வெளியே செல்லும் நேரங்களில் அவ்வப்போது தென்படும் வீடற்ற வயோதிக மனிதர்களின் முகங்களை பார்க்கும் பொழுதெல்லாம், 'என்ன காரணத்திற்காக இவர் இங்கு அநாதரவாக நிற்கிறார்?, சொந்த பந்தங்கள் இல்லையா? வீடு எங்கே? வீட்டில் இருந்து குடும்பத்தினரால் விரட்டிவிடப்பட்டவரா?, பிசினசில் தோல்வி, முன்கோபம், பகை, ஏதேனும் குற்றம் புரிந்தவரா? குடி நோயாளியா? நம்பிக்கை துரோகத்தால் ஏமாற்றப்பட்டவரா? அல்லது அவர் தலையெழுத்தே அப்படியா? என ஒரு ஆயுள் முழுவத்துக்குமான கேள்விகளையும் வருத்தங்களையும் எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு வித பயத்தையும் உண்டு பண்ணிவிடுகின்றன.
மொபிலிட்டி முதல் காரணம். ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும் பொழுது முதியவர்களால் வேகமாக அலல்து மூவ் செய்வது என்பதே ஒரு ஹெர்குலியன் டாஸ்க். அனைவருக்கும் ஈடு கொடுத்து நடப்பதே சிரமம். அதனாலேயே பல முதியவர்கள் சுற்றுலாக்களை தவிர்த்து விடுவதுண்டு.
உணவு ஒவ்வாமை அல்லது செரிமானம் மற்றொரு காரணம். எல்லா நேரங்களிலும் கிடைப்பதையெல்லாம் அரவை மெஷின் போல் தின்று கொண்டிருக்க முடியாது. கிட்ஸ் பிரெண்ட்லி நூடுல்ஸ் கூட போகுமிடமெல்லாம் கிடைத்துவிடுகிறது. ஆனால் ஓல்ட் ஏஜ் பிரெண்ட்லி இட்லி, இடியாப்பம் ஆவியில் வேக வைத்த உணவுகள் கிடைப்பது குதிரைக்கொம்பு தான். பரோட்டா பரவிய அளவுக்கு இட்லி கிடைப்பதில்லை.
உடல் நலம் மற்றும் நோயின்மை என்பது மற்றொரு பிரதான காரணம். படித்து முடித்து வேலை பார்க்கும் போது சற்று ஓய்வெடுக்கலாம் என்று மாங்கு மாங்கென்று படித்து வாழ்க்கையின் அடுத்த கட்டமான வேலைக்கு நகரும்போது தான் 'ஒய்வு என்பது கல்லறையில் தான்' என்கிற அந்த உண்மை சுடும். அது உரைக்கும் நேரத்தில் குடும்ப என்கிற ஒரு கட்டுக்குள் இருப்போம். தான் தோன்றித்தனமான முடிவெல்லாம் எடுக்க முடியாது. நம்மைச் சுற்றி நான்கு ஜீவன்கள். வெக்கம், அவமானம் தோல்வி போன்ற பல நெகட்டிவ் உணர்வுகளை சகித்து ஒய்வு பெரும் நாளை எதிர்நோக்கி காத்திருப்போம். உடல் என்ன மெஷினா? இத்தனை நாள் இழுத்த இழுபறிக்கெல்லாம் தேய்மானம் ஏற்பட்டு பல உடல் உபாதைகள் கொஞ்சம் கொஞ்சமாக நம்மை எட்டிப்பார்க்கும். வேலைக்கு ஓடும் வேகத்தில் உடல் தரும் அறிகுறிகளை அலட்சியப்படுத்தியிருப்போம். நாள்பட்ட நோய்கள் உடலை பதம் பார்த்து கொண்டிருக்கும்.
இறுதியாக பணப் பற்றாக்குறை அதிமுக்கியமான ஒரு காரணம். எல்லாமே குழந்தைகளுக்கென்று கிஞ்சித்தும் யோசிக்காமல் வரவுக்கு மீறி எடுத்து வாரிச் செலவு செய்துவிட்டு, முதுமை வரும் பட்சத்தில் அவர்களை நாடி நிற்கும் நிர்கதி யாருமே எதிர்பார்க்காத மற்றும் விரும்பாத ஒன்று. சொந்தமாக ஒரு வீடாவது வாங்கி விட மாட்டோமா?, குழந்தைகளை நல்ல கல்லூரியில் படிக்க வைத்து விடமாட்டோமா? ஒரு தொழில் அமைத்து கொடுத்து வாரிசை ஒரு முதலாளியாக பார்த்து விடலாம் என எண்ணற்ற லட்சியங்களில் தங்களது இளமையையும், செல்வத்தையும் தொலைத்தவர்களின் மிச்சம் இருக்கும் சுய மரியாதையை காப்பாற்றும் ஒரு சிறு தொகையே இந்த ஓய்வூதியம். அரசாங்கத்தில் வேலை பார்ப்பவரைத் தவிர எல்லோருக்கும் ஓய்வூதியம் கிடைத்துவிடுவதில்லை. அதுவும் 2004க்கு பிறகு சேர்ந்தோருக்கு அந்த ஓய்வூதியமும் கிடைக்காது. வேலை பார்க்கும் பொழுதே ஓய்வு காலத்திற்கு திட்டமிட வேண்டும்.
நேரம், பணம் மற்றும் உடல் நலம் இந்த மூன்றுமே ஒருவருக்கு ஒருசேர கிடைத்துவிடுவதில்லை. இளமையில் கிடைக்கும் பணத்தையும் உடல்நலத்தையும் விரயம் செய்து முதுமை பருவத்துக்கு வந்திருப்போம். அப்பொழுது, ஒன்று பணம் கையில் இருக்காது. அல்லது உடல் நலம் இருக்காது. இழந்ததை எண்ணி துக்கப்பட அல்லது கிடைத்ததை நினைத்து கவலைப்பட செழிப்பாக நேரம் மட்டும் கிடைக்கும். கண்ணீர் அல்லது உதட்டோரம் பூக்கும் மென்சிரிப்பு இலவசம்.
பஸ் ஸ்டாப்பில், டைனோசர் போல் பெரிதாக இருக்கும் மேம்பாலத்திற்கு அடியில் ஒரே ஒரு கட்டைப்பையை தலைக்கு வைத்துக் கொண்டு தூங்கும் வயோதிகர்கள் க்ஷண நேரத்தில் பல சிந்தனைகளைத் தூண்டி விடுகிறார்கள். எழுபது வயதில் குச்சி ஊன்றி தள்ளாடி நடந்து வந்து ஒரு வயோதிகப் பெண்மணி யாசகம் கேட்டது இன்னும் நெஞ்சை விட்டு அகலவில்லை. யாசகம் கேக்கும் அந்த கை எத்தனை பேருக்கு அன்னமிட்டிருக்கும்? அதில் ஒருவர் கூடவா இவருக்கு இல்லை?
உறவினர் ஒருவருக்கு டெய்லி நர்ஸ் தேவைப்பட்ட சமயத்தில் அதுகுறித்து விசாரிக்க ஒரு ஹோமிற்கு சென்றிருந்தோம். இரண்டு மூன்று ரூம்களில் பெரியவர்கள் தங்கியிருந்தார்கள். ஒருவருக்கு நூறு வயது. ஹைகோர்ட் ஜட்ஜ். ஒரு பெட்டில் இரண்டு கைகளும் இரண்டு கால்களும் விரிந்து அகோரமாக படுத்துக்கிடந்தார். இல்லை படுக்கவைக்கப்பட்டிருந்தார். நிலை குத்திய பார்வை மேனோக்கி இருந்தது. அவரது வாரிசுகள் வெளிநாட்டில். இவருக்கு மாதா மாதம் பராமரிப்பு தொகை வந்துவிடுகிறது. மக்கள் வருவதில்லை. வீடியோ கால் தான். கைகளும் காலும் ஒத்துழைக்காத அந்த வயதில் அவரது மனம் எதை அசை போட்டுக்கொண்டிருக்கும்? சிறு குழந்தையில் ஓடி ஆடியதையா? வேலைக்கு சென்று முதல் சம்பளம் வாங்கிய நாட்களையா? திருமணம் முடிந்து புதுப்பெண்ணுடன் சுற்றுலா சென்றதையா? பேர் சொல்லும் வாரிசு என்று தற்போது வெளிநாட்டில் இருக்கும் குழந்தைகளைக் கொஞ்சியதையா? பெற்றோரையா? நண்பர்களையா? தன்னை நட்ட நடுவில் விட்டுச்சென்ற மனைவியையா? எதை யோசித்துக்கொண்டிருப்பார்? இரு கண்களின் ஓரம் நீர் ஓடிக்கொண்டிருந்தது. ஒரு நிமிடம் கூட நின்று பார்க்க முடியவில்லை.
கொடிதினும் கொடிது இந்த முதுமையில் தனிமை. என் முடிவு இதில் எதைச்சேரும் என்று எண்ணும்பொழுது தான்...
ஆனால், ஆனால் ஒன்று மட்டும் உண்மை. ஒரு போட்டோவையோ, மனிதரையோ, ஞாபகங்களையோ திருப்பி பார்க்கும் நேரங்களில், இந்த வாழ்க்கையை இந்த தருணத்தை இன்னும் நன்றாக வாழ்ந்திருக்கலாமோ என்று ஒரு எண்ணம் யவருக்குமே தலை தூக்காமல் இருந்ததில்லை.
இந்த தருணத்தை மிஸ் செய்துவிட்டோம் என்று நாம் நாளை வருத்தப்படக்கூடிய அந்த கணம், இன்று நம் கையில் ப்ரெசன்ட்டாக இருக்கிறது என்பதை நினைவில் கொள்வோம்.
ஶ்ரீருத்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக