வியாழன், பிப்ரவரி 02, 2017

எ.மா.ச.வா?

எ.மா.ச.வா? என்பதற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டாக உடுமலை சாதிக்கொலை. அதுவும் நடுப்பகலில். நடுரோட்டில்.திருமணமான உடனோ அல்லது மறுநாளோ அல்ல. கிட்டதட்ட எட்டு மாதங்களுக்கு பிறகு. திருமணமாகி பல நாட்கள் தான் கழிந்து விட்டதே. இனிமேல் பிரச்சினை படிப்படியாக குறையும் என்று நம்பிக்கையுடன் இருந்தோம் என்று கூறியிருக்கிறார் இறந்தவரின் மனைவி. எட்டு மாதங்களாக இந்த திருமணத்தை சாதியை முன்னிட்டு ஏற்றுக்கொள்ளாது ஒவ்வொரு நாளும் வன்மத்துடன் வெந்துகொண்டிருந்த உறவினர்களின் மன நிலையை நினைத்து பார்க்கையில் மிகவும் அருவருப்பாயிருக்கிறது. ஜீரணிக்க முடியாத ஒன்றை உடல் எவ்வாறு தூக்கி எரிகிறதோ அதுபோல முற்றிலுமாக சமுகதிலிருந்து களையெடுக்கப்படவேண்டிய ஒன்று சாதி. ஒரு சமூகத்தின் (தமிழ்) பிரதிநிதியாக இருக்கும் ஒரு பெண்ணின் நம்பிக்கையை அணு அணுவாக சிதைத்த பங்கு நாம் எல்லோருக்கும் உண்டு. 

தெரிந்தோ தெரியாமலோ நம் கைகள் ஓரத்தில் அந்த கரை ஒட்டியே இருக்கும். சாதிக்கு ஆதரவாக நான் எதுவும் செய்யவில்லையே என்று கை கழுவி ஒதுங்குவதும் சாதிக்கு ஆதரவாக செயல்பட்டவரின் செய்கையை தடுக்காமல் வேடிக்கை பார்ப்பதும் ஒன்றே. போதாக்குறைக்கு இரும்புக்கரம் கொண்டு சாதியை ஒடுக்க வேண்டிய அரசோ கைகட்டி வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது. இந்த சம்பவத்தை வைத்து அரசியலாக்கி ஆதாயம் தேடி அதில் ஒரு நாலு ஓட்டு தேற்றிவிட கட்சிகள் துடித்துக்கொண்டிருக்கின்றன. இறந்தவரின் உடலை தங்கள் வீட்டில் வைத்து துக்கம்  அனுசரிக்க கூட அனுமதியாத காவல் துறை, உடலை வலுக்கட்டாயமாக கைபற்றி நாடு இரவில் எரித்திருக்கிறது. மருத்துவமனை வளாகத்தை தாண்டி செல்லும் ஆம்புலன்ஸின் புறத்தே ஒரு மீடியாவின் காமிராமேன் ஓடிக்கொண்டே காமிராவை மட்டும் தூக்கி காண்ணாடி வழியாக ஃபோகஸ் செய்கிறார். அதில் என்ன காட்சியை படம்பிடித்து உலகுக்கு உணர்த்த போகிறார் என்று தெரியவில்லை. இது எல்லாமே We are not interested, but just curious” என்பதையே மீண்டும் மீண்டும் உணர்க்திக்கொண்டிருக்கிறது.


கருத்துகள் இல்லை: