வியாழன், ஜனவரி 03, 2019

சில தினங்கள் முன்பு குங்குமத்தில் "நடிகர்களில் யார் அரசியலில் கலக்க வாய்ப்பிருக்கிறது? என்கிற ரீதியில் ஒரு கருத்து கணிப்பு நடத்த பட்டது.

Option A. ரஜினி.
Option B கமல்.
Option C விஜய்.


 சுஜாதா அடிக்கடி சொல்வது போல இது ஒரு open and shut case. 
ரஜினியின் நம்பகத்தன்மை முற்றிலுமாக அருகிவிட்டது. அவருடைய குரல் எப்போதாவது ஒலிப்பதாக தெரிந்தால், கண்ணுக்கெட்டும் தூரத்தில் அவர் படம் post production ஆகி கொண்டிருக்கிறது என்பதை .just jelly வைத்திருக்கும் பாப்பா கூட கணித்துவிடலாம். கடந்த கால நடவடிக்கைகளும் இதை நிருபிக்கும் வண்ணமாகவே உள்ளன. வகை தொகையில்லாது எல்லா கட்சியினரையும் சந்திக்கிறார். தற்போதைய சூழலில் தமிழ்நாட்டில் எந்த ஒரு கட்சிக்கும் மதிப்பில்லை. எந்த கட்சிக்கு வாய்ஸ் கொடுத்தாலும் சேர்ந்தாலும் அது சாதகமாக முடிவதற்கு வாய்ப்பே இல்லை. 1996 போன்ற ஒரு சகாயமான சூழல் என்றோ ஓடிவிட்டது. ஒரு தலைமுறை காலம் தாண்டிவிட்டது. பல பேர் இவரை மறை கழண்ட லிஸ்டில் வைத்திருப்பதால் தனிக்கட்சி தொடங்கினாலும் தமிழ்நாட்டிற்கு ஆபத்தே. குழந்தையிடம் பிரம்பை காட்டி அடித்துவிடுவேன் என்று மிரட்டிக்கொண்டிருக்கும் வரை பெற்றோரின் வார்த்தையை கேட்கும். பிரம்பை சுழட்டி அடித்தோமேயானால் அதன் வலி பழகிவிட்டதே என்றால் கொஞ்சம் கொஞ்சமாக அது பிட்டத்தை தடவிக்கொண்டு தன்வேலையை தொடங்கிவிடும். மேலும் மிரட்டலுக்கு இம்மியும் பணியாது. போலவே ரஜினி அந்த பிரம்பை தன் இறுதிகாலம் வரை சுழட்டிக்கொண்டே இருப்பது அவருடைய கெத்துக்கும் தமிழ்நாடு சொத்துக்கும் நல்லது. அப்பொழுதுதான் ஐம்பதுகளில் முன் மண்டையில் முடி கொட்டிருக்கும் இளைஞர்களான ரசிகர்களை, அவர் மண்டையை தடவி ஆம்லெட் போட ஏதுவாக இருக்கும்.

கமல். மகா கலைஞன். சொல்லவேண்டிய அவசியமே இல்லை. சினிமாவில் அவர் நடிப்பை, அதை ஒரு படி முன்னெடுத்து செல்லும் பாங்கை, தன் சம்பாத்தியம் முழுமையும் அதனில் கொட்டும் சிரத்தையை என்றும் குறை கூற இயலாது. போலவே கடந்த ஒரு வருடத்தில் அவர் தைரியமாய் விடுத்த அறிக்கைகளும் அவரை திரும்பி பார்க்க வைத்துள்ளன. தமிழனுக்கு அவர் தூரத்தில் தெரியும் ஒளியாக தெரிகிறார். செயலி நிறுவியுள்ளார். அறம் போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களை தன் பால் சேர்த்துக்கொண்டுள்ளார். இவருடன் சேர்வதினால் அந்த தொண்டு நிறுவனங்களுக்கு போதிய வெளிச்சம் கிடைக்கும் அதே நேரத்தில் அவை தம் அடையாளங்களை இழக்கும் வாய்ப்புண்டு. அதற்கு அவை தயாராக இருக்கவேண்டும். சிலநாள் முன்பு இவரின் ஒவ்வொரு அறிக்கைக்கும் அகராதி தேடவேண்டிய தற்காப்பு நிலையில் தமிழன் இருந்துகொண்டிருந்தான். அந்த இடைவெளியை இப்பொழுது ஆனந்த விகடன் தொடர் மூலம் குறைக்க முயன்றுகொண்டிருக்கிறார். ஆனாலும் அவர் அடிதட்டு மக்களின் அபிமானத்தை பெறுவது மிகவும் சந்தேகத்திற்குரியது. எந்த சமூகத்திற்காக அவர் பாடுபடவேண்டும் என்று விரும்புகிறாரோ அதே சமூகம் அவரை நம்ப தயாராக இல்லை. இது அவரின் குறையன்று. சமூக கட்டமைப்பு என்ற பெயரால் தமிழனின் தலையில் ஆண்டாண்டுகலாமாக பிரித்தாலும் வஞ்சகர்களால் திணிக்கப்பட்ட சதி. அதுவே தமிழனின் விதியாக மாறிப்போனது காலத்தின் நகைமுரண்.

விஜய். இவரின் ஒரே பலம் மற்றும் ஆயுதம் மௌனம் மட்டுமே. என்ன நினைக்கிறார் எதை நோக்கி நகர்கிறார் என்று சொல்லாமல் அதை அமைதியாக செய்து முடிப்பதில் கில்லி. காவலன் தொடங்கி  துப்பாக்கி ஜில்லா பைரவா மெர்சல் என்று எல்லா படங்களிலும் சிக்கல். ஆனால் அதை சமாளித்து சத்தம் இல்லாது சமரசம் செய்து பட ரிலீஸ் வேலையை கனகச்சிதமாக முடித்து வைத்ததோடு தன் கோவத்தை சற்றேனும்  வெளிகாட்டாதது புலி பதுங்குவதையே காண்பிக்கிறது. சமீபகாலமாக கத்தி, பைரவா, மெர்சல் என்று சமூகப்பார்வையுடன் அரசியல் பேச எத்தனிக்கும் படங்கள் இவர் மக்கள்  மனதில் விதைத்துக்கொண்டிருக்கும் விதை. விருட்சமாக மாறுவதற்கு சில வருடங்கள் ஆகும். மொத்த இளைஞர் பட்டாளமும் இவர் கையில். Fan base அதிகம். நாற்பதுக்கு வயதுக்கு கீழ் முழுவதையும் கொத்தாக அள்ளிவிட வாய்ப்பிருக்கிறது.ஆனால் வரும் தேர்தலுக்குள் (2021முன்பே) தனிக்கட்சி ஆரம்பித்து இத்யாதி வேலைகளை முடிப்பதென்பது இமாலய task. எம்ஜிஆர்  போன்று ஒவ்வொரு படங்களிலும் சமூக சிந்தனியுள்ளவராகவும்   ஏழைகளின் பங்காளன் போல் படிப்படியாக தன்னை காட்டிக்கொண்டு நாற்காலியை நோக்கி அடிமேல் அடி வைத்து நகர்வது ஒரு நல்ல move. தன்னுடைய தொழிலான மீடியாவையே  மீடியாவாக  பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். இது எம் ஜிஆரின் பார்முலா. வெற்றிக்கான பார்முலா. ஏற்கனவே நிருபிக்கபட்ட ஒன்று. களத்தில்  தற்போது இறங்கி அடித்தால் வெற்றி நிச்சயம்.

ஆக மொத்தம் காலம் சொல்வது வர்லாம் வர்லாம் வா.... 


கருத்துகள் இல்லை: