புதன், ஏப்ரல் 15, 2026

தாய் கிழவி

மிகக் கவனமாகத்தான் காசு போடுகிறார்கள். நடிகர்களைக் கூறுகிறேன். வேறு ஒருவர் தயாரிப்பில் நடிக்கும்போது இந்த அளவுக்கு சிரத்தை எடுப்பது போல் தெரியவில்லை. சொந்தத் தயாரிப்பு எனும்போது கதை, இசை, நடிகர்கள் என அனைத்துமே அம்சமாக உட்கார்ந்துவிடுவது, அதுவும் கையடக்கமான பட்ஜெட்டில் என்பது அதிசயம் தான். 

தாய் கிழவி எப்படி இருக்கிறது? 

வட்டிக்கு விட்டு பிழைப்பை நடத்தும் பவுனுத்தாயி சாகக் கிடக்கிறார். திடீரெனே அவர் 160 பவுனுக்கு சொந்தக்காரர் எனத் தெரியவருகிறது. அதன் பிறகு அவரை காப்பாற்றத் துடிக்கும் களேபரமே தாய் கிழவி. பவுனுத்தாயாக ராதிகா. இந்தக் கதாபாத்திரத்தில் வேறு ஒருவரை யோசிப்பது சிரமம் தான். 

பிராஸ்தடிக் மேக்கப்புடன் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். இரண்டு மணி நேரப் படத்தில் வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே வருகிறார். ஆனாலும், அந்த 20 நிமிடமும் சரவெடி தான். பவுனுத்தாயின் மகன்களாக பாலசரவணன், சிங்கம்புலி மற்றும் அருள்தாஸ். கோல்ட் குமாராக இளவரசு, மகளாக ரேச்செல், மூன்று மருமகள்கள், மருமகன் முத்துக்குமார், பென்னி குயிக் முனீஸ்காந்த், டாக்டர் ஜார்ஜ் மரியான் என அனைவருமே பாத்திரம் அறிந்து பிரமாதமான நடிப்பை நல்கியிருக்கிறார்கள். 

பாலசரவணனின் பூமாலை கட்டும் காட்சி கலகலப்பு. தாய்கிழவியின் பேரன் கவனிக்க வைக்கிறார். கருப்பு கோவில் அணையா விளக்கு காட்சிகள், கங்காரு அடிகளார் சாமிகள் என அதகளம். நிவாஸ் கே பிரசன்னாவின் இசை படத்திற்கு பக்கபலம். காமெடி காட்சிகள், எமோஷன், நையாண்டி என பின்னணி இசையில் பெரும் பங்காற்றியிருக்கிறது. கதையோட்டத்தினூடே வரும் பாடல்கள் மிகவும் உயிர்ப்பு. மேலும், ஆங்காங்கே ஒலிக்கும் கமலின் திரைப்படப் பாடல்கள் ஒரு கதாப்பத்திரமாகவே வருவது புதுமை மற்றும் சிறப்பு. மரணப்படுக்கையில் இருக்கும் தாய் கிழவியை சுற்றித் தான் கதை என்றாலும், காட்சிகள் ரிப்பீட் மோடில் வருவது சற்று சலிப்பைத் தட்டுகிறது. எடிட்டர் லோகேஷ் இங்கு தயவு பார்க்காமல் கத்தரித்திருக்கலாம். 



படம் முழுக்க டார்க் ஹியூமர் தான் என்றாலும், அதனூடே அலுப்புத் தட்டாமல் வாழ்க்கைப் பாடமும் எடுத்துள்ளார் இயக்குனர் சிவகுமார் முருகேசன். நடுரோட்டில் நடக்கும் ஆம்புலென்ஸ் வெண்டிலேட்டர் காட்சி, சுருளியை வளர்த்த விதம், அதை சுருளியே மருமகள்களுக்கு புரியவைத்த இடம், பவுனுத்தாயின் பல்லாங்குழி விளையாட்டு காட்சிகள் எனப் பூமாலையில் இடையிடையே கட்டப்பட்டிருக்கும் மரிக்கொழுந்து வாசம் போல படத்தின் பேசுபொருளாக மணக்கின்றன. ‘காசு இல்லையென எந்தப்பெற்றோரும் குழந்தையைக் கைவிடுவதில்லை. ஆனால் பெற்றோரின் நிலைமை அதுபோல இல்லை’ போன்ற வசனங்கள் சிந்திக்கவைக்கின்றன. என்னதான் இறுதிக்காலத்தில் கூடவே இருந்து கவனித்துக் கொண்டாலும், இறுதியாகப் படுக்கையில் இழுத்துக்கொண்டிருக்கும் அம்மாவை அப்படியே விடுவதா அல்லது காப்பாற்றுவதா என எந்த முடிவும் எடுக்க முடியாத கையறு நிலையில் தான் சகோதரனோடு பிறந்த மகள்கள் இருக்கிறார்கள் எனும் உண்மையை நுட்பமாக பேசியிருக்கிறது சுருளி கதாபாத்திரம். 

படபடவென இறுதியில் எடுக்கப்படும் முடிவுகளில் பவுனுத்தாயி மிகக் கம்பீரமாகத் தெரிகிறார். பெண் சுதந்திரம், சுய மரியாதை என நெருடலில்லாத வசனங்கள் பளிச். யாரும் தூக்கிவிட இல்லாத அநாதரவான நேரத்தில், சேலையை வரிந்து கட்டிக்கொண்டு, கவிழ்ந்து கொண்டிருக்கும் குடும்பத்தை இழுத்துப் பிடித்து ஒரு நல்ல நிலையில் கொண்டு வந்து நிப்பாட்டிய உங்கள் பாட்டியின் கதைதான் இந்த தாய்கிழவி குடும்பத்துடன் சிரித்து மகிழவேண்டிய படம். 

 #ThaaiKizhavi #sivakarthikeyan #SivakumarMurugesan #RadhikaSarathkumar #NivasKPrasanna

கருத்துகள் இல்லை: