புதன், ஏப்ரல் 15, 2026
கீழடி அருங்காட்சியகம்
LGBTQ+
நீயா நானா
கடந்த வார நீயா நானா பார்த்துக் கொண்டிருந்தேன்.
Hotspot 1& 2
ஒருசேர இரண்டு படங்களையும் பார்த்தாகிவிட்டது.
வத்தல்
எங்கள் ஊரகத்தில் அவ்வப்போது மகளிர் சுய உதவிக்குழுவின் கண்காட்சி நடைபெறும்
குட்டிக்கதை
கிருஷ்ணன் ஏதும் பேசாமல் அந்த நாற்காலியில் அமர்ந்திருந்தார். மூக்குக் கண்ணாடி கழட்டி மேஜையில் வைக்கப்பட்டிருந்தது. முழங்கைகளை மேஜை மீது ஊன்றி இரு பெருவிரல்களால் நெற்றியை தாங்கிக் கொண்டிருந்தார்.
குட்டிக்கதை
சூப்பர் மார்க்கெட்டின் சாய்வு தளத்தில் ஏறுவது கூட பெரும் மலைப்பாக இருந்தது. ஓய்வு பெறும் நாளில் கூட எனக்கு இந்த வலி இருந்ததாக நினைவில்லை. இரண்டு மாதங்கள் கூட தாண்டவில்லை. அதற்குள் முட்டி வலி மிகவும் பாடாய்ப் படுத்துகிறது. இல்லாள் காய்கறி பிரிவிக்குள் நுழைந்துவிட, நான் ஒரு ஸ்டூலைத் தேடி அதில் உட்கார்ந்து கொண்டேன்.
ஒரு இளம் தம்பதி தங்கள் குழந்தையை டிராலியில் அமரவைத்து வந்துகொண்டிருந்தனர். ஒரு வயது இருக்கலாம். பிரமாண்டமான அந்த சூப்பர் மார்க்கெட்டில் எதை கவனிப்பதெனத் தெரியாமல் அதன் கோலிக்குண்டு கண்கள் அலைபாய்ந்தது. பஞ்சு போன்ற கன்னங்களில் மை இட்டிருந்தனர். இதே போல் என் மகனை அமர வைத்து அழைத்துச் சென்றது என் நினைவுக்கு வந்தது.
விவசாயம்
விவசாயம் என்பதற்கான விளக்கமே மனிதனால் திரித்து கூறப்பட்டிருக்கிறது. அதிலும் இயற்கை விவசாயம் என்பது மிகப்பெரிய ஏமாற்று. நிலத்தில் இறங்கி மனிதன் உழத்தொடங்கிவிட்டாலே அது செயற்கை தான். பறவைகள் தின்ற பழங்களின் விதைகள் கீழே விழுந்து மரம் முளைக்கிறதே, அது போன்று விளைவதே இயற்கை.
Not all movies are the same Dual & Simple Manushan
குட்டிக்கதை
பள்ளியில் பேச்சு போட்டிக்காக தன்னை தேர்ந்தெடுத்துள்ளார்கள் என்றாள் மகள். 'ஆளும் அரசின் கல்வி திட்டங்கள்-2025' என்பது தலைப்பு.
குட்டிக்கதை
குங்குமம்
புரிதல்
ஆசை தீர கொண்டாடி வாழ வேண்டிதான்
இந்த வாசிப்பு என்பது பெரும்பாலும் அன்றைய நாளிதழாகத்தான் இருக்கும். டைம்ஸ் ஆப் இந்தியா, ஹிந்து, தினமலர், தமிழ் இந்து போன்று. இரண்டு அல்லது மூன்று ரூபாய் விலை தான் இந்த தினசரி நாளிதழ். 7.40க்கு பீச் ட்ரைனில் பார்க் ஸ்டேஷன் வந்திறங்கி ஓடோடி 7.48க்கு சென்ட்ரல் ஸ்டேஷன் வந்தடைந்து இந்த இரண்டு ரூபாய் நாளிதழை வாங்கி 8.00 மணி கும்மிடிப்பூண்டி ரயிலில் இடம் பிடித்துவிட்டால் அதற்கப்புறம் இந்த வாசிப்பு தான். ரிட்டயர்டு ஆன தாத்தாக்கள் எல்லாம் வீட்டின் நடுவில் ஒரு ஊஞ்சல் கட்டி பரீட்ச்சைக்கு வாசிப்பது போல் இந்துவை வாசிப்பார்களே அது போல், ஒரு மணி நேரம் கடும் வாசிப்பாக இருக்கும். கொஞ்சம் நாள் பேசிப்பழகிய பின் இதை கவனித்து ஒருவர் கேட்டார்.
'இதுல என்ன உபயோகம் இருக்குனு இப்படி வாசிக்கிறீங்க?'
'நாட்டு நடப்பு தெரிஞ்சுக்கத்தான் சார்'
'எல்லாமே குப்பை. இதுல வர நியூஸ் எதுவுமே தேவை இல்லாதது. இது உங்க மண்டைக்குள்ள போய் தேவையில்லாத ஸ்பேஸ் பிடிச்சுக்குது, படபடக்க வைக்குது, anxiety depression எல்லாம் ஜாஸ்தி ஆயிடும். பூரா நெகடிவிட்டி'.
'என்ன பண்ணச் சொல்றீங்க?'
'புத்தகம் வாசிங்க' என்றார்.
பள்ளி கல்லூரி காலங்களில் நூலகம் நூலகமாக சென்று வாசித்து, பின்பு வேலைப் பளு காரணமாக வாசிப்பு அறவே நின்றிருந்த நாட்கள் அவை. அவர் கூறியது உள்ளுக்குள் ஒரு பொறி தட்டியது போல் இருந்தது. நாளிதழ்களை தூக்கியெறிந்து ஆர்யகவுடா முருகன் லெண்டிங் லைப்ரரி வந்து தஞ்சமடைந்தேன். நான்கு வருடங்களில் கிட்டத்தட்ட 200 புத்தகங்கள் மேல் வாசித்தேன். மனதிற்குள் குப்பையாக எதுவும் சேரவில்லை. சரியான அறிவுரை. நிற்க.
இப்பொழுது வசிக்கும் இடம் ஒரு சிறு ஊரகம். டவுன் என்று சொல்லலாம். கிட்டத்தட்ட 10,000 குடும்பங்கள். ஒரு குடும்பத்தில் மூன்று பேர் என்று எடுத்துக்கொண்டால் கூட கிட்டதட்ட 30000 பேர். அதிகபட்சம் 50000 பேர். ஒரே இடத்தில். பல தரப்பட்ட மனிதர்கள். வெவ்வேறு வயத்தைச் சார்ந்தவர்கள். பிறந்த குழந்தை முதல் பள்ளி செல்லும் குழந்தைகள், கல்லூரி பயிலும் இளைஞர்கள், புதிதாக திருமணம் ஆனவர்கள், பெற்றோர்கள், நடுத்தர வயத்துக்கார்கள், ஒய்வு பெற்றவர்கள், முதிர்ந்த பெரியவர்கள் என அத்தனை பேர். குடும்பங்கள் என்று எடுத்துக்கொண்டால் பலவகையாக இருக்கிறது. இதிலே நேர்கோட்டில் எந்த வித விவகாரமும் இன்றி பயணிக்கும் குடும்பங்கள் உண்டு. அதற்கு நேர் எதிராக டிவோர்ஸ் ஆனவர்கள், மறுமணம் ஆகாதவர்கள், சிங்கிள் பேரன்ட்ஸ், தினமும் சண்டை போடும் குடும்பம், ரெட்டை வால் குருவி குடும்பம் என பல வெரைட்டிகள் இங்கு உண்டு. அலுவலகம் என்று எடுத்துக்கொண்டால் நம் மீது உண்மையான அக்கறை எடுத்துக்கொள்ளும் 0.02% மக்கள், மீதம் பொறாமையிலேயே பொருமித்தள்ளும் கனவான்கள், கிறுக்கு பிடித்த மேலதிகாரிகள், சைக்கோ டீம் மேட்கள், அறுந்த வால் ஜென z ஜூனியர்கள், கீழே என்ன நடக்கிறது என்றே தெரியாத உயர் உயர் மேலதிகாரிகள் என ஒரு மினி நேட் ஜியோ வைல்ட் சேனல் நடத்தலாம். இது இல்லாது இந்த 10,000 குடும்பங்களைச் சார்ந்து இயங்கும் நேரடி அல்லது மறைமுக வியாபாரங்கள், வியாபாரிகள், அவர்தம் குடும்பங்கள் என அவ்வளவு நிகழ்வுகள் ஒரு நாளில் அல்ல ஒரு நொடியில்.
அதனால் என்ன என்று தானே உங்கள் கேள்வி? இந்த அத்தனை நிகழ்வுகளும் விரும்பியோ விருப்பம் இல்லாதோ எப்படியாவது காதில் வந்து விழுந்து விடுகின்றன. வாட்சப் முதல் காரணீ. ஆபிஸ் கிசுகிசுக்கள் இரண்டாம் காரணீ. இவற்றையெல்லாம் தவிர்த்து அன்றாட வேலைகளை மனத்தாங்கல் இன்றி பார்ப்பதே ஒரு பெரும் போராட்டாமாக இருக்கிறது.
உதாரணத்துக்கு, இந்த வருட ஆரம்பத்தில் அதாவது ஜனவரியில், எங்கள் ஊரகத்தில் ஒரு துர் சம்பவம் நடந்தது. தன் அண்ணனை பள்ளிக்கு அழைத்து போக வந்த வேனின் சக்கரத்தில் மாட்டி ஒரு வயது குழந்தை இறந்துவிட்டது. ஒரு வருட விடுப்பு முடிந்து முழு நேர வேலைக்கு ஒருவரை அமர்த்திவிட்டு அப்பொழுது தான் அந்த குழந்தையின் அம்மா வேலைக்குச் செல்கிறார். ஆற்ற முடியாத துயரம். இன்னொரு சம்பவம். அடுத்த மாதம் என்று நினைக்கிறேன். எங்களுடன் பணிபுரியும் ஒருவர் அலுவலகத்தின் மாடியில் இருந்து குதித்து
தற்கொலை செய்துகொண்டார். நிதி சார்ந்த முதலீட்டில் ஒரு பெரிய தொகையை ஏமாந்து விட்டார். பெரும் துக்கத்தில் இருந்தார் போல். ஆனால் ஒருவரிடமும் பேசியதில்லை. மனைவி மற்றும் இரு குழந்தைகள் என நிராதரவாகிவிட்டனர். மார்ச் மாதம், ஒரு உயரதிகாரி துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு இறந்து விட்டார். காரணம் தெரியவில்லை. ஒரு பெண் குழந்தை மற்றும் மனைவி. இவை மட்டும் இல்லை. ஊரகத்தில் மாடு முட்டி கீழே விழுந்து கோமாவில் இருப்பவர்கள், நாய் குதறிய குழந்தைகள், தற்கொலை, குடும்ப பிரச்சினைகள், பள்ளி நிகழ்வுகள், கல்லூரி கலாட்டாக்கள், மைதானத்தில் அத்துமீறல்கள் etc etc என அனைத்து செய்திகளும் அடுத்த நொடியே வந்தடைந்து விடுகிறது.
ஒழுக்கமாக இருக்கும் குடும்பங்கள், அவர்தம் பிள்ளைகள், படிப்பு, மேற்படிப்பு, திருமணம், குழந்தைகள், வெளிநாடு செல்லுதல், இங்கிருந்து பிள்ளைகளை பார்க்க அவர்களும் வருடத்திற்கு ஓரிருமுறை பயணம், ஒய்வு காலம், ஒரு நன்னாளில் மீளாப் பயணம். இதுவே தந்தை அல்லது தாய் சரியில்லாத குடும்பம், அவர்கள் நித்தமும் படும் இன்னல்கள், குடியினால் ஏற்படும் திடீர் மரணங்கள், தாய் சேய் என இருவரும் வீட்டு வேலை செய்வது என இது மற்றொரு பக்கம். வெளிநாட்டில் வேலை பார்க்கும் குழந்தைகள், இங்கு தன்னந்தனியாக நிற்கும் அவரது பெற்றோர்கள். ஏதேனும் ஒரு எமெர்ஜென்சி என்றால் அண்டை அயலார் தான். கால் ஒடிந்தாலும் கூட வரத்தயங்கும் அல்லது வர முடியாமல் போகும் குழந்தைகள். இறந்த பின்பு கூட இரண்டு நாட்கள் கழித்து வரும் குழந்தைகள், துணையை இழந்து தன்னந்தனியாக வீட்டில் என்ன செய்வது என்று தெரியாமல் தெருவில் பொழுதை போக்கும் பெரியவர்கள் என இவர்களை பார்க்கும் பொழுது ஒரு கணம் மிகவும் திகிலாக இருக்கிறது. ஒருவரின் வாழ்க்கை இப்படித்தான் செல்லும் என்பது சுற்றி இருக்கும் இந்தப் பெரும்பான்மையானவர்களை கவனிக்கும் பொழுதே தெரிந்து இந்த டெம்ப்லேட் வாழ்க்கையின் மொத்த சுழற்சியும் அத்துபடியாகிவிட்டது. அசுவாரஸ்யமானதொன்று.
நற்செய்திகளை விட இந்த கெட்ட செய்திகள் பல மடங்கு வேகத்தில் காட்டுத்தீ போல் பரவுகின்றன. இந்த அதீத குப்பைகளால் ஒரு நெகட்டிவிட்டி சூழ்கிறது என்று தெரியாமலேயே மனம் சோர்ந்துவிடுகிறது. நேரடியாகத் தொடர்பில்லை என்றாலும் புத்தனின் 'அத்தனைக்கும் சாட்சியாயிரு' என்பது இங்கு மிகவும் கடினமாக இருக்கிறது.
அன்று ரயில் பேசின் பிரிட்ஜ் தாண்டியபோது அவர் கொடுத்த அறிவுரை தான். 'உங்களுக்கான விஷயம் என்றால் அதுவே தானாக உங்களை வந்தடைந்து விடும். விழிப்போடு அதை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். மற்றபடிக்கு இந்த குப்பைகளுக்கு உங்களுடைய மனதிலும் மூளையிலும் இடம் கொடுத்து வீணடிக்காதீர்கள்' என்றார்.
நூற்றுக்கு நூறு சதவீதம் சரி. இந்த குப்பைகளில் இருந்து விலகி நடக்கும் போராட்டத்தினூடே தான் இந்த அழகான வாழ்க்கையைத் தேடி பயணிக்க வேண்டிருக்கிறது. இன்று கிடைக்கும் இந்த நொடியும், சூழலும் நாளை அமையுமா என்பது தெரியாது.
ஆதிலினால், நேர்மறை எண்ணங்களோடு ஒவ்வொரு நொடியையும் ஆசை தீர கொண்டாடி வாழ வேண்டிதான்.
லீடர்
லெஜெண்ட் சரவணனின் .இரண்டாவது படம். லெஜெண்ட் படத்தில் அவரது தோற்றம் மிகவும் கேலிக்குள்ளாக்கப்பட்டது.
லீடரில் அதை சரி செய்திருக்கிறார்கள். அது மட்டும் தானா? படத்தின் இறுதி வரை எந்த ஒரு காட்சியும் சலிக்கவில்லை. சொல்லப்போனால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லை. காட்சிகள் குதித்தோடுகின்றன. சரவணன் subtle ஆக நடித்திருக்கிறார். ஓவர் ஆக்டிங் கிடையாது. ஆதலால் அவரது நடிப்பில் குறையேதும் இல்லை. ஆக்ஷன் காட்சியில் தூள் கிளப்பியிருக்கிறார்.
வெளிநாடு காட்சிகள், ட்ரெயின் சண்டை காட்சிகள் எல்லாம் பரபரவென்று ஓடுகின்றன. செண்டிமெண்ட் காட்சிகளும் உறுத்தாமல் எடுத்திருக்கிறார்கள். இண்டெர்வெலில் சோகமாகும் ரசிகர்களை, க்ளைமேக்ஸ் காட்சி மீட்டெடுத்துவிடுகிறது. பின்னணி இசை, ஒளிப்பதிவு, நடிகர்கள், சண்டைக்காட்சிகள், எடிட்டிங், திரைக்கதை என எல்லா ஏரியாவிலும் சொல்லி அடித்திருக்கிறார்கள். ஒரு பக்காவான மாஸ் கமெர்சியல் சினிமா. கேப்டன் ஆப் தி ஷிப்பாக துரை செந்தில்குமார் ஜெயித்திருக்கிறார். எதிர்நீச்சல், கொடி, பட்டாசு, கருடன், காக்கிச்சட்டை இயக்குனர்)
குடும்பத்துடன் தாராளமாக தியேட்டரில் கண்டுகளிக்கலாம். #leadermovie #LegendSaravanan
நீளிரா
ஒரு மணி நேரம் இருபது நிமிடங்கள் தான் படத்தின் நீளம். ஆனால் அதன் தாக்கம் ஒரு முழு நீளப் படத்தை விட அதிகம். அடுத்த நாள் திருமண நிகழ்வுக்காக ஒரு ஈழத் தமிழ் குடும்பம் தயாராகிக்கொண்டிருக்கிறது. அந்த இரவில், இந்தியாவின் ஒரு ராணுவக்குழு அந்த வீட்டில் பதுங்கிக் கொள்ள வருகிறது. அந்த ஓர் இரவு தான் படம். IPKF (இந்திய அமைதிப் படை) அத்துமீறி வீட்டிற்குள் நுழைய முயற்சிக்கிறார்கள். அப்போது பெண்கள் தாங்கள் அணிந்திருக்கும் உடைக்கு மேல் ஆண்களின் சட்டைகளை அணியும் அந்த ஒரு காட்சி, ஈழத் தமிழிர்களின் அன்றைய போர்க்கால அவல நிலையை முழுவதுமாக பறைசாற்றி விடுகிறது.
படம் முழுக்க அந்த ஒரு வீடுதான். அலுப்பில்லாமல் இறுதி காட்சி வரை திக் திக் என நகர்கிறது. காட்சிகளின் தாக்கம் உணர்ந்து பின்னணி இசை மூலம் நம்மிடம் பதைபதைப்பைக் கடத்தியிருக்கிறார் இசையமைப்பாளர் கிரிஷ்ணக்குமார். ரத்தம் தெரிக்காமல், ஆபாசமில்லாமல் உண்மைக்கு நெருக்கமாக கதை எழுதி காட்சிபடுத்தியுள்ளார் இயக்குனர் சோமீதரன்.
#Neelira
தாய் கிழவி
மிகக் கவனமாகத்தான் காசு போடுகிறார்கள். நடிகர்களைக் கூறுகிறேன். வேறு ஒருவர் தயாரிப்பில் நடிக்கும்போது இந்த அளவுக்கு சிரத்தை எடுப்பது போல் தெரியவில்லை. சொந்தத் தயாரிப்பு எனும்போது கதை, இசை, நடிகர்கள் என அனைத்துமே அம்சமாக உட்கார்ந்துவிடுவது, அதுவும் கையடக்கமான பட்ஜெட்டில் என்பது அதிசயம் தான்.
தாய் கிழவி எப்படி இருக்கிறது?
வட்டிக்கு விட்டு பிழைப்பை நடத்தும் பவுனுத்தாயி சாகக் கிடக்கிறார். திடீரெனே அவர் 160 பவுனுக்கு சொந்தக்காரர் எனத் தெரியவருகிறது. அதன் பிறகு அவரை காப்பாற்றத் துடிக்கும் களேபரமே தாய் கிழவி. பவுனுத்தாயாக ராதிகா. இந்தக் கதாபாத்திரத்தில் வேறு ஒருவரை யோசிப்பது சிரமம் தான்.
பிராஸ்தடிக் மேக்கப்புடன் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். இரண்டு மணி நேரப் படத்தில் வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே வருகிறார். ஆனாலும், அந்த 20 நிமிடமும் சரவெடி தான். பவுனுத்தாயின் மகன்களாக பாலசரவணன், சிங்கம்புலி மற்றும் அருள்தாஸ். கோல்ட் குமாராக இளவரசு, மகளாக ரேச்செல், மூன்று மருமகள்கள், மருமகன் முத்துக்குமார், பென்னி குயிக் முனீஸ்காந்த், டாக்டர் ஜார்ஜ் மரியான் என அனைவருமே பாத்திரம் அறிந்து பிரமாதமான நடிப்பை நல்கியிருக்கிறார்கள்.
பாலசரவணனின் பூமாலை கட்டும் காட்சி கலகலப்பு. தாய்கிழவியின் பேரன் கவனிக்க வைக்கிறார். கருப்பு கோவில் அணையா விளக்கு காட்சிகள், கங்காரு அடிகளார் சாமிகள் என அதகளம். நிவாஸ் கே பிரசன்னாவின் இசை படத்திற்கு பக்கபலம். காமெடி காட்சிகள், எமோஷன், நையாண்டி என பின்னணி இசையில் பெரும் பங்காற்றியிருக்கிறது. கதையோட்டத்தினூடே வரும் பாடல்கள் மிகவும் உயிர்ப்பு. மேலும், ஆங்காங்கே ஒலிக்கும் கமலின் திரைப்படப் பாடல்கள் ஒரு கதாப்பத்திரமாகவே வருவது புதுமை மற்றும் சிறப்பு. மரணப்படுக்கையில் இருக்கும் தாய் கிழவியை சுற்றித் தான் கதை என்றாலும், காட்சிகள் ரிப்பீட் மோடில் வருவது சற்று சலிப்பைத் தட்டுகிறது. எடிட்டர் லோகேஷ் இங்கு தயவு பார்க்காமல் கத்தரித்திருக்கலாம்.
படம் முழுக்க டார்க் ஹியூமர் தான் என்றாலும், அதனூடே அலுப்புத் தட்டாமல் வாழ்க்கைப் பாடமும் எடுத்துள்ளார் இயக்குனர் சிவகுமார் முருகேசன். நடுரோட்டில் நடக்கும் ஆம்புலென்ஸ் வெண்டிலேட்டர் காட்சி, சுருளியை வளர்த்த விதம், அதை சுருளியே மருமகள்களுக்கு புரியவைத்த இடம், பவுனுத்தாயின் பல்லாங்குழி விளையாட்டு காட்சிகள் எனப் பூமாலையில் இடையிடையே கட்டப்பட்டிருக்கும் மரிக்கொழுந்து வாசம் போல படத்தின் பேசுபொருளாக மணக்கின்றன. ‘காசு இல்லையென எந்தப்பெற்றோரும் குழந்தையைக் கைவிடுவதில்லை. ஆனால் பெற்றோரின் நிலைமை அதுபோல இல்லை’ போன்ற வசனங்கள் சிந்திக்கவைக்கின்றன. என்னதான் இறுதிக்காலத்தில் கூடவே இருந்து கவனித்துக் கொண்டாலும், இறுதியாகப் படுக்கையில் இழுத்துக்கொண்டிருக்கும் அம்மாவை அப்படியே விடுவதா அல்லது காப்பாற்றுவதா என எந்த முடிவும் எடுக்க முடியாத கையறு நிலையில் தான் சகோதரனோடு பிறந்த மகள்கள் இருக்கிறார்கள் எனும் உண்மையை நுட்பமாக பேசியிருக்கிறது சுருளி கதாபாத்திரம்.
படபடவென இறுதியில் எடுக்கப்படும் முடிவுகளில் பவுனுத்தாயி மிகக் கம்பீரமாகத் தெரிகிறார். பெண் சுதந்திரம், சுய மரியாதை என நெருடலில்லாத வசனங்கள் பளிச். யாரும் தூக்கிவிட இல்லாத அநாதரவான நேரத்தில், சேலையை வரிந்து கட்டிக்கொண்டு, கவிழ்ந்து கொண்டிருக்கும் குடும்பத்தை இழுத்துப் பிடித்து ஒரு நல்ல நிலையில் கொண்டு வந்து நிப்பாட்டிய உங்கள் பாட்டியின் கதைதான் இந்த தாய்கிழவி குடும்பத்துடன் சிரித்து மகிழவேண்டிய படம்.
#ThaaiKizhavi #sivakarthikeyan #SivakumarMurugesan #RadhikaSarathkumar #NivasKPrasanna
அவதார் பயர் அண்ட் ஆஷ்
முதல் பாகம் வந்தபொழுது ஒரு புது உலகத்தை ஜேம்ஸ் கேமரூன் படைத்திருந்தார். பத்து அடி உயர மனிதர்கள், நீல நிற உடல், அவர்களை சுமந்து செல்லும் பறவைகள் என 3டி இல் பார்ப்பது பரவசமாயிருந்தது. இரண்டாவது பாகத்தில் கடல் சார்ந்த காட்சிகள் புதுமையாக இருந்தன. அதைத்தாண்டி மற்றவை ஈர்க்கவில்லை. இப்பொழுது இன்னும் பாதகம். எந்த ஒரு புதுமையும் இல்லை. எல்லாமே பழையது. பார்த்து சலித்தது. 'வா மாப்பிளை. ஒரு டீ அடிச்சிட்டு வருவோம்' என்கிற ரீதியில் சண்டை போடுகிறார்கள். ரெட் டாக்சி புக் செய்து போவது போல் அந்த பறவைகளை பிடித்து எல்லா இடமும் பறந்து, ரிப்பீட் மோடில் காட்சிகள் நம்மை கழுத்தறுக்கின்றன.
மூன்று மணி நேரத்திற்கு மேலாக படம் ஓடுகிறது. தவிர பல வருடங்கள் கழித்து மூன்றாம் பாகம் என்பதால் முதல் இரண்டு பாகத்தில் நடந்தவை ஞாபகத்தில் இல்லை. 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் கடந்த வாரம் என்று ரீகேப் போடுவது போல் செய்திருக்கலாம். 3டி கண்ணாடி வேறு இம்சிக்கிறது. அதற்கு தனியாக 30 ரூபாய் தெண்டம்.
2029 மற்றும் 2031 இல் நான்கு மற்றும் ஐந்தாம் பாகம் வர இருக்கிறதாம். சோதிக்காதீங்க கேமரூன்.
#AvatarFireAndAsh #AvatarFireAndAsh
டீசல் 2025
படத்தை 2023ல முடிச்சுட்டாங்க. யாரு கண்ணு பட்டுச்சோ படம் பொட்டிக்குலேயே ரெம்ப நாள் கடந்துருக்கு. ரெண்டு வருஷம் கழிச்சி 2025ல ரிலீஸ் பண்ணிருக்காங்க. பொட்டிக்குள்ளேயே இருந்துருக்கலாம்.
க்ரூட் ஆயில் கொண்டு போறதுக்காக கடற்கரை ஓரமா ஒரு ராட்சச பைப் லைன் போடுறாங்க. அங்க இருக்குற மீனவர்களுக்கு இது பிரச்சினையா இருக்கு. தங்களோட வாழ்வாதாரம் பாதிக்குதுனு இந்த பைப்ல கையை வச்சி க்ரூட் ஆயில் திருடி இவங்களே லாரி புடிச்சி மும்பைக்கு அனுப்பி அதை சுத்திகரிச்சி ரிட்டர்ன் சென்னைக்கு கூட்டியாந்து பங்குல ரொப்பிடுறாங்க. எப்படி தலை சுத்துதா? இதுக்கே இப்டினா? இந்த க்ரூட் ஆயில் ப்ரியர்களுக்குள்ள கேங் வார் வருது. அதுல DSP வினய் மேல நம்ம தம்பி ஹரிஷ் கையை வச்சிடுறாரு. அவர போடறதுக்கு ஊரு முழுக்க தேடுறாங்க.
ஆனா தம்பி 'இடியாப்பம் இடியாப்பம்'னு விக்கிற மாதிரி தெருத்தெருவா சுத்துறாரு. நடுவுல கோர்ட்டுக்கு வந்து 'hollow man' மாதிரி யார் கண்ணுக்கும் தெரியாம ஒரு பைட் வேற. ஆனா போலீஸ் கண்ணுல படமாட்டேங்குறாரு. திருப்பியும் கடல்ல ஹைட் அவுட். வெயிட் வெயிட். இப்போவே டயர்ட் ஆனா எப்படி? இந்த க்ரூட் ஆயிலை எதிர் கும்பல் திருடி பதுக்கி வச்சிருவாங்க. எவ்ளோ. 2 கோடி லிட்டர். எங்க அப்டினா பக்கத்துல குடிதண்ணிக்கு போடுற பைப்ல. அங்க தண்ணி விடலையாம். அதனால அங்க ஒளிச்சு வச்சிருவாங்க. இதன் காரணமா பெட்ரோல் இல்லாம சென்னையே ஸ்தம்பிக்குது. சென்டர்ல ப்ரெஷர். பூரா பயலுவளும் தேடுறாங்க. இப்போ நம்ம தம்பி தைரியமா வெளில வந்து 'எனக்கு இந்த க்ரூட் ஆயில் இருக்குற இடம் தெரியும்'னு உதார் விடுறாரு. போதாக்குறைக்கு
இவரு பொளந்த DSP தான் இவருக்கு ப்ரொடெக்ஷன் கொடுக்கணுமாம். எப்படி? இன்னும் முடியலை. 'எங்க நைனாவை வெளில கொண்டு வா. இடத்தை காமிக்குறேன்'னு கண்டிஷன் போட, அவங்க இவரு நைனாவை வெளில விட, புல்லிங்கோ நைனாவை போட்ருவாங்க. இதுக்கு அவரு உள்ளையே இருந்துருக்கலாம். இப்போ தான் ஹைலைட்டே. இவரு அந்த பைப்ல பதுக்கி வச்சிருந்த க்ரூட் ஆயில் ஒரே ராத்திரில பேரேல்ல மாத்தி (சைன்டிஸ்ட் காளி வெங்கட் உதவி) மீனவர்கள் படகு மூலமா கடலுக்கு கொண்டு போய், ஜனம் எல்லாத்தையும் கூட்டி படகைல்லாம் ஹார்பர் ரூட்டை ப்ளாக் பண்ண வச்சி, எந்த ஒரு கப்பலையும் வர விடாம ஸ்டேட், நேஷனல், இன்டர்நெஷனல் பிரச்சினையா மாத்தி, 'ஓகே ஓகே பைப்பை தூக்குறோம்'னு ஒத்துக்குறாங்க. அப்பப்பா. ஒரு 2000 கோடி பட்ஜட் படம் சாமி இது. 12 கோடில முடிச்சிட்டாங்க. அதான் ப்ராபளம்.
ஹீரோயின். அதுல்யாரவி. 'கனவுல கடல் கன்னி வருது. ஹரிஷோட அம்மா தான் அதுனு' அது ஒரு பக்கம் பினாத்திக்கிட்டு. 'எம்மா. நீங்கதான் ஹீரோயின். தம்பி எங்கெல்லாம் போகுதோ அங்கெல்லாம் ஒன் சைட் ஷால் போட்டுட்டு அங்கிட்டும் இங்கிட்டும் நடங்க. அப்பப்போ அழுவனும்னு சொல்லிருப்பாங்க போல. இந்த வருட தேசிய விருது நிச்சயம். காமெடி கேரக்டர் ரோல் பண்ணிட்ருந்த விவேக் பிரசன்னாவை இங்க வில்லனாக்கிருக்காங்க. வாய் முழுக்க சோறை திணிச்சு வச்சா எப்படி இருக்குமோ அது மாதிரி படம் முழுக்க ஒரு தினுசா முழிச்சிட்டே வராரு. செம டெரருங்க. இரண்டாவது தேசிய விருது. அப்பாவியா ஊருக்கே நல்லது செஞ்சிடிருக்குற கேரக்டரை பிடிச்சி கொடூரமா கொல்லுவாங்கல்ல. அது மாதிரி இதுல ரமேஷ் திலக்கை க்ரூட் ஆயில்ல முக்கியே கொன்றுவாங்க. பழி வாங்குறேன்னு விவேக் பிரசன்னாவை ஹரிஷ் தம்பி இப்டி தான் சாகடிப்பாரு.
டைரெக்டரு நம்மளை அதே மாதிரி கொல்றாரு. ஆக மொத்தம் இது டீசல் இல்லை. க்ரூட் ஆயில்.
#dieselmovie #HarishKalyan #athulyaravi
ஓஹோ எந்தன் பேபி
எவ்ளோ நாள் தான் கொலை, கொள்ளை, மர்டர், அடி தடி படமா பாத்துட்டே இருக்கிறது.
ஒரு நல்ல லவ் ஸ்டோரியா பீல் குட் படம் இருக்கானு கேட்ட இதோ 'ஓஹோ எந்தன் பேபி'.
பைவ் ஸ்டார் கிருஷ்ணா டைரக்ட் பண்ணிருக்குற முதல் படம். அத்தனை படங்கள் நடிச்சிட்டு தன் கிட்ட இருக்கிற அந்த டெரெக்டர் ஆசையை இந்த படம் மூலமா தீர்த்துக்கிட்டார்னு தான் சொல்லணும். இதுக்கு முன்னாடி மாடர்ன் லவ் சென்னை வெப் தொடர்ல 'காதல் என்பது கண்ணுல ஹார்ட்டுல வர ஒரு எமோஜி' எபிசோட். எடுத்துருக்கார். அதுவும் துள்ளலான லவ் ஸ்டோரி தான். அதே போல ஓஹோ எந்தன் பேபி படமும் பாக்குறதுக்கு நல்லாருக்கு. சிம்பிளா எந்த ஒரு குழப்பமும் இல்லாத லவ் ஸ்டோரி. பாக்குறாங்க. பேசுறாங்க. பழகுறாங்க. கோவத்துல பிரிஞ்சிடுறாங்க. அப்புறம் ஒரு கட்டத்துல சேந்துடுறாங்க. அவ்ளோதான்.
காதலர்களும் புதுசு. காட்சிகளும் புதுசு. ருத்ரா, மராத்தி பொண்ணு மிதிலா, விஷ்ணு விஷால், மிஸ்கின், கஸ்தூரி, ரெடின் கிங்ஸ்லி, கருணாகரன், பாலாஜி சக்திவேல் இவங்க எல்லாரோட சேர்த்து 'நீங்கள் கேட்ட பாடல்' விஜயசாரதினு ஒரு பெரிய பட்டாளம் இருக்குது. எல்லோருக்கும் அழகா அளவா ஒரு ஸ்பேஸ். ரெண்டு மூணு லிப் கிஸ் உண்டு. டிஸ்க்ளைமர் சொல்லிடறேன். ம்யூசிக்லேந்து ஒளிப்பதிவு, கதை, திரைக்கதை கேஸ்டிங்னு எல்லாமே குட். ரைட்டிங் மட்டும் தனியா ரெண்டு பேர் பண்ணிருக்காங்க. முகேஷ் மஞ்சுநாத் மற்றும் ஷாரதா ராமநாதன். தமிழ் சினிமாவுக்கு இது ஒரு நல்ல விஷயம்.
நெட்பிளிக்ஸ்ல ரிலீஸ் ஆகிருக்குற இந்த ரொமேன்டிக் லவ் ஸ்டோரிக்கு தாராளமா ஒரு ஹாய் சொல்லலாம்.
#OhoEnthanBaby #mithilapalkar #VishnuVishal @[1824306148:2048:Krishnakumar Ramakumar] Sharada Ramanathan