ஒரு புத்தகத்துக்கு விமர்சனம் எழுதலாம். அல்லது ஒரு படத்திற்கு. ஏன் பாட்டிற்கு கூட எழுதலாம். பத்திரிகையில் வாராவாரம் வரும் தொடரின் டைட்டிலுக்கு விமர்சனமா என்றால் ஆமாம். தொடரின் டைட்டில் டிசைன் பற்றி தான் இந்த பதிவு.
ஆனந்த விகடனில் எழுத்தாளர் வெண்ணிலா எழுதிவரும் 'நீரதிகாரம்' தொடருக்கு அவ்வளவு அழகாக மிகவும் பிரயாசையுடன் டைட்டில் வடிவமைத்திருக்கிறார்கள், தலைமை வடிவமைப்பாளர் கருப்பையா பாண்டியன் மற்றும் சரவணன். Synergy என்று சொல்வார்களே. அது அவ்வளவு உயிர்ப்பாக இருக்கிறது இந்த தொடரில். தொடரின் குழுவில்.
ஒரு தலைப்பை சாதாரணமாக எழுதலாம். அல்லது கொஞ்சம் சிரமேற்கொண்டு வரையலாம். calligraphy போல் செய்யலாம். ஆனால் நூறு வாரம் கடந்த தொடரில் ஒவ்வொரு வாரமும் அந்த தொடரில் நடைபெறும் கதைக்கு கருவிற்கு நிகழ்விற்கு ஏற்றார் போல் டைட்டில் டிசைன் செய்வது என்பது இதுவரையில் நான் எந்தவொரு தொடரிலும் கண்டறியாதது.
உதாரணமாக மேல்மலையில் இருக்கும் மக்களுக்கு காலரா தொற்று வருகிறது. அதை குறிக்கும் விதமாக வைரஸ் வடிவில் அந்த வார டிசைன். கிறிஸ்துமஸ்க்கு விடுமுறை கூட எடுக்காமல் அணை கட்டுமானப்பணியில் பென்னி, டெய்லர் என அனைவரும் சிரத்தையாக வேலை பார்க்கின்றனர். அதை குறிக்கும் விதமாக கிறிஸ்துமஸ் சாரட் வண்டியில் 'நீரதிகாரம்' என்ற எழுத்துக்களை இழுத்துக்கொண்டு கலைமான்கள் துள்ளி ஓடுகின்றன.
டெய்லரின் இறப்பின் நிகழ்வை ஒட்டி பென்னி கவர்னருக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அணை கட்டுமானப்பணியை மட்டும் மேற்கொண்டு பார்த்துக்கொள்வதாக அந்தக் கடிதம் இருக்கும். அதன் பொருட்டு அந்த வார டைட்டில் டிசைனில் மை புட்டியும் எழுதுவதற்கு இறகும் வரைந்திருப்பார்கள்.
கோட வர்மா தனது மாளிகையில் உள்ள கன்று குட்டிகளுடன் நேரம் செலவழிக்கும் தொடரில் கன்றுக்குட்டியின் வடிவில் டைட்டில் டிசைன்.
மேல்மலையை தங்களது உயிரை கொடுத்து கட்டிய மக்கள் கொத்து கொத்தாக மடியும் வாரத்தில் ஒரு சவப்பெட்டியின் வடிவில் டைட்டில் டிசைன்.
மேல் மலையில் காட்டுத்தீ பற்றிக்கொண்டு எரியும்பொழுது நெருப்பின் வடிவில், மூன்று நாட்கள் தொடர் மழை பெய்தபொழுது மழை போன்ற வடிவில், யானையின் வடிவில் என ஒவ்வொரு வாரமும் அதகளப்படுத்தியிருக்கிறார்கள்.
எனக்கு மிகவும் நெருக்கமாக உணர்ந்தது என்றால், அணைக்கான சுவற்றை அடிமட்டத்தில் இருந்து எழுப்பிக்கொண்டிருக்கும் தருணத்தில் எதிர்பாராத விதமாக காட்டாற்று வெள்ளம் வந்து அந்த சுவற்றை பெயர்த்து எடுத்து செல்கிறது. அதில் தெறித்து விழும் சில செங்கற்களில் 'நீ' 'ர' 'தி' 'கா' 'ர' 'ம்' என்று எழுதியிருப்பார்கள்.
எந்த அளவிற்கு தங்களது வேலையினை ரசித்து செய்தால் இதுபோன்ற படைப்பாக்கங்களை தருவித்திருக்க முடியம். ஒவ்வொரு வாரமும் ஆசிரியருடன் உரையாடல், தொடரின் மேல் கொண்ட ஈடுபாடு ஆகியவை பிரமிக்கவைக்கின்றன.
அடுத்தடுத்த வாரங்களில் தொடரில் என்ன நிகழப்போகிறது என்பதை அறிந்துகொள்ள காத்திருப்பது போல் என்ன விதமான டைட்டில் டிசைன் செய்து அசரடிக்கப்போகிறார்கள் என்று தெரிந்துகொள்வதிலும் ஆவலுடன் காத்திருக்கிறேன்.
டைட்டில் டிசைனில் சிலவற்றை இணைத்திருக்கிறேன்.
வடிவமைப்பாளருக்கு உள்ளார்ந்த வாழ்த்துக்கள்.
















கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக