2014 இல் முகுந்த் இறந்தபோது இறுதிமரியாதையில் அவரது குழந்தை அந்த பெட்டிக்கு அருகில் நின்று கொண்டு அந்த நிகழ்வின் தாக்கமறியாது நின்று கொண்டிருக்கும். ஆனால் பார்த்த நமக்கு அந்த பிஞ்சுக் குழந்தையின் அப்பாவியான முகம் கொடுத்த தாக்கம் சொல்லி மாளாது.
மேஜர் முகுந்தின் வாழ்க்கை வரலாற்றை அசாதாரண மனம் கொண்டு தாங்கிய அவரது மனைவி இந்துவின் கண்கள் வழியே நமக்குத் தருகிற செல்லுலாய்டு ஓவியம் தான் அமரன்.
மேஜரின் முறுக்கேறிய உடல் கட்டுடன், மேஜர் என்ற பொறுப்பிற்க்கிணங்க தலைமைப்பண்பை பறைசாற்றும் பாத்திரத்தில் சிவா. கலகலவென நடித்து ஜனரஞ்சக நடிகராக வலம் வந்த சிவாவிற்கு, இதில் காதலன், தந்தை, மகன், சோல்ஜர், தலைவன், நண்பன் என பல்வேறு வேடம். முழுப் பொறுப்பையும் உணர்ந்து மேஜர் முகுந்தாகவே நம் கண்முன் தெரிகிறார். வாழ்நாள் முழுவதற்குமான ஒரு கதாபாத்திரம். வெல்டன் சிவா.
படம் முழுக்க சாய் பல்லவி தான். முதன் முதலில் முகுந்தை பார்த்தது முதல் இறுதியில் விருதினை பெற்றுக்கொள்ளும் வரை அத்தனை உணர்ச்சிகள். அனாயசமாக நமக்குள் கடத்திவிடுகிறார். வெட்கம் கொள்வதாகட்டும், முகுந்தே முகுந்தே என்று கொஞ்சுவதாகட்டும், புல்லட் காயம், போனில் வெடிகுண்டுச் சத்தம் கேட்கும் நேரங்களில் வெடித்து அழுவதாகட்டும், அண்ணன் வந்து துக்க சேத்தி சொல்லும்போது உடைந்து அழுது பின் முகுந்தின் வார்த்தைக்கிணங்க கண்ணீரைத் துடைத்து நிமிர்ந்து பார்ப்பதாகட்டும் அவ்வளவு நேர்த்தி. கண்டிப்பாக ஒரு நேஷனல் அவார்ட் பார்சல். அதை விட இந்து தன்னை, தன காதலை, முகுந்தை மீண்டும் ஒரு முறை ரீவைண்ட் செய்து கொள்ள எடுத்துக்கொண்ட சிரத்தையாகத்தான் சாய் பல்லவியின் நடிப்பை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.
ஜில்லா, வீரம், அதிபர் புஷ் வருகை, இந்து ரூமில் தொங்கும் ரோஜா ஏ ஆர் ரஹ்மான் என டீட்டெய்லிங்கில் ப்ரொடக்ஷனின் உழைப்புத் தெரிகிறது. காதல் bgm ஆகட்டும், சண்டை காட்சி புல்லட் தெறிப்புகளாகட்டும், சொல்லி அடிக்கிறது ஜி. வி பிரகாஷின் இசை. படம் நெடுகிலும் GVP ராஜ்ஜியம் தான். ஒற்றை பிள்ளைக்காக பரிதவிக்கும் அம்மா கேரக்டரில் கீதா கைலாசம் நிஜ அம்மாக்களை பிரதிபலிக்கிறார். ஆர்மிக்காரனுக்கு மகளை கட்டிக்கொடுப்பத்தில் முதலில் மறுதலித்து பிறகு மோனே என்று அரவணைத்துக்கொள்ளும் கதாபாத்திரத்தில் ஜார்ஜ் வர்கீஸ்.
நாற்பது நிமிட டிரான்சிட் டிராவலில் மனைவியையும் மகளையும் உச்சி முகர்ந்து செல்லும் காட்சியில் இராணுவ வீரரின் வாழ்க்கை கண்ணீரை வரவழைக்கிறது. ஒரு தனி மனிதனின் மிலிட்டரி வாழ்க்கையை நகலெடுத்ததில் அமரன் ஒரு மைல்கல்.
முகுந்தின் வாழ்க்கையின் சாட்ச்சியாக அமரன் வெளிவந்திருக்கிறது. இதுபோல் பேர் தெரியாத பல முகுந்த்களின் அமர காவியம் சொல்லப்படாமலிருக்கிறது.
இளம் வயது காதல், OTA ட்ரெயினிங், LoC, காஷ்மீர் அரசியல், தீவிரவாத தாக்குதல், இந்திய ராணுவ செயல்பாடுகள், வீரர்களின் மரணம் என ஒரு புல் பேக்கேஜாக அமரன் ஜொலிக்கிறார்.
மஸ்ட் வாட்ச் மூவி.
2014 மற்றும் 2023 இல் முகுந்தை பற்றி எழுதிய பதிவுகள் கீழே.
#AMARAN #saipallaviofficial #sivakarthikeyan

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக