வியாழன், செப்டம்பர் 07, 2023

தமிழ் சினிமா ரிவல்யூஷன்


2012 வாக்கில் ஒரு சில படங்கள் தமிழ் சினிமாவில் வெளிவந்தது. மாற்று சினிமா என்ற சொல்லாடல் மிகைப்படுத்தப்பட்டதாக இருந்தாலும் அவற்றை மாற்று சினிமா என்று அழைப்பதில் தவறில்லை. காதல் என்கிற கான்செப்ட் இல்லாத படமே இல்லை என்னுமளவுக்கு காதலை புனிதப்படுத்தி படங்களாக எடுத்து தள்ளிக்கொண்டிருந்தனர். 'என்னடா பெருசா சொல்லப்போறீங்க?' என்கிற மன நிலையில் தான் சினிமாப் பிரியர்கள் இருந்தார்கள். அப்பொழுது வந்தவை தான் இந்த சினிமாக்கள்.

அட்டகத்தி.  அத்தனை நாட்கள் தமிழ் சினிமா, காதலை பல கோணங்களில் அணுகியிருந்தாலும், 'டேக் இட் ஈஸி' பாலிசியில் அணுகியது அது தான் முதல் முறை. நாயகனை ரீல் ஹீரோ என்று பறை சாற்றும் வகையில் 'அட்டகத்தி' என்று டைட்டில் பிளாக் முதல் எண்ட் க்ரெடிட்ஸ் வரை மிக ஜாலியாக இயக்கியிருப்பார் பா.ரஞ்சித். அந்த வகையில் தான் இயக்கிய அனைத்து படங்களுக்கும் ஏதேனும் ஒரு விருதை வாங்கி மாற்று சினிமாவுக்கான விதையைத் தூவிய பா.ரஞ்சித் அவர்களுக்கான முகவரியை அளித்தது 'அட்டகத்தி'



பிஸ்சா. தமிழ் சினிமாவில ஒரு சொல்லப்படாத பார்முலா இருந்தது. கிட்டத்தட்ட 95 சதவீத படங்கள் இந்த பார்முலாவை மீறியது கிடையாது. என்னவென்றால், படத்தில் ஒருவர் கேள்வி கேட்கிறார். அந்த கேள்விக்கான பதில் வெறும் வார்த்தைகளால் மட்டும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தால் அது பொய். அதே பதில், அவர்கள் சொல்ல சொல்ல காட்சிகளா விரிந்தால் அது உண்மை என்று எடுத்துக் கொள்ளலாம். இது எல்லா பபடங்களுக்கும் பொருந்தவில்லையென்றாலும் தமிழில் வந்த முக்கால்வாசி படங்களுக்கு பொருந்தும். ஆனால் அந்த ஸ்டீரியோடைப்பை உடைத்து வெளிவந்தவர் கார்த்திக் சுப்புராஜ் தான். படம் முடிந்தவுடன் 'என்னடா காத்து முழுக்க பூவை சுததிவிட்டிருக்கீங்க' என்கிற முனுமுனுப்பு இருந்தாலும் திரையில் மிரட்டிய விதம் வேறு லெவல். கார்த்திக் சுப்புராஜின் தமிழில் ஒரு பெரும் முகவரியை பெற்று தந்தது பிஸ்சா.

சூது கவ்வும். கொள்ளையடிப்பவனை இதுகாறும் தமிழ் கூறும் நல்லுலகம் வில்லனாகத்தான் பார்த்துவந்தது. அந்த பிம்பத்தை உடைத்து கேரக்டரைசேஷனில் காமெடியை நுழைத்து அந்த கொள்ளையனுக்கு ஒரு மாய காதலியையும் ஜோடித்து படம் முழுவதும் அதகளம் செய்திருப்பார் நலன் குமாரசாமி. கொள்ளையடிப்பதற்கு ரூல் புக்கெல்லாம் எழுதி மிகவும் ஜாலியான சினிமாவாக எடுத்திருப்பார்கள். நலன் குமாரசாமியின் முகவரி சூது கவ்வும். 

தெகிடி- மிக சாதாரணமாக ஆரம்பிக்கும் படம், ஒரு கொலையை பற்றி துப்பறிய ஆரம்பித்து அதன் பின் இருக்கும் மிகப்பெரிய இன்சூரன்ஸ் மோசடியை வெளிக்கொணரும். வித்தியாசமான இன்வெஸ்டிகேட்டிவ் த்ரில்லர் ஜானர். இயக்குனர் ரமேஷ் அவர்களின் முகவரி இது.

முண்டாசுப்பட்டி - பீரியட் காமெடி மூவி. பார்த்து பார்த்து செட் அமைத்திருப்பார்கள். விஷ்ணு விஷால் மட்டுமில்லாமல் காளிவெங்கட், ராமதாஸ் என பலருக்கும் மிகப்பெரிய ஒரு பிரேக் என்றால் அது முண்டாசுப்பட்டி. சிரித்து சிரித்து புண்ணாகியதென்றால் மிகையில்லை. ராட்சசன் என்கிற அருமையான சைக்கலாஜிக்கல் த்ரில்லரை கொடுத்த ராம்குமாரின் முகவரி முண்டாசுப்பட்டி.

இன்று நேற்று நாளை. தமிழ் சினிமா அதுவரை தொட்டுப்பார்க்காத ஜானர். டைம் மெஷின் டிராவல். கொஞ்சம் அசந்தாலும் இடியாப்பச் சிக்கலாகக்கூடும் கதையை எந்தக் குழப்பமும் இல்லாமல் பதமாக பரிமாறியிருப்பார் ரவிக்குமார். அதன் பின் பல டைம் ட்ராவல் வந்திருந்தாலும் இந்த படத்தின் சிக்கலில்லாத திரைக்கதையை எட்ட முடியவில்லை. இன்று அயலான் வரை வந்து நிற்கிறது. ரவிக்குமாரின் முகவரி இன்று நேற்று நாளை.

இறுதி சுற்று. மாதவனுக்கு ஒரு பெரிய கம் பேக் அளித்த மூவி. ரித்திகா சிங், தனது முதல் படத்திலேயே தேசிய விருது பெட்ரா மூவி. இண்டிபெண்டண்ட் மேக்கிங். தமிழில் சுதா கோங்குராவிற்கு இது முதல் படம் இல்லையென்றாலும் மிகப்பெரும் அடையாளத்தை அளித்தது. மற்றைய பெண் இயக்குனர்களுக்கு உத்வேகம் அளித்த படம் என்றால் மிகையில்லை.

பிஸ்சா 3 த மம்மி. 'என்ன புதுசா இருந்திடப்போது?' என்று பார்த்தால் கதை, திரில்லர், கரண்ட் ட்ரெண்டில் நடந்த ஒரு அத்துமீறல், மம்மி, எமோஷன் என்று எல்லாவற்றையுமே நன்றாக கனெக்ட் செய்திருந்தார்கள். அஸ்வின் காக்கமுனு தான் ஹீரோ. படத்தை மொத்தமா இவருதான் தாங்குறார். இவரு நடத்துற ரெஸ்டாரண்ட் கிட்சன் மற்றும் அஸ்வின் அறையில் நடக்கும் அமானுஷ்யங்கள் த்ரில்லர் வகை என்றால் இறுதியில் வரும் எமோஷன் காட்சிகள் நல்ல சென்டிமென்ட் ரகம். இயக்குனர் மோகன் கோவிந்த் அவர்களின் முகவரி இது.

மேற்கூறிய அனைத்துப் படங்களுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. அனைத்து படங்களும் அந்தந்த இயக்குனர்களுக்கு முதல் படம். சுதாவைத்தவிர. மேற்கூறிய அனைத்து இயக்குனர்களும் இன்று வெற்றி வாகை சூடியுள்ளனர். ஆனால் ஒவ்வொருவரும் தனது முதல் படத்திற்கும் படும் பாடு சொல்லி மாளாதது. முதல் காதல் போன்று முதல் படமும் என்றும் மறவாத ஒரு நினைவுதான். பா. ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ், ரவிக்குமார், ராம்குமார் இவர்கள் அடைந்த வெற்றி அளப்பரியது. இவர்கள் அனைவரையும் அறிமுகப்படுத்திய பெருமை திருக்குமரன் என்டர்டைன்மெண்ட் சி.வி.குமார் அவர்களுக்கு உண்டு. இவர்கள் அனைவருக்குமே முகவரியை கொடுத்தவர் என்கிற வகையில் தமிழ் சினிமாவின் அழியா முத்திரையைப் பதிக்கிறார் சி.வி.குமார்.

மென்மேலும் பல இளம் தலைமுறைக்கு வாய்ப்புகள் வழங்க வாழ்த்துக்கள்.

கருத்துகள் இல்லை: