தூங்கிவிட்டாள் என்று நினைத்துக்கொண்டிருந்த பொழுது ‘அப்பா இன்னொரு கதை?’
என்றாள்.
ஒரு ஊர்ல காக்கா இருந்துச்சாம்.
ம்.
அது காலைல சீக்கிரமா எழுந்துச்சி பிரஷ் பண்ணிட்டு குளிச்சிட்டு அப்புறமா சாமி
கும்ப்டுட்டு இட்லி சாப்பிடுச்சாம்.
ம். அப்புறம் ஸ்கூல் பேக் எடுத்துட்டு ஆட்டோல கிளம்பிபோச்சாம். ஏ, பி, சி டி
படிச்சிட்டுவீட்டுக்கு வந்துச்சாம்.
ம்.
அப்புறமா சாப்டுட்டு பிரிட்ஜ் திறந்து ஆரஞ்ச் ஜூஸ் எடுத்து,
கதை சொல்லிக்கொண்டிருக்கும்போதே ஏனோ மேஜர் முகுந்தின் இறுதி அஞ்சலி
புகைப்படங்கள் கண்முன் நிழலாடின. அனைத்து போட்டக்களிலும் மேஜர் முகுந்தின் குழந்தை
மட்டும் சிரித்து கொண்டிருந்தது. மற்றைய இறப்பு போல வெடித்து அழுது ஆர்ப்பாட்டம்
செய்யாது துக்கத்தை மனதினுள் இறுக்கிக்கொண்டு ஒரு அரசின் மாபெரும் நிகழ்வாக
நடைபெறும். படார் படாரென்று துப்பாக்கி குண்டுகள் முழங்க ஏதோ வான வேடிக்கை போன்று அதனை
அக்குழந்தை பார்த்துக்கொண்டிருக்கலாம். அந்த குழந்தை அழுது விடக்கூடாது என்பதற்காக
தன் மகனின் இறுதி அஞ்சலியிலும் துக்கத்துடனே சிரிக்க முயன்றுகொண்டிருந்தார் வயதான
அப்பா. ஒளிவிழந்த மனைவியின் முகம். ஒருவேளை அன்றிரவு கதை கேட்கவேண்டுமென்று
தோன்றினால் யாரிடம் கேட்கும் என்று கேள்வி எழுந்த போது, கண்ணில் நீர் கோர்த்ததை தவிர்க்க
முடியவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக சவப்பெட்டியின் அருகிலேயே குழந்தை விளையாண்டு
கொண்டிருந்தது மனதை உருக்கும் நிகழ்வாக இருந்தது.
காக்கா ஆரஞ்ச் ஜூஸ் குடிச்சிட்டு....
பாப்பா.....பாப்பா
தூங்கிவிட்டிருந்தாள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக