புதன், ஏப்ரல் 20, 2022

RRR

தந்தையுடையான் படைக்கு அஞ்சான் என்று கூறுமளவுக்கு தந்தை விஜயேந்திர பிரசாத், தனையன் ராஜமௌலிக்கு பக்கபலமாக இருக்கிறார். சந்திக்கவே இல்லாத இரண்டு வரலாற்று நாயகர்கள் சந்தித்துக்கொண்டால் இல்லையில்லை மோதிக்கொண்டால் எவ்வாறு இருக்கும், அதுவும் தங்களது புஜபல பராக்கிரமங்களை வேண்டுமளவுக்கு தங்களுக்குள்ளாகவே சோதித்துவிட்டு, இறுதிக்காட்சியில் இணைந்து எதிரிகளை வதம் செய்தால் என்ற ஒன் லைனை கையில் எடுத்துக்கொண்டு திரைக்கதையை செதுக்கியிருக்கின்றனர்.

ஜூனியர் NTR மற்றும் ராம் சரண் தேஜா என இருவருமே தெலுங்கில் முன்னணி நாயகர்கள். இரண்டு பேருக்குமே சரிசமமான ஸ்பேஸ் கொடுத்து அதை லாவகமாக கையாளுவதற்கே ஒரு திறமை வேண்டும். அந்த மெனக்கெடல் இருவரின் இண்ட்ரோ காட்சிகளில் தெரிகிறது. 

எல்லாவற்றையும் விட ஆச்சர்யம் ராஜமௌலியின் திரைக்கதை. மனிதன் எப்படி இப்படியெல்லாம் யோசித்து காட்சிகள் அமைக்கிறார் என்பது வியப்பூட்டுகிறது. உதாரணமாக தவறே செய்யாத பீமை கைது செய்யும் ராம் வில்லனாக இருக்க முடியாது. அவ்வாறெனில் ஒரு அப்பாவியை ஏன் இவர் கைது செயகிறார் என்பதற்கு உறுதியான முன்கதை வேண்டும். ராமுடைய முன்கதை எவ்வாறு இருக்கப்போகிறது என்பதில் இருந்த ஆர்வம், சஞ்சய் தத் வரும் முன் கதையில் தன்னிறைவு பெறுகிறது. ஒற்றை ஆளாக பிரிட்டிஷ் படையை எதிர்க்கும் சஞ்சய்தத்துகு அவர்களை சுடமுடியாத படிக்கு காயமேற்படுகிறது. துப்பாக்கியை, குழந்தையாக இருக்கும் ராமிடம் கொடுக்கும் அந்த ஹீரோயிச காட்சிக்கு தியேட்டரில் விசில் பறக்கிறது. அடுத்த முப்பது வினாடியிலேயே தன் தம்பியையும் தாயையும் இழக்கும் செண்டிமெண்ட் காட்சி என ராஜமௌலியின் திரைமொழி வேறு லெவலில் உணர்வை கடத்துகிறது.  

எரியும் நெருப்புக்கு மத்தியில் தண்ணீரில் தவிக்கும் சிறுவனை காப்பாற்றும் யுக்தி மற்றும் இரண்டாவது கதவை உடைத்து கோட்டைக்கு உள்ளே செல்லும் லாரியிலிருந்து கட்டவிழ்க்கப்படும் காட்டு விலங்குகள், வில்லில் சொருகி அனுப்பப்படும் கையெறிகுண்டுகள் என காட்சிகள் அனைத்தும் பிரெஷ். 

புலி, ஓநாய் போன்ற விலங்குகளின் அனிமேஷன் காட்சிகள் அவ்வளவு தத்ரூபம். குறைந்தபட்சம் இந்த க்ராபிக்ஸ் காட்சிகளுக்கு நூறு கோடியாவது செலவு ஆகியிருக்கலாம். மேலும் படத்தை 550 கோடி செலவு செய்து எடுத்தாலும், தொந்தியில் முகம் வரைவது, மேம்பாலத்தில் பெயிண்ட் அடிப்பது போன்ற எந்த காட்சியும் தேவையில்லை என்று சொல்லுமளவுக்கு புகாரில்லை. எழுத்தாளரை இழந்த இங்குள்ள பிரமாண்ட இயக்குனர்கள் ராஜமௌலியிடம் பாடம் கற்றுக்கொள்ளலாம். 

புலியை கட்டிப்போடும் காட்சியில் தொய்விழந்த கயிறு, தீரவே தீராத அம்புகள், உடைந்த முட்டியை சரி செய்ய உதவும் பச்சிலை சாறு என்று சில பல குறைகள் இருந்தாலும், காட்சியில் இருக்கும் ப்ரமாண்டத்தில் அவையெல்லாம் கண்ணனுக்கு உறுத்தவில்லை. திரைமொழிக்கு உறுதுணையாக கீரவாணியின் BGM.

pan india  சினிமாவாக எடுக்கும் முயற்சியில் எல்லா வுட்டிலுமிருந்து ஓரொரு நடிகர்கள். ஒரேயொரு பிளேடை மட்டுமே கொடுக்கும் சீனில் சமுத்திரக்கனியை உபயோகப்படுத்தியிருப்பதை தமிழ் சமுதாயம் வன்மையாக கண்டிக்க கடைமைபட்டிருக்கிறது.

கொசுறு தகவலாக, ஒரு புல்லட்டின் எடை 200 கிலோ எனபதை இங்கு பதிவு செய்ய விழைகிறேன்.   

கருத்துகள் இல்லை: