வியாழன், டிசம்பர் 16, 2021

சபாபதி

 

வ்வொருத்தராக  வந்து சேருவதற்குள் மணி காலை பத்தாகிவிட்டது. விழாவை தலைமை தாங்கும் அந்த பள்ளியின் தாளாளர் சரியாக பத்து ஐந்துக்கு வந்ததும் விழா தொடங்கியது. நல்லாசிரியர் விருது பெற்ற தந்தைக்கு மரியாதை செய்யும் பொருட்டு முகிலன் அந்த விழாவை ஏற்பாடு செய்திருந்தான். பள்ளியின் தாளாளர் இடதுபக்கம் அமர மேடையின் நடுவே கம்பீரமாய் சிறிது புன்முறுவலோடு விழாவின் நாயகன் நல்லாசிரியர் சபாபதி காணக்கிடைத்தார். 

 

ம்பிரதாய வரவேற்புரை முடிந்ததும் முகிலன் முன்வந்து மைக்கை கையிலெடுத்து ஒரு முறை செருமிக்கொண்டு பேச ஆரம்பித்தான். "அனைவருக்கும் வணக்கம். இங்கு நாம் கூடியிருக்கும் நோக்கம் எனது தந்தை நல்லாசிரியர் விருது பெற்றதை போற்றும் பொருட்டும் மேலும் அவரது சாதனைகளை அவருடனான அனுபவங்களை இங்கு விவரிக்கும் தருணங்கள் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்ககும் ஊக்கம் அளிக்கும் விதமாகவும் அமையும் என்ற ஒரு உயர்ந்த எண்ணத்திலே இந்த விழாவை முன்னெடுத்திருக்கிறேன். இந்த விழாவை இனிதாக துவங்கும் பொருட்டு என் தந்தையுடனான என் அனுபவங்களை இங்கு விவரிக்கிறேன். 

 

வாத்தியாரப்பா என்று அன்பாக அழைக்கப்படும் சபாபதி சார் என்னுடைய தந்தை என்பதில் எனக்கு பெருமகிழ்ச்சி.  அவர் நல்லாசிரியர் விருது பெற்ற காரணத்தினால் தான் நான் இந்த தருணத்தில் பெருமை  கொள்கிறேனா என்றால் நிச்சயமாக இல்லை. என்னுடைய தந்தையாக இருந்தாலும் அவர் என்னுடன் ஓர் உற்ற தோழனாகத்தான் பயணித்தார். ஒரு பதின்ம வயது சிறுவன் எவ்வாறு தனது சுகதுக்கங்களை  நண்பனுடன் பகிர்ந்து கொள்ளுவானோ அது போன்ற ஒரு சுதந்திரத்தை எனக்கு அளித்திருந்தார். சிறுவயதில் இருந்தே மருத்துவராக வேண்டும் என்ற குறிக்கோள் என் மனதில் வேரூன்றியிருந்தது. மருத்துவம் மட்டுமே படிக்க வேண்டும் என்ற உந்துதலோடு, இல்லை உந்துதல் என்று சொல்லுவதை விட வெறியுடன் படித்துக்கொண்டிருந்தேன்.  மருத்துவத்துக்கான நுழைவுத்தேர்வு எழுதி முடித்த தருணம் அது. அதற்கு முந்தைய வருடத்தின் கட் ஆப் மார்க்கை விட 3 மார்க் குறைவாக வரும் என்பதை தேர்வு அறையை விட்டு  வெளியே வந்தவுடனேயே என்னால் கணிக்கமுடிந்திருந்தது.  ஆங்கோர் காட்டிடையே பொந்தினில் வைத்தேன் என்பது போல ஏழு ஆண்டுகளாக மருத்துவம் படிக்க வேண்டும் என மனதுக்குள் சுமந்திருந்த கனவு. மருத்துவப்படிப்பு எட்டாக்கனி என்று தெரிந்தபின்பு மிகவும் துவண்டிருந்தேன். எதிலும் கவனம் செலுத்தமுடியாத நான் அடுத்த நாள் பொறியியல் படிப்பிற்கான நுழைவுத்தேர்வை கடமைக்கேனும் எழுத கூட முனைப்புக்காட்டவில்லை. அன்று இரவு உறங்காமல் நான் தவித்ததை கண்டு என்னருகில் வந்த தந்தை, நடந்ததை அவ்வாறே ஏற்றுக்கொண்டு நடக்கவேண்டியதில் கவனம் செலுத்து என்று ஒரு உற்ற தோழனைப்போல் என் தோள் பற்றி ஆறுதல் கூறினார். நட்சத்திரங்கள் நிறைந்த அகண்டு விரிந்த ஆகாயத்தின் கீழே நடைபெற்ற அந்த இரண்டு மணி நேர உரையாடல் என்னை தேற்றி உத்வேகப்படுத்தியது. என்னால் முடிந்த அளவு முயற்சி செய்து படித்தவற்றை நினைவில் கொண்டு அடுத்த நாள் தேர்வு எழுதினேன். பொறியியல் படிக்கும் வாய்ப்பு கிட்டியது. இதோ இன்று உலகின் உயரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் அங்கம் வகிக்கிறேன். வில்லிலிருந்து விருட்டென்று கிளம்பும் அம்பை போல ஓடும் என் வாழ்க்கையை நான் திரும்பி பார்க்கும் தருணத்தில் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக நான் முன்வைப்பது, அன்று நான் துவண்டிருந்தபோது நடைபெற்ற எனது தந்தையுடனான சம்பாஷனைகள் மட்டுமே. இதை ஒவ்வொரு ஆண்டும் எனது பிறந்தநாள் விழாவில் நினைவு கூர்ந்து தந்தையிடம் கூறி ஆசி வாங்க வேண்டும் என்று ஆசை கொள்வேன். ஆனால் இன்று உங்கள் எல்லோருக்கும் முன்னால் என் வெற்றியின் காரணகர்த்தாவாக என் தந்தை மிகவும் உறுதுணையாக இருந்தார் என்பதை இந்த விழாவிலே பதிவு செய்துகொள்ள கடமைப்பட்டுள்ளேன்".

 

கூட்டத்தாரையும் தன் தந்தையையும் பார்த்து வணங்கிய முகிலன் தன் தந்தைக்கு அருகிலே போடப்பட்டிருந்த நாற்காலியில் சென்று அமர்ந்துகொண்டான். சபாபதியிடம் கொஞ்சமும் மாறாத அதே புன்முறுவல். 

 

வருடன் வேலைபார்த்த பல ஆசிரியர்கள், சபாபதியுடனான தங்களின் அனுபவங்களை அடுத்தடுத்து பகிர்ந்துகொண்டனர். அவருடன் இருபத்து மூன்று வருடகாலமாக வேலை பார்த்துவந்த வெங்கடாச்சலம் பேசும்போது அவரது கண்ணில் நீர் வழிந்ததை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. "நானும் சபாபதியும் ஒரே வருடத்தில் இந்த பள்ளியில் ஆசிரியராக பணியமர்த்தப்பட்டோம். இருவருமே அவ்வளவு வசதி பின்புலங்கள் இல்லாத குடும்பப்பின்னணியிலிருந்து தான் முன்னேறி இந்த ஆசிரியர் வேலைக்கு வந்திருந்தோம். பணியில் சேர்ந்த சில நாட்களில் எனக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை பிறந்தது. பிறந்த ஒரு வருடத்தில் அவள் சுகவீனப்பட்டுவிட்டாள். மருத்துவமனையில் சேர்ந்து அவளை காப்பாற்றி கொண்டுவருவதற்குள் ஏகப்பட்ட செலவு செய்து நிலைமை கைமீறி போய்விட்டது. போராடி பிழைத்தது மட்டுமே சாதனை. ஆனால் மருத்துவச்செலவுக்காக நான் வாங்கிய கடன் என் கழுத்தை நெருக்கியது. செய்வதறியாது கையறு நிலையில் இருந்த என்னை தேற்றியது சபாபதி மட்டுமே. என்னுடைய சொல்லொன்னா துக்கங்களை அவருடன் நான் பகிர்ந்து  கொண்டதால் அது பாதியாக குறைந்தது. மனதில் ஏற்பட்ட கலக்கங்களுக்கு வார்த்தைகளால் மருந்து போட்டதோடு மட்டுமல்லாமல் என்னுடைய கடனை தீர்ப்பதற்கு பொருளாதாரரீதியாகவும் பெரும் உதவிகள் செய்தார். தேவைக்கு அதிகமாக செலவு செய்யாமல் சிக்கனமாக வாழும் சபாபதி, தான் அன்று வரை சேமித்து வைத்திருந்த ஒரு பெருந்தொகையை கைமாறாக கொடுத்து உதவினார்.  வட்டியில்லா அந்த கடன் எனது பெருந்துயரை துடைத்து எனது குடும்பத்தையும் காப்பாற்றியது. அன்று அவர் காப்பாற்றிய எனது மகள், இன்று மருத்துவராயிருக்கிறார்.  கடன் வாங்கி பிழைப்பு நடத்தினான் என்ற பேச்சுக்கு ஆளாக என் தன்மானம் இடம் கொடுக்கவில்லை. ஆதலினால் சபாபதி அன்று செய்த உதவி எங்கள் இருவரையும் தவிர்த்து யாருக்கும் தெரியாது. இன்று, இந்த தருணத்தில் உங்கள் எல்லோருக்கும் மத்தியில் இதை பகிரங்கப்படுத்துவதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. ஏனெனில் அவர் சுயநலம் பாராது உதவி செய்யவில்லையெனில் இன்று நானோ என் குடும்பமோ இங்கு உயிருடனில்லை. எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று நா தழுதழுக்க பேசிவிட்டு அமர்ந்தார்.  

 

ந்த கூட்டத்திலேயே வயது மூத்தவராக இருந்த சபாபதி வாத்தியாரின் சித்தப்பா நீலகண்டன், மேடைக்கு கைத்தாங்கலாக அழைத்துவரப்பட்டார். ஒரு நாற்காலி கொடுக்கப்பட்டு அதில அமரவைத்த பின்பு, தழுதழுத்த தன் குரலினால் பேச ஆரம்பித்தார். "கூடியிருக்கும் அனைவருக்கும் என் வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன். எனது அண்ணன் மகன் சபாபதி சிறு வயதிலிருந்தே படிப்பில் சுட்டி. தன்னை விட வயது மூத்தோரிடம் மரியாதையாக பேசும் தன்மை இருந்தாலும் தனது கருத்தை தைரியமாக வெளிப்படுத்துவதில் தயக்கம் காட்டுவதில்லை. அவன் ஆசிரியர் பணியை விரும்பியே தேர்வு செய்தான். ஏனெனில் குழந்தைகளை ஒரு பொறுப்புள்ள  பிரஜையாக மாற்றும் சக்தி ஆசிரியர்களிடத்தில் இருந்தது என்று அவன் உறுதியாக நம்பினான். மாணாக்கர்களை நல்வழிப்படுத்துவதன் மூலம் தேசம் சுபிக்ஷமடையும் என்பது அவனது எண்ணம்.  அவன் விரும்பியது போலவே ஆசிரியர் பணியை தெய்வீகமாக நினைத்து  சுவீகரித்திருந்தான். இதை நான் கூறுவதற்கு காரணம், பள்ளி முடிந்து பின்பு தன் குடியிருப்பின் அருகிலிருக்கும் வசதிவாய்ப்பற்ற குழந்தைகளுக்கு பணம் ஏதும் வாங்காமலேயே வியாசம் கற்று கொடுத்தான். 

 

குறைவாக பேசினாலும் அவருக்கு நா வரண்டிருந்தது. சிறிது நீர் அருந்தினார். தடிமனாக இருந்த மூக்கு கண்ணாடியை சரி செய்துகொண்டு மீண்டும் பேச ஆரம்பித்தார்.

 

"பாபதி எனது அண்ணண் மகன் தான் என்றாலும் நான் அவனிடம் எள்ளளவும் பாசம் காட்டவில்லை. சிறுவதிலேயே அவன் முதிர்ச்சியடைந்த மனிதனாக தன சுற்றத்தில் நன்மதிப்பை பெற்றிருந்தான். அதேசமயம் எனது மகன் என் கோடானுகோடி கனவுகளை மெய்யாக்கவில்லை. கூடாத சேர்க்கை அவனை படுகுழியில் தள்ளியது. போதைக்கு அடிமையாகிய அவன் இளம் வயதிலேயே புத்தி சுவாதீனமின்றி மரித்துவிட்டான். இறைவன் எழுதிய இந்த சமத்துவமில்லா கோட்பாடு எனக்கு  மனக்கிலேசத்தை கொடுத்ததோடு மட்டுமில்லாமல் இயலாமையினால் நான் சபாபதியை கண்டு பொறாமை கொண்டேன். அவரவரின் வினைப்பயன்களே அவரவரின் பலாபலன்கள் என்பதை புரிந்துகொள்ள தவறி விட்டேன். முகத்திற்கு நேரே ஒரு முறை கூட அவனை பாராட்டியதில்லை. ஏன் அவன் இல்லாதபோது பொழுது கூட அவனை பற்றிய பேச்சை லாவகமாக தவிர்த்தேன். பெற்ற பிள்ளையை இழந்து தவிக்கும் இந்த பித்து பிடித்த மனதிற்கு அனைத்துமே கோணலாக தான் தெரிந்தது. இன்று எனக்கு அகவை தொன்னூற்றி மூன்றை எட்டுகிறது. இன்று பழுத்த கிழமாக நிற்கிறேன். இளம் வயதிலேயே சபாபதி முதிர்ச்சி பெற்றுவிட்டிருந்தான். அந்த முதிர்ச்சியை இப்பொழுதுதான் நான் எட்டுகிறேன் என்று தோன்றுகிறது. சபாபதியின் புகழை அங்கீகரிக்கவில்லையே ஒழிய நான் அவனை வெறுக்கவில்லை. அவனுக்கு நல்லாசிரியர் விருது மிகவும் பொருத்தமானது. ஏனெனில் அவன் தனது வேலையை மிகவும் நேசித்தான். அதை ஊழியமாக எண்ணாமல் கடமையாக செய்தான். இந்த விருதுக்கு முழு தகுதியுடையவன் அவன். எனது மனதில் எந்த விகல்பமும் இல்லாமல் நெஞ்சார வாழ்த்துகிறேன். விருது அவனை அலங்கரித்தது என்று சொல்லுவதை விட அவனுக்கு விருது அளித்து விருது தன்னை அலங்கரித்துக்கொண்டது என்று கூறினால் மிகையல்ல" என்று கூறி தனது உரையை முடித்துக்கொண்டார். 

 

தற்கு பிறகு பேசவந்தவர்கள் அனைவருமே சபாபதியே வெட்கப்படும் அளவுக்கு பாராட்டினார்கள். அரசுப்பள்ளியில் படித்த தன் மகன் எந்த வித தனிவகுப்புகளுக்கும் செல்லாமல் IITயில் படிக்க வாய்ப்பு கிடைத்ததற்கு சபாபதி ஆசிரியரின் தனிப்பட்ட பயிற்றுவிக்கும் முறையே காரணம் என்று நன்றி தெரிவித்து கொண்டார். அண்டை வீட்டில் வசிக்கும் குமரேசன், சபாபதி தன வீட்டை சுற்றி தோட்ட வளர்க்கும் பாங்கையும், சுத்தமாக பேணுவதில் காட்டும் அக்கறையையும் சிலாகித்துக்கொண்டார். எதிர் வீட்டு பாக்கியம் மாமி, சபாபதி தினமும் காக்கை குருவிகள் மற்றும் கால்நடைகளுக்கு உணவளிப்பதையும் மனிதர்களை போலவே விலங்குகளிடத்தில் அவர் காட்டும் அன்பு தன்னை வியக்க வைக்கிறது என்று புளகாங்கிதமடைந்தார். சபாபதி குடியிருக்கும் ஊரகத்தின் தலைவர் வையாபுரி, தன் பங்கிற்கு சபாபதியின் பொதுநலத்தை பாராட்டினார். ஊரக மன்றத்தில் அவர் எந்த பொறுப்பும்  அவர் வகிக்கவில்லையென்றாலும், தாமாகவே முன்வந்து சாலை போடுவதற்கும், கழிவு நீர் கால்வாயை சுத்திகரிப்பதற்கும் கோவிலை புணரமைக்க நிதி திரட்ட உதவியது என பல உதவிகளை பட்டியலிட்டு அவரை தான் மானசீகமாக குருவைப்போல மதிப்பதாக உணர்ச்சி ததும்ப பாராட்டினார். 

 

வர்கள் அனைவருமே பேசி முடிக்கவும் மணி ஒன்றை நெருங்கவும் சரியாக இருந்தது. பள்ளியின் தாளாளர் நன்றியுரை தெரிவித்து விழாவை நிறைவு செய்தார். உயிரோடு இருக்கும் பொழுது உறவாடி உணர்வுகளை பகிர்ந்து வாழத்தெரியாத நம்மை போன்று விழாவுக்கு வந்த அனைவருமே, வரிசையில் நின்று சபாபதியின் புகைப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்திவிட்டு நகர்ந்தனர். 

 

ல்லாசிரியர் விருதின் அறிவிப்பு வரும் சில நாட்களுக்கு முன்னர் மறைந்த சபாபதி, தன் வாழ்நாளில் இதுவரை கேட்டிராத பாராட்டுக்களை கேட்காமலேயே அதே புன்முறுவலோடு புகைப்படத்தில் உறைந்திருந்தார். 

 

வியாழன், டிசம்பர் 09, 2021

நகரம்

 


கிழக்கே உதித்திருந்த சூரியனின் வெளிச்சக்கீறல்கள் கண்ணுக்கு புலப்பட ஆரம்பித்திருந்தது. இரவு பெய்த பலத்த மழை நின்றாலும் கூட தூவானம் நின்றபாடில்லை. 


முந்தைய நாட்களின் கசடுகள் கரைந்து புத்தம் புது காலையாக விடியும் பலருக்கு மத்தியில் அந்த பெரியவருக்கு அது மீண்டும் மற்றொரு நாளாகவே விடிகிறது.  பூட்டிய ஹார்டவெர் கடையின் வாசலில் ஷட்டரை ஒட்டி படுத்திருந்த அவர் முழித்துப்பார்த்தார். மழைத்தூறலும் குளிர்காற்றும் அவரது உடலை பதம்பார்த்தன. கட்டியிருந்த சாரத்தை இழுத்து உடலைப்போர்த்திக்கொண்டார். எழுவதற்கு தெம்பும் இல்லை. மனமுமில்லை. அருகில் செயல்படும் கனரக தொழிற்சாலையின் வாசலில் கொட்டப்படும் அன்றைய பேப்பர் குப்பையை சேகரித்து எடை போட்டு வயிற்றை நிரப்பும் ஒரு எளிய ஜீவராசி. பெயர் தெரியாது. வீடும் உறவும் அற்றவர்களை அலட்சியம் செய்து பெயரை தெரிந்துகொள்ள விழையாத வசதியான இந்த சமூகத்தின் மீது ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. ஹார்டுவேர் கடையை திறக்கும் வரைக்கும் படுத்தே கிடப்பார். கண்விழித்து முழித்து பார்த்தால் எவராவது வந்து எழுந்திருக்கச்சொல்லலாம். ஆனால் அதை விட முக்கியமாக வயிற்றை கிள்ளும் பசியை ஒத்திப்போட வேண்டி தலைமீது கட்டியிருந்த உருமாலை அவிழ்த்து முகத்தில் மூடிவிட்டு மீண்டும் உறங்க முயற்சித்தார்.   


தே காலை வேளையில், ஆறு முப்பத்துக்கு ஐபோனில் ஒலித்த குக்கூ அலாரத்தை, கௌதம், ஒரு கையால் அமர்த்திவிட்டு மறு கையால் 24 டிகிரியில் குளிர்வித்துக்கொண்டிருந்த ஹாயர் ஏசியை ஆஃப் செய்து   சோம்பலை நெட்டி முறித்துக்கொண்டான். துள்ளியோடும் இருபத்து ஐந்து வயது. மாதம் ஆறு இலக்க சம்பளம். எழுவதற்கு தெம்பும் மனமும் இருந்தாலும் சோம்பலில் இன்னும் சில நிமிடங்கள் கண்ணை மூடி உறங்க முயற்சித்தான். கண்களை கசக்கி கொண்டான். க்யுல்ட்டை விலக்கிக்கொண்டு அந்த பிரமாண்ட வேலைப்பாடுள்ள மரக்கட்டிலை விட்டு இறங்க யத்தனித்தான். கால்களை கிரானைட் தரையில் வைக்கும்போது சில்லென்று, ஊசி குத்துவது போல அவன் உடம்பில் குளிர் ஏறியது. அருகில் இருந்த பஞ்சு போன்ற காலுறையை அணிந்துகொண்டான். ஆட்டோமெட்டிக் பல் விளக்கும் கருவியில் தனது ஆறடி உயரத்தை கண்ணாடியில் ரசித்துக்கொண்டே பல் துலக்கினான். வலது கையால் பல் துலக்கும் போதே ஒருக்களித்து இடது கையின் முஷ்டியை முறுக்கி தசைகள் தெரியும் தனது புஜங்களை ரசித்தான்.  


"பெரியவரே எந்திரிங்க" என்று குரல் கேட்டு விழித்து பார்த்தார் அந்த பெரியவர். ஹார்டவெர் கடை வாசலை கூட்டி பெருக்கும் பெண்மணி வந்திருந்தாள். அவள் வந்துவிட்டாளானால் மணி ஏழரை ஆகிவிட்டது என்று அர்த்தம். அடுத்தது என்ன செய்வது என்று பெரியவருக்கு தெரியவில்லை. எந்திரித்து இடத்தை காலி செய்ய வேண்டும். மெதுவாக எழுந்திரித்து வெளியே நடக்க ஆரம்பித்தார். பசி வயிற்றை கிள்ளியது. போட்டிருந்த அழுக்குச்சட்டையில் இரண்டு ரூபாய் மிஞ்சியிருந்தது. சைக்கிளில் வரும் சுக்கு காஃபி குடிக்க வேண்டுமென்றாலே எட்டு ரூபாய் கேப்பான். அருகிலிருந்த அடிபம்பை நோக்கி வெறுங்காலில் நடந்தார். தேங்கியிருந்த நீரை குடிக்கும் மாடை சத்தம் போட்டு விரட்ட முயன்றார். இவரிடம் காசில்லை என்று விஷயம் தெரிந்தோ என்னமோ மாடு கூட நகர மாட்டேன் என்று முரண்டு பிடித்தது. கீழே கிடக்கும் குச்சியை எடுத்து விரட்டினார். மாடு அசைந்து சென்ற பிறகு, பெரியவர் அடிபம்பை பலம் கொண்ட மட்டும் பிரயத்தனம் செய்து அடித்து தண்ணீர் வரவைத்து குடித்தார். தொண்டையை தாண்டி தண்ணீர் வயிற்றை சென்று அடைந்து அவரது பசியை கொஞ்சம் கொஞ்சமாக தணித்தது. 

 

கௌதமுக்கு அந்த வெனிலா ப்ரோடீன் ஷேக் கொஞ்சம் உவப்பாக இருந்தது. நேற்றைய சாக்லெட் பிளேவர் ப்ரோடீன் ஷேக்கை விட தான் இதை அதிகம் விரும்புவதாக உணர்ந்தான். ட்ரெட் மில்லில் ஓடியதால் வியர்வை துளிர்த்திருந்தது. ஓடிய அளவிற்கு 560 கலோரியை அவன் கரைத்திருப்பதாக அந்த வெல்கெர் ட்ரெட்மில் கணக்கு காட்டியது. மனதுக்குள் கணக்குபோட்டுக்கொண்டான். இப்பொழுது குடித்த ஷேக் 390 கலோரி. அதை விட 170 கலோரி அதிகமாக கரைத்திருக்கிறோம் என்பதில் அவனுக்கு திருப்தி. காலை உணவாக அவித்த முட்டைகள் 3 மட்டும் எடுத்துக்கொண்டால் போதும் என்று முடிவுசெய்துகொண்டான். கழுத்தில் வழிந்த வியர்வையை தனது தேங்காய் பூ டவலால் துடைத்து விட்டான். லேசாக மூச்சு வாங்குவதை ஆசுவாசப்படத்திக்கொள்ள ஒரு சில நிமிடங்கள் ஆளுயர கண்ணாடியில் தன்னை உற்று பார்த்துக்கொண்டு 

குளிர்வித்து கொண்டிருக்கும் ஏசியின் கீழே நின்றுகொண்டான். ஓடுவதற்காக மட்டுமே உபயோகப்படுத்தும் அந்த நைக் ஷூவை கழற்றி கவரில் சுருட்டி தனது ஜிம் பேக்கில் வைத்துவிட்டு ஏழாவது மாடியிலிருந்து கீழே இறங்கும் பொருட்டு லிப்ட் பொத்தானை சொடுக்கினான். 


ண்ணீர் குடித்த தெம்பில் பெரியவர் அந்த கனரக தொழிற்சாலையை அரை மணி நேரத்தில் வந்தடைந்தார். விதவிதமாக கார்கள் நிப்பாட்டப்பட்டிருக்கும் அந்த கார் ஷெட் தான் அவர் ஓய்வுகொள்ளும் இடம். இன்னும் சிறிது நேரத்தில் அந்த ஷெட் முழுவதும் கார்களால் நிறைந்துவிடும். அருகில் பரந்து விரிந்திருந்த ஆலமரம் அந்த இடத்திற்கே பர்வத மலை போன்ற நிழலை கொடுத்துகொண்டிருந்தது. புள்ளினங்களின் க்ரீச்கள், ஆற அமர உட்கார்ந்து அசை போடும் மாடுகள், செல்லும் வழியெல்லாம் முகர்ந்து பார்த்துக்கொண்டே ஓடும் நாய்கள், அவ்வப்போது தோகை விரித்தாடும் மயில்கள் என ரசிக்க ஆயிரம் இருந்தும் வண்டியை நிறுத்திய வேகத்தில்  கட்டிடத்தை நோக்கி ஓடும் மனிதர்களை பார்க்கும் போது இவருக்கு விந்தையாக இருக்கும். இன்னும் சற்று நேரத்தில் தூய்மைப்பணியாளர்கள் வந்து கொட்டும் பேப்பரை சேகரிக்கத்தொடங்க வேண்டும். சில நேரங்களில்  கெட்டியான பிளாஸ்டிக் மற்றும் உடைந்த இரும்புத்துண்டுகள் போன்றவை கூட வந்து விழும். அவ்வாறான நாட்களில் இன்னும் ஒரு இட்லியோ அல்லது ஒரு பருப்பு வடையையோ  அதிகமாவோ வாங்கி சாப்பிடலாம். மதியம் சாப்பிடப்போகும் அந்த ஒரு தட்டு உணவை மனதில் நினைத்துக்கொண்டே ஆவலுடன் தன் பார்வையை அந்த குப்பைகொட்டப்படும் இடத்தை நோக்கி நிலைகுத்தி நிற்கச்செய்தார்.


குளித்து முடித்து உற்சாகமாக உடைகளை அணியத்தொடங்கியிருந்தான் கௌதம்.  முஸ்லி சில்க் ஷர்ட் அவனை இன்னும் எடுப்பாக காட்டியது. முழுக்கை சட்டையின் கை கஃப் பட்டன்களை  அணிந்துகொண்டே வட்டமாக இருக்கும் அந்த ரோஸ்வுட் டைனிங் டேபிளில் உட்கார்ந்தான். முன்னமே அவித்து தயாரகியிருந்த முட்டைகளை வெளியில் எடுத்து உரிக்கத்தொடங்கினான். அருகிலிருந்த அலெக்சாவை விழித்து இன்றைய செய்திகளை சொல்லுமாறு பணித்தான். காதுகளை அலெக்ஸாவுக்கும், கண்களை ஸ்மார்ட்போனிலும், கைகளை முட்டையிலும் மனதை அன்று அலுவலக நண்பர்களுடன் பார்ட்டிக்காக செல்லும் ப்ரன்ச் சாப்பாட்டிலும் குவித்தான். அன்லிமிட்டட் சாப்பாட்டில் வழங்கப்படும் கடல் உணவு வகையறாவை மட்டுமே சாப்பிட வேண்டும் இல்லையென்றால் வயிற்றில் சதைப்பிடிப்பு விழுந்து விடும் என்பதில் கவனம் கொண்டான். வெள்ளை கருவை மட்டுமே எடுத்துக்கொண்டு மஞ்சள் கருவை குப்பையில் கொட்டினான்.  அலுவலகத்திற்கு கிளம்பும் பொருட்டு 27ஆவது மாடியில் இருக்கும் தனது பிளாட்டிலிருந்து ஜிவ்வென்று லிப்ட்டில் கீழிறங்கத்தொடங்கினான். 


ணி பத்தை தாண்டியிருந்தது. அந்த அலுவலகத்திலிருந்து இரு நபர்கள் டீ கேனை தூக்கிக்கொண்டு வெளியே வந்தனர்.  அலுவலகத்திலிருக்கும் ஊழியர்களுக்கு போக டீ மீதமிருந்தால் அந்த நபர்களுக்கு அன்று மனதிருந்தால் அந்த பெரியவரை கூப்பிட்டு டீயை ஒரு கிண்ணத்தில் ஊற்றுவர்.  சூடு ஆறியிருந்தாலும் பசிக்கிற வாய்க்கு அது அமிர்தமாகவே அந்த பெரியவருக்கு இருந்தது. ஆவலுடன் அந்த இரு நபர்கள் இவரை நோக்கி வருகின்றனரா என்று  பார்த்துக்கொண்டிருந்தார். அவர் எதிர்பார்த்தது போலவே அந்த இரு நபர்கள் அவர் நோக்கி வந்தனர். கேனை கவிழ்த்தது அரை க்ளாஸ் டீயை அவருக்கு ஊற்றினர். அவர்கள் டீ கேனை நிமிர்த்துவதற்குள் அந்த டீயை குடித்துவிட்டார்.  அந்த இனிப்பு சுவை அவருக்கு நாடி நரம்பெல்லாம் சென்று சற்றே தெம்பை அளித்தது. அவர் எதிர்பார்த்தது போலவே சரியாக பத்தரை மணிக்கு துப்புறவு ஊழியர்கள் வந்து பேப்பரை கொட்டினர். அவர்கள் செல்லும்வரை அமைதியாக இருந்துவிட்டு மெதுவாக எழுந்து செல்லலானார்.


புதிதாக சேர்ந்திருந்த  மூன்றே மாதங்களில் அவனுக்கு ஆன்சைட் வாய்ப்பு கிடைத்ததன் பொருட்டு இந்த உபச்சார விழாவை அலுவலக நண்பர்களுக்காக ஏற்பாடு செய்திருந்தான்.  அன்றைய ஆன்சைட் கால்களின் நிலுவையில் உள்ள வேலைகளை முடிந்தளவு முடித்துவிட்டு பதினோரு மணியளவில் அந்த நட்சத்திர ஹோட்டலை அடைந்து வேலட் பார்க்கிங்கிற்கு காரை கொடுத்துவிட்டு அனைவரும் அந்த பிரமாண்ட வாயிலை நோக்கி நடந்தனர். சலாம் அடித்து வாயிற்கதவை திறந்த காவலாளியை சற்றும் அலட்சியம் செய்யாமல் அனைவரும்  உணவு அறையை நோக்கி விரைந்தனர். விருந்து என்ற காரணத்தினால் அனைவரும் காலை உணவை குறைவாகவே எடுத்திருந்தனர். அனைவரும் ஒருமுறை அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் உணவுகளை கண்களால் மேய்ந்துவிட்டு வட்டமாக இருந்த போர்சிலின் தட்டுக்களை கையில் எடுத்துக்கொண்டனர். மெக்ஸிகன், கொரியன்   உணவுகளை ருசிக்கும் பொருட்டு தட்டில் எடுத்துவைத்து அதன் சுவை பிடிக்காமல் தட்டுடன் அவற்றை அப்புறப்படுத்தி புது தட்டுக்களை கையில் எடுத்து வேறு புது உணவுகள் இருக்கிறதா என்று தங்கள் வேட்டையை மீண்டும் ஆரம்பித்தனர். 


ன்றைக்கும் இல்லாத அளவுக்கு அன்று அதிக அட்டைப்பெட்டிகள் அந்த குப்பைத்தொட்டியில் கொட்டிக்கிடந்தன. இன்று ஒரு நாள் நன்றாக சாப்பிடலாம் என்று அவர் மகிழ்ந்த நேரத்தில் இவ்வளவு சுமைகளையும் எவ்வாறு தூக்கி செல்லப்போகிறோம் என்ற கவலை மிதமிஞ்சி நின்றது. ஒருவாறாக தரையில் அனைத்தையும் விரித்து வைத்து அடுக்கிவைத்தார். அதை தலையில் சுமந்துகொண்டு அந்த பழைய பேப்பர் கடையை நோக்கி நடக்க ஆரம்பித்தார். இறுதி இலக்கை கண்களால் கண்ட பின் அதை நோக்கி ஓடும் மராத்தான் வீரர் எந்த அளவுக்கு மகிழ்ச்சி அடைவாரோ அதே போன்ற உவகையை அந்த பழைய பேப்பர் கடையை பார்த்தவுடன் அந்த பெரியவர் கொண்டார். நா வறண்டு கால்கள் துவண்டு நடந்துகொண்டிருந்த அவர் சற்று வேகமாக நடக்கத்தொடங்கினார். சுமந்துவந்தவற்றை எடை போட்டபின் அவருக்கு 60 ரூபாய் கிடைத்தது. எப்பொழுதுமே முப்பது ரூபாய்க்கும் குறைவாக மட்டுமே கிடைக்கும் அவருக்கு இன்று சற்று அதிர்ச்சியாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது. கையில் அந்த ரூபாய் தாள்களை வாங்கி முகர்ந்துபார்த்தபொழுது அவருக்கு மட்டும் உணவு வாடை அடித்தது. பசி இன்னும் வயிற்றை கிள்ளியது.  எப்பொழுதும் ஒரு கரண்டி கலவை சாதம் சாப்பிடும் அவர்,  வெகு நாள் கனவாக இருந்த அரை பிளேட் பிரியாணி வாங்கி சாப்பிடலாம் என்று சற்றே மகிழ்ந்து அந்த தெரு முனையிலிருக்கும் தள்ளுவண்டியை நோக்கி நடக்கலானார். கால்களில் தெம்பு கூடியிருந்தது. 


டல் உணவுகளை மட்டுமே உண்ண வேண்டும் என்று முடிவு செய்திருந்த கௌதம், அங்கு பரப்பி வைத்திருந்த விதவிதமான உணவுகளை கண்டதும் சற்றே கட்டுப்பாடு இழந்து அளவுக்கதிகமாக உண்டான். அந்த நிகழ்வின் விளைவாக செரிக்காத உணவுகளை அவன் வாந்தி எடுக்கும் அளவுக்கு ஆகியது.  சிறிது நேரம் கழித்து ஐஸ்க்ரீம் மற்றும் கஸாட்டா போன்ற கேக் வகைகளை அனைவரும் உள்ளே தள்ளினர். லெதர் வாலெட்டில் வைத்த பில்லை எவ்வளவு எனறு பாராமலேயே கார்டை தேய்த்தான். ஐந்தாயிரத்து முன்னூறு என்று குறுஞ்செய்தி காட்டியது. கார் வாசலில் காத்திருக்க அனைவரும் அதில் ஆரோகணித்து அலுவலகம் நோக்கி கிளம்பினர். 


ந்த தெருவின் முனையில் இருந்த தள்ளுவண்டியை வந்தடைந்த பெரியவர், கூட்டத்தை பார்த்தவுடன் அரை பிளேட் பிரியாணி என்று மிகுந்த தயக்கத்துடன் ஆர்டர் செய்தார். ஒரு தட்டில் பிளாஸ்டிக் கவர் விரித்து பிரியாணி கிண்ணம் கவிழ்க்கப்பட்டு பெரியவரிடம் தட்டு நீட்டப்பட்டது. அறுபது ரூபாயை கொடுத்தபொழுது "கொஞ்சம், அந்தப்பக்கம் ஓரமாய் போய் சாப்பிடுங்க பெரியவரே" என்ற கடைக்காரர் கூறியதை செவிமடுத்து சற்று தள்ளி நின்று கொண்டார்.


கௌதமின் கார் அந்த பெரியவர் நின்றிருந்த அதே தெருமுனையை வந்தடையும் நேரத்தில் பெரியவர் சற்று ஒதுங்கி நின்று சாப்பிட யத்தனித்தார். வேகமாக திருப்பத்தில் திரும்பிய கௌதமின் கப்பல் போன்ற அந்த பென்ஸ் கார் பள்ளத்தில் ஒருமுறை ஏறி இறங்கியது. விஷ்போன் சஸ்பென்க்ஷன் உதவியுடன் உள்ளே மிக மெலிதான அதிர்வுதான் என்றாலும் வெளியே பள்ளத்தில் தேங்கியிருந்த மழை நீர் அந்த பெரியவர் ஏந்தி நின்றிருந்த பிரியாணி பிளேட்டின் மீது சகதியுடன் சேர்த்து சிதறியது.  அவர் என்ன நடந்தது என்று உணரும் முன்னரே அந்த கார் கண்ணைவிட்டு மறைந்துவிட்டது. பெரியவருக்கு அழுகையாய் வந்தது. ஒரு முறை அந்த பிரியாணியை கிளறிப்பார்த்தார். முழுவதும் மண் கொட்டியிருந்தது. பிளாஸ்டிக் கவருடன் அதை குப்பையில் போட்டுவிட்டு என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி நின்றார். 


ங்கிதம் இல்லாத அந்த பசி அவரின் வயிற்றை இன்னமும் பிராண்டி கொண்டிருந்தது. மிகவும் தளர்ந்த நடையுடன் அந்த அடிபம்பை நோக்கி நடக்க ஆரம்பித்தார். 

புதன், டிசம்பர் 08, 2021

TEXAS BBQ


சினிமாவில் நடிக்கும் முகம் தெரியாத ரீல் ஹீரோக்களின் சாகசங்களை அங்கலாய்க்கும் நாம், ஏன் நமக்கு அருகிலேயே  சாதித்து கொண்டிருக்கும் ரியல் ஹீரோக்களை பற்றி பேசவோ பாராட்டவோ கூடாது?



சிறு வயது முதலே நண்பன். சிறு வயது என்றால் ஐந்து அல்லது ஆறு வயது முதல் தற்போது வரை, தோராயமாக 30 வருட பழக்கம். கேட்டரிங்கில் பட்டம் அதிலேயே மேற்படிப்பு போன்றவற்றை முடித்து ஒரு கேட்டரிங் கல்லூரியிலேயே விரிவுரையாளராக அவன் பணிபுரிந்து கொண்டிருந்தான். தொழில் முனைவராகும் பொருட்டு, சில நண்பர்களுடன் சேர்ந்து ஒரு தொழில் தொடங்கி கிட்டதட்ட ஒரு வருட காலம் நன்றாகவே போய்க்கொண்டிருந்த நேரத்தில், பங்குதாரர்கள் நிறுவனத்தில் இருந்த பணத்தை சுருட்டிவிட்டு இவனை ஏமாற்றி சென்று விட்டனர். நம்பவே முடியாத அளவுக்கு கடன் சுமை. கோர்ட், கேஸ் என பல போராட்டங்கள், சுற்றத்தாரின் அவப்பேச்சுக்கள். அந்த வழக்கிலிருந்து வெளிவருவதற்குள் கையில் சேர்த்துவைத்திருந்த கொஞ்ச நஞ்ச பணமும் கரைந்துவிட்டது. திருமணமாகி ஒரு வருடமே ஆகியிருந்தது. கைகுழந்தை வேறு. பெற்றோர் மற்றும் மனைவியின் தேற்றலில் வேலை தேடி வெளிநாடு பயணம். அங்கு சில வருடங்கள் தனிமையாக போராடி ஒரு நல்ல நிலையில் தன்னை நிலைநிறுத்திக்கொண்டு குடும்பத்தை அழைத்துச்செல்லலாம் என்று திட்டமிட்டுக்கொண்டிருக்கும்போது கொரொனா காரணமாக ஊர் திரும்ப வேண்டிய சூழல். மீண்டும் அதே வெளிநாடு கம்பெனிக்கு வேலைக்கு செல்லலாம் என்று முயன்றால் விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்படவில்லை.  சொந்த ஊரிலேயே மீண்டும் தொழில் தொடங்க ஆலோசனை செய்தான். எங்கு ஏமாற்றப்பட்டமோ அங்கேயே சாதித்துக்காட்ட வேண்டும் என்ற வெறி. ஒரு சில திட்டங்களை பரிசீலனை செய்துவிட்டு, TEXAS BBQ என்ற பெயரில் புல்லட் barbeque ஒன்றை டிக் அடித்தான். RE புல்லட் ஆர்டர் செய்து அதன் பக்கவாட்டில் barbeque பிட்டிங்க்ஸ் தயாரித்து மாற்றியமைத்து, ஒரு சுபதினத்தில் கும்பகோணத்தில் ஆரம்பித்தும் விட்டான். ஒரு சில தினங்களில் வியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பித்தது. புல்லட்டிலிருந்து சிறு டிரக் போன்று உருமாறி TEXAS BBQ Truck மற்றும் TEXAS BBQ பெயரிலேயே ஹோட்டல் என வேரூன்றி வளர்ந்துவிட்டது. ஃபிரான்சைஸ் ஆர்டர் முறையில் திருவாரூர், திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி என அவனது நிறுவனத்தின் கிளைகள் தமிழகத்தில் பரந்து விரிந்துவிட்டன. கும்பகோணத்தின் அடையாளமாக உருமாறியிருக்கும் TEXAS BBQ வை பார் புகழும் ஒரு நல்ல ஃபுட் செயினாக உயர்த்த அயராது உழைத்துக்கொண்டிருக்கிறான்.

எவ்வளவு கடினமான சூழ்நிலைகள் வந்தாலும் தன்னம்பிக்கை இழக்காமல் ஃபீனிக்ஸ் பறவை போன்று துளிர்த்தெழுந்து தானும் வாழ வழி கண்டு மற்றவர்களுக்கும் வாழ வழி செய்துகொடுக்கும் நண்பன் இன்னும் பல வெற்றிகள் அடைந்து மென்மேலும் உயர மனமார்ந்த வாழ்த்துக்கள்.

 

 

செவ்வாய், நவம்பர் 30, 2021

மாரடைப்பு

 அதிகாலை வேளையில் உறவினரிடமிருந்து தொலைபேசியில் அழைப்பு என்றாலே கொஞ்சம் பதற்றம் தான். அதுவும், 'ஹலோ' என்று சொல்லுக்கு பிறகு, 'என்னாச்சு? எப்போ?' என்ற இரண்டு வார்த்தைகள் வந்தது என்றால் உறுதிப்படுத்திவிடலாம். உறவினர் மரணம். பெரும்பாலும் மாரடைப்பின் காரணமாக. 

இந்த மாரடைப்பு அதிகாலை வருவதன் காரணம், நல்ல உறக்கத்தில் இருக்கும்பொழுது 'வெடுக்' என்று படுக்கையை விட்டு எழுவதின் காரணத்தினால். ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்பொழுது நாற்பத்தைந்து அல்லது அம்பது என்று இருக்கும் இதயத்துடிப்பு நாம் விருட்டென்று எழும்போது, ரத்தத்தை உடல் முழுவதும் உடனடியாக பம்ப் செய்யும் பொருட்டு வேகமாக இயங்கத்துவங்குகிறது. ஐந்தே செகண்டில் 160 km வேகத்தில் காரை இயக்குவதைப்போல. சற்றே அதிகம் வேலை பார்த்து ஓய்ந்து போன இதயம் 'முடியலப்பா, கொஞ்சம் ரெஸ்ட்' என்று நம்மை போட்டுத்தாக்கி விடுகிறது. பெரும்பாலும் வயதானவர்கள் இரவு நேரங்களில் தூக்கத்தை தொலைப்பதற்கான முதற் காரணம் இயற்கை உபாதையை கழிக்க. அவ்வாறு ஒரு உணர்வு வந்ததானால், முழித்தவுடன் படுக்கையிலேயே ஒரு நிமிடம் அசையாமல் படுத்திருந்து, பின் ஒரு நிமிடத்திற்கு உடலை ஒரு பக்கம் சாய்த்து படுத்து, பின் ஒரு நிமிடம் எழுந்து உட்கார்ந்து என் மூன்று நிமிடங்கள் கழித்துதான் எழுந்திருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். சற்றே நிற்க.





கடன் திருப்பி கொடுக்கவேண்டுமே, பெண்ணின் திருமணத்தை நடத்த வேண்டுமே, பெயரன் பெயர்த்தியை கொஞ்ச முடியமா, வீட்டுக்கடன் தீருமா, மகனுக்கு வேலை கிடைக்க வேண்டுமே, குடும்ப சச்சரவுகள் தீர வேண்டுமே போன்ற எந்த கவலைக்கும் இடம் கொடுக்காமல் தூக்கத்தில் ஏற்படும் மரணம் நல்ல இறப்பு என்று மற்றவர்களால் அறியப்படுகிறது. 'அவனுக்கென்னப்பா, நிம்மதியா போய் சேந்துட்டான்' என்று வயதானவர்கள் பொறாமைக்கூடப்படுகிறார்கள்.  


ஆனால், இந்த மாரடைப்பு எப்பொழுது யாருக்கு எந்த அளவில் பாதிக்கும் என்று தெரியாத நிலையில் தான் இன்றைய வாழ்வு முறை உள்ளது. சரி, என்ன மாதிரியான முன்னேற்பாடுகள்(!!!) செய்து கொள்ளலாம்?


மணமாகாதவர் மற்றும் முப்பது வயதிற்கு கீழே என்றால் தன்னுடைய கடன் (கொடுக்கல் வாங்கல்) மற்றும் சேமிப்பு தகவல்களை நண்பர்களிடம் பெற்றோரிடம் எப்பொழுதுமே தெரிவித்து வைத்திருப்பது நல்லது. வாங்காத கடனை வாங்கினான் என்றோ, வாங்கிய கடனை மறைப்பதோ போன்ற இடர்பாடுகளை அஸ்தி கரைந்த பின்பு நாம் இல்லாத நேரத்தில் எழும் சச்சரவுகளை தவிர்க்க உதவலாம். மேலும் ஒரு டைரி போட்டு தன் குறிக்கோள் மற்றும் ஆசைகள் என்ன போன்ற இத்யாதிகளை எழுதி வந்தால் பின்னாட்களில் அதை படிப்போர் 'அடேடே', 'உச்', 'நல்ல மனுஷன்' என்று இறந்த பிறகு மட்டும் மனதார பாராட்டும் மக்களிடமிருந்து அவர்கள் கண்களில் வேர்வை துளிர்க்க வைக்கலாம். 


முப்பது முதல் ஐம்பது வயதுடையவர்கள் என்றால் சற்றே ஹை ரிஸ்க். கைக்குழந்தை முதல் பதினைந்து வயது வரை குழந்தைகள் இருப்பார்கள். முக்கியமான நிதி சார்ந்த முடிவுகளை துணையிடம் கலந்து ஆலோசித்து எடுப்பது நலம். இன்சூரன்ஸ் கட்டும் பணம் தெண்டம் என்று நினைத்தாலும், டேர்ம் இன்சூரன்ஸ் மற்றும் ஹெல்த் இன்சூரன்ஸ் போன்றவை குடும்பத்தை நிர்கதியாக்காமல் உதவிடும்.  ஷேர் மார்க்கெட், ம்யூஷுவல் பண்ட், எல்.ஐ.சி பாலிசி, PPF, பாண்ட் பாத்திரங்கள்,  சீட்டு போன்ற எந்த வகையான சேமிப்பு வழிகளில் பணத்தை சேமித்து வைத்திருந்தாலும் தெளிவாக அட்டவணை போட்டு சொல்லிவிடுவது உத்தமம். போலவே, எந்தெந்த வங்கியில் அக்கவுன்ட், அதற்கான கடவுச்சொல், ATM கார்ட் பின், நெட் பேங்கிங்க்  போன்றவற்றையும் பகிர்ந்துவிடவேண்டும். ஏனெனில் இந்தியாவில் உள்ள வங்கிகளில் தற்போதைய தேதியில் உரிமை கோரப்படாத பணம் மட்டும் தோராயமாக ஒன்றரை லட்சம் கோடி.  


ஐம்பது அறுபது வயதுடையவர்கள் என்றால் குழந்தைகளின் மேற்படிப்பு மற்றும் அவர்களின் திருமணத்திற்கான செலவு போன்றவை முன் நின்று பயமுறுத்தும். குழந்தைகள் வயது மற்றும் மனதளவில் முதிர்ச்சி பெற்றவர்களாக இருக்கும் காரணத்தினால், நடந்தவற்றை ஏற்றுக்கொண்டு குறுகிய காலத்தில் மனதளவில் மீண்டு வந்தாலும், சரியான நிதி திட்டமிடல் இருந்தால் மட்டுமே குழந்தைகளின் எதிர்கால கனவுகளை பூர்த்தி செய்யும் வாய்ப்பு அமையும்.  முன்சொன்னது போல எங்கெங்கு சேமிப்பு செய்திருக்கிறோம் என்பதை துணையிடமோ உற்ற நண்பர்களிடமோ பகிர்ந்துகொண்டுவிட வேண்டும்.


இருபது வயது கீழே உள்ளவர்களை பாதிக்கும் அளவுக்கு மாரடைப்பு இல்லை என்றாலும்  அன்றன்றைக்கு பிரவுசிங் ஹிஸ்டரியை மட்டும் க்ளியர் செய்து வைப்பது, 'இவனா இப்படி?' போன்ற புறம்பேச்சுக்களை தவிர்க்க உதவும்.  


எது எப்படியோ,  இந்நாளே கடைசி நாள் என்பது போல மகிழ்ச்சியாகவும் மற்றவர்களிடத்தில் அன்பைப்பரிமாறியும் நடந்து கொள்வது உகந்தது.  




ருத்ரதாண்டவம் - விகடனுக்கு கண்டனம்

விகடனின் ஆகப்பெரும் வாசகன் என்ற முறையில் எனக்கு பெருமைதான் என்றாலும் இரண்டு மாதங்கள் முன்பு வந்த 'ருத்ரதாண்டவம்' சினிமாவின் விமர்சனம் சற்றே அந்த நம்பிக்கையை அசைத்து பார்க்கிறது. 

நண்பர்கள் சிலரின் கண்ணோட்டத்தில் 'ருத்ரதாண்டவம்' படம் நன்றாகவே இருக்கிறது என்று அறிந்திருந்த வேளையில், வெறும் 29 மதிப்பெண்கள் மட்டுமே விகடன் கொடுத்திருந்த அதிர்வில் சற்று குழம்பித்தான் போயிருந்தேன். என்னுடைய To Do லிஸ்டில் ஓரிரு தினங்கள் முன்பு டிக் அடிக்கப்பட்டது.

படத்தை பார்த்த வரையில் அதன் கதையாக நான் புரிந்து கொள்வது இதைத்தான். மாநில கட்சியின் தலைவர் போதைப்பொருள் கடத்தல் வேலையில் ஈடுபடுகிறார். வட சென்னையின் ஒரு பகுதியில் போதைப்பொருள் பரிமாற்றத்தை தடுக்கும் பொருட்டு அங்கு மாற்றாலகிப்போகும் இன்ஸ்பெக்டர் ரிச்சர்ட் (கதாநாயகன்), பஜாரில் போதைப்பொருள் விற்கும் இரு சிறுவர்களை விரட்டி பிடிக்கிறார். அந்த நிகழ்வின் விபத்தில் சிறுவர்களுக்கு அடிபடுகிறது. அவர்களுக்கு மருத்துவச்செலவும் செய்து போதைப்பொருள் கேஸில் FIR  போடாமல், பெட்டி கேஸில் அவர்கள் சார்பாக ஸ்டேஷனில் அபராதமும் கட்டி அறிவுறுத்தி பெற்றோர்களுடன் அனுப்பிவிடுகிறார். ஆனால் ஒரு சில நாட்களில், புது போதை பொருளை முயன்று பார்க்கும் முயற்சியில் ஒரு சிறுவன் வலிப்பு வந்து இறந்து விடுகிறான். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அந்த கட்சியின் மாநிலத்தலைவர் இன்ஸ்பெக்டரை பழி வாங்கும் பொருட்டு, அவர் தாக்கிய காரணத்தினால் தான் அந்த சிறுவன் இறந்தான் என்று வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதியசெய்கிறார்.  இதனால் ரிச்சர்ட் கைது செய்யப்பட்டு வேலையும் இழந்து மனைவியையும் பிரிந்து சிறையில் துன்பப்படுகிறார். அந்த பொய் வழக்கிலிருந்து வெளிவரும் பொருட்டு ரிச்சர்ட் மற்றும் தம்பி ராமையா ஏதேனும் துப்பு கிடைக்குமா என்று துலக்குகின்றனர். இறந்துபோன அந்தச்சிறுவன் ஞானஸ்தானம் பெற்றிருப்பதினால் இந்துமதத்தின் கீழ் வரும் சாதியின் பெயரால் கிடைக்கும் சலுகைகளை பயன்படுத்தமுடியாது என்ற வாதத்தை முன்னிறுத்தி தவறாக பயன்படுத்தப்பட்டிருக்கும் வன்கொடுமை தடுப்புச்சட்ட வழக்கை முறியடிக்கிறது. மேலும் இதுபோன்று ஞானஸ்தானம் பெற்று இருபக்கமும் கிடைக்கும் சலுகைகளை பெற்றுக்கொள்ளும் மக்களை கிரிப்டோ கிறிஸ்டியன்ஸ் என்று வகைப்படுத்தியிருக்கிறார்கள். அதாவது சான்றிதல்களில் முருகன் என்றிருக்கும். ஆனால் ஞானஸ்தானம் பெற்ற பிறகும், தங்கள் அடையாளத்தை பகிரங்கமாக துறக்கமாட்டார்கள். (மேலதிக விவரத்திற்கு தனிப்பெட்டியில் வரவும்) 



விகடனின் விமர்சனத்தில் 'ஒடுக்கப்பட்ட மக்களின் அரணாக நிற்கும் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் மீது போலி பிம்பம் கட்டமைக்கும்போதுதான் சட்டம் மீதான அவரின் அக்கரையிலுள்ள உள்நோக்கம் வெட்டவெளிச்சமாகிறது' என்று வெளிவந்திருக்கிறது. PCR சட்டத்தை தவறாக பயன்படுத்துவதைத்தான் தவறு என்று இயக்குனர் கூறியிருக்காரே ஒழிய அந்த சட்டமே தவறு என்று எங்குமே கூறவில்லை. தவிர ரிச்சர்டுக்காக நீதிமன்றத்தில் வாதாடும் வக்கீல் கூட தான் பட்டியல் இனத்தை சேர்ந்தவர் தான் என்று பகிரங்கமாக அறிவிக்கிறார். மேலும் நாடே கொண்டாடப்படவேண்டிய சட்ட மேதை அம்பேத்காரை ஒரு சாரார் மட்டுமே அரசியல் லாபநோக்கங்களுக்காக தங்களுக்கு சொந்தமாக்கி கொண்டது எப்படி நியாயமாகும் என்ற தர்க்க ரீதியான வாதத்தை முன்வைக்கின்றார். மேலும் கடந்த தலைமுறையை காட்டிலும் தற்கால இளைஞர்களிடம் போதை மருந்து எந்த அளவுக்கு பரவலாக கிடைக்கிறது என்றும் அதன் தாக்கத்தினால் இன்றைய இளைய சமுதாயம் எப்படி சீர் கெட்டுப்போகின்றது என்றும் காட்சிப்படுத்தியுளார். 

வசனங்கள் மற்றும் மிகை நடிப்பு போன்ற சில குறைகள் இருந்தாலும் படம் பார்க்கும் எவருமே படம் சொல்ல வந்த கருத்தை தவறாக கருதக்கூடிய அளவில் எங்குமே காட்சிகள் இல்லை. அண்ணாத்தே படத்திற்கு 39 மதிப்பெண்கள் கொடுத்திருக்கும் நேரத்தில் இதற்கு சற்றேற்குறைய 40 மதிப்பெண்களாவது கொடுத்த்திருக்கலாம். வெறும் 29 மதிப்பெண்கள் மட்டுமே கொடுத்திருக்கும் விகடனின் விமர்சனக்குழுவின் உள்நோக்கம் இதன் மூலம் வெட்ட வெளிச்சமாகிறது. 

லோ காஸ்டிங் லோ பட்ஜட் சினிமாவை இந்த அளவுக்கு ஒரவஞ்சனையுடன் கொஞ்சமும்  முதிர்ச்சி இல்லாமல் விமர்சித்திருக்கும் விகடனுக்கு பொன் மகள் வந்தாள், மற்றும் சூரரை போற்று போன்ற படங்களின் காட்சிப்படுத்தபட்டிருக்கும் தற்குறித்தனங்களை விமர்சிக்கும் தைரியம் இருக்கிறதா?

வெள்ளி, நவம்பர் 26, 2021

அண்ணாத்த ஸ்டோரி டிஸ்கஷன்

சிவா: வணக்கம் சார்.

ரஜினி : வணக்கம். வாங்க. விஸ்வாசம் படம் தூள். பிரமாதம் பண்ணீட்டிங்க.

சிவா : ரொம்ப நன்றி சார். உங்களுக்கும் ஒரு கதை ரெடி பண்ணி வச்சிருக்கேன். நீங்க விருப்பபட்டீங்கன்னா படம் பண்ணிடலாம்.

ரஜினி : ஓ அப்படியா. ஆனா சிவா எனக்கு என்னன்னா பாருங்க, இந்த ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ் அப்டி இவங்க கூடலாம் புதுசா ஒர்க் பண்ணி வித்தியாசமா ஒரு டிராக்ல படம் போய்ட்ருந்துச்சு. வயசுக்கு ஏத்த ஒரு கேரக்டர் மாதிரி கதை கொண்டுவந்தாங்க. பரவால்ல. படம் ஓகேனு சொல்லலாம். அதுக்கப்புறம் இந்த டுப்பாக்கி எடுத்தாரே முருகதாஸ், அவர்ட்ட ஒரு படம் பண்ணலாமான்னு கேட்டேன். வேஷ்டிய பின்னாடி கிளிச்சிவிட்டுட்டு என் இடுப்புல கட்டி விட்ட மாதிரி ஒரு படம் எடுத்து கொடுத்தார். இப்போ என்ன பண்றதுனு தெரியாம முழிச்சிட்ருக்கேனா, அதான் யோசனையா இருக்கு.

சிவா: அப்டிலாம் பயப்படாதீங்க சார். உங்க ஒரு துளி வேர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு எப்பவுமே கொடுப்பாங்க. அவங்கள நமபி தைரியமா ஒரு படம் எடுக்கலாம். அதுபோக இல்லாம, வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் னு நாலு படத்துல கத்துகிட்ட வித்தைய மொத்தமா இதுல இறக்கலாம்னு இருக்கேன் சார்.

ரஜினி: அப்டின்றீங்க. சரி கதை சொல்லுங்க. கேப்போம்.

சிவா ரஜினியிடம் கதை சொல்லுகிறார். அந்த பாவத்தை இங்கு எழுதுவது கபீம் குபாம் தண்டனையை பெற்று தந்து விடும் என்பதால் தவிர்க்கபட்டிருக்கிறது.

கதை கே(கெ)ட்ட பிறகு,




ரஜினி: ஒர்க் அவுட் ஆகுமா. போன படமா தான் அப்பா பொண்ணு செண்டிமெண்ட் . இப்ப திரும்பவுமா?

சிவா : அதுல அப்பா பொண்ணு. இதுல அண்ணண் தங்கச்சி. கீர்த்தி சுரேஷ்  இப்போதான் உடம்ப குறைச்சிருக்காங்க. அவங்கள புக் பண்ணிடலாம்.

ரஜினி : ஐ. அவங்க தான் எனக்கு ஜோடியா. பேஷ். பின்றீங்க.

சிவா : ஐயோ சார். அது தான் உங்க தங்கச்சி.

ரஜினி: ஓஓ. கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுட்டேன். அப்போ ஹீரோயின் யாரு?

சிவா: போன படத்துல நடிச்ச நயன்தாரா போட்டுக்கலாம் சார். ஆனா வயசு வித்தியாசம் காரணமா அந்த படத்துலேயே நயன்தாராவ போட்டதுக்கு கதைக்குள்ளேயே ஒரு சீன் வச்சி ஒட்டிருப்பாங்க. நான் அந்த அளவுக்கு பங்கம் வைக்கல. ஒரு பிரென்ட், பேமிலி பிரென்ட் மாதிரி, ஒரு குழப்பமா கதைல கொண்டு வந்துடலாம். என்ன ரோல்னு யாருக்கும் தெரியாத மாதிரி. கடைசில கீர்த்திய காப்பாத்தும்போது கூட, சூரிய ஒரு தொட்டி ஆட்டோ கொண்டு வந்து இடிச்சி அப்டியே கண்டுக்காம கழட்டி விட்டுரலாம்.
   
ரஜினி : பென்டாஸ்டிக் சிவா. அப்புறம் என்ன ஸ்பெஷல்.

சிவா: குஷ்பு, மீனா இவங்க ரெண்டு பேரையும் கூப்ட்ருக்கேன்.

ரஜினி: மார்வெலஸ். சர்ப்ரைஸ் மேல சர்ப்ரைஸா கொடுக்கறீங்க. அவங்களுக்கு என்ன ரோல்.

சிவா: அது எனக்கே தெரியாது சார். கூப்டு வந்து சேலை கட்டி வுட்டு, ஒரு பாட்டுக்கு டான்ஸ் மாதிரி எதாவது அப்டி இப்டி ஆடி, படத்த இன்னோரு அரை மணி நேரம் ரொப்பிரலாம் சார். அப்டியே படத்த ரிச்சா காமிக்கிறோம். கலர் கலரா வராங்க போறாங்க. அவ்ளோதான்.

ரஜினி : செம. வேற என்ன ஸ்பெஷல் சொல்லுங்க.

சிவா : சூரிய காமெடிக்கு கூப்டுக்கலாம்.

ரஜினி: போன படத்துல யோகி பாபு. இந்த படத்துல சூரி. செம யூத்தா இருக்கும்ல.

சிவா : உங்களையே யூத்தாதான் காமிக்கிறோம். அவரு வழக்கம்போல டங்கிலிஷ் பேசிட்டு கடுப்படிச்சிட்டு இருப்பார். சாரி. காமெடி பண்ணிட்ருப்பார்.

ரஜினி : வேற என்ன ஸ்பெஷல்.  

சிவா: செமயா ஒன்னு யோசிச்சிருக்கேன். குப்புலி லீலானு ஒரு ஆர்ட்டிஸ்ட். உங்களோட ஒரு நாலு வயசு கம்மி.

ரஜினி : நீங்க என்ன சொல்லப்போறீங்கன்னு கண்டுபிடிச்சிட்டேன். அவங்கதான என்னோட அம்மா கேரக்டர் பண்ணப்போறாங்க. கரெக்டா?

சிவா : இல்ல சார். அதையும் தாண்டி. பாட்டி கேரக்டர். இது எப்படி இருக்கு?

ரஜினி: பத்த வைக்குறீங்களே சிவா. பட்டைய கிளப்புறீங்களே. வேற வேற சொல்லுங்க.

சிவா ஸ்டண்ட் சீன்களை வரிசையாக விளக்குகிறார்.

ரஜினி : படம் புல்லா ச்சும்மா பத்திக்கிட்டு எரியும் போல. அந்த லாரிலாம் எப்படி வெடிக்குது?

சிவா: எனக்கே தெரியாது சார். வெடிக்க வைக்கிறோம். தீபாவளில. எதையாவுது எரிப்போம்.  

ரஜினி: அப்புறம் வில்லன் பில்டிங்க்குள்ளேயே போய்ட்டு இந்த 9.50, 10.10 மணிக்கு அலாரம் வச்சிட்டு கொல்றேனே. அது எப்படி. என்ன லாஜிக். எப்படி நான் வில்லனோட இடத்துல சேஃபா இருக்குறேன். ரசிகர்கள் கேக்கமாட்டாங்களா?

சிவா: லாஜிக்கா. என்ன ஜோக் சார். அதலாம் நாம பாக்கலாமா. சும்மா அப்புடியே படம் எடுக்க வேண்டிதான் சார். கதைல ஒரு விறுவிறுப்பு எப்படி கொண்டு வர்றது. நீங்க ஒரு பவுன் விஷயத்த மறந்துட்டீங்க.

ரஜினி:   கரெக்ட். கரெக்ட். சரி, அந்த பில்டிங் மேல நின்னுட்டு கையிறு கட்டி ஒரு அடியாள தொங்க வைக்கிறோம். பட் நான் மேல கயிற இழுத்தா அந்த ஆளு வெளில போனுமே. எப்படி கண்ணாடில வந்து மோதுறான்.

சிவா: சார். நீங்க சொல்றது லாஜிக். பட் நம்ம பண்ணப்போறது மேஜிக். கயிறு கைல இழுக்கும்போது நீங்க வாய கோணிட்டு சூப்பரா ஒரு எக்ஸ்ப்ரெஸன் குடுப்பீங்க. பாருங்க. அப்டியே க்ளாப்ஸ் அள்ளும் சார்.

ரஜினி : ஜமாய்ச்சுடலாம்   போங்க.அப்புறம் சிவா இன்னோனு கண்டுபிடிச்சிட்டேன்.அந்த லீலா கேரக்டர் எனக்கு பாட்டியா நடிக்கறதுனால தான் காண்டாகி கீர்த்தியோட லவ்வ எண்ட சொல்லாம வேற ஏதோ பொய் சொல்லி அப்டியே கதை வேற எங்கெங்கோ போய், செம ட்விஸ்டு சிவா

சிவா: ஆமா சார். பாய்ண்ட புடிச்சிட்டீங்க.  தவிர முத பாட்டா நம்ம SPB யோட பாட்டு. நாலு ஹீரோயின். ரெண்டு வில்லன். காமெடி அதகளத்துக்கு சூரி, ரெண்டு வில்லன். கொல்கட்டால சூட்டிங். அங்கங்க ஃபைட். உங்க அதிரடி டான்ஸ். 60 ஷாட் மாதிரி லாரிய வெடிக்க வைக்கிறோம். இந்த கிழி போதுமா சார்.   

ரஜினி : போன தடவ வேட்டிய பின்னாடி கிழிச்ச மாதிரி படம் எடுத்தாங்க. இந்தத்தடவ நீங்க அண்டர்வெரோட ரோட்ல  ஓடுற மாதிரி படம் பண்ணப்போறீங்க.  அப்டிதானே

சிவா : ஆமா சார். ஆமா.

ரஜினி: ஒரு நூறு கோடி சம்பளம் போதும்.

சிவா: அவ்வளவுதான் சார். சன் பிக்சர்ஸ் உள்ள வந்தாச்சு. மொக்கப்படம்னாலும் ஓட்டிடுவாங்க. கவலையே வேண்டாம்.

எ பிலிம் பை சிவா  .அண்ட் டீம். 

 

வியாழன், நவம்பர் 25, 2021

முதல் மரியாதையும் தமிழ் புலவரும்

 https://twitter.com/iParisal/status/1463394870064680963?t=w6zHqcY2Q1oWbnT8vwEjVw&s=09

முதல் மரியாதையை வேறு கோணத்தில் அணுகிய இந்த விமர்சனம் சுவாரஸ்யமாக இருக்கிறது. தேசிய விருதெல்லாம் வாங்கி எல்லோரும் கொண்டாடி அலுத்து சலித்தப்பிறகு, தூசி தட்டி மாற்றுப்பார்வையோடு தமது கருத்துக்களை முன் வைக்கிறார் விமர்சகர். வடிவுக்கரசிக்கு வக்காலத்து வாங்கலாமா இல்லையா என்று யோசித்து கொண்டிருந்த நேரத்தில், சுமார் 23 வருடங்களுக்கு முன் நான் பள்ளியில் படித்தபொழுது எழுதிய கட்டுரை நினைவலைகளில் வந்து போகிறது. 

பத்து மார்க் கேள்வி என்று நினைக்கிறேன். தமிழ் பாடப்புத்தகத்தில் கதைகள் இடம்பெறும். புத்தகத்தின் கடைசி கதை அது. கதையின் கரு இதுதான். ஒரு தமிழ் புலவர் தனது மனைவி மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். தமிழின் பால் தீரா பற்றுடையவர். ஆதலினால் தமிழை நேசிக்கும் பொருட்டு தனது மனைவி மக்களை கூட மறந்துவிடுகிறார். வீட்டை பொருளாதார ரீதியில் மற்றும் இறையாண்மையோடு(!!!) வழிநடத்தி செல்வது அவரது மனைவி. அப்படிப்பட்ட அர்ப்பணிப்போடு புலவர் தமிழை நேசித்து வளர்த்தார் என்று கதை முடிவுறும். இதை பற்றி இரு பத்திகள் மிகாமல் ஒரு கட்டுரை வரைக என்பது அந்த இறுதியாண்டு பரீட்சையின் கேள்வி. 


எனக்கு அந்த கதை போன போக்கே பிடிக்கவில்லை. காலாண்டு மற்றும் அரையாண்டில் அந்த கேள்வி கேட்கப்படாமல் இறுதி பரீட்சையில் அந்த கேள்வி கேட்கப்பட்டது, காய்ந்த மாடு கம்பங்கொல்லையில் புகுந்தது போல ஆகிவிட்டது. வீட்டில் குடும்பத்தை கவனிக்காமல், உன்னை நம்பி வந்தவளுக்கு சோறு போட யோக்கியதை இல்லமால், இரு உயிர்களின் உணர்வுகளை மதியாத புலவருக்கு திருமணம் ஒரு கேடா என்கிற ரீதியில் நாகரீகமாக(!!!) இருபக்கத்திற்கு பொரிந்து தள்ளிவிட்டேன். எரிகிற தீயில் என்னை ஊற்றுவது போல அந்த கதையில் ஒரு வரி கோபத்தை இன்னும் கிளறியிருந்தது. புலவர் வீட்டை விட்டு வெளிவரும்பொழுது வாசலில் இருக்கும்  ரோஜாச்செடி வாடியிருக்கும். மலர்கள் தலை கவிழ்ந்து காய்ந்து போய் நிற்கும். அதை கண்டவுடன் புலவருக்கு ஒரு கவிதை தோன்றும் என்றெல்லாம் வயித்தெரிச்சலை கிளப்பியிருப்பார்கள். புலவரின் பொறுப்பற்ற இல்லற வாழ்க்கைக்கு ஒரு சோறு பதம் போல இந்த காட்சி வாசிப்பவர்களுக்கு உணர்த்துகிறது என்கிற ரீதியில் இரண்டாம் பக்கத்தில் இதற்கென்றே தனியாக ஒரு பத்தி விலாவரியாக கிளறிவிட்டிருந்தேன். தமிழ் வாத்தியார் திட்டினாலும் பரவாயில்லை என்று முடிவு செய்தாயிற்று. ஆனால் முழு ஆண்டு தேர்வின் திருத்தப்பட்ட பின்னூட்டங்கள் எப்பொழுதும் நமக்கு அளிக்கப்படுவதில்லை. அந்த பாடத்தில் தேர்ச்சியா தோல்வியா என்பதுடன் சஸ்பென்ஸ் முடிந்துவிடும். தேர்ச்சி. அவ்வளவுதான்.  

முதிர்ச்சியடையாத நாட்களில் எழுதப்பெற்ற என்னுடைய முதல் விமர்சனம் என்பதால், அந்த தேர்வின் விடைத்தாளை யாரேனும் ஒரு நகல் பெற்று கொடுத்தால், கருமாத்தூர் காட்டுக்குள்ளே கறிவிருந்து அளிக்கலாம் என்ற உறுதியளிப்பை இங்கு நான் பதிவு செய்ய கடமைப்பட்டிருக்கிறேன்.   


ஞாயிறு, நவம்பர் 21, 2021

ஜெய் பீம்

எழுத்து, ஓவியம், தெருக்கூத்து, நாடகம், பாடல், சினிமா என கலை  எந்த பரிமாணத்தில் இருந்தாலும் அது இயல்வாழ்க்கையை பிரதிபலிக்கும் கண்ணாடியாகவே இருந்து வந்துள்ளது. மகிழ்ச்சி, துக்கம், பெருமை, கோரிக்கை என  உணர்வுகளை ஒத்திசைத்து வெளிப்படுத்தும் ஆயுதமாகவே பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டுள்ளது.  ஒளியும் ஒலியும் இணைந்த நாட்கள் முதல் சினிமா அதில் முன்னோடியாகிவிட்டது. ஏலக்காய் அறுவடை செய்யும் குடும்பத்தின் எளிமையான வாழ்க்கையை, மேற்கு தொடர்ச்சி மலையின் அழகை அருகில் இருந்து பார்க்கும் உணர்வை சினிமாவைத்தவிர அவ்வளவு அழுத்தமாக நமக்கு வேறு எதுவும் கடத்தியிருக்க முடியாது.    

அதுபோலவே வரலாறும். இன்னும் சொல்லுவதென்றால் வரலாற்றின் சாட்சியாகவே பல சிறந்த படைப்புகள் சினிமாவில் இருக்கிறது. அதுபோன்ற மறந்துவிடக்கூடாத ஒரு வரலாற்றின் சாட்சி தான் 'ஜெய் பீம்'. நல்ல படைப்பாளியை, மனிதர்களை அடையாளப்படுத்தி காட்டுவதிலும் வெகு ஜனத்திடம் கொண்டு போய் சேர்ப்பதிலும் விகடன் என்றுமே நம்பர் ஒன். நீதியரசர் சந்துரு ஒய்வு பெற்ற போது அவரை பற்றி, அவரது சாதனைகளை எடுத்துரைத்து ஒரு கவர் ஸ்டோரியுடன் பிரியாவிடை அளித்திருந்தது. அந்த  கட்டுரை வராவிட்டால் என்னளவில் அவர் மற்றுமொரு நீதிபதியாகவே  இருந்திருப்பார். எளிய மக்களுக்கு உதவும் நீதியரசியராக எனக்கு அறிமுகமாயிருக்கமாட்டார்.


ரியல் சந்துரு கதாபாத்திரத்தில் சூர்யா. கதையின் முக்கியத்துவம் கருதி தயாரிக்க முன்வந்து காத்திரமான நடிப்பையும்  வெளிப்படுத்தியிருக்கிறார். இருளர் ராஜ்கண்ணுவாக மணிகண்டன் கச்சிதமான தேர்வு. திரைக்கதையின் சுவாரசியம் பொருட்டு வழக்கின் முக்கிய முடிச்சுகள் சாட்சிகள் விசாரிக்கப்படும் வரிசையிலேயே அவிழ்க்கப்படுகின்றன. மிக நீண்ட நாட்களுக்குப்பிறகு விறுவிறுப்பான ஒரு கோர்ட்ரூம் டிராமா. அதுவும் நிஜ நிகழ்வுகள் என்பது நம்மை கலங்கடிக்கின்றது.

படத்தின் ஆரம்ப வசனங்களே பார்வையாளராகிய நம் மீது அணுகுண்டை எரிகிறது. ஆதிக்க சாதி மற்றும் ஒடுக்கப்பட்ட சாதி பெயர்களை வெளிப்படையாக பேசிய அளவில் கவனம் ஈர்க்கிறது. போய் கேசுக்காக போலீஸ் நடத்தும் பேரம், அரசாங்க கட்டமைப்பின் அவலம். "குடிசையை கொளுத்த எவ்வளவு நேரம் ஆகும்" போன்ற வசனங்கள் ஆதிக்க சாதியின் மனோபாவத்தை தைரியமாக துகிலுரிக்கின்றன. வீட்டில் ஒளிந்திருக்கும் பாம்பை பிடிக்க தேவைப்படும் இருளர்கள் தோளைக்கூட தொடக்கூடாது, திருட்டு வழக்குகளில் முகாந்திரம் இல்லாமல் இருளர்களை பிடித்துப்போடுவது காவல்துறைக்கு ஒரு வழக்கமாகவே இருந்துள்ளது என்பதும், சாதியை மேற்கோள்காட்டி திருட்டுப்பட்டம் கட்டுவது, மேலும் கேட்க நாதி இல்லாத காரணத்தால் இருளர்கள் மீது பொய் வழக்கு போடுவது போன்றவையும் சகிக்க முடியாத சமூக அவலங்கள். அதை எதிர்த்து எதிர்வினையாற்றாமல் மெளனமாக இருக்கும் நாம் ஒவ்வொருவரும் அந்த குற்றங்களுக்கு துணை போனவர்கள்தாம். வில் வித்தையில் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்த இவர்களின் வரலாற்றை மறந்து ஒதுக்கிவைக்கப்பட்டுள்ளார்கள் என்பது தெரிந்துகொள்ளப்படவேண்டிய செய்தி. இதுபோன்ற சமூக   அவலங்களை ஆராய்ந்து தெளிவுபடுத்துவதில் முனைவர்களின் ஆராய்ச்சிக்கட்டுரைகள் மிகவும் பயன்டுகின்றன.

சட்டம் மட்டும் இயற்றப்படவில்லையென்றால் சமூதாயத்தில் இன்றளவும் பலமக்கள் சாதனை புரிய வழியில்லாமல் ஒடுக்கப்பட்ட மனிதர்களாகவே இருந்திருப்பார்கள். நீதிபதி சந்துரு போன்ற பல தனிப்பட்ட மனிதர்களின் அர்பணிப்பான உழைப்பே மக்களுக்கு தைரியம் அளிக்கும் ஆயுதமாக இருக்கிறது. 1995இல் இருளர் வாழ்வுரிமை காக்கும் சங்கம் தொடங்கப்பட்டிருக்கிறது. எங்கெங்கெல்லாம் மக்கள்  ஒடுக்கப்பட்டார்களோ அங்கெங்கெல்லாம் தங்களை போராடி மீட்டெடுக்க சங்கங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அவ்வகையில் ஒடுக்கப்பட்ட  மக்களுக்காக போராடுவதற்கு தன் வாழ்நாளையே அர்ப்பணித்த பீமாராவ் ராம்ஜி அம்பேத்கரின் உழைப்பை நன்றியுடன் நினைவுகூறும் பொருட்டே 'ஜெய் பீம்' என்கிற தலைப்பு. தமிழ் மொழியில் கதைக்கேற்ற தலைப்புடன் வெளிவந்த  சினிமாவில் ஆகச்சிறந்த தலைப்பாக இதை கொள்ளலாம். 

சட்டத்தின் மூலம் நியாயத்தை நிலைநாட்ட முடியும் என்ற நம்பிக்கையை தூவியிருப்பது இந்த வழக்கின் மிகப்பெரிய வெற்றியாகும். அதை காட்சிப்படுத்தி அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்த்த விதத்தில் ஜெய் பீம் சந்தேகத்திற்கு இடமின்றி வெற்றிபெற்றிருக்கிறது

 மதமும் சாதியும் ஒழிந்து மனிதம் மலரட்டும்.   

 ஜெய் பீம்!!!

கனவு மெய்ப்படவேண்டும்

சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் செய்தி அவ்வளவு எளிதில் ஜீரணிக்கமுடியாதது. நண்பியின் தாத்தா என்றெல்லாம் குறிப்பில் எழுதப்பட்டிருக்கிறது. பேத்தியின் சக தோழியை, தன் பெண்ணைப்போல பள்ளிக்கு கல்வி பயில வந்த மாணவியை போகப்பொருளாக பார்த்த பார்வை நமது சமூகத்தின் கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளை பறைசாற்றி முகத்தில் அறைகிறது. தற்கொலை முடிவை எடுக்கும் முன் பெற்றோர், பள்ளி தாளாளர் என்று அனைவரிடத்திலும் தன் இன்னல்களைத்தெரிவித்திருக்கிறார். எங்குமே தீர்வு கிடைக்காத விரக்தியில் அந்தத்தளிர் தன்னை தானே பொசுக்கிகொண்டுள்ளது.

மூன்று மாதத்திற்கு முன் கல்வி அமைச்சரின் நெருங்கிய சகா ஒருவர், இதுபோன்ற பள்ளியில் நிலவும் குறைகளைத்தெரிவிக்க ஒரு Toll Free நம்பரை நிறுவும் ஆலோசனையில் அமைச்சர் ஈடுபட்டிருப்பதாகத்தெரிவித்திருந்தார். இந்த சம்பவத்திற்கு பிறகு அவரைத்தொடர்பு கொண்டேன். Toll Free அழைப்பில் புகார் அழைப்பு மற்றும் குரல் பதிவு செய்யப்படுவதால் இந்த செயல்பாடு வரவேற்பைப்பெறுமா என்ற ஆலோசனையில் காலம் தாழ்ந்துவிட்டது என்று வருந்தினார்.
என்னைப்பொறுத்தவரை இரண்டே தீர்வுகள். ஒன்று, இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை பகிரங்கமாக தண்டிப்பது. இதற்கு அரசின் ஒத்துழைப்பும் சட்டசீர்திருத்தமும் செயல்படுத்தப்பட வேண்டும். இரண்டாவது மாணவர்கள் மற்றும் பெற்றோரின் கையில். குட்டக்குட்ட குனியாமல் மனதில் பயத்தை அகற்றி துணிவுடன் வெளிப்படையாக எதிர்ப்பது. கீழ்த்தரமாக நடக்கும் ஒரு உயிரினத்திற்கே இந்த வையகத்தில் வாழ வழி இருக்கும்பொழுது, பார் வியந்து போற்றும் சாதனைகளை புரிய காத்திருக்கும் மாணவர்கள், தற்கொலை தான் நிரந்தரத் தீர்வு என்ற முடிவை கைவிட்டு தன் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். பிதாகரஸ் தியரத்துடன் ஆளுமைத்திறன் பயிற்சி கட்டாயமாக்கப்படவேண்டும். கல்விக்கும் எனக்கும் சம்பந்தமில்லை, அதற்குத்தானே பள்ளி என்ற கற்பிதங்களை களைந்துவிட்டு, குழந்தைகளின் குறைகளை அருகில் அமர்ந்து செவிமடுக்க, மறுவினை புரிய, உறுதுணையாக இருக்கிறோம் என்று நம்பிக்கையூட்ட பெற்றோர்கள் முன் வரவேண்டும்.
கனவு மெய்ப்படவேண்டும்

ஞாயிறு, நவம்பர் 07, 2021

அவங்க வீட்டுபிள்ளை

ஒரு பக்க அளவில் உள்ள கற்பனையான 200 வார்த்தைகளால் என்ன கொடுத்துவிடமுடியும்?

ஆண்டாண்டுக்கும் ஏன் தலைமுறை தாண்டியும் படித்து தெரிந்துகொள்ளவேண்டிய, காலச்சக்கரத்தில் உறைந்துபோன உண்மைச்சரித்திரத்தை பரிசாக கொடுக்க முடியும். 

5 வார்த்தைகள். அதை கோர்வையாகத்தொடுத்து 200 வார்த்தைகளுக்கு மிகாமல் ஒரு புனைவு வரையும் போட்டி. பதினைந்து நிமிடங்களில் புனைந்தது. போட்டியில் முதல் பரிசை தட்டி வந்துள்ளது. பரிசாக 'காவல் கோட்டமும்,  வால்கா முதல் கங்கை வரை' புத்தகங்கள். போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் தேர்வர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். 

இந்த ஐந்து வார்த்தைகளை தொடுத்து சமைத்த கதை கீழே. 

அவங்க வீட்டுபிள்ளை 

தமிழழகனுக்கு அந்த காலை அவ்வாறு விடியும் என்று அவனே எதிர்பாராதது. இரவு அவனோடு படுத்து உறங்கிய இளைய மகன் நேயனை காணவில்லை. அவனது குடும்பமே அந்த நடைபாதையில் தான் படுத்து உறங்கும்.  பக்கத்து தெருவில் இருந்த பாழடைந்த பங்களாவை  உறைவிடமாக்கிக்கொள்ளாலாம் என்று கூறியபோது அது அவனது மனைவி இலக்கியாவுக்கு பிடிக்கவில்லை. ஏழை என்றாலும் பணக்காரன் என்றாலும் மீனாட்சி கோடு கிழித்தபின் சுந்தரேஸ்வரர் அதைத்தாண்டுவதில்லை எனும்போது தமிழழகன் மட்டும் விதிவிலக்கா என்ன? அந்த வழியாக செல்வோர் போடும் மீந்த உணவை உண்டுதான் அந்த குடும்பமே உயிர் வாழ்ந்தது. பெரிசாக சொல்லிக்கொள்ள உறவுகள் ஏதும் இல்லாததால் அந்த நடைபாதையே கதி என்று அந்த குடும்பம் கிிடந்தது.

இருந்தாலும் இளைய வளவல் என்ற காரணத்தினால், நேயனை முழு அன்போடு அந்த குடும்பம் நேசித்தது. மனைவி இலக்கியாவுக்கு இதுவரை மூன்று முறை பிரசவம் ஆகியிருந்தது. எல்லாமே இதே நடைபாதையில் நடந்த சுகப்பிரசவம். அதிலே நேயன் தான் கடைக்குட்டி. பிறந்ததிலிருந்து பாலைத்தவிர வேறு எதுவும் குடிததில்லை. அதுவும் ஒரு பெரியவரின் கரிசனத்தில் கிடைக்ககும் வேதா பாக்கெட் பால். ஜில்லென்று இருக்கும் பாக்கெட்டை பல்லாலேயே கடித்து குடித்துவிடுவான் நேயன். குடும்பமே எச்சில் உணவுகளை உண்டாலும், நேயனுக்கு எப்போதுமே இந்த பாக்கெட் பால் தான்.  அவ்வளவு அன்புடன் சீராட்டி வளர்த்த நேயனின் பிரிவு அந்த குடும்பத்தையே அந்த காலை வேளையில் புரட்டி போட்டிருந்தது.

தமிழழகனும் இலக்கியாவும் நாலு கால் பாய்ச்சலில் நேயனைத்தேட ஆரம்பித்தனர். எதிரில் தென்பட்ட இளங்கிள்ளி மற்றும் எழில்வேந்தனிடம் விசாரித்தனர்.  வயதான அந்த இருவர் தான் ஒருவகையில் அந்த தெருவுக்கே பாதுகாப்பு.  இருவரும் தெரியாது என்று சொல்லவும் இலக்கியா ஓடாது நிற்கும் காருக்கு அடியில் உறங்கி கொண்டிருக்கும் உணர்வுக்கினியாள் மற்றும் குணமங்கையிடம் நேயனின் பிரிவை தாளாது அரற்றினாள். ஆனால், தமிழழகன் அவனது உள்ளுணர்வின் பேரில் அந்த பாழடைந்த பங்களாவை நோக்கி நாலுகால் பாய்ச்சலில் வேகமாக ஓடினான். அவன் எதிர்பார்த்தது போலவே அங்கு நேயன் கிழிந்து போன பந்தை வைத்து விளையாடிக்கொண்டிருந்தான். 

நேயன் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் ‘லொள், லொள்’ என்று உரக்க குறைத்துக்கொண்டே அந்த நாய்கள் குடும்பம், மீண்டும் நடைபாதையை நோக்கி  ஓடத்தொடங்கியது.


அந்த ஐந்து வார்த்தைகள் - "குடும்பம்-உறவு-அன்பு-பிரிவு-மகிழ்ச்சி"


வியாழன், நவம்பர் 04, 2021

SOP - Four Lane - நிலையான வளர்ச்சி

கடந்த மாதம், என்னுடன் முந்தைய நிறுவனத்தில் வேலை பார்த்த ஒரு நண்பர் reference லெட்டர் எழுதிக்கொடுங்கள் என்று கோரிக்கை விடுத்திருந்தார். Reference லெட்டர் எழுதுற அளவுக்கு எனக்கு வயது ஆகவில்லையே என்ற அதிர்ச்சியில் என்ன ஏது என்று விசாரித்தபொழுது வெளிநாட்டில் மேற்படிப்பு படிக்கப்போவதாகவும் அதற்கு படிப்பு மற்றும் வேலை சம்பந்தப்பட்டவர்கள் reference கொடுக்க வேண்டும் என்றும் விளக்கினார். நீங்கள் என்னுடன் வேலை பார்த்தவர் என்ற முறையில் என்னைப்பற்றி உங்களுக்கு தெரிந்தவற்றையும் இந்த படிப்புக்கு நான் எவ்வாறு உகந்தவனாக இருப்பேன் என்பதையும் எழுதலாம் என்றும் கூறினார். மேலும் எதற்காக அந்த படிப்பை நாம் தேர்ந்தெடுத்தோம் என்று ஒரு SOP (Statement of Purpose), இந்த படிப்பினால் என்ன வகையான திறமைகளை வளர்த்துக்கொள்ளுவீர்கள், இந்த படிப்பின் மூலம் உங்கள் நாட்டுக்கும் சுற்றுச்சூழலுக்கும் எவ்வாறு உதவிகரமாக இருப்பீர்கள், என்ன முன்னேற்றத்தை கொடுப்பீர்கள் என்று பல கேள்விகள்; அதற்கு தோராயமாக 500 வார்த்தைகளில் கட்டுரை எழுதி விண்ணப்பபடிவத்துடன் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் விளக்கினார். அடேங்கப்பா என்றிருந்தது. நாட்டின் முன்னேற்றம் இளைஞர்கள் கையில் இருக்கிறது என்று கூறும் நாம் அவர்களை நெறிப்படுத்த என்ன முயற்சிகளை எடுத்தோம் என்று யோசித்திருக்கிறோமா?. அதுகூட வேண்டாம். நாம் படிக்கும் படிப்பை விரும்பிதான் தேர்ந்தெடுக்கிறோமா?, அந்தத்துறையில் என்ன முன்னேற்றத்தை கொடுக்கப்போகிறோம் என்று குறிக்கோளுடன் தான் நாம் நம்முடைய கல்லூரியில் காலடியெடுத்து வைத்தோமா என்றால், 99 சதவீதம் இல்லை என்றே பதில் வரும். 

நிற்க. 



கடந்த வாரம் எங்கள் சுற்றுவட்டாரத்தில் ஒரு விபத்து நடந்தது. நால்வழிச்சாலையில் மீடியனை தாண்டும் நேரத்தில் கவனக்குறைவாக எதிர்புறமாக பார்த்தது சாலையைக்கடக்க இறங்கியபோது டேங்கர் லாரியில் அடிபட்டு ஒரு பெண் இறந்துவிட்டார். மிக வருந்தத்தக்க இந்தத்துயரச்செய்தியால் வட்டாராமே சோகத்தில் மூழ்கியது. இதுசம்பந்தமான செய்தி வாட்சப்பில் வந்ததால் விழிப்புணர்வு பொருட்டு வீட்டுக்கருகில் குறுக்கு மறுக்காக சாலையில் ஓடி விளையாண்டுகொண்டிருந்த சுட்டிகளை கூப்பிட்டு கொஞ்சமே கொஞ்சமாக விளக்கிக்கூறினேன். சேர்ந்தாற்போல் எல்லோரும் 'உச்' என்று வருத்தப்பட்டனர். அதில் ஒரு வாண்டு கூறியது, "ஏன் நாம வேகமாக போற வண்டிக்கு தனியா, பஸ்ஸுக்கு தனியா, இதுமாதிரி நடக்கிறவங்களுக்கு தனியா ரோட் போட்ருக்கலாமே. அப்புறம் இந்த மேல ஏறிப்போவாங்களே, அது மாதிரி இரும்புல ஒரு பாலம் போட்டா இந்தமாதிரி ஆக்சிடென்ட் நடக்காதுல்ல" என்று கூறியது. வயது ஏழிருக்கலாம். ஒரு விபத்து, அந்த நிகழ்வை எதிர்கொண்டு வருந்தி கடந்தவிதம், பின் அதற்கு BRTS (Bus  Rapid  Transit  System), Foot over Bridge என அதற்குத்தெரிந்த மொழிகளில் ஒரு தீர்வையும் இரண்டு நிமிடத்தில் கொடுத்துவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிட்டது அந்த சுட்டி. 

என்ன ஜாதி, என்ன கேட்டகிரி, என்ன மதம் என்று அப்பிளிக்கேஷன் பாரத்தில் நாம் நிரப்பும் வரையும், குழந்தைகளின் திறமை எதில் உள்ளது? அதில் அவனை/ளை முன்னேற்ற என்ன செய்யலாம் என்று பெற்றோர்கள் யோசிக்காத வரையிலும் நாட்டின் முன்னேற்றம் ஏட்டளவில் மட்டுமே இருக்கும்.  

குழந்தைகள் என்னவோ இந்த சமூகத்தின் பிரச்சினைக்கான தீர்வுகளையும், நாட்டின் வளத்தை முன்னேற்றும் திட்டங்களையும் இயற்கையாகவே கொண்டிருக்கிறார்கள். நாம் தான் அவர்களை டாக்டர்களாகவும், இன்ஜினீயர்களாகவும் பணித்து முளையிலேயே கருக்கிவிடுகிறோம்.

என்னங்க சார் உங்க சட்டம்

இந்த ஹோட்டல் புதுசா இருக்கே? சாப்டீங்களா? நல்லாருக்கா? அப்டினு கேட்டா, அந்த நண்பர் சொல்ற பதில் சுவாரஸ்யமா இருக்கும். "அது எப்படி இருக்குன்னே தெரில. அதுல நம்ம போய் முதல்ல சாப்பிடறத விட யாரவது ஒருத்தர் சாப்பிட்டு நல்லாருக்கா நல்லால்லைய்யான்னு சொல்லுவாங்க. அப்ப போய்க்கலாம்" அப்டின்னுவார்.

அது மாதிரி "என்னங்க சார் உங்க சட்டம்?" படத்தோட ட்ரைலர் பாத்தபோது, இந்த படத்த யாராவது பாத்துட்டு நல்லாருக்கா? இல்லையானு சொல்லுவாங்கனு வெயிட் பண்ணி பார்த்தேன். சுக்கிரன் உச்சத்துல இல்ல போல. ட்ரிக் ஒர்க் அவுட் ஆகல. OTT  ல பார்த்தாச்சு.

இவ்ளோ அனல் தெரிக்கிற வசனங்கள் கொண்ட இந்த படத்த தியேட்டர்ல ரிலீஸ் பண்ணிருந்தால் கண்டிப்பாக போராட்டம் வெடித்திருக்கும். OTTயில் வெளியானதால் கவண் ஈர்க்க தவறிவிட்டது. 



ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் படம் எடுத்த விதம் மற்றும் பேசுபொருள் இரண்டுமே அதகளம்.

முதல் பாதியில் ஹீரோவின் கலகலப்பான அலப்பறைகள். ஒவ்வொரு சீனுமே ப்ரெஷ். அதுவும் ரோகிணியின் ஜெனிலியா காமெடி சற்றும் எதிர்பார்க்காத ஆயிரம் வாலா சரவெடி. ஜாலியா ப்ரெஷ்ஷா ஒரு படம் எடுக்கமுடியுமா என்ற சவாலுக்கு பதிலாக முதல் பாதியை இயக்குனர் படைத்திருக்கிறார். இரண்டாவது பாதி முழுவதும் அரசு மற்றும் சமூகத்திற்கான சாட்டையடி. முதல் பாதியில் நடித்த அனைத்து கதாபாத்திரமும் இரண்டாவது பாதியில், ஆனால் முற்றிலும் வேறொரு பரிணாமத்தில், அதுவும் கனகச்சிதமாக. 

ஒரு பக்கம் ஏழை சவுண்டி பிராமணன் சமூகத்தில் எதிர்கொள்ளும் இன்னல்களும் மறுபக்கம் பட்டியல் வகுப்பினர் சமூகத்தில் வதைபடும் காட்சிகள் என கொஞ்சம் சறுக்கினாலும் ஏதாவது ஒரு பக்கம் எல்லை மீறிவிடும் என்பது மாதிரியான cat on the wall திரைக்கதை. ஆனாலும் இரு பக்கமும் perfect balance. "குரல்ல தெய்வீகம் னா" என்றும் "நீ என் பிரென்ட் டா, உனக்குனா செய்றேன் கண்டாவாக்கெல்லாம் செய்ய முடியாது" என்ற இரண்டுமே தரமான கிச்சுகிச்சு சீன்ஸ். நடுவில், "உங்களுக்கும் சேர்த்துதாண்டா அவன் போராடறான்" என்று OBC க்கு ஒரு குட்டு.

ஏழை பிராமணன் என்றால் மற்றவரைக்காட்டிலும் உயிரைக்கொடுத்துதான் படிக்கவேண்டும், நாங்க போடுற காச மட்டும் ஏத்துக்குற கடவுள், நாங்க அர்ச்சனை பண்ணினா ஏத்துக்காதா, கருவறைக்கு உள்ள இருக்குறது மட்டும் தான் சாமி, மத்தவங்கள சாமின்னு கூப்பிட்றத நிறுத்துங்க, சாதிய ஒழிக்க முடியாது, அது சாமியோடு கலந்துடுச்சு போன்ற வசனங்கள் திரைக்கதைக்கு பலம். அதுவும் ரோகிணியின் பேரன் கேட்கும் "ஸ்விம்மிங் கத்துக்கிட்டவங்களாம் கடுப்பாக மாட்டாங்களா?" என்ற அந்த ஒரு கேள்விக்கு அரசாணை இயற்றிய அரசே விழிபிதுங்கும். 

பிரச்சினையை மட்டும் சொல்லாமல் அதற்கான தீர்வையும் இயக்குனர் முன்வைக்கிறார். அதாவது கோட்டா சிஸ்டத்தை பயன்படுத்தி பலனடைந்த பின்பு தங்கள் வாரிசையும் அதே கோட்டா சிஸ்டத்தில் பலனடைய செய்யக்கூடாது. அதே சாதியில் உள்ள மற்றொருவருக்கு அந்த வாய்ப்பைத்தர வேண்டும் என்பதே அது. எப்படி கடவுளுடன் சாதி கலந்துவிட்டதோ, அதுபோலவே ஆட்சியிலும் சாதி வேரூன்றிவிட்டது. சாதிமத வாரியாக கணக்கெடுத்து நடத்தப்படும் இந்த ஓட்டரசியலில் இது இந்தியாவில் எட்டாக்கனி தான். 

ஒரு சில குறைகள் தெரிந்தாலும், முதல் படத்திலேயே சொல்ல நினைத்ததை தைரியமாக சொல்லியதற்கு அதுவும் அரசுக்கு ப(பா)டம் எடுத்ததற்கு, புதுமுக இயக்குனர் பிரபு ஜெயராமனுக்கு  சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கலாம்.  

EWS மட்டுமே கோட்டா சிஸ்டமாக இருக்க வேண்டும் என்பதே இயக்குனர் மற்றும் நம்முடைய அவா.