செவ்வாய், ஏப்ரல் 27, 2021

கொரோனா இரண்டாம் அலை

கட்டுக்கடங்காமல் பரவி வரும் கொரோனா நோய் மக்களிடையே பாகுபாடின்றி அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த வருடம் மார்ச் மாதம் போடப்பட்ட லாக்டௌன் போல இந்த முறையும் அந்த அறிவிப்பு எப்போது வரும் என்பது அனைத்து பிரிவு மக்களிடம் மில்லியன் டாலர் கேள்வியாக தொக்கி நிற்கிறது. லாக்டௌன் போடப்பட்டால் கொரோனா தொற்று ஏற்படாமல் பாதுகாப்பாக இருக்கும் என்பது ஒரு சில மக்களின் எதிர்பார்ப்பு. மீதம் இருக்கும் பெரும்பான்மையான மக்களிடம் கடந்த லாக்டௌனில் ஏற்பட்ட பொருளாதார சுணக்கம், புலம்பெயர்ந்தவர்களின் துயரம், அன்றாடம் உழைத்து வயிற்றை நிரப்புவர்களின் பரிதாப நிலை, வேலையிழப்பு, தற்கொலை, கொலை, கொள்ளை, சுப அசுப காரியங்கள், திருவிழாக்கள் முடக்கப்பட்டதினால் சமூகத்தில் ஏற்பட்ட மந்தநிலை போன்ற பல எதிர்மறையான அனுபவங்கள் படபடப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றன.

கொரோனா என்ற நோயே இல்லை; இது இலுமிநாட்டிகளின் சதிவலை, தடுப்பூசி மூலம் உலக மக்கள் தொகையை குறைப்பதற்கான பில்கேட்சின் முயற்சி என்று ஒரு சாரார் பிதற்றி கொண்டிருப்பதையும் காணமுடிகிறது. ஆனால் கண்முன்னே நமது அன்புக்குரியவரை இழந்து வருகிறோம் என்பதே உண்மை. பிரபலங்கள் முதல் அண்டை அயலார் வரை இந்த திடுக்கிடும் சோகங்கள் தொடர்கின்றன. 



மக்கள் கூடும் இடமான கோவில்கள், விளையாட்டு அரங்குங்கள், மால்கள், தியேட்டர்கள் போன்றவற்றை முடக்குவது பலன் தருமென்றால், தேர்தலுக்கான பொய்யுரைகளை பொழிக்கும் அரசியல் கூட்டங்கள் கூடுவதற்கு முன்பும் இந்தத்தடையை நடைமுறைபடுத்தியிருக்க வேண்டும்.

பத்துக்கு ஐந்தடி கரும்பலகையில் மூன்றாம் வாய்ப்பாட்டை எழுதி அதை முன்னூறு முறை கோரசாக குரல் தேய உரக்க கத்தி மனனம் செய்தே அதே முப்பது குழந்தைகள், ஆன்லைனிலும் முழு ஈடுபாட்டுடனும் செயல்திறனுடனும் படிக்க முடியும் என்று நம்பிக்கை வைத்த அரசு, இந்த தேர்தல் கூட்டங்களையும் ஆன்லைனில் நடத்த முயற்சி செய்யாதது ஏன்?  அரசுப்பள்ளி மாணாக்கனுக்கு வாட்ஸப்பில் பாடங்களை அனுப்பிவிட்டு மாணவர்கள் படித்துவிடுவார்கள், விட்டார்கள் என்று தேர்வையும் ரத்து பண்ணி முழு தேர்ச்சி செய்யும்போது, இந்த பொய்யுரைகளையும் அதுகாறே வாட்சப்பில் அனுபியிருக்கலாமே. அவ்வாறு செய்யவில்லை.  ஏனெனில் இந்த டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் கடைக்கோடி மனிதனை சென்றடைய முடியாது. அந்த கடைக்கோடி மனிதனின் ஓட்டை ஒன்பது பொய்கள் சொல்லி சுவீகரிக்க முடியாது. ஒரு ஓட்டையும் விட்டுவிடக்கூடாது என்று எடுக்கப்பட்ட இந்த அபாய அக்கறை அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவனை கற்க வைப்பதில் காட்டப்படாதது ஏன்?

போலவே, அரசு வழிகாட்டும் நெறிமுறைகளை பின்படுத்தி இந்த தீய நுண்மியை ஒழிப்பதற்கு மக்கள் எந்த அளவுக்கு ஒத்துழைப்பு நல்கினார்கள் என்பதும் கேள்விக்குறியே? நாம் Asymptotic கேரியராக இருக்கும்பட்சத்தில் முதலில் பாதிக்கப்படப்போவது நமது அன்புக்குரிய குடும்ப உறுப்பினர்களே. வெவ்வேறு மக்களை அவர்களின் உடல் எதிர்ப்புசக்திக்கு ஏற்ப வெவ்வேறு தாக்கத்தை ஏற்படுத்தும் இந்த தீ நுண்மியை நாம் சரியாகப் புரிந்திரிக்கிறோமா  என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. முகக்கவசம் அணிவதும் சமூக இடைவெளி விட்டு தகவல் பரிமாறிக்கொள்வதும் இன்றியமையாததாகிவிட்ட இத்தருணத்தில் அதை கடைபிடிப்பதும் அதிலிருந்து வழுவாதிருப்பதும் நமது கடமையாகிறது. தனி மனிதனின் உயிரையும் ஒழுக்கத்தையும் அபராதம் மற்றும் கண்டிப்பின் மூலம் மட்டுமே நடைமுறைபடுத்தி சாத்தியமாக்கமுடியும் என்ற ஒரு கோட்பாடே நமது சுய ஒழுக்கத்தின் மீதான பிம்பத்தையும் சித்தாந்தத்தையும் உடைத்தெறிகிறது. மற்றைய நாடுகளிலிருந்து பாரதம் வெகுவாக பின்தங்கியிருப்பது இந்த தனிமனித ஒழுக்கத்தில் மட்டுமே.

இதுமட்டுமில்லாது, போர்க்கால நடவடிக்கையாக நமது ஆராய்ச்சியாளர்கள் வெளிக்கொணர்ந்திருக்கும் இந்த வேக்சினும் காவி முத்திரை குத்தப்படுவது மிகவும் வருத்ததிற்குரியது. உ.பி, குஜராத்போன்ற மாநிலங்களில் ஏற்பட்டிருக்கும் கொரோனோ மரணங்களையும் மற்றைய மாநிலங்களில் ஏற்பட்டிருக்கும் கொரோனோ மரணங்களையும் ஒப்பீட்டு செய்து, அங்கு நடப்பிலிருக்கும் அரசை ஆதரிப்பதும் அவமானப்படுத்துவது நாகரீகமற்ற அருவருக்கத்தக்க செயல். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளின் அசாத்திய தேவையான ஆக்ஸிஜனை அரசு பல இடங்களில் கொள்முதல் செய்வதை பாராட்டலாமே தவிர அதை அரசியல் உள்நோக்குடன்  பெருமைக்குரிய விஷயமாகக்கருதுவது கண்டனத்திர்க்குறியது. இதுபோன்ற தேவைகளைப்பூர்த்தி செய்யவே தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். இது வலது சாரியோ இடது சாரியோ, யாருக்கென்றாலும் பொருந்தும். மேலும் போர்க்கால நடவடிக்கையாக ஆக்ஸிஜன் போன்றத்தேவைகளை பூர்த்தி செய்வது ஆட்சிப்பணி அலுவலர்களும் முன்கள செயவீரர்கள் மட்டுமே. இந்த நன்றியும் பெருமையையும் அவர்களுக்கே உரித்ததாக வேண்டும். நதிமூலம் ரிஷிமூலம் அறியாது பகிரப்படும் போலி வாட்ஸப் பார்வேர்டுகள் ஒன்று போதும் இந்தியாவை பிளவுபடுத்த. இதை மெத்தப்படித்தவர்களே மேற்கொள்ளுவது மிகவும் ஆபத்தானது. சுற்றிலிருக்கும் உலகம் மற்றும் அதிலிருக்கும் அனைத்து மனிதர்களும் நேர்மறையானவர்கள் என்பதை கற்றுத்தராமல் நாம் நம்முடைய அடுத்த தலைமுறைக்கு சாதி மற்றும் மதத்தின் பேராலான துவேஷத்தை பழக்கிக்கொண்டிருக்கிறோம் என்பதே நிதர்சனமான உண்மை.

மீடியாக்களும் தங்கள் பங்குக்கு கொரோனாவை பரப்புகின்றன என்றால் அது மிகையாகா. நியூஸ் சேனல்களை பார்க்காதிருந்தால் கொரோனா நம்மை பாதிக்காது போல. விழிப்புணர்வு வேண்டும் தான். ஆனால் அவை மனதளர்வில் தளர்வடையச்செய்யும் அளவுக்கும் வேண்டா.

லாக்டௌன் என்பது நிரந்தரத்தீர்வல்ல. இந்த வைரஸ் தொடர் சங்கிலியை உடைப்பது நம் ஒவ்வொருவர் கையிலும் இருக்கிறது. மேலும் இப்போது நடந்து கொண்டிருக்கும் போராட்டம் வைரசுக்கும் மருத்துவருக்குமானது மட்டுமில்லை என்பதை மானுடம் உணரும் தருணமிது.


கருத்துகள் இல்லை: