ஞாயிறு, ஏப்ரல் 30, 2023

பொன்னியின் செல்வன் -2



கடந்த பதிவில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெளிவந்ததும் பாக்கலாம் என்று கூறியிருந்தேன். ஆவலுடன் எதிர்பார்த்திருந்த அந்த நாளும் வந்திருந்தது. 

மிகச்சரியாகச் சொல்வதென்றால் பாகம் இரண்டில் பொன்னியின் செல்வன் பூர்த்தியாகி இருக்கிறான். 


முதல் பாகத்தில் கதைச்சுருக்கம் அதாவது preamble ஏதும் இன்றி 'cut 200mm' என்று ஆரம்பித்திருப்பார்கள். ஆதலால் நாவல் படிக்காதவர்கள் தலையும் புரியாமல் காலும் புரியாமல் இந்த elite கும்பலிடம் சிக்கி சின்னாபின்னமாவதை விட 'நல்லாருக்குல்ல' என்று மையமாக கூறிவிட்டு நட்புகளிடம் மட்டும் புலம்பினார்கள். அந்த புலம்பலில் சில தேடல்கள் நடந்திருக்கும். கதை என்னவென்று அறிந்திருக்கலாம். இரண்டாம் பாகம் குறித்து தயாராகியிருக்கலாம். அந்த தேடலே உரையாடலே படத்தின் வெற்றி தான்.

சரி, நாவல் படித்தவர்களுக்கு?

முன்னமே சொன்னது போல் முழுமையாக பூர்த்தியாகிவிட்டது. இரண்டாவது மூன்றாவது முறை பார்ப்பதற்கு கூட மனது தயாராய் இருக்கிறது. நாவல் காட்சிப்படுத்தப்பட்ட விதம், Justified.

சில எண்ணங்கள்.

1. முதல் பாகத்தில் 'நந்தினி' கதாபாத்திரம் அதிகமாக முன்னிறுத்தப்பட்டிருக்காது. காரணம் அவரின் ஆட்டம் இரண்டாவது பாகத்தில் தான். ஆதலினால் இரண்டாவது பாகத்தில் 'ஐஸு' வேற லெவலில் இருப்பார் என்று எதிர்பார்ப்பு எகிறியிருந்தது. என்னளவில் இரண்டாம் பாகத்தில் குந்தவையை காட்டிலும் முக்கிய கதாபாத்திரமாக இருந்தாலும் நந்தினி எடுபடவில்லை. மிகையான மேக் அப் காரணமாக இருக்கலாம். குந்தவையின் ஆளுமை அழகுக்கு முன்னால் நந்தினி ஒரு மாற்று கம்மிதான். வாழ்வு முழுவதும் அவள் மீது அப்பிக்கிடக்கும் மென் சோகம் கூட காரணமாக இருக்கலாம். ஒரு முறை கூட நந்தினி நிறைவாக சிரிக்கவில்லை என்பதை கவனித்தீர்களா? 

2. முதல் பாகத்தின் வேகத்திற்கு பெரிய முட்டுக்கட்டை என்றால் அது கரிகாலன் பகுதிதான். இரண்டாம் பாகத்திலும் அது தொடர்கிறது. ஒரு பெரிய போர்வீரன். முரடன் என்றளவில் மட்டுமே கல்கி அவனைச் சித்தரித்திருப்பார். அதையும் தாண்டி அவனது காதலை காட்டிய விதத்தில் நாவல் படித்தவர்களுக்கு ஏமாற்றம் தான். தாம் உருவாக்கப்படுத்தியிருந்த சோழன் இவனில்லையே என்று மீண்டும் மீண்டும் மண்டைக்குள் அலாரம் அடித்தது எனக்கு மட்டும் தானா? ஆதித்த கரிகாலன் மற்றும் நந்தினி வரும் காட்சிகள் பொறுமையைச் சோதிக்கின்றன. அதுவும் கடம்பூர் மாளிகையில் கரிகாலன் எப்படி இறந்தான் என்பதை கல்கியே ஒரு தெளிவில்லாமல் முடித்திருப்பார். lights off போலத்தான். ஆனால் அதில் ஒரு தெளிவை ஏற்படுத்துகிறேன் என்று மணி அண்ட் கோ வேறொன்றை திணித்திருக்கிறார்கள். அவ்வளவு பெரிய போர் வீரனை இப்படி முடித்து வைத்திருப்பதை மனது ஏற்க மறுக்கிறது. மொத்தத்தில் கரிகாலன் is wasted in this movie. 'அவளை பார்த்தாயா? அவள் என்ன சொன்னாள்?' என்ற இரண்டு வசனங்கள் காதில் கொய் என்று ரீங்காரமாய் இம்சை செய்கின்றன. ஜெமோவிற்கு என்ன கோபமோ?

3. முதல் பாகத்தில் மனதில் நிறைந்திருப்பது வந்தியத்தேவன் தான். இரண்டாம் பாகத்திலும் அவரே. வரும் காட்சிகள் எல்லாம் படத்திற்கு மற்றும் பார்ப்பவர்களுக்கு energy tonic. கலகலப்பாக நடித்திருக்கிறார். 'என்ன சித்தப்பு' ஸ்டைல் இயல்பாகவே பொருந்தி வந்துவிட்டது. நடிப்பிற்கு அல்லது பாத்திரத்திற்கு முதல் மார்க் என்றால் அது கார்த்திக்குத்தான். charming 

4. குந்தவை. இந்த பாகத்தில் அதிகம் தேவைப்படவில்லை. ஆனாலும் வந்தியத்தேவன் காதல் காட்சிகளில் நிறைந்திருக்கிறார். அருண்மொழியுடன் ராஜதந்திரம் சுந்தர சோழரிடம் கேள்விக்கணைகள் என்று நிறைவான பங்களிப்பு. 

5. படுத்திருந்த சுந்தரர் இந்த பாகத்தில் தான் எழுந்து நடந்திருக்கிறார். emotion கம்மி என்று ரத்னம் கூறியிருக்கலாம். பிரகாஷ் ராஜும் தெரியவில்லை சுந்தரச்சோழரும் தெரியவில்லை. ஒரு பாத்திரம் அவ்வளவே. 

6. முதல் பாகத்தில் வந்த அளவுக்கு கூட இரண்டாம் பாகத்தில் சின்னப்பழுவேட்டரையருக்கு வேலை இல்லை. காட்சிகளும் இல்லை. பெரிதாக ஈர்க்கவும் இல்லை. ஆனால் தஞ்சை கோவில் விசிட்டில் என்ன ஒரு அலப்பறை!!!

7. ராஜ ராஜ சோழனாக ஜெயம் ரவி எப்படி என்று முதல் பாகம் பார்த்த பின்பு மனம் ஒப்பவில்லை. ஆனால் மிகச்சரியான தேர்வு என்று சொல்லுமளவுக்கு இரண்டாம் பாகத்தில் மிளிர்கிறார். அந்த உயரம் உடற்கட்டு எல்லாமே நாம் உருவகப்படுத்தியிருந்த அருண்மொழியை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. அதுவும் நாகையில் புத்த பிக்ஷுக்களுக்கு மத்தியில் அவர் அருண்மொழியாக உருமாறும் தருணம் அதகளம். ஹீரோ என்ட்ரி போல. 'நம் சித்தர்களைப் போல பிக்ஷுக்கள்' என்ற வசனத்தில் அரசியல் பின்னணி ஏதும் இருக்கிறதா?

8. அநிருத்த பிரம்மராயர் மற்றும் ஆழ்வார்க்கடியான் போன்றோரின் பங்கு வெகுவாகச்சுருங்கி விட்டதாகத்தெரிகிறது. நம்பி கதாபாத்திரம் நாவலில் வெடிச்சிரிப்பு வரவழைக்கும். படத்தில் அது மிஸ்ஸிங். ஜெயராம் முயன்றிருக்கிறார். ஆனால் கைகூடவில்லை. 

9. ஊமை ராணியின் கண்களை குந்தவையின் கைகள் மூடும்போது கிஷன் தாஸ் மிளிர்கிறது. கிஷன் தாஸ் என்பது படம் முழுமைக்குமான ஆபரணங்களை தயாரித்து கொடுத்த நகை நிறுவனம்.

10. இசை. கேட்கக்கேட்க பிடிக்கும் என்பதற்கு சிறந்த உதாரணம் ARR. முதல் பாகத்தின் 'ராட்சச மாமனே' இப்பொழுதுதான் மனதிற்குள் இறங்கியிருக்கிறது. so, அக நக மற்றும் வீர சோழம் கொஞ்ச காலமாகலாம். மற்றபடி இசை அருமை. காட்சிகளுக்கு உயிர்கொடுத்திருப்பதே இசை தான். கரிகாலன் மற்றும் நந்தினி காட்சிகளில் நம்மை திரையிலிருந்து கண்ணகலாமல் பார்த்துக்கொளவது ARRன் பின்னிசையே. ஒவ்வொரு நடிகருக்கும் தனித்தனி BGM என்று மெனக்கெட்டிருக்கிறார். கைகூடி வந்திருக்கிறது. கதையுடன் வரும் பாடல்கள் இனிமை. வித்தியாசமான இசைக்கருவிகள் காதில் ஒலிக்கிறது. வரலாற்று நிகழ்வுக்கு நியாயம் சேர்த்திருக்கிறார். எல்லாப்புகழும் ARRக்கே

11. லொகேஷன் தேர்வுகள் அருமை. கண்களுக்குளே இன்னும் தேங்கி நிற்கிறது. கிராபிக்ஸ் காட்சிகள் இவை தான் என்று தெரியவில்லை. அதுவே படத்தின் வெற்றி. கடற்கரை, புத்தவிகாரம், கோட்டை, கடம்பூர் மாளிகை, அகழி, பாதாள வழி, ஆபத்துதவி கூடும் இடங்கள் என எல்லா தெரிவுகளும் அருமை. மணி அண்ட் கோவிற்கு பாராட்டுக்கள். 

12. முழுவீச்சாக உழைத்திருக்கும் ஆடை அலங்கார நிபுணர்கள் மெய் சிலிர்க்க வைக்கிறார்கள். ஏகப்பட்ட நடிகர்கள். அனைவருக்கும் தனித்த அலங்காரம். ஆடைகள் என உழைப்பு அபரிதம். இவர்கள் இல்லையேல் பொன்னியின் செல்வன் இந்த அளவிற்கு ஈர்த்திருக்காது. 

13. இறுதியாக, சேர்க்கப்பட்டிருக்கும் புனைவுகள் பற்றி. நந்தினி என்கிற கதாபாத்திரமே கல்கியின் புனைவுதான். திடீரென்று நாவலில் காணாமல் போய்விடுவாள். இங்கே ஒரு முடிவு எழுதியிருக்கிறார்கள். போலவே கடம்பூர் மாளிகையின் கரிகாலன் இறப்பிற்கும் ஒரு முடிவு எழுதியுள்ளார்கள். இவை இரண்டுமே நாவலில் இருந்து இந்த காட்சிப்படுத்துதல் முயற்சியை சற்று நம்மிடையே அந்நியமாக்குகின்றன. 

ஆனால் என்னளவில் MGR மற்றும் கமல் கையில் எடுத்து பின்பு கைவிடப்பட்ட இந்த வரலாற்று புதினத்தை, தமிழின் பொக்கிஷத்தை நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னும் (1980 முதல்) அயராது விடாமுயற்சியுடன் காட்சிப்படுத்த முயன்றமைக்கும் அதை வெற்றிகரமாக நிறைவேற்றி காட்டியதற்குமே மணிரத்னத்திற்கு தமிழ் பேசும் நல்லுலகம் கடமைப்பட்டிருக்கிறது. எத்தனை பெரிய ப்ராஜெக்ட். எவ்வளவு கேரக்டர்கள். எவ்வளவு காட்சிகள். நாவலிலிருந்து எதை எடுப்பது? எதை விடுப்பது? வசனங்கள் எவ்வாறு அமைப்பது? ஆடை அலங்காரம், பாத்திரத் தேர்வு, லொகேஷன், சினிமாட்டோகிராபி, பாடல்கள், இசை, வாத்தியக்கருவிகள் அடேங்கப்பா. எழுதிக்கொண்டே போகலாம். எத்தனை மொழிகளில் கொண்டு சேர்த்திருக்கிறார். லைக்காவினால் மட்டுமே இது சாத்தியமாகியிருக்கிறது. 

டீம் முழுவதும் ஒத்திசைந்து தேர் இழுக்க வேண்டும். இழுக்க வைத்திருக்கிறார். ரஜினி போன்றதொரு காந்தம். 26 வயதில் ஆரம்பித்து 66 வயது வரை அயராது உழைத்துக்கொண்டிருக்கிறார். அந்த கால இளைஞர்கள் முதல் இந்த கால 2கே கிட்ஸ் வரை அத்தனை பேரையும் கட்டிவைத்திருக்கிறார். களத்தில் கால் வைக்கவே பயந்து கொண்டிருக்கும் வேளையில் புதுப்புது முயற்சிகள் மூலம் ஆராய்ச்சி செய்து கொண்டே இருக்கிறார். ஊர்கூடி பொன்னியின் செல்வன் என்ற தேர் இழுக்க வைத்ததற்காகவே ஒரு கிரியேட்டராக கதைகளில் புனைவு கொண்டு வரும் உரிமை அவருக்கு இருக்கிறது என்று என்னளவில் ஏற்றுக்கொள்கிறேன். நாவல் படித்தவர்களுக்கு ஒரு சில இடங்களில் இடைவெளி இருப்பது புரியும். அதை கல்கி இறுதி பக்கங்களில் விளக்கியிருப்பார். மணிரத்னம் நாவலில் இருக்கும் அந்த இடைவெளியை படம் மூலமாகவே நிரப்ப நினைத்திருக்கிறார். ஓரளவு கைகூடிதான் வந்திருக்கிறது. நாவல் படித்தவர்களுக்கு மட்டும் கொஞ்சம் செரிக்காமல் போகலாம். ஆனால் 2கே கிட்ஸ் விசிலடித்து ரசித்து கொண்டுதான் இருந்தன. பிறகு என்ன?


OTTயில் வெளியிட்ட பின் பாகுபலி போல் ரிப்பீட்டட் மோடில் வீட்டிற்குள் ஓடுவதற்கான சரவல்லமை கொண்ட படமாகத்தான் வெளிவந்திருக்கிறது. நம்முடைய சோழர்கள் என்ற வகையில் கொஞ்சம் மிஞ்சவே செய்திருக்கிறது என்று கூட மார்தட்டிக்கொள்ளலாம்.   


 பொன்னிநதி பார்க்கணுமே!!!




 

புதன், ஏப்ரல் 26, 2023

மராத்தான் மனிதர்கள்

வெ. நீலகண்டன் 

விகடனில் வெளிவரும் தொடர். ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு மனிதரைப் பற்றி. பற்றி என்பதை விட கொண்டாடி என்று சொல்லலாம். அந்த அளவுக்கு ஒரு cover story.

நிழல் ஹீரோக்களை மட்டுமே கொண்டாடிக் கொண்டிருக்கும் தமிழ் சமூகத்துக்கு இது ஒரு அருமையான Eye Opener.

எத்தனை மனிதர்கள். என்னவொரு தீர்க்கம். சாதாரணமானவர்கள். ஆனால் அசாதாரண உழைப்பு. எடுத்துக்காட்டு. சமூக சேவை. வாழும் வாழ்கைக்கான அர்த்தம். சொல்லிக்கொண்டேப் போகலாம். 

உங்களையும் என்னையும் போன்ற மனிதர்கள் தான். சொல்லப்போனால் பொருளாதாரத்தில் ஒரு படி கீழே என்று கூட சொல்லலாம். ஆனால் அவர்களுக்கு சமூகத்திடம் அளப்பரிய அன்பு. இங்கிருந்த எடுத்தவற்றையும் அதை விட அதிகமாக கொடுத்து விட வேண்டும் என்ற வைராக்கியம். அருமை.பார்வைசவால் கொண்டவர் என்ன செய்துவிட முடியும் என்று எல்லளாம். ஆனால் அந்த எல்லளை புறந்தள்ளிவிட்டு தானும் முன்னேறி தன்னைப்போலவே இருப்பவர்களை முன்னேற்றி அரசுப்பணியில் அமர வைக்கிறார் ஒருவர்.



கால் ஊன்ற முடியாதவர் முதியோர் இல்லம் மற்றும் குழந்தைகள் காப்பகத்தில் சென்று நேரம் செலவிட்டு மகிழ்விக்கிறார். 

மலைவாழ் மக்கள் தம் உரிமைகளைப் பெற்றிட அவர்களுடனே தங்கி தன் வாழ்க்கையை அற்பணிக்கிறார் ஒருவர்.

கிராமம் கிராமமாக சென்று கிணறுகளை தூர் வாரி நீர் இரைக்கிரார் இன்னொருவர்.

நட்சத்திர ஆமையும் அதன் சுற்றுப்புற சூழலையும் கருத்தில் கொண்டு தனது carrier ஆக அதனை ஒரு பெண் தேர்வு செய்து மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி சூழலை காப்பாற்றுகிறார்.

தேடித்தேடி நிஜ ஹீரோக்களை பதிவு செய்திருக்கிறார். யாருமே கண்டுகொள்ளாத அல்லது பரவலான பாராட்டை பெறாத அவர்களுக்கு இது உத்வேகத்தை தருவதோடு மட்டும் அல்லாது படிக்கும் நமக்கும் இப்பூவுலகில் பிறந்ததற்கான கடமையை உணர்ந்துகொள்ள ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறார் ஆசிரியர்.

இதோடு மட்டும் நில்லாது 'பேய்க்காட்டுப் பொங்கலாயி' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இயற்கையோடு ஒத்திசைந்து வாழும் பழங்குடியின மக்களின் தொன்மம், வழிபாடு, பழக்கம், சடங்குகள் என அவர்களைப்பற்றிய ஒரு ஆவணம் இந்நூல்.

தொடரட்டும் உங்கள் சமூகப்பணி வெ நீலகண்டன் அவர்களே.

#விகடன் Ananda Vikatan Vikatan EMagazine

 

டாப் கன் மேவரிக்

ராணுவ அல்லது போர் சம்பந்தப்பட்ட படங்கள் என்றுமே அட்ரீனலின் அதிகம் சுரக்கவைப்பவை.

'சேவிங் பிரைவேட் ரியான்' அச்சு அசலாக போர்க்களத்தை கண்முன் நிறுத்தியது என்றால் 'எனிமி அட் தி கேட்ஸ்' ஸ்னைப்பர் கன்னை முன்னிறுத்தி எடுக்கப்பட்ட ஒரு தரமான படம்.

சமீபத்தில் வந்த '1917' போர் குறித்து வேறொரு பரிணாமம் கொடுக்கும். ராணுவ வீரன் பதுங்கு குழியிலிருந்து வெளியே வருவதில் ஆரம்பிக்கும் படம், அவன் அவனது சகாவை இழந்து அருகே உள்ளே கிராமம் செல்வது வரை அவனது தோளின் மீதேறி warfield ஐ நாம் பார்க்கும் படிக்கு அமைந்து இருக்கும். டெக்கினிக்கலாக 34 கட் இருந்தாலும் படம் பார்க்கும் நமக்கு ஒரே ஒரு கட் தான் தெரியும். போர் சார்ந்த திரைப்படத்தில் எடிட்டிங்கில் ஒரு மைல் கல் இந்த மூவி.



ராணுவ சம்பந்தப்பட்ட படங்களில் நான் முதல் ரேங்க் கொடுத்து முன்னிறுத்த விரும்பும் படம் 'புல் மெட்டல் ஜேக்கட்'. ராணுவத்தின் முதல் கோட்பாடே 'செய் அல்லது செத்து மடி'. முதலில் சுட்டுவிடுவார்கள். அதன் பின்பு தான் விசாரணையே ஆரம்பிக்கும். ஒரு ராணுவ தளவாடத்தின் ட்ரைனிங் என்பது எப்படி இருக்கும் என்பதற்கு மிகச்சரியான எடுத்துக்காட்டு இந்த படத்தின் முதல் பாதி. 'டாணாக்காரன்' படத்தில் காட்டப்படும் ட்ரீட்மெண்ட் டூமச் என்று நீங்கள் கருதினால் இது அதற்கெல்லாம் தாத்தா. 'yes sir' என்கிற வார்த்தை தான். வேறு பேச்சுக்கே இடமில்லை. அகடமிக்குள் சென்று வந்த ஃபீல் நிச்சயம்.

'U571' என்று ஒரு படம் உண்டு. நீர்மூழ்கி கப்பல், சோனார் சிக்னல் என கடுலுக்கடியில் அது வேறு ஒரு உலகம். நீர்மூழ்கி கப்பலுக்குள் எவ்வாறு இருக்கும், அதனின் operation என படம் முடிந்த பிறகும் கூட சோனார் சமிக்ஞைகள் நம் காதில் ரீங்கரமிடும் அளவுக்கு சுவாரஸ்யமானவை.

அந்த வரிசையில் நண்பன் Vallab Muru பரிந்துரைத்த மூவி தான் 'டாப் கன் மேவரிக்'. டாம் க்ரூஸ். முதல் பாகம் 1986இல் வெளி வந்திருக்கிறது. US Navy பிரிவில் SEAL படை போல Airforce க்கு Top Gun. Elite வீரர்கள். அதாவது டாப் கிளாஸ் வல்லவர்கள் கொண்ட டீம் தான் இந்த டாப் கன். 35 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் பாகம் எடுத்திருக்கிறார்கள் என்றால் படத்தின் craze எந்த அளவுக்கு என்று யூகித்துவிடலாம். இதில் டாம் க்ரூஸ் அணியும் aviator வகை sun glass இப்போது வரை மிகப் பிரசித்தம். சொல்லப்போனால் 25 வயதில் இருப்பதை விட 60 வயதில் மிக handsome ஆக இருக்கிறார் க்ரூஸ். கதை பழைய பஞ்சாங்கம் தான். இந்த வேலையை இவர் இல்லாமல் செய்ய முடியாது என்ற விதி தான். அதனுடன் கொஞ்சம் முதல் பாகத்தின் மாந்தர்களுடன் சில சென்டிமென்ட் காட்சிகள். இவற்றையெல்லாம் எளிதாக யூகிக்க முடிந்தாலும் F18 மற்றும் F14 போன்ற ஜெட் fighter பிளேன்களை வைத்து இவர்கள் செய்யும் வித்தைகள் அதகளம். அதுவும் 5000 அடி hard deck என்று அறுதியிட்டு மார்ஷல் கூறினால் அந்த மிஷனை முடிக்க 100 அடியில் தான் பறந்தாக வேண்டும் என்று ஜெர்க் அடிக்கிறார் க்ரூஸ். G Force க்கு எதிராக mach 10 வேகத்தில் பறக்கும் முதல் காட்சியிலிருந்து அதிரடிதான். F18 இல் பறந்து இவர்கள் செய்யும் சண்டைகள் எல்லாமே நம்மை சீட் நுனிக்கு வர வைத்து விடுகின்றன. முதல் காட்சியிலிருந்து இறுதி வரை டாம் க்ரூஸ் தான். மொத்தத்தில் செமையான ஒரு அட்ரினலின் ரஷ் guranteed

 #TopGunMaverick #warmovie #TomCruise

 

ஞாயிறு, ஏப்ரல் 09, 2023

லெஜெண்ட்

இதோ அதோவென்று நேற்று அந்த சம்பவம் நடந்தே விட்டது 

லெஜெண்ட் பார்த்ததை பற்றி தான் சொல்கிறேன்.

ட்ரைலர் வந்த புதிதில் 'பல்லு இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுகிறான்' என்ற எண்ணம் தான் எல்லோர் மத்தியிலும். இருந்து விட்டு போகட்டுமே. ஹன்சிகா தமன்னா என தன்னுடைய விளம்பரத்தில் நடிக்க வைத்து தானும் அவர்களுடன் நடித்தது எல்லாமே அவர் பார்த்த முன்னோட்டம் தான் என்பது படம் வந்த பிறகு தான் விளங்குகிறது. 



அவருடைய தலையை பிய்த்து ஒட்டியது போன்ற தோற்றத்தைத் தவிர எந்த ஒரு நெருடலும் எனக்கு இல்லை. சினிமாட்டோகிராபி, சண்டைக்காட்சிகள், செட்டிங்ஸ்,லொகேஷன், இசை எல்லாமே தரம் தான். சண்டைக்காட்சிகளில் எல்லாம் அனல் பறக்கிறது. சொல்லப்போனால் இதுமாதிரியான கதை அம்சம் உள்ள படங்களில் தான் ரஜினி நடிக்கிறார். என்ன? ரஜினி என்பதால் அவரை மன்னித்து விடுகிறோம். அல்லது வேறு வழியில்லாமல் பழக்கிக்கொண்டோம். அனால் இவர் நம்மை போன்ற ஒருவர். 53 வயதில் கொஞ்சம் பணம் சேர்த்த பிறகு விக் வைத்துக்கொண்டு ஹீரோயினை காதல் செய்வது, டூயட் பாடுவது, வில்லன்களை எட்டி உதைப்பது போன்றவற்றை செய்ய நமக்கு தயக்கம் இருக்கும். சமுதாயம் என்ன சொல்லுமோ? மனைவி என்ன நினைப்பாளோ? பிள்ளைகள் ஏசுமோ? ஊர் கிண்டல் அடிக்குமோ? என்று. அவற்றை எல்லாம் உதாசீனப்படுத்தி நடித்து உலகமெங்கும் திரையிட்ட அந்த திராணிக்கே அண்ணாச்சிக்கு ஒரு சல்யூட்.

வெள்ளி, ஏப்ரல் 07, 2023

அயலி

 

சினிமாவின் பலமே வேறுபாடில்லாமல் கொண்டாடும் அதன் பலதரவகைப்பட்ட சமத்துவம் தான்.

ஏழை பணக்காரன், ஆண் பெண், மேல் ஜாதி கீழ் ஜாதி போன்ற எந்த பாகுபாடும் இல்லாமல் திறமை இருப்பவர்களை முழுதாக அங்கீகரித்துக்கொள்ளும். நெபோட்டிசம் போன்ற தொல்லைகள் இருந்தாலும் கூட தகுதியுள்ளவர்கள் மகுடம் சூட்டாமல்  இல்லை என்பதை மறுக்கவியலாது. இந்த ஒரே காரணம் தான் சினிமாவை தலைமுறை கடந்து கொண்டாட வைத்துக்கொண்டிருக்கிறது. அப்பேர்ப்பட்ட சினிமாவின் நீட்சியாக  கடந்த சில வருடங்களாக வெப் சீரிஸ் கிளர்ந்து எழுந்துள்ளது.

சூழல், விலங்கு, வதந்தி போன்ற தரமான தமிழ் வெபசீரிஸ்களின் வரிசையில், ஏன் அவற்றையெல்லாம் விஞ்சும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ஒரு மகுடம் தான் இந்த அயலி.



பொது வெளியில் பேசத்தயங்குகிற ஒரு விஷயத்தை எல்லோரும் பாராட்டி கொண்டாடும் விதமாக படைத்ததற்கே இயக்குனர் முத்துகுமாருக்கும் தயாரிப்பாளர் குஷ்மாவதிக்கும் பாராட்டுக்கள்.

நடித்திருக்கும் அனைவருமே பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள் என்று சொல்லுவதை விட அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு கதையுடன் ஒன்றிய நடிப்பு. முப்பது நிமிடங்கள் கொண்ட எட்டு அத்தியாயங்கள். மொத்தமாக இருநூற்றி நாற்பது நிமிடங்கள். இரண்டு முழு நீள படங்களுக்கான நேரம். சூப்பர் ஸ்டாரே நடித்தாலும் யோகி பாபு தேவைப்படும் இந்த வேளையிலும் கூட நான்கு மணி நேரம் நம்மை கட்டி போட்டிருக்கும் அயலி திரைக்கதையை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

வயதுக்கு வந்த பெண் பிள்ளைகளின் படிப்பை நிறுத்தி உடனுக்குடன் அந்த ஊருக்குள்ளேயே திருமணம் செய்துவைப்பதாக அயலி என்ற பெண் தெய்வத்திற்கு சத்தியம் செய்து அந்த கட்டுப்பாட்டை மீறாமல் வாழும் ஒரு கிராமத்தில், தான் விரும்பும் படிப்பை தொடர்வதற்கும் அதை மற்றவர்களுக்கு கொடுப்பதற்கும் வயதுக்கு வரும் ஒரு பெண் எவ்வாறும் போராடுகிறாள் என்பதே இந்த வெப்சீரிஸின் கதை.

அடர்த்தியான அர்த்தம் நிறைந்த வசனங்கள் மிகப்பெரும் பலம். தமிழ் என்கிற protagonist கதாபாத்திரத்தில் நடிகை 'அபி நக்ஷத்திரா'. ஆகப்பொருத்தமான தேர்வு. முழு வெப் சீரிஸையும் தாங்கி நிற்பது இந்த அபி தான்.  அயலி என்பது அந்த பெண் தெய்வமாக இருந்தாலும் நமக்கு என்னவோ தமிழ் கதாபாத்திரம் தான் அயலியாகத் தெரிகிறது. பதினைந்து வயது இருக்கலாம். முதிர்ச்சியானதொரு நடிப்பு.

தான் படிக்கச்செல்லும் பள்ளி முதற்கொண்டு ஊரில் உள்ள அனைவருமே வயதுக்கு வந்த பெண் பிள்ளைகளின் கல்விக்கும் வாழ்க்கைக்கும் எதிராக நிற்கிறார்கள் என்பதை உணரும்போது வெளிப்படும் ஆற்றாமையாகட்டும், கணுக்காலில் வழிந்தோடும் குருதியை கண்டு பதட்டப்படும் இடமாகட்டும், சிவப்பு மை மேலே விழுந்த பின் ஆசுவாசப்படுத்தி கொண்டு TSR வாத்தியாருக்கு நன்றி சொல்வதாகட்டும், தாய் குருவம்மாளை செல்லமாக அதட்டி உருட்டி வழிக்கு கொண்டுவருவதாகட்டும் போன்ற இன்னும் பல ஆகட்டும்களில் நடிப்பு தெறிக்கிறது. வெப்சீரிஸ் என்ற ஒரு கேட்டகிரியில் தேசிய விருதென்று ஒன்று இருந்தால் அது யாளி அபி நக்ஷத்திராவுக்குத்தான்.

இவரின் கூட்டாளியாக லவ்லின் சந்திரசேகர். இவர் யாரென்று தெரியவேண்டுமென்றால் நீங்கள் ரஜினியின் 'தில்லு முல்லு' பார்க்க வேண்டும். இறுதி காட்சியில் ஸ்கேட்டிங் ஷூ போட்டுகொண்டு படபடவென்று பேசும் ரஜினியின் தங்கை விஜி சந்திரசேகரின் பெண் தான் இந்த லவ்லின் சந்திரசேகர். சளைக்காமல் பதினாறடி பாய்ந்திருக்கிறார். பதின்ம வயதின் பூரிப்பும், குழப்பமும், கிளர்ச்சியும் என பந்தாடியிருக்கிறார். பட்டாம்பூச்சியாய் சிறகடித்து பறந்து வளைய வரும் இவர், திருமணம் நிச்சயித்த இரண்டாம் எபிசோட் முதல் இறுதி வரை ஆற்றாமையை கோபத்தில் அழுதுகொண்டே இருக்கிறார். கணவர் இறந்த பின் ஒரு சொம்பில் இருந்து அவர் பூக்களை எடுத்து அழுதுகொண்டே தரையில் விசிறும் தருணம் பேரதிர்ச்சி. ஒருவகையில் இவரின் அழுகை தான் தமிழ் கதாபாத்திரத்துக்கு தனது கூட்டில் இருந்து வெளிவரும் உத்வேகத்தை தருகிறது.

அபியின் அம்மா குருவம்மாளாக 'அனுமோல்'. தனித்துவமான குரலில் ஆரம்பிக்கும் இவரது கதாபாத்திரம் போகப்போக அயலி சீரிஸின் ஆகிருதியாகி விடுகிறது. எங்கே கிரமாத்தில் எல்லோரிடமும் சொல்லி தமிழின் படிப்புக்கு தடையாகிவிடுவாரோ என்ற பதைபதைப்பை பார்ப்பவர்களின் மனதில் ஏற்படுத்தும் ஒரு நடிப்பு. அக்கடத்து தேசத்தில் புடம்போட்ட அனுபவம். பாத்திரத்தில் ஜொலிக்கிறார். தமிழ் சொல்வதுபோல கிராமத்திற்கு அயலியென்றால் தமிழுக்கு அவள் அம்மா குருவம்மாள் தான் அயலி.

டீச்சர் கதாப்பாத்திரத்தில் வரும் TSR நடிகரின் முகபாவனையிலேயே நமக்கு பல உணர்வுகள் பீறிடுகிறது. அவரின் முகத்தை க்ளோஸப்பில் வைத்து சில இடங்களில் கோபத்தையும் பீதியையும் பல இடங்களில் சிரிப்பையும் வரவழைத்திருக்கிறார் இயக்குனர். பெண்களின் கல்விக்கும் வாழ்க்கைக்கும் பங்கம் வைக்கும் கதாபாத்திரத்திற்கு கனகச்சிதமான தேர்வு TSR.

மைனராக வரும் லிங்கா, தவசியாக வரும் மதன், சிங்கம்புலி, 'உச்' கொட்டும் கணக்கு வாத்தியார்  என எல்லோருமே நிறைவான கதாபாத்திரங்களாக மனதில் நிறைகிறார்கள். 'ரேவா'வின் இசை பக்க பலம். சந்தோசம், துக்கம், அதிர்ச்சி, ஆச்சர்யம், கோபம், இயலாமை என எல்லா உணர்வுகளையும் உறுத்தலில்லாமல் பிரதிபலிக்கிறது. மோகன் ராஜா, அமீர், செல்வராகவனின் முதல் தேர்வான ஒளிப்பதிவாளர் ராம்ஜி தான் அயலிக்கும் சினிமாட்டோகிராஃபி. இரவில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் அயலி கோவிலின் அழகு, சடங்கு மற்றும் திருமண நிகழ்வுகள் எல்லாம் கண்ணை பறிக்கும் செல்லுலாய்டு ஓவியங்கள்.

ஒவ்வொரு பிரேமில் வரும் ஆண்களும் ஆணாதிக்கத்தை முன் நிறுத்துகிறார்கள். அதற்கு அவர்கள் முன் வைக்கும் வாதம் பெண்கள் எங்கே தங்களை மீறிப் போய்விடுவார்களோ என்ற எண்ணம் தான். அது வெறும் எண்ணம் மட்டும் இல்லை. பயம். இந்த பாதுகாப்பற்ற உணர்வே ஆண்களை குதர்க்கமாக யோசிக்க வைத்து பல சித்தாந்தங்களை உருவாக்கி அந்த சித்தாந்தங்களுக்கு துணையாக கோவில், தெய்வம், முன்னோர், வழிபாடு, வழக்கம் என எண்ணாயிரம் கதைகளை இட்டுக்கட்ட வைத்து அப்பப்பா, தலை சுற்றுகிறது. 'உன் அறிவுக்கு எது சரியென்று தெரிகிறதோ அதை செய்' என்று சொல்லும் தமிழ் கதாப்பாத்திரம் ஒரு கட்டத்தில் சோர்ந்து போய் விடுகிற அளவுக்கு சாங்கியங்கள். இவ்வளவு காலம் இந்த ஆணாதிக்க பேரினவாதத்தைஇத்தனை உரிமை மீறல்களை தாண்டி தனக்கென ஒரு வெளியை ஏற்படுத்தி வாழ்ந்து  கொண்டிருக்கிறார்கள் என்பதே பெண்களின் அசாத்திய வலிமையை உணர வைக்கிறது.

கலாச்சாரம், பண்பாடு, ஆன்மிகம் என வெட்டிக்கதை பேசி பெண்களை அடிமையாய் நடத்திக்கொண்டிருக்கும் சமூகத்தின் மேல் விழ ஆரம்பித்திருக்கும் சாட்டையடி தான் இந்த அயலி தொடர். பேசுவதற்கு இன்னும் நிறைய பொதிந்து வைத்திருக்கிறது இந்த சமூகம். முழு வீச்சுடன் உரையாடலை மீண்டும் தொடங்குங்கள் முத்துக்குமார்.

காத்திருக்கிறோம்.