ஞாயிறு, நவம்பர் 10, 2024

சதுரகிரி பயணம்

 

எப்படியும் ஆறு ஏழு வருடங்கள் இருக்கும். இன்று போகலாம் நாளை போகலாம் என்று திட்டமிடும் போதெல்லாம் நடந்தேறவில்லை. திடீரென்று ஒரு நாள். ஆன்மிகப்பயணம் எல்லாமே அப்படித்தானே. 

தாணிப்பாறை சென்றடைந்த போது மணி மதியம் பன்னிரண்டு. அந்த வளைவுக்கு அருகில் வாகனத்தை நிப்பாட்டிவிட்டு, கூட்டம் செல்லும் வழியில் நடக்க ஆரம்பித்தாயிற்று. அமாவாசைக்கு முதல் நாள். பௌர்ணமி அல்லது அமாவாசை அன்று கூட்டம் மிகுதியாக இருக்கும். ஒரு நாள் முன் என்பதால் அந்த அளவுக்கு இல்லை. சிதறலாகத்தான் மக்கள் இருந்தார்கள். எவ்வளவு தூரம் எத்தனை மணி நேரப் பயணம் என்றெல்லாம் தெரியாது. கிளம்பியாயிற்று. ஆரம்பத்தில் பெரிதாகத் தெரியவில்லை. போகப்போக பேஸ்மண்ட் வீக் ஆகிவிட்டது. இந்த ஆரம்பத்தில் மற்றும் போகபோகவுக்கும் இடைவேளை என்பது பத்து நிமிடம் தான். ஆமாம். ஏற ஆரம்பித்து பத்தே நிமிடத்தில் மூச்சு இறைக்க ஆரம்பித்து விட்டது. பிறகு இருபத்தைந்து முப்பது டிகிரி சாய்மானத்தில் நடந்து கொண்டே இருந்தால்? எதிர்வந்த ஒருவரிடம் கேட்டேன்?. 'பாஸ் இன்னும் எவ்ளோ தூரம்?'. இந்த கேள்வியை இடைக்கொருமுறை எதிர் வருபவர்களிடம் கேட்டுக்கொண்டே இருந்தேன். அத்தனை பெரும் சொல்லிவைத்தாற் போல் ஒரே பதிலை வேறு வேறு வார்த்தைகளில் கூறிக்கொண்டே சென்றார்கள். 'இந்தா கூப்பிடு தூரம் தான். இந்தா பக்கத்தில தான். கொஞ்ச தூரம் போன உடனே, அவ்ளோதான். கொஞ்சம் முன்னாடி போங்க'. இந்த கூப்பிடு தூரம் என்பது ஆரம்பித்த பத்தாவது நிமிடத்திலேயே பதிலாக வந்து விழுந்தது. ஆனால் போகபோகத்தான் தெரிந்தது. இவர்கள் மோட்டிவேட் செய்கிறார்கள் என்று. மொத்தப் பயண நேரம் நான்கரை மணி நேரம். பத்து கிலோமீட்டர். 

மேலே உயரே உச்சியிலே என்று இந்திரா சௌந்திரராஜன் நாவலின் தலைப்பு போல் மேலே உயரே உச்சியிலே உள்ள மகாலிங்க சுவாமி கோவிலுக்குச் சென்றடைந்த பொது மணி மாலை நான்கரை. கோவிலுக்குச் செல்லும் முன் ஒரு சிறு நீரோடை. ஆறு என்று கொள்ளலாம். ஆனால் தண்ணீர் அந்த அளவு ஓடவில்லை. கணுக்கால் அளவுக்கு இருந்தது. தண்டால் எடுப்பது போல் படுத்து எந்திரித்து குளித்து சென்றோம். 

திட்டமிட்டது என்னவோ, அன்று இரவு அங்கு தங்கி அதிகாலை சுந்தர மகாலிங்க ஸ்வாமிகள் தரிசனம் செய்வது என்பது தான். ஆனால் நாங்கள் சென்றடைந்த நேரம் கோவிலில் யாரும் இல்லை. அப்படியே சன்னதி முன் உட்கார்ந்து இரண்டு மூன்று அடி அருகிலேயே சுயம்பு லிங்க தரிசனம். எப்படியும் அரை மணி நேரம் இருக்கும். 

பிறகு அந்த வளாகத்தைச் சுற்றி பார்த்தோம். நெடிதுயர்ந்த ஆல மரம். சூலம். விநாயகர், அம்மன் போன்ற விக்கிரகங்கள். ஒரு நீரோடை. மாலை ஆறு மணி போல். இருள் கவியும் ரம்மியமான நேரம். ஒரு விதமான பரந்துபட்ட அனுபவத்தை மனதிற்குள் தந்து கொண்டிருந்தது. 

ஆனால், ஆனால்... அந்த ரம்மியமான சூழலை ரசிக்க முடியாத அளவுக்கு மனிதக் கழிவுகள் ஆங்காங்கே. சில இடங்களில் கீழே பார்க்க முடியவில்லை. கீழே பார்க்காமல் கால் வைக்க முடியவில்லை. அதுபோன்றதொரு நிலை. கழிவறைகள் இல்லாமலில்லை. பராமரிப்பு மற்றும் போதாக்குறை. அல்லது அந்த நேரங்களில் ரயில் மக்கள் சுதந்திரக்காற்றை சுவாசிக்க நினைக்கிறார்களா என்பது புரியவில்லை. இரவு அந்த மலையில் தங்கலாம் என்ற முடிவை மறுசிந்தனையின்றி மாற்றிக்கொண்டு கீழே இறங்கிவிடலாம் என்று தீர்மானித்துவிட்டோம். அருகிலேயே சில கடைகள். சுவாமி படங்கள். கிழங்கு சூப். உடல் வலி தெரியாமல் இருக்க அந்த சூப் ஒன்றை குடித்து விட்டு ஒரு சிறு டார்ச் வாங்கி கொண்டு இறங்க ஆரம்பித்தோம். மழை தூர ஆரம்பித்தது. மணி ஏழரை அல்லது எட்டு இருக்கலாம். 

கடைகளைத்தாண்டிய உடன் அந்த வெளிச்சம் மறைந்து கும்மிருட்டு. அப்படி ஒரு இருட்டு. அருகில் இருக்கும் ஆள் தெரியவில்லை. இதில் பாதையை எங்கு கண்டுபிடிக்க. கும்பலாக நடக்க வேண்டிதான். அதில் ஒருவர் வேகமாக நடக்க அவருடைய வேகத்துக்கு ஈடு கொடுத்து நடக்க ஆரம்பித்தோம். போகபோகத்தான் தெரிந்தது அவர் அங்கு அதிக முறை வந்து பழக்கமுள்ளவர் என்று. திருமங்கலத்துக்காரர். அரவணைத்து கூட்டிச்சென்றார். பாசக்கார பயலுவ தான்டே. இரண்டு மூன்று முறை அந்த கும்பலில் வந்தவர் சிலர் பின்தங்கிவிட நின்று காத்திருந்து கூட்டிச்சென்றார்.  

அந்த கும்மிருட்டு சொன்னேனல்லவா? கால் வாசி தூரம் கடந்திருப்போம். அதே இருட்டு. கையில் இருக்கும் டார்ச் தாவி வேற எந்த வெளிச்சமும் கிடையாது. டார்ச் என்றால் பியர் க்ரில்ஸ் லெவலுக்கு ஒரு பெரிய பிளாஷ் லைட் போல யோசிக்கக் கூடாது. திருவிழாக்களில் ஒரு கயிறில் பத்து டார்ச் சேர்த்து சுற்றி வைத்து தொங்கப் போட்டிருப்பார்களே அந்த டார்ச். சுண்டுவிரல் அளவு தான். அந்த இரவு நேரத்தில் வண்டுகள் அல்லது பூச்சிகள் ரீங்கரிக்கும் சத்தம். ஒருவிதமான கலக்கமாக இருந்தது. அதற்கு வலு சேர்க்கும் விதமாக ஒரு பிளிறல். எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. சர்வ நாடியும் ஒரு நிமிடத்தில் ஒடுங்கி விட்டது. அப்படி ஒரு சத்தம். சத்தம் கேட்ட திசையில் திரும்பி பார்த்தால் ஒன்றும் தெரியவில்லை. முன்னரே சொன்னேனே. கும்மிருட்டு. அப்போது அந்த திருமங்கலத்துக்காரர் தான் சொன்னார். 'பயப்படாதீங்க. காட்டெருமை தான். சிவா சிவானு சொல்லிகிட்டே கீழ நடங்க. இந்த காட்டுல எந்த ஒரு மிருகமும் தாக்குனது கிடையாது.' என்று தைரியமூட்டினார். திருமங்கலத்துக்காரர் வீரர் தாம்டே. சிவ சிவா என்று சொல்லி வேகுவேகு என்று கீழே இறங்கிவிட்டோம். இரண்டே மணிநேரத்தில் இறங்கி தாணிப்பாறை வந்தடைந்தோம். அன்று இரவே ஊர் திரும்பியாகிவிட்டது.

அந்த மலையில் ஏறுவதற்கு சரியான உடை யாதெனில், ஒரு பெர்முடாஸ் அல்லது ஷாட்ஸ். ஒரு முண்டா பனியன். கையில் ஊன்றி நடக்க ஒரு குச்சி. சிலர் காலில் செருப்பு இல்லாமல் நடக்கிறார்கள். செருப்பு போட்டிருந்தால் வழுக்காமல் இருக்க வேண்டும். ஷூ ஓகே. மேலே கோவிலுக்கு முன் கழட்டி வைக்க இடமுண்டு. வழுக்குப் பாறை, கரடு முரடான ஒற்றையடி பாதை, நீரோடை, மணற்பரப்பு, புல்வெளி, கற்கள் என்று பாதைகள் நிறம் மாறும். தண்ணீர் பாட்டில்கள் ஓகே. ஆனாலும் அவை சுமை தான். எத்தனை லிட்டர் தான் எடுத்துச் செல்வது?. இரண்டு மூன்று இடங்களில் வாட்டர் பாட்டில் விற்பனை செயகிறார்கள். காலை ஆறு மணி போல் ஆரம்பித்துவிட்டால் மாலை ஆறு மணிக்குள் இறங்கி விடலாம். ஒரு நல்ல டார்ச் உசிதம். அலுப்பு இல்லாமல் பேசிக்கொண்டே நடப்பதற்கு ஒரு நல்ல குழு. குடும்பமாக ஏறுகிறார்கள். பெண்கள் குழந்தைகள் என்று எந்த பாகுபாடும் இல்லை. சமீபத்தில் வந்த வெள்ளத்திற்குப்பிறகு கட்டுப்பாடுகள் அதிகம். பௌர்ணமி தினம் அன்று தான் அனுமதி இருக்கிறது போல் தெரிகிறது. விசாரித்துக்கொள்ளலாம். 

எல்லாம் சிவமயம்

கருத்துகள் இல்லை: