செவ்வாய், மார்ச் 30, 2021

உண்மையைச்சொல்வேன்

ஆங்கிலத்தில் anecdote’ எனப்படும். தமிழில் துணுக்கு என்பர். பத்திரிக்கை உலகில் துணுக்குச்செய்திகள் என்ற சொல்லாகராதி மிகப்பிரபலம். ‘Anecdote’ என்பதின் அர்த்தம் என்று கூகிள் ஆண்டவர் கூறுவது, “ஒருவரை அல்லது ஒரு நிகழ்ச்சியைப் பற்றிய ஆர்வமூட்டும் அல்லது கருத்தை ஈர்க்கும் நொடிக்கதை”.

ஏதேனும் பத்திரிக்கையை புரட்டும்பொழுது, “இரண்டாவது கணவரை விவாகாரத்து செய்த நடிகைஅல்லது சூட்டிங் ஸ்பாட்டில் நெருக்கம் காட்டும் நடிகர்போன்ற இலக்கியச்செய்தி தொகுப்பை வாசித்து புளகாங்கிதம் அடைந்து அதற்கு அடுத்த பக்கத்தை திருப்பும்பொழுது, எம்.ஜி.ஆரை பற்றி அவரது மெய்க்காப்பாளர்
ராமக்ரிஷ்ணன் எழுதிய செய்தியோ அல்லது அன்று வந்ததும் அதே நிலாபாடல் காட்சியை படமாக்கும் போது நடந்த சுவாரசிய நிகழ்வை நடிகை சரோஜா தேவி பகிரும் செய்தியையோ கண்டோமானால், அதுவே துணுக்கு. இந்த துணுக்குசெய்தி வாசிப்பதில் அடையும் பேரின்பத்தை விவரிக்க இயலாது. அதுவும் அரசியல் துணுக்கை விட சினிமா துணுக்குகள் பரவசமூட்டுபவை.




விகடனில் இதுபோன்ற துணுக்கையே தொடராக எழுதியவர் பஞ்சு அருணாச்சலம். ‘பாஸ் என்கிற பாஸ்கரனில்ஆர்யாவுக்கு அண்ணனாக நடித்திருக்கும் சுப்பு பஞ்சுவின் தந்தையே திரைக்கதை ஜாம்பவான் பஞ்சு அருணாச்சலம். எண்பதுகளில், ஒரு இயக்குனர்இவர் எழுதும் திரைகதைக்காக எந்த அளவு காத்திருந்து பிரயத்தனப்பட்டிருக்கிறார் என்றும் ரஜினிக்காக, சூப்பர் ஸ்டார் இமேஜை எவ்வாறு கட்டமைத்து கொண்டு வந்தார், பின் அந்த இமேஜை தூக்கி நிறுத்த, திரைக்கதை எவ்வாறெல்லாம் சுவையூட்டி
எழுதப்பட்டது போன்ற பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்திருந்தார். வாசகர்களின் போதாத நேரம், அந்தத்தொடர் எழுதிக்கொண்டிருக்கும்போதே இவர் இறைவனடி சேர்ந்தார்.

ஆனால் தற்போது, கலைப்புலி தாணு எழுதும், ‘உண்மையைச்சொல்வேன்' படு சுவாரஸ்யமாக இருக்கிறது. பொதுவாகவே உயிரோடிருப்பவரை பட்டவர்த்தனமாக பொதுவில் குறை சொல்ல யோசிப்பார்கள். அல்லது நாசூக்காக இலை மறை காயாக குறிப்புணர்த்துவார்கள். அதை பற்றியெல்லாம் சற்றேனும் கவலை இல்லாது சிக்சர்களாக விளாசித்தள்ளுகிறார்.  வைகோ, ராஜீவ் மேனன், கமல், கலைஞர், வைரமுத்து, இளையாராஜா என்ற எல்லோரிடமும் தனக்கேற்பட்ட நிறை குறைகளை சற்றும் மெழுகு பூசாமல் உள்ளதை உள்ளபடியே உரைப்பது இதுநாள் வரையில் இவர்கள் பால் நாம் கொண்டிருந்த புரிந்துணர்வில் ஒரு புதிய பரிமாணத்தை கொடுக்கிறது. ஆளவந்தான் படப்பிடிப்பு சமயம் தாணுவுக்கும் கமலுக்கும் ஏற்பட்ட பிரச்சினை ஊரறிந்ததே. ஆயினும் தேர்தல் நேரத்தில் இவை யாவும் கமலின் பிம்பத்தை பாதிக்கக்கூடாதே என்று நாகரீகம் கருதி தவிர்த்திருப்பது வரவேற்புக்குரியது. ஆச்சர்யம் என்னவெனில் இவர் கூறும் கருத்துகளுக்கு எவரும் இது வரை மறுப்பு தெரிவிக்காததே, இதெல்லாம் உண்மை என்று உரத்துச்சொல்கிறது.

நாம் வாழ்வோடு பிரிக்கமுடியாதபடி இன்றியமையாததாகிவிட்ட சினிமாவின் வரலாறு பிடிக்குமானால், தாராளமாய் இதை படிக்கலாம். ஹைலி ரெக்கமெண்டட் ஃபார் 2k கிட்ஸ்

கருத்துகள் இல்லை: