இரண்டு நாட்களுக்கு முன்பு படித்த இந்த செய்தி மிகவும் வருத்தத்தை அளித்தது.
சந்திராயன் மூன்று நிலவில் தரையிறங்கிய அதே கணத்தில் திருநெல்வேலியில் இருந்து மூன்று நபர்கள் அது சம்பந்தமாக மேலும் தகவல்களை பெறுவதற்காக நம்பினாராயணனை பேட்டி காணும் பொருட்டு அன்று இரவே கிளம்பி இருக்கிறார்கள். பேட்டி எல்லாம் முடிந்து இரவு 12 மணிக்கு மேல் திருநெல்வேலி நோக்கி காரில் திரும்பி இருக்கின்றனர். அதிகாலை இரண்டு முப்பது அளவில் ஒரு சுங்கச்சாவடியின் அருகே ரோட்டில் இருக்கும் மீடியனில் இடறி கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி இருக்கிறது. காரை ஓட்டி வந்த கேமரா மேன் ஸ்பாட்டிலேயே இறந்திருக்கிறார். மீதி இருவரும் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இறந்து போன கேமராமேனுக்கு மனைவி மற்றும் ஒரு பெண் குழந்தை இருக்கிறது.
கேட்கவே சற்று பதைபதைப்பாக இருக்கிறது அல்லவா?
காரோ டூவீலரோ எதுவாகினும் இரவு பயணத்தை தயவு செய்து தவிர்த்து விட வேண்டும். நாம் ஒன்றும் ப்ரொபஷனல் டிரைவர் அல்ல. இரவில் எட்டு அல்லது ஒன்பது மணிக்கு முன்பாக சேர்ந்து விடக்கூடிய தூரம் என்றால் ஒட்டிச்செல்லலாம். அதையும் தாண்டி இரவு பன்னிரண்டு அதிகாலை மூன்று மணிக்கு எல்லாம் போயே தீருவேன் என்று காரை கிளப்பிக் கொண்டு செல்லக்கூடாது.
காலை ஆறு மணி முதல் இரவு ஏழு மணி வரைக்கும் அயராது வேலை செய்து கொண்டு இருக்கும் நமது மூளை மிகவும் களைப்படைந்து இருக்கும். மனம் கிளம்பு கிளம்பு என்றாலும் உடலும் மூளையும் சோர்வாக இருப்பதை உணர முடியும். அது போன்ற நேரங்களில் எல்லாம் தயவு செய்து இரவு பயணத்தை தவிர்த்திடுங்கள். போயே ஆகா வேண்டும் எனில் உடன் ஒருவரை அழைத்துச் செல்லலாம். இருவரும் மாற்றி மாற்றி ஓட்ட வேண்டும். அல்லது ஒவ்வொரு மணி நேரத்திற்கும் பத்து நிமிடங்கள் ஒய்வு எடுத்துச் செல்ல வேண்டும். எங்கள் அலுவலக சீனியர் ஒருவர் அறிவுரை இதுதான். இரவு வண்டி எடுக்க வேண்டும் என்றால் அதற்கு முன்பு நான்கு மணி நேரம் தூங்கி விடுவார். தவிர கார் ஓட்டும்பொழுது அயர்ச்சியாக இருந்தால் நிப்பாட்டி டீ. அல்லது ஒரு குட்டித் தூக்கம். முழித்த பின் முகம் கழுவி தலைவாரி குட்டிகுரா பவுடர் அடித்துவிட்டுத்தான் கிளம்புவார். பிரெஷாக இருக்கும் என்பது அவரது கூற்று.
அதேபோன்று பயணத்தை ஆரம்பிக்கும் பொழுது இத்தனை மணிக்குள் இந்த இடத்தை அடைந்து விட வேண்டும் என்ற இலக்கை தயவு செய்து மூளைக்குள் இருந்து அழித்து விடுங்கள். பல காரணங்களை ஒட்டி நாம் பயணம் செய்யும்பொழுது தடை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. ஆகையால் இத்தனை மணிக்குள் செல்ல வேண்டும் அல்லது செல்ல வேண்டிய தூரத்தை நாம் இன்னும் கடக்க வில்லையே என்று இன்னும் வேகமாக ஓட்ட ஓட்ட எந்த கணத்தில் என்ன நடக்கும் என்று நமக்கு தெரியாது. அரை நொடி கண் அயர்ச்சி வாழ்நாளையே புரட்டிவிடும். ஆகவே டார்கெட் டைம் வைத்து டிரைவிங் செய்வதை தயவு செய்து அவாய்ட் செய்து விடுங்கள்
இறந்து போனவருக்கு அந்த நொடி மட்டுமே துயரம். ஆனால் அவரை சுற்றி உள்ளவர்கள் அதற்கடுத்த ஒவ்வொரு நொடியும் நரகம் தான்.
பாதுகாப்பாக பயணிப்போம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக