வெள்ளி, அக்டோபர் 15, 2021

தலைவி



தமிழக சினிமா மற்றும் அரசியல் என்று எடுத்துக்கொண்டால் அதில் தவிர்க்கமுடியாத பிம்பம் ஜெயலலிதாவினுடையது. 

அரசியலுக்குள் பிரவேசித்த ஆரம்பகாலத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில், தனது வாழ்க்கையை இரு நபர்கள் வெகுவாக influence செய்துள்ளார்கள் என்று கூறியுள்ளார். ஒன்று அவரது அம்மா சந்தியா. மற்றொன்று MGR. முதலாவது அவரது கட்டுப்பாட்டில் இல்லை. இரண்டாவது அவரே தனது கட்டுப்பாட்டினை இழந்து இழந்தது. அதுபோலவே தனக்கு பிடிக்காத இரண்டு பயணத்தை அவர் தனது வாழ்க்கையில் மேற்கொண்டார். முதலாவது நடிப்பு. அவர் அம்மாவின் உந்துததலில் அவருக்கே விருப்பமின்றி நடந்தது. இரண்டாவது அரசியல். MGRன் ச(க்)தி. இரண்டுமே அவர் சுதாரிப்பதற்குள் அவரை ஆரத்தழுவி கொண்டது. 

சரி, தலைவி படம் அவரது வாழக்கையை எந்த அளவுக்கு வெளிச்சமிட்டிருக்கிறது என்று பார்த்தோமென்றால் ஏமாற்றமே. சாவித்ரியின் வாழ்க்கையை பேசிய 'மகாநடிகை' வெற்றி வேற முக்கிய காரணம், அந்த கதை திரையில் எடுத்திருக்கும் நடுநிலைமை. ஜெமினியை சாடிய அதே நேரத்தில் சாவித்ரியின் தவறையும் சுட்டிக்காட்ட தவறவில்லை. தலைவி ஏமாற்றிய இடம் இந்த நடுநிலைமையை வசதியாக மறந்ததினால். அனுதாபத்துக்காக எடுக்கப்பட்ட சினிமா போல நம்மிடம் அதன் பேசுபொருளை முன்வைக்கிறது. 





ஆனாலும் பல காட்சிகள் அவரது வாழ்வில் நா(ம்)ன் அறிந்திடாதவை. உதாரணத்திற்கு, ஆரம்பகாலத்தில் சரோஜாதேவி MGR உடன் நெருங்கி பழகியதை RMV கண்டிப்பது, MGR  மேல் உள்ள தனக்கிருக்கும் உடைமைத்தன்மையை நிலைநாட்ட ஜெயலலிதா உட்பட யாரையும் நெருங்கவிடாமல் செய்தது, வைகோவின் டெல்லி செல்வாக்கு, MGR மேல் ஜெயலலிதாவிற்கு இருக்கும் ஈர்ப்பு, MGRன் சுயநலம் என நிறைய காட்சிகள் அரசியல் ஈர்ப்பு அற்ற பொதுவெளி மக்களுக்கு புதியவை. 

வேதா இல்லம், ராமாவரம் தோட்டம், RMV வீடு, ஸ்டூடியோ, காலத்திற்கேற்ப மாறிய MGR மற்றும் ஜெயலலிதாவின் கார் என retro  நினைவுகளை மீட்டுகொண்டுவந்தாலும், ஜெயலலிதாவின் பழைய பாடல்களை இன்னும் நிறைய மீளுருவாக்கம் செய்திருக்கலாம். அவரின் ரசிகர்களுக்கு virtual  விருந்தாக  அமைந்திருக்கும். படத்தில் இருக்கும் இரண்டு புதிய பாடல்கள் மருதாணி மேல் போடப்பட்ட நகப்பூச்சுக்கள் போல படத்தினுள் ஒட்டவில்லை. மேலும், ஜெயலலிதாவாக கங்கனா எந்த அளவுக்கு பொருந்திப்போகிறாரோ இல்லையோ, MGR கதாபாத்திரத்திற்கு அரவிந்த் சாமி கனகச்சிதமானத்தேர்வு.   

படம் நெடுகிலும் அதிகமாக அவருடன் பயணிப்பது அவரது அம்மா மற்றும் MGR மட்டுமே. அதுதான் அவரது வாழ்வின் கசப்பான உண்மை. இந்த இருவரைத்தவிர இவரது வாழ்வில் அதிகம் பயணித்தது சசி. ஆனால் இவர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய பாத்திரமாக எப்போது எதனால் ஸ்திரமானார் என்பது இங்கு தெளிவுபடுத்தப்படவில்லை. சோபன் அவர்களின் இடத்தையும் நாசூக்காக தவிர்த்திருக்கிறார்கள். MGR மேல் இருக்கும் ஈர்ப்பை இவ்வளவு தைரியமாக பட்டவர்த்தன படுத்தியிருக்கும் விஜய், அவர் உயிருடன் இருந்தபோதே படம் வெளியிடப்பட்டிருந்தால் இதே காட்சிகள் வைத்திருப்பாரா என்பது சந்தேகமே. வாழ்நாள் முழுவதுமே விமர்சனத்திற்கு உட்பட்டிருந்த அவரது வாழ்க்கையை சர்ச்சைகள் இன்றி திரைவெளியில் காட்சிப்படுத்திய விதத்தில் இயக்குனர் மற்றும் குழுவைப்பாராட்டலாம்.

ஆனால் ஜெயலலிதாவை இத்தனை விமர்சனத்துக்குள்ளாக்கும் நாம், அவரும் ஒரு சராசரி பெண் தான் என்பதையும், அவருக்கும் தனியாக ஆசாபாசங்கள் இருந்தன என்பதையும் நமது சுயநலத்தேவைக்காக மறந்துவிடுகிறோம். சந்தியா அவரை சினிமாவிற்கு இழுக்காவிட்டால், MGR  சினிமா மற்றும் கட்சியின் சுயநலத்திற்காக அவரை பயன்படுத்ததாதிருந்தால், அவரும் தனக்கு பிடித்த வாழ்க்கையை தேர்ந்தெடுத்திருக்கலாம். மாறாக நமக்குத்தான் இரும்புபெண்மணி முதலமைச்சராக கிடைத்திருக்கமாட்டார்.    

ஆணவக்காரி, A1, திமிர்பிடித்தவர் என்று நாம் அவரை சொல்லிக்கொல்லும் (லகரம் தவறாக பயன்படுத்தவில்லை) அதே நேரத்தில், சட்டசபையில் காட்டுமிராண்டிகளால் அவர் அவமானப்படுத்தப்பட்டதை வசதியாக மறைத்துவிடுகிறோம். இன்னும் மாட்டிக்கொள்ளவில்லை என்றே ஒரே காரணத்தினால் நிரபராதியாக பல பசுந்தோல் போர்த்திய புலிகள் வெளியே சுற்றிக்கொண்டிருக்கின்றன. மோடியா லேடியா என்ற சவால் விடும் யோக்கியதையம் தைரியமும்  இன்று எந்த ஆண் அரசியலவதிக்கும் இல்லை. இறந்த மறு வருடமே மூன்று மசோதாக்களை சத்தமில்லாமல் நிறைவேற்றியதில் இவர்களின் வீரத்தை உலகறியும். இந்திய வரலாற்றிலேயே ஏன் உலக வரலாற்றிலேயே தன்னை எதிர்த்து நின்ற ஆண்களை மண்டியிடவைத்து, தாள் பணியச்செய்து, வாகனத்தின் சக்கரத்திற்கு வணக்கமிடச்செய்து தனது கண்ணசைவில் வைத்திருந்த அந்த ஆளுமையை, புரட்சித்தலைவி என்னும் அம்மாவை வரலாறு ஆச்சர்யமாகத்தான் பார்க்கும்.  

சினிமாதானே என்று 'தலைவியை' தட்டிவிட்டுச்செல்லமுடியவில்லை. 

கருத்துகள் இல்லை: