திங்கள், டிசம்பர் 19, 2022

Beast of Bangalore: Indian Predator



90களில் பெங்களூரில் நடைபெற்ற தொடர் கொலை மற்றும் அந்த கொலையாளியை பற்றிய டாகுமெண்டரி.

சில எண்ணங்கள் 

1. தனியாக இருக்கும் பெண்கள் மட்டுமே உமேஷ் ரெட்டியின் டார்கட். இவன் ஒரு CRPF ஊழியன். வெளியே பயிரை மேய்ந்த கதை. கற்பழித்து கொலை செய்வது மட்டுமே இவனது பாணி. முதல் முறை சிக்கியது முதல் தப்பிப்பது மீண்டும் மாட்டுவது மீண்டும் தப்பிப்பது என்று இதுவே ஆறு முறை நடந்திருக்கிறது. பதினெட்டுக்கும் மேற்பட்ட பெண்கள். கொலைக்கான மோட்டிவ் என்பது சரியாக தெரியவில்லை. ஒரு வித சைக்கோ மனநிலை என்று மட்டுமே தெரிகிறது 

2. இவன் காரணமாத்தான் வீட்டு வாசலில் க்ரில் கேட் வைக்க ஆரம்பித்தனர் என்று ஒரு போலீசார் சொல்வது நம் முதுகுத்தண்டை சில்லிட வைக்கிறது. 

3. மூன்று எபிசோட்கள். மிக மெதுவாக செல்கின்றன. 1.5x ஸ்பீடே மெதுவாகத்தான் இருக்கிறது. 

4. பத்திரிக்கைக்கே தெரியாத பல விஷயங்களை டாகுமெண்டரிக்காக சேகரித்திருக்கின்றனர். அது சுவாரஸ்யமாக இருக்கிறது. 

5. கொலைகாரனை rarest of rare என்கிற கேட்டகிரியில் தூக்கு தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. இருபது வருடங்களுக்கு மேல் நடந்த அந்த கேஸில் கடந்த மாதம் முப்பது ஆண்டுகளாக தண்டனை குறைக்கப்பட்டிருக்கிறது. 

6. இரண்டு விஷயங்கள் ஈர்த்தன. ஒரு ஆண் விசாரணை அதிகாரி ஒருவர் இவ்வாறு கூறுகிறார். கொலைகாரன் எப்பொழுதுமே கற்பழித்து மட்டுமே கொலை செய்கிறான். கொலையான பெண்களை கூராய்வு செய்யும்பொழுது இதை உறுதி செய்கின்றனர். அனால் இவனிடமிருந்து தப்பித்த பெண்கள் இவன் கற்பழிப்பு செய்ததை மறைத்து திருட்டு கேஸ் என்று மட்டுமே கம்ப்ளெயிண்ட் கொடுத்திருக்கின்றனர். இரு பெண்களின் பிறழ் சாட்சி இவனின் தண்டனையிலிருந்து தப்பிப்பதற்கு ஏதுவாக இருந்திருக்கிறது. ஏன் பெண்கள் அந்த உண்மையை சொல்ல தயங்குகின்றனர் என்று கேட்கிறார். அதை அவர்களிடம் தான் கேட்க வேண்டும் என்று ஒரு கேள்வியையும் வைக்கிறார்.

7. பெண்கள் அந்த உண்மையை வெளியில் சொல்ல தயங்குவது ஏன் என்று ஆண்களிடம் தான் கேட்க வேண்டும்? சமுதாயம் அந்த சுதந்திரத்தை பெண்களுக்கு அளித்திருக்கிறதா? மற்றும் தீர்ப்பு எழுதிய ஒரு ஆண் நீதிபதியின் இந்த கேசின் மீதான பார்வை ஆணாதிக்க மனோபாவத்தை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்துகிறது என்று ஒரு பெண் மனோதத்துவ நிபுணி விவரிக்கிறார். 

8. டாக்குமென்டரியின் மற்றுமொரு சிறப்பு, கொலையுண்ட பெண்ணின் 7 வயது சிறுவனை பேட்டிகண்டது. தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வளருகிறான் சிறுவன். பள்ளி சென்று வீடு திரும்பிய சிறுவன் விளையாட மைதானத்திற்கு செல்கிறான். சிறிது நேரத்தில் வீடு திரும்பும் அவன் ரத்த வெள்ளத்தில் அவனது தாய் கீழே கிடப்பதை காண்கிறான். கொலையாளி மிக சாந்தமாக இவனது தாயிற்கு உடல் நலன் சரியில்லை. ஆதலால் மருத்துவரை அழைத்து வருகிறேன் என்று இவனை காவல் வைத்துவிட்டு தப்பித்திருக்கிறான். ஒன்றுமறியாத சிறுவனோ அவனது தாயின் அருகில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக இருந்திருக்கிறான். அண்டை அயலார் வந்து பார்த்து போலீசுக்கு தெரிவித்து பின் அந்த சிறுவனை ஒரு கான்ஸ்டபிள் அவரது வீட்டிற்கு அழைத்து சென்று வளர்த்தது, அதன் பிறகு அவனை ஒரு ஹோமில் சேர்த்தது, ஒரு தம்பதி தத்து எடுத்தது, மற்றும் அந்த சிறுவன் வளர்ந்து தற்போது இருபத்தைந்து வயதில் அவனை பேட்டி கண்டது என்று விக்டிமின் கிளை கதை வரை விரிகிறது இதன் சிறப்பு. 

9. என்ன மாதிரியான மன நிலை அந்த மனிதனை இவ்வாறு செய்ய தூண்டியது என்று அறிந்து கொள்ள முற்படுவது தான் சமுதாயத்தின் பிணியை போக்கும் ஒரே வழி 

10. சற்று சஞ்சலப்படுத்தும் டாகுமெண்டரி தான். 

ஞாயிறு, டிசம்பர் 18, 2022

முதுமையில் வறுமை



ஐம்பது ஐம்பத்தைந்து வயதை ஒத்த பெரியவர்களிடம் பேசினீர்கள் என்றால் ஜம்பமாக தங்களது பிள்ளைகள் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார்கள் அல்லது செட்டில் ஆகிவிட்டார்கள் என்று சொல்வதை பார்க்கலாம். சாரி. கேக்கலாம். இந்த ஜம்பங்கள் பொதுவாக கல்யாண வீட்டில் அல்லது ஏதேனும் விசேஷத்தில் நடக்கும்.

இந்த பெருமை பீதாம்பரம் எல்லாம் ஒரு வயது வரை தான். சிலருக்கு ஐம்பத்தி எட்டு. சிலருக்கு எழுபது. ஏன் ஐம்பத்தி எட்டு என்றால் வேலையிலிருந்து ஒய்வு பெரும் வயது அது. அதற்குப்பிறகு மாத சம்பளம் என்பது கிடையாது. பென்ஷன் என்பது 2005க்கு முன் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு மட்டும் தான். அதற்கு பிறகு சேர்ந்தவர்களுக்கு மூவாயிரம் சொச்சம் போல தான் வரும். அடுத்ததாக ஏன் எழுபது வயது என்கிறேன் என்றால் அந்த வயதில் உடல் தளர்ந்துவிடும். பென்ஷன்தாரராகவோ அல்லது ஒரு வெற்றிகரமான தொழிலதிபராகவோ இருந்தாலும் அதாவது வெல்திற்கு (wealth) பஞ்சமில்லை என்றாலும் ஹெல்த் தன் வேலையை காட்டும் மூப்பு அது. உடலில் வலுவிருக்காது. யோகாசனம் உடற்பயிற்சி ஆரோக்யமான உணவு என இதையெல்லாம் பின்பற்றுகிற ஆள் என்றால் விரல் விட்டு எண்ணிவிடலாம். சாத்தியமற்ற இலக்குகளை நிர்ணயித்து நாம் ஓடிக்கொண்டிருக்கும் ஓட்டத்தில் 'தன் உடல் பேணல்' என்னும் ஒரு சங்கதியே யாரிடமும் இல்லை. ஆகையால் அந்த தள்ளாத வயதில் ஓட்டம் எல்லாம் ஓடி முடிந்த பிறகு தன்னுடைய பிள்ளைகள் தன் அருகில் இருந்தால் தேவலாம் என்று தோன்றும். பெயரன் பெயர்த்திகளை கொஞ்சலாம் என்ற எண்ணம் தலைதூக்கும். ஆனால் நடப்பது என்ன?

உலகமயமாக்கலுக்குப் பிறகு ஒரே ஊரிலேயே படித்து அங்கேயே வேலை தேடி திருமணம் செய்து உற்றார் உறவினர் என்று சொந்தபந்தத்துடன் வாழ்ந்தோம் என்ற கொடுப்பினை 80க்கு பிறகு பிறந்தவர்களுக்கு இல்லை. படிப்பிற்கும் பரதேசம் செல்ல வேண்டும். திரவியம் தேடுவதற்கும் திரைகடல் ஓட வேண்டும். மணம். அது மனம் போன போக்கில். பெற்றோரின் நிலைமை? ஊனிற்கே ஊன்றுகோல் இல்லை எனும்போது மற்றவை கேள்விக்குறியாய் நிற்பதில் ஆச்சர்யம் எதுவும் இல்லை.

இது நம் தலைமுறையின் எழுதப்படாத நியதி. குறை என்று சொல்வதற்கு ஒன்றும் இல்லை. எந்த பெற்றோரானாலும் தமது பிள்ளைகள் எங்கு சென்றாலும் நன்றாக இருக்க வேண்டும் என்பதே அவர்களின் பிரார்த்தனையாக இருக்கும். ஆகையினால் தற்போது பெற்றோரை விட்டு பிரிந்திருப்போர் குற்ற உணர்ச்சிக்கு ஆளாக வேண்டாம். மாறாக ஓரிரு நாட்களுக்கு தொலைபேசியில் ஒரு உரையாடல் அல்லது குழந்தைகளை அவர்களிடம் வீடியோ காலில் அடிக்கடி காணித்தல் போன்று சந்தர்ப்பம் கிடைக்கும் நேரங்களில் பெற்ற கடனை முடிந்த வரை தீர்த்தல் நலம்.

ஆனால்,

ஆனால்,

இனிமேல் வெகு கவனமாக இருக்க வேண்டியது நீங்களும் நானும் தான். அதாவது நாற்பதை தொடும் பெற்றோர்கள் தங்களது ஆழ்மனதில் அச்சாரமிட்டு கொள்ளவேண்டியது இதைத்தான். உங்களது குழந்தைகள் முதுமையில் உங்கள் அருகில் இருக்காது. அட இது தெரிந்த விஷயம் தானே என்று நீங்கள் கேட்கலாம்?

தெரிந்தது தான். இல்லை என்று சொல்லவில்லை. இன்று நீங்கள் பரதேசம் சென்றிருப்பது உங்களது திறமையினால். அல்லது உங்களது முயற்சியினால். வெகு சிலர் மட்டுமே நமது தலைமுறையில் படிப்பிற்காக வெளியே சென்றிருப்பர். மற்றவரெல்லாம் பணியின் பொருட்டே உள்ளூரில் இருந்து வெளியேறுகின்றனர். ஆனால் நாளை உங்கள் பிள்ளை வெளியில் சென்று படிக்க போகிறது என்றால் அது உங்களது இருபது இருபத்தைந்து வருட உழைப்பின் ஊதியத்தில் தான். மெரிட் மற்றும் ஊக்கத்தொகை கேஸ்களை இதில் புறந்தள்ளி விடலாம். படிப்பதற்காக டாட்டா காட்டிவிட்டு செல்லும் பிள்ளைகள் மீண்டும் வருவது என்பது அவர்களுக்கு இயலாத காரியம். நாக்கில் தேன் தடவி விட்ட பிறகு சுவை தெரியாமல் இருக்குமா என்ன? தவிரவும் எப்பொழுதேனும் அவர்களை பார்க்க வேண்டும் என்று எண்ணி அவர்களை ஒருவேளை நீங்கள் அழைத்தால் 'யாரையும் சார்ந்து இருக்காமல் தைரியமாக தனித்து வாழுங்கள். முதுமையை என்ஜாய் செய்யுங்கள்' என்ற நமக்கே வாழும் கலையெல்லாம் சொல்லித் தருவார்கள்.

உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன். என்னுடன் பணிபுரியும் ஒருவர் தான் ஒய்வு பெரும் நேரத்தில் தன் பிள்ளையை கல்வி கற்பதற்காக வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்தார். அதுவும் எப்படி என்றால் தனது முப்பது வருட சம்பாத்தியத்தில் கட்டிய வீட்டின் பத்திரத்தை அடமானம் வைத்து கடன் வாங்கி அனுப்பினார். கிளம்பிய அந்த பிள்ளையோ படித்து முடித்த பின் குடியுரிமை கிடைக்கும் பொருட்டு அங்குள்ள வெளிநாட்டு பெண்ணை மணம் புரிந்து கொண்டான். மருந்துக்கும் இந்த பக்கம் எட்டி பார்க்கவில்லை. கடனை வட்டியுடன் இவர் கட்டிக் கொண்டிருக்கிறார். போதாக்குறைக்கு ஒரு முறை மாரில் வலி வந்தபோது உடன் பணிபுரிந்த ஒய்வு பெற்ற ஊழியர்களின் பொருள் மற்றும் உடல் உதவியுடன் பிழைத்துக்கொண்டார். இது போன்றவைகள் உங்களைச்சுற்றியும் நடந்துகொண்டிருக்கும். அவசரகதியில் இதை உணரக்கூட நமக்கு நேரமில்லாமல் பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடிக்கொண்டிருப்போம்.

சரி. என்ன [பண்ண வேண்டும்?

1. உண்ணாமல் நேரம் காலம் பார்க்காமல் உழைத்து சேர்த்த செல்வத்தை முழுவதும் குழந்தைகளுக்கு என்று ஒதுக்கிவிடாதீர்கள். தனக்கு மிஞ்சி தான் தானமும் தர்மமும். என் குழந்தை என் ரத்தம் என்ற ஈர வெங்காய செண்டிமெண்டெல்லாம் வேண்டாம். நாளை வயதான காலத்தில் துணையின்றி மகனோடோ மகளோடோ தள்ளாத வயதில் ஒரு வேளை உணவுக்கு கூச்சத்துடன் நிற்பதை மனதில் இருத்தி பாருங்கள். அவ்வாறெல்லாம் என் குழந்தை செய்யாது என்று நினைத்தால் நீங்கள் உங்கள் பெற்றோருக்கு அவர்களது கடைசி காலத்தில் என்ன செய்தீர்கள் அல்லது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று ஒரு முறை நிறுத்தி கவனித்து பாருங்கள். இதில் பன் மடங்கு பெருகித்தான் நாளை நமக்கும் வரும் என்ற நிதர்சனத்தை அவதானியுங்கள். கர்மா ரிட்டர்ன்ஸ் போன்ற வஸ்துவுக்கே நான் போகவில்லை. தலைமுறை இடைவெளி அந்த அளவுக்கு இருக்கிறது.

2. ஓய்வுக்கு பின் மாத பென்சன் வந்தால், இறக்கும் வரை நீங்களும் உங்கள் துணையும் மூன்று வேளை உணவு, கோவில் மற்ற போக்குவரத்து செலவுகள் என ஒப்பேற்றிவிடலாம். தனியாரில் தான் வேலை பார்க்கிறேன் என்று நீங்கள் சொன்னால், ஓய்வுக்குப்பின் செலவழிப்பதற்காக இன்றே உங்கள் சம்பாத்தியத்தில் குறைந்தபட்சம் முப்பது சதவீதத்தை சேமித்து வைத்து விடுங்கள். இன்று மாதச்செலவு முப்பதாயிரம் என்றால் முப்பது வருடத்தில் மூன்று லட்சம் ஆகலாம். வெறுமே பணத்தை வைக்காமல் ம்யூச்சுவல் பண்ட், ஸ்டாக், தங்கம், நிலம் போன்றவற்றில் முதலீடு செய்யுங்கள். 6% முதல் அதிகபட்சம் 15% தான் வட்டி கிடைக்கும். ஒன்றை இரண்டாக்குகிறேன் என்று வேறு எதிலாவது போட்டு ஏமாந்துவிடாதீர்கள். முதலுக்கே மோசம்.

3. முன்பே சொன்னது போல், பேங்க் பாஸ்வர்ட், பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றை துணையிடமோ உற்ற நட்புகளிடமோ சொல்லி வைப்பது மிக நன்று. எதிர்பாராத சம்பவங்கள் ஏதேனும் நடந்தால் இந்த தகவல் அவர்களை காப்பாற்றும். இன்றைய தேதியில் சுமார் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் அனாமத்தாக இந்திய வங்கிகளில் கோரப்படாமல் கிடக்கிறது என்பதை நினைவில் கொள்ளவும்.

4. அறுபது வயதில் ஓய்வுபெற்ற பின் அதுவரை அறக்க பறக்க ஆறாவது கியரில் ஓடிய வாழ்க்கையாக இல்லாமல் மிக மெதுவாக நகரும் வாழ்க்கைக்கு தகவமைத்து கொள்ளுவது என்பது சிரமமான ஒன்று தான். செய்து தான் ஆக வேண்டும். அதுவரை அர்த்தம் இல்லாமல் பேசிய பேச்சுக்களை கேட்பதற்கு அலுவலகத்தில் ஒரு கூட்டம் இருந்திருக்கும். ஆனால் சாய்வு நாற்காலியில் நீங்களும் அருகில் உங்கள் துணையும் தான். இதுநாள் வரை உங்கள் துணையிடம் நீங்கள் எந்த அளவுக்கு அன்பு செலுத்தியிருக்கிறீர்கள் என்பதை ஓய்வுக்குப் பின் தெரிந்து கொள்ளலாம். எனக்கு தெரிந்த ஒருவர் ஒய்வு பெற்ற ஒரே வாரத்தில் சூசைட் அட்டெம்ப்ட் செய்தார்.

5. 'காஃபி போடவா?' என்று கேட்க யாரும் இல்லாமலோ அல்லது 'கிழம் இன்னும் இழுத்துட்ருக்கு' போன்ற வசவுச்சொல்லோ கேட்காமல் இருக்க வேண்டுமென்றால் நீங்கள் உயிருடன் இருக்கும்பொழுதே சொத்தை வாரிசுக்கு எழுதி வைத்து விடாதீர்கள். 'என்னுடைய இறப்புக்கு பின்' என்று தெளிவாக உயில் எழுதி வைத்துவிடுங்கள். அன்பு கின்பு என்றெல்லாம் கணக்கு போட்டுக் கொண்டிருக்கக் கூடாது. வாரிசுகளின் வாழ்க்கைத்துணையை பொறுத்துதான் அதெல்லாம்.

6. ஒருவேளை ஏதேனும் ஒரு காரணத்திற்காக துணை நம்முடன் இல்லையென்றால் மிச்ச சொச்ச வாழ்க்கையை தனிமையில் கழிக்க முடியாது. அது ஒரு கொடிய சாபம். முதுமையில் தனிமை என்பதைத்தான் வறுமை என்று குறிப்பிடுகிறேன். ஆதலினால் இப்பொழுதிருந்தே ஒரு ஆத்மார்த்தமான நட்பை மெனெக்கெட்டு வளர்த்து கொள்ளுங்கள். வயதான காலத்தில் பொலபொலவென்ற பேச்சுத்துணைக்கு உதவும். பேங்கில் ஏன் வயதானவர்கள் கூட்டம் என்று புரிகிறதா? அல்லது தனியே இருக்கும் போது படிப்பது, வரைவது படம் பார்த்தல் அல்லது தூங்குவது என ஏதேனும் ஒன்றை பழக்கி உங்கள் மனதை திசை திருப்பி வைக்க முயற்சி செய்யுங்கள். பின்னர் கடிவாளம் போடுவது என்பது கடினம். உதாரணத்திற்கு சேர்ந்தாற்போல் உங்களால் இரண்டு பக்கம் எந்தவித டைவெர்சனும் இல்லாமல் வாசிக்க முடிகிறதா?

7. இந்த ஸ்ட்ரெஸ் டென்ஷன் போன்ற நோய்களில் இருந்து தப்பித்தால் நாம் அறுபது வயதில் இருந்து அதிகபட்சம் தொண்ணூறு தொண்ணூற்றைந்து வரை உயிருடன் இருக்கலாம். இப்பொழுதிருந்தே செலவை முடிந்த மட்டும் சுருக்கிக் கொள்ளலாம். சிக்கனத்திற்கும் கஞ்சத்தனத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது. வாழலாம். தலையை அடமானம் வைத்து வேண்டாம். ஆகையால் வருமானம் இல்லாமல் அந்த முப்பது வருடத்தை சமாளிக்க இப்போதே சேமிக்க ஆரம்பித்துவிட வேண்டும்.

8. அதிக நாட்கள் உயிரோடிருந்தாலும் எவ்வாறு வாழ்கிறோம் என்பது அதி முக்கியம். ஆதலால் கொஞ்சம் உடற்பயிற்சி ஆரோக்கியமான உணவு, தியானம், யோகா மற்றும் மூச்சுப்பயிற்சி என்று உங்கள் உடலுடன் உரையாடி வலு சேர்த்துக்கொள்ளுங்கள். இறுதி வரை நம்முடன் பயணிக்க போவது நம்முடைய உடல் மட்டுமே. Wealthy health is a must.

9. இறுதியாக உங்கள் வீட்டில், வீட்டுக்கு அருகில் அல்லது நீங்கள் சந்திக்கும் வயதானவர்களுடன் அவ்வப்போது பத்து பதினைந்து நிமிடம் நேரம் செலவழியுங்கள். யாராவது பேச மாட்டார்களா என்று நாமே பின்னால் தேடப் போகும் காலம் வெகு தொலைவில் இல்லை.

செவ்வாய், டிசம்பர் 13, 2022

மாமி கடையும் மார்க்கும்



கையேந்திபவன்களில் சுத்தம் என்றுமே கவலைக்கிடம் தான். பாத்திரம் கழுவுவது முதல் இலையில் பரிமாறப்படும் உணவு வரைக்கும் மனதிற்கும் உடலிற்கும் அதில் தொந்தரவு செய்யும் சமாச்சாரங்கள் அதிகம். அதையெல்லாம் கடந்து தான் நம்மவர்கள் உண்டு திரண்டு ஓடிக்கொண்டிருக்கின்றனர்.

இது இவ்வாறிருக்க ஊரகத்தில் இருக்கும் பி செக்டர் மாமி கடையில் கூட்டம் என்றுமே அலைமோதும். எந்த வகையில் கூட்டம் இருக்கிறது என்றால் இரவு 8 மணிக்கு மேல் சென்றால் சாம்பார் வாளியை நம்மீது கோரி ஊற்றாத குறையாக ' எல்லாம் காலி. இன்று போய் நாளை வா ' என்பார்கள். மறுநாள் சென்றால் மட்டும் உடனே கிடைத்துவிடுமா என்ன ? திருவிழாக்களில் இலவசமாக கொடுக்கப்படும் ஜூஸ் பாக்கெட்டுக்கு மல்லு கட்டுவது போல கூட்டம் அம்மும். அவர்களையெல்லாம் தாண்டி ' அண்ணே , ஹாஃப் பொங்கல் , ஒரு மெது வடை ' என்று சொல்லி அவர்களுக்கு கேட்டு உடனே தட்டை நீட்டிவிட்டால் போதும் , உங்களுக்கு சுக்கிரன் உச்சத்தில் இருக்கிறார் என்று மார் தட்டிக் கொள்ளவும். அதுவும் ஞாயிறு என்றால் சொல்லவே வேண்டாம். ஊரகத்து இல்லத்தரசிகள் அனைவரும் விடுமுறை. ஏழு மணி வாக்கிலே லுங்கியை மடித்து விட்டு மேலே ஒரு டிஷர்ட்டை மாட்டிக்கொண்டு ஒரு கூடையில் டிபன் பாக்ஸும் தூக்குவாளியையும் கொண்டுவந்து ஜபர்தஸ்தாக அந்த கரும்பலகையில் இறக்கி வைப்பார்கள் கனவான்கள் (கணவர்கள்). போதாக்குறைக்கு அன்று மட்டும் அதிகாலையில் சீக்கிரமாக எழுந்துவிடும் வாண்டுகளை இவர்கள் தலையில் கட்டிவிடுவார்கள்.

உணவின் ருசிக்கோ உடலின் ஆரோக்யத்துக்கோ என்றுமே அந்த உணவகத்தில் பங்கம் இல்லை. அப்படி இருந்திருந்தால் இவ்வளவு கூட்டமும் வந்திருக்காது , ' கடையை சாத்தியாச்சு. கிளம்புங்கோ ' என்றும் அவர்களும் சொல்லியிருக்க முடியாது.

பிரச்சினை அதுவல்ல. ஒரு நாள் இரவு 7 மணியிருக்கும். கோடைகாலமாதலால் போகலாமா வேண்டாமா என்று சூரியன் தயங்கிக்கொண்டிருக்கும் ஒரு விதமான அந்திவேளை. அந்த வழியாக வந்தபொழுது மாமி கடையின் மார்க்கை பார்த்தேன். மார்க் என்பது அவரது அடைமொழி. மார்க்கை எந்த கோலத்தில் பார்த்தேன் என்றால் , அவர் எக்லவ் கடையின் பின்புறம் உள்ள சுவற்றில் சாய்ந்து கொண்டு நின்றிருந்தார். மனிதன் காலையிலிருந்து பரிமாறி பரிமாறி ஓய்ந்துவிட்டாரோ என்று சந்தேகித்த நேரத்தில் உற்று கவனித்தால் அவரது இடது கை இடுப்பிற்கு கீழே இருக்கிறது. சுவற்றில் ஈரம் தெரிகிறது. சிறுநீரை பெருநீராக கழித்துக்கொண்டிருந்தார். இது எப்போது பொதுக்கழிப்பிடமாக மாறியது என்று எண்ணிக்கொண்டிருந்த வேளையில் கிராதக புத்தி வேறு மாதிரி யோசிக்க வைத்தது. ஆண்களில் பெரும்பாலோருக்கு சிறுநீர் கழித்து கை கழுவும் பழக்கம் இருப்பதில்லை. எவ்வளவு உயர் பதவியில் இருந்தாலும் இது செல்லும். எவருடைய செல்பேசியையும் பொருளையும் தொடுவதற்கு முன் யோசித்துக் கொள்ளுங்கள்.

அந்த சந்தேகத்துடனேயே மார்க்கை பாலோ செய்தேன். மருந்துக்கும் அவர் பேண்ட்டில் கூட கையை துடைக்கவில்லை. வெகு வேகமாக பின்வழியாக உள்ளே சென்றவர் , ' அண்ணே ரெண்டு இட்லி ' என்றவருக்கு *ஞ்சை தோட்ட கையால் பரிமாறிக்கொண்டிருந்தார். போதாக்குறைக்கு இவர் கையால் தான் பில்டர் காஃபி சாப்பிடுவேன் என்று ஒரு ஓய்வு பெற்ற மேலாளர் ஒற்றைக்காலில் தவம் புரிந்து கொண்டிருந்தார்.

அன்றிலிருந்து இன்று வரை அங்கு சென்றதே இல்லை. மேலும் அந்த காட்சி மனக்கண்ணை விட்டு அகல மறுக்கிறது. இருபாதயிரம் மக்கள் நம்பி வரும் ஒரு உணவுக் கூடத்தில் ஒரு குறைந்தபட்ச தன் சுத்தத்தையாவது பேண வேண்டாமா ?

இது அந்த கடையில் மட்டுமல்ல. ஊரகத்தில் உள்ள எல்லா உணவகங்களுக்கும் இதே நிலை தான். ஊரகம் ஏன் ? ஊரில் உள்ள ஒளிர்ந்து மிளிரும் படோடோப கடைகளிலும் இதுதான் நிலைமை.

என்ன செய்யலாம் ? முடிந்தவரை வீட்டிலேயே உண்டு பணத்தையும் ஆரோக்கியத்தையும் மிச்சப்படுத்தலாம் அல்லது கண்டும் காணாமல் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தலாம்.