ஞாயிறு, பிப்ரவரி 05, 2023

The Elephant Whisperers

இது விமர்சனம் அல்ல. வரி வடிவத்திற்கும் ஒலி ஒளி வடிவத்திற்குமான ஒரு ஒப்பீடு என்று கொள்ளலாம்.

ஆஸ்கர் பட்டியலில் இடம்பிடித்த கணம் முதலே இதை காண வேண்டும் என்ற எண்ணம் உதித்திருந்தது. நேரம் கூடிவராத காரணத்தினால் தள்ளி போய் கொண்டிருந்தது. ஆனால் கடந்த வாரம் வெளியான விகடனில் இடம்பெற்றிருந்த 'தாயைப்பிரிந்த யானைக்கன்றுகளின் தாயுமானவர்கள்' என்ற தலைப்பு வெகுவாக ஈர்க்க கட்டுரையை வாசித்தேன்.




கட்டுரை அந்த படத்தை பற்றிய விமரிசனம் அல்ல. பொம்மன் மற்றும் பெள்ளியின் யானைகளுடனான வாழ்க்கையை பற்றிய ஒரு சாட்சி என்று சொல்லலாம். யானைப்பாகன் அவர்களது சமூகம், வாழ்க்கை முறை, யானைகளுடனான அவர்களுடைய உறவு, பராமரிப்பு, அன்பு, அக்கறை, வெகுளித்தனம் நிறைந்த அவர்கள் இயல்பு என சிறு கட்டுரையாக வெளிவந்திருக்கிறது. படித்து முடித்தவுடன் பொம்மன் மற்றும் பெள்ளியுடன் உரையாடியது போல் இருந்தது.

அதன் பின்பு இரண்டு நாட்கள் கழித்து Netflixல் 'The Elephant Whispherers' பார்க்கும் வாய்ப்பு அமைந்தது. காட்டை, யானையை படம்பிடித்த விதம் மற்றும் மென்மையாக பின்னோடும் இசை என அந்த டாகுமெண்டரிக்கு உறுதுணையாக பல இருந்தும் அந்த இரு பக்க கட்டுரை கடத்திய உணர்வு இந்த நாற்பது நிமிட வீடியோவில் இல்லை. பொம்மன் மற்றும் பெள்ளியின் அப்பழுக்கற்ற பேச்சு கவர்ந்திருந்தது. மூங்கில்களின் ஊடே எட்டிப்பார்த்த யானை குட்டியின் கண்கள் காந்தம் போன்று நம்மை சுவீகரித்தாலும் டாகுமெண்டரி முழு நிறைவாக இல்லை. ஏதோ ஒன்று மிஸ்ஸிங்.

விகடனில் வெளியாகியிருந்த அந்த நான்கு படங்கள் கட்டுரைக்கு நியாயம் சேர்ப்பவையாக இருந்தன. மிக யதார்த்தமான கவரேஜ். பொம்மன் பெள்ளி மற்றும் அந்த சமூகத்தை எழுத்து வடிவில் நமக்கு கடத்திய விதம் செழுமை.

படித்து முடித்த பின்பும் யானையின் வாசம் நம்மிடம் எஞ்சி நிற்கிறது. வரி வடிவம் ஒலி மற்றும் ஒளியை வென்று காட்டிய மற்றுமொரு உன்னத தருணம்.

வாழ்த்துக்கள் Sathish Ramasamy மற்றும் Arun Patrick

கருத்துகள் இல்லை: