அளவாய் உண்டு தேவைக்கேற்ப உறங்கி எழும் உடல் சார்ந்த ஒழுக்கம் கூட ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால் அகத்தூய்மை. மனதிற்கான ஒழுக்கம்?
ஐந்து வயது முதல் இருபது வயது வரை வீட்டில் இருக்கும் நேரத்தை விட, நாம் வெளியில் இருக்கும் நேரம் மற்றும் பழகும் மனிதர்கள் எண்ணிக்கை கணக்கிலே அடங்காது. சில பாசிங் க்ளவுட்ஸ் போல். அவ்வப்போதைக்கு இருக்கும். பின்பு மறைந்துவிடும். சில நாடன் காடன் போல் இறுதிவரை ஒட்டி நிற்கும்.
நன்மக்களுடனான சேர்க்கை எவ்வளவு முக்கியமோ அதைவிட அதி முக்கியம் எவர் எவருடன் சேரக்கூடாது என்பதும். கூட படித்த எத்தனையோ நண்பர்கள் ஒரு கட்டத்தில் தடம் மாறி விலகிச் செல்வதை கவனித்திருக்கிறேன். முன்பெல்லாம், அதாவது பள்ளியில் பயிலும் பருவத்தில், சிகரெட், பீர், கொஞ்சம் தாதாயிசம் போன்றவை படிப்பிற்கு, ஒழுக்கத்திற்கு கேடு விளைவிப்பவையாக இருந்தது. ஆனால், இப்பொழுதெல்லாம் எல்லாவற்றையும் தாண்டி போதை வஸ்துக்கள் மெல்ல மெல்ல வேரூன்ற ஆரம்பித்துவிட்டன. கண் முன்னேயே பல இளம் சிறார்கள் கெட்டொழிவதை பார்க்க முடிகிறது. அதட்டி அடக்க முடிவதில்லை. போதை தலைக்கேறி கத்தியை காட்டி மிரட்டுகிறார்கள். கொலையும் செய்யத் தயங்குவதில்லை. தடம் மாறும் இளைய சமுதாயத்தை திருத்துவதா? சமூக விரோதிகளை எதிர்ப்பதா? அல்லது அதிகாரத்தை பகைத்துக் கொள்வதா? என்று காவல் துறையே குழம்பி திகைத்து நிற்கிறது.
நல்ல வேளையாக பால்யத்தில் சேர்க்கை ஒழுங்காக அமைந்தது. இன்று வரையிலும் தொடர்கிறது. ஏதேனும் மனதிற்கு சந்தேகமாக நெருடலாக இருந்தால் கழுவிகிற நீரில் ஓடும் மீனைப் போல் விலகி ஓடி விடுவதும் இந்த நற்சேற்கைக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
நன்றாக நினைவிருக்கின்றது. பாளை தூய யோவான் மேனிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு படிக்கும் வரையில் இன்டெர்வல் அல்லது ரீசஸ் பீரியடில் கிடைக்கும் பத்து நிமிடங்கள் ஜோசப் மேத்யூவுடன் நேரம் போக்குவேன். கெமிஸ்ட்ரியில் புரியாத ஆர்கானிக் பார்முலா மற்றும் இன்டெக்ரல் கேல்குலஸ் போன்ற இத்யாதிகளின் டென்ஷனிலிருந்து அந்த பத்து நிமிடம் ஒரு பெரிய வடிகாலாக இருக்கும். PET பீரியடில் பிரிஜித் பாலா மற்றும் சுப்பையாவுடன் ஒரு நெடு நடை. மற்றவர்கள் எல்லாம் ஏதேனும் விளையாடிக்கொண்டிருக்க க்ரவுண்டின் கடைக்கோடியில் இருக்கும் கடைக்குச் சென்று அந்த வாரத்தில் சேர்த்த ஐம்பது பைசா அல்லது இரண்டு ரூபாய்க்கு அப்பளப்பூ வத்தல் அல்லது ஜவ்வு மிட்டாய் வாங்குவோம். அதுதான் அந்த வாரத்தின் மிகப்பெரிய சந்தோசம்.
சோமா ராகுல் பாலமுருகன் சீதாராமானுடனான மதிய நேர வேப்ப மர உணவு இடைவேளை இன்றுவரை ரம்மியமாயிருக்கிறது. அதிகபட்சம் கில்லி விஜய் தில் விக்ரம் அவ்வளவுதான் பேச்சு நீளும். அதைத் தாண்டினால் படிப்பு தான். ஆரோக்கியமான போட்டி ஒன்று நிலவியது.
ஸ்கூல் செல்லுவதற்கு அன்புநகரிலிருந்து குறைந்த பட்சம் ஐந்து கிலோமீட்டர். திருச்செந்தூர் மீட்டர் காஜ் ரயில்வே தண்டவாளங்களில் சைக்கிளை அலேக்காக தூக்கி வைத்து உழவர் சந்தை தாண்டி மெயின் ரோட் பிடித்து பள்ளி செல்லுவதற்கு அரை மணி நேரம் ஆகிவிடும். சேம்சனுடன், ஜாபருடன், டேவிட்டுடன், சுதனுடன் கதைத்த கே டிவி சினிமாக்கள், சச்சின் செஞ்சுரி, சேவாக் அதிரடி, WWE படிஸ்டா ராக், அண்டர்டேக்கர் என பலவும் அந்த ஸ்கூல் செல்லும் வழி முழுவதும் இன்றும் கூட சிதறி கிடக்கும். தினமும் அந்த ஒரு மணி நேரம் அவர்கள் தயவில் உருண்டோடியது.
அன்பு நகர் காலனியில் வெளிச்சமின்றி கிடக்கும் குடிநீர் பம்ப் தொட்டி அடியில் கூடும் கூட்டத்தில் ஒரு நாளும் நின்றதில்லை. idle mind டெவில் workshop என்பது போல் குட்டிச்சுவர் பேச்சு என்றுமே உருப்பட்டதில்லை. இரண்டு மூன்று பேர் போலீசில் சிக்குமளவுக்கு போனது. செல்வா விநாயகர் கோவிலில் விளக்கு போட்ட நேரம் இந்த தொட்டி பேச்சிலிருந்து காப்பாற்றியது.
கல்லூரி காலத்தில் கூட பாண்டி மூர்த்தி சதீஷ் வல்லபன் இபு லக்ஷ்மன் தாஸ் அசன் ரமேஷ் என இன்னும் பலர். அத்தனை பேரில் ஒருவர் கூட எந்த தீய பழக்கமும் இல்லாதவர்கள். நினைக்காதவர்கள். இருபது வயதில் டிமோன் பும்பா பதிவிறக்கம் செய்து கொண்டிருந்தோம் என்றால் நம்ப முடிகிறதா. மாலை வந்தவுடன் போகோ சேனலில் அனிமேட்டட் பீன் சீரிஸ். காம்பவுண்ட் கிரிக்கட். கல்லூரி, நூலகம், வீடு என்று தன்னை அறியாமலையே கோடு கிழித்தாற் போல் ஓடிவிட்டது. எங்குமே தடம் மாறவில்லை. அது போன்ற சகாக்களும் அவனுருளால் உடனிருந்ததில்லை.
எதற்குச் சொல்கிறேன் என்றால் பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் கொண்ட பெற்றோர்கள் இந்த சேர்க்கையை உன்னிப்பாய் கவனிப்பது முக்கியம். நீங்கள் பிள்ளைகளை வைத்து ஒரு கனவு கோட்டை கட்டிக் கொண்டிருக்க, மறுபுறம் அங்கே திசை மாறும் காட்சிகள் அரங்கேறிக் கொண்டிருக்கும். முளையிலேயே கிள்ளி விடுதல் நலம். இருக்கும் வேலைகளுக்கிடையில் இதை எப்படி மேய்ப்பது என்று அங்கலாய்த்துக்கொள்ளாமல் கவனம் கொள்ளுதல் நலம்.
அவ்வப்போது நன்றியுணர்வுடன் நினைத்துக்கொள்வது உண்டு. உடல் நலம், மனநலம், தீங்கிழைக்கா எண்ணங்கள், நற்சிந்தனை, உதவும் எண்ணம் என இன்னும் எத்தனை எத்தனையோ நல்ல விஷயங்கள் நண்பர்களால் அவர்கள் அறியாமலேயே இத்தனை காலம் கற்று தரப்பட்டிருக்கிறது. இப்பொழுதும் கூட. இந்த சேர்க்கை தான் ஒரு நல்ல கல்லூரி மற்றும் வேலையில் அமர உதவியிருக்கிறது. மனைவியிடம் கனிவாய் விட்டுக்கொடுத்து போகச் சொல்லுகிறது. அடுத்த தலைமுறையான குழந்தைகளிடமும், முந்தைய தலைமுறையான பெற்றோரிடமும் தன் நிலை உணர்ந்து நடந்துகொள்ள வைக்கிறது. அதற்காக உள்ளுக்குள் அடியோடு மிருகம் இல்லை என்று கூறுவதற்கில்லை. ஆனால் அந்த மிருகம் கொன்று மனிதம் முளைக்க இந்த சேர்க்கை மிக மிக உதவியிருக்கிறது. அகண்ட இருளில் வழிநடத்தும் லாந்தர் போல.
நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக