ஞாயிறு, மே 22, 2022

சும்மாவா சொன்னாங்க

வேலைக்கு நடுவுல அரட்டை அப்டினா ஓகே. ஆனா அரட்டைக்கு நடுவுல தான் வேலை அப்டினு சில பார்ட்டிங்க இருக்கும். அந்த மாதிரி ஒரு பார்ட்டி அவரு. அடிக்கடி என்னோட இடத்துக்கு வந்து அவரும் வேலை பாக்காம என்னையும் வேல பாக்க விடாம ரோதனை பண்ணுவாரு.

அதுவும் பேசறது அந்த அளவுக்கு அறுவையா இருக்கும். நம்ம இன்ட்ரெஸ்ட் காமிக்கிறோமா இல்லையானு கூட பாக்க மாட்டாரு. ரம்பம் மாதிரி வச்சி செய்வாரு. முக்காவாசி மேட்டர் 'அதுல பாத்தீங்கனா', அந்த காலத்துல' அப்படிங்கிற மாதிரி ஸ்டார்ட் ஆகி அவரே டயர்ட் ஆகுற வரைக்கும் விடமாட்டாரு.

'சார், நீங்க ரொம்ப அறுக்குறீங்க. கொஞ்சம் வேலை பாருங்க இல்ல என்ன வேல பாக்க விடுங்க' அப்டினு என்னால மூஞ்சிக்கு நேரா சொல்ல முடில. நம்ம டிசைன் அப்படி. 'learn to say no" அப்படின்ற புக்கல்லாம் புரட்டி பார்த்தேன். வேலைக்கு ஆகல. ரொம்ப நாளா என்ன பண்றதுனு தெரியாம முழிச்சிட்டு இருந்தேன்.

அந்த பார்ட்டி ஒரு நாள் வந்துச்சு. 'இப்போல்லாம் தம்பி' அப்டினு அறுக்க ஆரம்பிச்சாப்ல. உடனே நிப்பாட்டி 'சார், ஒரு சின்ன உதவி' அப்டினேன்.

'சொல்லுங்க தம்பி. உங்களுக்கு பண்ணாம யாருக்கு?' அப்டினாரு.

'யாரட்ட கேட்டாலும் இல்லைன்றாங்க. உங்கள தான் மலை போல நம்பி இருக்குறேன். உடனே ரெண்டு லட்சம் தேவைப்படுது. ஒரு பத்து நாள்ல கொடுத்துட்றேன்' அப்டினு சொல்லிட்டு அவரை பாக்குறேன்.

அடுத்த செகண்டே, காலே வராத செல்போன தூக்கி பேசிட்டே எந்திச்சி போய்ட்டாரு.

அப்ப போனவருதான். இப்போ வரைக்கும் நம்ம பக்கம் வரல.

சும்மாவா சொன்னாங்க, பணம் பத்தும் செய்யும்னு.

கருத்துகள் இல்லை: