சேட்டன்மார்களின்
சேட்டையே தனி ரகம் தான். மூன்றே கதாபாத்திரம். அந்த மூன்று பிரதான
கதாப்பாத்திரத்தை நகர்த்த சில துணை கதாபாத்திரங்கள். இரண்டு மணி நேரம். மிஸ்டரி
என்று சொல்வதா, த்ரில்லர்
என்று சொல்வதா. இன்னதென்று அனுமானிக்க முடியாமல் இறுதியில் ஒரு பக்காவான எமோஷனல்
டிராமாவாக நிறைவடைகிறது.
இறுதி பதினைந்து
நிமிடங்கள் தான் கதையே. ஒரு சுபாவம், ஒரு நிகழ்வு. இது இரண்டையும் பின்னி தந்தை மகனுக்கு இடையில்
இழையோடும் ஒரு அன்பு. அந்த ஒரே ஒரு நிகழ்விலிருந்து முன்னும் பின்னும் கதையை
எழுதிய பாங்கு, சேட்டன்மார்களின்
திரைக்கதை யுக்திக்கு நல்ல சான்று.
பச்சைப்பசேல் என்ற
இயற்கை வளம். நிஜமாகவே படம் பார்க்கும் பொழுது கண்ணிற்குள் குளிர்ச்சியை உணர
முடிகிறது. கடவுளின் தேசம். முன் பின் அறிந்திராத கேமரா கோணங்கள் கதை சொல்லும்
சஸ்பென்ஸ் மூடிற்கு ஏற்றார் போல் உறுதுணை செய்கிறது. காரணம் திரைக்கதை எழுதிய
பாஹுல் கேம்ராவையும் கையாண்டிருக்கிறார். படத்தின் ஹீரோ திரைக்கதை என்றால் இன்னொரு
ஹீரோ பின்னணி இசை. காடாகட்டும், வீட்டிற்குள்,
அருவி, போலீஸ் ஸ்டேஷன், ஹாஸ்ப்பிட்டல், ஜீப் என அனைத்தையும் உள்வாங்கி
பிரதிபலித்திருக்கிறது. கதாபாத்திரங்களின் உள்ளுணர்வுகளை பார்வையாளனிடம் கடத்திய
வகையில் இசையமைப்பாளர் முஜீப் கவர்கிறார்.
கொஞ்சம் ஸ்லோ.
இருந்தும் நல்ல ஒரு உணர்வு. டிஸ்னி ஹாட்ஸ்டாரில்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக