புதன், செப்டம்பர் 15, 2021

டிக்கிலோனா


சினிமாவில் ஜெயிப்பதற்கு உழைப்பு அதிர்ஷ்டம் காலம் என இவையனைத்ததும் எந்த அளவுக்கு கைகூடிவர வேண்டுமோ அதை விட மிக முக்கியம் அவர்களது குடும்பத்தில் ஒருவர் சினிமாவில் இருப்பது.  இந்த சமன்பாட்டை பொய்யாக்கி தனக்கென ஒரு பார்முலாவை சினிமாவிலும் தனிப்பட்ட  வாழ்விலும் கடைப்பிடித்து தனி ரசிகசாம்ராஜ்யமே நடத்தி வருபவர் அல்டிமேட் ஸ்டார் அஜித். இவரைப்போலவே எந்தவித பின்புலமும் இல்லாது சின்னத்திரை காம்பியரிங்கில் இருந்து பெரியத்திரையில் கோலோச்சிக்கொண்டிருப்பவர் SK என்னும் சிவகார்த்திகேயன். முக்கியமாக குழந்தைகளை கவர்ந்தது இவரது மிகப்பெரிய ப்ளஸ். குறைந்தபட்சம் இரண்டு டிக்கட்டுக்கு க்யாரண்டி.





இந்த இருவரைதவிர்த்து சினிமாவில்  வெற்றியை ருசிக்க தனியொரு ஆளாக போராடிக்கொண்டிருப்பவர், இந்த பத்தியின் நாயகர் சந்தானம். சினிமாவை அதிரிபுதிரியாய் கலாய்க்கும் லொள்ளுசபாவில் தனது பயணத்தை ஆரம்பித்து பின் அதே சினிமாவில் நாயகனாய் தன்னை நிலைநாட்ட துடிப்பது நகை முரண் தான் என்றாலும், லொள்ளுசபா சந்தனமாக, ஒரு காமெடியனாக மட்டுமே நமக்கு தெரிந்த சந்தானத்தை நம்பி கோடிக்கணக்கில் முதலீடு செய்ய தயாரிப்பாளர்கள் தயாராய் இருப்பது, திறமை இருந்தால் திரையில் மிளிரமுடியும் என்று மிடில் க்ளாஸ் இளைஞர்களுக்கு நம்பிக்கை தரும் வரவேற்கத்தக்க வெற்றியே. கிட்டத்தட்ட பன்னிரண்டு படங்களில் கதாநாயகன், ஹீரோவாய் நடிக்க வேண்டும் என்பதற்காக காமெடியனாக நடித்து சம்பாதிப்பதை விடுத்து வெள்ளித்திரையில் ஏழு வருட போராட்டங்கள், நான்கு படங்களுக்கு தயாரிப்பாளர் என இதுவும் வாழ்த்துவதற்கான தருணம் தான்.


தற்போது வெளியாகிருக்கும் இவரது படம் டிக்கிலோனா.  தனது காதல் திருமணத்தை சரி செய்ய கால யந்திரத்தை உபயோகப்படுத்தும் இளைஞன் இறுதியில், இக்கரைக்கு அக்கரை பச்சை என்று உணருவதே கதையின் கரு. சந்தானம் ஸ்லிம் ஆக ட்ரிம் ஆக இருக்கிறார். 41 வயது என்று சொல்லவே முடியாது. அதே டைமிங் ரைமிங் காமெடி  என்றாலும் சில இடங்களில் உருவ கேலி காமெடி நம்மை அசௌகர்யப்படுத்துகிறது. இரண்டு ஹீரோயின்கள் மூன்று சந்தானம், ஆனந்தராஜ், முனீஸ்காந்த், நிழல்கள் ரவி என படம் கேரக்டேர்களால் நிறைந்து இருக்கிறது. வெடிச்சிரிப்பு சிரிக்கவைக்கும் காமெடியாக இறுதியில் ஒரு ட்விஸ்ட் எதிர்பார்க்காதது. ஒர்கவுட்டும் ஆகியிருக்கிறது. கெஸ்ட் அப்பியரன்ஸ் போல யோகி பாபு கேரக்டர். 


"பேர் வச்சாலும் வைக்கமாப்போனாலும்" என்ற பாடலை ரீமிக்ஸ் செய்திருக்கிறார்கள். கமலுடைய இடத்தை யாராலுமே நிரப்பமுடியாது என்பதால் பாடலில் நடிப்பு ரசிக்கவில்லை. இருந்தாலும் ராஜாவின் ஒரிஜினல் இசை, காதை பதம்பார்க்காத ரீமிக்ஸ் இசை, கொஞ்சமே கொஞ்சம் நடன அசைவு, கலர்புல்லான ஒளிப்பதிவு என என்கேஜிங்காக இருக்கிறது. கால இயந்திரத்தை பயன்படுத்தி முன்னே பின்னே என கதை பயணித்தாலும் குழப்பமில்லாமல் திரைக்கதை எழுதிய இயக்குனருக்கு சபாஷ். 


சந்தானமும் காமெடியும் உங்களுக்கு பிடிக்குமென்றால் இந்த படமும் உங்களுக்கு பிடிக்கும்.   


  

 




ஞாயிறு, செப்டம்பர் 12, 2021

Create a New Contact

"பேர் என்ன சார்" என்று கேட்டு பாசமாக போனில் சேமித்துக்கொள்கிறார்களோ என்று நினைத்தால், நம்மளைப்போன்ற அப்பிராணி ஊரில் இல்லை என்று அடித்துச்சொல்லலாம். போனையே எடுக்கக்கூடாது என்று தான் இந்த சேமிப்பு.

ஒரு சில வருடங்களுக்கு முன், பரவலாக எல்லோர் கையிலும் போன் இல்லாத காலங்களில், தெரியாத நம்பரில் இருந்து போன் வந்தால் எடுத்து பேசுவதில்லை என்று உறுதியுடன் பலர் இருந்தனர். இதுவே தவறு என்று என் அண்ணன் ஒரு முறை கூறினான். எப்படி என்றும் விளக்கினான். பெரியப்பா காலை வாக்கிங் போயிருக்கிறார். குறைந்தபட்சம் ஆறு ஏழு கிலோமீட்டர் நடப்பவர். கையில் போன் கிடையாது. திடீரென நெஞ்சுவலி. அருகில் இருப்பவரிடம் போன் வாங்கி அழைத்திருக்கிறார். உடனே அங்கு சென்று மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றியிருக்கிறார்கள். க்ரெடிட் கார்ட், இன்சூரன்ஸ் அழைப்புகளுக்கு பயந்து போனை அட்டென்ட் செய்யவில்லை என்றால் உதவியை எதிர்நோக்கி நம்மை அழைத்தவருக்கு வினை புரிய முடியாமல் போயிருக்கும். அப்படியே க்ரெடி கார்ட் அழைப்பாகத்தான் இருந்தாலும்  அட்டென்ட் செய்து ஐந்து வினாடிகளில் நாசூக்காக அழைப்பை துண்டிக்க முடியாதா என்ன


சரி, தெரியாத நம்பருக்கு தான் இந்த தலைவிதி என்றால் தெரிந்த நம்பருக்கு இப்போதெல்லாம் இதே கதிதான். வசதியாக சேவ் செய்த நம்பரை சைலென்டில் போட்டுவிட்டு அமைதியாகிவிடுகிறார்கள். ஒரு தகவல் கேட்பதற்காக போன் செய்து பார்த்தேன். எடுக்கவில்லை. இரண்டாம் முறையும் அதே. அருகில் இருந்தவரிடம் போன் வாங்கி அழைத்தேன். விடாக்கண்டனைப்போல. எதிர் முனை புத்திசாலி உடனே அட்டென்ட் செய்துவிட்டது. அழைத்தது நான் தான் என்று எதிர்பார்க்கவில்லை. அவரது வாயிலேயே பிஸியாகவும் இல்லை என்று வாக்குமூலம் வேறு. முப்பது வினாடிக்குள் கேட்க வேண்டியதை கேட்டுவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டேன். இந்த பழக்கம் பலபேரிடம் இருக்கிறது. பலர் வாயிலாக சொல்லவும் கேட்டிருக்கிறேன்.  இந்த ரகத்தை எந்த கேட்டகிரியில் சேர்ப்பது என்று தெரியவில்லை. 

"Strictly no talking. Whatsapp Only" என்கிற கும்பல் வேறு இப்போது. தூக்கத்தை ஒழித்து மீதமிருக்கும் 16 மணிநேரத்தில், அதாவது (வருடத்திற்கு 5760 மணிநேரங்கள்) நண்பர்களுடனோ, உறவினர்களிடமோ பேச நேரமில்லை என்று கூறும் பொய்யை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்களின் வட்டத்தில் நாம் இல்லை என்ற கூற்றையாவது அனுமதிக்கலாம். ஆனால் கிளையண்ட் மீட்டிங், டீம் மீட்டிங் என்று டபாய்ப்பது கும்பி பாகத்திற்கு இட்டுச்செல்லும் வழியாகும். இங்கிலாந்து பிரதமர் கூட இந்த அளவுக்கு பிஸியாக இருப்பது போல் தெரியவில்லை. அப்படியே சூடம் அடித்து சத்தியம் செய்து பிசி தான் என்று நிரூபித்தால், இரண்டே காரணம் தான், ஒன்று டைம் மேனேஜ்மண்ட் தெரியவில்லை, அல்லது wrong person in wrong job.  முதல் காரணத்திற்கு ஒன்றும் செய்யமுடியாது. சுட்டுப்போட்டாலும் வராது.  இரண்டாவது காரணத்திற்கு ஓடுற வயசுல தான் ஓட முடியும்னு சொன்னாலும் பேசி சிரிக்கற வயசுல தான் அனுபவிக்க முடியும்ங்கிற உண்மையையும் ஒத்துக்கொண்டுதான் ஆகவேண்டும். ஓடியாடி சம்பாதித்து அக்கடா என்று ஓய்ந்து உட்கார்ந்தபின் எதிர்முனைல ஆளே இல்லாதபோது கால் பண்ணி என்ன சாதிக்கப்போகிறார்கள் என்று தெரியவில்லை.  

காக்கை கூட பகிர்ந்து தான் உண்கிறது.

வெள்ளி, செப்டம்பர் 03, 2021

கசடதபற

 

கேயாஸ் தியாரியை, கேயாஸ் தியரி என்ற பெயரிலேயே தசாவதாரம் படம் வாயிலாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியவர் ஆண்டவர். அந்த கேயாஸ் தியரியுடன் வேண்டேஜ் பாயிண்ட் தியரி என்று இன்னொன்றையும் பிணைத்து சிக்கலில்லாத திரைக்கதையை வெகுஜனமும் ஒப்புக்கொள்ளுமாறு சிறப்பாக கையாண்டிருக்கிறார் சிம்புதேவன். ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும் படத்திற்குப்பிறகு மீண்டும் நிகழ்வின் நிழலில் கரை ஒதுங்கியிருக்கும் சிம்புதேவனின் திரைமொழியை தாராளமாய் ரசிக்கலாம்.  


நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் நம்மை அறியாமலேயே பின் விளைவுகள் உண்டு என்பதே இந்த படத்தின் உயிர் நாடி. அந்தப்பின்விளைவுகளின் தேடலை நியப்படுத்தியிருக்கிறது கசடதபற. படத்தின் வெற்றிக்கு அதன் டைட்டில் கார்டு டிசைன் முதல் முகவரி. குறுக்கெழுத்து போல ஆறு கதைகளின் பெயர்களை அறிமுகப்படுத்தும் கசடதபறவின் டைட்டில் கார்டே நம்மை உள்ளே இழுத்து உட்கார வைத்துவிடுகிறது. 6 கதைகள். ஒவ்வொன்றும் வெவ்வேறு ஜானர்களில் பயணிப்பவை. அதனதன் போக்கில் ஆறு கதைகள் பயணித்தாலும் எல்லாவற்றிற்கும் யதார்த்தமான நெருடலில்லாத ஒரு கோர்ப்பு. ஆறு கதைகளுக்கும் தனித்தனி எடிட்டர், இசையமைப்பளர், ஒளிப்பதிவாளர் என்று இருப்பினும் படம் நெடுகிலும் ஒரே பதம்.

சந்தீப் கிஷன், ஹரீஷ் கல்யாண், சுப்பு பஞ்சு, வெங்கட்பிரபு, சிஜா ரோஸ் என்று தெறிவான பாத்திரத்தேர்வு.  பிரேம்ஜியின் அய்யர் பாஷையும் விஜயல்க்ஷ்மியின் விளிம்பு நிலை கதாபாத்திரமும் திருஷ்டி கழிப்பு போல கொஞ்சமே கொஞ்சமாக ஒட்டவில்லை. மற்றபடி ஒரு வீக்கெண்டுக்கான பெர்ஃபெக்ட் மூவி.  

The Butterfly Effect படத்தை கொண்டாடும் நாம் இதையும் அதே உணர்வோடு ரசித்து வரவேற்கலாம்.