாய்ட்ருக்கு. அனிமல் படத்துல பாத்ததெல்லாம் டீசர் தான். இனிமேதான் ரியலா பாக்கப்போறீங்க அப்டினு சந்தீப் ரெட்டி வாங்கா சொல்லிருக்கார். தரமான சம்பவம் வெயிட்டிங்.

ஏலே, எந்திரி


பத்து அல்லது பதினோரு வயது இருக்கும். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நடுவே படுத்து தூங்கி கொண்டிருக்கிறேன். நடுச்சாமத்தில் என்னை யாரோ எழுப்புகிறார்கள்.
'ஏலே, எந்திரி' எங்கேயோ கேட்ட குரல்.
'டேய். எந்திரி. சிவா அண்ணன் வந்திருக்கான்', இது அம்மா.
சடாரென்று முழித்து பார்த்தேன். சிவா அண்ணன் எதிரில் இருந்தான்.
காலனியில் இருக்கும் போது என்னைப் போன்ற வாண்டுக்களெல்லாம் அண்ணன் எப்போது வருவான் என்றே காத்திருப்போம். ஏனென்றால் ஒவ்வொரு முறை வரும்போதும் ஒரு கார். அமபாஸிடர், பத்மினி, பியட் கார், கான்டெஸ்ஸா அந்த டைமில் என்னென்ன பிரசித்தி பெற்ற கார் இருந்ததோ அத்தனையும் கொண்டு வருவான். அதோடு மட்டுமில்லாமல் எங்களையெல்லாம் ஏற்றி கொண்டு ஒரு அரை மணி நேரம் ரவுண்ட். கார் என்றாலே குதுகலம் ஆகிவிடும் நாங்கள், அதில் ஏறி ஒய்யாரமாக ஒரு ரவுண்டு என்றால் சும்மாவா. அதனால் தான் எப்போதுமே காத்திருப்போம்.
'ஏலே எந்திரிக்கியா இல்லையா. பொறவு வுட்டுட்டு போய்டுவேன்.'
கார் பயணம் மிஸ் ஆகி விடும் என்பதால் உடனே எழுந்துவிட்டேன். மணி பதினொன்றைத் தாண்டி இருந்தது. அப்போது என்ன கார் கொண்டு வந்திருந்தான் என்று ஞாபகம் இல்லை. ஆனால் முன்னால் ஏறி உட்கார்ந்து கொண்டேன். நேரே பாளை பஸ்டாண்ட் ராஜா டவர்ஸ் அருகில் மாடியில் ஒரு பரோட்டா கடை. ரெண்டு பரோட்டா. சால்னா. சிக்கன் சாப்ஸ். முழுக்கோழி போல் அத்தனை பெரிதாக இருந்தது. சரியான ருசி. பக்கத்து டேபிளில் இரண்டு பேர் ஏதோ சின்ன பாட்டிலை வைத்துக்கொண்டு குடிப்பதும் கடிப்பதுமாக இருந்தனர்.
அண்ணே, அந்த ஜூஸ் வேணும்'
சிரித்துக்கொண்டே, 'ஏலே.ஓம்பாட்டுக்கு சாப்புடு.' என்று சொன்னான். சாப்பிட்டு கிளம்பிவிட்டோம். கொண்டு போய் வீட்டில் விட்டு கிளம்பிவிட்டான். எத்தனை முறை தங்கச்சொல்லியும் வீட்டில் தங்கியதே இல்லை. 'சேட்டு கூப்டுவாரு. போகணும்' என்று போய்விடுவான்.
ஒரு சா மில்லில் ட்ரைவர் வேலை. ட்ரைவர் கதி சொல்லி மாளாதது. நேரத்துக்கு சாப்பாடு, காஃபி, தூக்கம் ஏன், குடலைச் சுத்தம் செய்யக்கூட நேரம் கிடைக்காது. இன்றும் யெல்லோ போர்ட் வண்டியில் பல டிரைவர்கள் கிடைக்கும் இடங்களில் எல்லாம் சீட்டை சாய்த்து தூங்குவதை காண முடியும். அவர்கள் பிழைப்பு அதுதான் என்று எளிதாக நாம் கடந்து விடுகிறோம்.
பிரிதொரு முறை இன்னுமொரு சர்ப்ரைஸ் கொண்டு வந்தான். அதுவும் அதே போன்று ஒரு அகால இரவு வேலை.
'ஏலே எந்திரி. சிவா அண்ணன் வந்திருக்கான்'.
வெளியே வந்தால் ஒரு கார். வெள்ளை வெளேரென்று. கப்பல் போல நீளமாக. உள்ளே ஏறி உட்கார்ந்தால் அப்படி ஒரு வாசம். எங்கேயோ கூட்டிப் போனான். அது ஹாஸ்பிட்டல். சேட்டிற்கு பேரப்பிள்ளை பிறந்திருக்கிறது. ஹாஸ்பிட்டலே ஒரு பிரமிப்பாக இருந்தது. உள்ளே போனால் தரை அழுக்காகி விடுமோ என்று பயந்து விடும் அளவுக்கு பளிங்குக்கல் பளபளப்பு.
காரின் டிக்கியை திறந்து காண்பித்தான். இரண்டு பேர் தாராளமாக மூன்று பேர் ஒருக்களித்து படுத்துக்கொள்ளக்கூடிய அளவுக்கு விசாலம். அது முழுவதும் சிவப்புக்கலர் அரசன் ஸ்வீட்ஸ் டப்பாக்கள். ரெண்டு பாக்ஸை எடுத்து என்னிடம் கொடுத்தான்.
'உங்க ஓனர் திட்ட மாட்டாரா?'
'தின்னுடே, அதெல்லாம் ஒன்னு சொல்ல மாட்டாரு' என்றான். வீட்டில் வந்து விடும்போது அம்மாவிடம் சொல்லிய வார்த்தை அன்று அப்படி ஒரு ஆச்சர்யத்தை கொடுத்தது. 'ஆஸ்பிட்டல்ல கரண்ட் போச்சுன்னா குழந்தை அழ ஆரம்பிச்சிருது. முழு நேரமும் ஏசி வேணும்னு கேக்குது'. பிறந்தவுடனே ஏசியா. அப்போ குழந்தை செக்கச்செவேனு இருக்கும்ல என்று யோசித்த பருவம் அது. ஏதேனும் நகைக்கடை வாசலை கடந்து சென்றால் விழும் அந்த ஜில்லென்ற ஏசி காத்துதான் அதிகபட்ச ஏசி அனுபவம். அப்பொழுதெல்லாம் நகை வேண்டுமென்றால் ஆசாரி தானே. 916 போல, தாராள மனத்திருந்தால் 816 இல் செய்து தருவார். இல்லையெனில் 716 தான். கேரட்மீட்டர் எல்லாம் அப்போது கிடையாது.
அந்த வயதில் கிளட்ச் அக்சிலேட்டர் கூட எட்டாத உயரத்தில் கார் ஓட்ட சொல்லி கொடுத்திருக்கிறான். ஸ்டியரிங் மட்டும் பிடித்து நேராக கார் ஓட்டும்போது நமக்கே ஒரு கெத்து பீலிங் வந்துவிடும். அந்த பீலிங்கில் ஸ்டியரிங் எங்குட்டாவுது திரும்ப, பிடறியில் ஒரு அடி. 'நேரா பாத்து ஓட்டுல'.
ரஜினிகாந்த் போல 'எப்போது வருவான் எப்படி வருவான்' என்று தெரியாது. அதே நேரம் வர வேண்டிய நேரத்தில் கரெக்ட்டாக எல்லாம் வர மாட்டான். ஒரு நல்லது கெட்டதுக்கு கலந்து கொண்டு ஞாபகம் இல்லை. அவன் வேலை அவனை அப்படி வார்த்து எடுத்து வைத்திருந்தது.
மிகச்சிறிய வயதில் மொட்டை போடச்சென்றிருந்த போது தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்பது போல அண்ணனை அங்கு கண்டோம். ஒரு வேலையாக அந்த கோவிலுக்கு வந்தான் என்று கூறினான். ஏதோ விளையாட்டில் அவனிடம் கோபம் கொண்டு பேசவில்லை. பின்பு நான்கு மணி நேரம் பயணம் செய்து ஊர் திரும்பிய போது அவனில்லாத வெறுமை சக்கென்று கவ்விக்கொண்டது. அழ ஆரம்பித்தேன். 'எதுக்குல அழுவுற?', அம்மா. 'இல்லை. அண்ணன் கூட சண்டை போட்டேன். பேசாமையே ஊருக்கு போய்ட்டான். அதான்'. அதுக்கு மேல் சொல்லத்தெரியவைல்லை. 'இருக்கும்போது சண்டை போடு. போனப்புறம் உக்காந்து அழுவு'. என்றாள்.
ஒரு வேளை இப்போது வரை அதுதான் உண்மையோ. இருக்கும் வரை சண்டை போட்டுக்கொண்டே, சட்டென்று ஒரு நாள் இல்லாதபோது ஒப்பாரி வைத்து என்ன பயன்? இவற்றை ஏன் சொல்கிறேனென்றால், நேற்று மதியம் ஊரிலிருந்து ஒரு அழைப்பு. 'சிவா அண்ணன் தவறிட்டான்' என்று.
டக்கென்று தொண்டையில் ஏதோ பிடித்தது போன்று ஒரு உணர்வு. 'ஏலே போன எடுக்காம என்னல பண்ணிட்ருக்க? சின்னையாவை கூப்டு. பங்கரை என்ன செய்தான்?' போன்ற குரல் இனி கேக்காது. எமோஷனல் அட்டாச்மெண்ட் இல்லையென்றாலும் வரும் போகும் இடங்களெல்லாம் கலகலவென்று வைத்திருப்பான்.
நல்லவேளை அவனிடம் பேசவேண்டுமென்று என்று எதையும் தேக்கி வைக்கவில்லை. அலுவல் பிரச்சினைகள் இதற்கு உறுதுணையாக இருந்தது என்று சொல்ல வேண்டும். இல்லையென்றால் ஆயுசுக்கும் அரித்துக்கொண்டே இருக்கும்.

அயலான்

 

என்னடா போகி முடிஞ்சி பொங்கல் வச்சி பானையை கழுவி பரண்ல ஏத்துனப்பறம் விமர்சனம் வருதேன்னு பாக்குறீங்களா? இப்போ தான் டைம் கடிச்சிது.
ரொம்ப பிடிச்ச பிரமிக்க வச்ச விஷயம் VFX தான். அது க்ராபிக்ஸ்னே சொல்ற மாதிரி இல்ல. அப்டியே நிஜத்துல பாக்குற மாதிரி தத்ரூபமா இருந்துச்சி. (Climax ல சின்ன பிசிறு). சித்தா சித்தார்த் குரல்ல பல பேர் நல்லாருக்குனு சொல்றாங்க. பட் எனக்கு பிடிக்கல. ஒரு மாதிரி matrured ஆன வாய்ஸ். கொஞ்சம் காமிக்கலா ஒரு வாய்ஸ் போட்ருந்துருக்கலாம். கம்ப்யுட்டர்லயே சின்தஸைஸ் பண்ணி. கீச் கீச்னு. குழந்தைங்களோட இன்னும் நல்லா கனெக்ட் ஆகியிருக்கும்.




சிவகார்த்திகேயன் எல்லா ஏரியாலேயும் பிச்சி உதறிட்டார். டான்ஸ், சண்டை, காமெடி எல்லாமே. பல இடங்கள்ல தலைவர் ரஜினியோட சாயல் தெரியுது. sk ஒரு பேட்டில சொல்லிருப்பார். என்னோட படத்துக்கு பேமிலி ஆடியன்ஸ் அப்புறம் குழந்தைங்க வராங்க. அதுனால லிப் லாக் பண்ண மாட்டேன் அப்டினு சொல்லிருப்பார். அதுமட்டும் இல்லாம படம் பக்கா க்ளீனா எடுத்திருக்காங்க. கடிவாளம் போட்ட மாதிரி கதைக்கு என்ன தேவையோ அது மட்டும் தான். முக்கியமா ஏலியனுக்கு ஸ்பேஸ் கொடுத்து நடிச்சிருக்கார் sk . வளர்ந்து வர நேரத்துல இது முதிர்ச்சியான ஒரு மூவ்.
ஹீரோயினா ரகுல். அந்த இடத்தே ரொப்பிறதுக்குனே போட்ட மாதிரி இருக்குது. ஒரு சீனும் மனசுல பதியல. ஆனா திறக்காத காட்டுக்குளே இஷா ஸ்க்ரீன் ப்ரெசென்ஸ் ஒப்பிட்டளவுல ஜாஸ்தி. இந்த கம் பேக்குக்கு நல்லாவே ஜஸ்டிபய் பண்ணிருக்காங்க.
கருணாகரன் சீன் ஸ்டார்ட் ஆகும்போது தான் காமெடியும் ஒர்க் அவுட் ஆகியிருக்கு. யோகி பாபு, கருணா, sk காமெடி கூட்டம் நல்லாவே ஒர்க் அவுட் ஆகியிருக்கு. கோதண்டம் வாயை அடைச்சிட்டாங்க. விட்டுருந்தா யோகியை தூக்கி சாப்பிட்டுருப்பாரு. பாலிடிக்ஸ் போல.
லாஜிக் கிலோ என்ன விலை அப்படிங்கற ரேஞ்சுல தான் டீல் பன்னிருக்காங்க. ஸ்பேஸ் ஷிப் வருது போகுது. நியூஸ்ல காமிக்கல, ஒரு போலீஸ் தேடலை. ஓகே. மன்னிச்சு.
ரஹ்மான் போட்டுருக்குற சில bgm ல நெஞ்சே அதிருது. ஏலியனுக்குனு ஒரு தனி ட்யூன் போட்ருக்கார். ஆனா bgm எதுவும் மனசுல நிக்கல. பாட்டு கேக்கவே வேணாம். அதுவும் intro சாங்லாம் இஷ்டத்துக்கு பன்னிருக்காப்புல. ஏறுது இறங்குது டமால் டுமீல்னுது அந்த ட்யூனை கேட்டுட்டே ஏனா தானோனு நம்ம sk ஆடிருப்பாரு. என்னடா intro அப்படிங்கற மாதிரி ஒரு சாங். மத்த பாட்டும் அது மாதிரி தான். ஒரு வார்த்தையும் புரியல. பீட்ஸ் மட்டும் டம்மு டும்முனு. heavy disappointment.
நூல் புடிச்ச மாதிரி கதையை மட்டுமே சொல்லிட்டு போற ரவிக்குமார் இன்னும் கொஞ்சம் கேம் ஆடிருக்கலாம். தமிழ் சினிமா வரலாற்றுலேயே இந்த மாதிரி ஒரு ஜானர் வந்தது இல்லை. பக்கா ஆக்டிங் மற்றும் டெக்கினிகள் டீம். இருந்தும். மிஸ் பண்ணிட்டாரு. படத்துல ரொம்ப கலகல காட்சினா அந்த வாட்டர் டேங்க் மேல டாட்டூ கூட நடக்குற இன்ட்ரோ சீன் தான். அதுக்கப்புறம் அந்த கலகல மிஸ்ஸிங். இன்னும் அது மாதிரி நிறைய சீன்ஸ் ஜாலியா வச்சிருந்தாலே படம் இன்னும் சூப்பரா இருந்துருக்கலா.
வெள்ளைப் பூக்கள் படத்துல விவேக் சொல்லிருப்பாரு. பாரின்ல எல்லாமே இருந்தும் ஏதோ ஒன்னு மிஸ் ஆகுதுன்னு. அது மாதிரி எல்லாமே இருந்தும் ஏதோ ஒன்னு மிஸ் ஆன மாதிரி இதுல ஒரு பீலிங்.
பட் குழந்தைங்களோட ஜாலியா பாக்கலாம். க்ளீன் பேமிலி என்டர்டெயினர்.