வியாழன், செப்டம்பர் 12, 2013

மேக் மை ட்ரிப்.காம்

‘மரணப்படுக்கையிலும் மறவாது கண்மணியே’ என்பது போன்ற ஒரு பயணம் சமீபத்தில் வாய்த்தது. ரம்ஜானை ஒட்டிய விடுமுறையின் போது, ஊருக்கு செல்வதற்காக டிக்கட் புக் செய்ய ரயில்வேயின் தட்கல் சேவாவை நம்பி கொண்டிருந்தேன். காலை ஒன்பது மணியிலிருந்தே மூன்று நான்...கு பேஜ்களில் லாகின் செய்து கிளிக்கி கொண்டிருந்தேன். பத்து பத்துக்கு வெயிட்டிங் லிஸ்ட் விழுந்தது. வேறு வழியில்லாது ரெட் பஸ்ஸில் தஞ்சமடைந்தால் எல்லா டிக்கட்டும் காலி. டிக்கட் கூஸ் அதிலும் ஸ்வாஹா. கூகலிட்டு ஒருவழியாக மேக் மை ட்ரிப்.காம் பஸ் சர்வீஸ்ஸில் ஒரு சீட் கிடைத்தது. ‘ஸ்ரீ கிருஷ்ணா டிராவேல்ஸ்’. பேரை கேள்விபட்டதே இல்லை. அப்போவே யோசிச்சிருக்கணும். சரி கிடைத்ததை ஏன் விடுவானேனென்று அதை புக் செய்தேன். வண்டி CMBT யிலிருந்து கிளம்புகிறது. அங்கு செல்ல நேரமில்லாத காரணத்தினால் Guindy ஆசர் கானாவில் போர்டிங். அடுத்த நாள் சரியாக டிக்கட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது போல ஆறு முப்பதிற்கு ஆசர் கானா சென்றடைதேன். ஒரு முறை உறுதிபடுத்திக்கொள்ள அந்த ஸ்ரீ கிருஷ்ணா டிராவேல்ஸ் நம்பருக்கு கால் செய்தேன். 

 


‘வண்டி அஞ்சு நிமிஷத்துல கிளம்பிடும் சார்.’

‘சீட் நம்பர் ஒண்ணு என்னோடது. நான் கிண்டில போர்டிங் சார்’

‘என்ன நம்பர் சொன்னீங்க?’

‘ஒண்ணு. சீட் நம்பர் ஒண்ணு.’

‘சீட் நம்பர் ஒண்ணு ரெண்டுல கவிதா, ரமணினு ரெண்டு பேரு இருக்காங்க’

இன்னும் கொஞ்ச நேரம் கிளறியதில் கிருஷ்ணா டிராவேல்ஸ், ரெட் பஸ்ஸில் மட்டுமே புக் செய்யமுடியும் என்றும், மேக் மை டிரிப்பில் டீலிங் கிடையாது என்றும் விளக்கம் வந்தது. ஒரு அரை மணி நேர வாக்குவாதத்திற்கு பிறகு அவர்கள் விடாப்பிடியாக நிற்க

‘சார் நீங்க ஸ்ரீ கிருஷ்ணா டிராவேல்ஸ் பேர மாத்திடுங்க’

என்னணு’?

‘சுந்தர டிராவேல்ஸ்னு’ என்று சொல்லிவிட்டு போனை கட் செய்தேன்.

நானாவது தனியாக நின்றிருந்தேன். எனக்கருகில் இன்னொரு ஃபேமிலி கைக்குழந்தையோடு(பைய்யன் ங்கா ங்கா என்று கத்தி கொண்டிருந்தான்) இரண்டு முதியவர்களுடன் நின்றுகொண்டிருந்தனர். மேக் மை டிரிப்பில் இரண்டாயிரத்தி ஐநூறு ரூபாய்க்கு புக் பண்ணினோம் சார். பாவமாக இருந்தது. அங்கு ஏதும் வண்டி நிற்காததால் தாம்பரம் சென்றேன். அங்கு பத்து பதினொரு மணிக்கு மேல் தான் வண்டி வரும் என்பதால் ஒரு ஓபன் டிக்கட் எடுத்து ஒன்பது ஐம்பதுக்கு வந்த பாண்டியன் எக்ஸ்ப்ரஸ்ஸில் தொற்றிக்கொள்ளலாம் என்று நினைத்தது பெரும் தவறு என்று அப்போது விளங்கவில்லை. அன்ரிசர்வ்ட் முழுவதும் கூட்டம் அம்மிக்கொண்டிருந்தது. படியில் அரிசி போடக்கூட இடமில்லை.

அதன் அருகிலிருந்த S12 பெட்டியில் ஏறினேன். என்னோடு ஒரு பத்து பேர் வேறு ஏறிக்கொண்டனர். எதிர்பார்த்தது போல் டி‌டி‌ஆர் வந்து கத்த ஆரம்பித்தார். கெஞ்சி கூத்தாடி ஒவ்வொரு பெட்டியாக மாறவும், ‘விடாது கருப்பு’ போல் துரத்திக்கொண்டே இருந்தார். ஒரு நூறு ரூபாய் தாளை நீட்டினே...... என்னாது என்று முறைக்கவும், சார் பைன் கட்டிடுறேன். இப்படி ஓரமா நின்னுட்டே வந்துட்றேன்’ என்று எவ்ளோ சொல்லியும் கேளாது கழுத்து பிடித்து தள்ளாத குறையாக விழுப்புரத்தில் எல்லோரையும் இறக்கி விட்டார்.

அன்ரிசர்வ்ட் படியில் ஏறுவதற்கு மட்டும் இடமிருந்தது. படியில் இருந்து சௌச்சால்யா வரை மட்டுமே ஒரு முப்பது பேர் நின்று கொண்டிருந்தனர். டாய்லெட்டில் எட்டி பார்த்தால் அதற்குள் ஒரு ஐந்து பேர் உட்கார்ந்து கொண்டிருந்தனர். தமிழகம் மெதுவாக பீஹார் ஆகி கொண்டிருக்கிறது. போதாக்குறைக்கு பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஒருவன் இடுப்பில் இருந்து ஒரு பன்னீர் பாட்டீல் போன்ற வஸ்துவை கைய்யில் எடுத்தான். தலையில் தட்டி பிளாஸ்டிக் டம்ப்ளரில் ஊற்றினான். பன்னீர் இல்லை. தண்ணீர் பாக்கெட். சட்டை பைய்யில் மாங்காய் ஊறுகாய். ஐந்தே நிமிடத்தில் நிற்கக்கூட இடமில்லாத இடத்தில் காலுக்கடியில் படுத்துக்கொண்டான். இடையில் வேறு ஒரு பத்து பெண்கள் வரிசையாக ‘எப்பா எந்த்ரிப்பா பாத்ரூம் போனும்’ என்று உள்ளிருந்தவர்களை காலி செய்து, சென்று வந்து கொண்டிருந்தனர். எல்லாம் முடிந்து மீண்டும் அதே ஐந்து பேர் உள்ளே உட்கார்ந்துகொண்டு பயணம். மாலை ஆறு மணியிலிருந்து இரவு இரண்டு மணி தாண்டியும் நின்று கொண்டே இருந்ததால் காலில் வெரிகோஸ் வெயின்ஸ் வந்தது போல் ஒரே வலி. கால் மாற்றி மாற்றி அபிநயம் பிடித்தாலும் வலி குறைந்தபாடில்லை. அரியலூர் தாண்டியபோது அதே காரிடாரில் குத்த வைக்க இடம் கிடைக்கவும், அந்த சௌச்சால்யா அருகில் மூக்கை பிடித்துக்கொண்டு உட்கார்ந்த போது ஒரு SMS மேக் மை டிரிப்பிலிருந்து.

‘Dear Sir, We would like to hear from you? How was the travel? என்று.

மரணப்படுக்கையிலும் மறவாது என் கண்மணியே என்று ரிப்ளை அனுப்பினேன். .

புதன், செப்டம்பர் 04, 2013

ஆந்த்ரா மெஸ்

சம்பவம் நடந்த இடம் – சுப்ரியா ஆந்த்ரா மெஸ், TCS எதிரில், வேளச்சேரி.

சம்பவம் நடந்த நேரம் – 2008 இல் வெயில் கொளுத்தும் ஒரு ஞாயிற்றுக்கிழமை, நண்பகல் ஒன்று முப்பது.
 


நான், பாண்டி மற்றும் ஒரு நண்பன்(இப்போதைக்கு ஒரு பேச்சுக்கு சிங்கம் என்று பேர்... வைத்துக்கொள்ளலாம்) தே.மு.தி.க. கட்சி பிரமுகர் ஒருவர் நடத்தும் M.S.மேன்ஷனில் ஒரே ரூமில் அடைக்கலாமாயிருந்தோம். சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்த்தவரை சனி ஞாயிறு என்று இரண்டு நாள் விடுமுறை கிடைத்தது ஒரு வகையில் மட்டற்ற மகிழ்ச்சி என்றாலும் அந்த இரண்டு நாட்களும் மதிய வேலை உணவுக்காக அல்லோலப்படும் சிரமம் ஒரு தனிக்கிளைக்கதை. காலை மற்றும் இரவு பக்கத்தில் இருக்கும் முருகலெக்ஷ்மி அல்லது சக்தி மெஸ் அபயமளித்தது. ‘பரோட்டா சூடா இருக்கா?’ என்ற முருகலெக்ஷ்மி மெஸ்ஸில் கேட்ட கேள்வியை பாண்டி மறந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இந்த மதியவேளை புல் மீல்ஸ் சாப்பிடுவதுதான் ஒரு பெரிய அறப்போராட்டம்(!!!). நாங்கள் தங்கியிருந்த தரமணியில் (சரியாக சொல்லவேண்டும் என்றால் கானகம்) நின்றுகொண்டோ உட்கார்ந்துகொண்டோ ஒரு 360 டிகிரி என்று எந்த பக்கம் திரும்பிபார்த்தாலும் பேருந்து நிலையத்திற்கோ இந்திரா நகர் MRTS ஸ்டேஷன் போவதற்கோ குறைந்தது இரண்டு கிலோமீட்டர் நடந்தே ஆகவேண்டும். வண்டி கிடையாது. அதுவும் சாயங்கால வேலையென்றால் பராக்கு பார்த்துக்கொண்டே வேர்க்கடலை சாப்பிட்டுவிட்டு ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் நடக்கும் ஷூட்டிங்கை பார்த்துக்கொண்டே நடந்து விடலாம். எனினும் சுட்டெரிக்கும் மதிய வேளையில் சற்றே சிரமம் தான். இந்திரா நகர் MRTS ஸ்டேஷனுக்கான ஓவர் பிரிட்ஜில் ஒரு முறை ‘MGR இல்லைங்க நம்பியாரு இல்லைங்க நாங்களெல்லாம் நடுவில’ என்று ஒரு பாடலை ஜீவா மற்றும் குழுவினர் கம்பியை பிடித்துக்கொண்டு ஆடிக்கொண்டிருந்தனர். ‘யுத்தம் செய்’ படத்தில் சேரன் ஒரு பேனாக்கத்தியை வைத்துக்கொண்டு செய்யும் வரலாற்று சிறப்புமிக்க சண்டைக்காட்சி எடுக்கப்பட்டதும் இதே பிரிட்ஜ் தான் என்பது இதன் தனிச்சிறப்பு. நிற்க!!!

40 டிகிரி வெயிலில் குடைபிடித்து நடந்து ஸ்டேஷன் வந்து டிக்கெட் எடுத்து (கவனிக்க) பின்பு பெருங்குடி ஸ்டேஷனில் இறங்கி மீண்டும் ஒரு கிலோமீட்டர் நடந்து வெளேச்சரி மெயின் ரோட்டை கிராஸ் செய்தால் நான் முன்பு அடிகோடிட்ட சுப்ரியா மெஸ். ஒரு சாப்பாட்டிற்கு இத்தனை அக்கப்போரா என்றால் உரக்க சொல்வேன். ஆமாம்.

பலதரப்பட்ட ஆந்திரா மெஸ்ஸில் கபளீகரம் செய்திருந்தாலும் சுப்ரியா மெஸ்ஸின் டேஸ்ட் அலாதி. தலை வாழை இலையும், பூப்போன்ற சாதமும், பப்பு பொடியுடன் ஆயில் அப்பளம், வெஜிடபிள் ஃப்ரை (மை பேவரைட்), பருப்பு, அவியல், ஏதேனும் காய் போட்ட சுவையான சாம்பார், ரசம், மஜ்ஜுக புளுசு என்று அழைக்கப்படும் மோர்க்குழம்பு, கட்டியான தயிர், ஆவக்காய் அல்லது வடுமாங்காய் ஊறுகாய். இதனுடன் இடையிடையே கோங்குரா சட்னி, புலி துவையல் என்று ஆந்திரா ஸ்டைலில் செய்து ஒரு கிண்ணத்தில் டேபிளில் வைத்திருப்பார்கள். அதுவும் இறுதியாக அந்த கட்டித்தயிரில் சாப்பிட்டபின் வருவது தூக்கமே அல்ல, ஒரு மயக்கம். இதற்காகவே ஏழுகடல் ஏழுமலை ஜம்பலாம்..
சம்பவத்திற்கு வருகிறேன். அன்று மதியம் நாங்கள் மூவரும் ஒரு டேபிளை பார்த்து அமர்ந்துவிட்டோம். கொலைப்பசி. பொறுமையில்லை.

அப்போதுதான் டேபிளில் இருந்த அந்த கிண்ணம் எங்கள் பார்வையில் பட்டது. பருப்பு பொடி, புளிக்காய்ச்சல், கோங்குரா இதை தவிர்த்து நாலாவதாக ஒன்று. ஆனால் என்னவென்று தெரியவில்லை.

சிங்கமும் இதை கவனித்தது.

இலை போடப்பட்டது. தண்ணீர் தெளித்து சாதம் வைக்கப்பட்டு,
என்னடா இது புதுசா இருக்கு என்று பாண்டி கொளுத்திபோபோட ஆமால்ல என்று நான் அதில் எண்ணையை ஊற்றினேன்.

ஒருவேளை சிக்கன் குழம்பு மாதிரி வைச்சு எல்லா டேபிள்ளையும் ப்ரீயா சாப்பிடுங்கன்னு வச்சிட்டாங்ளோ? சிங்கம் அதன் சிறு மூளையை கசக்கி பிழிந்து யோசித்து பார்த்து சீரியசாக சொன்னது

ஆமா அப்படித்தான் இருக்கும் போல என்று நாங்களும் தலையை ஆட்டினோம். சரி சும்மா சாப்பிட்டு டேஸ்ட் பாரேன் என்றோம்.

சிங்கம் ஒரு ஸ்பூனை எடுத்து அந்த கிண்ணத்தில் போட்டு நக்கி பார்த்தது. ம்ம்ம். டேஸ்ட் சூப்பரா இருக்குடா. புது ஐட்டம் போல. ஐ. நான் இதையே போட்டு சாப்பிடப்போறேன் என்று சாதத்தில் போட்டு பிசைய ஆரம்பித்து சாப்பிட ஆரம்பித்தது.

எனக்கும் பாண்டிக்கு சந்தேகம் வர, சர்வரை கூப்பிட்டோம்.

‘இது என்னதுங்க. புதுசா இருக்கு?’

‘ஓ. சாரி சார். உங்களுக்கு முன்னாடி உக்காந்து சாப்பிட்டு போனவங்க வச்சிட்டு போன சிக்கன் கறி சார். எச்சி கப்பு.(!?!?) எடுக்க மறந்துட்டேன். இப்போ எடுத்துடுறேன் சார்’ என்றான்

சிங்கத்தை பார்த்தால், அதன் முகத்தில் ஈயாடவில்லை. ‘ஏண்டா கொஞ்ச நேரம் முன்னாடியே இத கேட்டிருக்கலாமே?’ என்று முழி பிதுங்கி விழித்தது.

முன்னாடியே கேட்ருந்தா நீ சாப்ட்ருக்க மாட்டியே என்று சொல்லிவிட்டு பப்புபோடி பிசைய ஆரம்பித்தோம்.

அந்த சிங்கக்குட்டி வேறு யாருமில்லை, இந்தியாவின் திமிங்கலம், கோபியர்களின் கண்ணன், மிஸ்டர்.ரோமியோ தமிழகத்து பெண்களின் தூக்கத்தை கெடுப்பவன், அமெரிக்க ஆணழகன், GCE இன் கலாபக்காதலன் என்று பலதரப்பட்ட பாத்திரங்களை அனாயாசமாக சுமக்கும் நண்பன் Ramesh Kumar Balasubramanian

திங்கள், செப்டம்பர் 02, 2013

The Intouchables


‘The Intouchables’ எனும் ஒரு ஃபிரெஞ்சு மொழி படம் காண வாய்ப்பு அமைந்தது. படத்தை பற்றிய ரிஷி மூலம் ஆராய்ந்ததில் உலக சினிமாவை விரல் நுனியில் வைத்திருக்கும் IMDB அதனை சிறந்த 250 படங்களும் 61 ஆவது படமாக தெரிவு செய்து அடையாளப்படுத்தியது. படத்தின் முதல் பதினைந்து நிமிடம் அதிகளவில் ஈர்க்கவில்லையென்றாலும் ஒமர் எனும் கறுப்பின நடிகரின் அலட்டிலில்லாத அசாத்திய நடிப்பு நம்மை சிறுக சிறுக படத்தினுள் இழுத்து கட்டிப்போடுகிறது.
 
கதை மிகவும் எளிமையானது. மிகப்பெரிய ஒரு செல்வந்தரின் கேர் டேக்காரக வேலைபார்க்கும் ஒமருக்கும் அந்த கனவானுக்கும் ஏற்படும் நட்பே படத்தின் பிரதானம். பாரா கிளைடிங்க் பயிற்சியின் போது ஏற்படும் விபத்தில் கழுத்து முதல் பாதம் வரை செயலிழந்து Tetraplegica ஆக முடங்கிப்போகிறார் செல்வந்தர் பிராங்க் க்லுசே. கேர் டேக்காருக்கான நேர்காணலின் போதே குறும்பு செய்யும் ஒமரின் கேரக்டர் அவருக்கு பிடித்துபோய் விடுகிறது. Selected. வேலையில் சேரும் ஒமர் தன்னை ஒரு வேலையாளாக பாவிக்காமல் பிராங்கின் நண்பராக அவரை ஆளுமைபடுத்துகிறார். மனைவியை இழந்து தவிக்கும் பிராங்கிற்கு அந்த உறவு ஒரு வடிகாலாக தோன்றுகிறது. செல்வந்தரின் செக்ரெட்டரியை கரெக்ட் செய்யத்துடிக்கும் ஒமரின் நடிப்பு Subtle Comedy.  நூற்றிபதினைந்தாவது நிமிடத்தில் பிராங்கின் காதலியையும் தேடிப்பிடித்து அவர் கைய்யில் ஒப்படைத்து பிரிந்து போகிறார். Blue Streak இன் Martin Lawrence மற்றும் Senseless இன் Marlon Wayons ஐ மிஞ்சும் ஒரு அசாதாரண நடிப்பை போகிற போக்கில் உதிர்த்து செல்கிறார் Omar Sy. பிராங்க் க்லூசோவை எங்கோ பார்த்தது போல் இருக்கவே கூகுளிட்டதில் ‘Dustin Hoffman’ என்ற விடை கிடைத்தது. படம் ஒரு ஆஸ்காருக்கு கூட பரிந்துரைக்கப்படவில்லையென்றாலும் ஒரு ‘Feel Good Movie’ யை பார்த்த திருப்தி உறுதி.

ஞாயிறு, செப்டம்பர் 01, 2013

முகநூல் பதிவுகள்-5

கடந்த வாரத்தின் ஒரு நிகழ்வு. அது பீச் முதல் தாம்பரம் செல்லும் மின்தொடர் வண்டி. நுங்கம்பாக்கம் ஸ்டேஷன் வரவும் ஒரு ஐம்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒருவர் ஏறிக்கொண்டார். ஏறிய வேகத்தில் கீழ் காணுபவற்றை சத்தமாக சொல்ல ஆரம்பித்திருந்தார்.

 ‘சார் இத...ு பர்ஸ்ட் கிளாஸ். முதல் வகுப்பு பெட்டி. தயவு செஞ்சு மஞ்சள் டிக்கட் வச்சிருக்கவங்க கீழ இறங்கிடுங்க. பிடிச்சா 500 ரூபா அபராதம். யாரும் கோவப்படாதீங்க. தவறா எடுத்துக்க வேண்டாம். உங்க நல்லதுக்குதான் சொல்றேன்.

கூட்டம் முழுதும் அவரை திரும்பி பார்த்தது. அவர் தொடர்ந்தார்.

அய்யா படியில நிக்காதீங்க. உங்களுக்கும் நல்லதில்ல உங்களுக்காக வீட்டில காத்திட்ருக்கிற மனைவி, அம்மா, அப்பா, மகன், மகள், நண்பர்கள் என யாருக்கும் நல்லதில்ல. தயவு செஞ்சு உள்ளவந்துடுங்க. இங்க நிறைய இடம் இருக்கு.

படியில் நின்றுகொண்டு ஆம்ஸ் காட்டிய சிங்கங்கள் பார்த்தன. சில முறைத்தன. ஒன்றாவது நகரவில்லை. கிறுக்கன் என்ற வசவு கூட கேட்டது. வண்டி கிளம்பிய சில நொடிகளில்,

அய்யா எல்லாரும் ஒரு அரை அடி நகந்துக்குங்க. படியில் நம்ம நண்பர்கள் தொங்கிட்டுவராங்க. அவங்க வீட்ல அவங்கள எல்லாரும் எதிர்பார்பாங்க. சிரமம் பாக்காம ஒரு அரை அடி நகந்து வாங்க. ப்ளீஸ் ப்ளீஸ் என்று ஒவ்வொருத்தராய் கேட்டு கொண்டிருந்தார்.

கூட்டம் நகரவே மனசில்லாமல் அவரது வெங்கலக்குரலுக்கு செவி சாய்க்காமல் இருக்கமுடியாமலும் முனகி கொண்டே நகர்ந்தது. அவர் தொடர்ந்தார். எவனோ மெண்டலா இருப்பான் போல என்று கமெண்ட் அடித்தனர், சத்தமில்லாமல்.

காதுல ஹெட்போன் மாட்டிருக்கவங்க தயவு செஞ்சு அத களட்டிடுங்க. வீட்டுல போயி போட்டு கேளுங்க. உங்க கவனம் மின்தொடர் வண்டி மேல இருக்காது. கோவிக்கக்கூடாது. ஒரு நாளைக்கு சென்னைல மட்டும் நாலு பேரு போன் பேசிட்டே தண்டவாளத்த கடக்கிறதுனால இறக்குறாங்க. கவனம் தேவை. ப்ளீஸ்

ஹெட்போன் மாட்டியது எதுவும் திரும்பக்கூட இல்லை. அடுத்ததாக பக்கத்து சீட்டை எட்டிபார்த்தவர்

சார் ப்ளீஸ் எதிர் சீட்ல கால வைக்காதீங்க. அடுத்தவங்க உக்காரனும். கொஞ்சம் மதிப்பு கொடுங்க என்றார்.

இதற்கு முன் ஒரு முறை அவரை பார்த்திருக்கிறேன். அவரின் கணீரென்ற குரலும் படபடப்பான பேச்சும் சிறிது எரிச்சலை கொடுத்தால் கூட அவர் சொல்லிய ஒவ்வொன்றும் தனிமனித ஒழுக்கங்கள். பல் தேய்த்தபின் வாய்கொப்பளிக்க வேண்டும் என்று பிறர் சொல்லித்தான் செய்யவேண்டும் என்பதில்லை அது போலவே இதுவும் படுகின்றது. ஏதேனும் விபத்தில் தன் சொந்தங்களை பரி கொடுத்துவிட்டு அந்த வலியை பிறர் உணரக்கூடாது என்ற அக்கறையில் அவர் பேசியதாகத்தான் எனக்கு தோன்றியது. அடுத்தவரின் மீது அக்கறை எடுத்து கொள்பவர்கள் தானே இப்பொழுதெல்லாம் பைத்தியமாகத்தெரிகின்றனர். மாம்பலத்தில் அவர் இறங்கும் நேரத்தில், அவருக்கு கை கொடுக்கலாம் என்று தோன்றியது. கையை நீட்டினேன். அழுத்தமாக குலுக்கிவிட்டு அடுத்த பெட்டியில் ஏறினார். ‘அய்யா படியில நிக்காதீங்க.’ என்ற சத்தம் வண்டி கிளம்புமுன் கேட்டது.
See More

செவ்வாய், ஆகஸ்ட் 20, 2013

எஸ்.ராமகிருஷ்ணன்


சுஜாதாவை வாசிக்க ஆரம்பித்து குறைந்தது பத்து வருடங்களாவது கடந்திருக்கும். அநேகமாக அவர் எழுதி புத்தகமாக வெளிவந்ததில் தொண்ணூறு சதவீதம் கடந்தாகிவிட்டது.. கல்லூரியின் எந்த ஒரு பருவ தேர்வின்போதும், வாத்தியார் புத்தகம் அருகில் இல்லாமல் படித்தது இல்லை. அதற்கென்றே சில புத்தகங்களை ஒதுக்கி வைத்துவிடுவேன். விஞ்ஞானச்சிறுகதைகள், கணேஷ் வசந்த் சிறுகதைகள் போன்ற தொகுப்புகள் ஏதோ ஒரு உற்ற நண்பன் அருகில் இருந்துகொண்டு சொலவாடுவதை போன்ற ஒரு மயக்கநிலையை தரும் உணர்வைக்கொடுக்க வல்லது. அவரின் மொழி நடை, எழுத்து வசியம், கடினமான் அறிவியல் வார்த்கைகளைக்கூட அநாயசமாக உபயோகப்படுத்தும் பாங்கு, என்று பல காரணங்களை அடுக்கிக்கொண்டே போனாலும், இங்கு சொல்ல வந்தது வேறு.  அவரின் எழுத்துக்களைத்தவிர்த்து  அவ்வப்போது ராஜேஷ்குமார், சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர், பாலகுமாரன், கல்கி, ரங்கராஜன், வேணுகோபாலன், எம்.ஜி.சுரேஷ், அசோகமித்திரன், இந்திரா சௌந்தராஜன், கி.ரா, வண்ணதாசன், சு.ரா, ஜெயகாந்தன், எஸ்.ரா என்று சமகாலத்தைய எழுத்தாளர்கள் சிலரின் புத்தகங்களை படித்திருந்தாலும், வாத்தியாரின் எழுத்துக்களை தொடர்ந்து அதிகம் பாதித்தது எஸ்.ராமகிருஷ்ணன் மட்டுமே.
 

பொதுவாக நாமே தேடி எடுத்ததை விட இதை படித்து பாருங்களேன் என்று பரிந்துரைக்கபட்ட புத்தகங்கள் பலவும் ஆதியோடு அந்தமாக வாசிக்கபட்டும் ரசனைக்கு ஒருவாறு தீனி போடுவதை போலவும் அமைந்திருக்கும் என்பது எனது தனிப்பட்ட கருத்து. அவ்வாறில்லாமல் நானே தேடி எடுத்ததில் முத்தாக அமைந்த ஒரு சில புத்தகத்தில் முக்கியமானது  தேசாந்த்ரி. ஏனெனில் அதுவே எனக்கு எஸ்.ராவை அடையாளம் காட்டியது. தலைப்பிற்கேற்றார் போல் தான்தோன்றியாக தான் மேற்கொண்ட பயணங்களை பற்றியான கட்டுரையே தேசாந்த்ரி. இதை வாசித்துக்கொண்டிருக்கும்போதே அப்படிக்கப்படியே மௌசையும் லேப்டாப்பையும் அதே இடத்தில் வைத்துவிட்டு, கையில் எவ்வளவு காசிருக்கிறது என்றோ, சாப்பாட்டுக்கு நேரமாகிவிட்டதா என்றோ, எங்கே செல்கிறோம் என்ற இலக்கில்லாமல் ஒரு பயணத்தை உங்களால் தொடங்க முடியுமா? ஆனால எஸ்.ரா. இதேபோன்று தொடங்கிய பல பயணங்கள், காடு, மலை, நெடுஞ்சாலை என்று சுற்றித்திரிந்த அனுபவங்களை இங்கே பகிர்ந்திருக்கிறார். சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் ஒரு மலை வாழ் மக்களின் வீட்டில் எதிர்பாரா உறவினராக ஓர் அன்னியனாக நுழைந்து இரவு உணவருந்தி பின் அதே இரவில்  அவர்களிடம் ஒரு நண்பனாக அளவளாவி என திகைக்கவைக்கிறார்.  
 
இந்த போக்கே முதலில் ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையயும் அதன் பின் அவரின் பாலுள்ள மதிப்பையும் கூட்டுகிறது, ஒவ்வொரு வார்த்தையும் அவரது மனதின் அடியாழத்திலிருந்து துளிர்த்து எழுந்தவை என்பதை அறுதியிட்டு கூறமுடியும். அவரின் சொல்லாடல், அழுத்தமான வார்த்தைப்ப்ரயோகம், அடர்த்தியான அர்த்தம் கொண்ட கருத்துக்கள் எனப்பல அவரின் தனித்தன்மையை எடுத்துக்காட்டும் அடையாளங்கள்.

அவருடைய மற்றைய தொகுப்புகளான சிறிது வெளிச்சம்’, மலைகள் சப்தமிடுவதில்லை’, அதே இரவு அதே வரிகள்’, விழித்திருப்பவனின் பகல்’, துணையெழுத்து என ஒவ்வொன்றும் ரத்தினங்கள். ஒவ்வொரு கட்டுரையும் தேர்ந்தெடுத்த சிப்பிக்குள்ளிருக்கும் முத்துக்கள். சில சந்தோஷத்தின் வெளிப்பாடாகவும், சில வலிகளோடு போராடுவனவாகவும், சில துக்கத்தின் பாடலாகவும் சில உள்ளத்தில் தேக்கி வைத்திருக்கும் ஆதார உணர்ச்சிகளை வெளிக்கொணருபவையாகவும் நம்முள் அழுத்தமாக உட்கார்ந்துகொண்டும் முகத்தில் உறைந்தும் விடுகின்றன. ஒவ்வொரு வார்த்தைகளையும் கண்கள் அள்ளி அள்ளி விழுங்கிவிடுகின்றன. வாழ்க்கையின் உன்னதங்களை பட்டியிலுடுகின்றன. ஆறாத ரணத்தையும் ஆற்றுபடுத்துகின்றன. உணர்வுகள் ஊற்று போல் பீறிடுகின்றன.

சுஜாதாவிற்கு அடுத்து இப்பொழுது எஸ்.ரா என்ற பெயர் கொண்ட புத்தகங்களை எங்கு பார்த்தாலும்  வாங்கிவிட வேண்டும் என்று ஆவல் முற்படுவதை தவிர்க்கமுடிவைல்லை.

வெள்ளி, ஆகஸ்ட் 16, 2013

த்ரில்லர்


ஆதிகாலம் முதலாய் மனிதனை பயம் கொள்ளச்செய்ய பல்வேறு சாத்தியக்கூறுகள் புற உலகில் விரவி கிடந்தாலும் த்ரில்லர் வகை படங்களை இயக்கும் ஜாம்பவான்கள் நம்புவது ஒரே கோட்பாட்டைத்தான். அது, உங்களுள் இருக்கும் பயத்தை வெளிக்கொணரச்செய்வது மட்டுமே. இதுநாள் வரை மனிதன் தீய சக்திகளை புறவெளியில் கண்டு பயந்ததை விட, தன் மனத்தினுள் அதெற்கென தான் கொடுத்து வைத்த பிம்பத்தை கண்டு பயந்ததே நிஜம். அதுவே நிதர்சனமும் கூட. சற்று நிதானமாக யோசித்து பார்க்கையில், பேய் பிசாசு, கொலைகாரன், சைக்கோ, திருடன், கற்பழிப்பவன், என்று பலரது பிம்பங்கள் திடமானதொரு உருவம் கொடுத்து நம் மனதினுள் ஆழ பதித்துள்ளோம். குளத்தில் கல்லெறியும்பொழுது மேலெழும்பி வரும் கலங்களை போல, நம் மனதினுள் இருக்கும் இப்பிம்பங்களை எழுப்பும் ஏதேனும் ஒரு திகில் காட்சியில் அடங்கியிருக்கிறது இயக்குனரின் அப்படத்திற்கான வெற்றி.
 

 ‘The Descent’, ‘Identity’, ‘Vacancy’, ‘Wrong Turn’ போன்ற த்ரில்லர் படங்களை பார்த்திருந்தாலும் அதிக பாதிப்பு ஏற்பட்டது இல்லை. ஆனால் சமீபத்தில் பார்த்த ‘Rec’, ‘Rec 2’, ‘Ils’, ‘Session 9’ ஆகிய நான்கு படங்களும் த்ரில்லர் பிரியர்களுக்கு ஒரு புல் மீல்ஸ் சாப்பிட்ட திருப்தியை தரும் என்று சந்தேகத்திற்கு இடமின்றி நம்புகிறேன். ‘Rec மற்றும் Rec 2 ஸ்பானிய மொழி பேசும் படம். ஒரு பெண் ரிபோர்டர் அந்த வார கவரேஜுக்காக தீயணைப்பு படை வீரர்களை பேட்டி காணச்செல்கிறாள். அந்த நேரத்தில் அவர்களுக்கு ஒரு வீட்டிலிருந்து உதவி கேட்டு தொலைபேசி அழைப்பு வருகிறது. அதற்கு பின் வரும் பல காட்சிகள் மயிர்க்கூச்செறியும் விதத்தில் படமாக்கபட்டிருப்பதை ஒரு ISD போட்டாவது பாராட்டியே ஆக வேண்டும். படமாக்க உதவியிருக்கும் ஹேன்ட் ஹெல்ட் கேமராவின் பங்கு அளப்பரியது. ‘ILS’ ஒரு ஃபிரெஞ்சு மொழிப்படம். தனியாக வீட்டில் இருக்கும் ஒரு தம்பதியினர் சில நேரம் கழித்து தாம் தனியாக இல்லை என்று உணர்வதிலிருந்து வேடிக்கை ஆரம்பிக்கிறது. இவையெல்லாவற்றையும் விட அதிகம் ரசித்தது ‘Session 9’ சுத்தமான அக்மார்க் சைக்கலாஜிக்கல் த்ரில்லர். ஒரு பாழடைந்த மனநல மருத்துவமனையை செப்பனீடு செய்வதற்காக நான்கு பேர் கொண்ட குழு வருகிறது. மருத்துவமனையின் பல இடங்களை நுட்பமாக காட்சியமைத்தும் அதன் பழைய கோரமான வரலாற்றை கதாபாத்திரத்தின் வழியாக மிக மெதுவாக மற்றும் அழுத்தமாக நம்மீது திணிக்கிறார் இயக்குனர். படத்தின் பின் பாதி நம்முடைய பல்ஸை எகிற வைக்கிறது. சமீபத்தில் பார்த்த ஆக சிறந்த த்ரில்லர்.
இவை அனைத்து படங்களையும் இரவில் தனியாக ஹெட்செட் மாட்டிக்கொண்டு முதுகெலும்பில் ஏற்படும் ஒரு ஜில்லிப்பு உணர்வுடன் பார்த்து பயந்த அனுபவம் உண்டு.

சமீபத்தில் வெளிவந்திருக்கும் ‘The Conjuring’ பலத்த வரவேற்பையும் ரேட்டிங்கையும் பெற்றிருப்பதை கண்டு, அதை ஒரு மல்டிப்ளெக்ஸ் திரையரங்கத்தில் சரவுண்ட் சவுண்ட் சிஸ்டத்தில் காணலாம் என்று முடிவெடுத்தது பெரும் தவறு என்பதை பின்னர் தெரிந்து கொண்டேன். திகில் நிறைந்த காட்சிகள் வருகிற ஒரு இடத்தில், ‘வாங்கன்னா வணக்கங்கன்னா’ என்ற அருகிலிருந்தவரின் ரிங்டோன் மூடை சரியாக சொல்லிவைத்தார் போல் கெடுத்து வைத்தது. போதாக்குறைக்கு லேஸ் பாக்கெட்டின் சலசலப்பு, குழந்தையின் அழுகை, முந்தின ரோ கப்புள் சீட்டில் உட்கார்ந்திருந்த ஜோடியின் சில்மிஷம் என்று, அதுவும் இருட்டாக காட்சி வரும்போதெல்லாம் அவன் அவளை முத்தமிட முயல ‘டேய் என்னடா பண்ற’ என்று சில இடங்களிலும்,’ எந்த படத்தை பார்ப்பது என்று சில இடங்களிலும் குழப்பத்தையே ஏற்படுத்தியது. ஒரு முறை பார்த்த த்ரில்லர் படத்தை மறுமுறை பார்ப்பது திரில்லருக்கு செய்யும் துரோகம் என்பதலால், தியேட்டரில் இதன் பிறகு த்ரில்லர் படங்களை பார்க்கக்கூடாது என்று முடிவெடுத்திருக்கிறேன்.
See More

சனி, ஜூலை 20, 2013

குறுங்கதை – அன்றே கொல்லும்


நேர்மையின் சிகரமாய் கடந்த ஐந்து வருடங்கள் தொழிலாளர் நலனுக்காக பணியாற்றி தேர்தலிலும் தொழில் சங்கத்தலைவராக வெற்றி பெற்ற நல்லசிவத்தை தீர்த்து கட்ட முடிவெடுத்திருந்தான் சண்முகம்.

காலை எழுந்ததும் கோடை விடுமுறைப்பயணமாக மலைவாசஸ்தலம் போகின்றோம் என்ற நினைப்பே, பத்தாம் வகுப்பு படிக்கும் நகுலனுக்கு பெரும் உவகையாக இருந்தது. மரத்தின் மேல் அமைக்கபெற்றிருந்த ‘Tree Hut’ டில் ஏணியில் மூச்சு வாங்க ஏறுவதாக கனவு கண்டு கொண்டே வாயில் கோழை வடிய தூங்கிப்போனான்.

பிசாசு கூட உறங்கிருக்கும் நேரமான அதிகாலை மூன்று மணியை சண்முகம் தேர்தெடுத்திருந்தான். எட்டு பரோட்டாக்களையும் மூன்று ஆம்லேட்டுகளையும் முழுங்கிய பிறகு தெரு முனையின் பாய் கடையில் வாங்கியிருந்த பட்டன் கத்தியை சரவணா ஸ்டோர்ஸ் கவரில் சுருட்டி வைத்து வீட்டிற்கு நடக்க ஆரம்பித்திருந்தான். கே.கே.நகர் விஜயாவில் அந்தரங்கம்என்று ஒட்டபட்டிருந்த போஸ்டரை ஒரு முறை திரும்பி பார்த்து கொண்டே நடந்தான்.

நகுலன் வீட்டில் எல்லோரும் உறங்கியிருந்தனர். 23’c என்று காமித்து கொண்டிருந்தது வோல்டாஸ் ஏ.ஸி.

ஒரு மணல் மூட்டையின் முன் நின்று கொண்டிருந்த சண்முகம், பட்டன் கத்தியால் இரண்டு முறை குத்திபார்த்தான். மணல் சரிந்து தரையில் கொட்டியது. சிரித்துக்கொண்டான். மீண்டும் குத்தி மணல் சரிந்து சிரித்தான். மீண்டும்....

பன்னிரெண்டு மணிக்கு எழுந்திருத்து, நகுலன் அப்பா ஒரு முறை மூத்திரம் போனார்.

இரவு இரண்டு மணிக்கு களைத்து போய் ஒரு நாற்காலியில் உட்கார்ந்தான். Teachers Whiskey மற்றும் 100 கிராம் இருபது ரூபாய்க்கு வாங்கிய சிக்கன் 65 இரண்டையும் ஒரு முக்காலியில் வைத்தான். ஒரு ரூபாய் பிளாஸ்டிக் டம்ப்ளரில் மிக்ஸிங் செய்ய ஆரம்பித்தான்.

நகுலனின் அம்மா மூன்று மணிக்கு எழுந்து எதற்கும் இருக்கட்டும் என்று காலை சாப்பாட்டிற்கு இட்லி ஊற்றி வைத்து ஒரு பழைய பிரஷ்ஷில் பல் துலக்க ஆரம்பித்தாள்.

சண்முகம் இந்த ரகசிய காரியத்தை தான் ஒருவனே முடிக்க வேண்டும் என்று தீர்மானித்திருந்தான். இரண்டு பேர் செய்தால் அது ரகசியமாயிராது என்பது மஷ்ரூம் கட் அடித்திருக்கும் அவன் தலைக்குள் இருக்கும் மூளை நியாபகப்படுத்தியது.

நகுலனின அப்பா டிரைவிங் சீட்டில் உட்கார்ந்து கொண்டார். அருகில் நகுலன், தம்பி அகிலன் மற்றும் அம்மா பின் சீட்டில் உட்கார தெரு முனைவரை கௌசல்யா சுப்ரஜாஎன்று பக்தியுடன் எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி பாடிக்கொண்டிருந்த்.......நகுலன் சிடியை மாற்றி என்னமோ ஏதோஎன்று ஆலப் ராஜூவை கூப்பிட்டான்.

மூன்று மணி இருபது நிமிடம் கழித்து நல்லசிவத்தின் வீட்டிற்கு நடந்தே வந்திருந்தான் சண்முகம். உள்ளே சென்றிருந்த Teacher லேசாக வேலை செய்ய ஆரம்பித்திருந்தார். அவனுக்கு சாவி எப்படி கிடைத்தது என்பது முக்கியமில்லை என்பதால். அவன் இப்போது கதவை திறந்திருந்தான்.

எப்டியும் ஆறு மணிக்கு போயிடலாம் என்றார் நகுலனின் அப்பா. அந்த அகால வேளையில் லேஸ் ஸ்பானிஷ் டொமாட்டோ பாக்கெட்டை உடைத்திருந்தான் அகிலன்.

Rigar Mortis வந்த பிணம் போல் கை காலை நீட்டி நெற்றியில் மூன்று பட்டையுடன் விரைப்பாய் படுத்திருந்தார் நல்லசிவம்.  அவர் படுத்திருந்த கோலத்திற்கு வேஷ்டி சிறிது விலகி உள்ளே ஏதூம் போடவில்லையோ என்று தனக்கு எழுந்த சந்தேகத்தை தூர வைத்து பட்டன் கத்தியை வெளியே எடுத்தான் சண்முகம்.  

இன்னும் ஸ்பீட் இன்னும் ஸ்பீட் என்ற நகுலனிடம், இதற்கு மேல் வேகமாக போக முடியாது என்று அம்பதை தொட்டு கொண்டிருந்தார். அடுத்த லேஸ் பாக்கெட்.

தான் கொண்டு வந்திருந்த கைக்குட்டையால் அவர் வாயை மூடி வயிற்றில் ஒரு குத்து. இரண்டு சதக் கேட்டது. கழுத்தில் ஒரு குத்து. மீண்டும் இரண்டு சதக்.

மூன்று பேரின் ஒருமித்த கருத்தால் நகுலனின் அப்பா காரை ஓரங்கட்டி நகுலனிடம் ஓட்ட கொடுத்தார். தேநீரில் சிநேகிதம்என்று ஜேம்ஸ் வசந்தன் பீட்டை அதிகரிக்க ஆக்சிலேட்டரில் ஒரு காலால் ஏறி நின்று நூற்றியிருபதை தொட்டு அனைவரையும் பரவசபடுத்தினான். லைசென்ஸ் இல்லை.

நல்லசிவம், நல்லசிவம் என்று குனிந்து காதுக்கருகில் கூப்பிட்டான். தன் சுபரிசோதனையில் திருப்தியுற்று நிமிர்ந்த சண்முகம், கடமுடா என்ற சத்தம் போட்ட தன் வயிற்றை தடவி அபான வாயுவை சத்தமில்லாமல் வெளியேற்றி, திரும்பி மணி பார்த்த பொது நாலு பத்து என்று காட்டியது.

கார் அதே நூற்றியிருபது.

வெளியே வந்து கதவை பூட்டிவிட்டு, அரவமில்லாமல் தெருவை கடந்து வந்தான். விழித்திருந்த தேநீர் கடையில் டீ குடிக்கலாமென்ற யோசனையை ‘’குடி (டீ) குடியை (Teacher) கெடுக்கும் என்பதால் விட்டுவிட்டான். Teacher அதிகமாக வேலை செய்ய, நடையில் அதிகம் தள்ளாடினான்.

அந்த ஹைவேயின் குறுகலான திருப்பத்தை கட்க்க தள்ளாடிக்கொண்டே சாலையை அளந்தான். திருப்பம் வருகிறது என்று தெரிந்தும் நூற்றியிருபதை குறைக்காத நகுலன் காரை திருப்பவும் சண்முகம் சாலையை கடக்கவும், கன நேரத்தில் இருவரும் இருவரை கவனிக்கமுடியாது போய், லப்டப் சத்தம் காது வரை கேட்டு காரில் அடிபட்டு தூக்கி வீசப்பட்டான். லப்டப் நின்றிருந்தது. நூற்றிநாற்பதில் போ என்றார் நகுலனின் அப்பா, படபடப்புடன்.

 

 

 

 

புதன், ஜூலை 10, 2013

ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம் – சுஜாதா


பன்னிரெண்டு ஆழ்வார்களையும் அவர் தம் பாசுரங்களை சொல்லும் நாலாயிர திவ்விய பிரபந்தத்தையும் வாசகர்களுக்கு எளிதாக சொல்லும் ஒரு அருபெரும் முய...ற்சியே இந்த நூல். வழக்கம் போல சுஜாதா தன் பாணியில் போற போக்கில் க்வாண்டம் சயின்ஸ், காஸ்மலஜி என்று விளக்குவது ஸ்வாரஸ்யம்.
 

 ஆழ்வார்களை படித்தவரை, நாராயணன் தவிர வேறொரு தெய்வம் இல்லையென்று கூறும் ஒரு adamancy தெரியவருகிறது. இங்கிருப்பவனும் அவனே, இல்லாதிருப்பவனும் அவனே என்று யாதும் யாதுமாகி போற்றி புளகாங்கிதம் அடையும் ஒரு அற்பணிப்பு. நாலாயிர திவ்விய பிரபந்தமாகட்டும், திருவாசகமாகட்டும் இவை எல்லாவற்றிலும் காணப்படும் உவமை கற்பனைக்கெட்டாதது. பிடித்த அல்லது வியந்த சில Genre களை கீழே தருகிறேன்.

'கணிகண்ணன் போகின்றான் காமரு பூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்க வேண்டா-துணிவுடைய
செந்நாப் புலவனும் செல்கின்றேன் நீயும் உன்றன்
பைந்நாகப் பாய் சுருட்டிக் கொள்'

திருமழிசை ஆழ்வாரும் அவர் தம் சிஷ்ய பிள்ளை கனிகண்ணனும் ஒரு கிழவியை குமரியாக்குகிறார்கள். இதை தெரிந்துக்கொண்ட அரசன், தன்னையும் குமாரனாக்க வேண்டும் என்று திருமழிசை ஆழ்வாரை பணிக்கிறான். முடியாது என்கிறார் ஆழ்வார். இருவரையும் நாடு கடத்துகிறான் அரசன். வெகுண்டெழுந்த திருமழிசை ஆழ்வார், கனிகண்ணனும் கிளம்பிவிட்டான், புலவன் நானும் கிளம்புகிறேன், மாதவா நீயும் இங்கு கிடக்க வேண்டா, உன் பாம்பு பாயை (ஆதிசேஷன்) சுருட்டிக்கொண்டு கிளம்பு என்கிறார். திருமாலும் கிளம்ப. லக்ஷ்மியும் பின் செல்ல, மற்ற பூதகனங்களும் கிளம்பிவிடுகின்றன. அதன் பின் நாடே சுபிக்ஷமற்று போய்விடுகிறது. இதை உணர்ந்து அரசன், ஆழ்வாரிடம் மன்னிப்பு கோர, பின் திருமாலை,

'கணிகண்ணன் போக்கொழிந்தான் காமரு பூங்கச்சி
மணிவண்ணா நீ நிற்க வேண்டா
துணிவுடைய செந்நாப்புலவனும் போக்கொழிந்தான் நீயும்
உன் பைநாகப் பாயில் படுத்துக்கொள்'

நீ திரும்ப வந்து படுத்துக்கொள் என்று பணிக்க, அவரும் வந்து தான் அனந்த ஷயணத்தில் படுத்துக்கொள்கிறார். தன் பக்தன், கிளம்பு என்றால் கிளம்பவும், வந்து படுத்துக்கொள் என்றால் படுத்துக்கொள்ளவும், திருமால் செவி சாய்க்கிறான் என்று ஒரு friendly attribute கொடுத்திருப்பது இதன் தனிச்சிறப்பு.

உவமைக்கு எடுத்துக்காட்டாக, குலசேகராழ்வாரின்,

'வாளால றுத்துச்சு டினும்ம ருத்துவன்பால்
மாளாத காதல்நோ யாளன்போல் மாயத்தால்
மீளாத் துயர்தரினும் விற்றுவக்கோட் டம்மாநீ
ஆளாவு னதருளே பார்ப்பன டியேனே'

(பிரித்து படிக்கவும்). வாளால் அறுத்து சூடு போட்டாலும் வைத்தியன் பால் நோயாளி கொண்ட நீங்காத அன்பு போல், நீ பல வித துன்பங்களை கொடுத்தாலும், உன்(திருமால்) மேல் உள்ள காதல் மாறாது என்கிறார்.

அடுத்ததாக பெரியாழ்வாரின்.

'சோர்வினால் பொருள் வைத்ததுண் டாகில் சொல்லு சொல்லென்று சுற்று மிருந்து
ஆர்வி னாவிலும் வாய்திற வாதே அந்தக் காலம்அடைவதன் முன்னம்
மார்வ மென்பதோர் கோயி லமைத்து மாத வனென்னும் தெய்வத்தை நாட்டி
ஆர்வ மென்பதோர் பூவிட வல்லார்க்கு அரவ தண்டத்தில் உய்யலு மாமே'.

வயதான காலத்தில் சுற்றம் சூழ நின்று, சொத்து எங்கிருக்கிறது எங்கிருக்கிறது என்று வினவ, தன் தள்ளாத வயதின் காரணத்தினால் அதற்க்கு கூட பதில் கூற முடியாத நிலை வரை காத்திருக்க வேண்டாம். அதற்கு முன்பே உன் நெஞ்சில், திருமாலுக்கு ஒரு கோவிலெழுப்பி மலரினால் அர்ச்சனை செய்யக்கடவாய் என்கிறார்.

ஆழ்வார் பாசுரங்களிலேயே ஆண்டாளுக்கு தனி சிறப்பு உண்டு. திருமாலையே தன் கணவனாக எண்ணி, பல பாசுரங்களை பாடியவர் இவர். தன் தந்தையார்(பெரியாழ்வார்), திருமாலுக்கு தினம் பூத்தொடுக்க, அந்த மாலையை தனக்கு சூடி அழகு பார்த்து பின் திருமாலுக்கு அணிவிக்கிறார். இது ஒரு நாள் தந்தைக்கு தெரிந்துவிட, இதை தடுக்கிறார். ஆண்டாள் அணிந்து பின் கொடுக்கும் மாலையே தனக்கு உவப்பானது என்று பெரியாழ்வாரின் கனவில் திருமால் கூற, ஆண்டாளை அழைத்து கொண்டு, ஸ்ரீரங்கம் செல்ல, ஆண்டாள் நேராக கருவறையை அடைந்து இறைவன் திருவடி சேர்கிறார்.

ஆண்டாளின் அனைத்து பாடல்களிலும், தன்னை கடவுளுக்கு முழுதும் அர்ப்பணித்த ஒருவகை pure dedication தெரிகிறது. அவரின் ஒரு பாடல்,

'கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்தி ருக்கும்மோ
மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே'

திருமாலின் வாயிலிருக்கும் வெண்சங்கை பார்த்து, அவரின் வாய்ச்சுவையை சொல்லமாட்டாயா என்று கேள்வி கேட்குமாறு அமைந்திருக்கிறது. காதலர் தினத்தை ஆண்டாள் தினமாக மாற்றலாம் என்று கூறுமளவுக்கு சுஜாதா மேற்கொளிடுகிறார்.

சமீபத்தில் வெளிவந்த ‘விஸ்வரூபம்’ திரைபடத்தில் வரும், ‘உனை காணாத’ என்ற பாடலில் வரும் பல வரிகள் (அவ்வாறு நோக்கினால் எவ்வாறு நாணுவெண், இங்கு பூலோகம் என்றொரு பொருள் உள்ளதை இந்த பூங்கோதை மறந்தாலடி) கூட ஆண்டாள் பாடிய genre போல ஒப்பிட்டு பார்க்கத் தோன்றுகிறது. பிர்ஜு மஹாராஜின் நடனம், தப்லாவின் இசை, கமலின் நளினம் என் இந்த பாடல் ஆண்டாளை முன்னிறுத்துகிறது என்றால் மிகையல்ல.

வெண்பா, திருச்சந்த விருத்தம் சந்தம், எட்டு சீர், ஆசிரியப்பா, கலியவிருத்தம் என்று சுஜாதா, அவ்வப்போது தட்டிவிடுகிறபொழுது, இது தெரியாமல் முழித்து கொண்டு, ஒரு விதமான shame feeling வருவதை தவிர்க்கமுடியவில்லை.

எவ்வாறாகினும்,ஆன்மிகம், திருமால், பக்தி இத்யாதி போன்ற காரணங்களை தவிர்த்து தமிழின் சுவைக்காகவாவது நாலாயிர திவ்விய பிரபந்தத்தை ஒரு முறை முயற்சி செய்யலாம்.

வெள்ளி, ஜூன் 21, 2013

சமீபத்தில் பார்த்து ரசித்த சில படங்கள்.

Taken & Taken 2
கதாநாயகன் Ex-CIA. பிரான்ஸிர்க்கு தன் நண்பியுடன் செல்லும் அவள் மகளை விபச்சார கும்பல் கடத்துகிறது. கடத்தபடுவதற்கு சில நிமிடங்கள் முன்பு, தந்தையிடம் தன் நிலையை போனில் விவரிக்கிறாள். கும...்பலில் ஒருவன் அவளிடமிருந்து போனை பிடுங்கவும், கதாநாயகன் ‘Leave her. I still don’t know you. Throughout my carrier I have developed some techniques, which will help me to find you. Not only will I find. I will come and kill you’ என்ற சொல்வதிலிருந்து படம் சூடு பிடிக்கிறது. சொல்வதை போலவே தன் புத்திசாலித்தனத்தால் கும்பலையும் கண்டுபிடித்து கூண்டோடு ஒழித்து மகளையும் மீட்கிறார். படம் முடியும் வரை திரைக்கதையில் சற்றேனும் சுவாரஸ்யம் குறையாமல், காட்சியமைத்திருப்பது இயக்குனரின் சாமர்த்தியம். இரண்டாவது பாகத்தில், கடத்தல் கும்பலில் தன் மகனை பறிகொடுத்த தந்தையின் பழிவாங்கல். கதாநாயகனின் குடும்பத்தை கடத்துகிறார்கள். முதல் பாகத்தை ஒப்பிடும்பொழுது இரண்டாம் பாகத்தில் விறுவிறுப்பு கம்மி என்றாலும் இரண்டு படமுமே த்ரில்லர் பிரியர்களுக்கு நல்ல ஒரு தீனி.




Insomnia
அல்ஃப்ரெடோ ஜேம்ஸ் அல் பசினோ என்ற மாபெரும் நடிகனின் மற்றுமொரு முத்திரை படம் தான் Insomnia. கிரிஸ்டபர் நோலனின் மூன்றாவது படம். ஆனால் இது நார்வீஜியன் படத்தின் ரீமேக். ஒரு பெண்ணின் கொலை சம்பந்தமாக துப்பறிவதற்காக அலாஸ்கா வருகிறார்கள் அல் பசினோவும் அவரது சகாவும், ஆறுமாதம் பகல் ஆறுமாதம் இரவு என்று, பூமியின் விசித்திரம் அலாஸ்கா நகரம். அந்த பெண்ணை கொலை செய்தவர் ராபின் வில்லியம்ஸ். கொலையாளியை பிடிக்கும் நேரத்தில் Mistaken Identityயாக தன் சகாவையே சுட்டுவிடுகிறார் அல் பசினோ. இதை அலாஸ்கா போலீசிடமிருந்து மறைத்துவிடுகிறார். ஆனால் குற்ற உணர்வு அவரை வதைக்கிறது. இதற்கிடையில் அல் பசினோவின் உண்மையை தெரிந்துகொண்டு ராபின் வில்லியம்ஸ், அல்பசினோவை மிரட்டுகிறார். 24 மணிநேரமும் மறையாத சூரிய வெளிச்சத்தின் காரணமா அல்லாத தன் குற்ற உணர்வின் காரணமா என்று தெரியாமலேயே ஐந்து நாட்கள் தூங்காமல் கண்கள் வீங்கிப்போய் படத்தில் வாழ்ந்திருக்கிறார் அல்பசினோ. அலாஸ்கா நகரம், அல்பசினோ கண்கள், ராபின் வில்லியம்ஸின் அசாதாரண நடிப்பு, அல்பசினோ பயன்படுத்திய SUV கார், நோலனின் இயக்கம் என படம் இறுதிவரை ஒரு வகையான சைக்காலஜிக்கள் திரில்லராக கதை செல்கிறது. ரீமேக் படம் என்ற காரணத்தினாலோ என்னமோ, கிரிஸ்டபர் நோலன் டச் மிஸ்ஸிங்.

The Skeleton Key
மிக நேர்த்தியான திரைக்கதைக்கு இந்த படம் ஒரு உதாரணம். வாதத்தில் படுத்திருக்கும் ஒரு முதியவர் ஒருவரின் caretakerஆக எஸ்டேட் பங்களாவில் வேலைக்கு செல்லும் செவிலியாக கேட் ஹட்சன். இதற்கு முன்னர் பலர் அங்கு வேலை செய்து பாதியில் நின்றுவிடுகிறார்கள். காரணம் பங்களாவின் மர்மம். இது தெரிந்தும், இளம் வயதிலேயே தன் தந்தையை இழந்த காரணத்தினால் அந்த முதியவருக்கு பணிவிடை செய்ய வேண்டும் என்ற உறுதியில் அந்த பங்களாவில் வேலைக்கு சேருகிறார் கேட். அந்த முதியவரும் பாட்டியும் மட்டுமே அங்கு குடியிருக்கிறார்கள். Skeleton Key எனப்படும் பங்களாவின் எல்லா கதவுக்கும் பொதுவான ஒரு சாவியை அந்த பாட்டி, கேட்டிடம் தருகிறாள். அங்கு ஆராம்பிக்கிறது கதை. எந்த அறைக்கு செல்ல வேண்டாம் என்கிறாளோ, அந்த அறையை கேட் திறந்து பார்க்கிறாள். வூடூ மாஜிக்கின்(ஒரு வகையான மாந்திரீகம்) சமாச்சாரங்கள் அங்கு விரவி கிடக்கின்றன. ஒரு சில நாளிலேயே முதியவர் ஒரு போர்வையில் ‘HELP ME’ என்றெழுதி கேட்டிடம் காண்பிக்கிறார். ஏதேனும் அமானுஷ்யத்தின் வேலையா என்று குழம்பும் சமயத்தில் பாட்டியிடமே கேட்டிற்கு சந்தேகம் எழுகிறது. முதியவரின் நிலைக்கு காரணமே அந்த கிழவி தான் என்று முடிவிற்கு வரும் கேட், அவரை காப்பாற்றும்பொழுது தான் அந்த வலை தனக்காக விரிக்கபட்டிருக்கிறது என்று கண்டுபிக்கிறாள். அதுவரை இரண்டு மணி நேரம் படத்தை பார்த்து நாம் யூகித்து வைத்திருந்ததை, கடைசி ஐந்து நிமிடங்கள் தகர்த்தெரிக்கின்றன. மர்ம முடிச்சுகள் ஒவ்வொன்றாக அவிழுகின்றன. படம் பார்க்கும்பொழுது பார்ப்பவர் மனதில் எழும் பல கேள்விகளுக்கு, இறுதியில் கதையின் முடிவிலிருந்து பதில்களை Interpret செய்யவைப்பதிலிருந்து இயக்குனர் திரைக்கதையை எழுத எடுத்திருக்கும் சிரத்தையை உணரவைக்கிறது. Mystery/Thriller அல்லது Surprise Ending வகையை சேர்ந்தது. Most Recommended.See More

முகநூல் பதிவுகள் -4

சமீபத்தில் அகஸ்மாத்தாக நடந்த இரு சம்பவங்கள் நினைவுக்கு வரவும் நண்பனிடம் பகிர்ந்துகொண்டிருந்தேன். ஒன்று, சில மாதங்களுக்கு முன்னாள் எங்கள் கம்பெனியிலிருந்து வேறு ஒரு கம்பெனிக்கு தாவியவர். இங்கிருந்து கழன்று சென்ற பின் ஒரு முறையேனும் போன் காலோ, மெய்லோ இல்லை. சில நாட்கள் கடந்த பின்பு அவரை பற்றிய ஞாபகம் குறைந்து போனது. நான்கைந்து மாதங்கள் சென்றிருக்கும். ஒரு மூன்று நாட்களாக அவருக்கு போன் செய்ய வேண்டும்... என்ற ஒரு எண்ணம் எழுந்திருந்தது. நினைவு வரும்பொழுது கால் செய்ய முடியாத சூழலிருக்கும். தோதுவான நேரம் வரும்பொழுது கால் செய்யும் ஞாபகம் இராது. சரியாக மூன்றாவது நாள் ஒரு நம்பரிலிருந்து அழைப்பு வந்தது. எடுத்து பேசினால் அதே நண்பர்.

‘என்ன சார். உங்களுக்கு தான் போன் பண்ணணும்னு நினைச்சிட்டே இருந்தேன். ஆனா நேரம் சரியா அமையல.’

‘அதே தான் பாஸ். ஒரு மூணு நாளா உங்க ஞாபகம் வந்தது. சரி எப்டி இருக்கீங்கனு கேக்கலாம்னு போன் பண்ணினேன்’ என்றார்.

பரஸ்பர விசாரிப்புகளுடன் உரையாடல் முடிந்தது.

சம்பவம் இரண்டு. துபாய்க்கு வேலை சென்ற மறு நாளே போட்டோ, மெசேஜ் என்று வாட்ஸ் அப்பில் கலக்கிய உறவுக்காரப்பைய்யன் கடந்த ஒரு வருடமாக அட்ரெஸ் இல்லாமல் இருந்தான். பேஸ்புக்கிலாவது தேடி பிடிக்கலமென்று கொஞ்ச நாளில் அதிக சிரமமில்லாமல் மறந்தே போனேன். இரு நாட்களுக்கு முன் பழைய ஆல்பங்களை புரட்டி கொண்டிருந்தபோது கண்ணில் பட்டான். போன் பண்ணலாமென்று நினைக்கையில் துபாய் நம்பர் தெரியவில்லை. வாட்சப்பில் மெசேஜ் செய்யலாமேன்றால் போனை சமீபத்தில் தான் ரீசட் பண்ணிருந்தேன். இதே நினைவாக அந்த நாள் ஓடிவிட, மறு நாள் போனில் ஒரு ISD அழைப்பு. எடுத்து பேசினால் துபாய் பைய்யன்.

இந்த இரு சம்பவங்களும் அண்மையில் நடந்தது, முன்னொரு காலத்தில் படித்த ‘மனித வசியம் அல்லது மனக்கவர்ச்சி’ மற்றும் தொலைவில் உணர்தல் புத்தகங்களை ஞாபகமூட்டின. ஆசிரியர் மறைமலையடிகள். புகழ்பெற்ற தமிழறிஞர். ஆய்வாளர். டெலிபதி மூலமாக தனது சிஷ்யனிடம் மற்றொரு நாட்டிலிருந்து தகவலை பரிமாறிக்கொண்டவர். அவரது இவ்விரு புத்தகங்களை படித்தால் மனிதன் தமிழாராய்ச்சி செய்தாரா அல்லது மாந்திரீகத்தில் ஆராய்ச்சி செய்தாரா என்று சந்தேகமெழுமளவுக்கு எழுதியிருப்பார்.

இப்படியெல்லாம் ஃபீல் பண்ணி பேசிட்ருந்தா பக்கத்தில இருந்த அந்த பக்கி, ‘மச்சான் ஒரு மூணு நாளா எனக்கு பராக் ஒபாமா நினைப்பாவே இருக்குது. அவரு எனக்கு கால் பண்ணுவாரானு?’ கேக்குது.

என்னா ஒரு வில்லத்தனம். நீயெல்லாம் என் ஆஃபிஸ் கேண்டீன்ல போடுற பொங்கல் சாப்டே செத்துபோய்டுவனு சொல்லிட்டு கிளம்பிட்டேன்.

வியாழன், ஜூன் 13, 2013

மகேந்திரனின் ஜானி


கெட்ட பய சார் காளி என்று தனக்கே உரிய பாணியில் ஸ்டைலாக கண்ணீரை துடைத்துவிட்டு முள்ளும் மலருமில் தன் நடிப்பால் அசத்திய ரஜினியை, ரெட்டை வேடங்களில் தன் இயல்பான நடிப்பால் ஜானியில் அடுத்த கட்டதிற்க்கு உயர வைத்திருக்கிறார் மகேந்திரன் என்று பலரால் அறியப்படும் அலெக்சாண்டர்.

பொதுவாக இவர் படங்களில் அதிகம் ஆச்சர்யத்தை அளிப்பது, ஏழு அல்லது எட்டு கதாபாத்திரங்களூடே நகர்ந்து செல்லும் வலிவான திரைக்கதையே. எங்கேனும் கொஞ்சம் கூட சுவாரஸ்யத்தை இழக்காமல் அசௌகர்யத்திற்கு இடம் கொடுக்காமல் நகர்ந்து செல்கிறது. இவ்வளவு குறைவான பாதிரங்களுடன், அவர்களுக்குள் நடக்கும் உணர்ச்சி போராட்டங்களை எளிதாக காட்சியமைத்து இரண்டு மணி நேரத்திர்க்கும் மேலாக பார்வையாளர்களை கட்டி போட முடியுமா என்ற கேள்வியை அனாயாசமாக தட்டி விட்டு தன் படைப்பின் மூலம் பதில் தருகிறார் மகேந்திரன்.


ஜானியாக கேடி ரஜினி. வழக்கம் போல் ஒருவரை ஏமாற்றும் பொருட்டு செல்லும் இடத்தில் அர்ச்சனாவின் (ஸ்ரீதேவி) குரலால் வசீகரிக்கபட்டு அவளுடன் பரீச்சயமாகிறார். சந்திப்பு நட்பாக, பின் காதலாக பரிணாமம் பெறுகிறது. மற்றொருபுறம் விதய்சாகராக கருமி ரஜினி. பார்பர். பத்மாவால் (தீபா என்று அழைக்கபடும் உன்னிமேரி) வஞ்சிக்கபட்டு இரு கொலைகளை செய்கிறார். இருவரையும் போலீஸ் தேடுகிறது. பெண்கள் மேல் ஒரு வெறுப்பை சுமந்திருக்கும் பார்பர் ரஜினி, இருவரின் முக ஒற்றுமையை சாதகமாக்கி கொண்டு, தன்னை ஜானியாக மாற்றிக்கொண்டு ஸ்ரீதேவியை ஏமாற்ற நினைக்கிறார். ஸ்ரீதேவியின் அப்பழுக்கற்ற அன்பின் முன்னால் தன் தோல்வியை ஒப்புக்கொண்டு, ஜானி செய்த குற்றத்திற்கும் தானே பொறுப்பு என்று போலீசில் சரணடைகிறார். ஜானி அர்ச்சனா இணைகிறார்கள்.
ஜானியில் ரசிக்க வைத்த சில விஷயங்கள்.

1.   மனதை வருடும் ஐந்து பாடல்கள். ஒரு இனிய மனது’, என் வானிலே’, செனோரிட்டா’, ஆசைய காத்துல’, மற்றும் காற்றே எந்தன்

2.   பண்ணைபுரம் ராஜாவின் ஒப்பற்ற பின்னிசை. படத்தை பார்க்கும்பொழுது ஏற்படும் ‘impact’ இவர் தயவினால்.

3.   இசைஞானியிடம் ‘BGM’ மற்றும் பாடல்களை கறந்து, மிகைபடுத்தாமல் திரைக்கதையினுள் பாங்காக சொருகிய மகேந்திரனின் சாமர்த்தியம்.

4.   ரஜினி என்று துதிக்கபடும் மாபெரும் காந்த சக்தியின் நடிப்பாற்றல். அவர் நடிப்பை பயன்படுத்தி வெளிவந்த படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அநேகமாக அவர் நடிப்பு காணாமல் போனது எஸ்.பி. முத்துராமனின் கைகளால் தானிருக்கும்.

5.   ஸ்ரீதேவியின் குரல். நன்றி நம்ரதா சவ்ஹேணி

6.   அர்ச்சனா ஜானிக்கான பிரேத்யேக BGM

7.   மகேந்திரனின் திரைக்கதை

8.   பார்பர் ரஜினியின் ஒன் லைன் தத்துவங்கள். முக்கியமாக எப்பவுமே ஒன்ன விட ஒன்னு பெட்டெராத்தான் தெரியும்.

9.   மீண்டும் இளையராஜா.

இத்தனை கவித்துவமான படங்களை இயக்கிய மகேந்திரன், தன் காலங்களில் அதிகம் கண்டுகொள்ளபடாதவர். முப்பது வருடங்கள் கழித்து அவரது திரைகதைகள் இப்பொழுது பாடமாக எடுத்து கொள்ளப்படுகின்றன. போற்றபடுகின்றன. மணிரத்னம் சினிமாவுக்கு வருவதற்கு தூண்டுதலாய் அமைந்தவர். முப்பத்தாறு வருடங்களில் வெறும் பன்னிரெண்டு படங்கள் மட்டுமே மகேந்திரனிடமிருந்து பெற்றது, தமிழ் ரசிகர்களின் காலம் கடந்த குற்றமாகும்.

புதன், மே 01, 2013

ஜான்ஸ் ஸ்கூல் - பெண்கள்

காலை தினமும் நடைபயிற்சி முடித்து அந்த வழியாக வருவதுதான் வழக்கம். வரும் வழியில் இருக்கும் தேவாலயத்தில் ஆறு மணிக்கு மணி அடித்து ஏசுவின் பாடலை ஒலிப்பார்கள். பல முறை கேட்ட ராகம் போல் தோன்றினாலும், அவசரகதியில் ஒரு முறையேனும் நின்று கேட்டதில்லை. இன்றும் அதுபோல் எங்கேயோ கேட்டது போல இருக்கிறதே என்று தோன்றவே, அருகில் சென்றுதான் கேட்டு பார்க்கலாமே என்று யத்தனித்தென். காதில் ஒலித்த அந்த பாடல்,

'தேன் இனிமைய...ிலும் இயேசுவின் நாமம் திவ்விய மதுரமாமே'

நினைவு கொசுவர்த்தி சுருளாக சுருள, காலச்சக்கரத்தில் ஒரு பத்து வருடம் பின்னோக்கி சென்றது. தூய யோவான் மேனிலைப்பள்ளி. ஏழு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்த பள்ளி. அந்த ஆறு வருடங்களும், காலை ஒன்பதிற்கு அடிக்கும் மணிக்கு பிறகு, வகுப்பின் மூலையில் சதுரமாக தொங்கிகொண்டிருக்கும் ஒலிபெருக்கியை பார்த்துக்கொண்டே அதில் இருந்து ஒலிக்கும் பிரேயர் பாடல்களை கேட்டும், பாடியும், மற்றவன் பாடுகிறானா என்று ஓரக்கண்ணில் பார்த்தும் கழித்த பொன்னான நாட்கள். பரந்து விரிந்த அந்த பள்ளியின் (சுமார் 80000 சதுர அடி) எந்த மூலையில் யார் சென்று கொண்டிருந்தாலும் சரி, ஒன்பது மணி பிரேயர் பாடல் ஒலிக்கும்போது அந்தந்த இடத்தில் அங்கேயே நின்று இறைவனுக்கு நன்றி கூறி பிரார்தித்து பின் நகரும் ஒழுக்கத்தை கற்று கொடுத்த பள்ளி. சிறு துளி பேரு வெள்ளமாக, தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பது போல், அங்கு கற்று கொண்ட ஒழுக்கம் இன்று வரையில் அலுவலக வேலை முதற்கொண்டு தனி மனித வாழ்விலும் பலருக்கு உதவியிருக்கும் என்பது திண்ணம்.

'தந்தானைத் துதிப்போமே - திருச்
சபையாரே, கவி - பாடிப்பாடி.
தந்தானைத் துதிப்போமே

என்ற அடுத்த பாடல் ஒழிக்க ஆரம்பித்திருந்தது.கள்ளனை துரத்தும் நாய் போல் உருண்டோடி, வேர்த்து விறுவிறுத்து, தொட்டியில் கழனியை குடிக்கும் மாடு போன்று சோறு தின்று, குதிரை போல் ரயிலிலும் பேருந்திலும் நின்றுகொண்டே தூங்கி கழிக்கும் தேமே என்ற வாழ்கையில், அவ்வப்போது இது போன்று பால்யத்தை நினைவுபடுத்தும் சங்கதிகள், படித்தோம் படுத்தோம் என்று டெட்லைன் போன்று பரபரப்பு இல்லா, மீளா வாழ்கைக்கு திரும்ப துடிக்கிறது என்பதை மறுதலிக்க இயலாது



கல்லூரி தினங்களில் நண்பர்களோடு கதைத்து கொண்டிருக்கும்பொழுது அடிக்கடி இந்த ஸ்டேட்மெண்ட் யார் வாயிலிருந்தாவது தவறாமல் வந்துவிடும். 


‘மச்சா இந்த பொண்ணுங்க ஃபிரண்ட்ஷிப் பாத்திருக்கியா? எல்லாம் மேலோட்டமாதான் இருக்கும். கல்யாணம் வரைக்கும் தான். அதுக்கப்புறம் ஒருத்தியாவது டச்ல இருக்காளுங்களா? சுத்தமா இருக்காது ஆனா பசங்க அப்டியில்ல. கடைசி வரைக்கும் அவன் டச்லேயேதான் இருப்பான்’

நிதர்சனமான பொய்!!!

பார்த்த...ு பழகிய வரைக்கும் இந்த கூற்றை ஓரளவு நான் ஒத்துக்கொண்டிருந்தாலும், அவர்களுடைய நட்பு நுனிப்புல் மேய்ச்சல் அளவுக்குத்தான் என்பது ஈகோயிஸ்ட் ஆண்களின் தவறை மூடி மறைப்பதற்காக கண்டுபிடிக்கபட்ட கூற்று என்று ஒருவாறு அனுமானிக்க முடிக்கிறது

ஆறு சகோதரிகள், நான்கு சகோதரர்கள் என்ற ஆலமரம் போல் பரந்து விரிந்திருக்கும் குடும்பங்கள் கூட திருமணத்திற்கு பிறகு அறுத்தெரியப்பட்ட நாற்றாகவே அறியப்படுகின்றன. காற்றின் வேகத்தில் சுதந்திரமாக மேலே பறக்கும் பட்டத்தை அங்குமிங்கும் சுண்டி அலையவிட்டு வேடிக்கை பார்த்து பின் நூலை மெதுவாக சுற்றி பட்டத்தை கைக்குள் அடக்குவது போல், திருமணமான முதல் நாள் முதலே, ‘நீ இந்த குடும்பத்தின் அடையாளம், கெக்கே பெக்கே என்று நாலு பேர் முன்னாடி சிரிக்காதே என்று ஒவ்வொரு நாளும் ஒரோர் நிபந்தனைகள் விதிக்கபட்டு, உறவினர் வட்டம் முதல் நட்பு வட்டம் வரை நாளுக்கு நாள் சுருக்கபடுகிறது.

பத்து மாதம் சுமந்து பெற்றவளுக்கு எத்தனை பேர் தங்கள் குழந்தைகளுக்கு மனைவியின் இனிஷியலை தருவித்திருக்கிறார்கள்???

திருமணம் முடிந்து தனக்கும் தன் பிறந்த வீட்டுக்கும் எச்ச சொச்சமாக அறியப்படும் உறவாக இருக்கும் தந்தையின் இனிஷியலை கூட எத்தனை பெண்கள் மறந்து கணவனின் இனிஷியலை சேர்த்துக்கொள்ள வைக்கபடுகிறார்கள்???? (பிரியத்துடன் சேர்க்கபட்டவை தவிர்த்து)

திருமணத்திற்கு பின் புகுந்த வீடு மட்டுமே உன் வீடு என்று சொல்லும், கணவர்களே, உங்களுக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தால் இதையே சொல்லி வளர்க்கும் தைரியமிருக்கிறதா?

ஒரு பெண்ணிற்கு அவள் அக்காவும் தங்கையும், கடைசி வரை அக்காவாகவும் தங்கையாகவும் தான் தெரிகிறார்கள். ஆனால் கணவன் மற்றும் அவன் வீட்டாரின் வரட்டு கவுரவத்தின் முன் அவள் பாத்திரமும் காட்சிகளும் மாற்றப்படுகின்றன. lமாமனார், மாமியார், ஓரகத்தி, நாத்தனார், அண்டை அயலார், பிறந்த வீடு, இருபத்து நாலு மணி நேரமும் துணை தேடும் குழந்தை, இதோடு கணவனையும் சேர்த்து அவள் வெற்றிகரமாக சமாளிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் நம் சமூகத்திற்கு தெரியாமலில்லை, அவள் நட்பு வட்டம் ஏன் சுருங்கியது என்று?

நட்போ, சுற்றமோ எதுவாகினும் உறவில் பலவீனபட்டவள் அல்ல பெண். உறவை பலபடுத்த வந்தவளே பெண். குடும்பத்தின் மகிழ்ச்சியை ஆக்கும் அழிக்கும் ஒரே சக்தி பெண்.