வியாழன், ஜூன் 15, 2023

2018

 

படத்தின் பெயரும் 2018. அந்த வருடம் கேரளா மிகப்பெரும் மழையை எதிர்கொண்டது. மிகப்பெரும் என்றால் 100 ஆண்டுக்குப் பிறகு அப்படி ஒரு பேய் மழை. சாதாரணமாகவே நன்றாக மழை பெய்யும் கேரளாவில் 100 சதவீதம் அதிகம் மழை பெய்தால் எப்படி இருக்கும்? விளைவு...

3000த்துக்கும் அதிகமான முகாம்கள், 12 லட்சம் மக்கள் அகதிகளாக, கிட்டதட்ட 500 பேர் வரை உயிரழப்பு. கேரளாவின் மக்கள் தொகையில் ஆறில் ஒரு சதவீதம் பாதிக்கப்பட்டதாக அறிவித்திருக்கின்றனர். பல மாகாணங்களில் ரெட் அலர்ட் சிக்னல் கொடுக்கப்பட்டிருக்கிறது. 1924க்குப் பிறகு இப்படி ஒரு பேரழிவு.       


                  

படம் இதைப்பற்றி தான் என்றாலும் ஒரு பாசிடிவ் நோட்டுடன் படத்தை கொடுத்திருக்கிறார்கள். படத்தின் டேக் லைன் மிகவும் ஈர்த்துவிட்டது. Everyone is a Hero. ஆமாம். உண்மையில் வெள்ளம் வந்தபோது தன்னுயிரையும் மதிக்காமல் இறங்கி சக மனிதர்களை மீட்ட ஒவ்வொருவரும் ஹீரோ தான்.

குஞ்சக்கோ போபன், கலையரசன், நரேன், லால், டொவினோ தாமஸ், வினீத் சீனிவாசன், அபர்ணா பாலமுரளி, சுரேந்திரன் என ஒரு நச்த்திரப் பட்டாளமே ஈகோ இன்றி நடித்திருக்கிறது. இந்தப்படம் கேரளா மக்களுக்கு ஒரு சமர்ப்பணமாக எடுத்திருக்கிறார்கள் என்றே புரிந்து கொள்ள முடிகிறது.  

படம் ஆரம்பித்தது முதல் இறுதி வரை மழை பெய்துகொண்டே இருக்கிறது. ஊரெல்லாம் வெள்ளம். இதில் எதைக் காட்சிப்படுத்துவது? வெள்ளத்தால் ஏற்படும் பேரழிவை கிராபிக்ஸ் போட்டு ஒரு பிரம்மாண்ட படமாக காமித்திருக்கலாம். ஆனால் ஜுட் அந்தோனி ஜோசப் அதை செய்யவில்லை. மாறாக அப்படி ஒரு பேரழிவை சமூகம் சந்தித்துக்கொண்டிருந்த வேளையில் மலர்ந்த மனிதநேயத்தை மிக நெருக்கமாக நம்மிடம் கொண்டு வந்து சேர்த்திருக்கிறார். ஒவ்வொரு கதாபாத்திரத்தைக்கொண்டும் ஒரு தனி சினிமாவாக எடுக்கலாம் என்று சொல்லுமளவுக்கு மிக நேர்த்தியான கேரக்டரைசேஷன்.  

நெகிழ்வு, நெகிழ்வு மற்றும் நெகிழ்வு தான் படம் முழுவதும். நாம் பத்த்தில் சந்திக்கும் ஒவ்வொரு மனிதர்களும் அவ்வளவு நெகிழ்வாக இருக்கின்றனர். பார்த்தவுடன் பற்றிக்கொளும் ஒரு உற்சாகத்துடனே உலாவுகின்றனர். ஒரு நிறைமாதப் பெண்ணை எர்லிஃப்ட் செய்யும் காட்சி அவ்வளவு தத்ரூபமாக. காலுடைந்த மன வளர்ச்சி குன்றிய ஒரு சிறுவனை மீட்கும் காட்சி, மண்ணில் புதைந்த ஒரு குடும்பத்தையே மீட்பது, படகுகளையெல்லாம் ஒரே இரவில் லாரியில் ஏற்றி மீட்புப் பணிக்காக அனுப்பி வைப்பது, கலையரசன் தான் குழந்தையிடம் அன்பாகப் பேசும் தருணம் என இன்னும் எல்லாமே அவ்வளவு அன்பு ததும்பும் காட்சிகள்.

நான் இருக்கிறேன் என்ற ஒரு வார்த்தையில் மனித சமுதாயம் மீண்டெழுந்து வருகிறது என்பதை தத்ரூபமாய் நம்மிடம் நிரூபிக்கிறது இந்த 2018.

அவசியம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய சினிமா. 

கருத்துகள் இல்லை: