புதன், ஜூலை 26, 2023

தண்டவாளக் கரும்பு


கடந்த வார விகடனில் வெளியான 'தண்டவாளக் கரும்பு' என்றொரு சிறுகதையை வாசித்தேன். வெகு நெகிழ்ச்சியாய் உணர்ந்தேன்.

கதை இதுதான். தந்தையை இழந்த சிறுவனை அவனது தாய் மிகவும் கஷ்டப்பட்டு வளர்க்கிறாள். தாய் நோய்வாய்ப்படும் நேரத்தில் இவன் காசு சம்பாதிக்க வேண்டிய நிலைக்கு ஆளாகிறான். துன்பம் மீண்டும் மீண்டும் வாட்டியெடுக்கும் நேரமொன்றில் அவன் தனது தந்தையை நினைவு கூறுகிறான். இவ்வளவுதான் கதை. ஆனால் அதை சுரேஷ் மான்யாவின் எழுத்துக்களில் வாசிக்கும் பொழுது நமக்கு கடத்தப்படுவது விவரிக்க முடியாத ஒரு உணர்வைத் தருகிறது.



அந்தக் குடும்பம் நன்றாகத்தான் இருக்கிறது அவரது தந்தை இறக்கும் வரையில். தந்தை ரயில்வே நிலையத்தில் ஒரு வாழைப்பழ கடை வைத்திருக்கிறார். வியாபாரம் செய்யும் வரையில் அவனது அம்மா மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே வேலைக்குச் செல்லுகிறாள். ஆனால் ஒரு நாள் எதிர்பாராத விதமாக பிளாட்பாரத்தில் தவறி விழுந்து அவனது தந்தை இறந்து விடுகிறார். குரலின்றி தவிக்கும் விளிம்பு நிலை மக்களின் சொல்லொண்ணாததுயரம் அதுதானே. அன்றிலிருந்து அவனது அம்மாவுக்கு கூடுதல் பொறுப்பாகிறது. கரும்பு ஆலையில் சங்காயம் பொறுக்கும் வேலைக்குச் செல்கிறாள். காய்ந்த கரும்புத்தோகைகளே சங்காயம் எனப்படுகிறது. இவன் அந்த ஆலையை கண்டுரும் நோக்கில் உள்ளே நுழைய எத்தனிக்க காவலாளி இவனைச் சீண்டாமல் துரத்துகிறான். வறியவர்களுக்கு எல்லா இடமும் எளிதல்லவே. இவனது அம்மாவை காச நோய் பீடிக்க இவன் மீது வீட்டின் பாரம் விழுகிறது. கரும்பு ஆலைக்கு கரும்பு ஏற்றி வரும் டிராக்டர்கள் தண்டவாளத்தின் ஓரத்தில் நிற்கும். அதில் ஒன்றிரண்டு கரும்பை எடுத்து க்ராஸிங் கடப்பதற்கு காத்திருக்கும் ரயில் வண்டி பயணிகளிடம் விற்கிறான். ஐந்து ரூபாய் தேறுகிறது. பத்து ரூபாய் தேற்றும் முயற்சியில் சோக்காளிகளுடன் சேர்ந்து கரும்பு விற்க முயலுகிறான்.

இன்னும் இரண்டு பத்தியில் கதை முடிகிறது என்பதைத் தெரிந்து கொண்டபொழுது ஒரு வேளை போலீசிடம் மாட்டிக்கொள்கிறானோ என்ற எண்ணினேன். முடிவு ஆனால் வேறு இடம் நோக்கிச் செல்கிறது.
க்ராஸிங்கில் நிற்கும் ரயில் வண்டி பயணியிடம் கரும்பு விற்கிறான். கிடைத்த சில்லறைக்காசுகளை பத்திரப்படுத்திக்கொண்டு மீதமிருக்கும் ஒரு கரும்பை விற்க அலைகிறான். சிக்னல் போடவேண்டிய நேரம் நெருங்குகிறது. ஒரு கடன்காரப்பயணி அவனிடம் கரும்பை ஒடித்துத்தரச் சொல்கிறார். ஒடித்த கரும்பை அவரிடம் குடுத்து காசை எதிர்பார்க்கும் வேளையில் சிக்னல் விழுந்து வண்டி கிளம்பிவிடுகிறது. வண்டியுடன் இவன் மேடுபள்ளம் பாராது ஓட, அவர் சட்டைப்பையில் கையை விட்டுதுழாவ இன்னும் ஒரு பத்தியில் சிறுகதை முடிகிறது. அந்தச்சிறுவன் ரயிலின் சக்கரத்தில் பலியாகிவிடுவானோ என்று மனம் பதைபதைக்கும் வேளையில் அதை விட மிகவும் கனமான ஒரு முடிவை கதாசிரியர் அழுத்தமாக பதிவிட்டு முடிக்கிறார்.

மேடு பள்ளம் பாராமல் அவன் காசுக்காக ஓட, கரும்பு வாங்கிய சீமான் இவனை நோக்கி காசைத் தூக்கி எரிய, காசு ஒரு புதரில் விழ, அந்த கருக்கல் வேளையில் தன் முன் இருக்கும் கல் தெரியாமல் இவன் இடறி விழ, பத்திரப்படுத்தியிருந்த காசும் இவனது கையில் இருந்து திசைக்கொன்றாகச்சிதற அவனது உடம்பில் சில இடங்களில் காயம் படுகிறது. அந்த கையறு நேரத்தில் ஒரு கணம் அவன் மனம் தன் இறந்து போனத்தந்தையை நினைக்கிறது என்று முடிக்கிறார்.

எவ்வளவு வலிகளைத் தாங்கிய வரிகள் இவை. அந்த கடைசி ஒரு வரி அத்தனை கதைகளைச் சொல்லாமல் சொல்கிறது.

மனம் மிகவும் கனத்து கிடக்கிறது. எழுத்தின் வீச்சு அதுதான். கண்ணீர் வற்றுமளவுக்கு மீண்டும் மீண்டும் வாசித்தேன்.

வாழ்த்துக்கள் சுரேஷ் மான்யா

Ananda Vikatan ananda vikatan - ஆனந்த விகடன் (வாசகர் குழுமம்) Vikatan EMagazine #Vikatan #AnandaVikatan

கருத்துகள் இல்லை: