சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் செய்தி அவ்வளவு எளிதில் ஜீரணிக்கமுடியாதது. நண்பியின் தாத்தா என்றெல்லாம் குறிப்பில் எழுதப்பட்டிருக்கிறது. பேத்தியின் சக தோழியை, தன் பெண்ணைப்போல பள்ளிக்கு கல்வி பயில வந்த மாணவியை போகப்பொருளாக பார்த்த பார்வை நமது சமூகத்தின் கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளை பறைசாற்றி முகத்தில் அறைகிறது. தற்கொலை முடிவை எடுக்கும் முன் பெற்றோர், பள்ளி தாளாளர் என்று அனைவரிடத்திலும் தன் இன்னல்களைத்தெரிவித்திருக்கிறார். எங்குமே தீர்வு கிடைக்காத விரக்தியில் அந்தத்தளிர் தன்னை தானே பொசுக்கிகொண்டுள்ளது.
மூன்று மாதத்திற்கு முன் கல்வி அமைச்சரின் நெருங்கிய சகா ஒருவர், இதுபோன்ற பள்ளியில் நிலவும் குறைகளைத்தெரிவிக்க ஒரு Toll Free நம்பரை நிறுவும் ஆலோசனையில் அமைச்சர் ஈடுபட்டிருப்பதாகத்தெரிவித்திருந்தார். இந்த சம்பவத்திற்கு பிறகு அவரைத்தொடர்பு கொண்டேன். Toll Free அழைப்பில் புகார் அழைப்பு மற்றும் குரல் பதிவு செய்யப்படுவதால் இந்த செயல்பாடு வரவேற்பைப்பெறுமா என்ற ஆலோசனையில் காலம் தாழ்ந்துவிட்டது என்று வருந்தினார்.
என்னைப்பொறுத்தவரை இரண்டே தீர்வுகள். ஒன்று, இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை பகிரங்கமாக தண்டிப்பது. இதற்கு அரசின் ஒத்துழைப்பும் சட்டசீர்திருத்தமும் செயல்படுத்தப்பட வேண்டும். இரண்டாவது மாணவர்கள் மற்றும் பெற்றோரின் கையில். குட்டக்குட்ட குனியாமல் மனதில் பயத்தை அகற்றி துணிவுடன் வெளிப்படையாக எதிர்ப்பது. கீழ்த்தரமாக நடக்கும் ஒரு உயிரினத்திற்கே இந்த வையகத்தில் வாழ வழி இருக்கும்பொழுது, பார் வியந்து போற்றும் சாதனைகளை புரிய காத்திருக்கும் மாணவர்கள், தற்கொலை தான் நிரந்தரத் தீர்வு என்ற முடிவை கைவிட்டு தன் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். பிதாகரஸ் தியரத்துடன் ஆளுமைத்திறன் பயிற்சி கட்டாயமாக்கப்படவேண்டும். கல்விக்கும் எனக்கும் சம்பந்தமில்லை, அதற்குத்தானே பள்ளி என்ற கற்பிதங்களை களைந்துவிட்டு, குழந்தைகளின் குறைகளை அருகில் அமர்ந்து செவிமடுக்க, மறுவினை புரிய, உறுதுணையாக இருக்கிறோம் என்று நம்பிக்கையூட்ட பெற்றோர்கள் முன் வரவேண்டும்.
கனவு மெய்ப்படவேண்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக