என்னதான் ஓசியில் சாப்பிட்டாலும் அல்லது ஸ்டார் ஹோட்டலில்
நான்கு மடங்கு அதிகமாக காசு கொடுத்து ஏசியில் சாப்பிட்டாலும், கல்யாண வீட்டு சாப்பாடு
போலிராது. அதிலும் தாலி கட்டும் பொழுது அட்சதை பாதி போட்டும் போடாமலும் கையை
கழுவாது அடித்துபிடித்து பந்தியில் சொந்த பந்தங்களுக்கு இடம் போட்டு இடம் பிடித்து இலை கழுவும போது
அப்படியே கொஞ்சம் கைக்கும் சேர்த்து தண்ணீர் விட்டு இலை கழுவி சாப்பிடும் சுவையே
அலாதிதான்.
ஒவ்வொரு மாவட்டதிற்கும் ஒரு சுவை. அனைத்தையும் ருசிக்காது
பிறவிப்பயன் கழியாது. ஒருமுறை கும்பகோணத்திற்கு போயிருந்தபோது பரிமாறப்பட்ட
கத்திரிக்காய் கொத்சு(அல்லது அவியல் அல்லது ஒரு கறி) சுவை தூக்கலாக இருந்தது.
மீண்டும் மீண்டும் கேட்டு வாங்கி சாப்பிட்டு நானும் மனைவியும் சமையல்காரரை தேடி
கண்டுபிடித்து கைகுலுக்கி அகமகிழ்ந்தோம். மாஸ்டருக்கும் சந்தோஷம் தாளவில்லை.கத்திரிக்காயை
அவித்து தேங்காய் திருவி தாளிக்கும் முன் பின் என செய்முறையை ஹேப்பியாக
பகிர்ந்துகொண்டார். “விஷேஷம்னா மறக்காம கூப்டுங்கோ” என்று விசிட்டிங் கார்ட்
கொடுத்தார்.
போலவே ரசத்திற்கும் தனி சுவையுண்டு. அதுவும் முந்தைய
ஆஃபிஸில் சாதத்தை தட்டில் போட்டவுடனையே ஒரு பெரிய வாளியை தூக்கிக்கொண்டு வந்து
முகத்தில் காண்பித்து ஊத்தாத குறையாக சாம்பாரா ரசமா சார் என்று டரியில்
காமிப்பார்கள். சாம்பார் நெடி முகர்ந்த மறுகணமே மயக்கம், வாந்தி பேதி போன்ற
அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கும். மூன்று முறைக்கும் மேலாக மயக்கம் வரலாம். இதற்காக
பயந்து கொண்டே, “தம்பி, இந்தாங்க கும்மிடிபூண்டி
டிக்கட். சாம்பார் வாளியோட போயி டிரைன் ஏறிடுங்க. அதுக்கு முன்னாடி தயிர் மட்டும்
கொடுத்துட்டு போங்க.’ என்று தயிருடன் கைகழுவிவிடுவோம்.
காய்ந்தாமாடு போல் திரிந்துகொண்டிருந்த வேளையில் ஊரில் ஒரு
திருமணம். பால்யகால நண்பன். அதே பாதி அட்சதை. அடித்துபிடித்து பந்தி. சாம்பார்
சுமார். ரசம் தேவாமிர்தமாக இருந்தது. மறுக்கா மறுக்கா கேட்டு சாப்பிட்டு
டம்ப்ளரில் ஊற்றி குடித்து அருகில் இருந்த நண்பனிடம் அவன் டயர்ட் ஆகும் வரை அரை
மணி நேரம் ரசத்தைப்பற்றி சிலாகித்து பேசி , ‘டேய் ஆள
விடுடா’ என்று ஓடிவிட்டான்.
சமையல்காரரை தேடி கண்டுபிடித்து ‘மாஸ்டர். நீங்க தான்
சமையலா?
சூப்பர். அதுவும் அந்த ரசம்...?’
‘தம்பி இங்க வாங்க’ என்று இடைமறித்து கையை பிசைந்து கொண்டே ஓரமாக கூட்டிப்போனார்.
‘முததடவையா நடந்துடுச்சு தம்பி, சாம்பார்,
வத்தக்குழம்பு, அவியல், பாயாசம் எல்லாம்
நல்லாருந்துருக்குமே?’ என்றார்.
‘அத விடுங்க மாஸ்டர். அந்த ரசம்தான்....,”
“மன்னிச்சிடுங்க தம்பி புதுசா ஒரு பய சேந்துருக்கான்.
அவன்தான் படிக்கதெரியாம சாம்பார் பவுடர தூக்கி ரசத்துல போட்டுட்டான்.
கோவிச்சுக்காதீங்க”
நான். ‘ஙே’

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக