சோர்ந்து இருக்கும் நேரத்தில் ஒரு சிறு கோப்பை தேநீர் வழங்கும்
உற்சாகத்தை போன்றது சிறு கதை வாசிப்பு. இத்தனை இக்கட்டுக்கள் நடுவிலும் நம்மை அயராது
ஓட வைத்திருப்பது நல்ல எழுத்துக்கள் மட்டுமே.
கடந்த வார விகடனில் வெளியாகியிருந்த சிறுகதை அதுபோன்றதொரு
உற்சாகத்தை நல்கியது. கதையின் பெயர் ‘சின்னக்கிளி குட்டியப்பன்’. ஆசிரியர் ராஜேஷ் வைரபாண்டியன்.
கதையின் தலைப்பு வித்தியாசமாக இருக்கிறது அல்லவா? அப்படித்தான் கதையும்
என்னை அதனுள் இழுத்தது. நான்கே நான்கு பக்கங்கள்
தான் கதை. ஆனால் அதற்குள் மூன்று பெரும் வாழ்வுகளை அநாயசமாக கடத்தியிருக்கிறார் ஆசிரியர்.
குழந்தை இல்லாத ஒரு ஆச்சியும் தாத்தாவும் தன் அண்ணனின் கடைக்குட்டியை
சுவீகரித்து வளர்க்கின்றனர். ஆச்சியின் அரவணைப்பில் தாத்தாவின் கதகதப்பில் அந்த குழந்தை
குட்டியப்பனாக வளர்ந்து குடிக்கு அடிமையாகி நான்கு குழந்தைகளை பெற்று பின் வீட்டில்
இருந்து ஒரு நாள் காணாமல் போய் இறந்துவிடுகிறது. தன் குழந்தையை எதிர்நோக்கி படுக்கையில்
காத்திருக்கும் ஆச்சியும் சேதியறிந்து இறந்துவிடுகிறாள். இதான் கதை.
கதை மாந்தர்களாக ஆச்சி, தாத்தா, குட்டியப்பன், மனைவி, அவள் அம்மா, நான்கு குழந்தைகள்
(இருவாச்சி), ஆலமரம், முட்டைகோஸ், ஏனிப்படி முட்டாய், முந்திரிக்கொத்து, கொடிமுல்லை என்ற கண்ணுக்குட்டியும் அதன் அம்மா பசுவும், கோழிக்குஞ்சுகள் மற்றும் ஒரு அண்டங்காக்கை. இவை அனைத்தும் அந்த கதையில் வெறுமனே
இடம்பெறாமல், கதையின் ஒரு அங்கமாக இருப்பதுதான் அதுவும் அந்த
நான்கு பக்கத்துக்குள் ஒரு தாக்கத்தை கொண்டுவருவது, அதுவும் வலிந்து
திணிக்காமல் வார்த்திருப்பதுதான் இந்த கதையின் சிறப்பு.
கிராம சொலவடை நம்மை அந்த சூழலுக்கே அழைத்துச்சென்று விடுகிறது.
குட்டியப்பனுக்கு ஆச்சியை தாத்தவை விட அதிகமாக பிடிக்கும்.
இனிஷியலை சி. என்று மாற்றிக்கொள்கிறான். சின்னக்கிளி என்பது அந்த ஆச்சியின் பெயர்.
‘ஏலே, என் பேரதாம்ல நீ இனிஷியலா போட்டுக்கணும்’ என்று தாத்தா
சொல்லவும், ‘நீ என்ன செஞ்ச? சிலோனுக்கும் ஊருக்கும் அலைஞ்ச. எனக்கு பீ மூத்திரம் அள்ளிபோட்டது சின்னக்கிளி
தானே’ என்கிறான் குட்டியப்பன். நியாயம் தானே. உழைத்துக்கொட்டினாலும்
உருவாக்கி வளர்ப்பது என்னமோ அம்மா தான். ஆறே ஆறு வரிகள் தான். இதையே மேடை போட்டு பேசியிருந்தால்
பெண் சுதந்திரம், சம உரிமை என்று சென்றிருக்கும். ஆனால் வெறும்
ஆறே ஆறு வரியில் அதுவும் நெருடலில்லாமல் கதையின் போக்கில் கருத்தை செருகி வைத்த ஆசிரியரின்
ஆளுமையை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
ஆச்சிக்கு எங்கு சென்றாலும் இனிப்பு வாங்கி வருகிறான். ஒருமுறை
வீட்டிற்கு வரும்போது முந்திரிக்கொத்தை கொடுத்துவிட்டு அவள் காலை தன் மடியில் எடுத்து
வைத்து பிடித்து விடுகிறான். ‘அப்பு, எனக்கெதுக்குப்பா, உன் கடைக்குட்டி
இருவாச்சிக்கு இது ரொம்ப பிடிக்கும்லா. அவளுக்கு கொடு’ என்கிறாள்.
ஆச்சிக்கும் கொடுத்துவிட்டு ஆலமரத்துக்கடியில்
விளையாடும் தன் குழந்தைகளுக்கும் பிய்த்துக்கொடுக்கிறான். கொடிமுல்லை தலை ஆட்டுகிறது.
‘உனக்கு இல்லாமலா, இந்தா’ என்று அதற்கும் பிய்த்து கொடுக்கிறான். கதை முழுவதும் இது போல வாஞ்சை விரவி
கிடக்கிறது.
ஒரே வருத்தம் தான். இன்னும் சற்று பெரிய கதையாக இருந்திருக்கலாமோ
என்று. அது தான் அந்த சிறுகதையின் மகத்தான வெற்றி.
வாழ்துக்கள் ராஜேஷ் வைரபாண்டியன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக