வெள்ளி, செப்டம்பர் 22, 2023

கற்போம்


நேற்று முன்தினம் வாஷிங் மெஷினில் ஒரு கஜகஜா. complaint புக் செய்திருந்தேன். complaint புக் செய்வதற்கு நம்மவர்கள் அதிகம் ப்ரயத்தனப் படவைக்கவில்லை. WhatsApp bot வழியாக இரண்டு அல்லது மூன்று நிமிடங்களில் register ஆகிவிடுகிறது. சொல்ல வந்த விஷயம் அதுவல்ல.

அடுத்த நாள் இரவு எட்டு மணிக்கு கால் வந்தது. அதாவது நேற்று.

'சார், பக்கத்துல தான் இருக்கிறேன். இப்போ வரலாமா?'

எட்டு மணிக்கு கூட complaint அட்டென்ட் செயகிறார்களே என்று ஆச்சர்யம்.

'தாராளமா வாங்க' என்றேன்

வந்தவருக்கு இருபத்தைந்து வயதுக்குள் தான் இருக்க வேண்டும். எப்படியும் ஒன்னு அல்லது ஒன்றரை மணி நேரம் repair செய்வதற்கு செல்வழித்திருப்பார். நடுவில் ஒரு போன் கால்.

'கத்திரிக்காய் இருக்கும். போதும். அத வச்சு காரக்குழம்பு செய்ஞ்சிடலாம்' என்று யாரிடமோ பேசிக்கொண்டிருந்தார்.

'நீங்களே சமையலா?' என்று கேட்டேன்

'ஆமா சார். அஞ்சு பசங்க இருக்கோம். யாரு சீக்கிரமா போறாங்களோ அவங்க சமைச்சி வச்சிடுவாங்க'

'சீக்கிரம் அப்டினா? ஆறு மணிக்கா?'

'ஐயோ சார். சீக்கிரம்னா எட்டு அல்லது எட்டரை. நான் எப்படியும் ரூம் போறதுக்கு பத்தரை பதினொன்னு ஆகிடும்'

'ஹோட்டல்ல சாப்பிடறதில்லையா?'

'செட் ஆகலை. எல்லாத்திலேயும் அஜினோ மோட்டோ போடுறாங்க. எவ்ளோ தான் இந்த உடம்பு தாங்கும் சார். உடம்பு நல்லாருந்தா தான் வேலை செய்ய முடியும். வீட்டுக்கு பணம் அனுப்பலாம். உடம்பு போச்சுன்னா அவ்ளோதான்'

'இவ்ளோ நேரத்துக்கு அப்புறம் சமைச்சு சாப்பிடறது ரொம்ப கஷ்டம் ஆச்சசேப்பா? காலைல என்ன பண்ணுவீங்க?'

'பொதுவா இட்லி. இல்லனா இருக்கவே இருக்கு பேச்சலர் ஆபத்பாந்தவன். உப்புமா. அப்புறம் சேமியா'.

'சனிக்கிழமை லீவ் உண்டா?'

'அதெப்படி சார். அன்னைக்கு தான் நிறைய கால் வரும். ஆறு நாள் உண்டு'

'காலைல எத்தனை மணிக்கு ஆபிஸ்?'

'ஒன்பதரைக்கு உள்ள போய்டணும்'

படு ஆச்சர்யமாக இருந்தது. வாரத்தில் ஆறு நாட்கள். அதுவும் காலை ஒன்பதரையிலிருந்து இரவு பத்து மணி வரை. மாநகரம் முழுவதும் சுற்றி வர வேண்டும்.  வித விதமான கஸ்டமர்கள். ஒவ்வொருவரையும் அட்டென்ட் செய்ய வேண்டும். சில இடங்களில் வேலைப்பளு அதிகமாக இருக்கலாம். உடலுழைப்பைக் கோரும் வேலை. இரவு பத்து மணியானாலும் சமைத்து தான் உண்பேன் என்கிற health consciousness. இரவு ஒன்பது மணிக்கு கூட ப்ராடக்ட் பற்றி கேட்கும் கேள்விக்கெல்லாம் இன்முகத்துடன் பதில். அசரடித்தார்.

வேலையை விரும்பிச் செய்வது என்பது இதுதான். அலுப்பே தெரியாமல் ஓடிவிடும். உன் வயது என் அனுபவம் என்ற சால்ஜாப்பெல்லாம் விட்டுவிட்டு நாம் கற்றுக் கொள்ள எவ்வளவோ இருக்கிறது.

கற்போம்.

 

கருத்துகள் இல்லை: